Sunday, September 21, 2025

தென்கொரியப் பயணம் - சியோல் அனுபவங்கள்

சொல்வனம் இதழ்-350, 14-செப்-2025ல் வெளியான பயணக்கட்டுரைத் தொடர், தென்கொரியப் பயணம் – சியோல் அனுபவங்கள்


நான் பிறந்து வளர்ந்தது தூங்கா நகரத்தில். தற்போது வாழும் மாநிலத்தில் எனக்குப் பிடித்த நகரமும் அப்படித்தான் என்றால் சென்ற இடத்திலும் கூடவா? இரவில் உயிர்ப்புடன் இருந்த சியோல் நகரத்தைச் சுற்றிப் பார்க்கும் ஆவலுடன் அதிகாலையிலேயே எழுந்து தயாரானோம். தங்கியிருந்த விடுதியில் காலை உணவு 9.30 மணி வரை மட்டுமே பரிமாறப்படும் என்பதால் 'டான்' என்று ஏழரை மணிக்கே ஆஜராகி விட்டோம். பெரிய எழுத்துகளில் "உணவை வீணாக்காதீர்கள்" என்று போட்டிருந்தார்கள். சாலட், வேகவைத்த முட்டை, பழங்கள், பிரட், ஜாம், பட்டர், பழரசம், காஃபி, டீ என்று எளிமையான காலைச் சாப்பாடு. அத்தனை சுவையாக இருந்தது. அமெரிக்க விடுதிகள் இவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

'ஜெஜூ' தீவில் எங்களைத் தவிர மற்றவர்கள் உள்ளூர் ஆட்கள். இங்கோ, அனைவருமே சுற்றுலாவினர் தான். பெரும்பாலும் மேலை நாட்டினர். இங்கும் நாங்கள் இருவர் மட்டும் தனித்துத் தெரிந்தோம். வந்தவர்கள் அனைவரும் தேவையானதை மட்டுமே தட்டில் வைத்துக் கொண்டு மிச்சம் வைக்காமல் சாப்பிட்டார்கள். வயதான தம்பதியர் பழங்கள், காய்கறிகளை அழகாக நறுக்கி வைத்துக் கொண்டே இருந்தார்கள். கொரியன் மொழியில் வணக்கம் வைத்தவுடன் அங்கிருந்தவர்கள் நன்றாகவே கவனித்துக் கொண்டார்கள். மேலை நாட்டினர் சிலர் சரளமாக கொரியன் மொழியில் பேசுவதைக் கேட்க ஆச்சரியமாக இருந்தது! நன்றி சொல்லி சப்வே ஸ்டேஷன் செல்ல வெளியில் வந்தால் ஏப்ரல் மாத 'ஜில்ல்ல்ல்ல்ல்' குளிர் கன்னத்தை முத்தமிட்டுச் சென்றது.

                                            
                                                        
ரயிலில் கூட்டம் அவ்வளவாக இல்லை. ஏறியவர்கள் பெரும்பாலும் அரண்மனை நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டு ஓடினார்கள். நாங்களும் சேர்ந்துகொண்டோம். அன்று முதலில் நாங்கள் சென்ற இடம், நகரின் மையத்தில் இருக்கும் பிரபலமான 'சாங்க்டியோக்குங்' அரண்மனை(Changdeokgung Palace). அருகே செல்ல செல்ல கூட்டம்! அய்யோடி! இத்தனை கூட்டமா? அங்கே வாடகைக்கு விற்கும் ராஜ பாரம்பரிய உடைகளை அணிந்துகொண்டு சுற்றுலாவினர் ராஜா, ராணியாக வலம் வந்துகொண்டிருந்ததைப் பார்க்க கொள்ளை அழகு. என்ன? கடைக்குச் செல்ல, உடை மாற்றிக்கொண்டு வர நேரமாகி விடும். அப்பொழுதே மணி 9.15. இன்னும் பதினைந்து நிமிடத்தில் 'change of guards' நிகழ்ச்சி ஆரம்பித்துவிடும் என்று எங்கள் ஆசையை ஒத்தி வைத்துவிட்டோம். மகளுக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான்😒

உள்ளே செல்ல அனுமதிச்சீட்டு வாங்கிக்கொண்டு நுழைந்தால்,வாவ்! தொடர்களிலும் படங்களிலும் மட்டுமே பார்த்து ரசித்த பிரம்மாண்ட அரண்மனை. பார்க்கும் எவரையும் வசீகரிக்கும் கொள்ளை அழகு! அதன் அதிசயமான கட்டிடக்கலைக்காக யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடங்களில் இடம்பெற்றுள்ளது. தென்கொரியாவில் இருக்கும் ஐந்து பிரபலமான அரண்மனைகளுள் மிகவும் அழகான அரண்மனை என்றும் அறிந்துகொண்டோம்.
                                                
கால்கடுக்க நின்று சாங்க்தெகுங் அரண்மனையில் காவலர்களின் மாற்றத்தைக் கண்டது கனவுலகம் போல் இருந்தது! ஓடோடி வரும் குதிரைகள், ஆயுதங்களைச் சுமந்த வீரர்கள், வண்ணமயமான உடைகள், கட்டுக்கோப்பான நடைமுறைகள், பாரம்பரிய ஆயுதங்கள், இசை என்று ஒரு விழாவைப் போல காட்சிப்படுத்தியிருந்தார்கள். கடமையாக அனைத்தையும் வீடியோ எடுத்துக் கொண்டோம். கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நின்றதில் அப்பொழுதே கால் வலிக்க ஆரம்பித்து விட்டது. நிகழ்ச்சி முடிந்ததும் உள்ளே சென்று பார்க்க வேண்டிய இடங்களைப் பார்க்கப் பார்க்க இன்பம். ஆசிய ஓவியங்களில் மரங்கள் கொஞ்சம் வித்தியாசமாக கிளைகள் வளைந்து இலைகள் நெருக்கமாக இல்லாமல் தனித்துவத்துடன் இருக்கும். அப்படிப்பட்ட மரங்களைப் பார்த்தோம். செர்ரி மலர்கள் பூத்துக் குலுங்கும் மரங்களின் கீழே நின்று கொண்டு படங்களை எடுக்கக் காத்திருந்தது ஒரு கூட்டம். தோட்டங்களும், குளங்களும், விசாலமான மண்டபங்களும் என்று ஒவ்வொரு இடமும் இயற்கையோடு இணைந்து கண்ணுக்குக் குளிர்ச்சியாக காட்சியளித்தது! நுழைவாயில் மர கோபுரங்களில் சிறிய அளவில் கையால் செதுக்கிய வண்ணமயமான சிற்பங்கள் கவர்கிறது! எத்தனை சிற்பங்கள் இருக்கின்றனவோ அத்தனை சிறப்பும் முக்கியத்துவமும் பெற்றது அந்த மண்டபங்கள் என்றும் தெரிந்து கொண்டோம். கன்பியூசியஸ் தத்துவத்தைப் பின்பற்றிய ஜோசன் வம்சத்தின் முக்கிய அரண்மனையாக இருந்திருப்பதால் பல்வேறு அரச நிகழ்வுகள், கூட்டங்கள், கலாச்சார நிகழ்ச்சிகள் இங்கு அரங்கேறியுள்ளன.
                                    
அரச குடும்பத்தினர் இப்படி நடந்து நடந்தே பொழுதைக் கழித்திருப்பார்கள் போலிருக்கிறது! ஏற்றமும் இறக்கமுமாய் அதுபாட்டுக்குப் போய்க்கொண்டே இருக்கிறது. ஒருகட்டத்தில் இது முடியுமோ என்று சந்தேகமாகவும் இருந்தது! அத்தனை பெரிய அரண்மனை நகரின் மையத்தில் மலைப்பின்புலத்தோடு இருக்க, புதிய கட்டிடங்கள் வாசலின் அருகாமையில் வளர்ந்து நிற்கின்றன. தொன்மையும் புதிதுமாய் இரு வேறு காலகட்டத்தில் பயணிக்க வைத்து அதன் வரலாற்றைச் சாற்றி நிற்கிறது. மிகவும் சுத்தமாக வைத்திருக்கிறார்கள். பொறாமையாக இருந்தது. இவர்கள் எல்லாம் இந்தியா வந்தால் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்? ஆக்ராவைப் போல அழுக்கான ஊரைப் பார்க்கவே முடியாது. உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹாலுக்குச் செல்லும் வழியெங்கும் குப்பைக்கிடங்குகள். யமுனா நதியோ...ஹ்ம்ம்😞 இப்படி நினைவுகள் முன்னும் பின்னும் சென்று வந்து கொண்டே இருந்தன.

அரண்மனையின் ஒவ்வொரு மண்டபத்தைப் பற்றி எழுத ஆரம்பித்தால் தனிக்கட்டுரையாகி விடும். (பிரபலமான கொரியன் தொடர்கள் பலவும் இங்கு எடுக்கப்பட்டுள்ளன. கூகிளாண்டவரிடம் கேட்டால் பட்டியலைக் கொடுப்பார். பார்த்து மகிழுங்கள்😜 )
                                                            அரண்மனையை விட்டு வெளியே வந்தால் ஓங்கி உயர்ந்த அலுவலக கட்டிடங்கள் புதிய நகரத்தைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தன. வேடிக்கை பார்த்தபடி க்வாங்ஹ்வாமுன்சதுக்கத்திற்கு ( Gwanghwamun Square) வந்தடைந்தோம். விசாலமான, சுத்தமான சாலை!பெரிய பெரிய விளம்பர பலகைகளில் வசீகரித்துக் கொண்டிருந்தார்கள் அழகான 'சிக்' மாடல்கள்!

சதுக்கத்தின் மையப் பகுதியில் ஜோசன் வம்சத்தின் நான்காவது அரசர் கிங் செஜோங்-கின் மிகப்பெரிய உருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது. இவர் சிறந்த அரசராக மட்டுமில்லாமல் 'ஹாங்குல்' என்றழைக்கப்படும் கொரிய எழுத்துத்தொகுப்பை உருவாக்கியதற்காகவும் புகழ்பெற்றவர். அவர் கண்டுபிடிக்கும் வரையில் கொரியன்களுக்கு எழுத்து வடிவம் தெரியாதாம்! எழுத்தறிவித்தவன் இறைவன் அல்லவா? அமர்ந்த நிலையில் ஒரு கையை உயர்த்தி மற்ற கையில் புத்தகம் வைத்துள்ள சிலையைச் சுற்றி அறிவியல், தொழில்நுட்பத்தில் அவர் செய்த பங்களிப்புகளை விவரித்துள்ளனர். சாலையோர அழகான நீரூற்று கோடையில் இதமாக இருக்கும். இப்பொழுது அனைவரும் கவனமாக அதைக் கடந்து சென்றனர்.
                                

சதுக்கத்தின் வட பகுதியில் அட்மிரல் ஈசுன்-சின் வாள் பிடித்து நின்ற நிலையில் இருக்கும் பெரிய சிலை இருக்கிறது. சிலையின் அடித்தளத்தில் இரும்புக் கப்பல் (Turtle Ship) மாடல் வைக்கப்பட்டுள்ளது. கொரியர்களின் நீண்ட நெடிய ரண வரலாற்றிற்கு ஜப்பான் காரணம் என்பதை உலகறியும். அவர்களிடமிருந்து மீண்டு வர மக்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி நாட்டுப்பற்றுக் கொண்ட படைத்தலைவராக அரசிற்கும் உறுதுணையாக இருந்தவர் என்பதால் வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறார். கொரியன் தொடர்களைப் பார்ப்பவர்களுக்கு இந்தச் சிலைகளின் பரிச்சயம் நிச்சயம் இருக்கும். 

அங்கிருந்து தென் கொரியாவின் பெரிய புத்தகக் கடை, 'கியோபோ புக் சென்டர்' எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காகச் சென்றோம். அரண்மனை, க்வாங்ஹ்வாமுன் சதுக்கம் என்று கால்கடுக்க சுற்றியபிறகு சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ள சிறந்த இடமும் கூட. விசாலமான அடுக்குமாடி கட்டிடம்! ஆங்கில, கொரிய புத்தகங்கள் என்று நேர்த்தியாக அடுக்கி வைத்திருந்தார்கள். புத்தகம் வாங்க வந்தவர்களும், வேடிக்கை பார்ப்பவர்களும், வாசிக்க வந்தவர்களுமாய் சிறு கூட்டம். அங்கேயே அமர்ந்து வாசிக்கும் வகையில் அமைதியான இடங்களும் கண்காட்சிகள், கலாச்சார நிகழ்வுகள் நடக்கும் அரங்குகளும் இருந்தது. பலரும் அங்கே இருந்த காபிக்கடையில் உணவுகளை ஆர்டர் செய்துவிட்டு புத்தகத்தில் மூழ்கியிருந்தார்கள். அங்குமிங்கும் சென்றபடி ரோபோ ஒன்று உணவுகளை எடுத்துக்கொண்டு காத்திருந்ததைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது. வேறு சில தளங்களில் எழுத்துச் சம்பந்தமான பரிசுப்பொருட்கள், பேப்பர், பேனா, ஓவியங்கள் வரைய தேவையானவை என்று அங்கு கிடைக்காத பொருட்களே இல்லை! ஒரு தளம் முழுவதும் செடிகள், கொடிகள் என்று இயற்கையாக 'ஜில்'லென்று இருந்தது. 
இரண்டு மணிநேரங்கள் ஓடிப்போனதே தெரியவில்லை. கும்பல் கும்பலாக அலுவலக கட்டிடங்களுக்கருகே புகைப்பிடிப்பவர்கள் கூட்டம். அடுத்த தெருவிற்குச் செல்ல ஒரு கட்டிடம் வழியாக நுழைந்தால் தரைதளத்தில் ஒரே உணவகக் கடைகள்தான்! பெயர் புரியாவிட்டாலும் படங்களை வைத்து என்ன உணவு என்று ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது.

