Sunday, November 20, 2016

விழுப்பம் தரும் கொழுப்பு

சொல்வனம்
 | இதழ் 160 | 30-10-2016


கடந்த இருபது ஆண்டுகளில் தமிழ் சமூகத்தின் இணைய பங்களிப்பு என்பது வியத்தகு எல்லைகளைத் தொட்டிருக்கிறது என்றால் மிகையில்லை. தமிழர்களைப் போல சமூகவலைத்தளங்களில் உயிர்ப்புடன் இயங்கும் பிற இனக்குழுக்களையும் நாம் விரல்விட்டு எண்ணிவிடலாம்.சாட் ரூம், மெசஞ்சர்கள், வலைத்தளம், ஃபேஸ்புக், ட்விட்டர் என எல்லைகள் விரிய விரிய தமிழின் ஊடான கருத்தாடல்கள் அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், உடல்நலம், சமூகம், அரசியல், கலை,விமர்சனம், விவாதங்கள் என பல்வேறு தளங்களில் புதிதுபுதிதான கட்டுடைப்புகளையும், கதவுகளையும் திறந்து கொண்டே இருக்கிறது. தமிழையொத்த வயதுடைய வேறெந்த மொழியிலும் இதுபோன்ற முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

கடந்த 2013ம் வருடத்தில் வெறும் ஐம்பது அறுபது உறுப்பினர்களைக் கொண்டிருந்த ஃபேஸ்புக் உணவுக் குழுமம் ஒன்றில் நண்பரால் இணைக்கப்பட்டேன். சமையல் குறிப்புகளை பகிரும் இன்னொரு குழுமம் போல என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன். இன்றைக்கு அந்த குழுமத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியும் வளர்ந்து கொண்டிருக்கிறது. சமீப காலமாக அந்தக் குழுவின் தன்னார்வலர்கள் இணையவெளியைத் தாண்டி தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் விழிப்புணர்வு கருத்தரங்கங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். வெகுசன ஊடகங்களோ ஆளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு அவர்களின் செயல்பாடுகளையும் அதன் விளைவுகளையும் பற்றி எழுதிக் கொண்டிருக்கின்றனர். இதே வேகத்தில் இந்தக் குழுமத்தின் செயல்பாடுகள் தொடருமானால் அடுத்த சிலவருடங்களில் ஒட்டுமொத்த தமிழர்களின் வாழ்க்கையை, உடல்நலத்தை, உணவுக்கலாச்சாரத்தை புரட்டிப்போட்ட குழுமமாக அந்த குழுமம் ஆகிவிடும் வாய்ப்பிருக்கிறது.

கோவையில் பிறந்து, அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக பணிபுரியும் “நியாண்டர்” செல்வன் என்பவரால் ஆதி மனிதனின் உணவு பழக்கங்களை முன்னிறுத்தித் துவங்கப்பட்ட இந்த குழுமத்தின் பெயர் “ஆரோக்கியம்&நல்வாழ்வு”. எல்லோருக்கும் புரிகிற மாதிரிச் சொன்னால் “பேலியோ டயட்” க்ரூப்.
கற்காலத்தில் மனிதர்கள் மலைகளிலும், குகைகளிலுமே வாழ்ந்தனர். வேட்டையாடிய விலங்குகளின் இறைச்சி, காய்கள்,கிழங்குகள்,விதைகள்,கொட்டைகள் போன்றவையே அவர்களின் உணவாக இருந்தது. அதாவது நிறைய கொழுப்பும், புரோட்டீனும், குறைவான கார்போஹைட்ரேட் உள்ள உணவுமுறை.நெருப்பை உருவாக்க கற்றுக்கொண்ட பின்னரே தங்கள் உணவை நெருப்பில் சுட்டு உண்ண ஆரம்பித்தனர். பின்னர் சமவெளியில் வாழத்துவங்கிய காலகட்டத்தில்தான் கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்து நிரம்பிய புல் உணவுகளான நெல் மற்றும் தானியங்கள் மனிதர்களின் உணவில் இடம்பெற ஆரம்பித்தது. இதன் அடிப்படையில்தான் பேலியோ டயட் என்கிற சித்தாந்தம் அமைகிறது.

