Tuesday, September 12, 2017

எனக்கென்ன மனக்கவலை

குளிர் கொஞ்சம் குறையட்டும். சூரிய பகவானை பார்த்த பிறகு வாக்கிங் போகலாமென காத்திருந்து வெளியில் வந்தவுடன் எதிர் வீட்டு ஃபிலிப்பினோ பெண்மணி நாயை அழைத்துக் கொண்டு அவரும் வாக்கிங் போகத் தயாராக என்னைப் பார்த்து என்ன  லதா, பார்த்து ரொம்ப நாளாச்சு? 

ஊருக்குப் போயிட்டு இப்பத்தான் வந்திருக்கேன் என்று சிறிது நேரம் ஊர்க்கதைகளைப் பேசி விட்டு குழந்தைகளைப் பற்றி  பேச்சு திரும்ப...

அவர் மகளின் நாயை கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும் சேர்ந்து விட்டது என்று சலித்துக் கொண்டார்.

என் குழந்தைகள் சிறு வயதில் நாய் வளர்க்க ஆசைப்பட்டார்கள். அதற்கெல்லாம் நமக்கெங்கே நேரமிருக்கிறது?  இப்பொழுது என்னிடமே விட்டு விட்டுச் செல்கிறாள்.

வாஸ்தவம் தான். கணவன் மனைவி இருவருமே ஷிஃப்ட் போட்டு இரவு பகல் நர்ஸ் வேலை பார்ப்பவர்கள். குழந்தைகளை கவனிக்கவே நேரம் இருந்திருக்காது. இன்று மகனும் மகளும் கல்லூரி படிப்பு முடித்து ஆல்பனியில் ஆளுக்கொரு இடத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். விடுமுறையில் வீட்டுக்கும் வந்து தலை காட்டிவிட்டுச் செல்கிறார்கள். மகள் புதிதாக வாங்கிய நாய் ஒன்று ஆறு வாரங்கள் தானாம். அவ்வளவு துடிப்பாக  இருக்கிறது! என்னிடமும் ஓடி வர, நான் ஒதுங்கிக்கொள்ள... பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு வாலாட்டியபடி இருக்க...கொஞ்சம் தூரத்திலேயே நின்று கொண்டேன் நான்.

கடைசிப் பையனின்  கல்லூரி பேச்சு வந்தவுடன் அவர் குரலே மாறி விட்டது. எங்களிடமும் கேட்காமல் அவனே ஆர்மியில் சேர விண்ணப்பித்து அடுத்த மாதம் பயிற்சிக்கு செல்லவிருக்கிறான். கல்லூரி செல்ல வேண்டிய நாளில் இப்படியொரு குண்டை தலையில் தூக்கிப் போட்டான். இது அவனுடைய முடிவு தான். அடலீஸ்ட் ஒரு வார்த்தை எங்களிடம் கேட்டிருந்திருக்கலாம். இல்லையென்றால் கல்லூரிப்படிப்பு முடித்தாவது சேர்ந்திருக்கலாம்.  மூன்று வாரங்களாக  அழுது புலம்பி எங்களை நாங்களே சமாதானபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இனி அவனை எப்படி வழியனுப்பி... உயிருடன் வருவானா, கால் கையுடன் திரும்புவானா என்று அழ... அவன் முடிவெடுத்த பிறகு உங்களால் என்ன செய்ய முடியும், அவன் நன்றாக இருக்க வேண்டிக் கொள்வதை தவிர. கவலைப்படாதீர்கள். நலமுடனே திரும்பி வருவான் என ஆறுதல் சொல்ல... சாரி, என் கணவர், குழந்தைகளைத் தவிர யாரிடமும் பேசவில்லை. உறவினர்கள் யாருக்கும் இன்னும் சொல்லவில்லை. உன்னைப்பார்த்தவுடன் புலம்பி விட்டேன் என்ற தாயைப் பார்க்க கவலையாகத் தான் இருந்தது.

அவர்களின் பக்கத்து வீட்டில் இருந்த ரெனி கல்லூரியில் படிக்கும் போது தொலைந்தவன் இன்று வரை உயிருடன் இருக்கிறானா இல்லையா என்று தெரியாமல் அவனின் பெற்றோர்கள் பெயருக்கு  உயிருடன் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். அவனைப் பற்றி கேட்டு அந்தவருத்தமும் கவலையும் வேறு சேர்ந்து கொண்டது இவருக்கு.

நீங்கள் பயப்படும்படி ஒன்றும் நடக்காது. தைரியமாக இருங்கள் உங்களுக்காகவும் சேர்த்து கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்  என்று சொல்லி விட்டு வந்தேன்.

பெற்றவர்களிடம் கூட கேட்காமல் இந்த விஷயத்தில்  எடுத்த முடிவில் நொறுங்கித்தான் போவார்கள் என்று ஏன் இந்த பிள்ளைகள் உணருவதில்லை? கடைசிப்பையன் வேறு, அம்மா செல்லமோ என்னவோ?

மகன் கல்லூரியில் சேர்ந்த விஷயத்தை எவ்வளவு மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். இன்று மனம் நொந்து வருத்தத்துடன் அவரைப் பார்க்க கவலையாக இருந்தது.

வயிற்றுச்சுமைகள் மனப்பாரங்களாகி விட்டால் துயர் உயிருள்ள வரை.

  

No comments:

Post a Comment

அமேசிங் பிரிட்டன் -8- சௌத்போர்ட்- பிரிஸ்டல்- பாத் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 316ல் வெளிவந்துள்ள பயணக்கட்டுரைத் தொடரின் எட்டாம் பாகம்.  சௌத்போர்ட்- பிரிஸ்டல்- பாத் பயணக்குறிப்புகள்   பயணங்களில் நம்மை அறிய...