Tuesday, October 1, 2024

அடுத்த அமெரிக்க அதிபர் யார்?

சொல்வனம் இதழில் வெளிவந்துள்ள அமெரிக்க அதிபர் வேட்பாளர்களின் போட்டியைப் பற்றின கட்டுரை அடுத்த அமெரிக்க அதிபர் யார்?



இன்னும் இரு மாதங்களில் அமெரிக்காவின் 47வது அதிபர் யாராக இருக்கக்கூடும் என்பதில் உலகமே ஆவலோடு காத்திருக்கின்றது. யாருமே எதிர்பாராத அளவிற்குத் தேர்தல் களத்தில் மாற்றங்கள் சடுதியில் நிகழ்ந்து விட்டது. எந்த வருடமும் இல்லாத அளவிற்கு நாளுக்கு நாள் கருத்துக்கணிப்புகள் மாறிக்கொண்டு வருகிறது.

இந்த வருடத் தொடக்கத்தில் அதிபர் வேட்பாளர்களாக குடியரசுக்கட்சியின் சார்பில் 78 வயதான முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் ஜனநாயக கட்சியின் தற்போதைய அதிபர் 81 வயதான பைடனும் தான் களத்தில் இருந்தனர். ஜூன் 27, 2024 அன்று ‘சிஎன்என்’ தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய விவாதத்திற்குப் பிறகு பைடனின் வயோதிகமும் உடல்நலம் சார்ந்த கேள்விகளும் பெரிதாகப் பேசப்பட்டது. “நா குழறிப் பேசுவது புரியவில்லை. இத்தனை நடுக்கத்துடன் நடந்து வரவே தள்ளாடுகிறாரே இவரை நம்பியா இன்னும் நான்கு வருடங்களுக்குப் பொறுப்பை ஒப்படைப்பது? அப்படியென்றால் இப்பொழுது வெள்ளை மாளிகை யார் பொறுப்பில் இருக்கிறது? அடிக்கடி மருத்துவர்கள் வந்து செல்வது எதற்காக” என்றெல்லாம் கேள்விகள் வர ஆரம்பித்தது. விவாதத்தின் போது “பைடன் பேசியதில் பலவும் எனக்குப் புரியவில்லை. நேயர்களுக்கும் புரிந்திருக்காது. ஏன் அவருக்கே என்ன பேசுகிறோம் என்று புரிந்திருக்காது” வழக்கம் போல ட்ரம்ப் தன்னுடைய ஸ்டைலில் பேசியது மக்களிடையே அதிக கவனத்தைப் பெற்றது.

அதற்குப்பிறகு ஜூன் 28 அன்று நார்த் கரோலினாவில் நடந்த தேர்தல் பரப்புரையில் தன்னுடைய மூப்பின் தடுமாற்றத்தை ஒத்துக் கொண்டார் அதிபர் பைடன். 29ந்தேதி அன்று நியூயார்க்கில் நிதி திரட்டும் கூட்டத்தில் அவரைப் போட்டியிலிருந்து விலகிச் செல்லுமாறு பதாகைகள் ஏந்திய வாக்காளர்கள் முற்றுகையிட்டனர். ஜூலை 2ம் தேதி அவர் கட்சியைச் சார்ந்த டெக்ஸாஸ் பிரதிநிதி லாயிட் டோகெட் போட்டியிலிருந்து வெளியேறுமாறு பகிரங்கமாகக் கூறிய முதல் ‘ஹவுஸ் டெமாக்ராட்’ ஆனார். அதற்குப்பின் அரிசோனா பிரதிநிதி ரவுல் கிரிஜால்வா, மாசசூசெட்ஸ் பிரதிநிதி சேத் மௌல்டன் ஆகியோரும் பைடனின் வெளியேற்றத்திற்கு அழைப்பு விடுக்க மற்ற கட்சிப் பிரதிநிதிகளும் இணைந்து கொண்டனர். ஜூலை 4 அன்று பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ‘ஸ்விங்’ மாநிலங்களைத் தளமாகக் கொண்ட இரண்டு வானொலி நிலையங்கள், ‘WURD’, ‘WAUK’ பைடனுடன் முன் பதிவு செய்யப்பட்ட நேர்காணல்களை ஒளிபரப்பின. முன்கூட்டியே வழங்கப்பட்ட கேள்விகளைக் கொண்டு நேர்காணல் நடத்தியாகப் பேட்டி கண்டவர்கள் உண்மையைச் சொல்ல நிலைமை தீவிரமாகியது. பைடன் மீதிருந்த அவநம்பிக்கை கூடியது. மருத்துவர்களை அழைத்து அவர் பதவியில் நீடிப்பது சரிதானா எனப் பரிசோதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கிடைத்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டன.

