Thursday, January 7, 2021

கோவிட் கிறிஸ்துமஸ்

தீபாவளி நாள் நெருங்க நெருங்க மனதில் பொங்கும் உற்சாகத்தைப் போல இந்த கிறிஸ்துமஸ் நாள் நெருங்க அமெரிக்க நண்பர்கள் பலரும் முகத்தில் சிரிப்புடனும் உற்சாகத்துடனும் வளைய வருவார்கள். 'Thanksgiving Day' முடிந்தவுடன் வீடுகளில் கிறிஸ்துமஸ் அலங்கார விளக்குகள், மரங்கள் என்று தெரு முழுவதும் விழாக்கோலம் பூண்டு விடும். கடைகளில், அலுவலகங்களில் கிறிஸ்துமஸ் மின்விளக்குகள் ஒளிர, நகரமே ஒளிவெள்ளத்தில் மிதப்பது போல் தோன்றும். கூடவே குளிரும் பனியும் கிறிஸ்துமஸ் நெருங்குவதைப் பறைசாற்றும்.

 "ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் ஆல் த வே" எங்கும் ஒலிக்க தொடங்கியிருக்கும். மால்களில் சாண்டாக்ளாஸ் வேடமணிந்த நீண்ட வெண்தாடி தாத்தக்கள் மடியில் அமர்ந்து கொண்டு அழகாக போஸ் கொடுக்கும் குழந்தைகள் தங்களுக்குப் பரிசாக இன்னது வேண்டும் என்று மழலையில் சொல்லிக் கொண்டிருப்பார்கள். சில குழந்தைகள் கண்ணாடியும் தாடியும் பார்த்து மிரண்டு அழுது கொண்டிருப்பார்கள். பெற்றோர்கள் நடப்பதை அனைத்தையும் ஆனந்தத்துடன் அருகில் நின்று வேடிக்கைப் பார்க்க, தக்க சமயத்தில் 'க்ளிக்' செய்து படமெடுக்கும் கூட்டம் ஒன்று தங்கள் வியாபாரத்தில் மும்முரமாக இருப்பார்கள். 

டிசம்பர் மாதம் முதல் பலரும் சிகப்பு, பச்சை நிற ஆடைகளை உடுத்தி திருவிழாவிற்குத் தயாராகுவார்கள். என்னுடைய முதல் கிறிஸ்துமஸ் மாதத்தில் அலங்காரங்களையும், ஆன்லைன் வசதியில்லாத காலத்தில் கடைகளில் நீண்டு கொண்டே செல்லும் வரிசைகளையும் தள்ளுவண்டி நிறைய பரிசுப்பொருட்களையும் மக்கள் வாங்கிச்செல்வதைப் பார்த்து அதிசயித்திருக்கிறேன். அந்த ஒரு மாதத்தில் மட்டுமே நிறுவனங்களின் வருமானம் பங்குச்சந்தையைக் கூட ஆச்சரியப்படுத்தும். தீபாவளிக்கு முன்பாக வரும் கண்கவர் விளம்பரங்கள் போல் கிறிஸ்துமஸ் பரிசு விளம்பரங்களும் கொடிகட்டிப் பறக்கும். இன்று அனைத்துமே மாறியிருக்கிறது. 

ஆன்லைன் வர்த்தகங்கள் வாழ்க்கையை எளிதாக்கியிருக்கிறது. அதுவும் கொரோனா காலத்தில் கேட்கவே வேண்டாம். தொலைக்காட்சியிலும், தினசரி, மாதாந்திர பத்திரிக்கைகளிலும் வந்து கொண்டிருந்த விளம்பரங்கள் இன்று கைபேசி, கணினியைத் திறந்தவுடன் வந்து கண்முன்னால் கொட்டுகிறது. மக்களின் ஆசையைத் தூண்டுகிறது. கையில் காசு இல்லாவிட்டாலும் கிரெடிட் கார்ட் வைத்திருந்தால் போதும் என்ற நிலையில் மக்களும் வாங்கித் தள்ளுகிறார்கள். கடன் கொடுக்கும் வரை நல்லவனாக இருப்பவன் கடன் தொகையை செலுத்தவில்லையென்றால் கடனாளி ஆக்கி மனநோயாளிகள் அதிகரிக்கும் காலமும் இதுவே!

பல அலுவலகங்களிலும் கிறிஸ்துமஸ் பார்ட்டிகள் கோலாகலமாக நடைபெறும். இதைத்தவிர, நண்பர்களுடன் வெளியில் சென்று உணவருந்துவதும், கடைகளுக்குச் செல்வதும் ஷாப்பிங் செய்வதும் நடைமுறை பழக்கம். மதுபான விடுதிகளில் கூட்டம் அலைமோதும். எங்கும் சிரித்த முகத்துடன் திருவிழா உற்சாகத்துடன் வளைய வரும் மக்களிடம் பனிக்கால குளிரையும் தாண்டிய மனிதநேயம் வெளிப்படும்.
ம்ம்ம்... இந்த வருடம் என் நண்பர்களை, கலகலப்பான பேச்சுக்களை, நாட்களை, விதவிதமான உணவுவகைளை எல்லாவற்றையும் 'மிஸ்' செய்கிறேன். வீட்டில் இருக்கும் பொழுது தான் வாழ்க்கையில் எதையெல்லாம் தவறவிடுகிறோம் எப்படியெல்லாம் இனிமையான நாட்களைக் கடந்து வந்திருக்கிறோம் என்று தெரிகிறது!

2021 சுகமாக அமையும் என்ற நம்பிக்கையுடன்...


No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...