Robert C. Atkins என்கிற இதயநோய் மருத்துவர் கடந்த 1972ம் ஆண்டில் தன்னுடைய நோயாளிகளின் உடல் பருமனைக் குறைப்பதற்காக தற்போதைய பேலியோ டயட்டின் முன்னோடியான உணவுமுறையை உருவாக்கினார். அதாவது நிறைய கொழுப்பு, ப்ரோட்டீன் மற்றும் குறைவான கார்போஹைட்ரேட் உள்ள உணவு. இது நல்ல பலனைத்தர “அட்கின்ஸ் டயட்” பிரபலமானது. இதற்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருந்ததோ அந்த அளவுக்கு எதிர்ப்பும் இருந்தது. கூடுதலான புரோட்டீன் சிறுநீரகத்தின் செயல்பாட்டை கடுமையாக பாதிக்கும் என்பது போல பல்வேறு சர்ச்சைகளும், கண்டனங்களும் அட்கின்ஸ் டயட் பரவலாக தடையாக இருந்தது. எனினும் கடந்த முப்பது ஆண்டுகளாய் நடந்த தொடர்ச்சியான ஆய்வுகளில் அட்கின்ஸ் டயட் பலவகையிலும் மேம்படுத்தப்பட்டு தற்போதைய வடிவத்தில் இருக்கிறது. அதாவது ”நிறைய கொழுப்பு, மிதமான புரோட்டீன், மிகக் குறைவான கார்போஹைட்ரேட் கூடுதலாக உடலுக்குத் தேவையான நுண்ணூட்ட சத்துக்கள்.”

அதெப்படி நிறைய கொழுப்பைச் சாப்பிடுவது. இரத்த அழுத்தம் எகிறி ஹார்ட் அட்டாக் வந்துவிடுமே என்கிற கவலையும், கேள்வியும் எல்லோருக்குள்ளும் வருவது இயல்பானதே.

இந்த கேள்விகளுக்கு பதிலாக, காலம் காலமாய் நம் உடலுக்கு எது நல்லது என நம்ப வைக்கப்பட்டிருக்கிறோமோ அதன் பின்னால் இருக்கும் அரசியல் மற்றும் அறிவியலை புரிந்து கொள்ளச் சொல்கிறார் செல்வன். நமது உணவின் வரலாறு என்பது பசியில் துவங்கியிருந்தாலும் இன்றைக்கு அது ருசி சார்ந்த ஒன்றாக ஆக்கப்பட்டு விட்டது. நாவின் ருசிக்கு அடிமையானதால் உடலுக்குத் தேவையானது என்பதைத் தாண்டி, நாவின் சுவை நரம்புகளை திருப்திப்படுத்துவதாக இன்றைய நமது உணவுகலாச்சாரம் ஆகிவிட்டிருக்கிறது. இந்த பலவீனத்தை மூலதனமாக வைத்து பலன் அடைபவர்கள் இரண்டே பேர்தான், ஒன்று பெப்சி மாதிரியான உணவுப்பொருட்களை தயாரிக்கும் பகாசுர கார்ப்பரேட் நிறுவனங்கள். மற்றவர்கள் மருத்துவத் துறையினர். நம்முடைய வாழ்நாள் உழைப்பின் பெரும்பகுதியை நாம் இவர்களிடம்தான் இழந்து கொண்டிருக்கிறோம். இது மிகவும் கசப்பான உண்மை என்கிறார்.

