Monday, September 11, 2023

இரண்டாவது இன்னிங்ஸ் சாத்தியமா?

அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான ப்ரைமரி தேர்தலில் வெற்றி பெறுபவரே எதிர்வரும் நவம்பர் 2024 அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு எதிராகப் போட்டியிட முடியும். தற்போது குடியரசுக்கட்சியின் சார்பில் பலர் களத்தில் இறங்கியிருந்தாலும் ஒரு சிலரே அதிக கவனம் பெற்று வருகின்றனர். இவர்களில் பல குற்றச்சாட்டுகளுக்கும் தண்டனைகளுக்கும் உள்ளாகியிருக்கும் முன்னாள் அதிபர் ட்ரம்ப், கடந்த தேர்தல் முடிவுகளில் ட்ரம்ப்பின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டாத முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ், ஃபுளோரிடா ஆளுநர் ரான் டிசாண்டிஸ், தொழில்நுட்ப தொழிலதிபர் மற்றும் எழுத்தாளர் விவேக் ராமசாமி, முன்னாள் சௌத் கரோலினா ஆளுநர் நிக்கி ஹேலி, சௌத் கரோலினா செனட்டர் டிம் ஸ்காட், நியூஜெர்சியின் முன்னாள் ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இன்றைய தேதியில் ப்ரைமரி தேர்தல் நடந்தால் முன்னாள் அதிபர் ட்ரம்ப் தான் குடியரசுக்கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக வெற்றி பெறுவார். அவருக்கெதிரான சட்ட சிக்கல்களும் குற்றச்சாட்டுகளும் இருந்த போதிலும் தற்போதைய அதிபர் பைடனை எதிர்க்க சரியான போட்டியாளராக 59 சதவிகித குடியரசுக்கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள் என வால்ஸ்ட்ரீட் பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பு கூறுகிறது. 600 குடியரசுக்கட்சி ப்ரைமரி தேர்தல் வாக்காளர்கடையே நடந்த கருத்துக்கணிப்பில் ஃபுளோரிடா ஆளுநர் ரான் டிசாண்டிஸை விட ட்ரம்ப் 46 புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வருடம் ஏப்ரல் மாதம் நடத்திய கருத்துக்கணிப்பில் இருந்ததை விட தற்போது ட்ரம்புக்கான ஆதரவு 11 சதவீதம் உயர்ந்துள்ளது! அப்போது 48 சதவீத குடியரசுக்கட்சியினர் அவரை முன்னணி வேட்பாளராக ஆதரித்தனர். அவர் மீதான வழக்குகளின் தீவிரம் அதிகரித்து அவரும் வேளையில் வாக்காளர்களின் ஆதரவும் கூடி வருவது எதிர்கட்சியினரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அவர் மீது பல குற்ற வழக்குகள் இருந்த போதிலும் அவையெல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பைடன் அரசாங்கத்தால் போடப்பட்டுள்ளது என 60 சதவிகிதத்திற்கும் மேலான குடியரசுக்கட்சி வாக்காளர்கள் கூறியுள்ளனர். 2020 தேர்தலுக்குப் பிறகு ஓட்டு எண்ணிக்கையில் குளறுபடிகள் நடந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டி வழக்குகள் தொடுத்த ட்ரம்ப்பின் நடவடிக்கையில் தவறு இல்லை. அவை "துல்லியமான வாக்கெடுப்பை உறுதி செய்வதற்கான சட்டபூர்வமான முயற்சிகள்" என்று ஏறக்குறைய 78 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதே நேரத்தில் 16 சதவீதம் பேர் ஜார்ஜியா மாநில வாக்கெடுப்பில் காங்கிரஸை சான்றளிக்க விடாமல் தடுக்க டிரம்ப் சட்டவிரோதமாக முயன்றதாகத் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பிற்கு வாக்களிக்க அதிக வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் ஈடுபட்ட 48 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர்.

