Saturday, January 2, 2021

Bye, bye 2020 (FB post)

கொண்டாட்டமாகத்தான் ஆரம்பித்தது 2020. தை பிறக்கும் பொழுதே உடன் பிறவா சகோதரராய் துயர்மிகு காலங்களில் நம்பிக்கையையும் அன்பையும் ஆதரவையும் அளித்த பாலாஜி dhaவின் மரணம் மிகுந்த வருத்தத்தைத் தந்தாலும் அவர் அனுபவித்துக் கொண்டிருந்த வலிகளிலிருந்து விடுதலை பெற்றதாய் நினைத்து ஆறுதல் கொண்டோம். சில நாட்கள் மகளுடன் தங்கி இருந்ததில் தொழில்நுட்பத்துறையில் இன்றைய மில்லினியல்களின் வாழ்க்கையை ஓரளவு கணிக்க முடிந்தது. எல்லோரும் ஒருவித வேலை நெருக்கடியுடனும் மன அழுத்ததுடனும் இருப்பதாக எனக்குத் தோன்றியது. ஆனாலும் கொண்டாட்ட மனநிலையில் தங்களை உற்சாகமாக வைத்திருக்கிறார்கள் என்பதே ஆறுதல்.

இந்த வருடம் சிறப்பான வருடமாக, மறக்க முடியாத அனுபவமாக இருக்க வேண்டும் என்று நினைத்தது பலித்துத்தான் போனது. ஆம். சரித்திரத்தில் இடம்பெறும் இந்த வருடத்தில் ஜீவித்துக் கிடப்பது என்பதே வரம் தானே! இன்று ஸ்பானிஷ் ஃப்ளுவைப் பற்றி படிக்கும் பொழுது வரும் ஆச்சரியம் எதிர்காலத்தில் இந்த துரதிர்ஷ்ட கொரோனாவைப் பற்றி படிப்பவர்களுக்குத் தெரியும். மார்ச் ஆரம்பித்த நாளிலிருந்தே அலுவலகத்தில் கூடிக்கூடி பேசிக் கொண்டிருந்தார்கள். சீனாவிலிருந்து விடுமுறையைக் கொண்டாடிவிட்டு வந்த ஒரு சீன அமெரிக்கப் பெண்ணை அலுவலகத்தில் ஏன் அனுமதித்தார்கள் என்பதே அனைவரின் பதட்டம். அவரை எப்படியெல்லாம் தவிர்க்க முடியுமோ தவிர்த்தார்கள். பாவமாக இருந்தது. ஆனால் உயிர் பயம் யாரை விட்டது? அமெரிக்காவின் சியாட்டில் நகரம் திணற ஆரம்பிக்க, நியூயார்க்கில் அதன் தாக்கம் எதிரொலிக்கத் துவங்கிய தினத்தில் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. அரசு அலுவலகங்களை மூட கவர்னரின் ஆணை வந்தவுடன் தான் அதுவரையில் இல்லாத பல கேள்விகள் மனதில். என்னுடன் வேலை பார்தத அனைவருக்கும் கூட.

வேலை இருக்குமா இல்லையா என்ற கேள்விக்கு அழைத்துச் சொல்கிறோம். ஆனால் நாளையிலிருந்து யாரும் வேலைக்கு வரத்தேவையில்லை என்று அனுப்பி விட்டார்கள். இருபது வருடங்களுக்கும் மேலாக இங்கு தங்கி இருக்கிறேன். நிரந்தரமற்ற நிலையை எண்ணி பதட்டத்துடன் வீட்டிற்குத் திரும்பிய அன்று தான் என்னடா வாழ்க்கை என்று நினைக்கத் தோன்றியது.
அன்று இரவே தனித்தகவலில் வீட்டிலிருந்து வேலை செய்யும் அனுமதி கிடைத்து விட்டாலும் பலருக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்படாமல் பணிநீக்கம் செய்ய்யப்பட்டது தெரிய வந்ததில் வருத்தமே. அதற்குப் பிறகான வாழ்க்கையில் நித்தம் வரும் செய்திகள் கலக்கத்தையே அதிகரித்தது. ஒரே ஆறுதல் குழந்தைகள் எங்களுடனே எங்கள் பாதுகாப்பில் இருந்தது தான். அதுவே இந்த வருடத்தின் மிகப்பெரும் வரம்.

