Sunday, January 25, 2015

விமானத்தில் ஓர் நாள்...

பஸ், ரயில், விமான பயணங்கள் என்றுமே ஒரு அனுபவமாகவும், பல சுவாரசியங்களுடனும் இருக்கும். சமயங்களில் தொல்லையாகவும், எதிர்பாரா திருப்பங்களுடனும் இருந்தாலும் பயணத்தின் போது நாம் சந்திக்கும் மனிதர்கள், அவர்களின் நடை, உடை, பாவனை, சம்பிராதாய பேச்சுக்கள் ...இன்னும் இப்படி எவ்வளவோ மனதை ஈர்க்கும் விஷயங்கள்! அந்த வகையில் பயணங்களை நான் மிகவும் ரசிப்பதுண்டு.

விடுமுறை முடித்து கலிஃபோர்னியாவிலிருந்து இரவில் பதினொரு மணிக்கு சிகாகோ நோக்கி விமானம் கிளம்பியது. மூடிய விமானத்திற்குள் மூச்சு திணறுவது மாதிரி இருந்தாலும் நடு சீட்டில் உட்காரும் பொழுது உண்மையாகவே அப்படி தான் இருந்தது. சே! வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வர கண்ணாடி சீட் கிடைக்கவில்லையே என்று ஒரு சின்ன எரிச்சல்! அந்த சீட்டில் உட்கார்ந்திருந்தவன் கல்லூரி படிக்கும் மாணவன் போல் இருந்தான். ஒரு சிநேக புன்னகையுடன் ஹாய் என்றான். பதிலுக்கு நானும் ஒரு ஹாய் சொல்லிக் கொண்டே என் இருக்கையில் அமர்ந்தேன். கணவர், குழந்தைகள் அவரவர் இடங்களில். வலப்பக்கத்தில் வந்து அமர்ந்தவன் உட்கார்ந்த மறு நிமிடமே நித்யாதேவியின் அரவணைப்பில்!!! எப்படித்தான் இவர்களால் இப்படி தூங்க முடியுமோ??? கொடுத்து வைத்தவர்கள்!

சிறிது நேரத்தில் விமானமும் அன்ன நடையிட்டு ரன்வேயில் மற்ற விமானங்களைத் தொடர, என் அருகில் அமர்ந்திருந்தவன் சிறு குழந்தையின் உற்சாகத்துடன் தானாகப் பேசி சிரித்து ரசித்துக் கொண்டிருந்தான்! கடைசியில் சிக்னல் கிடைத்து விமானம் மேலெழும் பொழுது கண்களை இறுக மூடிக் கொண்டு எதையோ சொல்லிக் கொண்டே அடிக்கடி கைகளை கழுவுவது போல் ஏதோ ஒருவித டென்ஷனில் இருந்தான்! சடக்கென்று காலை கொஞ்சம் மேலே தூக்குற மாதிரி பண்ணுவான் பிறகு கீழே குனிந்து எதையோ தேடுவது போல் சிறிது நேரம். நான் பார்த்தால் ஒரு ஹி ஹி...

ஹார்ம்லெஸ் பட் நார்மலாக இல்லை என்று மட்டும் புரிந்தது. எனக்குன்னு எங்கிருந்து தான் வருவார்களோ! இனி தூங்கிய மாதிரி தான் என்று எண்ணிக் கொண்டேன்.

முன்வரிசையில் ஒரு கைக்குழந்தை திடீர் திடீரென அழுது மற்றவர்களின் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்க, 'என்ன நடந்தாலும் தூங்குவோர் சங்கத்து ஆட்கள்' மட்டும் கண்களை இறுக்க மூடிக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார்கள்! நடுநடுவே குளிர்பானங்களும் வந்து போய்க் கொண்டிருந்தது. விமானம் ஆட்டம் காணும் போதெல்லாம் விமானியின் எச்சரிக்கை மணி ஒளிர, தூங்குற ஜனங்களுக்கு என்ன கவலை? என்னைய மாதிரி கோட்டான்கள் தான் எப்படா விடியும் என்று காத்திருந்தோம். அடிக்கடி என் குழந்தைகள் தூங்குகிறார்களா என்று பார்த்துக் கொண்டே இருந்தேன்.