சாலையில் உள்ளூர் தயாரிப்பான ஹ்யுண்டாய் கார்களும், சரக்கு வண்டிகளும், கியா தயாரிப்பு வாகனங்களும் தான். வெகு அரிதாக மற்ற வண்டிகள். ஜப்பான் தயாரிப்புகள் ஒன்று கூட கண்ணில் படவில்லை! உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள் போல! நல்ல திட்டம் தான். மதிய நேரம் என்பதால் ஐஸ்பெட்டியில் உணவை வைத்துக்கொண்டு வயதான பெண்கள் பலரும் விற்றுக்கொண்டிருந்தார்கள். 'பிங்க்' வண்ண பேருந்தைப் பார்த்ததும் தமிழக அரசின் மகளிர் பேருந்து தான் நினைவிற்கு வந்தது. ஆக...

நம்மூர் கேரளா மாதிரி சியோலில் ஏதாவது ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போல! காவல்துறையினரை பல இடங்களில் காண முடிந்தது. வயதான ஆண்களும் பெண்களும் கொடிகளை ஏந்திக்கொண்டு எதையோ சொல்லிக்கொண்டே சென்று கொண்டிருந்தார்கள். அன்றைய பிரதம மந்திரி வலதுசாரி ஹான் டக் சூ வின் ஆதரவாளர்கள். அவர் மீதான வழக்கின் தீர்ப்பு மறுநாள் வரும் நிலையில் அவருக்கு ஆதரவாக தண்டனை வழங்கக்கூடாது என்ற போராட்டத்தில் அமெரிக்க கொடிகள்! இவர்கள் ட்ரம்ப் அபிமானிகள்! அப்ப சரி!
                             

இப்படி ஒரு மணிநேரம் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தபடி பாரம்பரிய கொரிய கலாச்சாரத்துக்காக புகழ்பெற்ற இன்சாடோங் தெரு (Insadong Street)விற்கு வந்து சேர்ந்தோம். இங்கு பழைய பொருட்களை விற்கும் கடைகள் , கலைக்கூடங்கள், பாரம்பரிய முறைப்படி தேநீர் சுவைக்க, தெரு உணவுக்கடைகள் என்று ஒவ்வொரு கடையையும் அலசி ஆராய்ந்து பசிக்கவே, அருகில் இருந்த GS25 (கொரியன் 7-11 கடை)க்குச் சென்று நூடுல்ஸ் வாங்கி அங்கேயே சூடுபண்ணி சாப்பிட்டோம். குறைந்த விலையில் எளிமையான அவசரடி உணவு. செம காரம்😰

சாப்பிட்டு விட்டு இன்சாடோங் பகுதியில் கலைக்கும் கைவினைக்கும் அர்ப்பணிக்கப்பட்ட ச்சம்ஜிகில் (Ssamzigil) க்குள் நுழைந்தால் அது வேறு உலகமாக இருக்கிறது ! நகைகள், நினைவுப் பொருட்கள், கொரிய கைவினைப் பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும் சிறிய கடைகள் வரிசையாக இருக்கிறது. நடுவே இனிப்பு அரிசி கேக், ஹொட்டோக் போன்ற கொரிய தெரு உணவுகளின் வாசனை வேறு. சுவர்களில் வண்ணமயமான ஓவியங்களும் கலை அலங்காரங்களும் ஒவ்வொரு மூலையையும் புகைப்படம் எடுக்கத் தூண்டியது. ஷாப்பிங் செய்ய பிடிப்பவர்களுக்கு உகந்த இடம். பார்க்கும் எல்லாவற்றையும் வாங்க வேண்டும் போல இருந்தது! கலை, கலாச்சாரம், பாரம்பரியம், நவீனம் எல்லாம் இணைந்த ஒரு அனுபவம். நிமிடங்களில் caricature படங்களை வரைந்து கொடுக்கிறார்கள். நியூயார்க்கிலும் நானும் மகளும் சேர்ந்து அப்படி ஒரு படத்தை பல வருடங்களுக்கு முன்பு வரைய வைத்து வாங்கியிருக்கிறோம். இங்கும் அப்படியே செய்து கொண்டோம்.

அங்கிருந்து 'இன்சாடோங் ஹனோக்' கிராமம் வழியாக நடப்பது, பழைய சியோலை நவீன அழகுடன் சேர்த்து வைத்திருக்கும் ஒரு சிறிய உலகுக்குள் அடியெடுத்து வைப்பது போல இருந்தது. குறுகிய சாலைகளின் இருபுறமும் அழகாகப் பாதுகாக்கப்பட்ட ஹனோக் வீடுகள்! இவை இன்று சூடான தேநீர் குடிக்கச் சிறந்த கஃபேகளாகவும், ஆடைகள், கைவினைப் பொருட்கள் விற்கும் கடைகளாகவும் மாறியுள்ளன. பாரம்பரியமும் புதுமையும் கலந்த அந்தச் சூழலில், வீடுகளைப் பார்ப்பதா, கடைகளைப் பார்ப்பதா? நூறு வருட பழமையான முற்றத்தில் அமர்ந்து தேநீர் பருகுவதும் இன்பமாக இருந்தது.

குறுகிய தெருக்களில் விதவிதமான உணவுக்கடைகள். பலரும் வரிசையில் காத்திருந்தார்கள். எல்லாவற்றையும் வாங்கிச் சாப்பிட வேண்டும் என்று ஆசை. அப்போதைக்குப் பார்த்து வைத்துக் கொண்டோம். சலிக்காமல் சுற்றி வர அத்தனை கடைகள் இருக்கின்றன. நேரம் போனதே தெரியவில்லை. எத்தனை கடைகள் இருந்தும் தெருவில் இம்மியளவு கூட குப்பை இல்லை. ஏன் குப்பைத்தொட்டியைக் கூட பார்க்கவில்லை! அதிசயித்தபடி சாலைக்கு வந்தால் எதிர்ச்சந்தில் விடுதி! அடடே! எப்படியோ அரண்மனையிலிருந்து நடந்தே விடுதிக்கு வந்து சேர்ந்து விட்டோம். மொத்தம் 13,000 ஸ்டெப்ஸ் நடந்திருந்தோம்!

ஒரு மணி நேரம் ஓய்வெடுத்து விட்டு 4.30 மணிக்குப் புறப்பட்டு மீண்டும் ரயிலைப் பிடித்து உணவுச்சுற்றுலா வழிகாட்டி சொன்ன இடத்திற்குச் சென்று காத்திருந்தோம். சப்-வேயில் எந்தப் பக்கம் செல்வது என்று குழப்பத்துடன் யோசித்துக் கொண்டிருந்த பொழுது நம்ம ஊர் ஆள் மாதிரி இருக்காரே என்று ஒருவரிடம் கேட்க, சிரித்துக் கொண்டே வழியைக் கூறி, எங்கிருந்து வருகிறோம் என்று எங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டார். டெல்லிக்காரர். பத்து வருடங்களாக இருக்கிறாராம். ஆகா!

சரியாக ஐந்து மணிக்கு வந்து சேர்ந்தார் உணவுச்சுற்றுலா வழிகாட்டி, ஹான். எங்களை அடையாளம் கண்டு கொண்டு அறிமுகப்படுத்திக் கொண்டார். தனக்கு இந்திய உணவு மிகவும் பிடிக்கும் என்றும் குலாப்ஜாமூன், தந்தூரி சிக்கன் பிடித்த உணவுகள் என்று ஒரு வழிகாட்டி எப்படி பேசுவாரோ அப்படி பேசிக்கொண்டே இருந்தார். ஆள் பார்க்க 25 வயது என்று சொல்லலாம். 37 என்று சொல்லி ஆச்சரியப்படுத்தினார். வாரம் ஒருமுறை உண்ணாவிரதம் இருப்பதால் தான் இளமையோடு இருப்பதாக அவரே சொல்லிக்கொண்டார். எனக்கென்னவோ, இந்த கொரியன்கள் இயற்கையாகவே பல நாட்களுக்கு இளமைத்தோற்றத்துடன் இருக்கும் வரம் பெற்றிருப்பதாக தோன்றிற்று. "என்னைப் பார்த்தால் 'ஸ்குயிட் கேம்' ஹீரோ போல தெரியவில்லையா? பலரும் அப்படித்தான் சொல்வார்கள்" என்று பெருமையாக பீத்திக்கொண்டார்😊நான் பார்த்த பல கொரியர்கள் தொடரில் வருபவர்கள் போலத்தான் இருந்தார்கள்!

எங்களுடன் குவைத்தில் இருந்து வந்த நான்கு பெண்களும் இணைந்து கொண்டனர். இருவர் மட்டும் தலையை மூடியபடி இருந்தார்கள். தங்களை 'foodie' என்று அறிமுகப்படுத்திக் கொண்டாலும் எதையும் விரும்பிச் சாப்பிடாமல் வீடியோ எடுப்பதிலேயே கவனமாக இருந்தார்கள்.

                                                     
அங்கிருந்து தெரிந்த 'சியோல் டவரை' காண்பித்து சுற்றுலாவை ஆரம்பித்த ஹான், பாலத்தின் மீதேறி பின் இறங்கி நெரிசலான சியோல் நகரின் சொங்‌க்யேச்சியான் ஓடை செல்லும் பகுதிக்கு அழைத்துச் சென்றார். இயற்கை ஓடையாக இருந்தது காலப்போக்கில் நகரமயமாக்கல், தொழிற்சாலை, சாலை கட்டுமானங்கள் காரணமாக கழிவுநீரும் மாசுபட்ட நீராகவும் மாறியிருக்கிறது. கான்கிரீட் மறைவுக்குக் கீழே மறைந்திருந்த ஓடையை 2003ஆம் ஆண்டில் நகராட்சி முதல்வர் லீ மியாங்-பாக் புதுப்பித்துள்ளார். இரண்டு ஆண்டுகளில் கான்கிரீட்டை அகற்றி, நீரை சுத்தம் செய்து, இயற்கை ஓட்டத்தை மீட்டுள்ளனர். 2005ல் சொங்‌க்யேச்சியான் மீண்டும் தெளிந்த, அழகான நகர ஓடையாக மாறி, இன்று, நடக்க, ஓய்வெடுக்க, புகைப்படம் எடுக்க சிறந்த இடமாக பிரபலமாகியுள்ளது என்று விளக்கினார்.

அது எப்படி லண்டனில் நாறிக்கிடந்த தேம்ஸ் ஆற்றைச் சுத்தப்படுத்த முடிகிறது? இதோ 11 கி.மீ. நீளமுள்ள ஓடையை இரு வருடங்களில் சுத்தம் செய்து அழகாக்கி இருக்கிறார்கள். சமயங்களில் மீன்களும் நீந்திச் செல்லும் என்று கேட்க, சென்னை கூவம் என்ன பாவம் செய்தது? அதற்காக நிதியை ஒதுக்கியும் முதலை சாப்பிட்டு விட்டது என்று தலைமுறை தலைமுறையாக ஏப்பம் விடும் அரசியல்வாதிகள் வெளிநாடுகளுக்குச் சென்று சைக்கிள் ஒட்டி என்ன பயன்? நமக்கு வாய்த்தவர்கள்...ஹ்ம்ம்😡

தெளிந்த நீர் ஓடும் பாதையில் நடந்துசெல்லும் போது, கல் பாலங்களும் கலை அலங்கரித்த சுவர்களும் நகரின் சத்தத்தை மறக்கவைக்கின்றன. இரவு நேரத்தில் விளக்குகள் நீரில் பிரதிபலிக்கும் காட்சி, சியோலின் அழகை சாந்தமாக ரசிக்கச் சிறந்த இடமாக்கியுள்ளது. நீரில் பிரதிபலிக்கும் சூரிய அஸ்தமனத்தின் அழகை ரசித்தவாறே 'டோங்டேமூன்' சந்தைக்குள் நுழைந்தோம். இங்கு சந்தை என்றால் அனைத்து வித உணவு வகைகளும் இரவு வரை கிடைக்கிறது. பல்பொருள் அங்காடிகளும் இருக்கின்றன.

