Thursday, May 3, 2018

திரும்பிப் பார்க்கிறேன்ன்ன்ன்ன் - விமான அனுபவம்


தாய்லாந்து சென்று விட்டு இலங்கை வழியே மதுரை வருவதற்காக கொலோம்போ விமான நிலையத்தில் காத்திருந்தோம். அமைதியாக இருந்த இடத்தில் திடீரென ஒரே பரபரப்பு! மலேசியா/சிங்கப்பூர் விமானம் ஒன்று தரையிறங்கி அதிலிருந்து வெளிவந்தவர்கள் பெரும்பாலும் நம் மக்கள்!  பலரும் ஆண்கள்! அவர்களைப் பார்த்தால் கல்வியறிவு குறைந்த கடைநிலை ஊழியர்களாக வேலை பார்க்கிறவர்கள் போலொரு தோற்றம். அனைவரும் சொல்லி வைத்தாற் போல் டியூட்டி ஃப்ரீ கடையில் ஆளுக்கு இரண்டு பெரிய ப்ளாக் லேபிள் விஸ்கி பாட்டிலை வாங்கிக் கொண்டு உரத்த குரலில் பேசிக்கொண்டிருந்தார்கள். கடையிலும் இவர்களால் நல்ல வியாபாரம். விமானம் புறப்படும் முன் கசகசவென்று நெருக்கியடித்துக் கொண்டு வரிசையில் :(

நாங்கள் எங்கள் இருக்கையில் அமர்ந்து கொள்ள பக்கவாட்டு வரிசையில் சுப்பிரமணி அவனுக்கான இருக்கையில் அமர்ந்து ஹெட்ஃபோனில்  பாட்டு கேட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் உட்கார வந்த இளைஞன் சுப்பிரமணியிடம் தம்பி நீ வேணா ஜன்னல் பக்கம் உட்கார்ந்துக்கோ என்று சொல்ல, தன்னிடம் தான் பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளாத சுப்பிரமணியோ எந்த வித உணர்ச்சியும் காட்டாமல் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தான். தமிழ் புரியாது என்பது வேறு விஷயம்! நான் பதட்டமாகி என்னவென்று கேட்க, தம்பிய உள்ள உட்காரச் சொல்றீங்களா என்று அவர் கேட்க, சுப்பிரமணி வேண்டாம் என்று மறுத்து விட்டான். சரி என்று நாங்களும் விட்டு விட்டோம். உள்ளே இருக்கையில் சென்று அமர்ந்தவர் 'பரபர'வென்று தான் கொண்டு வந்திருந்த சாப்பாட்டு பொட்டலத்தைப் பிரித்து கையால் நன்கு பிசைந்து 'லபக் லபக்'கென்று சாப்பிட்டார். அவ்வளவு பசி போலும்! சாப்பிட்டு முடித்த பின், தம்பி நகருப்பா என்று தலைக்கு மேல் சாமான்கள் வைக்கும் கம்பார்ட்மெண்ட்டைத் திறந்து அங்கு வைத்திருந்த அவருடைய பெட்டியை எடுத்து நோண்டிக் கொண்டே கும்பலாக வந்திருந்தவர்களுடன் உரக்க பேசிக் கொண்டு எதையோ தேடுவதும் எடுப்பதும் உள்ளே வைப்பதுமாய்... அவர் மட்டுமல்ல. அந்த கும்பலில் இருந்த அனைவரும் சொல்லி வைத்தது போல தத்தம் பெட்டிகளை குடைந்து கொண்டிருந்தார்கள்.அங்கும் இங்கும் விமானத்திற்குள் நடந்து காதும் காதும் வைத்தது போல் ரகசியமாய் வேறு பேசிக் கொண்டிருந்தார்கள்.