நமது உடல் இயக்கத்திற்கு இரண்டு வகையான எரிபொருட்களில் இயங்கும் தன்மையுடையது. ஒன்று மாவுச்சத்து எனப்படும் கார்போ ஹைட்ரேட், மற்றது கொழுப்பு. அரிசி, கோதுமை, பருப்பு, சிறுதானியம் உள்ளிட்ட எல்லா உணவுகளுமே கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்து நிரம்பியவை. இத்தோடு பால் பொருட்கள், எண்ணைகள் மற்றும் அசைவ உணவுகளின் வழியே கொழுப்பையும் எடுத்துக் கொள்கிறோம். நமது அன்றாட உணவில் மாவுச்சத்தின் விகிதம் அதிகமாய் இருப்பதால் அதுவே நம் உடலின் பிரதான எரிபொருளாக இருக்கிறது. உடலின் தேவைக்கேற்ப கார்போ ஹைட்ரேட்டுகள் குளுக்கோஸாக மாற்றப்பட்டு உடல் இயங்கியலுக்கு வழங்கப்படுகிறது. உடலின் அன்றாடத் தேவைக்குப் போக மீதமிருக்கும் கார்போஹைட்ரேட்டுகள் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலின் பல்வேறுபகுதிகளில் சேகரித்து வைக்கப் படுகிறது. இதனால் தேவைக்கு அதிகமாய் சாப்பிடுகிறவர்கள் மற்றும் குறைவான உடல் உழைப்பு உடையவர்களின் உடலில் கொழுப்பு சேகரமாவது அதிகமாகிறது.இப்படி சேகரம் ஆகும் கொழுப்பு ஒரு கட்டத்தில் இரத்த நாளங்களில் படிந்து இரத்த ஓட்டத்தை தடை செய்யும் போதுதான் பல்வேறு பிரச்சினைகளும் ஆரம்பமாகின்றன. இதயத்தின் இரத்த நாளங்களில் இப்படி உருவாகும் அடைப்பையே ஹார்ட் அட்டாக் என்கிறோம்.

நாம் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளும் கார்போஹைட்ரேட் உணவுகள் ஒரு கட்டத்தில் நமது உடலில் சுரக்கும் பல்வேறு ஹார்மோன்களின் உற்பத்தி மற்றும் செயல்திறனில் ஒரு சமச்சீரற்ற தன்மையை உருவாக்கிவிடுகிறது. இது ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு கொடுக்கும் பாதிப்புகள் மிக அதிகம். முப்பது வயதைத் தாண்டிய எல்லா பெண்களுமே வெளியில் சொல்லமுடியாத ஏதோவொரு உடல்நல பாதிப்பால் அவதியுறுகின்றனர். அத்தகைய பெண்களுக்கு இந்த பேலியோ டயட் நல்ல பலனையும், தீர்வையும் தருகிறது என்கிறார் செல்வன். தையராய்ட் உள்ளிட்ட கருப்பை தொடர்பான பாதிப்புகள், மாதவிலக்கு சுழற்சியில் உள்ள பாதிப்புகளில் இருந்து குணமான பெண்களின் அனுபவ பகிர்வுகளை பார்க்கும்போது இத்தனை நாளாய் இப்படியொரு எளிய தீர்வினை நாம் தெரிந்து கொள்ளாமல் போனோமே என்கிற எண்ணம் எந்தப் பெண்ணுக்கும் உண்டாகும்.

ஆரம்ப நாட்களில் இது போல தகவல்களை எல்லாம் படிக்கப் படிக்க இதெல்லாம் சாத்தியமா? என்னால் முடியுமா?. தட்டு நிறைய சாம்பாருக்கு கொஞ்சம் சோறு, சோற்றுக்கு கொஞ்சம் ரசம், குழையக்குழைய தயிர் சாதம் இல்லாமல் முடியாது என் சாப்பாடு. வார இறுதியைக் கொண்டாடுகிறேன் என்கிற பெயரில் பிரியாணி, சமோசா, இனிப்புகள் கண்ணில் நிழலாட இவற்றையெல்லாம் எப்படி சாப்பிடாமல் இருப்பது? அதுவும் நான் ரசித்து ருசித்து சாப்பிடும் ரசமலாய், குல்ஃபி, பாசுந்தி, சீஸ் கேக்… காசிக்குப் போகாமலே இவற்றையெல்லாம் ஒதுக்குவது என்னால் முடிகிற காரியமா? நானோ மணியடிச்சா சோறுங்கிற மாதிரி பசிக்கிறதோ இல்லையோ நேரம் பார்த்து சாப்பிடற இனம். கொஞ்சம் தாகமெடுத்தாலும் போரடித்தாலும் கையில் கிடைத்ததை சாப்பிடும் அப்பாவி….இப்படி ஏகப்பட்ட மைனஸ் இருந்தாலும் வயதையும், உடல் நலத்தையும் யோசித்து நல்ல நாளில் பேலியோ டயட்டுக்கு மாறினேன்.

