Sunday, March 29, 2015

இணைய வேதாளம்

முதன் முதலில் இணையம் மூலம் நண்பர்களுடனும், உற்றார், உறவினர்களுடனும் தொடர்பு கொண்ட பொழுது தகவல்தொழில் நுட்பத்துறையின் வளர்ச்சி பலரையும் வியப்புக்குள்ளாக்கியது. உலகம் சுருங்கி விட்டது என்று நகரம் முதல் குக்கிராமங்கள் வரை கொண்டாடித் தீர்த்தது.

அப்போதே அப்படி என்றால் இப்போது சொல்லவா வேண்டும்? பேஸ்புக் , ட்விட்டர், ஃபேஸ்டைம், கூகிள் டாக், வாட்ஸ்ஆப்,  இன்ஸ்டக்ரம் ...என்று வளர்ந்து வரும் சமூக வலைதளங்கள் உள்ளங்கையில் உலகம் என்று நம் வாழ்க்கையை கணினிக்கும், கைப்பேசிக்கும் அடிமையாக்கி விட்டது.

வீட்டை விட்டுத் தொலைவில் இருக்கும் குடும்பங்கள் ஒன்றோடொன்று தகவல் பரிமாற்றங்கள் செய்து கொள்ள கடிதம் எழுதிய பழக்கமெல்லாம் மறைந்து ஈமெயில் என்றாகி, முகம் பார்த்துப் பேச வேண்டுமா - ஸ்கைப் , ஃபேஸ்டைம் என்று நித்தமும் பேசி சிரிக்க என்று ஆனந்தமாக போகிறது  பெற்றவர்களுக்கும், நண்பர்களுக்கும்!

குழந்தை பிறப்பு முதல் பெரியவர் இறப்பு வரை வீடியோவில் நேரடியாகவே ஒளிபரப்பு செய்து விடுகிறார்கள்!

இப்போதுள்ள சமூக வலைதளங்களில் அனைவரையும் கவர்ந்திருப்பது பேஸ்புக். இதன் மூலம் பல வருடங்களாகப் பார்த்துப் பேசியிராத நண்பர்கள் முதல் சொந்தங்கள் வரை கூடிப் பேச முடிகிறது. ஒரு நல்ல நாளா, ஊரில் விசேஷமா, ஒரு அவசர உதவியா உடனுக்குடன் கேட்டுத் தெரிந்து கொள்ள முடிகிறது.

சிலர் தங்களிடம் உள்ள திறமைகளை வெளிக்கொணரும் ஒரு மேடையாகவும் கூட இருக்கிறது. தனக்குத் தெரிந்த நண்பர்கள், அவர்களின் நண்பர்கள் என்று நண்பர்கள் வட்டம் விரியத் தொடங்குகிறது. அரசியல், இசை, மொழி, ஜாதி, மதம், கட்சி, பிடித்த எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், பொழுதுபோக்குகள் ... என்று பல்வேறு குழுமங்கள். தன் ரசனையை ஒத்தவர்களுடன் சேர்ந்து  அறிவை வளர்க்கவும், விவாதம் செய்யவும்,  நேரத்தை ஓட்டுபவர்களும் அதிகம்.

ஒத்து வரதாவர்களுடன் கண்ணியமாக ஒதுங்கிப் போவதும், கடுகு விஷயத்தை மலை போல் பெரிதாக்கி 'நீயா நானா' மோதி பார்க்கிறேன் பேர்வழி என்று தரக்குறைவாக பேசி டாஸ்மாக்கில் இருந்து வந்தவன் போல பிதற்றுவதும் அதைக் கண்டு துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று கூட்டம் சிதறுண்டு ஓடுவதும் பல குழுமங்களிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. பலரும் அடிக்கடி வெளிநடப்பு செய்வதும் நடக்கிறது!

ஒரு கருத்தை ஒருவர் சொன்னால், கருத்தை விட்டுவிட்டுச் சொல்பவருடைய ஆதிமூலத்தை ஆராய்ந்து அதை வைத்து நடக்கும் இணையச் சண்டைகள் மிகப் பிரபலம்.  சொன்ன கருத்துகளை புரிந்து கொள்பவர்களை விட அவர்களாகவே புரிந்து கொண்ட கருத்துகளை வைத்து நடக்கும் சண்டைகள்  அதிகம். கருத்து வேறுபாடுகள் வரும் போதெல்லாம் சேற்றை வாரி தூற்றிக் கொள்வதில் நம்மை அடித்துக் கொள்ளவே முடியாது என்று நித்தம் நிரூபிக்கும் கூட்டங்களும் உண்டு.

இங்கும் வந்து நான் வயதில் பெரியவன், எனக்கு எல்லாம் தெரியும் என்று அதிகப்பிரசங்கித்தனம் செய்பவர்களும், எனக்கு ஒன்றுமே தெரியாது என்று கோமாளித்தனம் செய்பவர்களும் உண்டு.

சில பதிவுகள் நம்மை அறியாமல் வாய் விட்டு சிரிக்க வைக்கிறது. சில சிந்திக்க வைக்கிறது. சில கோபமூட்டுகிறது, சில பொறாமைப்பட வைக்கிறது என்று தினமும் ஏதாவது ஒரு வகையில் பொழுது போகிறது.

