Tuesday, November 25, 2025

சலிக்காத தொடர்கள்

ராமாயணம், மகாபாரதம் இதிகாச கதைகளை எத்தனை முறை வாசித்தாலும், பார்த்தாலும் சலிப்பதே இல்லை. முதன்முதலில் தொன்னூறுகளில் 'ராமாயணம்' தொடராக தூர்தர்ஷனில் வெளிவந்த பொழுது அதன் பிரம்மாண்ட காட்சிகளில் தொலைந்து போனது இன்றும் நினைவில் இருக்கிறது. ஒவ்வொரு ஞாயிறு அன்றும் தொடர் ஒளிபரப்பும் நேரத்தில் தெருவில் மக்கள் நடமாட்டமே இருக்காது அல்லது மிக குறைவாக இருக்கும். குடும்பங்களாக உட்கார்ந்து களித்த தொடர் அது. ஹிந்தியில் தான் ஒளிபரப்பினார்கள். ஆனாலும் ரசித்தோம். ஏனென்றால் பலவாறு கதைகளைக் கேட்டிருந்தோம். அதில் சீதையாக நடித்தவர் பாரளுமன்ற உறுப்பினர் ஆகும் அளவிற்கு மக்களின் அமோக ஆதரவு பெற்றிருந்தது. 

பிறகு 'மகாபாரத்' வெளிவந்தது. பீமன், கர்ணன், துரியோதனன், அதுவும், கண்ணனாக நடித்தவர்கள் பிரபலமானார்கள். பிறகு விஜய் டிவியில் தமிழிலும் வெளிவந்து அதுவும் பிரபலமானது. ஒவ்வொரு தொடரிலும் நடிக்கும் கதைமாந்தர்கள் அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றார்கள்.அதனாலேயே இன்று வரையிலும் இத்தொடர்கள் பிரபலமாகவே இருக்கிறது. இருக்கும்.


சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸ்-ல்  'குருக்ஷேத்ரா' என்றொரு தொடர் வெளியாகியிருக்கிறது. 18 நாட்கள் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் நடக்கும் போரை மிக அழகாக தொகுத்து வழங்கியிருக்கிறார்கள். அனிமேஷன் என்பதால் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் கதையில் சற்றும் தொய்வு ஏற்படாமல் மிக அழகாக எடிட் செய்து கொண்டு சென்ற விதம் பாராட்டுக்குரியது. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தையும் போரில் கண்ணனின் பங்கையும் மிகமிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பின்னணி இசையும் கேட்க நன்றாக இருக்கிறது.


முதல் நாள் போரில் ஆரம்பித்து பாண்டவர்கள் ஹஸ்தினாபுரம் திரும்பி யுதிஷ்டிரர் அரியணை ஏறும் வரை செல்லும் இந்தத் தொடரை கண்டுகளியுங்கள். கதைகள் தெரிந்த குழந்தைகளும் ரசிப்பர். ஒரு தொடரில் அனைத்தையும் காண்பிப்பது சாத்தியமில்லை. அதுவும் தவிர, பல்வேறு திரிக்கப்பட்ட கதைகள் இருப்பதால் ஆர்வமுள்ளவர்கள் முறையான புத்தகங்களைத் தேடி வாசியுங்கள். தொடர்களில் காண கிடைக்காத காட்சிகள் ஏராளம் அதில் புதைந்து கிடக்கிறது. 






Wednesday, November 12, 2025

AIM for Seva வெள்ளிவிழா ஆண்டு


"Education is the key to the development of a society."


பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் சத்திய வாக்கு! ஒரு சமுதாயம் உயர கல்வி அவசியம். அவர் மனதில் 25 வருடங்களுக்கு முன் தோன்றிய எண்ணம் நனவாகி 'AIM for Seva' என்ற அமைப்பாக உருவெடுத்தது. மலைவாழ் மக்களின் குழந்தைகள் தினமும் நான்கு மைல்கள் நடந்து சென்று கல்வி கற்க வேண்டிய சூழலை அறிந்து அவர்களுக்கு உதவ, பள்ளிகளுக்கு அருகிலேயே 'சத்ராலயா' எனும் இலவச தங்கும் இடங்கள் கட்டப்பட்டது. கூடவே, ஆரோக்கிய உணவும், உடைகளும், பாதுகாப்பான சூழலும், மருத்துவ வசதிகளும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டன.

2001ல் முதன்முதலாக மாணவர்களுக்கான தங்குமிடம் ஒன்று தமிழ்நாட்டில் அணைக்கட்டி மலைக்கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பெண் குழந்தைகளுக்காக ஒன்று என்று விரைவில் வளர்ந்து தற்பொழுது 95 உறைவிடப் பள்ளிகள் 17 மாநிலங்களில் உருவாகியுள்ளது. 3000 கிராமங்களில் இருந்து 4,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நான்கு முதல் 12ஆம் வகுப்புகள் வரை பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. 2002ல் இருந்து AIM for Seva அறக்கட்டளை வாயிலாக ஒன்பது பள்ளிகளும் ஒரு கல்லூரியும் உருவாகியுள்ளது. கிண்டர்கார்ட்டன் முதல் இங்கு படிக்கும் 5000 மாணவர்களுக்கு அரசு பாடத்திட்டங்களுடன் வாழ்க்கையில் முன்னேறவும் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ உதவும் வழிவகைகளும் கற்றுத்தரப்படுவது சிறப்பு.

நகர்ப்புற மாணவர்களைப் போலவே கிராமங்களில், தொலைதூரங்களில் வசிக்கும் வசதியற்ற மாணவர்களுக்கும் கல்வியை அளித்து நாட்டை முன்னேற்றுவதே இந்த அமைப்பின் நோக்கமாகும்.

25 வருடங்களில் 2 கோடி கிராமப்புற மக்களை அடைந்துள்ள இந்த அமைப்பின் வாயிலாக ஒவ்வொரு வருடமும் 10,000 மாணவர்கள், 65,000 மருத்துவ பயனாளர்கள் உதவிகளைப் பெறுகிறார்கள். கிராமப்புற பஞ்சாயத்து, உள்ளூர் பள்ளிகள் மூலம் உதவி தேவைப்படும் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுடைய பாதுகாப்பு, உணவு, உறைவிடம், கல்விக்கு உத்தரவாதம் அளித்து குடும்பச்சூழ்நிலையில் வளர்த்து வருகிறார்கள்.

பள்ளிப் பாடங்களுடன், நடனம், நாட்டியம், இசை, விளையாட்டு, ஓவியம், கைத்தொழில் என்று மாணவர்களின் திறமைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ற வகையில் சிறப்புப் பாடங்களும் அளிக்கப்படுகின்றன. பெற்றோரைப் போல ஆசிரியர்கள் வழிநடத்தி, மரியாதை, பொறுப்பு, அன்பு போன்ற நற்பண்புகளையும் கற்றுக்கொடுக்கிறார்கள்.

உள்ளூர் திருவிழாக்கள், கோவில் நிகழ்ச்சிகள், சமுதாய கூடங்களில் பங்குகொள்ள வைத்து கலாச்சாரத்தையும் அறிமுகப்படுத்துகின்றனர் இந்த அமைப்பினர். இங்குக் கற்க வந்தவர்கள் பலரும் படித்து முடித்து பணிபுரிந்து அவர்களுடைய சமுதாயத்தில் முன்மாதிரியாக வலம் வருகிறார்கள்.

"ஊர் கூடித் தேர் இழுத்தால் தான் தேர் நகரும்" என்பது போல ஒரு இயக்கம் உருவாக பல நல்ல உள்ளங்களின் நேரமும் நன்கொடைகளும் அவசியம். சுவாமிஜியின் கனவு சாத்தியமாக அவர் வேண்டிக்கொண்டபடி மக்களும் தாராளமாக உதவி வருகிறார்கள்.

ஒரு குழந்தையின் படிப்பிற்கும் பராமரிப்பிற்கும் ஆண்டுக்கு $500 செலவாகிறது. மாதந்தோறும் $40 சேமித்தால் கூட, ஒரு மாணவனுக்குக் கல்வி வழங்க முடியும். ஆல்பனி சாப்டர் 200 குழந்தைகளுக்கான செலவுகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிவித்தனர். கிட்டத்தட்ட 150 மாணவர்களுக்கான பணத்தேவையை அன்றே மக்கள் நன்கொடையாக வழங்கிவிட்டனர்.

நன்கொடையாளர்களைப் பாராட்டும் வண்ணம், நடன, நாட்டிய, இசை நிகழ்ச்சிகள் அமெரிக்கா முழுவதும் வருடம் ஒரு முறை தேர்ந்த வல்லுநர்களால் நடத்தப்படுகின்றன. இந்த வருடம், 'ஓம் நமோ நாராயணாய'(அக்ரே பஷ்யாமி), "என் முன் இருக்கும் தெய்வம்" என்ற தலைப்பில் அருமையான நடன நிகழ்ச்சி திருமதி.அனிதா குஹா அவர்களின் குழுவினரால் அரங்கேறியது. ஸ்ரீ.துஷ்யந்த் ஸ்ரீதர் ஸ்பஷ்டமாக விவரிக்க, டாக்டர்.ராஜ்குமார் பாரதி இசையில் அருமையான லைட்டிங், சவுண்ட் உடன் கூட்டம் முழுவதும் தன்னை மறந்து ரசிக்க, மெய்சிலிர்க்கும் அனுபவம்!

