Thursday, October 30, 2014

Halloween Day

கனடாவிலும் அமெரிக்காவிலும் மற்றுமொரு பிரபலமான நாள் அக்டோபர் 31.

இறந்தவர்களை நினைத்துப் பார்க்கும் நாளாக ஆரம்பித்து கால சுழற்சியில் இன்று மிட்டாய், சாக்லேட் கிடைக்கும் இனிப்பான நாள் என்று குழந்தைகளும், பார்ட்டி கொண்டாட இன்னுமொரு நாள் என பெரியவர்களும் கார்ப்பரேட் கடைகளின் சித்தாந்தத்தில் உழலும் நாளாகி விட்டது இந்த மாதக்கடைசியன்று வரும் Halloween Day!

இலையுதிர் காலத்தின் தொடக்கமாக அக்டோபர் மாதம் முதலே பெரும்பாலான வீடுகளில் பெரிய பெரிய பூசணிக்காய்கள், காய்ந்த மக்காச்சோள இலைகளை வைத்தும், வீட்டின் முன் வயற்காட்டில் பறவைகளை விரட்ட வைத்திருக்கும் பொம்மைகளை கொண்டு அலங்கரித்தும், சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் சிலந்தி வலை,பேய் உருவங்கள், எலும்புக் கூடு, கல்லறை, ஆரஞ்சு வண்ண விளக்குகள் என்றும் வீட்டின் முன் அலங்கரித்து வைத்திருப்பார்கள்.


அந்தி சாய்ந்தவுடன் குழந்தைகள் சிலர் மிக அழகாகவும், சிலர் மிகவும் கோரமாகவும் உடையணிந்து கொண்டு வீட்டுக்கு வீடு சென்று trick or treat  என சொல்ல, பெரும்பாலும் சாக்லேட்ஸ் கொடுக்கிறார்கள். சிலர் காசும் கொடுப்பதுண்டு.

முதல் வருடம் மகளுடன் சென்று ஒரு பை நிறைய சாக்லேட்ஸ் கொண்டு வந்த பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதற்குப் பிறகு தான் தெரிந்தது சில குழந்தைகள் பல மாதங்களுக்கு தங்களுக்கு வேண்டிய இனிப்புக்களை சேகரிப்பார்கள் என்று! பிறகு ஏன் டென்டல் இன்சூரன்ஸ் பில் ஏறாது?

குழந்தைகள் நண்பர்களுடன் வீடு வீடாக போய் விட்டு வருவதும் உண்டு. இந்த நாளில் வீட்டை அலங்கரித்து பார்ட்டி கொண்டாடுபவர்கள் பலர்! பெரியவர்களும் இந்த நாளுக்கென பிரயேத்திகமாக விற்கும் உடைகளை போட்டுக் கொண்டு பார்ட்டி கொண்டாடுகிறார்கள். பப்களில் இதற்கென தனி அலங்காரங்களும் நிகழ்ச்சிகளும் உண்டு. குடிமகன்களுக்கும் கொண்டாட்டம்!

அன்றைய தினத்தை பள்ளிகளிலும் நன்கு கொண்டாடுகிறார்கள். உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடைகள் வரை  அத்தினத்தின் கொண்டாட்டங்களை காணலாம்.
ஆசிரியர்களும் வேடமிட்டு குழந்தைகளுடன் ஊர்வலம் போக குழந்தைகள் குஷியாக என எல்லா வயதினரும் கொண்டாடும் ஒரு தினம்!

அமெரிக்காவில் எந்த ஒரு தினத்தையும் லாப நோக்கில் பார்த்து அந்த நாளுக்குரிய உண்மையான நோக்கம் மறைந்து வியாபாரமே முன்னிற்கிறது. மக்களும் அதற்குப் பழகி விட்டார்கள்!

பார்ட்டிக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் பூசணிக்காய் நிறத்தில்.  சாக்லேட்ஸ், உடைகள், அலங்காரங்கள், கார்டுகள் என்று கடைகளிலும் குழந்தைப் பட்டாளங்கள் கூட்டம். இந்தப் பரவசம் எல்லாம் கொண்டு வந்த சாக்லேட் மூட்டையை பிரித்து போட்டு தனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டவுடன் போய் விடும். அடுத்த நாள் பள்ளிக்கும், வேலைக்கும் எப்போதும் போல போக வேண்டியது தான்:(

காவல் துறையினரும் இருட்டில் குழந்தைகளைத் தனியாக அனுப்ப வேண்டாம், குழந்தைகள் கொண்டு வரும் இனிப்புகள், பழங்களை பெற்றோர் ஒரு முறை பார்த்து விட்டு அவர்களுக்கு கொடுக்குமாறு அறிவுறுத்துகிறார்கள். சில சைக்கோக்கள் பழங்களில் ஊசி வைத்துக் கொடுப்பதும், இனிப்புகளில் குழந்தைகளுக்கு ஒவ்வாத மருந்துகளை சேர்த்துக் கொடுப்பதும் கேட்கவே கலக்கமாகத் தான் இருக்கிறது!

தெருக்கள் முழுவதும் சாக்லேட் பைகளுடன் அலங்கரித்துக் கொண்டு ஓடித்திரியும் குழந்தைகளை காண்பதும் இனிமையான அனுபவம்!

ட்ரிக் ஆர் ட்ரீட் ??



No comments:

Post a Comment

அமேசிங் பிரிட்டன் -8- சௌத்போர்ட்- பிரிஸ்டல்- பாத் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 316ல் வெளிவந்துள்ள பயணக்கட்டுரைத் தொடரின் எட்டாம் பாகம்.  சௌத்போர்ட்- பிரிஸ்டல்- பாத் பயணக்குறிப்புகள்   பயணங்களில் நம்மை அறிய...