பலவகையான குழுமங்கள் - சமூகநலனைக் கருதிச் செயல்படுபவைகள், பெண்களுக்காக, குழந்தைகளுக்காக, கல்லூரியில் படிப்பவர்களுக்காக, இயற்கை மருத்துவம், ஆரோக்கியம்,விவசாயம், படிப்பை சார்ந்து, பிறந்த மண்ணைச் சார்ந்து, தாங்கள் படித்ததை பிறருக்கும் பயனுள்ள வகையில் தங்கள் பக்கங்களில் போட்டு அதை மற்றவர்கள் படித்துப்  பயன் பெறுவதும்(!) ... இப்படி பல ஆயிரக்கணக்கான குழுமங்கள் சண்டை சச்சரவுடனும், பயனுள்ள கருத்துக்களுடனும் போய்க் கொண்டிருக்கிறது.

இதில் தற்காப்புக்காக முகமூடி அணிந்து கொண்டு பலரும், தன்னை வெளிப்படுத்த தைரியம் இல்லமால் பலரும்,  நடிகர் நடிகை படங்களுடன் வலம் வருபவர்கள் என்று பன்முகங்களை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். நன்கு தெரிந்தவர்களைத் தவிர ஆணுடன் பேசுகிறோமா, பெண்ணிடம் பேசுகிறோமா என்று தெரியாமல், ஆண்களின் பெயரில் பெண்களும் பெண்களின் பெயரில் ஆண்களும் என்று இது ஒரு மாயாவி உலகம்.

எனக்கு எவ்வளவு லைக்ஸ் கிடைத்திருக்கிறது என்று பெருமைப்பட்டுக் கொள்பவர்களும், ஈகோ இல்லை என்று மார் தட்டிக் கொண்டு ஈகோவுடன் அலைபவர்களும், நல்லவன் வேடம் போட்டு ஆஸ்கார் அவார்ட் வாங்கத் துடிக்கும் உத்தம வில்லன்கள் அதிகம் வலம் வருவதையும் காண முடியும்.

சிலரைப் பற்றி அவர்கள் பக்கத்தில் ஆஹோ, ஓஹோ என்று புகழ்ந்து எழுதியவர்களே ப்ரைவேட் மெசேஜில் அவர்களைப் பற்றி பிற நண்பர்களுடன் அவதூறாக பேசி தங்களின் மூளை வளர்ச்சியை தாமாகவே பதிவு செய்து விடுகிறார்கள். பெரும்பாலும் மெத்த படித்த மேதாவிகள் என்று தங்களை நினைத்துக் கொள்பவர்களே மட்டமான இச்செயல்களில் ஈடுபட்டு அவர்கள் மனவிகாரங்களை கொட்டவும் செய்கிறார்கள்!

இணையதளம் நல்லது என்று சொல்லும் அதே நேரத்தில் இணையம் என்ற மாய உலகில் அதை கையாளத் தெரியாமல் மாட்டிக் கொண்டு முழிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்! தவறாக பயன்படுத்துபவர்கள் குறைவாக இருந்தாலும் பாதிப்பு எனும் பொழுது வேதனைப்படுபவர்கள் அதிகம். படிக்கும் வயதில் சிலர் தடம் புரள இதுவும் காரணமாவது தான் வேதனை தரும் விஷயம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை புரிந்து கொண்டால் சரி.

பெற்றோர்களுக்குத் தெரியாமல் குழந்தைகள் வாழும் இணைய வாழ்க்கை பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்து பல குடும்பங்களும் அவதிப்படுகின்றன.
பள்ளிகளும், பெற்றோர்களும் இவ்விஷயத்தில் மிக்க கவனம் கொண்டு மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
அரசாங்கமும் மக்களிடையே விழிப்புணர்வை கொண்டு வரும் மிகப் பெரிய பொறுப்பில் இருக்கிறது.

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவசர உதவி என்று வரும் பொழுது இந்த தகவல் தொழில் நுட்பம் பெரும்பங்கு வகிக்கிறது. தெரியாத பயனுள்ள தகவல்களை கேட்டறியவும் முடிகிறது. பலருக்கும் இது ஒரு பொழுதுபோக்கவும்,  சொந்த பந்தங்கள், நண்பர்களுடன் மனம் விட்டு பேசவும், வெளியிடங்களில் நடக்கும் நல்லது கெட்டது தெரிந்து கொள்ளவும் என்று... லிஸ்ட் நீண்டு கொண்டே போனாலும்...

நாணயத்தின் இருபக்கம் போல் இதனால் நன்மைகளும், தீமைகளும் - எல்லாம் அவரவர் பார்வையில்.




No comments:

Post a Comment

அமேசிங் பிரிட்டன் -8- சௌத்போர்ட்- பிரிஸ்டல்- பாத் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 316ல் வெளிவந்துள்ள பயணக்கட்டுரைத் தொடரின் எட்டாம் பாகம்.  சௌத்போர்ட்- பிரிஸ்டல்- பாத் பயணக்குறிப்புகள்   பயணங்களில் நம்மை அறிய...