டிசாண்டிஸ் 13 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தாலும், முன்னாள் சௌத் கரோலினா ஆளுநர் நிக்கி ஹேலி 8 சதவீத வாக்குகளும் தொழில்நுட்ப தொழிலதிபர் விவேக் ராமசாமி மற்றும் நியூஜெர்சி முன்னாள் ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டி ஆகியோர் முறையே 5 மற்றும் 3 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

தற்போது பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிரைமரி தேர்தலில் வென்று அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மத்திய அரசின் முக்கிய பிரிவுகளை மாற்றியமைப்பதாகவும் சமூக பாதுகாப்பு வலைத்திட்டங்களைக் குறைப்பதாகவும் கூறியுள்ளார். பைடன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குத் தொடுக்க ஒரு சிறப்பு வழக்கறிஞரை நியமிப்பதாகக் கூறி தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதாகவும் சபதம் செய்துள்ளார்! நியூயார்க் நகரில் பிறந்து பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்ற ட்ரம்ப் 2016 அதிபர் தேர்தலுக்கு முன் ரியல் எஸ்டேட் டெவலப்பர் மற்றும் தொழிலதிபராக இருந்தவர். "தி அப்ரெண்டிஸ்" என்னும் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பிரபலமானவர். நவம்பர் 2022ல் அதிபர் தேர்தலுக்கான முகாந்திரத்தைத் தொடங்கி விட்டார். அதற்கு முன்பே அவர் மீதான வழக்குகளும் தொடங்கி விட்டது. இருந்தும் பைடனுக்கு எதிராகவும் அமெரிக்காவின் சிக்கல்களைத் திறமையாக கையாள்வதில் சிறந்தவராகவும் அவருக்கு ஆதரவும் பெருகி வருகிறது.

ஜனநாயக கட்சியினரால் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சரிவை மாற்றியமைக்க ஃபுளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக மே 2023ல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். புதிய தலைமுறை தலைவராகத் தன்னை முன்னிறுத்திக் கொள்பவர். தனது மாநிலத்தில் நிர்வாக அதிகாரத்தின் எல்லைகளை விரிவுபடுத்திய ஒரு கடினமான தலைவராக அறியப்படுபவர். கொரோனா காலத்தில் பள்ளிகளை விரைவாக திறந்தது, முகக்கவசம், கோவிட் தடுப்பூசி தேவைகளைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்தது என பைடன் அரசின் கட்டுப்பாடுகளை மீறிய மாநில ஆளுநர் என்பதால் கட்சியினரிடையே அதிக கவனம் பெற்றவர். ட்ரம்ப்பிற்குத் தொடரும் ஆதரவால் குடியரசுக்கட்சியின் அதிபர் வேட்பாளர்களில் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதற்கு முன்பு அதிபர் ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். ஹார்வர்ட் சட்டக்கல்லூரியில் பயின்றவர். ஜட்ஜ் அட்வகேட் ஜெனரலாக (JAG) கடற்படையில் பணிபுரிந்தவர். அதிபர் ஜோ பைடன் மற்றும் காங்கிரஸில் ஜனநாயக கட்சியினரால் முன்வைக்கப்பட்ட பல பொருளாதாரக் கொள்கைகளை மாற்றியமைத்து நாட்டைப் பொருளாதார சீரழிவிலிருந்து மீட்கப்போவதாக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஃபுளோரிடாவில் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார் டிசாண்டிஸ். இதனால் அமெரிக்க நிறுவனங்கள் முக்கியமான தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வது தடுக்கப்படும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அவர்களது துணை நிறுவனங்களுக்கு விவசாய நிலங்கள் விற்பது தடை செய்யப்பட்டுள்ளது. சீனாவுடனான நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையை மாற்றியமைக்கவும் திருடப்பட்ட அறிவுசார் முறைகளால் செய்யப்பட்ட பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்யவும் சீனாவின் முன்னுரிமை வர்த்தக நிலையை முடிவுக்குக் கொண்டுவரவும் விரும்புகிறார். கல்வித்துறை, எரிசக்தித்துறை,
குடியேற்றப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளாக இடதுசாரி சிந்தனைக்கு எதிரான பல திட்டங்களையும் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளார். இவர் தீவிர வடதுசாரி சிந்தனை கொண்டவர். பல கொள்கைகளில் முன்னாள் அதிபருக்கு உறுதுணையாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலில் இந்தியர்கள் பலரின் கவனத்தைப் பெற்றுள்ள இந்திய அமெரிக்கரான விவேக் ராமசாமி பிப்ரவரி 2023ல் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை பிரகனப்படுத்தி போட்டியில் பங்கேற்றுள்ளார். தற்போது மூன்றாம் இடம் நோக்கி முன்னேறி வரும் விவேக் இடதுசாரி கொள்கைகளுக்கு எதிரானவராக, இளைய தலைமுறை வாக்காளர்களை குடியரசுக்கட்சியில் இணைப்பதில் தீவிரமாகச் செயல்படுபவர். ஊழலுக்கு எதிரானவர். 38 வயதான விவேக் குடியரசுக்கட்சியின் தேர்தல் களத்தின் இளைய வேட்பாளர். “Nation of Victims: Identity Politics, the Death of Merit, and the Path Back to Excellence” and “Woke, Inc.: Inside Corporate America’s Social Justice Scam.”புத்தகங்களை எழுதியவர். இந்து மதத்தைப் பின்பற்றுபவர். ஓஹையோ மாநிலத்தில் சின்சினாட்டி நகரில் பள்ளிப்படிப்பை முடித்து ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் உயிரியல் பட்டமும் யேல் பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டமும் பெற்றுள்ளார். அவரது மனைவி, அபூர்வா, ஓட்டோலரிஞ்ஜாலஜியில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர், அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

