Monday, July 17, 2023

நியூட்டன்



உலகிலேயே மக்கள்தொகை அதிகமுள்ள நாடு இந்தியா. அங்கு தேர்தல் எப்படி நடக்கிறது என்பதே அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளுக்கு ஆச்சரியமான விஷயம்! தொழிநுட்பத்தில் சிறந்த நாடுகளே தேர்தலை நடத்தவும் ஓட்டுக்களை எண்ணவும் திணறும் காலத்தில் எப்படி இந்தியாவில் மட்டும் மின்னணு வாக்கு இயந்திரங்களின் மூலம் தேர்தலை வெற்றிகரமாக நடத்துகிறார்கள் என்று வியக்கிறார்கள்! அதற்கான காரணம் நாட்டின் மீது தீவிர பற்றுக் கொண்ட அறவழியில் நடக்கும் சில அதிகாரிகளும் மக்களும் ராணுவமும் என்பதைத் தான் இந்தப்படம் புரிய வைக்கிறது. அழகான கதையை அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

76 ஓட்டுக்களுக்காக சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடமாடும் பகுதிக்குச் செல்ல அச்சப்படும் தேர்தல் அதிகாரிகள் அனுபவமே இல்லாத இளைஞன் ஒருவனை அப்பகுதிக்கு அனுப்புகிறது. அங்கு அவன் எதிர்கொள்ளும் அனுபவமே படமாக விரிகிறது. தேர்தல் நடப்பதை அறிந்தாலும் தேர்தல் வேட்பாளர்களை அறியாத மக்கள். அவர்களால் தங்களுக்கு என்ன ஆதாயம்? என்று கேட்கும் நிலைமையில் சில பகுதிகள் அதுவும் மலைப்பகுதிகளில் ஆதிவாசிகள் குடியிருப்புகளில் இருக்கும் என்று நினைக்கிறேன். அவர்கள் உலகத்தில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வாழும் சமூகம் அது. உயிரைப் பணயம் வைத்து அங்கு செல்ல அரசியவாதிகள் துணிவதில்லை. அப்படி துணிபவர்களை தீவிரவாதிகள் கொன்று விடுவது போல இப்படத்தில் காட்டியிருந்தார்கள்.

தீக்கு இரையான வீடுகள், பள்ளிக்கூடத்தைக் கண்டவுடன் நாயகன் அதிர்கிறான். அவனுடன் இருக்கும் மற்ற அதிகாரிகள் 'இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா' ரேஞ்சில் காதைக் குடைந்து கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு உதவி செய்ய வரும் ஆதிவாசிப் பெண் மட்டும் நாயகனின் நேர்மையைப் புரிந்து உதவ முன்வருகிறாள். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே தேர்தலை முடிக்க எத்தனிக்கும் ராணுவ அதிகாரி, வெளிநாட்டு ஊடகத்தின் முன் தேர்தல் நடைபெறுவதாக காட்ட ஊருக்குள் சென்று மக்களைக் கூட்டி வந்து மிரட்டுவது, ஓட்டளிக்கும் எந்திரத்தைப் பயன்படுத்தத் தெரியாமல் போதிய கல்வியறிவு இல்லாத வாக்காளர்கள் தவிப்பது, தீவிரவாதிகளுக்குத் துணைபோகிறவர்களோ என்று அந்த மக்களைச் சந்தேகித்து அராஜகம் செய்வது என்று ஒரு சில மணிநேரங்களில் நடப்பதாக சொல்லப்பட்டிருக்கும் கதையை அழகாக படமெடுத்திருக்கிறார் இயக்குனர் அமித்.

அரசு வேலை என்பது பலருக்கும் இன்று வரையில் கனவாக இருக்கிறது. நல்ல வேலையில் இருந்தால் உடனே திருமணம் அதுவும் வசதியான வாழ்க்கைக்காக என்று பெற்றோர்கள் போடும் திட்டம், படிப்பறிவில்லாத மக்களை ஏமாற்றும் கூட்டம் என்று காலத்தின் கொடுமையை காட்டுகிறது இப்படம்.

தன் கடமையை நேர்மையாக முடிக்க நினைக்கும் இளைஞனுக்கும் சமூகத்திற்குமிடையே நடக்கும் போராட்டம் தான் படம். கதாநாயகனாக ராஜ்குமார் ராவ். நன்றாக நடித்திருக்கிறார். இந்திப்படங்கள் கூட அவ்வப்போது இப்படிப்பட்ட படங்களை எடுக்கும் அளவிற்குத் திருந்தி விட்டது.

No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...