நிலைமையைச் சரிசெய்ய ஜூலை 5ந்தேதி ‘ஏபிசிநியூஸ்’ செய்தி தொகுப்பாளர் ‘ஜார்ஜ் ஸ்டீஃபனோபுலோஸு’டன் ஒரு நேர்காணல் நடந்தது. அப்பொழுது பைடன் “ட்ரம்ப் தன்னை இடைமறித்ததால் சொல்ல வேண்டிய பதிலைச் சொல்ல முடியாமல் போயிற்று. கடவுள் வந்து கேட்டுக் கொண்டால் ஒழிய இந்தப் போட்டியிலிருந்து நான் விலக மாட்டேன்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டார். பேட்டி எடுப்பவர் மீண்டும் மீண்டும் அவர் வயதும் தள்ளாமையும் இன்னும் நான்கு வருடங்கள் அவரை முழுமையாகச் செயல்பட வைக்குமா என்று சந்தேகத்துடன் கேட்டாலும் “தன்னால் முடியும். ட்ரம்ப்பைத் தோற்கடிக்க தன்னால் மட்டுமே முடியும்” என்று அதிபர் சொன்னதை நம்ப முடியாமல் தான் பார்த்துக்கொண்டிருந்தார் ஜார்ஜ். நேயர்களும் தான்.

அதற்கு மறுநாள் பேட்டி எடுத்த ஜார்ஜிடம் வழிப்போக்கர் ஒருவர் கேட்ட கேள்விக்கு “பைடன் சரியான வேட்பாளர் இல்லை” என்று தன்னுடைய கருத்தைக் கூற, அது வைரலானது. தொடர்ந்து பைடனின் தீவிர ஆதரவாளராக இருந்த ஹாலிவுட் ‘சால்ட்பெப்பர்’ நாயகன் ‘ஜார்ஜ் குளூனி’ வேறு கண்டிப்பாக பைடன் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்று பேட்டி கொடுக்க, நிலைமை மிகவும் மோசமானது. இத்தனை நடந்த பிறகு ஒரு மூத்த அரசியல் தலைவரிடம் எப்படி போட்டியிலிருந்து விலகிச்செல்லச் சொல்வது என கட்சித்தலைமையும் நிலைமையை உணர்ந்து தவித்துக் கொண்டிருந்தது.

ஜூலை 1,2024 அன்று வெர்மான்ட்டின் பீட்டர் வெல்ச், பைடனை போட்டியிலிருந்து விலகுமாறு பகிரங்க அழைப்பு விடுத்த முதல் ஜனநாயகக் கட்சி செனட்டர் ஆனார். இவரையும் சேர்த்து 10 ஜனநாயகக் கட்சி காங்கிரஸார் போட்டியிலிருந்து விலக கோரிக்கை வைத்தனர். இந்த எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டே வந்தது.

ஜூலை 11ல் வாஷிங்டனில் நடந்த ‘நேட்டோ’ உச்சிமாநாட்டில் உக்ரேனிய அதிபர் ‘வோலோடிமிர் ஜெலென்ஸ்கி’யை ‘அதிபர் புடின்’ என்று அறிமுகப்படுத்தி பேரதிர்ச்சியைத் தந்தார். அதைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஹாரிஸை “துணை அதிபர் ட்ரம்ப்” என்று தவறாகக் குறிப்பிட்டார். மேலும் “நீங்கள் வெற்றி பெற வழி இல்லை என்று என்னுடைய தேர்தல் குழு கூறினால் மட்டுமே தான் போட்டியிலிருந்து வெளியேறுவேன்” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

ஜூலை 13 அன்று பென்சில்வேனியாவின் பட்லர் நகரில் நடந்த தேர்தல் பேரணியில் ட்ரம்ப் படுகொலை முயற்சி நடக்க, அந்த நேரத்திலும் காயமடைந்த ட்ரம்ப் மேடையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டபோது முஷ்டியை உயர்த்தி, “ஃபைட் ஃபைட் ஃபைட்” என்று உரத்துக் கூற, கூட்டமும் அதை எதிரொலித்தது. ட்ரம்ப்பின் செல்வாக்கும் சற்றே அதிகரித்தது.