உடல் எடை குறைப்பது ஒன்று மட்டும்தான் அப்போதைய என் தலையாய பிரச்னையாக இருந்தாலும், செல்வன் சொன்ன பேலியோடயட் தீர்வாகுமா, கடைபிடிப்பது எளிதானாதா என்கிற சஞ்சலம் ஆரம்பத்தில் இருந்ததென்னவோ உண்மை. ஆனால் செல்வன் தொடர்ச்சியாக மருத்துவ ஆய்வுக்கட்டுரைகளை, தொடரும் ஆராய்சிகளை, தன்னுடைய அனுபவத்தைச் திரும்பத்திரும்பச் சொல்லி என் போன்ற ஆரம்பநிலை சஞ்சலக்காரர்களுக்கு நம்பிக்கையை ஊட்டினார். முதற்கட்டமாக வெளியில் சாப்பிடுவதைக் குறையுங்கள். சிப்ஸ், எண்ணையில் பொரித்த உணவுகள், கேக் மற்றும் சர்க்கரை கலந்த உணவுப்பண்டங்களை ஒதுக்குங்கள். காஃபி, டீ எல்லாம் வேண்டாம். இதன் அடுத்த கட்டமாக பேலியோ டயட்டுக்கு மாறுங்கள் என ஒரு பயணவழியும் சொல்லிக் கொடுத்தார்.

எங்கே இனி வீட்டில் எல்லோருக்கும் பேலியோ தான் என்று சொல்லிவிடுவேனோ என்று பயந்த மொத்த குடும்பமும், இதெல்லாம் உனக்கெதுக்கு? உனக்கென்ன மற்றவர்கள் போல் சுகர், பிபி போல ஏதாவது பிரச்னைகள் தான் இருக்கா? நொறுக்குத்தீனிகளை ஒழித்து ஒழுங்காக சாப்பிட்டாலே உன் எடையை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளலாம் என்று அட்வைஸ்கள், நீங்களெல்லாம் ஆட்டத்தில் இல்லை, நான் மட்டும்தான் பேலியோ என அவர்கள் வயிற்றில் பால்வார்த்தேன்.

தினமும் குறைந்தது நான்கு முட்டைகள், நூறு பாதாம் பருப்பு, நிறைய சீஸ், மீன், இறைச்சி, காய்கறி வகையறாக்கள். தயிர் அதுவும் கெஃபிர் என்றால் மிகவும் நல்லது இல்லையென்றால் பால் ஒரு கப் போதும்…இதுதான் செல்வன் அவர்கள் எனக்கு பரிந்துரைத்த டயட். “என்னது நூறு பாதாமா?” என அதிர்ந்த கணவரை சமாதானப்படுத்தி விட்டு, எனக்கு ஏதாவது ஆச்சுன்னா இன்சூரன்ஸ் இருக்கு. சோ நோ ப்ராப்ளம் என்று கடுக்முடுக்கென்று பாதாமை சாப்பிட ஆரம்பித்தால்…..கொடூரமாக இருந்தது. பிறகு தான் தெரிந்தது பாதாம் , வால்நட்ஸ்களை நன்கு ஊறவைத்து சாப்பிட வேண்டும் என்று. இல்லையென்றால் சிறிது நெய்யில் வறுத்து மிளகு உப்பு போட்டுச் சாப்பிடலாம் என்றார்கள். எனக்கும் அந்த சுவையெல்லாம் பிடித்திருந்தது.