பகவான் மகாவிஷ்ணுவின் அவதாரங்களை எத்தனை முறை கேட்டாலும், பார்த்தாலும் பரவசம் கொள்ளும் மனது இந்த நாட்டிய நிகழ்ச்சியில் ஒன்றிப்போனது மட்டுமன்றி தமிழ், மலையாளம் என்று இசையும், பாடல்களும் கலந்து கொடுத்தது அருமை. நாராயண பட்டாதிரியின் குருவாயூரப்பனைப் போற்றிப் புகழும் பாடல்கள் வாயிலாக விஷ்ணுவின் அவதாரங்களைக் காட்சிகளாக்கி இறுதியில் பரம்பொருளின் அவதாரத்தைப் பார்த்ததும் பரவசம் அடையாதவர்களே இல்லை. சிலப்பதிகாரம், திருப்பாவையிலிருந்தும் பாடல்களைக் கேட்க இனிமை.

 ஆடாமல் அசையாமல் நின்ற குருவாயூரப்பன், ருத்ர தாண்டவம் ஆடிய பரமசிவன், வராகமூர்த்தி, ஆக்ரோஷ நரசிம்மர் ,வாசுகி தலையில் நர்த்தனம் ஆடிய கிருஷ்ணன், பாற்கடலைக் கடைந்த அசுரர்கள் தேவர்கள், அசுரர்களை மட்டுமா கவர்ந்தாள் அந்த மஹாலக்ஷ்மி? அடடா! சொல்லிக்கொண்டே போகலாம் நடனமாடியவர்களைப் பற்றி! பட்டாதிரியாக நடித்தவர் ஏற்கெனவே ராம சரிதம் நிகழ்ச்சியில் அனுமனாக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர். மிகவும் ஆத்மார்த்தமாக அனுபவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை அமைத்துக் கொடுத்தவர்களுக்குப் பாராட்டுகள்.


அங்கு வந்திருந்தவர்களுக்கு இரவு உணவை வழங்கி அசத்திய குழுவினருக்கும் உதவிய நல்லுள்ளங்களுக்கும் வாழ்த்துகள்!

எத்தனை நாட்கள் தான் நாமும் சமுதாயத்திடமிருந்து பெற்றுக்கொண்டிருப்பது? நாமும் பதிலுக்கு நம்மால் முடிந்த உதவியைச் செய்வதுதானே முறை? இந்த எண்ணம் அனைவரின் மனதில் தோன்றி விட்டால் கல்வி கற்ற சமுதாயத்தை உருவாக்கி நாட்டை முன்னேற்றலாம்.

"To live is to be a positive contributor."

-பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி

Tuesday, November 11, 2025

நம் பாதுகாப்பிற்கு நாமே பொறுப்பு

இந்தக் காணொளியில் வக்கீல் சுமதி அவர்கள் பேசியிருக்கும் விஷயங்கள் கவனிக்கத்தக்கவை.  Advocate Sumathi Interview

ஊடகங்களுக்கு என்று ஒரு தார்மீக பொறுப்பு இருக்கிறது. இருந்தது கொத்தடிமைகள் ஆவதற்கு முன். இப்பொழுதோ ஊழல்வாதிகளை, கயவர்களை எல்லாம் விட்டுவிட்டு பாதிக்கப்பட்டவர்களை மேலும் வக்கிர எழுத்துக்களாலும் பேச்சாலும் பாதிக்கிறார்கள். அவர்களின் குடும்பங்களுக்குத் தீராத வலியை உண்டாக்குகிறார்கள்.

போதைப்பொருட்கள் தீராவிட ஆட்சியில் பெருகி ஒடுவதை கேட்க துப்பில்லாதவர்கள் இந்த ஆர்எஸ்பி ஊடகவியாதிகள்.

பெண்களுக்குப் படிக்கும் இடத்தில், வீட்டில் கூட பாதுகாப்பு இல்லை என்கின்ற பொழுது மேலும் கவனமாக, பொறுப்பாக இருக்க வேண்டும் என்று சுமதி அவர்கள் சொல்வது முற்றிலும் சரி.

அதுபோலவே, தண்டனைகள் கடுமையாக இல்லாதவரை இப்படியான குற்றங்கள் தொடரும் என்றதும் 100% சரி.

டில்லி நிர்பயா விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கொடூரன் மைனர் என்று தையல் மெஷின் கொடுத்து விடுதலை செய்ய சொன்ன கனிமொழி அரசியல்வியாதிகள் சாபக்கேடு.

இந்த விஷயத்தில் உடனடியாகச் செயல்பட்டு கயவர்களைப் பிடித்த காவல்துறைக்குப் பாராட்டுகள்.

தேவையில்லாத இடத்தில் மூக்கை நுழைக்கும் நீதியரசர்கள் விரைவில் மரணதண்டனை தருவார்களா? கயவர்களை வெளியில் விடுவதால் தான் இந்த அவலங்கள் அதுவும் திராவிட மாடல் அரசாங்கத்தில் சர்வ சாதாரணமாக பெருகியிருக்கிறது.

இந்தப் பொறுக்கிகளுக்கு ஆதரவாக வழக்காட எந்த வக்கீலும் வரக்கூடாது. அரசு தரப்பும் இந்தக்கயவர்கள் வெளியில வராதபடி தக்க தண்டனை கொடுக்க வேண்டும். இந்த நாய்களுக்கெல்லாம் உடனடி மரணதண்டனை தான் சரியானது. 

கொடுப்பார்களா 😡😡😡

 


Thursday, November 6, 2025

இராணுவ உடையில் ஒரு கூலிப்படை

சொல்வனம் இதழில் வெளிவந்துள்ள இராணுவ உடையில் ஒரு கூலிப்படை – சொல்வனம் | இதழ் 353 | 26 அக் 2025 கட்டுரை.



ஜனநாயக நாடாக இருந்தபோதிலும் பாகிஸ்தான் ராணுவம் தான் நீண்ட காலமாக இஸ்லாமாபாத் அரசாங்கத்தின் அதிகாரப் புலங்களை மறைமுகமாகக் கட்டுப்படுத்தி வருகிறது என்பதை உலகம் அறியும். தங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்காதவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருந்தாலும் சிறையில் அடைப்பது, மரண தண்டனை வழங்குவது ராணுவத்தினரின் செயல்களாக இருந்து வருகிறது. இந்தியாவிலிருந்து பிரிந்து சென்றிருந்தாலும் வளர்ச்சிப் பாதையில் செல்லாமல் இஸ்லாமியப் பயங்கரவாதத்தையும் இந்திய வெறுப்பையும் சுமந்து கொண்டு அலையும் நாட்டிற்குத் தங்களுடைய சுய லாபத்திற்காகப் பிற நாடுகள், குறிப்பாக அமெரிக்கா இதுவரையில் பணத்தை வாரி இறைத்தது.

ஆப்கானிஸ்தான் போரின் போது முக்கியமான வான்வழி, பொருட்கொடுப்பு வழிகளை வழங்கியதற்காக பாகிஸ்தானின் ஆயுதப்படைகள் அமெரிக்காவிடமிருந்து பில்லியன் டாலர் அளவிலான நிதியைப் பெற்றன. ஆனால் 2018ல் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தங்களிடம் நிதியைப் பெற்றுக் கொண்டு தாலிபானுக்கும் பாதுகாப்பு தஞ்சம் அளித்து வருகிறது என்று குற்றம்சாட்டி, பெரும்பாலான பாதுகாப்பு உதவிகளை நிறுத்தி விட்டார். 2021ல் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதும், இரண்டாவது முறையாக ட்ரம்ப் பதவியேற்ற பின்னும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாட்டின் பணவரவு முற்றிலுமாக குறைந்து விட்டாலும் மனிதாபிமான அடிப்படையில் செய்யும் உதவிகள் மட்டும் தொடர்ந்து வருகிறது. மேலும் “ஆபரேஷன் சிந்தூர்”-ல் வாங்கிய அடி பலமாக இருந்தாலும் “வலிக்கல” என்று கைப்புள்ளையாகி விட்டது பாகிஸ்தான். தற்பொழுது ஏற்பட்டிருக்கும் பொருளாதார சறுக்கலிலிருந்து மீண்டுவர, மீண்டும் மீண்டும் பன்னாட்டு நிதி அமைப்பு, கூட்டாளிகளிடம் கையேந்திக் கொண்டிருக்கிறது.