ஜூலை 16ல் பைடன் பேட்டியளித்த நேர்காணலில் “ஆட்சி செய்ய இயலாத உடல்நிலை காரணங்கள் ஏற்பட்டால் மட்டுமே போட்டியிலிருந்து விலகுவதைப் பற்றி பரிசீலனை செய்வேன்” என்று கூறினார்.

ஜூலை 17 அன்று பைடனுக்கு ‘கோவிட்’ என்று செய்திகள் வெளிவந்தன! அதைத்தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இதற்கு முன்பே உயர்மட்ட ஜனநாயகக் கட்சியினரான முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி, செனட் பெரும்பான்மைத் தலைவர் சக் ஷுமர், ஹவுஸ் சிறுபான்மைத் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ் ஆகியோர் பைடனைச் சந்தித்து அவர் தேர்தலில் தொடர்ந்தால் நவம்பர் மாதத்தில் ஜனநாயகக் கட்சிக்கு ஏற்படும் இழப்புகள் குறித்து தீவிர கவலைகளை வெளிப்படுத்தியதாக ‘பொலிட்டிக்கோ’ உள்ளிட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜூலை 18, குடியரசுக் கட்சி மாநாட்டில் ட்ரம்ப் தன்னுடைய கட்சி சார்பில் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கபட்டார். துணை அதிபர் வேட்பாளர் ஜேடி வின்சுடன் மேடையில் பேசி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

ஏற்கெனவே ஆளும் அரசின் இஸ்ரேல் ஆதரவுக் கொள்கையினால் கடுப்பிலிருந்த மில்லினியல்களுக்கு பைடன் மீதிருந்த நம்பிக்கையும் குறைந்து செல்வாக்கு அதிரடியாகச் சரிந்தது. அதுவரையில் பைடனை ஆதரித்து பணத்தைக் கொட்டியவர்கள் விவாதத்திற்குப் பின் ட்ரம்ப்பின் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக மாறி வரும் நிலையைக் கண்டு அவசரகதியில் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டனர். கட்சியின் மிகப்பெரிய நன்கொடையாளர் ஒருவர், பைடனின் மறுதேர்தல் முயற்சி யதார்த்தத்துடன் சற்றும் தொடர்பில்லாதது. ஹிலரி க்ளிண்டனின் 2016 பிரச்சாரத்தின் தவறுகளை மீண்டும் செய்யக்கூடும் என்றும் அஞ்சுவதாகக் கூறினார். விவாதத்திற்கு முன்பு வரை கைகுலுக்கி ஆதரவு தெரிவித்தவர்கள் கூட வெளிப்படையாகத் தங்களுடைய ஆதரவை விலக்கிக் கொண்டது மட்டுமில்லாமல் உடனடியாக வேட்பாளர் பதவியிலிருந்து விலகி துணை அதிபர் கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று ஒருமித்த குரலில் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். பைடனே எதிர்பாராத திருப்பம் அது. ஜனநாயகக் கட்சியும் கள்ள மெளனத்துடன் இதை ஆதரித்தது.

விவாதத்தின் பிறகு வந்த கருத்துக்கணிப்புகள், மக்களின் எண்ணங்களை அறிந்து அவரே கௌரவமாக விலகி இருந்திருக்க வேண்டும். அரை நூற்றாண்டுகளாக அரசியலில் கோலோச்சியவர். கடவுளே வந்து சொன்னால் ஒழிய தன் முடிவில் மாற்றம் கிடையாது என்று கூறியவரே வேறுவழியின்றி பெருந்தன்மையுடன் நாட்டின் நலத்தில் அக்கறை கொண்டு விலகுவதாக அறிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

ஜூலை 21 அன்று ஜனநாயகத்தைக் காக்க போட்டியிலிருந்து விலகுவதாக சமூக ஊடகங்கள் வாயிலாக பைடன் அறிவித்து கட்சியின் வேட்பாளராக ஹாரிஸை முன்மொழிந்தார். தேர்தலுக்கு 100 நாட்களே இருந்த நிலையில் ஹாரிஸும் பெருமனதுடன் ஏற்றுக்கொண்டார். நாட்டுக்காக பைடன் செய்த மிகப்பெரிய தியாகம் என்று வானளாவ புகழ்ந்தார்.

