Wednesday, July 11, 2012

பயணக் குறிப்புகள்- Brussels, பெல்ஜியம் - 1

நியூயார்க்கிலிருந்து மாலையில் 6.30 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் புறப்பட,  நீண்டுயர்ந்த கட்டிடங்களின் அழகும்,சாலைகளில் வண்டிகள் அழகாக ஊர்ந்து போவதும், வளைந்து நெளிந்து செல்லும் நெடுஞ்சாலைகளின் அழகுத் தோற்றமும் மெல்ல மெல்ல வெண்பஞ்சு மேக மூட்டத்தில் காணமல் போயின. விமானப் பணிப்பெண் ஒருவர் விமான பயணத்தில் எப்படி சீட்பெல்ட் போடுவது, விமானத்தில் கோளாறு ஏற்பட்டால் எப்படி தற்காத்துக் கொள்வது என்று செய்முறை விளக்கம் அளித்து முடித்த பின், கேப்டன் (விஜயகாந்த் இல்லைங்க, நிஜமான விமான கேப்டன்) எல்லோரையும் வரவேற்றுப் பேசினார். மேக பஞ்சு மூட்டைகளிடையே விமானம் பறக்க ஆரம்பித்து விட்டது. மெதுவே உயர, உயர விமானத்தில் வரும் 'கொய்ங்' ஓசை காதை வதம் செய்ய, சிறிது நேரம் ஆனது அந்த சத்தத்திற்குப் பழக😞

விமானம் ஒரு நிலைக்கு வந்த பின் முதலில் தாகம் தீர்க்க தண்ணீர், பழ ரசங்கள், மது பானங்களை வண்டியில் வைத்துக் கொண்டு மிகவும் அழகாகவும், நேர்த்தியாக உடையணிந்தும் அளவான மேக்கப் போட்டுக்கொண்டும்(!) வலிய ஒரு புன்சிரிப்புடனும், கனிந்த பார்வையுடனும் அழகான விமான பணிப்பெண்களும், மிடுக்கான ஆண்களும் என்ன வேண்டும் என்று ஒவ்வொருவரிடமும் கேட்டுக் கொண்டேஅவரவர் கேட்டதைக் கொடுத்தார்கள். ஐபாடில் பாட்டுக் கேட்டுக் கொண்டு கணினியில் படம் பார்த்தபடி புத்தகம் படித்துக் கொண்டும் பலரும் வந்து கொண்டிருந்தார்கள். நிறைய குழந்தைகளைப் பார்க்கும் போதே நினைத்தேன் 😓 இந்த பயணம் ஒரு வழியாகத் தான் இருக்க போகிறதென்று. சில குழந்தைகள் ஜம்மென்று வந்தன. சிலர், விமானம் புறப்பட்டதிலிருந்து ஆரம்பித்த அழுகையை விடாமல் மூச்சை இழுத்து இழுத்து அழுவதைப் பார்க்க பாவமாக இருந்தது. விமானம் மேலே போகும்பொழுது காது வலியால் அழுத குழந்தைகள் பலர். அவர்களை விட, அவர்களுடன் இருந்த அம்மாவையோ, அப்பாவையோ மற்றவர்கள் பார்த்த பார்வை தான் பரிதாபம். சிறிது நேரத்தில் அனைவருக்கும் இரவு சாப்பாடு வந்து அதையும் முடித்தோம். மகன் என் மடியில் தலை வைத்து காலை நீட்டி அப்பாவின் மடியிலும், அக்காவின் மடியிலும் படுத்துக் கொண்டு சுகமாக தூங்க, நாங்களும் அசதியில் உறங்கிப் போனோம்.

