Thursday, January 14, 2021

பொங்கலோ பொங்கல்

அரிசி சோறு சாப்பிடுவது என்பது பெருங்கனவாக இருந்தது ஒரு காலம். பணம் படைத்தவர்கள், வசதியானவர்களுக்கு மட்டுமே அந்த பாக்கியம் கிடைத்திருந்தது. அப்பொழுதெல்லாம் மக்களின் பசியை போக்கியது கம்பு, சோளம், வரகரிசி, குதிரைவாலி, கேழ்வரகு, தினை, சாமை வகை சிறுதானியங்கள் தான் என்று அம்மா அடிக்கடி சொல்வார். இன்று அரிசியின் பயன்பாடு எளிய மனிதர்களுக்கும் கிடைக்கும் வண்ணம் விவசாயத்தில் புரட்சியே நடந்திருக்கிறது என்று சொல்லலாம். அரிசியின் வரவில் சத்துள்ள சிறுதானியங்களின் மதிப்பு வெகு விரைவாக குறைந்து விட்டது. சிறுவயதில் கம்பங்கூழ், கேப்பைக்கூழ் சாப்பிட்டது நினைவில் இருக்கிறது. பெரியவர்கள் விரும்பிச் சாப்பிட, குழந்தைகள் அன்று வேண்டா வெறுப்பாக உண்டதை மீண்டும் காலம் நினைவுறுத்துகிறது.

பெருகி வரும் சர்க்கரை நோயாளிகள் அரிசி, கோதுமைக்கு மாற்றாக மீண்டும் சிறுதானியங்களின் மேல் கவனத்தைச் செலுத்தியுள்ளதால் வரலாறு திரும்புகிறது. சிறுதானியங்களின் பயன்பாடு நவீன உலகில் அதற்கான இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது.

வீட்டுக்கு அருகில் இருக்கும் கடையில் நான் கேட்ட சிறுதானிய வகை கிடைக்கவில்லை. அங்கு வேலை செய்பவர் உங்களுக்குத் தெரிந்தவர்கள் இந்தியாவில் இருந்து அனுப்ப முடியுமென்றால் எங்கள் கடையைத் தொடர்பு கொள்ளலாம் என்று அவருடைய விசிட்டிங் கார்டையும் தந்தார். என்ன ஒன்று, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் லைசென்ஸ் இத்தியாதிகள் இருக்க வேண்டும். சிலரிடம் கேட்டதற்கு அப்படிப்பட்ட முறையான அனுமதி தங்களிடம் இல்லை என்று கூறி விட்டார்கள்.

இந்திய மற்றும் அமெரிக்க கடைகளில் சிறுதானியங்களின் வரவு அதிகரித்திருக்கிறது. மக்களும் அரசிக்கு மாற்றாக பயன்படுத்துகிறார்கள். நானும் முதல் முறையாக வரகரிசி (Kodo Millet) வாங்கி வெண்பொங்கல் செய்து பார்த்தேன். முதன்முதலாக இந்த வருடம் வரகு அரிசியில் செய்த பொங்கல் பரீட்சார்த்த முயற்சி வெற்றி பெற்றது😋 சுவையாக இருந்தது. இனி மெல்ல மெல்ல குழந்தைகளுக்கும் சிறுதானியங்களை அறிமுகப்படுத்த வேண்டும். 

வரகரிசி பொங்கல் செய்முறை

இன்றைய நன்னாளில் சூரிய பகவானுக்கும், உலகிற்கெல்லாம் பசியைப் போக்கும் விவசாயிகளுக்கும், கால்நடைகளுக்கும் நம் நன்றியை செலுத்துவோம். விவசாயிகள் படும் துன்பங்களை நாம் அறிவதில்லை. மக்களின் பசியைப் போக்குபவர்கள் இன்றும் வறிய நிலையில் இருப்பது வேதனை. அவர்கள் வாழ்வும் சிறக்க வேண்டிக் கொள்வோம்.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.




No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...