இரு கட்சியும் தங்கள் அதிபர் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கவே ஒரு ‘மினி தேர்தல்’ எல்லா மாநிலங்களிலும் நடக்கும். போட்டியாளர்களும் தீவிரமாக மக்களின் ஆதரவைக் கோரி அவர்களைச் சந்தித்த வண்ணம் இருப்பார்கள். யாருக்கு மக்கள் அதிகம் வாக்களிக்கிறார்களோ அவர்களையே கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களாக கட்சி மாநாட்டில் அறிவிக்கும். ஜனநாயக கட்சியின் சார்பில் மார்ச் 2024ல் கலிஃபோர்னியா ஆளுநர் ‘கேவின் நியூசம்’, மிச்சிகன் ஆளுநர் ‘க்ரெட்ச்சென் விட்மர்’ வேட்பாளர்களாக ஆர்வம் காட்டிய போதும் பைடனின் அறிவிப்பிற்குப் பின் இருவரும் விலகி விட்டனர். அப்படி ஒன்று நடந்திருந்தால் கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பாரா என்பது சந்தேகம் தான். ஆனால் வேட்பாளர் தேர்தலில் பங்கு பெறாமல் இருந்த ஹாரிஸிற்கு அடித்தது பம்பர் லாட்டரி.  அவரைவிடத் தகுதியான வேட்பாளர்கள் கட்சியில் இருக்கிறார்கள். அனைவரும் பைடனுக்காக ஒதுங்கி இருந்தார்கள். ஆனால் இந்த இக்கட்டான நேரத்தில் அதிபருக்குப் பின் முக்கிய பொறுப்பிலிருந்த ஒரே தகுதியும் ட்ரம்ப்பை எதிர்க்கச் சரியான போட்டியாளராகவும் அவரை விட்டால் தற்போது கட்சியில் தகுந்த வேட்பாளர் வேறு யாரும் இல்லை என்ற நிலையில் இப்பொழுது களமிறக்கப்பட்டுள்ளார்.

வேட்பாளர்கள் தேர்வுப் போட்டியில் நீடிக்க முக்கிய அம்சமாக இருப்பது அவர்கள் பெரும் நன்கொடைகள் தான். நன்கொடைகள் குறைய ஒவ்வொரு வேட்பாளரும் போட்டியிலிருந்து விலகி விடுவார்கள். பந்தயத்தில் ஜெயிக்கும் குதிரையின் மீது தானே பணத்தைக் கட்டுவார்கள்? அப்படித்தான் தொடக்கத்தில் பைடனை ஆதரித்தவர்கள் அவர் மீது நம்பிக்கை கொண்டு ஏராளமான நிதியை வழங்கினார்கள். ஆனால் அதை விடவும் அதிகமாக ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் ட்ரம்ப்பிற்கு நிதியை அள்ளிக் கொடுத்தார்கள். அதுவும் அவர் மீது வழக்கு விசாரணைகள் நடந்து கொண்டிருக்கும் பொழுதே பலத்த ஆதரவை வழங்கினார்கள். இதுவும் ஜனநாயகக் கட்சிக்கு ஆச்சரியமாகவும் பைடன் மீதான நம்பிக்கை குறையவும் காரணமாக இருந்தது. பைடன் விலகிய பிறகு அவர் வசூலித்திருந்த அத்தனை நிதியும் ஹாரிஸின் தேர்தல் நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டு விட்டது. போட்டியில் ஹாரிஸ் களமிறங்கிய பிறகு உற்சாகம் பெற்ற கட்சியினர் தாராளமாக நிதி உதவிகள் செய்ய இன்று ட்ரம்ப்பை பின்னுக்குத் தள்ளிவிட்டார். தேர்தல் நிதியைக் கொண்டு தான் தேர்தல் செலவுகளைக் கையாள முடியும். இதை வைத்து ஹாரிஸ் வெற்றி பெறுவது திண்ணம் என்று கூற முடியுமா?