மாதாந்திர செலவுகள் கொஞ்சம் கூடித்தான் போனது. பாதாம் சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் இரண்டு மணிநேரங்கள் வேறெதுவும் சாப்பிடக்கூடாது என்று வேறு பயமுறுத்தியிருந்தார்கள். அதற்குள் பசித்தால் என்ன செய்வது என்கிற கவலை எனக்கு. அதெல்லாம் பசிக்காது. பசிச்சா நிறைய தண்ணீர் குடிங்க என்று குழுமத்தில் அட்வைஸ் செய்தார்கள். ஒரு காலத்தில் அறிவுரைகள் மட்டும்தான். அந்த சமயத்தில் செல்வன் மட்டும்தான் பேசுவார், நாங்களெல்லாம் திருவிளையாடல் நாகேஷ் போல கேள்விகள் மட்டுமே கேட்போம். மனிதன் ஒருபோதும் சலித்துக் கொண்டதே இல்லை. அந்த பொறுமைக்கே எல்லா பெருமையையும் அவருக்கு நாம் செய்யவேண்டும்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் உடற்சோர்வின் காரணமாக தூங்கி விடும் வழக்கம் மெதுவாக மாறி ஹைப்பர் ஆகிவிட்டேனோ என்பது போல் புத்துணர்ச்சியுடன் வலம் வர அது தான் பேலியோவினால் நான் கண்ட முதல் மாற்றம். பிறகு சோற்றுக்கு டாட்டா சொல்ல தேங்காய் எண்ணையில் வறுத்த மீன் அல்லது அவனில் பேக் செய்த சால்மன் மீன், முட்டை என்று மாறி கஷ்டப்பட்டு இனிப்பிற்கு பைபை சொன்னாலும் வருடத்தில் சில இனிப்பான நாட்களில் மட்டும் கொஞ்சம் இனிப்பை தொட்டுக்கொண்டேன்.

மாதம் ஒரு முறை ஒவ்வொரு நாட்டு உணவு விடுதிகளுக்குச் சென்று சாப்பிட்டு வருவது மற்றும் டெஸெர்ட் டே என்று இனிப்புகளை உண்டு மகிழ்ந்த குழுக்களில் இருந்து வெளியேறியதில் நண்பர்களுக்கும் வருத்தம். உடல் எடையும் கணிசமாக குறைய இனி இப்படித்தான் சாப்பிடப்போகிறேன் என்று என்னையே மாற்றிக் கொண்டேன். எனக்கான உணவுத்தேவைகள் எளிதாகவும் கணவருக்கும் பேலியோ ஆசை வந்திருக்கிறது. வருவார். வந்து தானே ஆக வேண்டும்.

தினமும் குறைந்தது அரை மணிநேரமாவது வெயிலில் நடக்க வேண்டும். வருடத்தில் நான்கைந்து மாதங்கள் மட்டுமே வெயில் இருக்கும் எங்கள் ஊரில் நடையெல்லாம் பிரச்னை இல்லை. முன்பு வெயிலில் சென்று வந்தாலே கை, கழுத்துப்பகுதிகள் எல்லாம் அலர்ஜியால் தோல் தடித்து சிவந்து அரிப்பு என பல பிரச்னைகள் இருந்தது. பேலியோவிற்குப் பிறகு அதில் நல்ல முன்னேற்றம். படிப்படியாக 10,000 ஸ்டெப்ஸ் அல்லது ஐந்து மைல்கள் நடந்தால் இன்னும் நல்லது என்றார்கள். நடக்க முயற்சிக்கிறேன்.

நம் உடலின் ஆரோக்கியம் என்பது நம்முடைய ஒட்டுமொத்த உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்தைப் பொறுத்ததே என்கிற எளிய உண்மையை இந்த குழுவில் சேர்ந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன். உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு அதற்கேற்ற உணவுகளை எடுத்துக் கொள்வதோடு நம் முன்னோர்கள் காலம் காலமாய் சொல்லி வந்த விரதம் என்கிற போர்வையில் உள்ளுறுப்புகளுக்கு கொடுக்கும் ஓய்வும் முக்கியம் என்பதும் இந்தக் குழுவில் நான் கற்றறிந்த மற்றொரு ஆரோக்கிய ரகசியம். இந்த விரதம் மற்றும் பேலியோ டயட் இரண்டையும் ஒருங்கினைத்தால் அதுதான் “வாரியர் டயட்”.

தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் தங்களுடைய பல்வேறு உடல் உபாதைகளைப் பற்றி குழுவில் பகிர்ந்து கொள்வதும், அதற்கு திரு.செல்வன் அவர்கள் மிகப் பொறுமையோடும், அக்கறையோடும் கொடுக்கும் உணவுத் தீர்வுகளும், அதை பின்பற்றிய பிறகு அவர்களின் உடல் நிலையில் ஏற்பட்ட மாற்றஙக்ளைப் பற்றி மகிழ்ச்சியும் பரவசமுமாய் அவர்கள் பகிர்ந்து கொள்வதை விழிகள் விரிய படித்த நாட்களை என்றும் மறக்கமுடியாது. எத்தனை எத்தனையோ முகம் தெரியாதவர்கள், ஒரு புள்ளியில் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத ஒருவரால் வழங்கப்பட்ட தீர்வுகள் பலனளிக்கிறது என்பது எத்தனை மகத்தான சேவை.

இந்த இடத்தில் என்னுடைய ஒரு சந்தேகத்தையும் பதிவு செய்தாக வேண்டும். ஒரு எளிய உணவு மாற்றத்தின் மூலமாக உடல் ரீதியான பல பிரச்சினைகளை கட்டுக்குள் கொண்டு வந்து அதன் பாதிப்புகளை குறைக்க முடியும் என்றால், அதை ஏன் ஆங்கில மருத்துவம் ஏற்றுக் கொண்டு நடைமுறை படுத்தக்கூடாது. குறிப்பாக உயர் சர்க்கரை பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு நிறைய மாத்திரைகளோடு தரப்படும் உணவுப் பட்டியலில் நிறைகார்போ ஹைட்ரேட் உணவுகளான அரிசிச்சோற்றையும், கோதுமையையும்தான் பரிந்துரைக்கின்றனர். அதாவது தினமும் உணவில் கார்போஹைட்ரேட் வடிவில் சர்க்கரையையும் சாப்பிட்டுக் கொண்டு அதற்கான மாத்திரையையும் சாப்பிடு என்பது தங்களின் வியாபாரத்தை தக்கவைக்கும் தந்திரமோ என்கிற கேள்வி எழாமல் இல்லை.

நான் கண்கூடாக பார்த்த வகையில் பேலியோ உணவுமுறையால் உயர் ரத்த அழுத்தம், நீரழிவு, சொரியாஸிஸ், பெண்களுக்கு இருக்கும் இரும்புச்சத்து, வைட்டமின் டி, பி-12 குறைபாடுகள், மாதவிலக்கு சுழற்சியில் பிரச்சினை, மிகையான உதிரப்போக்கு, பிகாட், பிகாஸ் ஹார்மோன் , பைப்ராய்ட் பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு கிடைப்பது ஒரு வரமே. புற்றுநோய் மேலும் பரவாமல் கட்டுப்பாட்டில் வைக்கமுடிவது, துவக்கநிலை சிறுநீரக கோளாறுகள், அல்சைமர் எனப்படும் நியாபக மறதி போன்ற பாதிப்புகளுக்கு முழுமையான தீர்வாக இல்லாவிட்டாலும் குறிப்பிடத்தக்க பலன்களை பேலியோ டயட் தருகிறது. இதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு முறையான மருத்துவ பரிசோதனை, அதன் அடிப்படையில் ஒரு டயட் சார்ட்….அவ்வளவுதான். சொல்வதற்கு எளிதாக இருந்தாலும் உறுதியான மனக்கட்டுப்பாட்டோடு இதை கடை பிடிக்கிறவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கின்றன.

இன்று ஆல விருட்சமாக வளர்ந்து நிற்கும் இந்தக் குழுமத்தில் இன்று பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்களும் அங்கத்தினராக இருக்கின்றனர். அவர்கள் பேலியோ டயட்டின் பலனை தங்களுடைய நோயாளிகளுக்கும் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கின்றனர். டிவி சீரியல் ஒன்றில் கூட பேலியோ சம்பந்தப்பட்ட வசனங்கள் கேட்க ஆரம்பித்திருக்கிறது. டிவி விவாதங்களில், பத்திரிக்கைகளில் கட்டுரைகள் வர ஆரம்பித்து விட்டது. பேலியோ ஹோட்டல் கூட வந்திருப்பதாக கேள்வி.