விமான பயணத்தில் முதன்முதலாக இப்பேர்ப்பட்ட அனுபவம்! பொதுவாக விமானத்தில் ஏறியவுடன் பெட்டிகளை வைத்து விட்டு அவரவர் இருக்கையில் அமைதியாக உட்கார்ந்திருப்பார்கள். இவர்கள் என்னடாவென்றால் சலசலத்துக் கொண்டும் பஸ்ஸில் பயணிப்பது போல் இங்கிருந்து அங்கு நடந்து கொண்டும் கடைசியில் விமானம் புறப்பட போகிறது அனைவரும் அவரவர் இருக்கையில் அமருங்கள் என்று விமான பணிப்பெண்களும் ஆண்களும் பல முறை சொன்ன பிறகு வேண்டா வெறுப்பாக அமர்ந்தார்கள். அவர்களின் நடவடிக்கையில் அதிருப்தி கொண்ட பணியாளர்களின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தாலும் வேலை நிமித்தம் காரணமாக அமைதியாக இருப்பதைப் போன்று நடித்துக் கொண்டிருந்ததை கண்கூடாகவே பார்க்க முடிந்தது.

தங்களுடைய பாரம்பரிய முறைப்படி  உடையணிந்திருந்த பெண் விமானப் பணியாளர்கள் நல்ல உயரத்துடன் கறுத்த நிறத்துடன் இடை தெரிய வலம் வர, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் போல இருந்தார்கள் ஆண்கள்! முகத்தில் சிரிப்பு மிஸ்ஸிங் அல்லது பயணம் செய்தவர்களைப் பார்த்தவுடன் சிரிப்பைத் தொலைத்தார்களோ! கடுகடுவென்றே இருப்பது போல தோன்றியது! 

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தென்னை மரங்களும், பசுமைக்காடுகளுமாய் இருந்த இலங்கை கண்ணில் மறைந்து இந்தியப் பெருங்கடலின் மேல் பறக்க ஆரம்பிக்க, என் மனதும் சிறகடித்து கனவுகளில் நான் கரைந்து கொண்டிருக்கையில்... தண்ணீர், கோக் இத்யாதிகளுடன் சாண்ட்விச் என்றொரு கொடுமையையும் கொடுத்துக் கொண்டே வர, தனக்கு வேண்டாம் என்று மறுத்த சுப்பிரமணியை அதிசயத்துடன் பார்த்துக் கொண்டே அவனருகில் இருந்தவர் அதையும் ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தார். சில நிமிடங்களுக்கு முன்பு தான் பொட்டலத்தில் இருந்தவற்றை களேபரம் செய்தவர் இப்பொழுது இதையும்....ஹ்ம்ம். சாப்பாடு முடிந்து மீண்டும் நடக்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களின் நடவடிக்கைகள் ஆச்சரியமாக இருந்தது!

சிறிது நேரத்தில் தொலைவில் கடற்கரை தெரிய, ஆஹா!!! ராமநாதபுரம்! நெற்பரப்புகளும், வாழை, தென்னந்தோப்புகளும், சிறிது பசுமையும், செம்மண் ஆற்றுப்படுகையும் மறைந்து வறண்ட வைகையின் மேல் பறக்கும் பொழுது இலங்கையின் பசுமை கண்களில் விரிய இனம் புரியாத சோகம். அடுத்த தலைமுறைக்கென எதையும் விட்டு வைக்காமல் இயற்கையைச் சீரழித்துக் கொண்டிருக்கும் இழிபிறவிகள் நாம்! இன்றைய நாளைக் கடத்தி விட்டால் போதும் என்று நாளை வாழப்போகும் சந்ததியினர் எதிர்கொள்ளவிருக்கும் பிரச்சினைகளை நினையாமல் என்னவொரு சுயநல சிந்தனையுடன் வாழ்கிறோம் என்று கனத்த மனதுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தேன். நடுநடுவே சிறு சிறு ஊர்கள். மேலிருந்து பார்க்க அழகாக இருந்தது.

தாழ்வாகப் பறந்து விமானம் மதுரையைத் தொட்டவுடன் இந்த கும்பல் சீட் பெல்ட்களை எடுத்து விட்டு ஒருவர் பெயரை  ஒருவர் அழைத்து பேசிக் கொண்டே முந்திக் கொண்டு இறங்க ஆயத்தமானார்கள். கணவரும் இவர்கள் முதலில் செல்லட்டும். நாம் மெதுவாக போகலாம் என்று காத்திருந்து பதட்டமெல்லாம் குறைந்து விமானம் அமைதியான பிறகு நாங்களும் எங்களுடன் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த மற்றோரு குடும்பமும் இறங்க...

