Tuesday, June 7, 2016

Red-tailed Hawks...

பனிக்காலம் தொடங்கியவுடன் பருந்துகள் தத்தம் துணையுடன் கூடு கட்டும் இடத்திற்குப் பறந்தோடி வந்து விடுகிறது. பெரும்பாலும் பெரிய மரங்களின் உச்சிகளிலோ, கட்டடங்களின் ஓரங்களிலோ கூடு கட்டும் இடமாகத் தேர்ந்தெடுக்கிறது. ஒவ்வொரு வருடமும் அதே இடத்திற்கு வருகை தரும் இப்பறவையினங்கள், தங்கள் குஞ்சுகளுக்காகப் பார்த்து பார்த்து மரக்குச்சிகளைக் கொண்டு வந்து கிட்டத்தட்ட பழக்கூடைகள் அளவிற்கு குச்சிகளை நெருக்கமாக ஒன்றின் மேல் ஒன்றை வைத்து அலகால் சரி செய்து பெரும் கூட்டை தயார் செய்கிறது. ஆண், பெண் பறவைகள் இருவரும் சேர்ந்து கூடு கட்டுவதைப் பார்க்க அழகு!

பெண் கழுகு முட்டையிட்டதும் இருவரும் மாறி மாறி அடைகாக்கிறார்கள். ஒருவர் சென்று தன் உணவை முடித்துக் கொண்டு வந்தால் மற்றது எழுப்பும் ஒலி அவர்களுக்கே உரிய சங்கேத பாஷை போலும்! கூட்டில் இருந்த பறவை பறந்தவுடன், கூட்டிற்குத் திரும்பிய பறவை பார்த்து பாந்தமாக முட்டைகளுக்கு எவ்வித சேதாரமும் ஏற்படாமல் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து முட்டைகளின் மேல் அமர்ந்து அடைகாக்கிறது. கொட்டும் பனியில் கூடு முழுவதும் பனி மூடப்பட்டு இருந்தாலும் முட்டைகள் மேல் இவர்கள் சிறகை விரித்துப் பாந்தமாக அமர்ந்திருப்பது அழகோ அழகு!

முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளி வந்தவுடன் தானும் இரையை உண்டு, குஞ்சுகளுக்கும் இறந்த அணில், மீன்கள், சிறு பறவைகள் எனப் பெருந்தீனிகளை கொண்டு வந்து கொடுக்கிறது. ஆரம்பத்தில் இரையை ஊட்டி விட, நாட்கள் செல்ல செல்ல இரையை குஞ்சுகளிடம் ஒப்படைத்துவிட்டு வேடிக்கை பார்க்கிறது. குஞ்சுகளின் அருகில் தாயோ தந்தையோ யாரோ ஒருவர் அருகில் இருந்து அவர்களை கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்கள்! உணவு வரும் வரை கூட்டின் ஓரத்தில் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் குஞ்சுகளை காண கண் கோடி வேண்டும்!

இறகுகள் முளைத்தவுடன் குஞ்சுகள் இறக்கையை விரித்துப் பார்ப்பதும், குதிப்பதும் என்று கூட்டுக்குள்ளேயே விளையாட...மெதுவாக நடக்க ஆரம்பித்து, பறக்க முயற்சிக்கையில் கீழே விழுவதும்...கத்திக் கொண்டே மேலே எழ முயற்சிப்பதும்... அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் பெரிய கழுகுகள். இந்தக் குஞ்சுகளுக்கு இறக்கை முளைத்துப் பறக்க முடியும் என்று தெரிந்த பிறகு பெற்றவர்கள் இரையைக் கொண்டு வருவது நின்று போகிறது. சில குஞ்சுகள் பறக்க பயந்து கத்திக் கொண்டே இருக்கும். சில இறக்கை கட்டி பறக்குதம்மான்னு பாடிட்டே இரையைத் தேட கிளம்பி விட...வெற்றிடமாகி விடும் கூடு காத்துக் கிடக்கும் அடுத்த வருடத்திற்காக!

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!

படங்களைப் பார்க்க இங்கே சொடுக்கவும்...

No comments:

Post a Comment

அமேசிங் பிரிட்டன் -8- சௌத்போர்ட்- பிரிஸ்டல்- பாத் பயணக்குறிப்புகள்

சொல்வனம் இதழ் 316ல் வெளிவந்துள்ள பயணக்கட்டுரைத் தொடரின் எட்டாம் பாகம்.  சௌத்போர்ட்- பிரிஸ்டல்- பாத் பயணக்குறிப்புகள்   பயணங்களில் நம்மை அறிய...