Saturday, January 9, 2021

"அம்பை" சொல்வனம் சிறப்பிதழ்



"அம்மா ஒரு கொலை செய்தாள்" என்ற சிறுகதை வாயிலாக தான் "அம்பை" என்ற எழுத்தாளரைப் பற்றி சில வருடங்களுக்கு முன்பு அறிந்து கொண்டேன். அம்மா என்றொரு பிம்பம் பலருக்கும் அந்த சிறுமியைப் போல வியப்பாக, அழகாக, நம்பிக்கையுள்ளதாக, ஆதரவாக, அன்பாக தனக்கே தனக்கானதாக இருக்கும். ஏதோ ஒரு நொடியில் அந்த பிம்பங்களை அம்மாக்களே நொறுக்கி விடும் சந்தர்ப்பங்களும் அமையும். ஆனாலும் நூலிழையில் அந்த பிம்பங்களைத் தக்க வைக்கத்தான் நினைக்கும் மனது. அந்த வகையில் இந்தக் கதை எனக்கு மிகவும் நெருக்கமாக உணர்ந்தேன். அவருடைய வேறு சில கதைகளையும் தேடிப் பார்த்து வாசிக்க ஆரம்பித்தேன்.

சமீபத்தில் பாஸ்டன் பாலா அவர்கள்  அம்பை பற்றின சொல்வனத்தின் சிறப்பிதழை அமேசானில் வெளியிட்டிருப்பதாகவும் இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம் என்று அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த இதலில் வெளியான சில கட்டுரைகளை இதற்கு முன்னரே வாசித்திருந்தாலும் முழுமையாக வாசித்திருக்கவில்லை.அவரைப் பற்றி தெரிந்து கொள்ளும் நல்ல சந்தர்ப்பம் என்று கிண்டிலில் தரவிறக்கிக் கொண்டேன். 

அம்பையின் நிறை குறைகளைப் பற்றி மற்ற எழுத்தாளர்கள் நேர்மையாக விமரிசித்திருந்த கருத்துக்கள் வாசிக்க சுவாரசியமாக இருந்தது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்திருப்பவரை ஆண் எழுத்தாளாளர்கள் சிலர் மோசமாக சித்தரித்திருப்பது ஒன்றும் புதிதல்ல என்றாலும் இலக்கியம் படித்தவர்கள், படைப்பவர்கள் தாங்கள் என்று சொல்லிக் கொண்டுத் திரியும் ஆண் எழுத்தாளர்களின் மன விகாரமும் தெரிய வந்ததில் வருத்தமும் கோபமும் தான் மிஞ்சியது. இந்த அழகில் தான் தமிழ் இலக்கிய உலகம் இருக்கிறது. நமக்கு வாய்த்தவர்கள்... ஹ்ம்ம்ம்.

சில வருடங்களுக்கு முன்பு என் கணவர் விஷ்வேஷ் ஒப்லா சொல்வனத்திற்கு எழுதிய
"ஷார்லட் ப்ராண்டியும் ராபர்ட் சௌதியும் எழுதிக் கொண்ட கடிதங்கள்" என்ற கட்டுரையில் (https://solvanam.com/2014/11/10/correspondence-charlotte-bronte-robert-southey/ )

‘இலக்கியம் பெண்களுக்கான துறை அல்ல. அவ்வாறு இருக்கவும் இயலாது. ‘
என்று கூறியவருக்கும் அவரால் குற்றம் சாட்டப்பட்ட பெண் எழுத்தாளர் ஒருவருக்கும் நடந்த கடித பரிமாற்றம் குறித்து இரு எழுத்தாளர்களிடையே இருந்த பரஸ்பர மரியாதையையும் மதிப்பும் பற்றி குறிப்பிட்டிருந்தார். அத்தகைய முதிர்ச்சியடைந்த இலக்கிய ஆளுமைகள் இல்லாத சமூகம் தமிழ்ச்சூழலில் உள்ளது. அதுவும் ஒரு பெண் எழுத்தாளரை இகழ்வது ஆண் எழுத்தாளர்களுக்கும் ஆண் சமூகத்திற்கும் சமயங்களில் மிக எளிதாக உள்ளது. அம்பையும் அத்தகைய தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார் என்பதை திரு.அரவிந்தன் நீலகண்டனின் பதிவில் தெரிந்தது😞 

அந்த இதழில் அம்பையும் தன்னுடைய எழுத்துக்களைப் பற்றியும் பத்திரிக்கைகளில் வெளிவந்திருந்த அவருடைய கதைகள், கருத்துக்களையும், அவர் சந்தித்த ஆளுமைகளுடனான தன்னுடைய அனுபவங்களையும் பகிர்ந்திருந்தார். அன்றைய, இன்றைய பெண் எழுத்தாளர்கள், கவிஞர்களைப் பற்றியும் சில கவிதை வரிகளையும் மேற்கோள் காட்டியிருந்ததை வாசிக்க சுவராசியமாக இருந்தது.

அம்பையின் "ஸ்பாரோ" அறக்கட்டளை மூலம் இந்தியாவில் இதுவரையில் ஆவணப்படுத்தாத பல பெண் இலக்கிய ஆளுமைகளைக் கண்டறிந்து அவர்களைப் பற்றின தகவல்களைத் திரட்டும் பணியில் தன் குழுவினருடன் அவர் மேற்கொண்ட பயணங்கள், தகவல்கள், ஆவணப்படங்கள் வரும் சந்ததியினருக்கு இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பை உணர்த்தும். இதற்காகவே அம்பைக்கு தமிழ் இலக்கிய உலகம் கடமைப்பட்டிருக்கிறது.

அம்பை அவர்கள் "கவிதாயினி" என்று பெண் கவிஞர்களை குறிப்பிட்டிருந்தது தான் ஆச்சரியமாக இருந்தது! பெண் கவிஞர்கள் அதனை எப்படி எடுத்துக் கொள்வார்களோ ? நான் ஒரு "பெண் கவிஞரை" கவிதாயினி என அறிமுகப்படுத்த, அப்படி தான் அழைக்கப்படுவதை விரும்பவில்லை "கவிஞர்" என்றே சொல்ல வேண்டும் என்று ஆட்சேபித்தது வரலாறு 😒

இந்த சிறப்பிதழ் வாயிலாக பல பெண் எழுத்தாளர்களைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. இதழை வெளியிட்ட சொல்வனம் குழுவினருக்கும் நன்றி. 

அம்பைக்கும் அவருடைய "ஸ்பாரோ" குழுவினருக்கும் வாழ்த்துகள்.

No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...