Wednesday, July 12, 2023

அந்த நாளும் வந்திடாதோ




அமெரிக்காவில் உள்ள H-1B சிறப்பு தொழில் பணியாளர்கள் மற்றும் பிற தற்காலிக விசா வைத்திருப்பவர்களுக்கு அமெரிக்காவிலேயே விசா புதுப்பித்தல் வழங்கும் ஒரு பைலட் திட்டத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை பிப்ரவரி 9, 2023அன்று அறிவித்தது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்படும் இந்த திட்டம், விண்ணப்பதாரர்கள் வெளிநாடு செல்வதற்கான தேவையை நீக்கி, விசா புதுப்பித்தல்களை நாட்டிற்குள் செயல்படுத்த அனுமதிக்கும். இதன் மூலம் வெளிநாடுகளில் உள்ள தூதரக அலுவலகங்களின் பணிச்சுமையைக் குறைக்க முடியும். கோவிட்-19 தொற்றுநோயால் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கான விசா விண்ணப்ப செயல்முறையை மேம்படுத்தவும் இத்திட்டம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தூதரக விவகாரங்களுக்கான பணியகத்தின் விசா சேவைகளுக்கான துணைச் செயலாளரான ஜூலி ஸ்டஃப்ட், 'ப்ளூம்பெர்க் லா'விற்கு அளித்த பேட்டியில், "இத்திட்டம் விசா புதுப்பித்தல் தொடர்பாக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்ப முயற்சிக்கும் பொழுது எதிர்கொள்ளும் சிரமங்களையும் நிவர்த்தி செய்ய உதவும்" என்று கூறியுள்ளார்.

H-1B விசா, குறிப்பாக தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்களுக்குத் தேவையான ஒன்று. இரண்டு, மூன்று வருட காலத்திற்கு வெளிநாட்டு ஊழியர்களைத் தங்கள் நிறுவனங்களில் பணியாற்ற பலராலும் பயன்படுத்தப்படுகிறது. L-1 விசாக்கள், வெளிநாட்டு அலுவலகங்களில் இருந்து நிர்வாகப் பணியாளர்களை அமெரிக்காவிற்கு மாற்ற விரும்பும் அமெரிக்க நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது. வெளிநாட்டில், குறிப்பாக இந்தியாவில், எச்-1பி விசா வைத்திருப்பவர்களின் மிகப்பெரிய விசா இடையூறுகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு நடவடிக்கையாக, உள்நாட்டில் புதுப்பித்தல் திட்டத்தை குடிவரவு வழக்கறிஞர்கள் மற்றும் வணிகக் குழுக்கள் வெளியுறவுத்துறையை வலியுறுத்தியுள்ளன. வெளிநாடு செல்லும் பணியாளர்கள் விசா முத்திரை இல்லாமல் மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது. கொரோனா காலத்தில் பலரும் அவரவர் சொந்த நாடுகளில் சிக்கிக் கொண்டதால் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வாஷிங்டன் டிசியில் ஒரு புதிய தூதரகப் பிரிவை அமைத்து விசா நீட்டித்தல் விண்ணப்பங்களைக் கையாள அரசு முடிவெடுத்துள்ளதாக ஸ்டஃப்ட் கூறினார்.

நமது பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோதி அவர்களின் அமெரிக்க வருகையின் பொழுது L1 மற்றும் H1B விசா வைத்திருப்பவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குச் செல்லாமல் அமெரிக்காவிலேயே விசா புதுப்பிப்பதற்கான முத்திரையைப் பெறுவார்கள் என்ற அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வமான செய்தியை அமெரிக்காவாழ் மக்களிடையே பகிர்ந்தார். இது பலருக்கும் மகிழ்ச்சியைத் தரக்கூடியது என்பது அனுபவமுள்ளவர்களுக்குப் புரியும். இந்தியர்கள் உட்பட திறமையான வெளிநாட்டுப் பணியாளர்களின் 'விசா புதுப்பித்தல்' பைலட் திட்டம் விரைவில் தொடங்கும் என்று பைடன் அரசு அறிவித்துள்ளது. இது நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டியதும் அவசியமானதும் கூட. கொரோனா தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து இந்தியாவில் எச்1பி விசா ஸ்டாம்பிங் என்பது பலருக்கும் ஒரு கனவாகவே இருந்து வருகிறது. தொற்றுநோயால் அமெரிக்க தூதரகங்கள் மூடப்பட்டதால் ஹெச்1பி விசா வைத்திருப்பவர்கள் பலரும் இந்தியாவில் சிக்கிக்கொண்டனர். இந்தியாவில் விசா நேர்காணல் காத்திருப்பு நேரம் அதிகமாகிக் கொண்டு வருவதால் ஹெச்1பி விசாவில் உள்ள பல இந்தியர்கள் தங்கள் அமெரிக்க வேலைகளை இழந்தனர் அல்லது வேறு பல சிக்கல்களில் மாட்டிக் கொண்டனர்.

அதுமட்டுமில்லாமல், விசா காலாவதியாகிவிட்டால் ஐரோப்பா வழியாக இந்தியாவிற்குச் செல்வதிலும் ஏகப்பட்ட பிரச்சினைகள். இன்றைய நிலவரப்படி, அமெரிக்க விசா காலாவதியாகிவிட்டால், அமெரிக்காவிலிருந்து ஐரோப்பா வழியாக இந்தியாவுக்குப் பயணிக்க ட்ரான்சிட் விசா தேவை. ஆனால், மத்திய கிழக்கு நாடுகள் வழியாக பயணம் மேற்கொண்டால் இந்த ட்ரான்சிட் விசா தேவை இல்லை. எச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மேம்பட்ட பயண ஆவணங்கள் வழங்கப்பட்டால், அவர்கள் டிரான்சிட் விசா இல்லாமல் ஐரோப்பா வழியாகவும் இந்தியாவுக்குச் செல்ல முடியும்.

விசா காலம் முடியும் நேரம் பலரும் ஸ்டாம்பிங்கிற்காக இந்தியாவிற்குப் பயணிப்பார்கள். இனி இதற்காக மெனக்கெட்டுப் பயணிக்கத் தேவையில்லை.  ஊருக்குப் போக ட்ரான்சிட் விசா வாங்க வேண்டுமே என்ற கவலையுமில்லை. மெதுவாக மற்ற விசாக்களுக்கும் இந்த நடைமுறையைச் செயல்படுத்த வேண்டும். தேவையற்ற மன அழுத்தம் இல்லாமல் இந்தியாவிற்குச் சென்று குடும்பங்களுடன் செலவிடும் நேரங்கள் அதிகமாகும். 'அந்த நாளும் வந்திடாதோ' என்று ஹெச்1பி விசாவில் இருப்பவர்கள் பாட ஆரம்பித்து விட்டார்கள். விரைவில் பைடன் அரசு செயல்படுத்தும் என்று நம்புவோம்.

No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...