பாஸ்போர்ட் கையில் வைத்துக் கொண்டு நீண்டிருந்த வரிசையின் முடிவில் நின்று கொண்டோம். இம்மிகிரேஷன் இலாகா அலுவலர் நாங்கள் மதுரையை விட்டு கிளம்பும் போது இருந்தவர் தான். என்ன இவ்வளவு சீக்கிரம் விடுமுறையை முடிச்சாச்சா என்று குழந்தைகளிடம் தமிழில் கேட்க , மகள் புரிந்து கொண்டு ஆங்கிலத்தில் பதிலளிக்க, மகனோ 'என்க்கு டமில் நோ நோ ' என்று சொன்ன பதிலில் அதிர்ந்தவர். என்னங்க, இப்படி என்றவரிடம், என் தாய்பாஷை சௌராஷ்ட்ராவில் என்ன கேட்டாலும் சரியாக பதில் சொல்வார்கள் என்றவுடன் சந்தோஷப்பட்டார். பெட்டிகளுக்காக காத்திருந்த இடத்திலும் அந்த சலசலக்கும் கூட்டம் அதிரிபுதிரியாகத் தான் இருந்தது! 

சுங்க இலாகாவிற்கான பரிசோதனை வரிசை மட்டும் எவ்வளவு மெதுவாக போக முடியுமோ அவ்வளவு மெதுவாகச் சென்று கொண்டிருக்க, சந்தேகத்தின் பேரில் பலரையும் வரிசையிலிருந்து விலக்கி சோதனை செய்து கொண்டிருந்தார்கள். அங்கிருந்த காவலர் ஒருவர், சாரி சார்! இன்று நிறைய கடத்தல் பொருட்கள் அந்த விமானத்தின் மூலம் வருவதாக எங்களுக்கு கிடைத்த தகவல்களினால் தீவிர சோதனை. உங்களுக்கும் கால தாமதம் என்றார்! அதனாலென்ன உங்கள் கடமை அது என்று வலிக்காத மாதிரியே சொல்லி விட்டு  எங்கள் பெட்டிகளை ஸ்கேனரில் வைத்து வெளியே வருகையில் அங்கிருந்த சுங்க அதிகாரியின் கையில் நான்கைந்து புது தங்க செயின்கள், சில தங்க வளையல்கள். 

பெண் கல்யாணத்திற்காக தான் சம்பாத்தித்த பணத்தில் வாங்கிக் கொண்டு செல்வதாக கெஞ்சிக் கொண்டிருந்தவர் சவரம் செய்யாத முகத்துடன் திருமண வயதுப் பெண்ணின் தந்தை வயதுடையவர். பரிதாபமாக இருந்தது அங்கிருந்தவர்களுக்கு, அந்த அதிகாரியைத் தவிர. கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டு அவரிடம் எவ்வளவு பணம் பறிக்கலாம் என்ற யோசனையில் இருப்பதாகவே எனக்குத் தோன்றியது. கையில் திருமண அழைப்பிதழை வைத்துக் கொண்டு அந்த மனிதர் விட்டால் காலிலேயே விழுந்து விடுவார் போல் கெஞ்சிக் கொண்டிருந்தார். அவர் சொல்வது உண்மையாவே இருந்தால்? பாவம்! ஊரை கொள்ளையடிப்பவர்கள், அடுத்தவர் வயிற்றில் நெருப்பை அள்ளிக் கொட்டுபவர்கள், ஊரான் காசில் உடலை வளர்த்து திரிபவர்கள்  எல்லாம் சொகுசாக மாலை மரியாதைகளுடன் வந்து போகிறார்கள். எளிய மனிதர்களிடம் வீரத்தையும், பதவி அதிகாரத்தையும் காட்டும் நிலை என்று மாறுமோ? வருத்ததுடன் வெளியில் வந்தால்...சும்மா தகதகவென தகித்துக் கொண்டிருக்கும் மதுரை வெயிலில் உடலும், மனதும் வெந்து போக ஐக்கியமானோம்.

சமீபத்தில்படித்த  செய்தி...
மதுரை வந்த விமானத்தில் குளியல் சோப்பில் கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகள்னு... இந்த மாதிரி ஆட்களைப் பிடிப்பதில் அர்த்தம் இருக்கிறது !

கைபேசியில் எடுத்த சில படங்கள் Srilanka-Madurai


No comments:

Post a Comment

ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...