நியூயார்க் நேரப்படி அதிகாலை 2.30மணி. ப்ரஸ்ஸெல்ஸ் நேரப்படி காலை 8.30மணிக்கு வந்து சேர்ந்தோம். தூக்க கலக்கத்துடன் குழந்தைகளை கூட்டிக் கொண்டு வெளியில் வந்த பிறகு படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை விமானத்திலேயே வைத்து விட்டு வந்து விட்டதாக மகள் கூறியவுடன் வந்ததே கோபம் எங்களுக்கு. அது என் கணவர் மிகவும் மதிக்கும் ஸ்ரீ அரவிந்தரின் 'சாவித்ரி' என்ற புத்தகம். சரியான தூக்கம் வேறு இல்லாது களைத்துப் போயிருந்ததில் எல்லாம் சேர்ந்து நன்றாக வாங்கி கட்டிக்கொண்டாள். பிறகு பாம்பு வால் மாதிரி நீண்டு கொண்டிருந்த வரிசையில் நாங்களும் சேர்ந்து கொண்டோம். அங்கிருந்த அதிகாரிகள் ஆங்கிலத்திலோ, ஃப்ரெஞ்சிலோ எங்கிருந்து வருகிறீர்கள், எவ்வளவு நாள் தங்குகிறீர்கள் என்று கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி பாஸ்போர்ட்டில் உள்ள போட்டோவையும் , எதிரில் நிற்பவர் மூஞ்சியையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே அவர்கள் நாட்டுக்குள் அனுமதித்துக் கொண்டிருந்தார்கள். ஃப்ரெஞ்ச் பேசும் நிறைய ஆப்ரிக்க நாட்டு மக்களை பார்க்க முடிந்தது. எங்கள் பெட்டிகளும் வந்து சேர்ந்தது. அவற்றை எல்லாம் மூன்று தள்ளு வண்டியில் வைத்து விட்டு உறவினரின் வரவுக்காக காத்துக் கொண்டிருந்தோம். அந்த இடைவேளையில் எல்லோரும் பல் துலக்கி முகம் கழுவிக்கொண்டு வந்து விட்டோம். என் உறவினரின் பெயர் சுதாமன். அவருக்குப் போன் செய்து பார்த்ததில் அவரும் கிளம்பி விட்டதாக அவருடன் தங்கி இருப்பவர் தெரிவித்தார். அதற்குள் மகனுக்கு பசிக்க ஆரம்பித்துவிட்டது. உடனே

பால் ஒன்று வாங்கி கையோடு எடுத்து வந்திருந்த சீரியலுடன் கலந்து அவனுக்கு கொடுத்து விட்டு சுதாமன் வந்தவுடன் காலை உணவை சாப்பிடலாம் என்று காத்திருந்தோம். அவரும் ஒரு மணி நேரத்திற்குள் வந்து சேர்ந்தார். பின் அனைவரும் விமான நிலையத்திலேயே காலை உணவை முடித்துக் கொண்டோம்.

என் கணவரும், சுதாமனும் சென்று நாங்கள்

ஏற்கெனவே முன் பதிவு செய்திருந்த வாடகைக்கார் எடுத்து வர கிளம்பிவிட்டார்கள். நானும், குழந்தைகளும் பெட்டிகளுடன் ஊருக்குள் போகிறவர்களையும், எங்களைப் போல் யாரையோ எதிர்ப்பார்த்து உட்கார்ந்திருந்தவர்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்.

எல்லா பெட்டிகளும் காருக்குள் போகாது என்பதால் ஒரு வாடகைக்காரைப் பேசி முடித்து பெட்டிகளை ஏற்றி விட்டு அனைவரும் காரில் பின் தொடர்ந்து சென்றோம்.

ஷிஃப்ட் கார் ஒட்டி ரொம்ப நாளாகி விட்டதால் அந்தக் காரை இயக்க கொஞ்சம் சிரமப்பட்டார் என் கணவர். அடடா! ஆரம்பமே தகராற இருக்கே. அடக்கடவுளே! இவரை நம்பி தொலைதூரப் பயணத்திட்டம் எல்லாம் போட்டோமே என்று கவலையாகி விட்டது எனக்கு. அந்தக் காரை வெளியே கொண்டு வருவதற்குள் போதும், போதும்என்றாகிவிட்டது. ஒரு வழியாக விமானநிலையத்திலிருந்து வெளியே வந்து முதல் சிக்னலில் நிற்கும் பொழுது சுதாமன் அந்த ஊரிலிருக்கும் சாலை விதிகள் சம்பந்தப்பட்ட

விஷயங்களைத் தெளிவுப்படுத்தினார். நகரில் முதலில் பார்த்தது IBM கட்டிடம் தான். அவர் அங்கு தான் வேலை பார்ப்பதாக கூறினார். ஞாயிற்றுக்கிழமையாதலால் தெருவில் கூட்டம் இல்லை. சோம்பேறித்தனமாக பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. அவருடைய நண்பர் வீட்டுக்குச் சென்று பெட்டிகளை இறக்கி வைத்து விட்டுச் சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு முகம் கழுவி ஆடைகளை மாற்றிக் கொண்டு நண்பரின் மனைவி கொடுத்த சூடான ஏலக்காய் டீ சாப்பிட்டோம். அவர்களின் இரண்டு வயதுப் பெண் மிகவும் சுட்டியாக இருந்தாள். என் மகனுடன் bhaiya bhaiya என்று ஹிந்தியில் அவளுடன் விளையாட அழைத்துக் கொண்டே இருந்தாள்.

