Saturday, August 15, 2020

குறைந்த தண்டனை, அதிக நீதி

இன்னும் மூன்று மாதங்களில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் தொற்று நோய்ப் பரவல், வேலையில்லா திண்டாட்டம் , பொருளாதார பாதிப்புகளுடன் “Black Lives Matter” இயக்கமும் அரசிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. போராட்டங்களையும் போராளிகளையும் தீவிரமாக எதிர்த்து முடக்குவதில் இருக்கும் அரசியலின் அடக்குமுறை மக்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.


மே 25, 2020 அன்று மினியாபொலிஸ் நகரில் கருப்பர் இனத்தைச் சார்ந்த ஜார்ஜ் ஃப்லாய்டின் மரணம் காவல்துறையினரின் அத்துமீறல்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. நானூறு ஆண்டுகளாய் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் இந்த பாதகச் செயலுக்கெதிரான போராட்டத்தில் கருப்பர்கள் பாதிப்புக்குள்ளாகுவதும் அதனை ஆளும் அரசு கண்டுகொள்ளாமல் செல்வதும் பல வருடங்களாக நடந்து கொண்டிருந்தாலும் இம்முறை சம்பவத்தை நேரில் கண்ட மனிதர்களின் காணொளி வைரலாகப் பரவி மக்களைக் கொதிப்படையச் செய்துள்ளது. ‘Black Lives Matter’ கோஷங்கள் நகர வீதிகளில் முழங்க, இன்றைய தலைமுறையினரின் பேராதரவும் ஒருங்கிணைந்த மக்கள் கூட்டமும் அமெரிக்க காவல்துறையின் கோரமுகத்தை மீண்டும் ஒரு முறை உலகிற்கு உணர்த்தியுள்ளது.

பதினாறாம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாக அமெரிக்காவிற்கு அழைத்து வரப்பட்ட கருப்பர்கள் இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்றிருந்தாலும் இனவாதமும் நிறபேதமும் அவர்களை இரண்டாம் தர குடிமக்களாகவே இன்று வரையில் நடத்திக் கொண்டிருக்கிறது.

அதிபராக ஒபாமா இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டதும் நாட்டில் சமத்துவம் நிலவுவதைப் போல தோன்றினாலும் நிறபேதம் என்பது அனைத்து துறைகளிலும் ஊடுருவியுள்ளது. “KKK” (Ku Klux Klan) போன்ற வெள்ளையின ஆதிக்க குழுக்களின் வெறுப்பரசியல் இன்று வெளிப்படையாக இல்லாவிட்டாலும் தினசரி வாழ்வில் இனவெறியுடன் நடக்கும் நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டு தானிருக்கிறது . அதுவும் டொனால்ட் ட்ரம்ப் அதிபரான பின் சிறுபான்மையினருக்கு எதிரான ஆதிக்க மனோபாவ அமெரிக்கர்களின் குற்றங்கள் பெருகியிருக்கிறது. இதற்கான இரு அடிப்படை காரணிகள் ‘சிஸ்டெமிக் ரேஸிசம்’ மற்றும் ‘சிஸ்டமேட்டிக் ரேஸிசம்’ என்பதாகும்.

தனி மனிதரையோ அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்தையோ நிற பேத அடிப்படையில் தாழ்வாகப் பார்ப்பதும் அவர்களைக் குறித்த தவறான கண்ணோட்டத்தில் பிரிவினையை உருவாக்கிக் கொள்ளுதலே ‘சிஸ்டெமிக் ரேஸிசம்’.

