Sunday, February 3, 2013

சென்னை- திருவண்ணாமலை - 1


 இந்த முறை ஊருக்கு போகும் பொழுது எப்படியாவது திருவண்ணாமலை போய் தீருவது என்று தீர்மானித்து என் தம்பியிடமும் சொல்லி அவனும் அதற்கேற்றார்போல் டூர் பிளான் போட, ஆரம்பித்தது எங்கள் பயணம் சென்னையிலிருந்து. வந்து இறங்கியதிலிருந்து மழை- 'கொட்டோ கொட்'டென்று கொட்டிக் கொண்டிருந்தது. தி நகரில் பெருமாளை வணங்கி, சரவணபவனில் காலை உணவை முடித்து விட்டு விழுப்புரம் போகும் பாதையில் பயணமானோம். அதிகாலை, அதுவும் மழை வேறு, அவ்வளவாக கூட்டம் இல்லை. வழியெங்கிலும் செவ்வாடை அணிந்த பக்தர்கள் கூட்டம், ஆதிபராசக்தி அம்மன் கோவிலுக்கு போக பஸ்சுக்காக காத்திருந்தார்கள்.

வழிநெடுக  பெரிய பெரிய கல்லூரி வளாகங்கள்!,  IT நிறுவனங்கள். ஊரை தாண்டியதும் விளை நிலங்கள் குறைந்து பல நிறங்களில் கற்களுக்கு வண்ணம் அடித்து நிலங்களை துண்டு போட்டு வியாபாரம் செய்யும் விளம்பரங்கள். செங்கல்பட்டு ஏரி வறண்டு கிடக்கிறது :( நடுநடுவே சம்பந்தமில்லாமல் பெரிய பெரிய வீடுகள்! கல்லூரிக்கு சென்று கொண்டிருக்கும் மாணவர்கள். ஹைவேஸ் என்றாலும் கவலைப்படாமல் சைக்கிளில் செல்பவர்கள். 'தீடீர்' என்று எதிர்த்தாற்போல் வரும் விரைவு வாகனங்கள் என்று எதிர்பாராமல் நடக்கும் பல விஷயங்களையும் லாவகமாக கையாளுகிறார்கள் நம் மக்கள்!!! பார்க்கிற எனக்குத் தான் 'பக்பக்' என்றிருந்தது :(


மேல்மருவத்தூர் அருகில் நூற்றுகணக்கான பஸ்கள். அதிலிருந்து பக்தர்கள் கூட்டம் என்று பல மைல்கள் நீளத்திற்கு! ஹைவேஸ் நிறுத்தங்களில் கும்பகோணம் டிகிரி காபி என்ற பெயரில் காபி கடைகள். சுக்கு மல்லி காபியும் கிடைக்கிறது. உணவகங்கள் பெயர்கள் எல்லாம் படு ஷோக்காக இருக்கிறது. சுவை எப்படியோ? இப்படியே திண்டிவனம் வந்து சேர்ந்தோம். அங்கிருந்து செஞ்சி வழியாக போகும் பாதை முழுவதும் படு மோசமாக இருந்தது. சாலைகள் போடுவதற்காக மரங்களை வெட்டி போட்டிருந்தார்கள்.

குழிகள் வெட்டி மணல் மேடுகள் என்று ஒரு வரையறை இல்லாமல் இருந்தது. ரோடுகள் எல்லாம் குண்டும் குழியுமாக பயணம் செய்யவே கஷ்டமாக இருந்தது. ரோட்டோரங்களில் பொங்கலை முன்னிட்டு கலர் பொடிகளை குவித்து வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். காலை நேரமாதலால் கூட்டம் பிதுங்கிக் கொண்டு போகும் பஸ்கள், சைக்கிள்களில் சாமான்களை வைத்துக் கொண்டு வியாபாரத்திற்கு செல்பவர்கள், மாடுகளை ஒட்டிக் கொண்டு விளைச்சலுக்கு போகிறவர்கள், இளநீர் விற்பவர்கள், பால் கொண்டு செல்பவர்கள் என்று பலரும் போவதை பார்க்க முடிந்தது.  எங்கு பார்த்தாலும் கருவேல மரங்களும் கூடவே பயணிப்பது போல் இருந்தது:( ஒரு லாரிகளில் கொத்தாக எருமைகள் என்று பல காலை நிகழ்வுகளை காண முடிந்தது. காலைக் காற்றுடன் மலை மேகங்களும் என்று சில்லென்ற காலை நேரப் பயணம் அருமையாக இருந்தது!