"ரோவியண்ட் சயின்சஸ்" என்னும் உயிரி தொழில்நுட்பவியல் தனியார் நிறுவனத்தையும் 'Strive Asset Management' என்ற முதலீட்டு மேலாண்மை நிறுவனதையும் நிர்வகித்த தொழிலதிபர். சமூக ஆர்வலர். "அமெரிக்கா ஃபர்ஸ்ட் 2.0" என்பது இவருடைய அரசியல் தாரக மந்திரம். இன்று நாடு எதிர்கொண்டிருக்கும் மிக அழுத்தமான பிரச்சினைகள், இழந்த பொருளாதாரத்தை மீட்டு கம்யூனிச சீனாவிலிருந்து சுதந்திரம் பெறுவது வரை விவேக்கின் பார்வை தேசிய மறுமலர்ச்சியில் கவனம் செலுத்துகிறது.

முன்னாள் சௌத் கரோலினா கவர்னர் நிக்கி ஹேலி குடியரசுக்கட்சியில் புதிய தலைமுறை தலைமைக்கு அழைப்பு விடுத்து பிப்ரவரி 2023ல் தனது அதிபர் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு மற்றும் தெற்கு எல்லையை வலுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தும் ஹேலி, ப்ரைமரியில் வெற்றி பெற்றால் முதல் பெண் மற்றும் அதிபர் பதவிக்கு குடியரசுக்கட்சியால் பரிந்துரைக்கப்பட்ட முதல் ஆசிய அமெரிக்கர் என்ற பெருமையைப் பெறுவார். 2004ல் சௌத் கரோலினா ஹவுஸுக்கு முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு அம்மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக 2011ல் அவர் பதவியேற்றபோது நாட்டின் இளைய ஆளுநர் என்ற பெருமையையும் பெற்றார். முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கீழ் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதராக 2017ல் பதவியேற்று 2018 வரை தொடர்ந்தார்.