“இந்த நாட்டில் இருக்க விரும்பாவதர்கள் , இந்நாட்டை வெறுப்பவர்கள் தாராளமாக அவரவர் சொந்த ஊருக்கே கிளம்பலாம்.” அமெரிக்க அதிபரின் ட்வீட் இது. அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் சபையின் நான்கு சிறுபான்மை உறுப்பினர்களைப் பார்த்துச் சொல்லி இருக்கிறார் இந்த உலகத்தலைவர். ஏதோ இவர் ஒருவர் மட்டுமே இப்படிப் பேசவில்லை. அமெரிக்காவில் இனவெறியும் நிறவெறியும் எப்பொழுதுமே இருந்து கொண்டிருந்தாலும் இப்பொழுது முற்றிலும் மாறிய சந்திரமுகியாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

நினா தவுளுரி என்ற இந்திய வம்சாவளிப்பெண் 2014ல் ‘மிஸ் அமெரிக்கா’ பட்டம் வாங்கியதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அவள் மீதும் இந்தியர்கள் மீதும் இனவெறியர்கள் வன்மத்துடன் வசைபாடிக் கொண்டிருந்தார்கள்.

அடிமைகளாக இருந்த கருப்பர்களைக் குறிக்க வெள்ளையர்கள் பயன்படுத்திய “நிக்கர்” என்ற வார்த்தை சட்டப்பூர்வமாகத் தடை செய்யப்பட்ட ஒன்று. ஆனால் வயதான ஒரு வெள்ளை அமெரிக்கப் பெண்மணி கருப்பினத்தைச் சார்ந்த ஒரு பெண்ணை இழிவுபடுத்தும் விதத்தில் பேச, காவல்துறையினரின் தலையீட்டால் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டார் வெள்ளையினத்தவர். சமீபத்திய நாட்களிலும் நாட்டின் பல நகரங்களில் இத்தகைய நிகழ்வுகள் நடந்தது.

கூடைப்பந்து மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த இரு கருப்பின பள்ளி மாணவர்களின் பைகளைச் சோதனை செய்து போதைப்பொருட்கள் ஏதாவது இருக்கிறதா என சட்டத்திற்குப் புறம்பாக காவல்துறையினர் நடந்து கொண்டதும் கூட சிஸ்டெமிக் ரேஸிசமே. இன்று கருப்பின குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை வெளியில் அனுப்பத் தயங்குவதும் காவலர்களைக் கண்டு அஞ்சும் நிலைமையும் ஏற்பட்டிருப்பது நிறவெறியால் தான் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடிய நேரத்திலும் , இரட்டைக்கோபுர தாக்குதலின் போதும் இந்தியர்களை “கோ பேக் டு யுவர் கண்ட்ரி” என்று சொன்னவர்கள் இன்று சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸுக்காக ஆசியர்களை வசை பாடிக்கொண்டிருப்பதற்கும் இனவெறியே காரணம்.

பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் பல நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து வாழும் நியூயார்க் போன்ற பெருநகரங்களிலேயே இப்படியென்றால், மிட் வெஸ்ட்ல் இவர்கள் ஆதிக்கம் கொண்டுள்ள சிறுநகரங்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அமெரிக்கர்கள் பலரும் இணக்கத்துடன் வாழ வேண்டுமென விருப்பப்பட்டாலும் ஆதிக்க மனோபாவம் கொண்ட சிலரால் வன்முறைகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

வெளித்தோற்றத்தில் எல்லாம் இயல்பாகத் தெரிந்தாலும் அமெரிக்கச் சமூக பொருளாதார அரசியல் கட்டமைப்பின் ஒவ்வொரு அங்குலத்திலும் நிறவெறி ஊறிக் கிடக்கிறது.

அமெரிக்காவில் வேலையில்லாதவர்களில் பெரும்பான்மையினர் கருப்பர்கள், லட்டினோ மற்றும் சிகப்பிந்தியர். கல்லூரிப்பட்டம் பெற்றிருந்தாலும் வேலைவாய்ப்புகளில் வெள்ளையர்களுக்கே முன்னுரிமைகளும் அளிக்கப்படுகிறது. அலுவலகங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கும் உயர்பதவிகளில் இருப்பவர்களும் வெள்ளையர்களே.