இத்தனை வருடங்களில் இல்லாத மருத்துவச் செலவுகளுடன் ஏகபோகமாக ஆரம்பித்து ஏகப்பட்ட மன உளைச்சல். உடன்பிறந்தவர்களுக்கும் இதே நிலைமை. நிம்மதியின்றி அனைவரும் வருந்தும் படி அடுத்தடுத்த நிகழ்வுகள். நல்லதே நடக்கும் என்று ஆறுதல் கூறியவர்கள் கூட இன்று விலகி நிற்பது தான் கொடுமை. வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும்... தெரிந்தது தான். அதற்காக வலிகளே இல்லை என்று புறந்ததள்ளி விட முடிவதில்லை. ஆனால் ஒன்று, வலிய சென்று வாங்கிக் கட்டிக்கொள்வதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தான் நினைக்கிறேன். ஆனால் முடியவில்லை. மாத்திக்கணும் எல்லாத்தையும் மாத்திக்கணும்னு எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்.

அமைதியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் ஒழுங்கற்ற அமைதியற்ற நிலை. வலிகளும், அழுகைகளும், வருத்தங்களும், கவலைகளும், இழப்புகளும் இருந்தாலும் சைக்கிள் கேப்பில் என்னை நானே அமைதியாகவும் வைத்திருக்கவும் தவறவில்லை.

மகனும் மகளும் குழந்தைகளாக இருக்கும் பொழுது அவர்களுடன் இருக்க முடியவில்லையே என்று வருந்திய நாட்கள் பல உண்டு. இன்று அவர்கள் மீண்டும் என் கூட்டிற்குத் திரும்பியதைக் கொண்டாட முதலில் ஆரம்பித்தது சமைலயலறையில். அவர்களுக்குப் பிடித்ததை விதம்விதமாக சமைத்து அவர்களைத் திக்குமுக்காட வைத்தேன். அவர்களும் ரசித்து ருசித்துச் சாப்பிட புதுப்புது உணவுவகைகளைத் தேடித்தேடி சமைக்க கற்றுக் கொண்டேன்.
காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஓடும் காலை நேரம். இன்றோ ஆற அமர உட்கார்ந்து மழையையும் வெயிலையும் ரசிக்கும் ஒரு சந்தர்ப்பமும் கிடைத்தது. இந்த வருடத்தில் தான் எங்கள் பகுதியில் இருக்கும் நான்கு தெருக்களில் இருப்பவர்களின் அறிமுகமும், அவர்களின் வளர்ப்புப்பிராணிகளைப் பற்றியும் அதிகம் தெரிந்து கொண்டோம். தீபாவளி, கொலு, விநாயகர் சதுர்த்தி நாட்களில் மட்டும் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்ததும் மாறியது. கார்த்திகேயன் ஃபேஸ்புக்கில் இருக்கும் கோலதிற்கான குழுமங்களை அறிமுகப்படுத்த, கொண்டாட்டம் எனக்கு. திண்டாட்டம் உங்களுக்கு. இன்று 100வது கோலத்துடன் 2020க்கு டாட்டா சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