ஒரு வழியாக அதிகாலையில் ஐந்து மணிக்கு சிகாகோவில் தரையிறங்கும் பொழுது லேசான பனித்தூறல்! என் அருகில் அமர்ந்திருந்தவன் ஹை! ஸ்னோ ஸ்னோ என்று திரும்பி என்னை பார்த்தவன் சிரித்துக் கொண்டே ஹி ஹி! ஐ ஆம் ஃப்ரம் நியூ ஆர்லியென்ஸ். நெவர் சீன் ஸ்னோ பிஃபோர் என்று மீண்டும் கண்ணாடி வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டும் சிரித்துக் கொண்டுமிருந்தான். அப்பாடா ! எஸ்கேப் என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே இறங்கும் பொழுது தூக்கத்திற்கு கண்கள் ஏங்கியது!

சிகாகோவில் குளிருக்கா பஞ்சம்?? செம குளிர்! விமான நிலையத்தில் நுழைந்தவுடன் அதிகாலை என்பதே மறந்து போய் விட்டது. அந்த நேரத்திற்கே கடைகள் திறக்கப்பட்டு, எண்ணையில் பொறியும் சிக்கன், பீப், பேக்கன் மற்றும் பீட்சா வாசனையில் தூங்கிக் கொண்டிருந்த வயிறும் முழித்துக் கொண்டது. மகன் விழித்துக் கொண்டே பிரகாசத்துடன் கடைகளை நோட்டமிட்டுக் கொண்டு வர, வழி கேட்டு நடந்தோம் நடந்தோம் ஒரு அரை மைல் தூரத்திற்கும் மேல்...அவ்வளவு பெரிய்ய்ய்யய விமான நிலையம்!!!

'மினுக்மினுக்' வண்ண ஒளியில் கண்களை கவரும் விதத்தில் கிறிஸ்துமஸ் அலங்காரங்கள்! குழந்தைகள், வயதானவர்கள், உடல் ஊனமுற்றோர்களுக்கான வசதிகளுடன் கழிவறைகள், உட்காருவதற்கு வசதியான இருக்கைகள், பலவித உணவுக்கடைகள், தடுக்கி விழுந்தால் ஸ்டார்பக்ஸ் என்று விமான நிலையம் கலகலப்பாகவும், சுத்தமாகவும் இருந்தது. கலைநயத்துடன் கூடிய சிலைகள், ஓவியங்கள் என்று அழகாக அலங்கரித்து வைத்திருந்தார்கள். ஏனோ, சென்னை விமான நிலையம் இப்படி இல்லையே என்ற ஏக்கம் வந்தது :(

நடந்த நடையில் தூக்கமும் பிரியாவிடை கொடுக்க...இனி மூன்று மணிநேரம் காத்திருக்க வேண்டும். ஒவ்வொருவராக முகம் கழுவிக் கொண்டு வந்தாயிற்று. சுற்றிலும் இருந்தவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில்! வாயை திறந்து போட்டபடி, முகத்தை புத்தகத்தால் மறைத்தபடி, ஒரு கையை முட்டுக் கொடுத்தபடி, காலை நீட்டிக் கொண்டு இப்ப சரிந்துடுவாரோ என்று பயமுறுத்தியபடி ...இப்படி பல கோணங்களில் பலரும் தூங்கியபடி இருக்க...தூங்க மறந்த குழந்தைகள் கைகளில் பொம்மைகளுடன் சுற்றிக் கொண்டிருக்க அவர்களுடன் அரைத்தூக்கத்தில் பாவப்பட்ட பெற்றோர்கள்!