நாட்டின் மக்கள் தொகையில் 13% கருப்பர்கள் இருந்தாலும் சிறைக்கைதிகளில் 40% இருப்பதும், ஒரே குற்றத்திற்கு வெள்ளையர்களுக்கு குறைவாகவும் கருப்பர்களுக்கு அதிக தண்டனையும் நீண்ட சிறைக்காலமும் வழங்கி நீதிமன்றங்களும் பாரபட்சத்துடன் நடந்துகொள்கிறது. செய்யாத குற்றங்களுக்காக கருப்பர்கள் அதிக அளவில் தண்டனைகளை அனுபவிப்பதாக மிஷிகன் மாநில சட்டக்கல்லூரிப் பேராசிரியர் பார்பரா ஓ ப்ரையன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில் அவசர மருத்துவ சேவை, மருத்துவமனைகளில் வசதி வாய்ப்புகள் குறைவாகவும் 67% மருத்துவர்கள் கருப்பின நோயாளிகளிடம் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும், ஒரே கல்வித்தகுதி இருந்தாலும் கருப்பின மருத்துவர்களுக்கு அதிக அளவில் ஆராய்ச்சி மானியங்கள் மறுக்கப்படுவதாகவும் ‘தேசிய சுகாதார ஏற்றத்தாழ்வுகள் அறிக்கை’ சுட்டுவதும் ஸிஸ்டெமிக் ரேஸிசத்தின் அங்கமே.

வண்டி ஓட்டுபவர்களில் வெள்ளையர்களை விட கருப்பர்கள் அதிகமாக காவல் துறையினரால் நிறுத்தப்படுவதாகவும் பாதசாரிகளின் மரணங்களில் கூட கருப்பர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருப்பதாக 2017ல் நெவாடா பல்கலை நடத்திய ஆய்வில் வெளிவந்துள்ளது. சமீபத்திய ஜார்ஜ் ஃப்லாய்ட்ன் மரணமும் அதனைப் போன்ற பல மரணங்களும் காவல்துறையினர் சிறுபான்மையினரிடம் நடந்து கொள்ளும் அராஜகத்தால் தொடருவது.

‘ஃபெடரல் ரிசர்வ் ஆய்வு’ ஒன்று தேசிய அளவில் செல்வ வளங்கள் தொண்ணூறு சதவிகிதம் வெள்ளை அமெரிக்கர்களிடமும் 2.6 சதவிகிதம் மட்டுமே கருப்பர்களிடம் உள்ளதாகக் கண்டறிந்துள்ளது. சிறுபான்மையினரை விட வெள்ளை அமெரிக்கர்கள் அதிக அளவில் சொத்துக்கள் , குடும்ப வருமானம் கொண்டிருப்பதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதிக வருமான வசதி உள்ளவர்கள் குடியிருப்பு பகுதிகளில் கருப்பினத்தவரைக் காண்பதும் அரிது. இப்பாகுபாடுகளைக் களைவதன் மூலமே ஒன்றிணைந்த மக்கள் சமுதாயம் உருவாகும் என சமூக இயக்கங்கள் இன்று வரை போராடிக் கொண்டிருக்கின்றன.

