Saturday, September 16, 2017

தைராய்டு -ஏன் ? எதற்கு? எப்படி?

தைராய்டு குறைபாடினால் அவதியுறும் மக்கள் அதிகமாகி விட்ட காலத்தில் அதுவும் பெண்களுக்கு அதனால் ஏற்பட்டிருக்கும் ஹார்மோன் பிரச்னைகளை எளியவர்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுமத்தில் 'சின்ன பட்டாம்பூச்சியா நம்மை சிறை பிடிப்பது' தொடரை திரு.முத்துராமன் குருசாமி ( Muthuraman Gurusamy ) அவர்கள் எழுதி வந்ததை தொகுத்து குறைந்த விலைக்குப் புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள்.

இப்புத்தகத்தில் தைராய்டு என்றால் என்ன, அதன் செயல்பாடுகள், குறைபாடுகளால் ஏற்படும் பிரச்சினைகள், அயோடின் தேவையா?, ஈஸ்ட்ரோஜென் ஆதிக்கத்தால் ஏற்படும் குறைபாடுகள், இரும்புச்சத்து குறைபாட்டிற்கும் தைராய்டு குறைபாட்டிற்கும் உள்ள தொடர்புகள், வைட்டமின் பி12, வைட்டமின் டி, செலினியம், மெக்னீசியம், ஜிங்க்-ன் அவசியம், தைராய்டு பற்றி முழுமையாக அறிந்து கொள்ள தேவையான ரத்த பரிசோதனைகள், உணவின் மூலம் ஹைப்போ தைராய்டை எவ்வாறு கட்டுக்குள் கொண்டு வருவது என்பதை படிப்பவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் திரு.முத்துராமன் குருசாமி அருமையாக எழுதியுள்ளார்.

கூகிளில் தகவல்கள் கொட்டிக்கிடந்தாலும் அனைவருக்கும் பயனுள்ள வகையில் புரிந்து கொள்ள ஏதுவாக இப்புத்தகம் பலருக்கும் உபயோகமானதாக இருக்கும். படித்துப் பயன் பெறவும்.

இப்புத்தகத்தில் உள்ள சிறு குறைபாடு, படங்களை பெரிதாக முழுப்பக்க அளவில் போட்டு இருந்திருக்கலாம். வண்ணப்படங்களாயிருந்திருந்தால் படிப்பதற்கும் பார்ப்பதற்கும் நன்றாக இருந்திருக்கும்.

Tuesday, September 12, 2017

எனக்கென்ன மனக்கவலை

குளிர் கொஞ்சம் குறையட்டும். சூரிய பகவானை பார்த்த பிறகு வாக்கிங் போகலாமென காத்திருந்து வெளியில் வந்தவுடன் எதிர் வீட்டு ஃபிலிப்பினோ பெண்மணி நாயை அழைத்துக் கொண்டு அவரும் வாக்கிங் போகத் தயாராக என்னைப் பார்த்து என்ன  லதா, பார்த்து ரொம்ப நாளாச்சு? 

ஊருக்குப் போயிட்டு இப்பத்தான் வந்திருக்கேன் என்று சிறிது நேரம் ஊர்க்கதைகளைப் பேசி விட்டு குழந்தைகளைப் பற்றி  பேச்சு திரும்ப...

அவர் மகளின் நாயை கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும் சேர்ந்து விட்டது என்று சலித்துக் கொண்டார்.

என் குழந்தைகள் சிறு வயதில் நாய் வளர்க்க ஆசைப்பட்டார்கள். அதற்கெல்லாம் நமக்கெங்கே நேரமிருக்கிறது?  இப்பொழுது என்னிடமே விட்டு விட்டுச் செல்கிறாள்.

