Friday, July 7, 2017

பெங்களூரு...மைசூரு


2015 ஜூலை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை . மேக மூட்டத்துடன் பெங்களூரு 'குளுகுளு'வென வரவேற்க, விமான நிலையத்திலிருந்து வெறிச்சோடியிருந்த நெடுஞ்சாலைகளில் பெரிய பெரிய விளம்பர பலகைகளையும் மரங்களையும் கடந்து தம்பி வீட்டிற்குப் பயணம். வழியில் ஜிலேபியாய் பிழிந்திருந்த எழுத்துகள் தெலுங்கு மலையாளம் போல் தெரிந்தாலும் தமிழ் மட்டும் வித்தியாசமாக இருக்கிறதே என்று யோசித்துக் கொண்டே வர... தம்பி குடியிருக்கும் தெருமுனைக்கடை வாசலில் சப்போட்டா, சீத்தாப்பழத்தை அடுக்கியிருந்ததைப் பார்த்தவுடன் 'ஆஹா! தெய்வம் இருப்பது இங்கே' என மனம் பாட, தம்பியும் உனக்காக வாங்கி வச்சிருக்கேன் என்றான். தேங்க்ஸ்டா! தெரு முக்கு அம்பாள் கோவிலை தாண்டியவுடன் தம்பியின் அபார்ட்மெண்ட். பெட்டிகளை நான் எடுத்து வருகிறேன். நீ மாடியேறு என்றவுடன்...ஆ! elevator இல்லையா? என்ன அபார்ட்மெண்ட்டோ அதுவும் பெங்களூருவில்!

தம்பியும் பெட்டிகளை எடுத்துக் கொண்டு வர, தம்பி மனைவியும் சூடாக டீ போட்டுக் கொண்டு வந்து பயணம், குழந்தைகள் என்று பேசிக் கொண்டிருந்தோம். நல்லா ஜில்லுன்னு தான் இருக்கு பெங்களூரு என்றவுடன், இரண்டு நாள் முன்பு வரை நல்ல மழை. நேற்றிலிருந்து மீண்டும் பெங்களூரு கிளைமேட் திரும்பியிருக்கு. உன் அதிர்ஷ்டம் என்றான். நல்ல வசதியான அபார்ட்மெண்ட். அநேக பால்கனிகளில் தொட்டிகளில் விதவிதமான பூச்செடிகள், மரங்களில் பறவைகளின் ஆர்ப்பாட்டம். ஜில்ல்ல்ல்ல்ல் தென்றல்!

ஒரு காலத்தில் என்னுடைய கனவு நகரம்! அங்கு தான் செட்டிலாவேனென நினைத்திருந்த நாட்களும் உண்டு! வாழ்க்கை எப்படியெல்லாம் மாறிப் போய் .விடுகிறது? நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்குமாமே! அப்படித்தான் பெங்களூர் கம்பெனி வேலைக்குச் சென்ற இடத்தில் கனடாவுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்து...முடிவில் சுபம் :) பழைய பேச்சுகள் சிறிது நேரம் பேசி முடித்து விட்டு முன்பே திட்டமிட்டிருந்தபடி மைசூருக்குச் செல்லத் தயாரானோம். தம்பி மனைவி தட்டு நிறைய கொய்யா, சப்போட்டா, சீத்தாப்பழங்களை கொண்டு வந்து வைத்து அம்மா உங்களுக்கு என்ன பிடிக்கும் என்று நேற்றே சொல்லி விட்டார்கள். மானசீகமாய் அம்மாவிற்கு ஒரு நன்றி. விடுமுறையில் முதல் சாப்பாடே தித்திக்க தித்திக்க பழங்கள். வேறென்ன வேறென்ன வேண்டும். ஒரு முறை தின்றால் போதும். இப்படி பாடி தின்பதற்குத் தான் எத்தனை எத்தனை வகைகள்! வெயிட் மதுரை. ஐ ஆம் கம்மிங் சூன். இவ்வளவு செலவு செய்து ஊருக்கு வருவது இதற்காகத் தானே? ஆசை தீர சுவைத்து முடிக்க, தூங்கிக் கொண்டிருந்த தம்பியின் மகனும் எழுந்து வந்தான். ஃபோனிலும், ஸ்கைப்பிலும் பார்த்துப் பேசியிருந்தாலும் நேரில் பார்த்தவுடன் அவனுக்கு அப்படி ஒரு வெட்கம். அவனுக்கு வாங்கிச்சென்ற விளையாட்டுப் பொருட்களைப் பார்த்தவுடன் அருகில் அமர்ந்து பேச ஆரம்பித்தான். பிறந்த மூன்று மாதங்களில் பார்த்தது. இப்போது மூன்று வயதாகப் போகிறது! மழலை அழகு. வெகு விரைவிலேயே ஒட்டிக் கொண்டான். தான் ஆடா விட்டாலும்... சும்மாவா சொன்னார்கள்?