இந்நிலைமையைத் தவிர்ப்பதற்காக புதிய அவதாரம் எடுத்துள்ளது. 2021ம் ஆண்டு அப்போதைய ராணுவத் தளபதி காமர் ஜாவேத் பஜ்வா “புவிசார் பொருளாதார பார்வை” பற்றின முக்கிய உரையில், “நாட்டின் உள்ளும் வெளியும் அமைதியை நிலைநாட்டவும், பாகிஸ்தானை ஒரு பொருளாதார மையமாக நிறுவி உள்பிராந்திய வர்த்தக இணைப்பை அதிகரிக்கவும் ராணுவத்தின் பங்கு அவசியம்” என்பதனைக் கோடிட்டுக் காட்டினார். பாஜ்வாவிற்குப் பின் பதவியேற்ற அசிம் முனிரின் முதன்மை முயற்சியாக, கட்டுக்கோப்பான ராணுவத்தின் அதிகாரத்துவ செல்வாக்கைப் பயன்படுத்தி வலுவான பொருளாதாரத்தை அடைய 2023ல் தொடங்கப்பட்டது தான் SIFC. (Special Investment Facilitation Council) செப்டம்பர் 8, 2025ல் அமெரிக்காவுடனான $500 மில்லியன் கனிம ஒப்பந்தத்திற்கான கையெழுத்து விழாவில் ராணுவத் தளபதி அசிம் முனிரும் பிரதம மந்திரி ஷெஹ்பாஸ் ஷெரிஃப்புடன் கலந்து கொண்டது, அவர்களின் தலைவர்களை விட ராணுவமே தேசியக் கொள்கையை நிரந்தரமாக வடிவமைக்கும் என்ற கோட்பாட்டினை நிரூபித்துள்ளது.



அதனைத் தொடர்ந்து நாட்டின் பொருளாதார நிலைமையைச் சமாளிக்க தங்களின் ஒரே பலமான ராணுவத்தைக் கொண்டு பொருளீட்டத் திட்டமிட்டது தற்போதைய பாகிஸ்தான் அரசு. செப்டம்பர் 17, 2025 அன்று சவுதி அரேபியாவுடன் “பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்” மூலமாக இரு நாடுகளுக்கு இடையே நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பை உறுதி செய்துள்ளது பாகிஸ்தான்.

இந்த ஒப்பந்தம் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் போன்ற வெளிநாட்டுத் தாக்குதல்களுக்கு எதிரான பாகிஸ்தானின் பாதுகாப்பு உத்தரவாதமாக விளம்பரப்படுத்தப்படுகிறது. இதில் இரு நாடுகளுக்கும் எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்பும் இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும் என்றிருந்தாலும் உண்மையில், இது சவுதி அரேபிய நிர்வாகத்தின் உத்தரவுகளுக்காகக் காத்திருக்கும் கூலிப்படையாக பாகிஸ்தான் ராணுவத்தின் நிலையை உறுதிப்படுத்துகிறது. அது மட்டுமில்லாமல் பாகிஸ்தானை “உதவி பெறும் நாடு” என்ற நிலையிலிருந்து, அமெரிக்காவின் பிராந்திய ஆதிக்கத்தில் நம்பிக்கை இழந்து வரும் நாடுகளுக்கு “பாதுகாப்பு வழங்கும் நாடாக” மாற்றும் நோக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டாலும், தோஹாவில் ஹமாஸ் தலைமையைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய முன்னறிவிப்பில்லாத வான்வழித் தாக்குதல் நடந்த சில நாட்களுக்குப் பிறகு வெளிவந்த இந்த ஒப்பந்த அறிவிப்பு தான் தற்பொழுது உலகநாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சவுதி அரேபியாவைப் பொறுத்தவரை, சக வளைகுடா நாடும் அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடான கத்தார் மீதான தாக்குதல், அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே என்பதனை ஊர்ஜிதம் செய்துள்ளது. அதனால் பாகிஸ்தானின் அணுசக்தி குடையின் கீழ் இருப்பதும் அதன் ராணுவமும் ரியாத்திற்கு பாதுகாப்பாக இருப்பது சவுதிக்கு அவசியமானதாக இருக்கிறது.

இஸ்லாமாபாத்தைப் பொறுத்தவரை, இந்த ஒப்பந்தம் ஒரு முக்கியமான பொருளாதார உயிர்நாடியாகியுள்ளது. ஐந்து பில்லியன் டாலர் சவுதி முதலீட்டுத் தொகுப்பும் பில்லியன் கணக்கான வணிக ஒப்பந்தங்களும் இந்தியாவிற்குப் புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் பாகிஸ்தானுடனான மோதலில் சவுதியின் தலையீட்டையும் கவனத்தில் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இந்தியாவைத் தள்ளியுள்ளது.



அது மட்டுமில்லாமல், ட்ரம்ப்பின் நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்களைக் குறிவைத்தும், தன்னைத்தானே புகழ்ந்து கொண்டிருந்தாலும் வேறு யாராவது தன்னைப் புகழ்ந்து பேசமாட்டார்களா’ என்று ஏகத்திற்கும் காத்திருந்த ட்ரம்ப்பை ‘அமைதிக்கான மனிதர்’ என பொய்யாகப் புகழ்ந்தும் தந்திரமாகக் காய்களை நகர்த்தி தனக்குச் சாதகமாக்கிக் கொண்டுள்ளார் ஷெரிஃப். அது மட்டுமா? இந்தியாவுடனான பாகிஸ்தானின் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் மத்தியஸ்தம் செய்ததாக ட்ரம்ப்பின் பொய்யை இவரும் சேர்ந்து புளுகி அவரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்து அங்கிள்சாமை கவிழ்த்த நாடகங்களை உலகம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு தான் இருந்தது.

எப்படியாவது ட்ரம்ப்பிடம் நல்ல பெயர் வாங்கி மீண்டும் பணத்தைக் கறந்து விட வேண்டும் என்று பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை வேறு முடுக்கிவிட்டுள்ளது. அதை நிரூபிக்கும் விதமாக 2021ம் ஆண்டு காபூல் விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில் 13 அமெரிக்கப் படைவீரர்களைக் கொன்ற இஸ்லாமிய அரசு தீவிரவாதியை இந்த ஆண்டு தொடக்கத்தில் கைது செய்தது. இதற்கெல்லாம் ஈடாக, கடந்த மாதம் வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்த ஷெரிஃப், முனீர் இருவரையும் “சிறந்த மனிதர்கள்” என்று ட்ரம்ப் பாராட்டியுள்ளார். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த அரசியல் தலைவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் முகஸ்துதி செய்து கொள்வதைப் பார்த்து முகஞ்சுளித்துக் கொண்டது உலக நாடுகள்.

ஆனால் அதைப்பற்றிக் கவலை கொள்ளவில்லை இருவரும். பொருளாதார ரீதியாக, பாகிஸ்தானுக்குச் சாதகமான 19 சதவிகித வரி விகிதமும் அமெரிக்க முதலீடுகளுக்கான வாய்ப்புகளும் கிடைத்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவைப் பகைத்துக் கொள்ளாமல் சவுதியுடனான கூட்டணியை வலுப்படுத்தும் சுதந்திரத்தையும் பெற்றுள்ளது பாகிஸ்தான்.



சவுதி ஒப்பந்தம் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றிருந்தாலும் ஆப்பிரிக்காவிலும் புதிய கடல்சார் தளங்களிலும் அதன் விரிவாக்கம் கவனத்தைப் பெற்றிருக்கிறது. செங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் பாகிஸ்தானின் ஆதிக்கத்தை வலுப்படுத்த ஆகஸ்ட் மாதத்தில் சோமாலிய அமைச்சரவை பாகிஸ்தானுடன் ஐந்து ஆண்டு ராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தைப் போட்டுள்ளது.

வடக்கே, கிழக்கு லிபியா அரசாங்கத்துடன் பாதுகாப்பு உறவுகளை உறுதிப்படுத்தியுள்ளது. அங்கு ஜெனரல் கலீஃபா ஹப்தாரின் சுயமாக அறிவிக்கப்பட்ட லிபிய தேசிய ராணுவம், திரிபோலியில் ஐ.நா. ஆதரவு அரசாங்கத்திற்கு எதிராக ஒரு அரசை அமைத்துள்ளது. ஹப்தாரின் மகன் சதாம் ஹப்தார், ஜூலை மாதம் இஸ்லாமாபாத்திற்கு விஜயம் செய்து ஷெரீப்பையும் முனீரையும் சந்தித்து இரு தரப்பிலும் ஒத்துழைப்பை ஆழப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் மத்தியதரைக்கடலில் தனது கடற்படை இருப்பை விரிவுபடுத்தியது மட்டுமில்லாமல் அதன் போர்க்கப்பல்கள் துருக்கிய கடற்படையுடன் கூட்டு ரோந்துப் பணிகளை மேற்கொண்டுள்ளன. இந்த எல்லைமீறலை கிரீஸ் எதிர்த்துள்ளது.

