Sunday, January 17, 2021

"Sir"




இப்படியும் பொழுதுபோக்குப் படங்கள் எடுக்க முடியும் என்பதற்கு இப்படமே சாட்சி.

வீட்டில் வேலை செய்யும் பெண்ணை மரியாதையாக நடத்தும் ஆண். பெண்கள் இல்லாத வீட்டில் அச்சமில்லாமல் பணிவிடைகள் செய்யும் இளம்பெண். மேற்கொண்டு படித்து கல்லூரிக்குச் செல்ல வேண்டும் ; :பேஷன் டிசைனராக வேண்டும் என்ற கனவுடன் வாழும் இளம்பெண்ணுக்கு சிறு வயதிலேயே திருமணம் முடிந்து சில மாதங்களில் கணவனை இழந்த கைம்பெண்ணும் ஆகி விடுகிறாள். கிராமத்திலிருந்து நகரத்திற்கு வீட்டு வேலைக்குச் சென்று தன் தங்கையை படிக்க உதவி தன் கனவுகளை அவள் நனவாக்குவாள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறாள். சில மாதங்கள் மட்டுமே வாழ்ந்திருந்தாலும் கணவனின் குடும்பத்திற்கும் மாதாமாதம் பணம் அனுப்புவதால் மட்டுமே விதவைப் பெண்ணை ஊரிலிருந்து வெளியே அனுப்பும் மனிதர்கள் இன்றளவும் இருப்பதாக காட்டியிருப்பது இன்னும் மூட நம்பிக்கைகள் மனிதர்களிடம் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்பது உறைத்தாலும் தினசரி வாழ்க்கையில் நாமும் பார்த்துக் கொண்டு இருக்கும் உண்மை தான் இது.

ஏழ்மையில் இருந்தாலும் மானத்துடன் வாழ நினைக்கும் தன்னம்பிக்கைப் பெண் தன்னுடைய கனவை நனவாக்க தையல் வகுப்பில் சேர்கிறாள். நகரத்தில் ஏழைகளுக்குப் பெரிய துணிக்கடைகளில் பார்வையாளர்களாக கூட அனுமதி இல்லை என்பதே முகத்தில் அறையும் உண்மை. அத்தனையையும் சகித்துக் கொண்டு சாதிக்கிறாளா என்பதே கதை.

அந்தக் குடியிருப்பில் பணிபுரியும் மிகவும் தன்மையான மனிதர்கள் நடுநடுவே ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதாக காட்டியிருப்பதும் வேலை செய்யும் வீட்டின் உரிமையாளர் வேலைக்காரியிடம் ஒவ்வொரு முறையும் 'நன்றி' சொல்வதும், அவளுடைய கனவுகளை அடைய அவள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பதும் ஒருவருக்கொருவர் தங்களையறியாமல் மனதில் அன்புடன் வளைய வருவதுமாய் அழகான காதல் கதை. திரைப்படங்களில் மட்டுமே சாத்தியமோ?

வேலைக்காரி, விதவைப்பெண் காதல் வயப்படுவது அதுவும் தான் வேலைபார்க்கும் இடத்தின் உரிமையாளர், தொழிலதிபர், பணக்காரர் என்கிற பொழுது அங்கே குறுக்கே நிற்பது அந்தஸ்து, மற்றவர்கள் தன்னை கேலிசெய்வார்கள் என்கிற பதட்டம், கிராமத்தில் கைம்பெண் வளையல் அணிவதையே தடை செய்பவர்கள் எங்ஙனம் இதனை ஒப்புக்கொள்வார்கள் என்று பலதரப்பட்ட கேள்விகள்.

வேலையை விட்டு நின்றாலே வேலைக்காரிக்குத் திருட்டுப்பட்டம் கட்டும் ஊரில் இரு வேறு அந்தஸ்தில் இருக்கும் மனிதர்களின் காதல் சாத்தியமா? இது தான் இந்த திரைப்படம் சொல்ல வருவது.

ஆர்ப்பாட்டமில்லாத ஹிந்தி படம். நடிகை நடிகையர்களின் தேர்வும் அபாரம். நகரமும், கிராமும் மேல்தட்டு, கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கையும் என்று இரண்டும் ஒன்றுக்கொன்று தொட்டுத்தொடர்ந்து செல்கிறது.

இப்படிப்பட்ட படங்களைத் தான் "ஃபீல் குட் மூவி" என சொல்ல வேண்டும். தமிழில் இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாசக்காட்சிகள் இன்றி கதை என்று ஒன்று அறவே இல்லாததையெல்லாம் நல்ல படம் என்று பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்! 

ஹ்ம்ம்ம்...




No comments:

Post a Comment

Can This Love Be Translated?

 “Can This Love Be Translated?” பல நாட்களுக்குப் பிறகு பார்த்த கே-ட்ராமா. தலைப்பே வித்தியாசமாக இருந்ததில் வசப்பட்டேன். கதாநாயகி புதிதாக இருந...