அவனோ நியூயார்க் நேரப்படி தூக்கத்தில் இருந்தான்! என் மகள் அவளுடன் சிறிது நேரம் விளையாடி விட்டு நாங்கள் விடை பெற்றுக் கிளம்பும் போது அந்தக் குழந்தை அழுததைப் பார்க்க மிகவும் கஷ்டமாக இருந்தது. அவர்கள் மாடியில் தங்கி இருந்தார்கள். மிகவும் குறுகலான படிகள். ஏறுவது மிகவும் கஷ்டமாக இருந்தது. எப்படியோ பெட்டிகளை நண்பர்களின் உதவியோடு ஏற்றி விட்டோம். அந்த தெருவும் மிகவும் குறுகலாக இருந்தது. அதற்குள் கார்களை வரிசையாக நிறுத்தி வைத்திருந்தார்கள். மற்ற கார்களும், பஸ்களும் போய்க்கொண்டிருந்தன!

சுதாமனும், ஊரைச் சுற்றிப் பார்க்கலாம், கிளம்புவோமோ என்றவுடன், அதற்குத் தானே இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்று சிரித்துக் கொண்டே வெளியே கிளம்பினோம், . அரை தூக்கத்தில் அவதிப்பட்டுக்கொண்டிருந்த என் மகனைத் தவிர நாங்கள் உற்சாகத்துடன் இருந்தோம்.
 
அவர்கள் வீட்டிலிருந்து இறங்கி ஒரு முப்பது அடிக்குள் தெருவில் திரும்பியவுடன் ட்ராம் ஒன்றுக்காக காத்திருந்து அதில் ஏறினோம். அது ஒரு புது அனுபவம். தெருக்களை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றோம். ஒவ்வொரு ஊரும் ஒரு விதம். மக்கள் பேசும் அழகும், மொழியும், அவர்களுடைய நடை உடை பாவனைகளும் என்று அவர்களை வேடிக்க பார்க்க ஆரம்பித்து விட்டேன். சின்ன சின்ன நேர்த்தியான அழகான வீடுகள். அனேகமாக எல்லோர் வீடுகளிலும் அழகழகான வண்ணமயமான பூந்தொட்டிகள். சிறு குழந்தைகள் வரைவது போல் ஒரு சிறு கதவு, இரண்டு ஜன்னல்கள் என்று ஒவ்வொரு வீடும், பார்ப்பதற்கு அழகு. மிகவும் சிறிய கார்கள். அமெரிக்காவில் வீடு, கார், சாலைகள் என்று எல்லாமே பிரமாண்டமாக இருக்கும்.



இங்கே பஸ்கள், ட்ராம்கள், சப்வே, சைக்கிள் என்று போக்குவரத்து வசதி மிகுந்திருப்பதால், மக்கள் அதையே அதிகமாக பயன்படுத்துக்கிறார்கள். வாடகைக்கு எடுத்துக் கொண்டு போகும் வகையில் ஓரிடத்தில் சைக்கிள்களை வரிசையாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள். பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. சுற்றுச்சூழலை பாதுக்காக்க வேண்டும் என்ற உணர்வை அரசாங்கமும், மக்களும் பலவழிகளில் கடைப்பிடிப்பதை பலநேரங்களில் பார்க்க முடிந்தது. அந்த அளவு விழிப்புணர்வு பல அமெரிக்க மக்களிடம் காண்பது அரிது.


ப்ரச்செல்ஸ் வணிகரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் மிகவும் முக்கியமான ஐரோப்பிய நகரம். ஐரோப்பாவின் பல முக்கிய வணிக முடிவுகள் நடக்கின்ற இடம். மிகவும் தொன்மையான வரலாறு நிறைந்த இடமும் கூட.. ஐரோப்பிய யூனியனைச் சார்ந்த கட்டிடங்களும், பலவண்ண கொடிகளுடன் பார்த்தாலே பிரமிக்க வைக்கும் கட்டிடங்களும் நகரின் நடுவில் இருக்கிறது.




No comments:

Post a Comment

அமேசிங் பிரிட்டன் -8- சௌத்போர்ட்- பிரிஸ்டல்- பாத் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 316ல் வெளிவந்துள்ள பயணக்கட்டுரைத் தொடரின் எட்டாம் பாகம்.  சௌத்போர்ட்- பிரிஸ்டல்- பாத் பயணக்குறிப்புகள்   பயணங்களில் நம்மை அறிய...