Sunday, December 1, 2013

திக்....திக்...திக் ...6

இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது.

அம்மா, நான், என் மகள் என்று மூன்று தலைமுறையும் ஷாப்பிங் போய் விட்டு வரலாம் என்று மதியம் மூன்று மணியளவில் கிளம்பினோம். என் மகள் பின் சீட்டில் அமர, அம்மாவும் நானும் முன்னால் அமர்ந்து கொண்டோம். வெட்டிக் கதைகளைப் பேசி சிரித்துக் கொண்டே மால் இருக்கும் இடத்தின் அருகில் மெதுவாக ஊர்ந்து சென்று கொண்டிருந்த போக்குவரத்தில் ஐக்கியமானோம்.

நல்ல இடைவெளி விட்டு என் முன்னால் ஒரு கார் போய்க் கொண்டிருக்க, 'டமால்' என்ற சத்தத்தில் எங்கள் கார் ஒரு தூக்கு தூக்கிப் போட்டது. எங்கிருந்தோ ஒரு கார் எங்களை இடித்து விட்டுச் 'சர்'ரென்று டயர் வெடித்து சிறிது தூரத்தில் போய் நிற்க, பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் ஸ்தம்பித்து முன்னாடியும் பின்னாடியும் பார்க்க...

சில நிமிடங்களுக்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் பதட்டத்துடன் என் மகளைப் பார்த்து உனக்கு ஒன்றும் இல்லையே என்று நான் அதிர்ச்சியுடன் கேட்க அவளும் அம்மா, உனக்கு ஒன்றும் இல்லையே என்று என்னைத் திருப்பிக் கேட்க, மிரண்டு போய் உட்கார்ந்திருந்த அம்மாவிடம், அம்மா உனக்கு ஒன்றும் ஆகவில்லையே என்று பயத்துடன் நான் கேட்க, அம்மாவும் மெதுவாக கழுத்து தான் வலிக்கிற மாதிரி இருக்கு என்று அதிர்ச்சியுடன் சொல்ல ...

அதற்குள் பெட்ரோல் வாசனை வேறு. சரி, இறங்கிப் போய் பார்க்கலாம் என்றால் நடுரோட்டில் இரண்டு பக்கமும் வண்டிகள் 'ஐயோ பாவம்' என்று எங்களைப் பார்த்துக் கொண்டே கடந்து சென்று கொண்டிருந்தது.

பின்னால் வந்த வண்டிகள் எல்லாம் மெதுவாக வேறு பாதையில் போக ஆரம்பிக்க, ஒரு வயதானப் பெண்மணி மெதுவாக என்னை நோக்கி வர, இந்த வயசில நீ வெளியே வரலைன்னு யாரு அழுதா, ராகுகாலம் என்று மனதிற்குள் திட்டிக் கொண்டே நானும் இறங்க, என் வண்டிச்சக்கரம் உடைந்து எனக்குப் பின்னால் இருந்த கதவு முழுவதும் சொட்டையாகி எனக்கு வந்த கோபத்திற்கு ஓங்கி அந்தப் பெண்மணியைப் போட்டு ...

I am sorry, I am sorry , I din't see you என்று சொல்லும் பொழுது கோபத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் நகத்தைக் கடித்துக் கொண்டே நடு வீதியில் நிற்க, கல்லூரியில் படிக்கும் இளைஞன் அவர் வண்டியை ஓரத்தில் நிறுத்தி தீயணைப்பு வண்டிக்கும்,  காவல்துறைக்கும் போன் செய்தபடியே நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்.

தான் பகுதி நேரத் தீயணைப்பு வீரர் என்றும் சிறிது நேரத்தில் அவர்கள் வந்து விடுவார்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே(5 நிமிடத்திற்குள்) 'சொய்ங் சொய்ங்' என்று  இரண்டு மூன்று தீயணைப்புவண்டிகளும்,  போலீஸ் கார்களும், அவசர மருத்துவ சேவை வண்டிகளும் என்று ஹாலிவுட் பட ஸ்டைலில் போக்குவரத்தையே ஸ்தம்பிக்க வைத்து விட்டார்கள்!

என்னிடம் உங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லையே என்று ஒருவர்கேட்கும் பொழுதே நான் என் அம்மாவை கவனியுங்கள் அவர் தான் கழுத்து வலிக்கிறது என்று சொன்னவுடன் அம்மாவிடம் கழுத்தை அசைக்காமல் அப்படியே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி விட்டு, ஒரு காலரையும் மாட்டி ஸ்ட்ரெட்சரில் அவசர சிகிச்சை வண்டிக்குள் அழைத்துச் சென்று விட்டார்கள். என் மகளிடமும் இன்னொரு மருத்துவர் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார் அவள் பற்களுக்கான dental braces போட்டிருந்ததால் அவளுக்கும் சில டெஸ்டுகள் செய்தார்கள்.

அதற்குள் போலீஸ் வந்து விசாரிக்க, நானும் தேமே -ன்னு இந்த லேன்ல போயிட்டு இருந்தேன். எங்கிருந்தோ இருந்து சடார்-னு வந்த அந்த வண்டி இடிச்சிருச்சு என்று சொல்ல, அந்தப்  பெண்மணியும் நான் இந்தக் காரை கவனிக்கவில்லை எப்படி இது நடந்தது என்று தெரியவில்லை என்று படபடப்புடன் சொல்லவும், அவர் ஒன்றும் பயப்படாதீர்கள். நீங்கள் இரண்டு லேன்-களை  கடந்து வந்திருக்கிறீர்கள் என்று அவர் செய்த தப்பைச் சொல்லி விட்டு, இருவரும் உங்கள் இன்சூரன்ஸ், லைசென்ஸ் கொடுங்கள் என்று வாங்கிக் கொண்டுச் சென்று விட்டார்.