பாகிஸ்தானின் மற்றொரு குறிப்பிடத்தக்க முன்னெடுப்பு, சூடானின் ஆயுதப் படைகளுடன் ஆகஸ்ட் மாதம் கையெழுத்திட்ட 1.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகும். சூடான் நாட்டுப் படைகள், துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளுடன் (RSF) பேரழிவுகரமான உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ளன. சவுதி அரேபியா, சூடான் படைகளுக்கு ஆதரவாக இருப்பதால் RSFஐ எதிர்த்துப் போரிட, இந்த ஒப்பந்தத்திற்கான நிதியை வழங்கியதாகக் கூறப்படுகிறது. (With foreign cash, strategic location and cover)



பரஸ்பர நன்மை பயக்கும் இந்த ஒப்பந்தத்தால் அண்டை நாட்டுப் பிரச்சினையைக் குறைக்க ரியாத்திற்கு மிகவும் உதவும். இஸ்லாமாபாத்தைப் பொறுத்தவரை, இது ராணுவ-தொழில்துறை வளாகத்திற்கான ஒரு லாபகரமான ஒப்பந்தமாகும். இதன்மூலம், சீனாவால் உருவாக்கப்பட்ட ராணுவ வன்பொருட்களை ஆப்பிரிக்கப் போருக்கு வழங்கும் ராணுவ சப்ளையராகவும் வளைகுடாவின் புதிய பாதுகாப்பு கட்டமைப்பிலும் அதன் பங்கை உறுதிப்படுத்துகிறது. (Saudi Arabia loaned Pakistan $3 billion)

பாகிஸ்தானின் இத்தகைய லட்சிய முயற்சிகளால் குறிப்பிடத்தக்க ஆபத்துகள் இல்லாமல் இல்லை. 2015ல் ஏமனில் சவுதி தலைமையிலான ஹவுதிகளுக்கு எதிரான போரில் சேர இஸ்லாமாபாத் மறுத்துவிட்டது. ஆனால் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள், பயிற்சியுடன் தொடர் ஆதரவை ஈரான் வழங்கி வருவதால் புதிய ஒப்பந்தத்தை இறையாண்மைக்கு அச்சுறுத்தலாகக் கருதுகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா பாகிஸ்தானைப் பயன்படுத்த விரும்புகிறது என்றும் நம்புகிறது. ஈரானும் சவுதி அரேபியாவும் தங்கள் உறவுகளை மேம்படுத்த முயற்சித்து வந்தாலும், காசா போர் மத்தியகிழக்கில் புதிய உறுதியற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. இந்த ஜூன் மாத தொடக்கத்தில், இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியது. இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் சவுதி வான்வெளியைப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டது. இதனால் பாகிஸ்தானின் ஆதரவு நிலையில் மாற்றம் ஏற்படக்கூடும். சவுதிஅரேபியாவுடனான அதன் ஒப்பந்தத்தில் உள்ள பரஸ்பர பாதுகாப்பு விதி, பிராந்திய மோதல்களுக்கு நாட்டை இழுக்கக்கூடும். பணத்திற்காகப் போடப்பட்டுள்ள இந்த பாதுகாப்பு ஒப்பந்தங்களால் வெளிநாட்டுப் போர்களில் சிக்கிக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். முதன்மை எதிரியான இந்தியா, உள்நாட்டுத் தீவிரவாதக் குழுக்களான தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான், இஸ்லாமிய அரசு கோரசன் மாகாணம் முதல் பலூச் பிரிவினைவாதிகளின் தாக்குதல்களைச் சமாளிப்பதில் பிரச்சினைகள் வரலாம். (private military company notorious for providing mercenary services)

தற்போதைய நிலைப்பாட்டால் பாகிஸ்தான் ஒரு “கூலிப்படை நாடாக” மாறி ரஷ்யாவிற்கு ஆதரவாக உக்ரைன் போரில் ஈடுபட்டு வருகிறது என்று அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். 9/11 தாக்குதலுக்குப் பின் அமெரிக்கா தலைமையிலான பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இஸ்லாமாபாத் ஒரு “முன்னணி நட்பு நாடாக” இணைந்ததால் உள்நாட்டில் பின்னடைவை ஏற்படுத்தி 90,000 உயிர்களுக்கும் 150 பில்லியன் டாலர் பொருளாதார இழப்புகளுக்கும் காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



மேற்கூறிய வரலாற்று இழப்புகளும் பிரச்சினைகளும் இருந்தபோதிலும், வாய்ப்புகளும் ஆபத்துகளுமாய் இரட்டை முனைகள் கொண்ட வாள் தான் பாகிஸ்தானின் இந்த புதிய முயற்சி. பாதுகாப்பு மற்றும் புவிசார்-பொருளாதார உத்தியை இணைப்பதற்கான அதன் முயற்சிகளின் இறுதி நிலைத்தன்மை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் ஒன்று மட்டும் நிச்சயம்: பாகிஸ்தானுக்கு விற்க கைவசம் ஒரு தயாரிப்பு உள்ளது. தற்போதைய நிலையற்ற உலகில், ராணுவ வணிகம் செழித்து வருகிறது. அதுவும் வளைகுடா பகுதிகளில் அதன் தேவை அதிகமாகவே இருக்கிறது. அதை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை ராணுவம் செய்து வருகிறது.

பாகிஸ்தான் ராணுவம் பெரும்பாலும் நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த நிறுவனம் என்று தவறாக அடையாளப்படுத்தப்படுகிறது. உண்மையில் இது ஒரு கூலிப்படை நிறுவனமாகும்.1970 ஆம் ஆண்டு ஜோர்டானில் ஜியா-உல்-ஹக்கின் கட்டளையின் கீழ் பாகிஸ்தான் துருப்புக்கள் 25,000 பாலஸ்தீனியர்களைக் கொன்ற கறுப்பு செப்டம்பர் முதல் தற்போதைய ரியாத்துடனான புத்தம் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் வரை, பாகிஸ்தானின் படைத்தளபதிகள் மிகப்பெரிய காசோலைகளில் கையெழுத்திடுபவர்களுக்காக நீண்ட காலமாகப் போராடி வருவது வரலாறு (1979 Grand Mosque seizure in Mecca). அணு ஆயுதக் கேடயம் என்ற வாக்குறுதியுடன் சவுதி அரேபியாவுடனான சமீபத்திய ஒப்பந்தம், ராவல்பிண்டியின் நீண்ட கூலிப்படை பேரேட்டில் புதிய அத்தியாயமாகும். (signed a mutual defence pact with Saudi Arabia)

பாகிஸ்தானுடனான அரபு நாடுகளின் உறவு என்பது சகோதரத்துவ அடிப்படையில் அமைந்தது அல்ல. பரிவர்த்தனை சார்ந்தது. வளைகுடா அவர்களுக்குப் பணத்தையும் எண்ணெயையும் வழங்க, பாகிஸ்தான், துருப்புக்களையும் போலி கண்ணியத்தையும் வழங்குகிறது. அதற்கு ஈடாக, இரு தரப்பினரும் உலக அரங்கில் தாங்கள் முக்கியமானவர்கள் என்று பாசாங்கு செய்து வாஷிங்டனுக்கு நிரூபிக்க முயற்சிக்கிறார்கள்.

பாகிஸ்தான் தளபதிகளின் விசுவாசம் தங்கள் நாட்டிற்கோ, இஸ்லாத்திற்கோ, காசாவிற்கோ அல்ல. தங்கள் காசோலைகளில் கையெழுத்திடுபவர்களுக்கு மட்டுமே. என்று பாகிஸ்தானியர்கள் ராணுவ நிறுவனம் தங்கள் பாதுகாவலர் அல்ல. சுயலாபத்திற்காக இயங்கும் கூலிப்படை என்பதை உணருகிறார்களோ அன்று நாடு
பிளவுபடும். வரலாறு அவர்களைப் போர்வீரர்களாக நினைவில் கொள்ளாது. பேரரசிற்கு விலைபோனவர்களாக மட்டுமே நினைவில் கொள்ளும் என்பதையும் ராணுவ அதிகாரிகள் அறிவார்கள். தற்பொழுது மக்களை ஏமாற்ற, தேசபக்தி, “உம்மாவின் பாதுகாப்பு” போன்ற வெற்று முழக்கங்களிட்டு உயரடுக்கினரின் வங்கிக் கணக்குகளைப் பாதுகாத்துக் கொள்கிறது.

திவாலான நாடு மீண்டும் கூலிப்படை நாடாக அவதரித்திருப்பது வளைகுடா பாதுகாப்பையும் பிராந்திய மறுசீரமைப்பையும் பிரதிபலிக்கிறது. இந்த களேபரங்களுக்கு மத்தியில், இந்தியாவுடனான சவுதி அரேபியாவின் உறவுகள் முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளன என்றும் எதிர்காலத்தில் தொடர்ந்து வளரும் என்றும் கூறப்படுகிறது. தற்பொழுது அமெரிக்கா வேறுபட்ட நலன்களைச் சமநிலைப்படுத்த வேண்டிய கட்டாயத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வரும் ஆண்டுகளில் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் செல்வாக்கை வடிவமைக்கவும் நம்பிக்கையைப் பெறவும் அதிபர் ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும் என்பதையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது உலகம்.