அந்த அதிகாலை நேரத்திலும் 'டிப்டாப்'பாக உடையணிந்தவர்களும், பார்த்தவரை கவரும் வண்ணம் உதட்டுச்சாயத்துடன் 'பளிச்'சென்ற மேக்கப்புடன் வளைய வரும் பெண்களும், அழுக்கு ஜீன்ஸ், டி-ஷர்ட் இளைஞர்களும், காதில் ஹெட்ஃபோன், கையில் அலைபேசி, கணினியுடன் மற்றும் சிலரும் என்று வேடிக்கை பார்க்க அவ்வளவு மக்கள் கூட்டம்! பெண்கள் பலரும் 'UGG' பூட்ஸ் அணிந்திருந்தார்கள்!

என் தூக்கம் போயாச்சு! இனி என்ன செய்வது? அங்கிருக்கும் செல்ஃபோன் சார்ஜிங் ஸ்டேஷனில் உட்கார்ந்து கொண்டு சிறிது நேரம் நாட்டு நடப்பை பார்க்க வேண்டியது தான்! அதுவும் சிறிது நேரத்தில் போர் அடித்து விட்டது. இப்போது என்ன செய்வது? சுவர்களில் மாட்டி இருந்த படங்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். அத்தனையும் குளோபல் வார்மிங் சம்பந்தமாக பெரிய பெரிய புகைப்பட வல்லுநர்களால் எடுக்கப்பட்ட அழகிய படங்கள். பல வருடங்களுக்குத் தொடர்ச்சியாக ஐஸ்லேண்ட், அண்டார்டிகா , ஐரோப்பிய நாடுகளில் பனிமலைகள் உருகி நீர்மட்டம் உயர்ந்திருப்பதை புள்ளி விவரங்களுடன் படிக்க படிக்க பதட்டம் !!! அப்படியே அங்கிருந்த படங்களை பார்த்தும் படித்தும் முடித்தாயிற்று. கிளைமேட் சேன்ஜ் தற்போதைய ஹாட் டாபிக். படித்தால் கவலை தான் மிஞ்சுகிறது! எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் ?? யோசித்துக் கொண்டே வந்தால் இன்னும் அரை மணிநேரம் இருக்கிறது அடுத்த ஃபிளைட்டுக்கு !

திடீரென ஒரு அறிவிப்பு- கேட் மாறி விட்டது என்று! பாம்பே விமான நிலையம் கண்முன் வந்து சென்றது. திட்டிக் கொண்டே மீண்டும் மூட்டை முடிச்சுகளுடன் ஒரு ஓட்டம்! அங்கு ஏற்கெனவே இருந்த கூட்டத்துடன் ஐக்கியாமாயச்சு!

சொன்ன நேரத்திற்கு விமானமும் வந்து, வரிசை எண் படி உட்கார்ந்து இப்பொழுது எனக்கு ஜன்னல் சீட்! ஹையா!!! ஜாலி ஜாலி! பக்கத்தில் நின்றிருந்த விமானத்தை நீரில் கழுவி விட்டு கொட்டும் பனி உறைந்து விடாமல் இருக்க ஆன்டி-ப்ரீசிங் கெமிக்கலை ஸ்ப்ரே செய்து கொண்டிருந்தார்கள். அந்தக் குளிரில் பனிமழையில் நனைந்து கொண்டே வேலை செய்து கொண்டிருந்தவர்களைப் பார்க்க கஷ்டமாக இருந்தது!

நாங்கள் இருந்த விமானத்திற்குள் இருவர் ஏறுவதும் இறங்குவதுமாய் எதை எதையோ சரி பார்த்துக் கொண்டிருந்தார்கள்! விமான பணிப்பெண்ணும் எங்கெங்கு எக்ஷிட் இருக்கிறது, தண்ணீரில் விமானம் இறங்கி விட்டால் எப்படி தற்காத்துக் கொள்வது என்று சொல்லும் பொழுது, தண்ணீரில் விழுந்தால் குளிரிலேயே மர்கயா தான். ஆனாலும் ஒரு நம்பிக்கை- ஃப்லோட்டிங் சீட் இருக்கிறதா என்று சரிபார்த்தாயிற்று! மதியத்திற்குள் ஊருக்குச் சென்று விடலாம்! போனவுடன் நானும் மகளும் மெக்சிக்கன் உணவு சாப்பிடுவது என்றெல்லாம் கனவு காண ஆரம்பித்து விட்டோம் !

