Tuesday, June 28, 2016

அப்பம்..புவம்...பணியாரம்

பெரும்பாலான சௌராஷ்டிரா வீடுகளில் குழந்தைகளுக்குப் பல் முளைத்தவுடன் காலை உணவிற்கு முன் அறிமுகப்படுத்தும் முதல் ஸ்னாக் இந்த அப்பம் ஆகத்தான் இருந்தது. இனிப்பாக வெண்ணெய் சுவையுடன் ஏலக்காய் மணத்துடன் ...யாருக்குத் தான் பிடிக்காது?

ஆப்பக்கார அம்மாவை பார்த்தவுடன்...பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க...காத்திருந்த காட்சி இங்கு காணக் கிடைக்க...என மனம் பாட ஆரம்பித்து விடும். தெருமுக்கில் பொறுமையாக விறகடுப்பை மூட்ட ஆரம்பித்தவுடன் வாங்குபவர்கள் வரிசை ஆரம்பித்து விடும். சமயங்களில் எத்தனை அப்பம் வேண்டும் என்று சொல்லி விட்டு சிறிது நேரம் கழித்து வாங்கி வருவதுண்டு. எனக்கு அங்கு நின்று அவர் லாவகமாக அப்பம் ஊற்றுவதை வேடிக்கை பார்க்கவே ஆசை அதிகம்.

முதல் நாள் அரைத்து வைத்த அரிசி, உளுந்தம் பருப்பு மற்றும் வெந்தயம் கலந்த மாவுடன் கருப்பட்டி சேர்த்து கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரையும், ஏலக்காய் பொடியையும் கலந்து மண்சட்டியில் ஊற்றி அதற்கென இருக்கும் மண்ணால் செய்யப்பட்ட மூடியால் மூடி, சிறிது வெந்த பிறகு வெண்ணையையும் சுற்ற விட்டு...மடித்து இலையில் வைத்து வீட்டில் எடுத்து வர...வாயில் வைத்தால் கரையும் 'கமகம'வென மணக்கும் அப்பத்தில்... மனமும் 'தம் தன தம் தன ராகம்' பாட, இனிதான காலையும் இனிதே ஆரம்பமாக... அது ஒரு கனா காலம்!

தெருக்களில் அப்பம் சுட்டு விற்பவர்கள் குறைந்திருந்தாலும் சில இடங்களில் இன்றும் தொடர்கிறது இந்த வியாபாரம். ரெடிமேட் ஆப்ப மாவும் கிடைக்கிறது. கொண்டு வந்து வீட்டில் சுட்டு சாப்பிடலாம். மதுரையில் தான் எத்தனை எத்தனை வசதிகள்?
காலையில் எழுந்தவுடன் அப்பமா, பிட்டா என்று மண்டைக்குள் பட்டிமன்றம் நடத்திய அந்த காலங்கள்...

ஆஹா!!!

அந்த மாவையே இட்லி மாதிரி ஊற்றி 'புவம்' என்று தெருவில் விற்றுக்  கொண்டு வருவார்கள். நடுநடுவே வரும் சிறு தேங்காய் துண்டுகள், ஏலக்காய் மணத்துடன் புவமும் சாப்பிட சுவையாக இருக்கும்.

குழிப்பணியார சட்டியில் ஊற்றி பணியாரமாகவும் சாப்பிடலாம்.

உலகத்தின் பல மூலைகளில் இருந்தாலும் பலரும் தங்கள் குழந்தைகளுக்கும் இதன் சுவையை அறிமுகப்படுத்த மறக்கவில்லை.

ஊருக்குச் சென்றால் அம்மா மறக்காமல் செய்ய ... வீட்டிற்கு வரும் மகளுக்கு நானும் செய்து கொடுக்கிறேன்.

அப்பம்டா....அமெரிக்க அப்பம்டா...


No comments:

Post a Comment

Can This Love Be Translated?

 “Can This Love Be Translated?” பல நாட்களுக்குப் பிறகு பார்த்த கே-ட்ராமா. தலைப்பே வித்தியாசமாக இருந்ததில் வசப்பட்டேன். கதாநாயகி புதிதாக இருந...