இன்னொரு பக்கத்தில் பேலியோ டயட்டுக்கு எதிராக பேசுகிறவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டுத்தான் இருக்கிறார்கள். இவ்வளவு இறைச்சியை மனிதன் உண்டால் பின்விளைவுகள் எப்படி இருக்கும்? பால், வெண்ணெய், சீஸ் மற்றும் இறைச்சிக்காக ஆடு, மாடுகளை வளர்ப்பதில் இருக்கும் சுற்றுப்புறச்சூழல் கேடுகளைப் பற்றி பேலியோக்காரர்களின் நிலை என்ன? இது உண்மையிலேயே நல்ல மாற்று உணவு முறை தானா? வருபவர்களுக்கு ரத்தப் பரிசோதனை ரிப்போர்ட்களை வைத்து டயட் சொல்லும் இவர்கள் என்ன டாக்டர்களுக்குப் படித்தவர்களா? மக்களின் உயிருடன் விளையாடுவது விபரீதத்தில் முடிந்தால் இவர்கள் பொறுப்பேற்றுக் கொள்வார்களா? என்பது போன்ற எதிர்கேள்விகளும், விமர்சனங்களும் ஒருபக்கம் இருக்கத்தான் செய்கிறது.

இத்தனை எதிர்ப்புகளின் ஊடே, செல்வனின் முயற்சியால் இணையம் தாண்டி ஒவ்வொரு நகரமாக பேலியோ அறிமுக கூட்டங்களும், விழிப்புணர்வு பிரச்சாரங்களும் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. பேலியோவால் ஈர்க்கப்பட்டு பலனடைந்த பிரபலங்கள் வாயிலாகவும் இந்த உணவுமுறை மக்களிடையே செல்லும் வாய்ப்புகள் உருவாகி வருகிறது. சமீபத்தில் திருப்பூரில் ஒரு பேலியோ டயட் மாநாடு வெற்றிகரமாக நடந்தேறியிருக்கிறது. தங்கள் நேரத்தையும், பொருளாதாரத்தையும் பொருட்படுத்தாத தன்னார்வலர்கள் மக்களுக்குத் தங்களால் இயன்ற பேலியோ தொண்டினை செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கொள்கிறார்கள். திரு,நியாண்டர் செல்வன் எழுதிய பேலியோ புத்தகம் இந்த வருட புத்தகச் சந்தை விற்பனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

செல்வனின் முயற்சிகள் வெறும் பேலியோ டயட்டோடு நின்றுவிடவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அடுத்த கட்டமாக “வாரியர் டயட்”, சைவர்களுக்காக “நனி சைவம்”, பொருளாதார வசதி குறைந்தவர்களுக்கென “மக்கள் டயட்”, பெண்கள் பொதுவில் சொல்லத் தயங்கும் பிரச்சினைகளுக்கென பிரத்யேக பெண்கள் குழுமம் என பல்வேறு தளங்களில் தன் அறிவையும், அனுபவத்தையும் செலவழித்துக் கொண்டிருக்கிறார். அவருடன் ஒத்துழைக்க நிறைய நல்லவர்களும், சில போலிகளும் உடனிருக்கிறார்கள். ஆரம்ப நாட்களில் தினமும் நிறைய விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள், கட்டுரை பகிர்வுகள் என தகவல் களஞ்சியமாக இருந்த குழுமம் இப்போது சந்தைக்கடை போலாகிவிட்டது. செல்வனும், அவருடைய சக அட்மின்களும் தங்களால் முடிந்த வரையில் எல்லோருக்கும் தீர்வுகளை வழங்கிட முயற்சிக்கின்றனர். தன்னலம் கருதாத இவர்களினால் நிறைய பேருக்கு இந்த தகவல்கள் போய் சேருகிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். இணையம் தாண்டி பொதுவெளியில் கடைசி மனிதனுக்கும் இதன் பலன்கள் போய்ச்சேர வேண்டும் என்பதுதான் இப்போதைய எனது எதிர்பார்ப்பு. அப்படி ஒன்று நடக்க முடிந்தால் நிச்சயமாக ஒரு யுகப்புரட்சியாக அமையும்.


No comments:

Post a Comment

ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...