சாலையோரக்கடையில் சுடச்சுட 'baked baffle ' சுவைத்தோம். யம்ம்ம்ம். "கொஞ்சம் தான் சாப்பிடணும். இப்பதான் ஆரம்பிச்சிருக்கோம்." இங்குள்ள பல கடைகளும் நெட்ஃபிளிக்ஸ் பிரபலமாம். எழுதி வைத்திருக்கிறார்கள். கேமராவும் கையுமாக யூடியூப், இன்ஸ்டா மக்கள் ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டிருந்தார்கள். நானும் எடுத்துக் கொண்டேன். குறுகிய தெரு வழியாக கொஞ்சம் அழுக்கான உணவகத்திற்குச் சென்றோம். ஆனால் நம்மூர் அழுக்கல்ல. பாத்திரங்கள் சிதறியபடி இருக்க, கைடு கொரியனில் ஏதோ சொல்ல, உடனே அடுப்பு பற்ற வைத்து நிமிடங்களில் வந்து விட்டது Tofuவும், கிம்ச்சியும். இத்தனை சுவையான, மெத்துமெத்தென்ற வறுத்த Tofu, பன்னீர் போல சுவையாக. அதனுடன் கிம்ச்சி. ஆகா! இதைச் சாப்பிட்டே வயிறு நிரம்பி விடும் போலிருக்கே! போதும்! என்று அடுத்த இடத்திற்கு கிளம்பிவிட்டோம்.

Bungeoppang , மீன் வடிவத்தில் ஒரு இனிப்பு வகை. ஜப்பானியர்களிடம் இருந்து கற்றுக் கொண்டிருக்கிறார்கள். மாவில் இனிப்பான ரெட் பீன் பேஸ்ட்டை வைத்து வேகவைத்து செய்யப்படும் பண்டம். மிகவும் பிடித்து விட்டது. எது தான் பிடிக்கவில்லை எங்களுக்கு? அப்படியே வேறு திசையில் நடந்து கொரியாவின் பழமையான சந்தைகளில் ஒன்றான 'க்வாங்ஜாங்' சந்தைக்கு வந்து சேர்ந்தோம். சாலை உணவுகளின் சொர்க்கம் அது! அத்தனை உணவுக்கடைகள்! எங்கும் கூட்டம். பிரபலமான உணவுக்கடைகளில் வரிசையில் காத்திருந்து வாங்கி உண்கிறார்கள்.

பெரும்பாலும் பெண்கள் தான் கடைகளில் வேலை செய்கிறார்கள். "ஜப்பானுடன் போரிட வீட்டு ஆண்கள் சென்று விட, குடும்பப் பொறுப்புகள் முழுவதும் பெண்களுக்கு வந்துவிட அப்படியே தொடர்கிறது. என்ன? இந்தக் காலத்துப் பெண்கள் தான் ஆண்களை மதிப்பதில்லை. தனித்து வாழ விரும்புகிறார்கள்" என்று அக்மார்க் ஆணாதிக்கவாதியாகப் பேசினார் ஹான்.

உருகி உருகி காதலிக்கும் ஆண்களைத் தான் தொடர்களில் காண்பிக்கிறார்கள். உண்மையில் கொரியன்களும் ஆணாதிக்க சமூகத்தினர் தான். ஆசியா முழுவதும் அப்படித்தான் போல! ஒருவேளை இன்றைய தலைமுறையினர் மாறியிருக்கிறார்களோ என்னவோ?

உணவகங்களில் தேனீக்களைப் போல சுறுசுறுப்புடன் வயதான பெண்களும் வேலை செய்வதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது! ஆரோக்கியமாக இருக்கிறார்கள்! அங்கு தான் Bindaetteok (Mung Bean Pancake), பருப்பு மாவு, காய்கறிகள், கிம்‌ச்சி சேர்த்து செய்த காரமான கொரிய பான்கேக்கை முதன்முதலில் பார்த்து "அப்படியே சாப்பிடுவேனே" என்று அதையும் விட்டுவைக்கவில்லை.
                                               
                   
அதற்குப் பிறகு நன்றாக சந்தையைச் சுற்றிக் காண்பித்து ஒரு தள்ளுவண்டி கடைக்கு அழைத்துச் சென்றார். முதன்முறையாக glass noodle, tuna kimbab, mini kimbab,கிம்ச்சி pancake, black bean noodle( jja-pa ghe-tti) ஒன்று விடாமல் "இதுவே எனக்குப் போதும்" என்று எல்லாவற்றையும் சாப்பிட்டோம். 'சூஷி' என்று சொல்வதைத்தான் இவர்கள் 'கிம்பாப்' என்கிறார்கள். நிறைய ஜப்பானிய உணவுகள் பெயரையும் சுவையையும் கொஞ்சம் மாற்றி இருப்பதாக ஹான் கூறினார். அந்தக் குவைத் பெண்கள் உணவைக் கிண்டினார்கள். ஒரு பெண் மட்டும் சுவைத்துப் பார்த்தார். "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் லதா" எத்தனை தொடர்களில் பார்த்து ஜொள்ளு விட்டிருப்பேன். சாப்பிடக் கிடைக்கும் சந்தர்ப்பத்தை விடுவேனா? யம்யம்யம்😋நாங்கள் ரசித்து ருசித்துச் சாப்பிடுவதைப் பார்த்து ஹான்-க்கும் ஒரே சந்தோஷம்.

"வயித்துல இன்னும் கொஞ்சம் இடம் வச்சுக்கோங்க. கடைசியாக ஒரு இனிப்பு பண்டத்துடன் இந்த டூரை முடித்துக் கொள்ளலாம்" என்றவுடன் அடடா! இன்னும் ஒரு ஐட்டம் இருக்கா? என்று கிளம்பினோம். மறுநாள் அந்நாட்டுப் பிரதமர் மீதான வழக்கின் தீர்ப்பு வெளிவருவதை முன்னிட்டு உணவகங்களைத் தவிர மற்ற கடைகளைச் சீக்கிரமே மூடிக்கொண்டிருந்தார்கள்.

வெளியே சுடச்சுட Hotteok (ஹோட்டோக்) – கொரிய இனிப்பு ரொட்டி விற்கும் பிரபலமான சாலையோரக்கடைக்கு வந்தால் செம இலவங்கப்பட்டை வாசம்! வாசமே ஒருவித குதூகலத்தைத் தரும். மாவுக்குள் சர்க்கரை, சின்னமன் பவுடர் சேர்த்து பூரி மாதிரி தட்டி சூடான கல்லில் போட்டு நிறைய எண்ணெய் ஊற்றி மொறுமொறுவென்று கொடுக்க, சூடு ஆறட்டும் என்று காத்திருந்து உண்டோம். ஆகா! என்ன சுவை! அடடா!

இரண்டு மணிநேரங்கள் விதவிதமான உணவு வகைகளை ருசிபார்த்ததுடன் எப்படிச் சாப்பிட வேண்டும், அதில் என்னென்ன இருக்கிறது என்றும் தெரிந்துகொண்டோம். நல்ல கைடு. பட்டப்படிப்பு படித்து கொரியாவில் பணிச்சுமை தாளாமல் ஆஸ்திரேலியாவில் நான்கு வருடங்கள் இருந்து தாய்நாட்டிற்குத் திரும்பி தற்போது சுற்றுலா வழிகாட்டியாக இருப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார். நல்ல ஐடியாவாக இருக்கிறதே! பேசாமல் நானும் பெட்டியை கட்டிக்கொண்டு ஊருக்குத் திரும்பி இந்த மாதிரி வேலை செய்யலாம் போலயே😄 நமக்குத் தான் சோறு கண்ட இடம் சொர்க்கமாச்சே😁

"நாளை எங்கும் ஊர் சுற்றாமல் பத்திரமாக இருங்கள். பயங்கரமான அடிதடி இருக்கும்" என்று பயமுறுத்திவிட்டு விடைபெற்றார் ஹான். அங்கிருந்து ரயிலைப் பிடித்து விடுதி அருகே இருக்கும் சப்வே வந்து சேரும் பொழுது மணி 7.45. குறுகிய தெருக்களில் வரிசையாக உணவகங்கள். எல்லா இடத்திலும் மக்கள் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். மறுநாள் ஏதாவது அசாம்பாவிதம் நடக்கலாம் என்று முன்கூட்டியே அங்கும் பல உணவகங்களை மூடிவிட்டிருந்தார்கள். முதல் நாள் இரவு குழுமியிருந்த கூட்டம் அன்று இல்லை. நேரத்திற்கு வீடு போய் சேர்ந்து விட்டார்கள் போலிருக்கு. திராவிட ஆட்சியில் நாம் பார்க்காத அடிதடிகளா? ஆனால் கொரியாவில் அப்படியெல்லாம் இருக்கும் என்பதை நம்பமுடியவில்லை தான்.

                                      

உண்ட மயக்கம். காலையிலிருந்து நடையோ நடை. 22000 ஸ்டெப்ஸ் நடந்திருந்தோம். நிறைய உணவுகளையும் ருசித்திருந்தோம். சியோல் நகரம் ஒருவித பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தது. ஜெஜூ தீவில் மனிதர்களின் நடமாட்டம் எத்தனை குறைவாக இருந்ததோ அதற்கு நேர்பதமாக இருந்தது சியோல். எங்கும் மக்கள் கூட்டம். தெருக்களில் புகையைக் கக்கிக்கொண்டே புழுதி பறக்கச் செல்லும் வாகனங்கள் குறைவு. பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். சாலைகளில் போக்குவரத்திற்குப் பஞ்சமில்லை. மக்கள் சாலை விதிகளை மதித்து நடக்கிறார்கள். போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் காவலர்களும் அதிகம் தென்பட்டனர். சுற்றுலாவினர் , உள்ளூர் மக்கள் என்று இரவு வரை பயமில்லாமல் சென்று வரும் நகரம் உணவுப்பிரியர்களுக்கும் ஷாப்பிங் செய்பவர்களுக்கும் உகந்தது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எனக்குப் பிடித்த நகரப் பட்டியலில் சியோலும் சேர்ந்து விட்டது.
                             

அன்றைய நாளின் இனிய அனுபவத்தை அசை போட்டவாறே அடுத்த நாள் பயணத்தைத் திட்டமிட்டுத் தூங்கி விட்டோம்.

Monday, September 1, 2025

Bye , bye ஜெஜு

பயணம் என்பது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது மட்டுமல்ல. நாம் அறிந்திருந்த உலகிலிருந்து எத்தனை வேறுபட்டு நிற்கிறது நம்மைச் சுற்றியுள்ள வேறொரு உலகம் என்பதை உணர்த்தி ஆச்சரியத்தில் ஆழ்த்தி வாழ்வை ஆராதிக்க வைக்கிறது. அறியாத பாதைகளில் நடந்துசெல்வதன் மூலம் இந்த பிரம்மாண்ட உலகில் சிறு துளி தான் நாம் என்பதையும் உணர்ந்து தாழ்மையையும் கற்றுக்கொள்ள வைக்கிறது. அன்றைய விடியலின் பொழுது கம்பீரமாக நின்று கொண்டிருந்த ஹாலாசன் மலையைப் பார்க்கும் பொழுதும் அப்படித்தான் தோன்றியது எனக்கு. தன் பொற்கதிர்களால் வான் உலா வந்து கொண்டிருந்தான் கதிரவன். இந்த நல்ல நாளில் ஒரு பொழுதையும் வீணாக்கக் கூடாது என்று தயாராகி விட்டோம். காலை உணவிற்குப் பிறகு வண்டியைத் திறக்க முயன்றால் அது சண்டித்தனம் செய்தது. என்னடா மதுரைக்கு வந்த சோதனை? விடுதி வரவேற்பறையில் "It's okay to not be okay" தொடரின் கதாநாயகனைப் போல் இருந்த இளைஞனின் உதவியை நாடினோம்.

         
ஆங்கிலத்தில் பேசும் பொழுது கொரியர்கள் கொஞ்சம் வெட்கப்படுவது போல இருக்கிறது. நாங்கள் கூறியதைப் பொறுமையாகக் கேட்டுப் பணிவாகச் சாவியை வாங்கிக்கொண்டு கதவைத் திறக்க முடியாது போகவே, பாட்டரி போயிருக்கும் என்று உள்ளே சென்று பாட்டரி இருக்கிறதா என்று தேடினான் அந்தத் தம்பி. அங்கு இல்லை என்று தெரிந்தவுடன் வாடகைக்கார் நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு கேட்க, அவர்களும் பாட்டரி வாங்கிப் போட்டுவிட்டு அவர்களிடம் இருந்து பணத்தை வாங்கிக்கொள்ளலாம் என்று கூறினார்கள். சாலையில் இருக்கும் கடைக்குச் சென்று வாங்குமாறு சொல்ல, நாங்களும் என்னடா, நல்ல நாளில் இப்படி ஒரு மணிநேரத்தை வீணடிக்கிறோமே என்று அதிகாலை எட்டு மணிக்கு கடைகள் திறந்திருக்குமா என்ற சந்தேகத்துடன் நடந்து சென்றோம்.


சாலையில் வண்டிகள், பேருந்துகளின் நடமாட்டமும் அலுவலகத்திற்குச் செல்லும் சிலரையும் காண முடிந்தது. மதுரையைப் போலவே மெல்லத்தான் விடிகிறது இந்த ஊரும்! வயதான தம்பதிகளின் கடைக்குச் சென்று பேட்டரியை வாங்கிக் கொண்டோம். கையிருப்பாக வைத்திருந்த பணத்தையெல்லாம் முன்தின பயணத்தில் செலவிட்டதால் அருகிலிருந்த ஏடிஎம்-ற்குச் சென்றால் அது உள்ளூர் வங்கி அட்டைகளை மட்டுமே எடுத்துக் கொள்ளும் என்று தெரிந்தது. "இப்ப என்னம்மா பண்றது? அவசர செலவுக்குப் பணம் இல்லியே? எல்லா இடத்திலும் கார்டு எடுத்துப்பாங்கன்னு கொஞ்சப் பணம் தான் எடுத்து வந்தேன்.இப்ப அதுவும் தீர்ந்து போயிடுச்சு" என வருத்தப்பட்டாள்.