கோலம் போடறீங்களே, மதுபானி என்றொரு கலை இருக்கிறது. முயற்சி செய்து தான் பாருங்களேன் என்று தொடங்கி வைத்தார் உமா. அது என்னவோ என்று யூடியூபில் பார்த்து கற்றுக் கொண்டேன். நல்லா இருக்கே என்று மேலும் ஊக்குவித்தார்கள். அக்கா, நீங்கள் மண்டலா, வார்லி, பட்டசித்ரா, கோண்டா கலைகளையும் முயற்சி செய்யாலாம் என்று வித்யா எடுத்துக் கொடுக்க நானும் ஆர்வமாக அறிந்து கொண்டு சிறு முயற்சிகள் செய்து உங்கள் பார்வைக்கும் கொண்டு வந்தேன். என்னைப் போலவே ஆர்வம் கொண்ட மக்கள் பலரும் முயற்சி செய்து அவர்கள் வரைந்ததை எனக்கு அனுப்பினார்கள். ஆகா! என்று அவரவர் உணர்ந்து கொண்ட தருணம் தான் எத்தனை இனிமையானது. இவை ஒவ்வொன்றும் அதிக கவனத்தையும் நேரத்தையும் எடுத்துக் கொண்டாலும் மன அமைதியையும் கொடுத்தது என்பதே உண்மை. அதனாலேயே தொடர்ந்து செய்தேன். செய்கிறேன். செய்து கொண்டிருப்பேன். வேறு சில குழுமங்களில் கற்களில், கண்ணாடி போத்தல்களில் வண்ணங்கள் தீட்டுவதையும் கண்டேன். எல்லாவற்றையும் முயற்சி செய்து உங்களையும் வறுத்தெடுத்தேன்  

நாம சந்தோஷமா இருந்தா நவகிரகங்களுக்குப் பிடிக்குதோ இல்லையோ நம்மைச் சுற்றி இருக்கும் இம்சை அரக்கர்களுக்குப் பிடிக்காது. எப்படியாவது எதையாவதுச் சொல்லி மனவலியைக் கொடுக்கத்தான் செய்கிறார்கள். எத்தனை அடிச்சாலும் தாங்குறாண்டா மொமெண்ட்கள் ஏராளம் இந்த வருடம் மட்டும். போதாக்குறைக்கு ஏழரை வேறு காலில் சலங்கையைக் கட்டிக்கொண்டு துள்ளி ஆடுகிறது. 'ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்...' என்று வலிக்காத மாதிரியே நானும் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

2020 நிலையற்ற வாழ்க்கையை கண்முன்னே நிறுத்தியிருக்கிறது. நான் நானாக இருந்தாலும் என்னை வம்புக்கு இழுக்கும் அடாவடிகளுக்கு குறைவில்லை. இந்த நாள், இப்பொழுது, இக்கணம் மட்டுமே நிரந்தரம் என்று உணர்ந்து அந்தந்த நிமிடங்களில் வாழ்ந்திடவே விழைகிறேன். எப்பொழுதும்ம்ம்...

பல வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் தான் விசேஷ நாட்களை குடும்பத்துடன் அந்தந்த நாட்களில் கொண்டாட முடிந்திருக்கிறது. அதுவே பேரானாந்தம்

முடிந்த வரையில் நண்பர்களை அழைத்துப் பேசினேன்.நிறைய மலையாளப்படங்கள், அமெரிக்கன், கொரியன் தொடர்கள் என்று நன்றாக பொழுதும் போனது.சில புத்தகங்களை வாசிக்கவும் செய்தேன்

எனக்கு மிகவும் பிடித்த ஊடகம் ஃபேஸ்புக் . பல நல்ல நண்பர்களும் சில துஷ்டர்களையும் கண்டறிந்தது இங்கு தான். நான் கற்றுக் கொண்ட பலவும், சந்தித்த நண்பர்கள், அன்பர்கள் பலரும் இங்கு வந்த பிறகு தான். தம்பி மார்க்கிற்குத் தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும்.

எழுத, கோலம் போட, வரைய ஊக்குவித்த நல்ல உள்ளங்களுக்கும் ஆதரவு அளித்த உங்களுக்கும் நன்றி. 

உறவுகளை இழந்து வருந்தும் உள்ளங்களுக்கு என்னுடைய இரங்கல்கள்.

என்னை விட்டு விலகியவர்களுக்கு ஒரு பெரிய கும்பிடு. 

என்னோடு பயணிப்பவர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.

No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...