எல்லோரும் தயாராகி மைசூருக்குக் கிளம்ப எனக்குள் உற்சாகம். ஊர் சுற்றிப் பார்ப்பதற்கு தம்பிக்கும் ரொம்ப இஷ்டம். அதிக நெரிசலில்லாத பெங்களூரு போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமையை பறைசாற்றியது. அன்று நான் கண்ட மரங்களடர்ந்திருந்த நகரம் இன்று கட்டடங்களின் குவியலாய். மதுரையைப் போல மோசமில்லை. மரங்கள் இன்னும் ஒட்டிக் கொண்டு தான் இருக்கிறது. அங்கும் இங்குமாக இருந்த நிலத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். நகரைத் தாண்டிய சிறிது நேரத்தில் பறவைகளின் படங்களுடன் கன்னடத்தில் ஏதோ எழுதியிருக்க உள்ளே சென்றால் இன்னும் பழமை மாறா குடிசைகள், வைக்கோல் மேய்ந்து கொண்டிருந்த கால்நடைகள், செழிப்பான கோழிகள், ஆடுகளை மேய்த்துக் கொண்டு மேய்ப்பான்கள், குளங்களில் துணி துவைத்து குளித்துக் கொண்டிருந்த மனிதர்களுடன் மாடு, எருமைகள் நீந்திக் கொண்டிருக்க... எதிர்பாராத அழகானதொரு காட்சி! நாரை இனங்கள் பலவும் குளங்களில் மீன் பிடித்து உண்பதை பார்க்க அழகாக இருந்தது. அருகில் ஒரு செங்கல் சூளையும் மாட்டு வண்டியையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இரு சக்கர வண்டிகள் மட்டுமே நுழைய முடிகிற தெருவில் நெருக்கமான சிறிய வீடுகளைப் பார்த்துக் கொண்டே வெளியேறினாம். திண்ணைகள் வைத்த வீடுகள் அரிதாகி வரும் காலத்தில் கிராமங்களில் மட்டுமே காலித்திண்ணைகள் காத்திருக்கிறது. அழகாக கோலமிட்ட வீடுகள், நகர வாசனை கலக்காத மனிதர்கள்... பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. .இன்னும் சில வருடங்களில் இவர்களும் மாறி விடுவார்கள். இந்தக் கிராமங்களும் மாறி விடும் என்ற நினைவு கலக்கமாக இருந்தாலும் ஒரு மணி நேரத்தில் ஒரு கிராமத்தைச் சுற்றிப் பார்த்த திருப்தியுடன் அங்கிருந்து மைசூர் செல்லும் சாலையில் பயணிக்க..

