Sunday, January 5, 2025

Multiple Facets of Madurai - 2

நாம் பிறந்து, வளர்ந்த ஊரைப் பற்றிப் பேசும்பொழுது எப்பொழுதும் ஒரு பெருமிதம் வரத்தானே செய்யும்? காலங்கள் மாறி புதுக்கோலம் பூண்டு விட்டிருந்தாலும் பழைய நினைவுகளைக் கிளறும் படங்களைப் பார்த்தால் மீண்டும் பால்ய காலத்திற்கே கொண்டு செல்லும் வலிமை படங்களுக்கு உண்டு. அப்படித்தான் திரு.மனோகர் தேவதாஸ்-ன் 'Mulitple Facets of Madurai' புத்தகத்தின் ஒவ்வொரு பக்கங்களும் என்னை இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது. 

அவர் கோரிப்பாளையம் என்ற பகுதியில் சிறிது காலம் வசித்திருக்கிறார். மேம்பாலம் ஏறுவதற்கு முன்பே மசூதி ஒன்று இருக்கும். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி அது. அங்குள்ள இறைச்சி சந்தை கழிவுகளை ஆற்றில் கொட்டி தண்ணீர் வராத வைகையை மாசுபடுத்தி வருகிறார்கள் பொறுப்பற்ற மக்களும் கண்டுகொள்ளாத மாநகராட்சியும். அப்பகுதியில் நடமாட முடியாதபடி நாஸ்தி பண்ணி வைத்திருக்கிறார்கள். யாருக்கும் எதைப்பற்றியும் அக்கறையில்லை. கவலையுமில்லை. வருங்கால சந்ததிகளுக்கு நாம் செய்யும் துரோகம் என்ற நினைவு அறவே இல்லை. சுரணை கெட்டுத்தான் போயிருக்கிறோம். 

அவருடைய குறிப்புகளில் இருந்து அப்பகுதி இப்பொழுது நிறையவே  மாறிவிட்டிருக்கிறது என்பது மட்டும் நன்கு தெரிகிறது. மேம்பாலம் (ஆல்பர்ட் விக்டர் ஓவர் பிரிட்ஜ் ) பாரம் தாங்காது என்று கீழ்பாலத்தை அதிகமாக பயன்படுத்தவேண்டிய நிலை தற்பொழுது. போக்குவரத்தைக் கட்டுப்படுத்த வைகையின் இருகரைகளையும் இணைக்கும் பாலங்கள் வரிசையாகக் காட்சி தருகிறது. ஆனாலும் மதுரையிலிருந்து கோரிப்பாளையம், செல்லூர் செல்பவர்கள் கீழ்பாலம் வழியாகத் தான் செல்ல வேண்டும். 

புழுதி பறக்க வாகனங்கள் செல்லூர் செல்ல கண்மாயை கடந்து செல்ல வேண்டும். பாவம் அதன் எதிர்புறத்தில் வாழும் மக்கள். கடந்து செல்லும் பொழுதே மூக்கை மூடிக்கொண்டு தான் செல்ல வேண்டியிருக்கிறது. சாக்கடையாக்கி வைத்திருக்கிறார்கள். கண்மாய் முழுவதும் குப்பைகளைக் கொட்டி நீரின் நிறம் மாறி பார்க்கவே படுபயங்கரமாக இருக்கிறது.  மழைக்காலங்களில் கேட்கவே வேண்டாம். சாக்கடை தண்ணீர் சாலையெங்கும் ஓடி வாகனங்களின் சக்கரங்களில் சுற்றி ஊரெங்கும்...ச்சை! தீராத கொசுத்தொல்லை வேறு. ப்ளீச்சிங் பவுடர் "விலை என்ன தெரியும்ல" என்று மைதா/கோதுமை மாவைத் தூவி மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கும் அறிவுக்கழகம்.  மதுரையின் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இதைப்பற்றியெல்லாம் கொஞ்சம் கூட அக்கறை கிடையாது. கைநீட்டி காசு வாங்கி ஓட்டுப்போடும் கும்பல் இதைப்பற்றிக் கேட்கவே கூடாது. முடியாது. பெருமைக்கு நாம் வேண்டுமென்றால் 'தூங்கா நகரம்', 'உணவு நகரம்' என்று பீற்றிக் கொள்ளலாம். அதனுடன் இப்பொழுது 'துர்நாற்ற நகரம்', 'குப்பை நகரம்' என்ற அடைமொழிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். 

நல்லவேளை, இந்த மனிதர் இப்படிப்பட்ட காட்சிகளைப் பார்க்கவில்லை. அவருடைய நினைவுகளில் இருந்து 2004ல் வரைந்த பாடத்தைப் பார்த்தால் ஏக்கமாக இருக்கிறது!

ஹ்ம்ம்... என்னவோ போடா மாதவா! 









No comments:

Post a Comment

Can This Love Be Translated?

 “Can This Love Be Translated?” பல நாட்களுக்குப் பிறகு பார்த்த கே-ட்ராமா. தலைப்பே வித்தியாசமாக இருந்ததில் வசப்பட்டேன். கதாநாயகி புதிதாக இருந...