King Hussein of Jordan flanked by Pakistani soldiers. In 1970, Pakistan deployed an infantry regiment in Jordan to suppress Palestinian fighters. Pakistan Army is a mercenary force, once butchered 25,000 Palestinians – India Today  


Thursday, October 30, 2025

கர்மன்

நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு செயல்களும் நாம், நம் முன்னோர்கள் செய்த பாவ, புண்ணிய பலன்களைப் பொறுத்தே அமைகிறது. முற்பிறவிப்பலனைத் தான் 'கர்ம வினை' என்கிறோம். "கர்மாவே வாழ்வைத் தீர்மானிக்கிறது. ஏதோவொரு கட்டத்தில் கர்மாவே வாழ்வு என்றாகிறது. கர்மன் எல்லார் மனங்களின் உள்ளடுக்குகளிலும் எளிதாக நுழைந்து வெளியேறுகிறது" என்பதாகச் செல்கிறது இந்தப் புதினம்.

கதையின் காலகட்டம் விடுதலை பெறுவதற்கு முன்பு என்பதால் அதன் தொடர்பில் பல காட்சிகள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையே இருந்த சாதி அவலம். ஈவேராவைத் தெரிந்து வைத்திருந்த பிராமணனுக்கு சமூக நீதியை நிலைநாட்டப் போராடிய 'நாராயண குரு'வைத் தெரிந்திருக்கவில்லை என்ற போராளியின் எள்ளல். அனைத்துச் சாதியினரும் இணைந்து பள்ளிகள் துவங்க எடுக்கும் முயற்சிகள். நாட்டின் விடுதலைக்காகத் தலைமறைவு வாழ்க்கையில் நேதாஜி படையினர். காந்தியைப் போற்றுபவர்கள். செல்வந்தர்களின் பாலியல் அத்துமீறல்கள். பழிபாவங்கள் என்று பலதையும் தொட்டுச் செல்வதாலும் வட்டார மொழி வழக்கின் சம்பாஷணைகளாலும் வாசிக்க மிகச் சுவாரசியமாக இருக்கிறது.

கதாபாத்திரங்களின் பெயர்களை நினைவில் வைத்திருக்க வேண்டும். திடீரென்று இது எந்த ராவ் என்று குழம்பிவிடுகிறது :) கடைசி பாகத்தில் தான் மர்ம முடிச்சுகள் விலகி பலவும் புரிகிறது. "நல்லா கொடுக்கிறாங்கய்யா டீடெயில்ஸு" என பல இடங்களில் தோன்றினாலும் எப்படி இப்படி எழுதியிருக்கிறார் என்று ஆச்சரியப்பட வைக்கிறது. தற்பொழுது புழக்கத்தில் இல்லாத ப்ளெஷர் கார், பட்டணம் பொடி, ட்ரங்க் பெட்டி, சாணார்ப் பையன் போன்ற வார்த்தைகளை வாசிக்கையில் இந்த தலைமுறைக்குப் புரியுமா என்று யோசித்தேன்.

கன்னி தெய்வத்தை வணங்கி வந்த வீட்டில் தீய செயல்கள் தொடங்கும் வேளையில் அடுத்த சந்ததியினர் அதன் பாரத்தைச் சுமக்கத் தொடங்கிவிடுகிறார்கள் என்று கர்மாவைத் தீர்மானிக்கும் கர்மன் கூறுவதாக எழுதியுள்ளார் ஆசிரியர். கெடுதல்களைச் செய்பவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பது போல தோன்றினாலும் அவர்களும் ஒரு காலகட்டத்தில் அலைக்கழிக்கப்படுவார்கள். அவர்களின் தீய செயல்களால் அடுத்தடுத்த தலைமுறையில் எந்தத் தவறும், கெடுதலும் செய்யாதவர்கள் கூட துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது. வாசிப்போரை ஒருகணம் நிறுத்தி யோசிக்க வைக்கிறது.

ஒரே நாளில் 'கர்மன்' புதினத்தை வாசித்து முடித்தேன். என்னிடம் இருக்கும் கெட்ட பழக்கம் என்னவென்றால் ஒரு புத்தகத்தை வாசித்து பிடித்து விட்டால் அதை முடிக்கும் வரை வேறு வேலைகளில் கவனம் செலுத்த மாட்டேன். அப்படித்தான் இந்த நாவலை வாசிக்கும் பொழுதும் நடந்தது. ஆசிரியர் ஹரன் பிரசன்னா இதற்கு முன்பு எழுதிய 'மாயப் பெரு நதி' புதினமும் நல்லதொரு வாசிப்பனுபவத்தைக் கொடுத்தது. இதுவும் அப்படியே.






  

தென்கொரியப் பயணம்-5: சோ(வ்)லுக்குக் குட்பை

 தென்கொரியப் பயணம்


சோலில் (Seoul) இருந்த முதல் இரு நாட்களுமே இனிமையான அனுபவத்தைக் கொடுத்திருந்தாலும் மூன்றாவது நாளன்று நாடே ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அதிபர் மீதான தீர்ப்பிற்காக நாங்களும் காத்திருந்தோம். சப்வே-க்களை மாலை வரை மூடி விட்டிருந்தார்கள். மெதுவாக வெளியில் கிளம்பலாம் என்று காலை உணவை முடித்து விட்டு பத்துமணிவாக்கில் நடையை ஆரம்பித்தோம். நாங்கள் இருந்த தெருப்பகுதியில் கடைகள் மூடி ‘வெறிச்சென்று’ இருந்தது. மேகமூட்டம் வேறு.

“எனக்கென்ன மனக்கவலை” என்று சுற்றுலாவினர் கூட்டம் கைகளில் குடைகளோடு கிளம்பிவிட்டிருந்தார்கள். உணவுக்கடைகள் சில திறந்து வியாபாரமும் கனஜோராக நடந்து கொண்டிருந்தது. கூட்டம் கூட்டமாக பேருந்துகளில் இருந்து போராட்டத்தில் கலந்து கொள்ள இரு கட்சியினரும் கொடிகளுடன் இறங்கிக் கொண்டிருக்க, கலவரங்களை எதிர்பார்த்து காவல்படையினர் கூட்டம் வேறு. காட்சிகள் எல்லாம் மிரட்டலாகத்தான் இருந்தது! அந்தக் கூட்டத்திற்குள் நுழைந்து என்ன தான் நடக்கிறது? பார்த்து விட்டு வரலாம் என்று கவனமாக மூன்று தெருக்களைக் கடந்தால் பெரிய மேடையில் கட்சித்தலைவர்கள் போலிருந்தவர்கள் வீராவேசமாக பேசிக்கொண்டிருந்தார்கள். தென்கொரிய கொடியுடன் அமெரிக்க கொடியும் இருக்கவே அவர்கள் எந்தக் கட்சியினர் என்று புரிந்து விட்டது.

தெருமுனை கட்சிக்கூட்டம் கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டிருந்தாலும் நீதிமன்றத்திற்கு அருகில் இருந்ததால் தீர்ப்பு வந்தவுடன் எந்நேரமும் கலவரம் நடக்கலாம் போன்றதொரு பதட்டம் நிலவியதை உணர முடிந்தது. எதற்கு வம்பு என்று உடனே எதிர்திசையில் நடக்க ஆரம்பித்தோம். வானளாவி நிற்கும் நகரின் அழகிய கட்டடங்களை வேடிக்கை பார்த்தபடி அமைதியான தெருக்களைக் கடந்து ‘யோங்டோங்’ பகுதிக்கு வந்து சேர்ந்தோம்.     

உலகளாவிய ஃபேஷன் பிராண்டுகள், கே-ஃபேஷன் பொட்டிக்குகள், யூனிக்லோ, ஜாரா, எச் & எம்,கே-பியூட்டி & ஸ்கின்கேர், கே-பாப் பொருட்கள், பாரம்பரிய சிற்றுண்டிகள், பாத்திரங்கள் விற்கும் பிரபலமான கடைகள் நிரம்பிய தெருக்கள் என அது ஒரு மாய உலகமாக இருக்கிறது! ஷாப்பிங் செல்ல விரும்புபவர்களுக்கு ஏற்ற பகுதி அது. அங்கு கிடைக்காத பொருட்களே இல்லை. நகரின் மறுபகுதியில் நடந்து கொண்டிருக்கும் கட்சிக்கூட்டத்திற்குச் சம்பந்தமில்லாத புது உலகமாக ‘துறுதுறு’ வென்று இருந்தது.