பந்தல் போட்டு இளநீர் விற்கும் கடைகள் சாலையோரங்களில்! முதல் கடையில் நிறுத்தி ஆசை தீர இளநீர் பருகி விட்டு மீண்டும் பயணம். அமெரிக்க நேரத்திற்கு கண்கள் கெஞ்ச... வழியில் வந்த அடையார் ஆனந்த பவனில் நிறுத்தி கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய... தூக்கமும் பறந்து போனது. அமெரிக்க நெடுஞ்சாலைகளில் இருக்கும் ரெஸ்ட் ஏரியாக்களைப் போல பல உணவகங்கள் ஓரிடத்தில்! நன்கு பராமரித்த கழிப்பறைகள், குழந்தைகள் விளையாட ஊஞ்சல்கள் ... நல்ல வசதி தான்! மெலிதாக தட்டிய மொறு மொறு பருப்பு வடை கர்நாடக ஸ்பெஷல் என்று வாங்கிச் சாப்பிட்டோம். அஆபவனில் நல்ல கூட்டம்!

அங்கிருந்து நேராக காவிரிக்கரையில் குடிகொண்டிருந்த நிமிஷாம்பா கோவிலுக்குச் சென்றோம். ஆடி மாத அலங்காரத்தில் குட்டி பார்வதி அமர்ந்த நிலையில் மிகவும் அழகாக தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தாள். சிறிய கோவில் தான். நல்ல கூட்டம். கோவில் நுழைவாசல் கடைகள் அம்மன் கோவிலுக்குரிய அம்சங்களுடன். பிரதான புராதன கோவிலுக்கு வண்டிகள் நிறுத்துமிடம் தான் பிரச்னையாக இருந்தது. ஆனால் கோவில் அமைந்திருந்த சூழல் மனதிற்கு மிகவும் இதமாக இருந்தது. ஓங்கி வளர்ந்த ஆலம் மற்றும் வேப்ப மரங்கள், சலசலத்து ஓடும் காவிரி நீர், படிகளில் உட்கார்ந்து வேடிக்கைப் பார்க்கும் மனிதர்கள், மரங்களின் நிழலில் ஓய்வெடுக்கும் முதியவர்கள், ஓடும் நதியில் முங்கி விளையாடும் குடும்பங்கள், எளிமையான குடும்பங்கள் ... மகிழ்ச்சிக்கு குறைவில்லை.


மரங்களைச் சுற்றி மாம்பழம், அன்னாசி, மாங்காய், காய்கறிகளை கூடைகளில் விற்றுக் கொண்டிருந்தார்கள். உப்பு மிளகாய்த்தூளுக்கும் பஞ்சமில்லை. பார்த்தவுடன் சாப்பிடத் தோன்றும். அதையும் விடுவானேன். முழுதும் பழுக்காத மாங்காய்/கனிக்கென்றே ஒரு சுவை...ம்ம்ம்ம்...

அங்கிருந்து நேராக பிருந்தாவன் தோட்டத்திற்குச் செல்ல, மேகங்கள் முட்டி மோதி துளித்துளியாகச் சாரலாய் கீழிறங்கி வர... அலைமோதியது கூட்டம். வண்டி நிறுத்தும் இடத்தில் கக்கத்தில் பணப்பையுடன் வலம் வந்து கொண்டிருந்த மனிதர்கள் வாகன நிறுத்தத்திற்கு கடமையாக வசூலித்துக் கொண்டிருந்தார்கள். யாரும் எதற்கும் பில் தருவதில்லை. யாரும் கேட்டு வாங்குவதும் இல்லையோ? கேட்ட பணத்தை கொடுத்து விட்டு நகர்ந்து சென்று கொண்டே இருக்கிறார்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை கார்களின் அணிவகுப்பு!

கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கும் பொழுது அங்கு சென்ற நினைவுகள் மீண்டும் உயிர்ப்பெற... அன்று கண்ட அதே காட்சி தான். பெரிதாக மாற்றம் இருந்ததாகத் தெரியவில்லை. கிளைகள் பரப்பிய பெரிய மரங்கள், கீச்கீச் கிளிகள் , எங்கும் மனிதர் கூட்டம், நீர் ஊற்றுகள்... அன்று கவர்ந்தது இன்று கவரவில்லை! ஏனோ? சிவாஜியும், ஜெயலலிதாவும், எம்ஜியாரும் இன்னும் பலரும் ஓடியாடிப் பாடிய இடங்களில் பலரும் விதவிதமாக செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார்கள். கைபேசி வந்த பிறகு சுற்றியிருப்பதைக் கண்டுகளிப்பதை விட படங்கள் எடுப்பதிலும் அதை உடனுக்குடன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதிலும் அதிக ஆர்வம் வந்து விட்டது நமக்கு. புதிதாக திருமணமாகி வந்தவர்கள், குழந்தைகள் பின் ஓடுபவர்கள், குடும்பங்களுடன் வந்தவர்கள் ,அமைதியாக கூட்டத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வயதானவர்கள் ... உடைகளில், பேச்சுகளில், பாவனைகளில் என்று பலவகையான மனிதர்கள் அங்கே மகிழ்ச்சியுடன்! சுற்றுலாவின் மகிமையே நம்முள் இருக்கும் கவலைகளை மறக்கடித்து புதுச்சூழலில் மூழ்கி சக மனிதர்களின் மகிழ்ச்சியில் இன்புற வைப்பதே. அங்கிருந்த அனைவரும் சிறு புன்னகையுடன் கிண்டல் கேலிப்பேச்சுகளுடன் வலம் வந்ததைப் பார்க்கவே அருமையாக இருந்தது.

நீருற்று நடனம் ஆரம்பிக்க மக்கள் வெள்ளம் அதனை நோக்கி நகர, கூட்டத்துடன் நாங்களும் சேர்ந்து கொள்ள அங்கு ஒரே 'க்ளிக்' மயம்! ஒரு காலத்தில் கண்கள் விரிய கண்ட காட்சி தான்! தம்பி மகன் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தான். நிகழ்ச்சி முடியவும் மழைத் தொடரவும் கூட்டம் சிதற...அங்கிருந்து கிளம்புவதற்குள் இருட்டியும் விட்டது.

இரவுத் தங்கல் தாஸ்பிரகாஷ் ஹோட்டலில். மதுரை காலேஜ் ஹவுஸ் போல பழைய கட்டடங்களுடன்... அங்கேயே கீழ்தளத்தில் உணவகமும் இருந்தது. கமகமவென சாம்பார்,தோசை வாசம்... ஜிவ்வென இழுக்க, அறைக்குச் சென்று பெட்டிகளைப் போட்டு விட்டு காரமான மைசூர் சாம்பார், சட்னியுடன் தோசை...

அபிராமி! அபிராமி!

பயணம் செய்த களைப்பில் தூங்கியதே தெரியவில்லை. பறவைகளின் இன்னிசைக்குரலில் உறக்கம் களைய... அருமையான கமகம காஃபி அறைக்கே வர...யம் யம் யம் யம் ...இந்தியன் காஃபியின் சுவையே அலாதி....அனைவரும் தயாராகி காலை உணவிற்குத் தயாரானோம்.கீழிருந்த உணவகத்தில் சாப்பாடு, டிபன் எல்லாமே நன்றாக இருந்தது. தெலுங்கு மக்கள் அளவு இல்லாவிடினும் இங்கும் காரம் கொஞ்சம் தூக்கலாகவே இருப்பது போல் தோன்றியது. சுவைக்கு குறைவில்லை :)

அதிகாலை மைசூர் வெறிச்சோடி மதுரையைப் போலவே சோம்பலுடன் இருந்தது!  பழைய கட்டடங்கள் இன்றும் அதே தோற்றத்துடன் நகரை மெருகூட்டுவதை ரசித்துக் கொண்டே ரவுண்டானாவில் காந்தி சிலையையும் மைசூர் அரண்மனை முன்பு மகாராஜாவின் சிலையையும் கடந்து சாமுண்டி மலைக்குப் பயணமானோம்ம்ம்ம்ம்ம்ம்ம்...


பெங்களூரு-மைசூர் படங்கள்

















No comments:

Post a Comment

ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...