திடீரென ஒரு பெண்மணி வந்து விமானத்தில் எடை அதிகமாக இருக்கிறது. இரண்டு பேர் இறங்கினால் ஆளுக்கு $500 டிஸ்கவுன்ட் என்று ஆசை காட்ட , இருவர் இறங்கியும் இன்னமும் கிளம்புவேனா என்று அடம் பிடித்து நின்று கொண்டிருக்க...சிறிது நேரம் கழித்து அதே பெண்மணி விமானத்தில் ஏதோ மெக்கானிக்கல் கோளாறு இறங்குங்கள் என்று சொல்லி எல்லோரையும் இறக்கி விட்டார்கள். சிலர் டென்ஷன் ஆனார்கள்! என்ன பயன்?? அந்தப் பெண்மணி யாருடனோ பேசுவது போல் எங்களை விவரமாக தவிர்த்தார்.

ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம்...ஓடியே போயிற்று. அதற்குள் பனிமழையும் தீவிரமாக , வெதர் காரணம் என்று மேலும் இரண்டு மணி நேரங்கள்! யாரும் குரலை உயர்த்தி 'காச்மூச்' என்று கத்தவில்லை. பொறுமையாக உட்கார்ந்திருந்தார்கள்!!

இப்படியே போனால் என்ன செய்வது? இரவிற்குள் வீடு போய் சேருவோமா என்ற கவலை வந்து விட்டது. இதற்கு முன்னும் நியூயார்க்கில் எட்டு பத்து மணிநேரங்கள் மாட்டிக் கொண்ட அவஸ்தையான அனுபவமுண்டு. நினைத்தாலே பயமாக இருந்தது!

வானிலிருந்து அழகாக அசைந்து அசைந்து கீழிறங்கி பூமியை அலங்கரிக்கும் பனிமழையை வேடிக்கை பார்ப்பது தவிர வேறென்ன செய்ய முடியும் ? சிறிது நேரத்தில் எங்கும் வெள்ளைவெளேர் என பனியின் ராஜ்ஜியம்! விமானங்கள் வருவதிலும், இறங்குவதிலும் பிரச்னைகள் ஏற்பட்டு சிறு கலவரம்!

மக்கள் தரையில் அமர்ந்து கொண்டு கணினி மற்றும் கைப்பேசியில் தொலைந்திருந்தார்கள். என் அருகில் இருந்தவரின் மனைவி கடைக்குச் சென்று கொழுப்பில்லாத பால், வாழைப்பழம், க்ளூட்டன் ஃப்ரீ கேக் என்று கணவருக்கு கொண்டு வந்து கொடுத்தார். கணவர்களின் உடல்நலத்தில் மனைவிகளுக்குத் தான் எவ்வளவு அக்கறை???

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடின்னு பாடிக்கிட்டும் , ஃபேஸ்புக்ல பொலம்பிக்கிட்டும், எப்பத்தான் ஃபிளைட் வரும் என்று மக்கள் டென்ஷன் ஆக, இந்தா அந்தா என்று வந்து சேர்ந்தது ஒரு விமானம். கடவுளே, இதாவது பத்திரமாக எங்களை ஊர் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு வீடு வந்து சேரும் பொழுது மாலை நேரமாகி விட்டது. கலிஃபோர்னியா நேரப்படி மாலை தான் என்றாலும், நியூயார்க் நேரப்படி இரவு மலர ஆரம்பிக்க...

வந்தவுடன் மெக்சிக்கன் உணவு சாப்பிட்டுத் தூங்கியவர்கள் தான்...







































No comments:

Post a Comment

'கனெக்ஷன்ஸ்' விளையாட்டு

நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் 'Wordle' என்ற விளையாட்டை 2022ல் அறிமுகப்படுத்தி வார்த்தை விளையாட்டில் ஆர்வம் இருப்பவர்களிடையே அது மிகவும் ...