என் மகள் பாட்டியுடன் இருக்க, நான் என் கணவரை அழைக்க, அவரும் இப்பத் தான் போனீங்க அதுக்குள்ள என்ன என்று கேட்க, ம்ம் உங்க ஆசைக்கார் 'டமால்' ஆயிடுச்சு. வந்து எங்களை கூட்டிட்டுப் போங்க என்றவுடன் அவரும் பதட்டமாகி மகனுடன் வந்து சேர்ந்தார்.

 நானும் அதே சூட்டில் இன்சூரன்ஸ் கம்பெனியைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்ல, அவர்களும் அந்த பெண்மணியின் தகவல்களையும் வாங்கிக் கொண்டார்கள். அவருடைய லைசென்சில் அவருடைய வயதும் என் அம்மாவின் வயது என்று தெரிந்தவுடன் அவர் மேல் எனக்குப் பரிதாபம் வந்து விட்டது. இந்த வயதிலும் உழைத்துச் சம்பாதிக்க வேண்டிய நிலையில் இருப்பார் போலிருக்கு. பக்கத்து ஊரில் இருந்து வந்திருக்கிறார்.

தீயணைப்பு வீரர்கள் வந்து எங்கள் இரண்டு வண்டியையும் எடுத்துக் கொண்டுப் போக towing கம்பெனியிலிருந்து ஆட்கள் வருவார்கள், உள்ளே இருக்கும் சாமன்களை அப்புறப்படுத்தி விடுங்கள் என்று சொல்ல, ஒரு வழியாக இந்தக் காரிலிருந்து என் கணவர் வண்டிக்கு எல்லாம் போக...

உடைந்த கண்ணாடித் துண்டுகளை தீயணைப்பு வீரர்கள் பெருக்கிச் சுத்தம் செய்து விட்டார்கள். நானும் போலீசிடம் இருந்து ரிப்போர்ட் ஒன்றை வாங்கிக் கொண்டேன். அந்தப் பெண்மணி மீண்டும் வந்து 'I am really sorry , hope your mom feels better' என்று சொல்லி விட்டு என்னருகிலேயே சிறிது நேரம் நின்று கொண்டிருந்தார். ஆரம்பத்தில் இருந்த கோபம் எனக்கு அப்போது இல்லை. அவரைப் பார்த்தாலும் பாவமாகத் தான் இருந்தது.

ஒரு வழியாக ஆம்புலன்சில் என் அம்மாவுடன் நான் செல்ல, வரிசையாகப் பல டெஸ்டுகள் செய்துகொண்டே 'உய்ங் உய்ங்' என்ற சத்தத்துடன் சுழல்விளக்கு சுழல ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தோம்.

எமெர்ஜென்சி என்றவுடன் ஒரு பதட்டம். பெயர் என்ன, என்ன நடந்தது லொட்டு லொசுக்கு என்று ஆயிரம் கேள்விகள். உடனே, எக்ஸ்-ரே, ஸ்கேன் என்று ரூம் மாறி மாறி ஒரு வழியாக முடிந்தாலும் வீட்டுக்குப் போக முடியவில்லை. இன்னும் சிறிது நேரம் வைத்திருந்து பார்த்து விட்டுத் தான் அனுப்புவோம் என்று சொல்ல என் அம்மாவிடம், என்ன அமெரிக்க ஆஸ்பத்திரி பிடிச்சிருக்கா , இதைத் தான் பார்க்காம இருந்த இப்ப இதையும் பார்த்துட்ட என்று சொல்லி சிரித்துக் கொண்டே அங்கிருக்கும் நர்சுகளும் வந்து எல்லாம் நார்மல் போகலாம் என்றவுடன் வீட்டுக்கு வந்து சேரும் பொழுது இரவாகி விட்டது.

என் கணவருக்கு அவருடைய விருப்பமான கார் இப்படியாகி விட்டதே என்று கவலை.  எனக்கு பிரச்னையில்லாமல் நாங்கள் உயிருடன் திரும்பி வந்தோமே  என்று திருப்தி. அன்று என் மகன் மட்டும் எங்களுடன் வந்திருந்தால் நினைக்கவே பயமாக இருக்கிறது.

இன்சூரன்ஸ் கம்பெனியிலிருந்து உங்கள் யாருக்கும் சேதம் இல்லாதது மிக்க மகிழ்ச்சி. ஆஸ்பத்திரி செலவு முழுவதும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், கவலை வேண்டாம் என்று சொல்லி இரண்டு நாள் வாடகைக் காருக்கும் ஏற்பாடு செய்து விட்டார்கள்.

அதற்குப் பிறகு சண்டை போட்டு முறையாகச் சேர வேண்டிய பணம் வாங்கி வண்டி வாங்குவதற்குள் ஒரு வழியாகி விட்டது.

இன்றும் அந்த இடத்தை கடந்து செல்கையில் 'திக் திக் திக்' தான்!


No comments:

Post a Comment

ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...