வாஸ்தவம் தான். கணவன் மனைவி இருவருமே ஷிஃப்ட் போட்டு இரவு பகல் நர்ஸ் வேலை பார்ப்பவர்கள். குழந்தைகளை கவனிக்கவே நேரம் இருந்திருக்காது. இன்று மகனும் மகளும் கல்லூரி படிப்பு முடித்து ஆல்பனியில் ஆளுக்கொரு இடத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். விடுமுறையில் வீட்டுக்கும் வந்து தலை காட்டிவிட்டுச் செல்கிறார்கள். மகள் புதிதாக வாங்கிய நாய் ஒன்று ஆறு வாரங்கள் தானாம். அவ்வளவு துடிப்பாக  இருக்கிறது! என்னிடமும் ஓடி வர, நான் ஒதுங்கிக்கொள்ள... பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு வாலாட்டியபடி இருக்க...கொஞ்சம் தூரத்திலேயே நின்று கொண்டேன் நான்.

கடைசிப் பையனின்  கல்லூரி பேச்சு வந்தவுடன் அவர் குரலே மாறி விட்டது. எங்களிடமும் கேட்காமல் அவனே ஆர்மியில் சேர விண்ணப்பித்து அடுத்த மாதம் பயிற்சிக்கு செல்லவிருக்கிறான். கல்லூரி செல்ல வேண்டிய நாளில் இப்படியொரு குண்டை தலையில் தூக்கிப் போட்டான். இது அவனுடைய முடிவு தான். அடலீஸ்ட் ஒரு வார்த்தை எங்களிடம் கேட்டிருந்திருக்கலாம். இல்லையென்றால் கல்லூரிப்படிப்பு முடித்தாவது சேர்ந்திருக்கலாம்.  மூன்று வாரங்களாக  அழுது புலம்பி எங்களை நாங்களே சமாதானபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இனி அவனை எப்படி வழியனுப்பி... உயிருடன் வருவானா, கால் கையுடன் திரும்புவானா என்று அழ... அவன் முடிவெடுத்த பிறகு உங்களால் என்ன செய்ய முடியும், அவன் நன்றாக இருக்க வேண்டிக் கொள்வதை தவிர. கவலைப்படாதீர்கள். நலமுடனே திரும்பி வருவான் என ஆறுதல் சொல்ல... சாரி, என் கணவர், குழந்தைகளைத் தவிர யாரிடமும் பேசவில்லை. உறவினர்கள் யாருக்கும் இன்னும் சொல்லவில்லை. உன்னைப்பார்த்தவுடன் புலம்பி விட்டேன் என்ற தாயைப் பார்க்க கவலையாகத் தான் இருந்தது.

அவர்களின் பக்கத்து வீட்டில் இருந்த ரெனி கல்லூரியில் படிக்கும் போது தொலைந்தவன் இன்று வரை உயிருடன் இருக்கிறானா இல்லையா என்று தெரியாமல் அவனின் பெற்றோர்கள் பெயருக்கு  உயிருடன் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். அவனைப் பற்றி கேட்டு அந்தவருத்தமும் கவலையும் வேறு சேர்ந்து கொண்டது இவருக்கு.

நீங்கள் பயப்படும்படி ஒன்றும் நடக்காது. தைரியமாக இருங்கள் உங்களுக்காகவும் சேர்த்து கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்  என்று சொல்லி விட்டு வந்தேன்.

பெற்றவர்களிடம் கூட கேட்காமல் இந்த விஷயத்தில்  எடுத்த முடிவில் நொறுங்கித்தான் போவார்கள் என்று ஏன் இந்த பிள்ளைகள் உணருவதில்லை? கடைசிப்பையன் வேறு, அம்மா செல்லமோ என்னவோ?

மகன் கல்லூரியில் சேர்ந்த விஷயத்தை எவ்வளவு மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். இன்று மனம் நொந்து வருத்தத்துடன் அவரைப் பார்க்க கவலையாக இருந்தது.

வயிற்றுச்சுமைகள் மனப்பாரங்களாகி விட்டால் துயர் உயிருள்ள வரை.

  

AIM for Seva வெள்ளிவிழா ஆண்டு

"Education is the key to the development of a society." பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் சத்திய வாக்கு! ஒரு சமுதாயம் உயர...