"ம்ம்ம்ம். அதுக்குத்தான் நானும் கொஞ்சம் பணம் எடுத்துட்டு வர்றேன்னு சொன்னேன். நீ வேண்டாம்னுட்டே. ஆனாலும் நான் எடுத்துட்டு வந்திருக்கேன். இந்தா பணத்தை வச்சுக்கோ" கொடுத்தவுடன், "தாங்க்ஸ்மா. நல்ல வேளை! இல்லைன்னா பணம் மட்டுமே வாங்கிப்போம்னு சொல்ற இடங்கள்ல கஷ்டமாயிருக்கும். இனிமே வெளிநாடுகளுக்குப் போனா கார்டை மட்டும் நம்பக்கூடாதுன்னு தெரிஞ்சுகிட்டேன். எதிர்பாராவிதமாக உடோ தீவிற்குச் சென்றதால் செலவாகி விட்டது" என்றாள்.

இந்தியாவில் நேர் எதிர் அனுபவம். பணத்தை வைத்துக் கொண்டு குதூப்மினார் சென்றால் QR code ஐ ஸ்கேன் செய்து அனுமதிச்சீட்டு வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூலாக சொல்லிவிட்டார்கள்! வேறு வழியின்றி டிரைவரிடம் வாங்கச் சொல்லி பணத்தைக் கொடுத்தோம். என்னதான் முன்னேறிய நாடுகள் என்றாலும் எல்லா இடங்களிலும் கடன் அட்டையை வைத்துக் கொண்டு சமாளிக்க முடியாது. கையில் கொஞ்சம் உள்ளூர் பணமும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று

அருகிலிருந்த வங்கிக்குச் சென்றால் வேறொரு வங்கியில் தான் வெளிநாட்டு கரன்சிகளை வாங்கிக் கொள்வார்கள் என்று கூற, 10 நிமிடங்களுக்கு நடந்து சர்வதேச வங்கிக்குச் சென்றோம். அதிகாலை நேரமென்பதால் இருவர் மட்டுமே இருந்தனர். அத்தனை குப்பையான வங்கியை மதுரையில் கூட நான் பார்த்தது கிடையாது! மேஜை நிறைய பேப்பர் குப்பைகள் ஒருபக்கம். பெரிய திரைகளுடன் கூடிய கணினி இத்யாதிகள் மறுபக்கம். அலுவலகமெங்கும் தாறுமாறாக இறைந்து கிடந்த பேப்பர்களைப் பார்த்தவுடன் என்னடா இது சவுத் கொரியா தானா? ஒரு வேளை தீவிற்குள் இருப்பதால் இப்படி அலங்கோலமாக இருக்கிறதோ என்றெல்லாம் எண்ண வைத்து விட்டது. பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்த எங்களைப் பார்த்ததும் எந்த வித முகப்பூச்சும் இல்லாமல் இருந்த 'ஒல்லி பெல்லி' மங்கை ஆங்கிலத்தில் என்ன உதவி தேவை என்று வினவ, நாங்களும் டாலர்களுக்கு உள்ளூர் கரன்சி(Won) வேண்டும் என்று கேட்க, எந்தவித ஆவணங்களையும் கேட்காமல் கொடுத்து விட்டார்! ஆச்சரியமாக இருந்தது! பொதுவாக, இந்தியாவில் பாஸ்போர்ட் கேட்பார்கள். வந்த வேலை முடிந்தது என்று விடுதிக்குத் திரும்பினோம். இதே அமெரிக்க வங்கிகள் என்றால் முகம், நகப்பூச்சுகள், ஒரு பிளாஸ்டிக் சிரிப்புடன் வாழை இலையில் நெய்யைத் தடவியது போல பேசியிருப்பார்கள். வாடிக்கையாளர்களைக் கவரும் விதத்தில் நடக்க வேண்டுமென்பது எழுதாத சட்டம். ஆனால் இங்கோ, அழகாக கண்களை உறுத்தாத வகையில் உடையணிந்து இயற்கையாக இருந்தது எனக்குப் பிடித்திருந்தது. வழியில் ஒதுக்குப்புறமான இடத்தில் புகை பிடித்துக் கொண்டிருந்தவர்கள் இந்தியர்கள் இருவரை அப்பொழுது தான் பார்ப்பது போல பார்க்க, பழக்க தோஷத்தில் கைப்பையை இறுக்கப் பற்றிக் கொண்டு அவர்களைக் கடந்தோம். நமக்கு யாரைக் கண்டாலும் பயம்😜
                            
விடுதியை அடைந்ததும் சாவி ரிமோட்டில் பேட்டரியைப் போட்டு கொடுத்த கதாநாயகனுக்கு நன்றி கூறி அங்கிருந்து கிளம்பினோம். அன்று செல்ல வேண்டிய ஹாலாசன் மலைப்பயணம் ஏழு மணிநேரங்களாகும் என்று தெரிந்ததால் அதற்குப் பதிலாக தென்மேற்கில் வேறு சில இடங்களுக்குச் சென்று வரலாம் என்று திட்டத்தை மாற்றி விட்டோம். ஜெஜூ தீவை முழுவதுமாகக் கண்டுகளிக்க குறைந்தது ஒரு வாரமாவது வேண்டும். கிழக்கில் நாங்கள் பார்க்காதது 'Folk Village" மட்டுமே. பல தொடர்களில் பார்த்து விட்டதால் அங்கு செல்லவில்லை. பார்க்க வேண்டிய இடங்கள் அத்தனைக் கொட்டிக்கிடக்கிறது!
  
                                

இயற்கை, வரலாறு, கடல் காட்சிகளை ஒரே பயணத்தில் கண்டுகளிக்க தென்பகுதியில் உள்ள சன்பாங் மலை, சொங்காக்சான் மலை, யோங்மியோரி கடற்கரைக்குச் சென்று வரவேண்டும். ஒவ்வொன்றும் அத்தனை அழகு!

தீவின் தென்மேற்குக் கரையில் உருண்டையாக எழுந்து நிற்கும் சன்பாங் மலை (Sanbang Mountain) அங்குள்ள மிகவும் தனித்துவமான இயற்கைச் சிறப்புகளில் ஒன்று. தூரத்திலிருந்தே கவர்ந்து விட்டது. மற்ற எரிமலை மலைகளைப் போல் இல்லாமல் சுற்றிலும் சமவெளி இருக்க, இந்த மலை திடீரென நிலப்பரப்பிலிருந்து எழுந்து நிற்கிறது. எரிமலையின் வெடிப்பிலிருந்து உருகிய கல் திடமாகி உருவான "trachytic rock dome" என்பதே இதன் தனிச்சிறப்பு. இம்மலையைச் சுற்றிலும் கனோலா செடிகளின் மஞ்சள் நிற மலர்கள் பூத்துக் குலுங்குவதைப் பார்க்கவும் படங்களை எடுத்துக் கொள்ளவும் பலரும் கிளம்பி வந்திருந்தார்கள். ஒரு பாட்டி வசூல் செய்து படங்களை எடுக்க அனுமதித்தார். நாங்களும் உள்ளே சென்று சுற்றிப்பார்த்து படங்களை எடுத்துக் கொண்டோம். மழைக்காலத்தின் துவக்கத்தில் மலையைச் சுற்றியுள்ள வயல்கள் எல்லாம் பொற்கதிர்களாய் மலர்ந்த மஞ்சள் கனோலா மலர்களால் நிரம்பி வழிய, நடுவில் எழுந்திருக்கும் கரும்பாறை பார்ப்பவர்களின் மனதைக் கொள்ளை கொள்கிறது. வண்டியிலிருந்தே இந்த மலையைச் சுற்றி வரும் வகையில் பாதையை அமைத்திருந்தார்கள். அங்கிருந்து 15 நிமிடங்களில் 'Songaskan Mountain' வந்தடைந்து விட்டோம்.

சன்பாங் , ஹாலாசன் மலைகளுக்கிடையில் அமைந்துள்ள சொங்காஸ்கான் மலையில் சுற்றுப்புறத்தில் ஒன்று, உச்சியில் ஒன்று என இரண்டு கிரேட்டர்கள் இருக்கின்றன! வண்டி நிறுத்தத்திலிருந்து மலை மீது ஏறவே வெகுதூரம் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது! உச்சிக்குச் செல்ல ஐந்து மணிநேரங்களாவது ஆகும் என்று தெரிந்தவுடன் இரண்டு மணிநேரத்தில் பார்த்தவரை போதும் என்று இறங்கி விட்டோம். நல்ல கூட்டம் அன்று. கோடையில் இந்த இடங்கள் எல்லாம் பயணிகளால் நிரம்பி வழியும். இதற்காகவே கோடைப்பயணத்தை முழுவதுமாக தவிர்ப்போம்.

                             

ஓரிடத்தில் ஆழ்கடலில் அரியவகை மீன்களைப் பிடிக்கும் 'ஹென்யோ' பாட்டிகள் நடத்தும் உணவகம் இருந்தது. ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தார்கள். மலை மீது ஏற ஒவ்வொரு பகுதியும் கடலுடன் சேர்ந்து அதிஅற்புதமாகக் காட்சி தந்து கொண்டிருந்தது. இந்த மலை, அதன் புவியியல் அமைப்புகளுக்காகவும், கடற்கரைக் காட்சிகளுக்காகவும் பிரபலமானது என்று அறிந்து கொண்டோம். படங்களுடன் விளக்கமாக அங்கிருந்து தெரியும் மலைகள், தீவுகளைப் பற்றின விளக்கங்களை ஆங்காங்கே வைத்திருந்தது சிறப்பு. சில தொடர்களில் வந்த இடங்கள் என்பதை அங்கிருந்து பார்க்கும்பொழுது தெரிந்தது. இந்த மலைப்பாதையின் மற்றொரு முக்கிய அம்சம், 1943–1945 இடையே ஜப்பானிய ராணுவம் கட்டிய குகைகள் ஆகும். அதை நன்கு பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். வரலாறு முக்கியம்ல?
 
இறங்கும் வழியில் ஓரிடத்தில் நெருப்பில் சுட்ட சர்க்கரைவள்ளிக் கிழங்கை வாங்கிச் சாப்பிட்டோம். இரு வயதான தாத்தா, பாட்டிகள் நடத்தும் உணவகத்தில் 'பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ்'ன் பாடலைக் கேட்க ஆச்சரியமாக இருந்தது! நிறைய மேற்கத்திய பாடல்களைக் கேட்க முடிந்தது. இல்லையென்றால் இருக்கவே இருக்கு கே-பாப். ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்த கணவன், மனைவி கொரியன்களுடன் தீவின் அழகைப் பற்றிப் பேசிக்கொண்டே மலையை விட்டு இறங்கினோம். அவர்களும் முதன்முறையாகத் தீவிற்கு வந்திருக்கிறார்கள்! மலைமுழுவதும் பச்சைப்பசேலென இருக்கிறது. மஞ்சள் வண்ண கனோலா, பிங்க் நிற செர்ரி மலர்கள் என்று கண்ணுக்குக் குளுமையாகவும் குழந்தைகளைக் கவர குதிரை சவாரிகளும் உண்டு.

                            

கீழே வண்டி நிறுத்தத்திற்கு அருகில் ஒரு ஸ்டார்பக்ஸ்! நன்கு பிரபலமாகி இருக்கிறது போல! அது என்ன மாயமோ தெரியவில்லை சுற்றுலாவினர் பலரும் வந்து செல்லும் இடத்தில் ஓரிடத்தில் கூட குப்பைகளே கண்ணில் படவில்லை. மக்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியமாகுமோ? அங்கிருந்த கடையில் சில பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டு 'Yongmeori Coast' புறப்பட்டோம். செல்லும் வழியில் கனோலா மலர்களின் பின்னணியில் மலையும் அங்குள்ள அற்புதமான புத்தர் கோவிலும் தெரிந்தது. மிகப்பெரிய புத்தர் சிலை! தீவில் பார்த்த முதல் புத்தர் கோவில் இது தான். சுற்றுலாவினர் அதிகம் தென்பட்டார்கள். உலகெங்கிலும் மலைகளைத் தேடித்தேடி போய் உச்சியில் புத்த மடாலயங்களையும் பெரிய புத்தர் சிலையையும் கட்டி வைத்திருக்கிறார்கள்!

                                 

ஜெஜு தீவு எரிமலைகளால் உருவானாலும் யோங்மியோரி கடற்கரை ஜெஜுவின் மிகப் பழமையான எரிமலையால் உருவானது. அதன் தனித்துவமான புவியியல் அமைப்பு UNESCO மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு 2010ஆம் ஆண்டில் தீவு முழுவதும் UNESCO Global Geopark Network உறுப்பினராக இணைக்கப்பட்டிருக்கிறது.