இந்த குண்டு,குழி சாலைகளில் பலவிதமான கார்கள் சீறிக் கொண்டு சென்றன. நிறைய BMW , Toyota கார்கள் அதிமுக, திமுக,பாமக என்று பல கட்சி கொடியுடன்,கருப்பு கண்ணாடிகளுடன் வளைய வருவதை பார்க்க முடிந்தது! செஞ்சி அருகே வரும் பொழுதே வித்தியாசமான மலைகளை பார்க்க நேர்ந்தது. சிறு சிறு பாறைகள் கூட்டம், மலைகளாக பார்க்க வித்தியாசமாக,அழகாக இருந்தது. ஊருக்குள் வரும் பொழுது இருபுறமும் உயர்ந்த மலைகளில் கோட்டைகளும் அங்கு போகும் பாதைகளும் பார்க்கவே ரம்மியமாக இருந்தது. இப்படி இருக்கும் என்று முன்பே தெரிந்திருந்தால் ஒரு நாள் அங்கு தங்கி பார்த்து போயிருக்கலாமோ என்று நினைத்து சிறிது நேரம் மட்டும் செலவழித்து விட்டு வந்தோம். செஞ்சியை தாண்டியவுடன் திருவண்ணாமலையின் தோற்றம் அன்புடன் வரவேற்கிறது. நடுநடுவில் வாழைத்தோப்புகளும், வயல்பரப்புகளும், தென்னந்தோப்புகளும் என்று பச்சைப் பசேல் என கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் இருந்தது :) டெம்போ வண்டியில் காலை வெளியில்  தொங்கப் போட்டுக் கொண்டு போவோர்களும், காலைக்கடன்களை கழிக்க சாலையின் ஒதுக்குபுறமாக ஒதுங்குபவர்களும், ஆடு, மாடுகளும் என்று பலவிதமான காட்சிகளுடன் சாலைகள் பரப்பரப்பாக இருந்தது.


செஞ்சியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டே பயணத்தை தொடர்ந்தோம்..

8 comments:

  1. Replies
    1. நன்றி, திண்டுக்கல் தனபாலன். நம் நாட்டில் காரில், ரயிலில், பஸ்ஸில் பயணம் செய்வது பல அனுபவங்களைத் தரும்.

      Delete
  2. உங்கள் பதிவு பாரதிராஜா படம் போன்ற அனுபவத்தைக் கொடுத்தது!

    ReplyDelete
  3. The fort and mountain with rocks is Gingee - fort.

    While visiting Thiruvanmalai (about a year back) saw this fort / mountain and wanted to explore it. Hence made a point to stop at this 'rocky' fort, on return Journey from Tiruvanamalai.

    One need to walk about a KM to reach the foot of the hill, then understood its maintained by archeological dept of India and there is also an entry fee. It has got steep rocky steps to claim the mountain. We claimed to about 45 minutes to an hour, but was tiring (didn't carry water bottle - nor were we prepared) and hence could not reach the top to explore & returned. Wanted to explore this place some time in the future.... :-)

    Its a ninth century monument, to know more about it .... http://en.wikipedia.org/wiki/Gingee_Fort.

    ReplyDelete
    Replies
    1. Yes, GuhaRajan. Without prior planning hiking to that fort must be very difficult. I saw smaller groups hiking. You should start early in the morning to hike.Could be a wonderful experience! Missed it :(

      Delete
  4. ஆரம்பத்திலிருந்தே சொல்லிவருவதையே மீண்டும் பதிவு செய்ய நினைக்கிறேன். வாசிக்கிறவனை சட்டென உள்ளிழுத்து சக பயணியாய் கொண்டு செல்லும் உத்தி உங்களுக்கு எளிதாய் கைவருகிறது. இத்தகைய எழுத்துநடை எல்லோருக்கும் அவ்வளவு எளிதில் வாய்க்காது......நிறைய எழுதுங்க, பெரிய உயரங்கள் காத்திருக்கு. :)

    ReplyDelete
  5. உற்சாக வார்த்தைகளுக்கு மிக்க நன்றி, சரவணன்.

    ReplyDelete

அமேசிங் பிரிட்டன் -5- இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 313ல் வெளிவந்துள்ள 'அமேசிங் பிரிட்டன்' பயணக்கட்டுரைத் தொடரின் ஐந்தாவது பாகம்.   இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்...