அந்நாட்டுப் பெண்கள் சருமத்தைப் பராமரிக்க நிறைய மெனக்கெடுகிறார்கள் என்பதை நிரூபிக்கும் வண்ணம் விதவிதமான க்ரீம்கள்(தூங்குவதற்கு முன், பின், காலை, மாலை, வெளியில் செல்லும் பொழுது, இளம்பெண்களுக்கு, வயதான பெண்களுக்கு என்று டிசைன் டிசைனாக) விற்கும் கடைகள், முகத்திருத்தம் செய்யும் கிளினிக்குகள் என்று வரிசையாக இருந்தன. யாருக்குத்தான் தன்னை அழகுபடுத்திக்கொள்ள ஆசை இருக்காது? ஆனால், கொரியர்களுக்கு அதிகம் போல! சுற்றுலாவினரைக் குறிவைத்து அழைக்கிறார்கள். வெளிநாட்டினருக்குச் சிறப்பு சலுகைகளும் இருக்கின்றன. கடைகளில் கூட பெண்கள் தான் அதிகம் வேலை செய்கிறார்கள். எப்படித்தான் இந்தப் பெண்களின் முகங்கள் இப்படி ‘பளிச்சென்று’ சுருக்கங்களே இல்லாமல் ‘மொழுமொழுவென்று’ இருக்கிறதோ! ஏங்க வைத்து எப்படியோ பைகள் நிறைய வாங்க வைத்துவிடுகிறார்கள் அம்மணிகள்😐

அதுபோலவே, நிறைய வகை தின்பண்டங்களை வண்ண வண்ண பாக்கெட்டுகளில் அடைத்து விற்கிறார்கள். பெரிய கடைகளை விரித்து சகட்டுமேனிக்கு விற்பதை வாங்குவதும் சுற்றுலாவினரே! அம்மாடி!எதை வாங்குவது என்று தெரியாமல் திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தோம். இதற்காகவே இரண்டு பெட்டிகளை எடுத்துக்கொண்டு வரவேண்டும் போல!

அந்தத் தெருவைக் கடந்து மூன்று மாடிக் கட்டடத்திற்குள் அழைத்துச் சென்றாள் என் செல்லம். கொரியன் தொடர்களில் எனக்குப் பிடித்தது பெண்கள் அணியும் காதணிகள். சிறிதாக இருந்தாலும் அத்தனை அழகாக இருக்கும். பார்க்கும் பொழுதெல்லாம் இதற்காகவே கொரியா செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பேன். அவளும் அதை நினைவில் வைத்திருந்து அழைத்துச் சென்ற இடம் தான் ‘NYUNYU’. மலிவுவிலை ஃபேஷன் அணிகலன்கள் விற்கும் கடை! அவ்வளவு தான் அடுத்த இரண்டு மணிநேரத்திற்கு எதை வாங்குவது எதை விடுப்பது என்று தெரியாமல் பிடித்ததை கூடைகளில் போட்டுக் கொண்டே வந்தோம். ஒரு கட்டத்தில் போதும் என்று தோன்றியவுடன் அமர்ந்து என்னென்ன வாங்கியிருக்கிறோம் என்று இருவரும் பார்த்துக் கொண்ட பொழுது, “அம்மா, எனக்கு இது பிடிச்சிருக்கு என்று என் கூடையில் இருந்த சில காதணிகளை அவள் கூடையில் மாற்றிக்கொண்டாள்😕 இருவரும் ஒரே மாதிரியான காதணிகளை நிறைய வாங்கியிருந்தோம்😃 அடுத்த தளத்தில் கைப்பைகள், க்ளிப்புகள், தொப்பிகள், கழுத்து செயின்கள், ஆடைகள் என்று எனக்கு அத்தனை ஆர்வமில்லாத பகுதி. அதற்கும் மேல் தளத்தில் தான் பில் போடும் கவுண்டர் இருந்தது. காத்திருந்த நீண்ட வரிசையில் நாங்களும் ஐக்கியமானோம்.

அங்கிருந்து நடந்து நடந்து பல தெருக்களில் இருந்த கடைகளைப் பார்ப்பதும் உள்ளே நுழைவதும் வாங்குவதுமாய் கிட்டத்தட்ட ஐந்து மணிநேரங்கள் போனதே தெரியவில்லை. கால்கள் கெஞ்ச, பசிக்க வேறு ஆரம்பித்து விட்டது. என் முகத்தைப் பார்த்தவுடன் புரிந்து கொண்டவளாக, அருகில் இருந்த மசாஜ் நிலையத்திற்குச் சென்று ஒரு மணிநேரத்திற்கு நன்றாகக் கால் மசாஜ் செய்து கொண்டோம். சுகமாக இருந்தது. விட்டால் அங்கேயே தூங்கியிருப்பேன். டிப்ஸ் கலாச்சாரம் இல்லை. ஆனால் கொடுத்தால் வாங்கிக் கொண்டு சிரித்துக்கொண்டே தலைகுனிந்து “கம்சாமிதா” சொல்கிறார்கள்.

கடைகளில் ஈரக் குடைகளை உலர்த்த, கொண்டு செல்லும் தேநீர்க் கப்புகளை வைக்க என்று தனித்தனி இடங்கள் இருக்கிறது. நல்ல ஐடியா! அமெரிக்காவில் கூட இப்படியெல்லாம் கிடையாது.

சியோலின் நவீன வாழ்க்கை முறை, ஷாப்பிங் மோகம், அழகு கலாச்சாரம், உணவு என அனைத்தும் ஒன்றிணைந்த இடம் மியோங்டாங். மாலையில் உணவுச் சந்தையாக அவதாரமெடுக்கிறது. ஆக, கூட்டத்திற்குப் பஞ்சமில்லை. இது ஒரு சந்தைத் தெரு மட்டுமல்ல, கொரியாவிற்குச் செல்லும் ஒவ்வொரு பயணியும் ஒரு முறையாவது அனுபவிக்க வேண்டிய இடமும் கூட!

 அங்கிருந்து எனக்குப் பிடித்த ‘Bibimbap’ உணவைச் சுவைக்க மிஷெலின் ஸ்டார் வாங்கிய ‘Mokmyeoksanbang’ உணவகத்திற்கு அழைத்துச் சென்றாள் மகளரசி. மணி நான்கு என்பதால் கூட்டம் இல்லை. உள்ளே நுழையுமுன் கியோஸ்க்கில் ஆர்டர் செய்து விட்டால் போதும். உள்ளே சென்றதும் அமர வைத்து விட்டு டீ எடுத்துக் கொள்ளுமாறு கூறிவிட்டார் சர்வர்😮

முதன்முதலில் Bibimbap சாப்பிடப் போகிறேன். ஏழு வகையான சமைத்த கீரை, காளான்கள். ஒரு பெரிய கிண்ணத்தில் சோறு. எல்லாவற்றையும் கலந்து gochujang மிளகாய் சாஸ் சேர்த்துச் சாப்பிட்டால் ‘ஜிவ்வ்வ்’வென்று இருக்கிறது. எளிமையான சுவையான உணவு. இறைச்சி வேண்டும் என்றால் சேர்த்துக் கொள்ளலாம். பாதி வெந்த முட்டை வேண்டுமென்றால் அதுவும் சேர்த்துச் சாப்பிடலாம். எப்படிச் சாப்பிட்டாலும் யம்மி யம்மி யம்மி😋 உணவை அழகாக சிறுசிறு கிண்ணங்களில் வைத்துப் பரிமாறி ஒரு கலையாக கொண்டாடி உண்பது எத்தனை அழகு! இப்படி உட்கார வைத்துச் சமைத்துப் போட்டால் சைஸ் 0 ஆகிவிடலாம். எனக்கில்ல எனக்கில்ல…😁 ‘Bon Appetit,YourMajesty’, ‘Tastefully Yours’ தொடர்களில் கூட இந்த உணவைக் காண்பித்தார்கள்😍

ஷாப்பிங் செய்தாயிற்று. வயிறும் நிறைந்து விட்டது. இனி விடுதிக்குத் திரும்பி பைகளை வைத்து விட்டு ‘Songpa District’ல் மக்கள் குடியிருப்பு பகுதிக்குச் சென்று பார்க்க ஆசை. சியோலின் தென்பகுதி இது. விடுதியிலிருந்து பொடிநடையாக சப்வே சென்று அங்கிருந்து ஒரு மணி நேர ரயில் பயணம். அப்பொழுதே மாலை 5 ஆகிவிட்டிருந்தது. களைத்த முகத்துடன் வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பும் கூட்டம். மனம் மீண்டும் நியூயார்க் நகர சப்வே காட்சிகளைக் கண்முன் கொண்டு வந்தது.

