Sunday, July 2, 2023

குரு பூர்ணிமா



இன்று பௌர்ணமி. வானில் மதி நிறைந்த நன்னாள். அதுவும் ஆனி மாதத்தில் வரும் பௌர்ணமி, 'குரு பூர்ணிமா' அல்லது 'வியாச பூர்ணிமா' என்று இந்து மக்களால் கொண்டாடப்படும் புனித நாள். புலம்பெயர்ந்து சென்றாலும் பலரும் பௌர்ணமி பூஜையை வீடுகளில் இன்றுவரையில் செய்து வருவது சிறப்பு. இங்குள்ள கோவில்களில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளன்று சிறப்பாக பூஜைகள் நடைபெறும். தெலுங்கு பேசும் மக்கள் சிலர் வீடுகளில் வருடம் ஒருமுறை அல்லது இரண்டு வருடத்திற்கு ஒருமுறை தவறாமல் பௌர்ணமி பூஜை செய்கிறார்கள்! நமக்குத்தான் அப்படியான பழக்கம் ஏதும்  இல்லை.

என் சிறுவயதில் அம்மா எங்களை அழைத்துக் கொண்டு எங்கள் சமூகத்துக் கோவிலைச் சேர்ந்த ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் பெண்களால் நடத்தப்படும் இந்தப் பூஜைக்குத் தவறாமல் அழைத்துச் செல்வார். பூஜையைத் தலைமையேற்று நடத்திய பெண்மணி கோவிலுக்கு அருகில் இருந்த நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர். கலந்து கொண்டவர்கள் பலரும் கூட நெசவாளர்கள் தான். மிக எளிமையாக நடந்த பூஜை அது. கோவிலுக்குள் இதற்காகச் சிறு இடத்தை ஒதுக்கி இருந்தார்கள் அப்போது. சத்யநாராயண சுவாமி படத்தை வைத்து விநாயக, கும்ப வழிபாடுடன் துவங்கும் பூஜை, மந்திரங்கள் ஒலிக்க, தீப, தூப, மலர், நைவேத்திய ஆராதனைகள், கதைகளுடன் முடிவடையும். மதுரையில் மழை இல்லாத வானில் முழுநிலவு ஜொலிக்க, வணங்கி பூஜையை நடத்திய குருவான அந்தப் பெண்மணியிடம் ஆசீர்வாதம் வாங்கி விடைபெறுவோம். நிலவு தொடர, ரசித்துக் கொண்டே வீடு வந்து சேர்வோம்.

பௌர்ணமி பூஜை என்றாலே கமகமவென்று ரவை கேசரி வாசம் ஏங்க வைக்கும். அந்த மாலை வீடே தெய்வீகமாக இருக்க, நாங்களும் வீட்டுப்பாடங்களை முடித்துவிட்டுப் பூஜையில் கலந்து கொள்வோம். இன்று வரையில் தொடரும் இந்தப் பூஜை பற்றின நினைவுகள் என்றுமே பசுமையானவை. வீட்டிலேயே அம்மா பூஜை செய்ய ஆரம்பித்த பிறகு வீட்டுக்கு அருகிலிருந்த பெண்மணி ஒருவரும் கலந்து கொண்டார். பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்த பொழுது, அன்று உங்கள் அம்மா செய்த பூஜை இன்று உங்களை வழிநடத்துகிறது என்று மிகவும் உணர்ச்சிவசப்பட்டுப்  பேசினார். ம்ம்ம்...

ஒரு கோடை காலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி நடந்து வந்து கொண்டிருந்த பொழுது வழியில் என்னுடைய கல்லூரி ஆசிரியர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் முதலாம் ஆண்டிலும் கணினியியல்  துறையிலும் வகுப்புகளை எடுத்தவர். ஆசிரியர்களில் சிறிது வித்தியாசமாக எளிமையாக வகுப்புகள் எடுப்பதில் என்னைக் கவர்ந்தவர். அவரை வணங்கி என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். வட அமெரிக்காவில் மேற்படிப்பிற்காக அவரின் பரிந்துரை கடிதத்திற்காகச் சந்தித்ததை நினைவு கூர்ந்தவுடன், ஞாபகம் இருக்கிறது. எங்கே எப்படி என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று கேட்டுக் கொண்டார். கல்லூரியில் நடக்கவிருக்கும் வெள்ளிவிழா மாணவர் சந்திப்பிற்கு வந்து சிறப்பிக்க கேட்டுக் கொண்டேன். கண்டிப்பாக வருவதாகச் சொன்னவர், அங்கே வந்திருந்து வாழ்த்தியதை என்றும் மறக்க முடியாது. அவர் மட்டுமல்ல, சில பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நம்மை அறியாமலே ஏதோ ஒரு விதத்தில் நம் வாழ்க்கையில் வழிகாட்டிக் கொண்டே இருப்பார்கள். என்றோ அவர்கள் கூறிய அறிவுரைகள் இன்றுவரை நம்மை நல்வழியில் செலுத்திக் கொண்டே இருக்கும். அந்த விதத்தில் எனக்குப் பல ஆசிரியர்கள் உண்டு. இவர்களைத்தவிர, பெற்றோர்கள், வீட்டுப்பெரியவர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று பலரும் வழிநடத்தி இருக்கிறார்கள். வழிநடத்திக் கொண்டும் இருக்கிறார்கள். பலர் நினைவுகளில். சிலர் இன்று வரையிலும் துணையாக நின்று. என்ன தவம் செய்தனை என்று இந்த நாளில் அவர்களை நினைத்து நன்றிகளைக் கூறிக்கொள்வேன்.

இந்துக்களின் வழிப்பாட்டில், வாழ்க்கைமுறையில் குருவிற்கென்று எப்பொழுதுமே சிறப்பான இடம் ஒன்று உண்டு. பள்ளியில் நமக்குப் பாடம் கற்பித்த குருக்கள் நமது ஆசிரியர்கள். நம்மைச் செழுமைப்படுத்தி வாழ்வியலைக் கற்றுக் கொடுத்தவர்கள். ஒருவரின் அறியாமை எனும் இருட்டு வாழ்க்கையில் இருந்து அறிவு, ஞானம், ஒழுக்கம் என்னும் தீபங்கள் ஏற்றி வெளிச்சத்திற்குக் கொண்டு வருபவர்கள் அனைவருமே குருவாக தகுதியுடையவர்களாகி மேன்மை அடைகிறார்கள். அந்த வகையில் இன்று வரை என்னை வழிநடத்தும் குருவானவர்களுக்கு என்னுடைய வணக்கங்கள்.

குரு பிரம்மா குருர் விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர:
குரு சாக்ஷாத் பரப்ரம்ம தஸ்மை ஸ்ரீ குருவே நம:



No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...