'யோங்மியோரி' என்ற பெயர் 'நாகத்தின் தலை' என்பதைக் குறிக்கிறது. கடற்கரைப் பாறைகள் நீளமான எரிமலைப் பாறைகளால் உருவாகி, நாகத்தின் தலையாகக் காட்சி தருவதால் இந்தப் பெயர். கடலின் அலைகள் பாறைகளை வடிவமைத்து தனித்துவமான காட்சிகளை உருவாக்குகின்றன. குறைந்த அலைகள் இருக்கும் நேரத்தில் மட்டுமே பாறைகளில் நடக்க முடியும். கடல் குகைகளையும் பார்க்கலாம். யோங்மியோரி கடற்கரையில் (Yongmeori Coast) காணப்படும் hexagonal joints (ஆறு பக்கக் கூட்டுப் பாறைகள்) ஒரு முக்கிய புவியியல் சிறப்பு. லாவா குளிரும்போது அது சுருங்கி உடைந்து, இயற்கையாகவே ஆறு பக்க வடிவில் (hexagonal columns) சிதறுகிறது. இது “columnar jointing” என அழைக்கப்படுகிறது. இங்குள்ள பாறைகளில் பழமையான உயிரினங்களின் அடையாளங்கள், அவற்றின் எலும்புகள், படிமங்கள் போன்றவை காணப்படுவதால் மிகவும் அரிய பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பலவகையான கடல் உயிரினங்களும் இங்கே இருப்பதாகத் தகவல் பலகைகளில் குறிப்பிட்டிருந்தார்கள். இந்த அரிதான அமைப்புகள் ஐரோப்பா, வடஅமெரிக்காவில் நாங்கள் பயணித்த கடற்கரைகளில் காணாத காட்சிகள் என்பதால் எங்களை மிகவும் கவர்ந்தது. மாணவர்கள் கூட்டம் இங்கு அதிகம் தென்பட்டது. ஆளாளுக்கு விதவிதமான போஸ்களில் படங்களை எடுத்துக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து மதிய வெயிலில் ஜொலித்துக்கொண்டிருந்த கடலை பார்த்துக் கொண்டிருந்தோம்.
                         

அடுத்த இடத்திற்குச் செல்வதற்கு முன் கடையில் வறுத்த கிழங்கு, ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு Cheonjeyeon Falls சென்றோம். இந்த இடத்தில் நீரூற்று, அரண்மனை வளாகம், மூன்றடுக்கு அருவி, பாலம் என்று காட்சிகளுக்கு குறைவில்லை. படங்கள் எடுக்க அருமையான இடம். நடந்து நடந்து கால்கள் களைத்துப் போக, விடுதிக்குத் திரும்பும் பொழுது மணி ஆறாகி விட்டிருந்தது.

                                                                             

சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு ஆசை ஆசையாக 'Buldak Ramen'ஐ சுவைக்க சாலையில் இருந்த சிறுகடைக்குச் சென்றோம். இவ்வளவு காரமாகவா சாப்பிடுகிறார்கள் கொரியர்கள்! அடேங்கப்பா! காரத்தின் அளவுக்கேற்ப விதவிதமான சுவைகளில் வகைவகையான மாமிசங்களுடனும் இல்லாமலும் கிடைக்கிறது. கடையிலேயே மைக்ரோவேவ் அவன் இருக்கிறது. அங்கேயே சூடு பண்ணி சாப்பிடும் வசதிகள் இருப்பதால் பலரும் கடைகளிலேயே சாப்பிடுகிறார்கள். கையால் சாப்பிடும் வேலை இல்லை என்பதால் தண்ணீர் தேவையில்லை. கடைகளும் சுத்தமாக இருக்கின்றன. எத்தனை எளிதாக வாழ்க்கையை மாற்றிவிட்டிருக்கிறார்கள்!

                             

வயிறும் மனதும் நிறைந்த நாளாய் அன்று பார்த்த இடங்களை பற்றிப் பேசிக்கொண்டு இருந்தோம். ஜெஜூவிற்குச் செல்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள். நல்ல வேளை! நாங்கள் தவற விடவில்லை. நாளை மாலை வரைதான் ஜெஜூ வாசம்! அதனால் வடகிழக்கில் பார்க்கவேண்டிய முக்கியமான இடங்களைக் குறித்து வைத்துக் கொண்டோம். மெதுவாக எழுந்திருந்து பொறுமையாக பார்ப்போம் எனத் தீர்மானித்து உறங்கச் சென்றோம்.

காலையில் எழுந்து அறையை காலி செய்து பெட்டிகளை வண்டியில் ஏற்றிவிட்டு சாப்பிடச் சென்றோம். முட்டைப்பொரியல், கிம்ச்சி, seaweed சூப், கஞ்சி, பிரட், சாலட் எல்லாவற்றையும் ஒருகை பார்த்து விட்டு 'Samdal-ri' கிராமத்தைப் பார்க்க புறப்பட்டோம்.

                        

கொரியா செல்வதற்கு முன் நான் பார்த்துக் கொண்டிருந்த 'Welcome to Samdal-ri' தொடர் ஜெஜூவிற்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையை மேலும் தூண்டியது. தொடரில் வரும் மரமும், தெருக்களும், நீலமும் பச்சையும் கலந்த கடலும், கடற்கரையோரமும் பசுமையும் என வெகுவாக என்னை கவர்ந்திருந்தன. அதனால் அந்த மரத்தைத் தேடி கிராமத்திற்குச் சென்றோம். வழியில் அழகழகு ஊர்கள் தென்பட்டன. காற்றாலைகளும் வண்ண வண்ண வீடுகளுமாய் எத்தனை இடங்களில் தான் நிறுத்தி நிறுத்திச் செல்வது? என்னுடன் பயணிப்பவர்களுக்கு அதீத பொறுமை இருக்க வேண்டும். பாவம் மகளரசி!

கிராமத்திற்குள் நுழைந்து தெருக்களைப் பார்த்தவுடன் தெரிந்துவிட்டது . எத்தனை அழகாக இந்த தெருக்களை காட்சிப்படுத்தியிருந்தார்கள்! அதோ நான் தேடி வந்த நடுத்தெரு திண்ணை மரம்! என்ன? இலைகள் இன்றி மொட்டையாக இருந்தாலும் திண்ணையில் சிறிது நேரம் அமர்ந்து வேடிக்கை பார்த்தோம். ஒரு ஜனமும் கண்ணில்படவில்லையே! வீடுகளைச் சுற்றி எரிமலைக் கற்களால் சுவர்களைக் கட்டியிருந்தார்கள். எல்லா வீடுகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத் தான் இருந்தது. சதுர வடிவில் நான்கைந்து பேர் அமரும் வகையில் மரப்பலகை இருக்கை. அருகில் இருந்த பேக்கரிக்குச் சென்றால் அங்கே தொடரை எடுத்த காட்சிகளைப் படங்களாக மாட்டியிருந்தார். சிறிது நேரம் தொடரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். என்னைப் போன்ற கே-ட்ராமா பைத்தியங்கள் அதிகம் பேர் அந்த ஊருக்கு வந்து செல்வதாகவும் அருகில் இருக்கும் கிராமத்தில் கூட பல காட்சிகள் எடுத்திருப்பதாகவும் கூறினார். டாஞ்செரின் கேக் அத்தனை சுவையாக இருந்தது. சிறிது நேரம் தெருக்களைச் சுற்றி வந்து கடற்கரைக்குச் சென்றோம்.
                         

இந்த காட்சிகளுக்காகத்தான் இங்கு வந்ததே. அதைப் பார்த்த திருப்தி கிடைத்துவிட்டது. ஊரில் மனிதர்கள் வாழ்கிறார்களா என்ன? அனைத்து வீடுகளிலும் தோட்டங்கள் இருந்தன. கிம்ச்சி செய்யப் பயன்படுத்தும் சைனீஸ் காபேஜ், வெங்காயத் தாள், கீரை வகைகளை வளர்க்கிறார்கள். எரிமலைக் கற்கள் நிரம்பி இருப்பதால் கொஞ்சம் அழுக்காக இருப்பது போலத் தோன்றினாலும் தெருக்கள் சுத்தமாக இருந்தன. ஈக்கள், நாய்கள், பன்றிகள், மாடுகள் என்று மதுரை மண்ணின் மைந்தர்கள் எதுவும் கண்களில் படவேயில்லை!
 
அதிசயித்தபடியே நீல மேகத்தைப் பிரதிபலித்துக் கொண்டிருந்த கடலை ரசித்துவிட்டு 'மஞ்சங்குள்' லாவா குகைகளைப் பார்க்க கிளப்பினோம் . எங்கள் நேரம்! பழுதுபார்க்கும் வேலை காரணமாக அதை தற்காலிகமாக மூடிவிட்டிருந்தார்கள். அதைப் பற்றி நிறைய வாசித்திருந்ததனால் மிகுந்த ஆவலுடன் சென்றிருந்தேன். கொஞ்சம் ஏமாற்றம் தான். சரியென்று மிகவும் பிரபலமான ''ஹே டாக்' கடற்கரைக்குச் சென்றோம். பளிச்சென்று வெயில். வண்டியை நிறுத்தி விட்டு அருகிலிருந்த கடையில் ஜூஸ் வாங்கி குடித்து விட்டு கடலை நோக்கி நடக்கும் பொழுது தமிழில் பேசுவது கேட்டது. யாருடா நம்ம இனம்? ஜெஜுவிற்கு வந்திருக்கிறது என்று பார்த்தால் இரு பெண்களுடன் அப்பா, அம்மா கலிஃபோர்னியாவில் இருந்து வந்திருந்தார்கள்!

ஜெஜு தீவைச் சுற்றி இருக்கும் கடல் நீலமும் பச்சை வண்ணமும் கலந்து அழகோ அழகோவென்று காண்போரை வசீகரிக்கிறது. வெண்மணல் கரையைத் தொட்டுத்தொட்டு செல்லும் ஆர்ப்பாட்டமில்லாத அலைகள் எரிமலைப்பாறைகள் மீது மோதிச் செல்லும் அழகு என்று நடக்க நடக்க காட்சிகள் ஏராளம்! இன்ஸ்டாக்ராமிற்காக ஆடிப்பாடி வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒருமணிநேரமாவது சுற்றிப்பார்த்து மனதில் காட்சிகளைப் பதிவுசெய்து கொண்டோம். பயமில்லாமல் பாறைகளில் நின்று பார்க்க முடிகிறது. காற்று அதிகம் அடித்தால் டண்டணக்கா தான்.

                        

வண்டியைத் திருப்பிக் கொடுக்க இன்னும் நேரம் இருக்கிறது. பெட்ரோலை நிரப்பித் தரவேண்டும். இப்பொழுது நெரிசல் மிக்க பகுதிக்கு வந்து விட்டோம் என்று புரிந்தது. வாடகை வண்டியைத் திருப்பிக் கொடுக்க, ஒரு கேள்வியுமில்லை. பேட்டரிக்கான பணத்தைக் கொடுத்துவிட்டார்கள். அங்கிருந்து ஷட்டில் எடுத்துக்கொண்டு விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தோம். வெளிநாட்டுக்காரர்களுக்கென்று தனி வரிசை. உள்ளூர்க்காரர்கள் கை நிறைய டேன்ஜரின் பழப்பெட்டிகள், கூடைகள், இனிப்புகள் என்று எடுத்துச் சென்று கொண்டிருந்தார்கள். அங்கும் விற்றுக்கொண்டிருந்தார்கள். உள்ளூர் விமானங்களில் தண்ணீர், காஃபி எல்லாம் எடுத்துச் செல்ல அனுமதிக்கிறார்கள்!

அங்கிருக்கும் உணவகங்களில் அத்தனை கூட்டம். முதன்முறையாக உடான் நூடுல்ஸ் சாப்பிட்டேன். அமெரிக்காவை விட உணவுவிலை இங்கு மலிவு தான். எங்கும் பெண்கள் தான் அதிகம் வேலை பார்த்துக் கொண்டிருப்பதாக தோன்றியது! அதுவும் வயதான பெண்கள். பம்பரமாய்ச் சுற்றிக் கொண்டிருந்தார்கள்! கட்டிளங்காளைகள், கன்னிகளுடன் விமானநிலையம் பரபரப்புடன் இருக்க, 'ஜெஜூ ஏர்'ல் ஏறி சியோல் நகருக்குப் பயணமானோம். இங்கிருந்த ஒவ்வொரு நாளும் பார்த்த ஒவ்வொரு இடங்களும் மறக்க முடியாத இனிய அனுபவத்தைக் கொடுத்திருந்தது. 7.15 மணிக்கு 'பை பை ஜெஜூ' சொல்லி கிளம்பி 8.30மணிக்கு சியோல் வந்து சேர்ந்தோம்.