ஆண்கள் அனைவருக்கும் தலைநிறைய முடி. இங்கு தலைக்கு மை அடிக்காமல் சால்ட் அன்ட் பெப்பர் ‘தல’ ரசிகர்கள் அதிகம் போல! பற்களுக்கு கிளிப் மாட்டும் அமெரிக்க கலாச்சாரம் கூட அதிகம் காணவில்லை. ஒருவகையில் இயற்கையாகவே தெரிந்தார்கள். பெண்கள் மட்டும் தோல் மினுமினுக்க கிரீம்கள் போட்டிருப்பது தெரிந்தது. வயதானவர்கள், கர்ப்பிணி பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டிருந்த இருக்கைகள் காலியாக இருந்தாலும் யாரும் அமரவில்லை.
                                            


வடக்கு தெற்காக சியோலில் ‘ஹான்’ ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. அதைச்சுற்றி குடியிருப்புகள், பூங்காக்கள் என்று சுற்றிப்பார்க்க நல்ல இடமாகத் தெரிந்தது. பல கொரியன் தொடர்களிலும் பார்த்த ஞாபகம். வழியில் இரண்டு பல்கலைக்கழக நிறுத்தங்களில் காளையர், கன்னியர் கூட்டம்! அமெரிக்கன் பிராண்ட் ஷூக்கள், நார்த்ஃபேஸ் ஜாக்கெட்கள், ஐபோன் பிரபலமாக இருக்கிறது. இங்கு நாங்கள் கொரியன் தொடர்களை ஆங்கில சப்டைட்டிலோடு பார்ப்பது போல, அமெரிக்கன் தொடர்களை சிலர் கொரியன் சப்டைட்டிலில் பார்த்துக் கொண்டு அவரவர் உலகத்தில் பயணிகள். அதிக உயரம் இல்லாத மக்கள். கலர்கலராக தலைக்கு வண்ணம் அடிக்காத, இடுப்புக்கு கீழே பேன்ட் சரிந்து போகாத, உரக்க பேசி, ஆடிக்கொண்டிராமல் அமைதியோ அமைதியாக பயணிக்கிறார்கள். கே-பாப் பாதிப்பை சில ரசிகர்களிடம் காண முடிந்தது. என்ன? இறுக்கமாக உடை அணிவது அங்கு நாகரிகம் இல்லை போல. லூசாக அவர்கள் அளவுக்கு மீறிய சைசில் அணிந்திருந்தாலும் கண்ணியமாக மிக நேர்த்தியாக உடையணிந்த பெண்களைக் காண முடிந்தது.

நாங்கள் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் மொத்த மக்களும் அங்கே இறங்குவது போல பெருங்கூட்டம் இறங்கியது. சாலை முழுவதும் மக்கள் கூட்டம். உயரமான வெள்ளை நிற அடுக்குமாடி குடியிருப்புகள்! அங்குமிங்குமாய் குழந்தைகளுடன் சில குடும்பங்கள். இப்பொழுதுதான் குடும்பங்களைக் காண முடிந்தது!


                                      


இங்குதான் பிரபலமான ‘Seokchon Lake’, ‘Lotte World Tower’, புராதன இடங்களும் உள்ளன. முதலில் ஏரியைச் சுற்றி இருக்கும் ‘cherry blossoms’ பார்த்து விட்டு வரலாம் என்று அங்கே கிளம்பினோம். சில வாரங்கள் மட்டுமே இந்த மலர்கள் பூத்துக்குலுங்கும் அழகைக் காண முடியும் என்பதால் வார நாள் என்றாலும் நல்ல கூட்டம். பாதுகாப்பிற்கு காவலர்களும் அங்கிருந்தனர். கைகளைக் கோர்த்துக் கொண்டு இளமையான கூட்டம்! வெள்ளை, பிங்க் செர்ரி மரங்களுக்கு கீழே நின்று கொண்டு கன்னத்தை கைகளால் தாங்கியபடி, அன்பைச் சொல்லும் விதமாக இருவிரல்களை நீட்டிக் கொண்டு படங்கள் எடுக்கும் பெருங்கூட்டத்தை வேடிக்கை பார்த்தபடி ரம்மியமான ஏரியைச் சுற்றி வந்தோம்.

கலைநிகழ்ச்சிகளும் நிகழ்ந்து கொண்டிருந்தது. ஒரு பெண் பாடிக்கொண்டிருந்தாள். இசைக்கு மொழியேது? தொடர்களின் பின்னணியில் வரும் இசையைக் கேட்பது போல இனிமையாக இருந்தது. சிறிது நேரம் அதையும் ரசித்து விட்டு வெளியேறினோம். மெல்ல இருள் கவிழ, விளக்குகள் மின்ன வானளாவிய ‘Lotte World Tower’கட்டிடத்தைப் பார்த்துக் கொண்டே மீண்டும் ரயிலேறி ‘Hongdae’ பகுதிக்கு வந்தால் தள்ளுவண்டிகளில் மணக்கமணக்க உணவுகள். இப்பொழுது தான் கொரியன் உணவுகள் சாப்பிட தெரிந்து விட்டதே! நொறுக்கிக் கொண்டே தெரு வலம் சென்றோம்.

                               



இங்கும் வாங்குவதற்கு ஏகப்பட்ட தரமான ஆடைகள், பொருட்கள் இருக்கிறது. நல்ல கூட்டம். ‘ஜிகுஜிகு’வென ஜொலிக்கும் கட்டிடங்கள். சாலைகளில் போக்குவரத்து என்று ‘ஜேஜே’ என்றிருக்கிறது. சில மணிநேரங்கள் போனதே தெரியவில்லை. ரயிலைப் பிடிக்க நுழைந்தால் அத்தனை உயரமான 60 டிகிரி கோணத்தில் subway escalator பார்த்ததே இல்லை!

நாங்கள் தங்கியிருந்த விடுதிஅருகே இரவு உணவுக்கடைகளில் ஜோராக வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. எங்களுக்குப் பிடித்த ஷ்ரிம்ப் டம்ப்ளிங்ஸ் வாங்கிக் கொண்டு அறைக்குச் சென்றோம். அன்றைய இனிமையான நாளை அசைபோட்டபடி வாங்கிய பொருட்களை பெட்டிகளில் எடுத்து வைத்தாயிற்று. நாளை ஓரிரு பகுதிகளுக்குச் சென்று விட்டால் சியோல் பயணம் முடிந்து விடும். என்ன? மழை நாள். சரி! சியோல் தெருக்களை மழையில் பார்த்தமாதிரியும் ஆச்சு என்று மறுநாள் எழுந்து காலை உணவை முடித்துக் கொண்டு 10 மணிக்கு எங்கள் பயணம் ஆரம்பித்து விட்டது. விடுதியிலேயே இரு பெரிய குடைகளைக் கொடுத்து விட்டார்கள். அப்புறமென்ன?

                                           


முதலில் நாங்கள் சென்றது ‘ஹனோக் வில்லேஜ்’ல் இருக்கும் பிரபலமான ‘சால்ட் பிரட்’ கடைக்கு. “ரொம்ப ஃபேமஸ் இங்கே” என்று மகள் அழைத்துச் சென்ற கடையின் முன் குடைகளைப் பிடித்துக் கொண்டு நீண்ட வரிசை காத்திருந்தது. நாங்களும் ஐக்கியமானோம். ஒரு பாக்கெட்டில் நான்கு fluffy சால்ட் பிரட் கொடுக்கிறார்கள். ஜப்பானியர் உணவு போல. எனக்கென்னவோ croissantன் கொரியன் உடன்பிறப்பு போல தெரிந்தது. வெண்ணெயில் செய்த பதார்த்தம். மேலே உப்பு வேற தூவி, கமகம வாசனையுடன் வாயிலே வைத்தவுடன் கரைந்து போகிறது. யம் யம் யம். அங்கு செல்கிறவர்கள் தவறவிடக்கூடாது.

அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் நகைக்கடைகள் இருக்கும் தெருவுக்குள் நுழைந்தோம். விடுவானேன்? உள்ளே சென்று பார்த்தோம். நன்றாகத்தான் இருந்தது. விலை அதிகமோ?? இது, அது என்று எல்லாவற்றையும் பார்த்து விட்டு இன்னும் கொஞ்சம் நேரமிருந்தால் எதையாவது வாங்கத் தோன்றிவிடும். கம்சாமிதா சொல்லி விடு ஜுட்.

 
                              



அங்கிருந்து பல குறுகிய, சுத்தமான தெருக்களைச் சுற்றி வெவ்வேறு கடைகளில் ஏறி இறங்கி கடைசியில் ஒரு சந்தைக்குள் நுழைந்தால் ஆஹா! அது ஒரு தனி உலகமாக அல்லவா இருக்கிறது? அழகாக சாம்பிள்கள் கொடுத்து வாங்க வைத்து விட்டார்கள். நம் ஊரில் கிடைப்பது போலவே கடலை, பொரி, வெல்லம்/சர்க்கரை, எள் சேர்த்த பதார்த்தங்கள். அதிக இனிப்பு இல்லை ஆனால் சுவையாக இருந்தது.