சௌத் கரோலினாவின் பாம்பெர்க்கில் இந்திய பெற்றோர்களுக்குப் பிறந்தார். கிளெம்சன் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு முடித்தவர் அங்கு தனது கணவர் மைக்கேல் ஹேலியைச் சந்தித்தார். சௌத் கரோலினா இராணுவ தேசிய காவல் படையின் சார்பாக 2013ல் ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய மைக்கேல் தற்போது ஒரு வருட பணிக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளார். ஹேலிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் ஒரு பாரம்பரிய பழமைவாதி. அமெரிக்க கடனை நிர்வகிக்கவும் உள்நாட்டு எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கவும் நட்பு நாடுகளுடான ஆதரவைப் பராமரிக்கும் கொள்கைகளை முன்வைக்கிறார். தனது கிறிஸ்தவ நம்பிக்கை, கருக்கலைப்பு, சிறார்களுக்கான பாலின மாற்ற சிகிச்சைக்கு எதிரான எதிர்ப்பைப் பற்றி வெளிப்படையாகவே பேசியுள்ளார். ஜூன் 2023ல் GOP நியமனத்திற்கான தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். முதன்மை போட்டியாளரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் 2020 தேர்தலுக்குப் பிறகு தனது நடவடிக்கைகளுக்காக "ஒருபோதும் ஜனாதிபதியாக இருக்கக்கூடாது" என்று கூறினார். ஜோ பைடனின் வெற்றிக்கான காங்கிரஸின் சான்றிதழை மேற்பார்வையிடும் துணைத் தலைவர் என்ற முறையில், ஜனவரி 6, 2021 அன்று தேர்தல் முடிவை மாற்றுவதற்கான ட்ரம்பின் வேண்டுகோளை பென்ஸ் நிராகரித்ததால் இருவரும் வெளியேறினர். முன்னாள் வானொலி பேச்சு தொகுப்பாளரான பென்ஸ், 2012ல் இந்தியானாவின் 50வது ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு அமெரிக்க காங்கிரஸில் உறுப்பினராக ஆறு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியானா பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் பட்டம் பெற்றவர். அவருக்கும் அவரது மனைவி கரேன் என்பவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.

முன்னாள் நியூஜெர்சி கவர்னர் கிறிஸ் கிறிஸ்டி இரண்டாவது முறையாக அதிபர் தேர்தல் போட்டியில் இறங்கியுள்ளார். ஜூன் 2023ல் நியூஹாம்ப்ஷயரில் உள்ள டவுன் ஹாலில் தன்னுடைய பிரச்சாரத்தைத் தொடங்கி ட்ரம்ப்பை நேரடியாக எதிர்கொள்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். மற்ற முக்கியப் பிரச்சினைகளுக்கிடையில் அவரது சட்ட சிக்கல்கள் மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் குறித்து GOP முன்னோடியை மீண்டும் மீண்டும் தாக்கிப் பேசிவருகிறார். முன்பு 2016 GOP ப்ரைமரியில் இருந்து வெளியேறிய பிறகு ட்ரம்ப்பை ஆதரித்து 2020 மறுதேர்தல் பிரச்சாரத்தின் போது அவருக்கு நெருக்கமான ஆலோசகராகப் பணியாற்றினார். 2020 தேர்தல் முடிவுகளைப் பற்றிய முன்னாள் ஜனாதிபதியின் தவறான அறிக்கைகள், முடிவுகளை மாற்றியமைக்க அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பிறகு ட்ரம்பை எதிர்த்து குரல் கொடுக்கும் குடியரசுக்கட்சி விமர்சகர்களில் ஒருவரானார். கிறிஸ்டி 2009ல் கார்டன் மாநிலத்தின் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு முறை ஆளுநராகப் பதவி வகித்தவர் பிரிட்ஜ்கேட் ஊழல், 2017 மாநில அரசு பணிநிறுத்தம் எதிர்ப்பின் காரணமாக 2018ல் பதவியை விட்டு வெளியேறினார். 2002 முதல் 2008 வரை நியூஜெர்சியின் அரசு வழக்கறிஞராக ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ.புஷ்ஷின் கீழ் பணியாற்றினார். ஊழலில் கடுமையானவர் என்ற நற்பெயரைப் பெற்ற கிறிஸ்டி 1987ல் செட்டான் ஹால் பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றவர். மேரி பாட் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.