                                            
                                 

அங்கிருந்து விடுதிக்குச் செல்ல சப்வே ரயிலில் ஏறி அரைமணி நேரப் பயணம். இளைஞர்கள் அனைவரும் ஃபோனில் மூழ்கியிருந்தார்கள். அமெரிக்கன் பிராண்ட் ஷூக்கள், ஐபோன்கள், பெரிய வாட்ச்சுகள், பெண்கள் முகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் போலிருக்கு! மீசையில்லாத ஆண்கள் ஆனால் தலை முழுவதும் முடி! என்ன கொடுமை சரவணா இது😎இதே நியூயார்க் ட்ரெயினில் என்றால் எத்தனை மொட்டைத்தலைகள். எத்தனை விதமான மனிதர்கள், நிறங்கள், உடைகளைப் பார்த்திருப்பேன் என்று நினைத்துக் கொண்டேன். கொரியன்கள் உடை விஷயத்தில் மிகவும் கண்ணியமாக உடலை அதிகம் வெளிப்படுத்தாத அளவிற்கு கொஞ்சம் லூசாகவே அணிகிறார்கள்!

நாங்கள் இறங்க வேண்டிய இடத்தை அடைந்ததும் வெளியில் வந்தால் ட்ரெயின் டிக்கெட்டை ஓரிடத்தில் போடும் இயந்திரத்தில் போட்டால் கொஞ்சம் காசு திரும்ப கிடைக்கிறது! subway சுத்தமாக இருக்கே என்றவுடன், "இதெல்லாம் சுத்தமா? சுத்தம் என்றால் அது ஜப்பான் தான்" என்றால் மகள்! ம்ம்ம்ம். பெட்டிகளைச் சுமந்து கொண்டு வெளியில் வந்தால் ஒரே சத்தம். நடைபாதைகளில் மக்கள் கூட்டம். வழிநெடுக உணவகங்கள். கடைகள். எத்தனைக்கெத்தனை ஜெஜூ அமைதியாக இருந்ததோ அதற்கு எதிர்ப்பதமாக இருந்தது சியோல். எங்களுக்கோ ஒரே கொண்டாட்டம். முகவரியைத் தேடி விடுதி இருக்கும் தெருவில் நுழைந்தவுடன் டெல்லியில் நாங்கள் தங்கியிருந்த இடம் தான் நினைவிற்கு வந்தது. சிறிதும் பெரிதுமாக நெருக்கமான கட்டிடங்கள்.

எனக்கு மதுரை தங்கம் தியேட்டர் தெருவிற்குள் நுழைந்தது போல இருந்தது. ஓரளவு ஆங்கிலம் பேசுபவர்கள் விடுதி வரவேற்பறை அலுவலகத்தில் இருந்தனர். எங்களது பாஸ்போர்ட் விவரங்களை வாங்கிக் கொண்டு மாடியில் இருக்கும் அறைக்கான சாவியைக் கொடுத்து விட்டு காலை உணவிற்கான இடத்தையும் காட்டினார்கள். சிறிய அறை. ஜெஜு தீவில் நாங்கள் தங்கியிருந்த சொகுசு அறை எங்கே? இத்துனூண்டு இடத்தில் பெட்டிகளை வைத்து விட்டு கீழே விழாமல் நடப்பதே சிரமமாக இருந்தது இங்கே. வாடகையும் அதிகம்! நகரம் என்றால் சும்மாவா?

"வாம்மா. இங்க தெரு உணவுகள் ரொம்ப பாப்புலர். என்னென்ன இருக்குன்னு பார்த்துட்டு கொஞ்ச தூரம் நடந்துட்டு வரலாம்" என்று உடனே கிளம்பி விட்டோம்.
 
சாலையோரங்களில் இரவு உணவுக்காக தற்காலிக இருக்கைகள், மேஜைகள் போடப்பட்டு அப்படியொரு கூட்டம். மேஜைகளில் சோஜு பாட்டில்கள்! கிழக்காசியா, பெருநகரத்திற்கே உரிய அத்தனை அம்சங்களுடன் இருந்த நகரம் இரவை உயிர்ப்பித்துக் கொண்டிருந்தது. ஆவி பறக்க, கிண்ணங்களில் சூப், டம்ப்ளிங்ஸ், கைகளில் சாப்ஸ்டிக் வைத்துக் கொண்டு சத்தம் போட்டு சிரித்துக் கொண்டிருந்த புதியதொரு உலகத்தைப் பார்த்தோம். எங்கே மனிதர்கள் என்று தேடிக் கொண்டிருந்தேன். அவர்கள் அனைவரும் சியோலில் கொட்டமடித்துக் கொண்டிருந்தார்கள்!

நாங்களும் ஒரு மணிநேரம் வரை சுற்றிப்பார்த்து என்னென்ன உணவு வகைகளை கடைகளிலும் தள்ளுவண்டிகளிலும் விற்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டே வந்தோம். சுற்றுலாவினரும் உள்ளூர் மக்களும் என்று அந்த இடம் தீபாவளி நேரத்து மதுரை விளக்குத்தூண் பகுதியைப் போல 'ஜேஜே' என்றிருந்தது. வேலை முடிந்து வீட்டிற்குப் போகமாட்டார்களோ என்ற சந்தேகமும் வலுத்தது. பெரும்பாலும் இளைஞர்கள், இளம்பெண்கள் பட்டாளம். தள்ளாடி தள்ளாடி சிரித்துப் பேசிக்கொண்டே செல்லும் நடுத்தர வயது ஆண்களும் அதிகம் தென்பட்டார்கள். மகள் டோக்கியோ தெருக்களும் இப்படித்தான் களை கட்டியிருக்கும் என்று கூறி அங்கு அவள் பார்த்த, சாப்பிட்ட உணவுகளைச் சொல்லி ஒரு கடையின் முன் நிற்க, அங்கிருந்த இளைஞன் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடி இரண்டு மூன்று டம்ப்ளிங் வகைகளை அறிமுகப்படுத்தினான். நாங்களும் எங்களுக்குப் பிடித்த டம்ப்ளிங்குகளை வாங்கிக்கொண்டு அறைக்குத் திரும்பினோம்.
                                     
                                          
வாவ்! இத்தனை சுவையான டம்ப்ளிங்குகளை நான் இதற்கு முன் சாப்பிட்டிருக்கவில்லை. ரசித்து ருசித்து சாப்பிட்டோம். "எனக்கு வேறெதுவும் வேண்டாம். இனி எண்டே நாடு கொரியா. எண்டே சாப்பாடு ஷ்ரிம்ப் டம்ப்ளிங்" என்று பாட, இது ஆரம்பம் தான். நாளைக்கு 'food tour' போறோம். அங்க இன்னும் நிறைய தெரிஞ்சுப்போம். உனக்கு எல்லாமே பிடிக்கும் என்றாள் என் செல்லம்.

ஆஹா! கனவுகளுடன் உறங்கச் சென்றோம்.












Sunday, August 17, 2025

சூரியோதய உச்சி மலையும் உடோ தீவும்

சொல்வனம் இதழில் வெளிவந்துள்ள என்னுடைய தென்கொரிய பயணக்கட்டுரையின் இரண்டாவது பாகம் ‘யூ அஸ் ஹோட்டல்’ செக்விபோ நகர்

ஜெஜு தீவிற்கும் நியூயார்க்கிற்கும் இடையே 13 மணி நேர வேறுபாடு இருந்தும் பயணக்களைப்பில் நன்கு உறங்கி விட்டோம். காலையில் ஆறே முக்காலுக்கெல்லாம் தயாராகி ஜன்னல் திரைச்சீலையை விலக்கினால் கம்பீரமான ஹாலாசன் மலைச்சிகரம் 55 டிகிரி ஃபாரன்ஹீட் குளிரைப் போர்த்திக் கொண்டு காட்சி தந்து கொண்டிருந்தது😰 பொழுது புலர்ந்திருந்தாலும் தலையை வெளியே நீட்டலாமா வேண்டாமா என்று கதிரவன் ‘இங்கி பிங்கி பாங்கி’ போட்டுக் கொண்டிருந்தான். நாங்கள் தங்கியிருந்த ‘யூ அஸ் ஹோட்டல்’ செக்விபோ நகரின் ஜங்குன் மாவட்டத்தில் சுற்றுலாவினருக்கு ஏற்ற அனைத்து வசதிகளுடன் சர்வதேச மாநாட்டு மையம், புகழ்பெற்ற இடங்களுக்கு அருகில் இருந்ததால் சென்று வர  மிகவும் வசதியாக இருந்தது. கோடை காலத்தில் அங்கே தங்க அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்!

காலை உணவிற்கான நேரமும் வந்துவிட்டது என்று கீழிறங்கிச் சென்றால் எங்களுக்கு முன்பே கணவனும் மனைவியுமாக இரு கொரியர்கள் அங்கே உணவருந்திக் கொண்டிருந்தார்கள்! காற்றோட்டமான பெரிய உணவுக்கூடம்! தட்டுகள், முள்கரண்டிகள், கிண்ணங்கள், கோப்பைகளை நேர்த்தியாக அடுக்கி வைத்திருந்தார்கள். சுத்தமான மேஜைகள். வரிசையாக உணவுகள். 

நான்கு விதமான கிம்ச்சி வகைகள்😋தனித்தனி பாக்கெட்டுகளில் seaweed வைத்திருந்தார்கள். சோறு, சோய்பீன் பேஸ்ட் முட்டைகோஸ் சூப், அரிசிக்கஞ்சி (ஞாயிறு தோறும் காலை உணவாக இதை (என் தாய்மொழியில் கென்னிபேஸ்) அம்மா செய்தாலும் அதை நான் இதுவரையில் சாப்பிட்டது கூட இல்லை. இங்கே என்னடான்னா! கடவுள் இருக்காடா குமாரு என்னைய சோதனை பண்ண😂) பொரித்த முட்டை, உருளைக்கிழங்கு, சாசேஜ், stir fried beef with vegetables, சாலட், அதற்கு ட்ரெஸ்ஸிங்ஸ், ப்ளூபெர்ரி தயிர், டேன்ஜரின் பழச்சாறு, பிரட் பட்டர் ஜாம், சீரியல் வகைகள், காஃபி, தேநீர் என்று அதகளப்படுத்தியிருந்தார்கள். மேற்படி ஐட்டங்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் சுவைத்துப் பார்க்க தீர்மானித்து இரு தட்டுகளை நிரப்பிக் கொண்டேன். கிம்ச்சிக்கென்றே ஒரு தட்டு😍

அங்கிருந்த மேஜைகளில் ‘சாப்ஸ்டிக்ஸ்’ இருந்தாலும் நான் எதையாவது எடுக்கப் போக, அது பறந்து பக்கத்து மேசைக்குப் போய்விட்டால் எதற்கு வம்பு என்று முள்கரண்டியால் சாப்பிட ஆரம்பித்தேன். காரசாரமான கிம்ச்சி…ம்ம்ம்ம். சுவையோ சுவை! அமெரிக்க கடைகளில் விற்பதெல்லாம் குப்பை என்று உணர வைத்தது! சீவீட்-ல் வைத்து வெத்தலையை மடிப்பது போல மடித்து அப்படியே ‘லபக்’.

கொரியன் நாடகங்களில் அதிகம் கவர்ந்தது அவர்கள் மேஜை நிறைய சாப்பாடு வகைகளை கிண்ணங்களில் வைத்துக் கொண்டு சோறு ஒரு கரண்டி, சூப், காய்கறிகள், இறைச்சிகள் என்று வாய் நிறைய சாப்பிடுவது தான். என்ன தான் நாமும் குழம்பு, ரசம், கீரை, பொரியல், கூட்டு, அப்பளம், தயிர் என்று வைத்துச் சாப்பிட்டாலும் வெறும் கிம்ச்சியுடன் சோறு சாப்பிடுவதும் நன்றாகத் தான் இருந்தது!

அரிசிக்கஞ்சி நன்றாக இருக்கிறது என்று மகள் சொல்லவும், சுவைத்துப் பார்த்தேன். உப்பு தூக்கலாக. ம்ஹூம்! எனக்குப் பிடிக்காத உணவுப்பட்டியலில் மீண்டும் போய் உட்கார்ந்து கொண்டது. ஆம்லேட்டை எண்ணெயில் பொரித்து வைத்திருந்தார்கள். அன்றன்றே தயார் செய்த சாலட், பழச்சாறு அருமை. பிரட்-ஐ மட்டும் விடுவானேன். அது வேறு நன்றாக இருந்தது. ஆக மொத்தம் காலையிலேயே வயிறு முட்ட நன்றாக சாப்பிட்டாகிவிட்டது. எங்களுடைய மேசைக்கு அருகில் ஒரு கொரியன் மூன்று தட்டுக்கள் நிறைய “மொச்சுக்கு மொச்சுக்கு” என்று வாயைத் திறந்து திணித்து சத்தம் போட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சாப்பிடும்போது யாரையும் பார்க்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் ஒன்று, அங்கு வந்திருந்தவர்கள் அனைவரும் மிக நன்றாகவே தட்டுகள் நிறைய சாப்பிட்டார்கள். ஒருவேளை மதிய உணவைச் சாப்பிட மாட்டார்களோ என்னவோ!