சமூகத்தில் புரையோடியிருக்கும் இனவாதத்தை அரசு எந்திரங்கள் மூலமாக அரசியல் தலைவர்கள் இலைமறைகாய் போல் கருப்பர்களுக்கு எதிராக இயக்க உதவுவதே ‘சிஸ்டமேட்டிக் ரேஸிசம்’ . “War on Crime”, “War on drugs”, “Law and Order” போன்ற குறிப்பான பதங்கள் சிறுபான்மையினரைக் குறிவைத்தே உருவாக்கப்பட்ட வார்த்தைகள். குடியரசு மற்றும் ஜனநாயக அதிபர்கள் பலரும் அதை தாரக மந்திரமாகவே கருப்பர்களுக்கு எதிராகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். க்ளிண்டனும் ஒபாமாவும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. சிறுபான்மை மக்களின் நலனுக்காகச் செலவிடுவதைக் காட்டிலும் இருமடங்கு காவல்துறை, சிறைச்சாலை, நீதித்துறைகளுக்காக அரசு செலவிடுவதாகப் பொருளாதார வல்லுநர்கள் இமானுவேல் மற்றும் கேப்ரியல் குறிப்பிட்டுள்ளார்கள். இனப் பிரிவினையை அரசு அதிகாரங்கள் மூலமாக வெற்றிகரமாக மேற்கொள்ளும் அரசியல்வாதிகள் இன்று வரையிலும் தொடருவதும் பாகுபாட்டைக் குறைக்கும் வழிகளை மேற்கொள்வது போல் தெரிந்தாலும் மறைமுகமாக அடக்கியாள்வது தொடருவதும் கருப்பின மக்களின் தொடர் போராட்டத்திற்கு முக்கிய காரணமாகியிருக்கிறது.
தற்போது நடந்து கொண்டிருப்பது கருப்பர்களுக்கும் வெள்ளை அமெரிக்கர்களுக்குமான போராட்டம் மட்டுமல்ல. அனைத்து சிறுபான்மையினரும் இணைந்து ஆதிக்க மனோபாவ வெள்ளையினத்தவரை எதிர்த்து நடத்த வேண்டிய போராட்டம். “Black Lives Matter” இயக்கம் பற்றிப் பேசவே அஞ்சும் இந்தியர்கள் ஏராளம். அது கருப்பர்களுக்கானபிரச்னை என்று எளிதில் கடந்து விடுவதும் முறையானதல்ல. நம் குழந்தைகளுக்காக, அவர்களின் வருங்கால சந்ததியினருக்காக நம்முடைய பங்களிப்பும் இப்போராட்டங்களில் அவசியமாகிறது. பல்வேறு துறைகளில் முன்னேறிக்கொண்டே இருபத்தியொன்றாம் நூற்றாண்டை நோக்கி வீறு நடை போடும் உலகில் நிற, இன பேதங்கள் தொடர்வதும், பணக்காரன் ஏழை என்ற பிரிவினையையும் மீறி நிறபேதம் கொண்டு வெறியுடன் அலையும் அவலமும் அதனால் மக்கள் பாதிக்கப்படுவதும் மனித இனத்திற்கே வெட்கக்கேடான விஷயம். இதிலிருந்து மீள்வது கடினமென்றாலும் அரசின் போக்கில், முடிவுகளில் மாற்றங்கள் வர வேண்டும். தற்போதைய தொற்றுநோயால் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்களும், வேலையிழந்தவர்களும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் சிஸ்டெமிக் மற்றும் சிஸ்டமேட்டிக் ரேஸிசத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டியது அவசியம். அதற்கு அரசின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து பாதிக்கப்பட்ட மக்களின் புனரமைப்புத் திட்டங்களுக்காக நிதிகளை ஒதுக்கிட அரசு முன்வர வேண்டும் என சமூக மாற்றத் திட்டங்களை வரையறுக்கும் மையத்தின் தலைவர் பொறுப்பில் இருக்கும் டொரியன் வாரன் குறிப்பிட்டுள்ளார். இதற்கான ஆரம்பத் திட்டங்களை “Black Lives Matter” போராட்டத்திற்குப் பின் பல மாநிலங்களும் முன்மொழிந்துள்ளது வரவேற்கத்தக்கது. பேதங்களைக் குறைத்தாலே நாடு வளம் பெறும். நாட்டு மக்களும் முன்னேறுவர். குற்றவாளிகளுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்ட நிலை மாறி நாட்டின் பிரஜைகள் அனைவரும் பாரபட்சமின்றி வாக்களிக்கும் வகையிலும் சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். 

பிரிவினையை ஒழித்து சமூக மாற்றங்களைக் கொண்டு வர ஒத்துழைக்கும் மாநகர, மாநில, தேசிய அரசியல் தலைவர்களைத் தேர்ந்தெடுத்தல் இக்கால கட்டத்தில் அவசியமாகிறது. 2020 நவம்பர் தேர்தலில் அதற்கான சாத்தியங்கள் இருக்கும் என்று நம்புவோம்.

No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...