சந்தையில் விதவிதமான மீன்களை வைத்திருந்தார்கள். நாம் கேட்கும் மீனை சமைத்துக் கொடுக்கிறார்கள். ஆனால் தாய்லாந்தைப் போல உணவில் fish sauce சேர்த்து குமட்டும் வாசனை எல்லாம் இங்கில்லை. இவர்களுடைய உணவு பெரும்பாலும் நிறைய கீரை வகைகளுடன் பொரித்த இறைச்சி, மீன் வகைகள் இல்லையென்றால் சூப்பில் கொதிக்க கொதிக்க டம்ப்ளிங்ஸ் தான். கருவாடும் விற்கிறார்கள்! பாத்திரங்கள், கார்ன் ஹஸ்க்கில் செய்த மிருதுவான பெட்ஷீட்கள் விற்கும் கடைகளுக்குள் நுழைந்தால் வாங்காமல் வரமுடியாது. பெட்டியில் எடுத்துச் செல்வதற்குத் தோதாக பிரத்தியேகமாக சுருட்டி கொடுக்கிறார்கள். நாங்களும் வாங்கிக் கொண்டோம். வியாபாரிகள் அனைவரும் சினேகமாக இருக்கிறார்கள்.

                        


அப்படியே சந்தையின் மறுபக்கத்தில் இருக்கும் உணவுச் சந்தைக்குள் நுழைந்தால் ஒவ்வொரு கடையைச் சுற்றிலும் இருக்கைகள் போடப்பட்டு சுடச்சுட அங்கேயே அமர்ந்து சாப்பிட முடிகிறது. வெறும் இரண்டு குச்சிகளை வைத்து சாப்பிட்டு முடித்து விடுவதால் ஈரமோ, குப்பைகளோ இல்லை. வெறும் கோப்பைகள், தட்டுகள், சிறு கரண்டிகள், குச்சிகள், வாய் துடைத்துக் கொள்ள டிஸ்ஸு பேப்பர்கள். அவ்வளவு தான். பெரிய பெரிய அண்டாக்களில் சூப் கொதித்துக் கொண்டிருக்க, அரிசி மாவில் செய்த நூடுல்ஸ் நம் கண் முன்னே செய்யும் நெட்ஃபிளிக்ஸ் பிரபலமான பாட்டியின் கடைமுன் அத்தனை நீண்ட வரிசை! கைகளில் கேமராக்களுடன் காத்திருந்த கூட்டத்தில் சேர்ந்து நின்று கொண்டோம். 10 நிமிடங்களில் இருக்கைகள் கிடைக்க, சாப்பிட்டு முடித்தோம். நல்ல கூட்டம்!

 பல கடைகளைக் கடந்து வாசலுக்கு வர, அங்கே கொரியன் டோனட்ஸ் விற்றுக் கொண்டிருந்தார்கள். அதுவும் சுடச்சுட. விடுவோமா? ஆறு மணிக்கு விடுதியை அடைந்து வாங்கிய பொருட்களை பெட்டிகளில் நிரப்பிக் கொண்டோம். பேசாமல் இன்னொரு பெட்டியை வாங்கி நிறைய ஷாப்பிங் செய்திருக்கலாம் தான். ஆசைக்கு அளவேது?

இரவு 8.30வாக்கில் கடைசியாக ஒருமுறை தெரு உணவுகளை சுவைக்க ஆசைப்பட்டு ஹான் அறிமுகப்படுத்திய அத்தனை இனிப்பு பண்டங்களையும் வாங்கிச் சாப்பிட்டோம். கூடவே ஷ்ரிம்ப் டம்ப்ளிங்ஸ்ம். நன்றாக சாப்பிட்டு விட்டு நாட்கள் சென்றதே தெரியாமல் ஊர்களைச் சுற்றியதை எண்ணி கனவை நனவாக்கிய மகளுக்கு நன்றி கூறிவிட்டு, மறுநாள் விமானநிலையம் செல்ல காலை 5.30மணிக்கு வண்டியை விடுதியின் மூலம் புக் செய்து கொண்டோம்.

                          

 

மதுரையைப் போலல்லாது சியோல் சாலைகள் ஐந்து மணிக்கெல்லாம் விழித்துக் கொண்டு விடுகிறது. மெல்ல மெல்ல இருள் விலக, போக்குவரத்தும் கூடியது. பை,பை சியோல் என்று அடுக்குமாடி கட்டிடங்களைப் பார்த்துக் கொண்டே இன்சியான் பன்னாட்டு விமானநிலையம் நோக்கிய பயணம் ஆரம்பித்தது. சியோலில் இருந்து 30மைல் தொலைவில் இருந்தாலும் போக்குவரத்து நெரிசல் நன்றாகவே இருந்தது. கிட்டத்தட்ட ஒரு மணிநேர பயணத்தில் வழியில் அழகான காடுகளும் காட்சிகளும் இனிமையான நினைவுகளும் கூடவே பயணித்தது.

காலை 9.30க்கு விமானத்தில் ஏறியாயிற்று. அணிவதற்கு காலணிகள் கொடுத்தார்கள்! அருகில் அமர்ந்திருந்த ஃபிலிப்பினோ தம்பதிகளில் கணவர் மனைவியைவிட இளமையானவராகத் தெரிந்தார். புறப்பட்ட ஒருமணிநேரத்தில் சூப்பர் சாப்பாடு கொடுத்தார்கள். சாப்பிட்டு விட்டு எப்படித் தூங்கிப்போனேன் என்றே தெரியவில்லை. ஏதோ வாசம் வருவது போல இருந்தது. பனினி என்று ஒரு ஸ்னாக்ஸ். ப்ரெட்டில் சீஸ், காய்கறிகள் வைத்து சிற்றுணவு. ஐந்து மணிநேரங்கள் கழித்து காலைஉணவு. அதுவும் சுவையாக இருந்தது. 

நியூயார்க்கிலிருந்து செல்லும் பொழுது 14 மணிநேரங்கள் என்றால் திரும்பி வரும்பொழுது எதிர்திசையில் காற்றை எதிர்த்து வர, கூடுதல் ஒரு மணிநேரம். கனடா மீது பறக்கும் பொழுது மழைமேகங்கள் முட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்தது. இத்தனை குலுக்கலான விமான பயணத்தை இதுவரை நான் பார்த்திருக்கவில்லை. ஒரு கட்டத்தில்விமானம் மேலேறுவதும் தடாலென்று கீழிறங்குவதும், இருக்கைகள் இடமும் வலமுமாய் ஆடிச் சறுக்குவதுமாய் குலுங்கி குலுங்கி எந்நேரம் என்னாகுமோ என்ற பீதியைக் கிளப்பிவிட்டது. இதுவரையில் இப்படியான வான்பயண அனுபவம் இல்லாததால் கவலையும் பயமும் வந்து விட்டது. என் அருகில் அமர்ந்திருந்த பெண் வேறு வாந்தி எடுத்துக் கொண்டே இருந்தாள். விமானம் ‘சடக்’கென்று மேலெழும்ப, வயிற்றை பிரட்டி எடுக்க, மொத்த பயணிகளும் ‘ஆஆஆ’வென்று அலற, ஒருகட்டத்தில் அவ்வளவுதான் என்று சொல்லுமளவிற்கு ஆட்டம். மேகத்திற்குள் மாட்டிக்கொண்டு விட்டோம் போலிருக்கு. முதலில் அழுகை. பின் வருவதை ஏற்றுக்கொள்ள வேண்டியது தான் என்று சமாதானப்படுத்திக் கொண்டு கண்ணை மூடிக்கொண்டு ம்ருத்யுஞ்சய மந்திரத்தைச் சொல்லி வேண்டிக் கொண்டே வந்தேன். சில பல நிமிடங்களுக்குப் பிறகு கண்டத்திலிருந்து தப்பியது போல விமானம் இயல்பு நிலைக்குத் திரும்ப, அனைவரும் கைதட்டினார்கள். ‘கண்ல மரண பயத்தைக் காமிச்சிட்டியே பரமா’. பத்திரமாக நியூயார்க் விமானநிலையத்தில் இறங்க, மகனைப் பார்த்ததும் நிம்மதியாக இருந்தது.

சியோல் தந்த இனிமையான அனுபவத்துடன் ‘அந்த சில நொடிகள்’ விமான ஆட்டம் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அனுபவமாகி விட்டது.

பல விஷயங்களை இந்தப்பயணத்தில் கற்றுக் கொண்டாலும், முக்கியமாக ‘சியோல்’ என்பதை ‘சோல்’ என்று தான் உச்சரிக்க வேண்டும் என்றும் தெரிந்து கொண்டேன். மொத்தத்தில் ‘சோல்’ பயணம் மனதிற்கு இனிமையான, மிக நெருக்கமான வாழ்நாள் அனுபவம். 

***

பொறுமையாக பயணக்கட்டுரைகளை வாசித்த அன்பர்கள் அனைவருக்கும் ‘கம்சாமிதா’🙏🙏🙏


சலிக்காத தொடர்கள்

ராமாயணம், மகாபாரதம் இதிகாச கதைகளை எத்தனை முறை வாசித்தாலும், பார்த்தாலும் சலிப்பதே இல்லை. முதன்முதலில் தொன்னூறுகளில் 'ராமாயணம்' தொடரா...