 ‘Sunrise Peak’ (Seongsan Ilchulbong) என்னும் எரிமலைசிகரம்

ஜெஜூ தீவில் பார்ப்பதற்கு அத்தனை இடங்கள் இருக்கின்றன! முதலில் நாங்கள் ‘Sunrise Peak’ (Seongsan Ilchulbong) என்னும் எரிமலை உச்சிக்குச் செல்ல திட்டமிட்டுக் கிளம்பினோம். அதிகாலையில் சென்றிருக்க வேண்டியது. சூரியன் வருவது சந்தேகம் என்பதால் தாமதமாகச் சென்றோம். குளிர் வேறு! இரண்டரை மணிநேரம் கடலை ஒட்டிய சாலைப் பயணம். வழியில் சிறு கிராமம் போல் ஒன்று தெரிய, வண்டியை உள்ளே விட்டோம். வீடுகளற்ற நிலங்களில் முள்ளங்கி விளைச்சல் அமோகமாக இருந்தது. ஒவ்வொரு முள்ளங்கியும் நம்மூர் முள்ளங்கிகள் 10 சேர்ந்தால் எப்படி இருக்குமோ அந்த சைசில்! இந்தோனேசியாவிலிருந்து வந்த அகதிகளை? விரட்டி விரட்டி வேலை வாங்கிக்கொண்டிருந்த கொரியன் நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்று உடைந்த ஆங்கிலத்தில் கேட்டுக்கொண்டு நாங்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.


அங்கிருந்து ஊருக்குள் சென்றால் மொத்தமே நான்கைந்து தெருக்கள்தான் இருந்திருக்கும். பெரிய பெரிய வீடுகள். தொடர்களில் ஆழ்கடலில் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் மூச்சைப் பிடித்துக் கொண்டு மீன் பிடிக்கச் செல்லும் ‘ஹேன்யோ’ பெண்கள் ஆரஞ்சு வண்ண வட்டவடிவ கூடைகளைச் சுமந்து செல்வார்கள். பெரும்பாலான வீடுகளில் அந்தக் கூடைகள் தொங்கிக்கொண்டிருந்தன. மீனவப் பெண்களாக இருப்பார்கள் போல! தெருக்களில் குழந்தைகள் நடமாட்டம் கூட இல்லை! எப்படி இப்படி வெறிச்சென்று இருக்கிறதோ என்று ஆச்சரியமாக இருந்தது!

கடற்கரையோரம் வண்டியை நிறுத்தி அமைதியாக கரையைத் தொட்டுச் செல்லும் அலைகளைப் பார்த்தவாறே இறங்கி சிறிது தூரம் உள்ளே சென்றோம். கரையோரம் கடற்பாசிகள், நத்தக்கூடுகள், பல வண்ணங்களில், உருவங்களில் சங்குகள், சிப்பிகள் என்று வேடிக்கை பார்க்க நேரம் போனதே தெரியவில்லை!

கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்களே இல்லாத இடத்தில் இயற்கையின் நடனம் அதிஅற்புதமாக இருந்தது! ஈஷ்வர் இருந்திருந்தால் ஷேக்ஸ்பியர், ஓர்ட்ஸ்ஒர்த், யேட்ஸ் கூறியது என்று அந்த ரம்மியமான சூழலுக்கு ஏற்ற கவிதை, வசனங்களைச் சொல்லி தியானநிலையில் இருந்திருப்பார் என்று நினைத்துக் கொண்டோம். உச்சி வெயில் வருவதற்கு முன் கிளம்பிவிட வேண்டும் என்று அங்கிருந்து செல்ல மனமில்லாமல் ஆட்கள் இல்லாத சாலைகளில் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம்.

வழியில் காஃபி கடைகளைத் தேடினால் ‘ஸ்டார்பக்ஸ்’ தான் தெரிந்தது. ஆங்கிலம் பேசுபவர்கள் இருந்ததால் வேண்டியதைக் கேட்டு வாங்க ஒரு பிரச்சினையும் இல்லை. ‘கம்சாஹமிதா’ சொல்லி அரைமணி நேரத்தில் ‘sunrise peak’கிற்கு வந்தால்… அடேங்கப்பா! பேருந்துகளில், கார்களில் சுற்றுலாவினர் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது! நல்ல வேளை! வண்டியை நிறுத்த அருகிலேயே இடம் கிடைத்து விட்டது. மலையைப் பார்த்தால், “என்ன இப்படி செங்குத்தா இருக்கு? அய்யோடா! லதா இன்னிக்கு உனக்கு இருக்கு”😱

மலைக்குச் செல்ல டிக்கெட் வாங்க சிறிது தூரம் நடக்க வேண்டியிருந்தது. அதற்கே எனக்கு மூச்சிரைத்தது. விண்ட்டர் ஜாக்கெட் கணம் வேறு. மழை இல்லாததால் மொத்த சுற்றுலாக்கூட்டமும் அதுவும் வயதான சீனர்கள் கூட்டம் அங்கே குழுமியிருந்தது. அவர்களைப் பார்த்தால் எப்பொழுதும் பொறாமையாக இருக்கும். ‘விறுவிறு’வென்று பாட்டிகளும் தாத்தாக்களும் நடக்கிறார்கள். ‘கிடுகிடு’ வென மலையேறுகிறார்கள்! யாருக்கும் கால்கள் வளைந்திருக்கவில்லை. மதுரையில் நான் பார்த்த பல வயதான ஆண், பெண்களுக்கு மூட்டு தேய்ந்து கால்கள் வளைந்து😔 கவலைக்குரிய விஷயம். இந்தப் பாட்டிகள் குட்டையாக அதிக எடையில்லாமல் மலையேறுவதெல்லாம் பேரதிசயமாக இருந்தது எனக்கு! அப்புசாமி தாத்தாக்களை விட சீதா பாட்டிகள் அழகாக, நேர்த்தியாக உடையணிந்து நகப்பூச்சு, மேக்கப், உதட்டுச்சாயம், வெயிலுக்கு கண்ணாடி, தலைக்குத் தொப்பி என்று அட்டகாசமாக வந்திருந்தார்கள். யாரையும் கூப்பிடாமல் தனக்குத்தானே செல்ஃபி’ எடுத்துக் கொண்டு ரகளை செய்து கொண்டிருந்தார்கள். 

படிகளுடன் கூடிய பாதையில் நாங்கள் மெல்ல மலையேற ஆரம்பிக்க, சுற்றிலும் சூரிய ஒளியில் மின்னும் நீல கடல். மலைப்பாதையில் பலவித பைன் மரங்களுடன் நிழல் தரும் பெரு மரங்கள். நடுநடுவே தனித்து நிற்கும் செங்குத்தான பாறைகள். ஒவ்வொரு பாறைக்கும் கதைகள் இருக்கிறது. அத்தீவின் மக்களும் இயற்கையைத் தெய்வமாக வணங்கியிருப்பது புரிந்தது.மற்ற நாடுகளைப் போலவே இங்கும் மூளைச்சலவை செய்யப்பட்டு மரபிலிருந்து விலகி வரலாற்றை மறந்திருக்கிறார்கள். மறக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

செங்குத்தான பயணம் ஆரம்பிக்க, ஆங்காங்கே இளைப்பாறிச் செல்லும் கூட்டத்துடன் ஐக்கியமாகி, மேலே செல்ல முடியுமா என்ற சந்தேகம் கூட வந்து விட்டது. அத்தனை கடினமில்லை என்ற இந்த மலையேற்றத்திற்கே நாக்கு தள்ளுதே நாளை ஹாலாசன் மலை கடினமான ஏற்றம் வேறு! இப்பவே கண்ணை கட்டுதே😓

நான் யோசிக்கிறேன் என்று தெரிந்து “மெதுவா போகலாம்மா. உன்னால முடியும். உன் ஜாக்கெட்டை குடு. அதை வேற போட்டுக்கிட்டு அதனால தான் இப்படி வேர்த்துக் கொட்டுது.” உற்சாகப்படுத்திக் கொண்டே பொறுமையாக வந்தாள் என் செல்லம். ஒவ்வொரு இடத்திலிருந்தும் கீழே பார்க்க வெகுதொலைவிற்கு வந்திருப்பது தெரிந்தது. எல்லா இடங்களிலும் முடிந்த வரை ‘கிளிக்’ ‘கிளிக்’ தான். 30 நிமிடங்களில் ஏறி விடலாம் என்று இணையதளத்தில் போட்டிருந்தார்கள். மலை உச்சியை அடைய 45 நிமிடங்களாயிற்று! அழகாக படிகள் அமைத்து சுற்றுலாவினர் அமர்ந்து கண்டுகளிக்கும் வகையில் அமைத்திருந்த இடத்தில் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டோம்.

5000 வருடங்களுக்கு முன் கடலில் வெடித்த எரிமலை உருவாக்கிய ‘Tuff Cone’ என்ற அரிய பாறை வகை தான் இந்த Ilchulbong கிரேட்டர். 600 மீட்டர் அகலம் கொண்ட பாறை கடல் மட்டத்திலிருந்து 182 மீட்டர் உயரத்தில் பச்சைப்பசேல் என்றிருக்கிறது! கண்ணுக்கு குளிர்ச்சியாக சுற்றிலும் நீல வண்ண கடலும், சிலுசிலு கடற்காற்றும், பசுமைத்தோட்டமுமாய் ரம்மியமாக இருந்தது! இங்கு 240-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்கள்.

இது மாதிரியான பாறை அமைப்புகள் உலகில் மிகச்சிலவே. அதனாலேயே, 2007ல் யுனெஸ்கோ உலக இயற்கை பாரம்பரியத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 2010ல் ‘ஜெஜு வல்கானிக் தீவுகளும் லாவா குழாய்களும்’ உலக புவியியல் பூங்கா (Global Geopark) பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது போன்ற தகவல்களை அங்கே தெரிந்து கொண்டோம்!

இத்தனை கஷ்டப்பட்டு ஏறி வந்ததன் பலனை முழுமையாக அனுபவித்துவிட்டு படிகளில் இறங்க ஆரம்பித்தோம். ஏறிச்செல்லும் பாதையிலிருந்து இது வேறு பாதையில் செல்கிறது. பவளப்பாறைகள் நிரம்பிய பரந்து விரிந்த கடலின் வண்ணம் மனதை கொள்ளை கொள்ள, காட்சிகளை மனதில் பதிந்து வைத்துக் கொண்டேன்.

விரைந்து செல்லும் படகில் சுற்றுலாவினரை ஏற்றிக்கொண்டு தீவைச் சுற்றி வந்து கொண்டிருந்தன இரு படகுகள்! “அம்மா போகலாமா?” “பயங்கர வேகமா ஒரு புறம் படகைச் சரித்துக்கொண்டே போகிறான். நனைந்தால் மாற்றுத்துணி இல்லை. வேண்டாம்” என்று சொல்லிவிட்டேன். மீன் பிடிக்கச் செல்லும் பெண்களின் நடனம் இரண்டு மணிக்குத் தான். அதற்கு இன்னும் ஒன்றரை மணிநேரம் இருக்கிறது என்று சிறிது நேரம் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம். பெரும்பாலும் ஆசியர்கள்! வெகுசில வெள்ளையர்கள். நாங்கள் இருவர் மட்டுமே அங்கே இந்திய முகங்கள்!

ஓய்வுபெற்ற ஜெர்மானியர் ஒருவர் மனைவியுடன் ஆறு மாதமாக ஆசியப்பயணம் சுற்றிக்கொண்டிருப்பதாகக் கூறினார். அடுத்து ஜப்பானுக்குப் போவதாகச் சொல்ல, தன்னுடைய ஜப்பான் அனுபவங்களை மகள் பேசிக்கொண்டிருந்தாள். நான் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தேன்.

நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த ஓய்வுபெற்ற கொரியன் ஒருவர் எங்கிருந்து வருகிறோம், பார்த்தாலே தெரிகிறது அம்மாவும் மகளும் என்று ஆங்கிலத்தில் சரளமாக உரையாடினார். வேலை நிமித்தமாக பல நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார். இந்தியாவின் லடாக் பகுதிக்குச் சென்று வந்ததாகவும் மீண்டுமொருமுறை அங்குள்ள புத்த மடாலயங்களுக்குச் சென்று வர விரும்புவதாகவும் கூறினார். நானும் ஈஷ்வர் அங்கு சென்று வந்த அனுபவங்களைக் கூறினேன். அவருடன் வந்திருந்த நண்பரை அறிமுகப்படுத்தினார். அவருக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கவில்லை. ‘ஆண்யோஅசையோஓ’ என்று நாங்கள் கூற கடகடவென்று கொரியனில் பேச… சப் டைட்டில் இல்லாமல் அவதிப்பட்டோம்😃 “மிகவும் அழகான, பாதுகாப்பான நாடு இது. உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகள்” என்று கூறி அவர்கள் விடைபெற்றார்கள்.

அங்கிருந்த கடைகளில் ஊருக்கு எடுத்துச் செல்ல சில பரிசுப்பொருட்கள், மாண்டரின், டேன்ஜரின்ஸ் பழங்களால் செய்த இனிப்புகள், பழங்களை வாங்கிக் கொண்டோம். காலையில் சாப்பிட்டது இன்னும் நிறைவாக இருக்கவே, பழத்தை மட்டும் ருசித்தோம்.

தொடர்கள் மூலமாக நான் அறிந்திருந்த ஜெஜூ தீவு, மினுமினுக்கும் நீல வண்ண கடலுடன் மீன்பிடி கிராமங்களும் சிறு வீடுகளும் சுத்தமான தெருக்களும் மரத்தடியும் தான். அதுவும் ‘Welcome to Samdal-ri’ தொடர் முழுவதையும் அங்கே எடுத்து பார்ப்பவர்களை பைத்தியமாக்கி விட்டார்கள். ஒவ்வொரு இடமும், மரமும் என்று பிரபலமாகி என்னைப் போன்ற பைத்தியங்கள் அங்கே படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்😍 அத்தனை கூட்டம் அங்கே இருந்தது!

