Thursday, December 1, 2016

சின்னஞ் சிறிய வண்ணப் பறவை...

கோடையில் ஒரு மாலை நேரம். சமையலறையில் நான் எதையோ உருட்டிக் கொண்டிருக்க, சங்கீத ஸ்வரங்கள் காதில் இன்னிசையாய் பாய, வேலையை விட்டுவிட்டு கதவைத் திறந்து பார்த்தால் மரத்தின் உச்சியில் மிகச்சிறிய பறவை ஒன்று அழகான குரலில் விசிலடித்துப் பாடி நிறுத்த, மறுகணம் வேறு மரத்தின் உச்சியில் இருந்து பதிலாக அவளின் இனிய குரலில் ஒரு தேவகானம்! தொடர்ந்து மாறி மாறி பாடிக் கொண்டிருக்கிறார்கள். நானும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். பறந்து பறந்து மரங்களை மாற்றினாலும் பாடுவதை மட்டும் நிறுத்தவில்லை அவர்கள் இருவரும்.

ஆனந்த ராகம் என்பது அது தானோ? அவ்வளவு இனிமை அவர்களின் குரலில்! கோல்ட் ஃபின்ச் பறவைகள் உருவத்தில் சிறியதாக இருந்தாலும் மஞ்சள் உடம்பும் கருப்பு மற்றும் சாம்பல் நிற சிறகுகள் கொண்ட அழகான வண்ணப் பறவைகள்!

அடர் மஞ்சள் நிறத்தில் தலையில் கருப்பு குல்லாய் போட்டுக் கொண்டிருக்கும் ஆண் பறவை உருவத்தில் பெண் பறவையை விட சிறிது பெரியதாக இருக்கும். வண்ணம் குறைந்த பெண் பறவை மிகச் சிறியதாக இருக்கும்.

குழல் இனிது, யாழ் இனிது என்பர், கோல்ட் ஃபின்ச் குரலைக் கேளாதவர் என்றால் மிகையில்லை. பறவைகளை  கண்டால் எண்ணங்கள் சிறகு விரிக்கிறது.

அப்பறவைகளைப் பற்றி அறிந்து கொண்டவுடன் அவர்களுக்கான feeder-ம், விதைகளும் வாங்கி காத்திருந்ததில் ஒரு வாரம் கழித்தே எங்கள் பகுதிக்கு வந்தது. இன்று ஐந்தாறு பறவைகள் வந்து செல்கிறது. வசீகரிக்கும் குரலுக்காகவும், வண்ணத்திற்காகவும் மிகவும் ரசிக்கப்படும் இப்பறவைகளின் இன்னிசை கானத்தில் நனைய ஆவலுடன் காத்திருக்கிறேன்!

ஓய்வெடுக்கச் சென்றவர்கள் என்று திரும்புவார்களோ?

சின்னஞ் சிறிய வண்ணப் பறவை எண்ணத்தை சொல்லுதம்மா - அது
இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா ....


No comments:

Post a Comment

ஜிம்மி கார்ட்டர் தனது வேலையை இழந்து தனது பணியை எவ்வாறு கண்டுபிடித்தார்

 சொல்வனம் இதழ் 334ல் வெளிவந்த கட்டுரை  ஜிம்மி கார்ட்டர் தனது வேலையை இழந்து தனது பணியை எவ்வாறு கண்டுபிடித்தார் – சொல்வனம் | இதழ் 346 | 13 ஜூல...