சௌத் கரோலினா செனட்டர் டிம் ஸ்காட், செனட்டில் உள்ள ஒரே ஒரு கறுப்பின குடியரசுக்கட்சி உறுப்பினர். கொள்கை ரீதியான பழமைவாதி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஸ்காட், மே 2023ல் அதிபர் தேர்தலில் தன்னை இணைத்துக் கொண்டார். 1994ல் சார்லஸ்டன் நகர சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் 2010ல் அமெரிக்க காங்கிரஸிற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு சௌத் கரோலினா காங்கிரஸில் பணியாற்றினார். 2013ல் நிக்கி ஹேலி அவரை காலியாக இருந்த செனட் இருக்கையை நிரப்ப செனட்டராக நியமித்தார். செனட்டில் பால்மெட்டோ மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் கறுப்பின நபர் என்ற பெருமையைப் பெற்றார். வடக்கு சார்லஸ்டனில் பிறந்த அர்ப்பணிப்புள்ள கிறிஸ்தவரான ஸ்காட், சார்லஸ்டன் சதர்ன் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றவர். திருமணமாகாதவர். ஒரே மாநிலத்தில் இருந்து இரண்டு போட்டியாளர்கள் பங்கேற்பதால் நிக்கி ஹேலிக்கும் டிம் ஸ்காட்ட்டிற்கும் பலத்த போட்டி இருந்தாலும் தேசிய அளவில் அறிமுகமான ஹேலிக்கு கட்சியினரிடையே ஆதரவு கூடி வருகிறது.

இவர்களைத் தவிர நார்த் டகோட்டா கவர்னர் டக் பர்கம், டெட் குரூஸ் இன்னும் பலர் போட்டியில் இருந்தாலும் அதிக கவனம் பெற்றவர்கள் வரிசையில் இருப்பவர்கள் ட்ரம்ப்பை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதில் தான் அரசியலே உள்ளது. எப்படி பந்தை வீசினாலும் சிக்ஸர் அடிப்பதில் கில்லாடி முன்னாள் அதிபர் என்பதால் தான் சட்டப்பிரச்னைகளை மீறி கட்சியில் அவருக்கு இன்னும் ஆதரவு உள்ளது. அவரை வெல்வது தான் மற்ற போட்டியாளர்களுக்கு மிகச் சவாலாக இருக்கும்.

அதுவும் தவிர, அமெரிக்கத் தேர்தலில் கட்சி தன்னார்வலர்கள், பிரச்சார உட்கட்டமைப்பு, பணம், விளம்பரங்கள் போன்ற சில காரணிகள் முக்கிய அங்கம் வகிக்கிறது. இவற்றையெல்லாம் தாக்குப் பிடிக்க முடிபவர்களால் மட்டுமே தொடர்ந்து போட்டியில் பங்கேற்க முடியும். இதன் பொருட்டே பலரும் வேட்பாளர் போட்டியிலிருந்து நடுவில் விலகி விடுவார்கள். தற்பொழுது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள வேட்பாளர்கள் அனைவரும் மக்களைச் சந்தித்து தங்களுடைய கொள்கைகளை எடுத்துரைத்து ஆதரவைத் தேடி வருகிறார்கள். விரைவில் மாநிலங்களில் ப்ரைமரி தேர்தல்கள் நடைபெற உள்ளது.

எதிர்கட்சி வேட்பாளரான ஜோ பைடனை எதிர்க்கத் தகுதியான குடியரசுக்கட்சி வேட்பாளராக இதுவரையில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் இருந்து வருகிறார். அவருடைய சட்ட சிக்கல்கள் இந்த தேர்தலின் முடிவை மாற்றுமா என காத்திருக்கும் எதிர்கட்சியினருடன் சேர்ந்து நாமும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ட்ரம்ப் ஆட்டத்தில் இருக்கும்பட்சத்தில் மக்களிடையே ஆதரவு குறைந்து வரும் ஜோ பைடனுக்கு சவாலான தேர்தலாகத் தான் இருக்கும்.






No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...