‘உடோ’ தீவு 
மலையின் கிழக்கே ‘Udo Island’. பசு படுத்திருப்பது போல காட்சி தருவதால் ‘Cow Island’ என்றும் அழைக்கப்படும் அழகிய தீவு. இங்கிருந்து படகில் 15 நிமிடங்களில் அங்கு பயணிக்கலாம் என்று தெரிந்தவுடன் வண்டியை எடுத்துக் கொண்டு படகுகள் புறப்படும் இடத்திற்குச் சென்று விட்டோம். இரண்டு மணிக்கு கிளம்பி 2.15க்கு ‘உடோ’ தீவில் கால் வைக்க, ஆஹா! இந்த அழகிய தீவைப் பார்க்க முடியுமோ என்று எண்ணியிருந்தேன். அழைத்து வந்து விட்டாள் செல்லம்😍 ஐந்தரை மணிக்குள் திரும்பி விட வேண்டும் என்று கூறி இறக்கி விட்டார்கள். இந்தக் குட்டி தீவில் ஒரு ரவுண்டு அடிக்க ஒரு மணி நேரம் போதும். நிறுத்தி நிறுத்திச் சென்றால் 2-3 மணிநேரங்கள் தாராளமாக எடுக்கும். ஏற்றமும் இறக்கமுமாய் சாலைகள்! நீல-பச்சை கதிர் கலக்கிய நீர் வண்ணம், திரைப்படங்கள், விளம்பரங்களில் பெரும் புகழ் பெற்ற இடமாக வலம் வர, சுற்றுலாவினரும் இங்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

நடை, சைக்கிள், மினி மிதிவண்டி, மினி கார்களில் 17 கிமீ தீவைச் சுற்றிப்பார்க்க முடிகிறது. வாடகை விலை தான் அதிகம். அதுவும் கூட்டத்தைக் கண்டால், மொழி புரியாதவர்கள் வந்தால் நன்றாக கொள்ளை அடிக்கிறார்கள். பேரம் பேச வேண்டியிருக்கிறது. நாங்களும் இருவர் அமர்ந்து செல்லும் ஒரு மூன்று சக்கர வண்டியை எடுத்துக் கொண்டோம். மகள் சில நிமிடங்களில் அதை ஓட்டப் பழகிக் கொண்டாள். நான் சொகுசாக பின்னால் அமர்ந்து கொண்டேன். ஈஷ்வர் வந்திருந்தால் பைக்கை எடுத்திருப்பார்😀 பயமில்லாமல் வழியெங்கும் நிறுத்தி வேடிக்கை பார்க்க முடிந்தது.

எரிமலைக்கற்கள் நிரம்பிய Geommeolle கருப்பு மணல் கடற்கரை பார்க்க வித்தியாசமாக இருந்தது! கடலில் கால் நனைத்துவிட்டு வந்தோம். 2000 பேர் வரை வசிக்கும் தீவில் குடியிருப்புகள், பசுமை விளைநிலங்கள், வெண்மணல் கடற்கரை, ஏகத்துக்கும் உணவகங்கள் என்று காட்சிகளுக்குப் பஞ்சமில்லை. புதிய வீடுகளைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். தோட்டங்களுடன் அழகான குட்டி குட்டி வீடுகள். எரிமலைக்கற்களைக் கொண்டே சுற்றுச்சுவர்களை எழுப்பியிருந்தார்கள். வளர்ந்து வரும் தீவு போலிருக்கிறது!

 
Joseon அரசு காலகட்டத்தில், வழிகாட்டவும், பாதுகாப்பிற்காகவும் smoke signals பயன்படுத்தப்பட்ட இடமாக Beacon Mound இருந்திருக்கிறது. அருகே வெள்ளைநிற உலோக லைட்ஹவுஸ். இத்தீவின் நிலக்கடலை ஐஸ்கிரீம் மிகவும் பிரபலம். அதையும் விடுவானேன்😉சுவையாக இருந்தது! பெண்கள் ஆழ்கடல் உயிரினங்களைப் பிடித்து சுடச்சுட சமைத்துக் கொடுக்கும் உணவகங்கள் கரையோரங்களில் இருக்கின்றன. நேரம் தான் இல்லை எங்களுக்கு. இல்லையென்றால் அதையும் ஒரு கை பார்த்திருக்கலாம்.

அங்கிருக்கும் மலைஉச்சியிலிருந்து தீவைச் சுற்றியிருக்கும் அழகைக் காண முடிகிறது. திகட்ட திகட்ட தீவைச் சுற்றி வந்தோம். நாலரை மணிக்கு வண்டியைக் கொடுத்தவுடன் அவர்களே படகுத்துறையில் இறக்கி விட்டுவிட்டார்கள். 5.30 மணிக்கு கடைசி படகு. அதற்குள் சுற்றுலாவினர் அனைவரும் திரும்பிவிட, ஊரே காலியானது போல இருந்தது. கடைகள், உணவகங்கள் எல்லாம் மூடிவிட்டிருந்தார்கள்! கோடைக்காலத்தில் நேர நீட்டிப்பு இருக்கும் என்று தெரிந்து கொண்டோம்.

வரிசையில் நின்று படகில் ஏறி உள்ளே போய் உட்காரலாம் என்று சென்றால் எல்லோரும் கீழே தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்திருக்கிறார்கள். இதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை! கொரியன் தொடர்களில் கதாபாத்திரங்கள் கீழே உட்காருவது சர்வசாதாரணமாக இருக்கும். படகில் கூடவா?! நல்ல பழக்கம் தான்! அங்கே மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் குறைவு போலிருக்கிறது! நல்ல ஊருடே!

அங்கும் நாங்கள் இருவர் மட்டுமே அந்நியமாகத் தெரிந்தோம். பை, பை உடோ ஐலாண்ட். சில மணிநேரங்கள் தான் அங்கிருந்தோம் என்றாலும் பார்த்த காட்சிகள் என்றும் மனதில் நிலைத்திருக்கும். மகிழ்வுடன் திரும்பி வண்டியை எடுத்துக்கொண்டு விடுதி திரும்பும் வழியில் ஜெஜூ தீவில் பிரபலமான Seopjikoji Coastal Walk செய்து விடலாம் என்று அங்கு சென்றோம்.

வாடகை வண்டிகளில் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருந்தார்கள் மக்கள். குளிரும் கடற்காற்றுமாய் மீண்டும் மலையேற்றம். அங்கே சுற்றுலாவினரைக் கவரும் வண்ணம் gingerbread ஹவுஸ் ஒன்று பேக்கரி ஆக செயல்பட்டு வருகிறது. கடலும் செங்குத்துப்பாறைகளும் பார்க்க சலிக்கவே இல்லை. ஏறிக்கொண்டே சென்றால் மலையுச்சியில் ஒரு லைட்ஹவுஸ். இந்த இடங்கள் எல்லாமே கனடாவின் கிழக்குக்கடற்கரையோரம் நாங்கள் சென்ற பயணத்தை நினைவுறுத்திக்கொண்டே இருந்தது. என்ன? அங்கே கல் பாறைகள். இங்கே எரிமலைப் பாறைகள். சீற்றமில்லாத அமைதியான கடல் இங்கே. அங்கே ஆர்ப்பரிக்கும் அட்லாண்டிக் கடல்.

‘கிடுகிடு’வென கூட்டத்துடன் ஏறி சுற்றிப் பார்த்துவிட்டு ‘ஜில்ல்ல்ல்ல்’ காற்று முகத்திலடிக்க இறங்கி விட்டோம். சூரியனும் களைத்து மேகங்களில் புதைந்து கொண்டிருந்தான். நடந்து நடந்து காலையில் சாப்பிட்டது முழுவதும் கரைந்து விட்டது. விடுதி அருகே வரும்பொழுது மணி இரவு 7.45. ஊரே உறக்கத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தது. உணவகங்களைக் கூட சீக்கிரமே மூடிவிடுவார்கள் போலிருக்கு! என்ன ஊருடா இது?

இரவு உணவிற்கு பிரபலமான கொரியன் உணவகத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்று கூறி விலாசத்தைக் கண்டுபிடித்து உள்ளே சென்றால் இரண்டு குடும்பங்கள் மேஜை நிறைய உணவுக்கிண்ணங்களுடன் பகிர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். எங்கள் இருவரைக் கண்டதும் பரிமாறுபவர்/நிர்வாகி உள்ளே அழைத்து அமர வைத்தார். புதுமுகங்களைப் பார்த்தவுடன் கேட்கும் கேள்விகளைக் கேட்டு விட்டு என்ன வேண்டும் என்று கேட்க, மகள் உணவை ஆர்டர் செய்ய கொண்டு வருகிறேன் என்று உள்ளே சென்றார். ஒரு பெண்மணி தண்ணீர் குவளை, டம்ளர்களை வைத்து விட்டுச் செல்ல, ஒரு பெரிய தட்டு நிறைய குட்டி குட்டி கிண்ணங்களில் கிம்ச்சி, சூப், சமைத்த, சமைக்காத காய்கறிகள் என்று ஐயோ! எது என்னன்னு தெரியலையே என்று வடிவேலு மாதிரி தலையைச் சொரிந்து கொண்டே இதெல்லாம் எப்படி சாப்பிடறதுன்னு கொஞ்சம் சொல்லுங்க என்று கேட்க, அவரும் சிரித்துக் கொண்டே, முட்டைகோஸ் இலைகளில் சில காய்கறிகள், கிம்ச்சியை வைத்து சுருட்டி அப்படியே வாய்க்குள் தள்ள வேண்டும் என்றார்.

ஆகா! சோதனையால்ல இருக்கு! seaweed சூப் எடுத்துச் சுவைத்துப் பார்த்தால் ஒருவித கவிச்சி வாசனையுடன் உப்பு தூக்கலாக இருந்தது. ஆனாலும் குடித்தோம். தொடர்களில் கொரியர்கள் பிறந்தநாளின் பொழுது அம்மாக்கள் இதைத்தான் செய்து கொடுப்பது போல் காட்சிகள் இருக்கும். உடலுக்கு நல்லதாம்.

இரண்டு மூன்று கிண்ணங்களில் இருந்த காய்கறிகள் விரைவிலேயே காணாமல் போயிற்று😋மீன் வருது என்று கூறியவர் அங்கே உள்ளே சமைத்துக் கொண்டிருந்த இந்திய இளைஞனை அறிமுகப்படுத்தினார்! அமைதியாக உள்ளே இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்த மனுஷன் வெளியே வரவே இல்லை. சிறிது நேரத்தில் ஜெஜூவின் பிரபலமான grilled hairtail fish முழுமீனாக ஒரு நீண்ட தட்டில் வந்தது. இத்தனை பெரியதாக இருக்கிறதே! இரண்டு பேர் சாப்பிட முடியுமா? யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே கத்தியுடன் வந்தவர் எங்கள் கண்முன்னே லாவகமாக இரண்டாகப் பிளந்தார். அதற்குப் பிறகு மீன் எப்படி காலியானது என்றே தெரியவில்லை😂 எலும்பு மட்டும் தட்டில் இருந்தது. திருப்தியாக வயிறு முட்டச் சாப்பிட்டிருந்தோம் . எங்களுக்குப் பிறகு வந்த ஒரு குடும்பத்துடன் கடையை மூடி விட்டார்கள்! விடிய விடிய உணவகங்களைத் திறந்து வைத்து வியாபாரம் செய்யும் பழக்கமோ அவசியமோ இல்லை போலிருக்கு! சாப்பிட்டதற்குப் பணத்தைக் கொடுக்கும் பொழுது அவர் உணவகத்தைத் தேடி வந்த எங்களுக்குப் பரிசாக அங்கே விற்றுக் கொண்டிருந்த டேன்ஜரின் இனிப்பு பாக்கெட் ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார். நன்றி கூறி புது உணவுகளை உண்ட திருப்தியுடன் விடுதிக்குத் திரும்பினோம்.

வண்டியை நிறுத்தி சிறிது நேரம் நடந்துவிட்டு வரலாம் என்று நடமாட்டமில்லாத தெருக்கள் வழியாக சாலை வரை பயமில்லாமல் சென்று வர முடிகிறது. கால்கள் களைத்து  ஹாலாசன் மலைப்பயணம் வேண்டாம் என்று கெஞ்ச, அருகில் இருந்த மசாஜ் நிலையத்தில் காலுக்கு மசாஜ் செய்து கொண்டோம். நாளை எங்குச் செல்லலாம் என்று திட்டமிட்டு அடுத்த நாளும் மழை இல்லாத நாளாக இருக்கவே நிம்மதியாக உறங்கச் சென்றோம்.

தென்கொரியப் பயணம் - சியோல் அனுபவங்கள்

சொல்வனம் இதழ்-350, 14-செப்-2025ல் வெளியான பயணக்கட்டுரைத் தொடர்,  தென்கொரியப் பயணம் – சியோல் அனுபவங்கள் நான் பிறந்து வளர்ந்தது தூங்கா நகரத்தி...