2016ல் ஹிலரி 623மில்லியன் டாலர்கள் நிதி திரட்டி (ட்ரம்ப் $335மில்லியன்) முன்னிலையில் இருந்தார் என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.
A graph showing a line graph

Description automatically generated

ஆகஸ்ட் 17,2024 அன்று ஜனநாயக கட்சியினர் நடத்திய மாநாட்டில் கமலா ஹாரிஸை ஆதரித்து அனைவரும் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்று ஒபாமா, க்ளிண்டங்களுடன் சேர்ந்து கோரிக்கையும் விடுத்தார் பைடன். ஆக, ஜனநாயகத்தைக் காப்போம் என்று கூறுபவர்கள் தான் அதை மீறி ஒரு வேட்பாளரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்!

மாநாட்டில் பேசிய அனைவரும் ட்ரம்ப்பைத் தோற்கடித்து ஜனநாயகத்தை மீட்டெடுக்க ஹாரிஸிற்கு வாக்களித்து மகத்தான வெற்றியை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, “ஏற்கெனவே மக்களிடையே குழப்பத்தையும் பிரிவையும் ஏற்படுத்திய ட்ரம்ப்பின் ஆட்சி மீண்டும் தொடர வேண்டாம். அது இன்னும் மோசமாகவே இருக்கும். தற்போது அமெரிக்கா புதியதொரு அத்தியாயத்திற்குத் தயாராக உள்ளது. ஹாரிஸிற்கு வாக்களிப்போம். அனைவரும் தேர்தலில் வாக்களியுங்கள்” என்று பேசியது ஆதரவாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதுவரையில் வெற்றி எங்களுக்கே என்று கொக்கரித்துக் கொண்டிருந்த குடியரசுக்கட்சியினரின் சுருதி கமலா ஹாரிஸின் வருகைக்குப் பிறகு சற்றே குறைந்திருப்பதாக ஊடகங்கள் செய்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன. இப்படித்தான் 2016லும் ட்ரம்ப்பிற்கு எதிராக ஊடகங்கள் இருந்தன என்று குடியரசுக்கட்சியினர் புறந்தள்ளுகிறார்கள். இரு அதிபர் வேட்பாளர்களும் தங்கள் துணை அதிபர்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். இருவருமே அத்தனை பிரபலமானவர்கள் இல்லை.

ட்ரம்ப் துணை அதிபராகத் தேர்ந்தெடுத்துள்ள 39 வயதுள்ள ஒஹையோ செனட்டர் ‘ஜேடி வேன்ஸ்’ முன்பு தீவிரமாக ட்ரம்ப்பை எதிர்த்தவர். இன்று தீவிர ஆதரவாளராக மாறியுள்ளார். எழுத்தாளர். யேல் பல்கலையில் சட்டம் பயின்றவர். கடற்படையில் பணியாற்றியவர். தற்போது செனட்டராக இளம் அரசியல்வாதி என்று பன்முகத்தன்மை கொண்டவர். இவருடைய ‘Hillbilly Elegy’ புத்தகம் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. அமெரிக்காவின் ஏழ்மையையும் சமூக அவலத்தையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் தன்னுடைய அனுபவங்கள் வாயிலாக மிக அழகாக எழுதிப் பிரபலமானார். அது படமாகவும் இயக்கப்பட்டு நெட்ஃபிளிக்ஸ்ல் வெளிவந்தது. “பொருளாதாரத்தில் சிக்கி இருக்கும் அமெரிக்காவிற்கு ட்ரம்ப் அதிபராவது அவசியம்” என்று குடியரசுக்கட்சி மாநாட்டில் பேசியுள்ளார். இந்திய வம்சாவளியான சட்டம் பயின்ற ‘உஷா சிலுக்குரி’ இவரது மனைவி ஆவார்.

கமலா ஹாரிஸ் தனது துணை அதிபராக மினசோட்டா ஆளுநர் ‘டிம் வால்ஸ்’ஐ தேர்ந்தெடுத்துள்ளார். இவர் பள்ளி ஆசிரியராக, கால்பந்து பயிற்சியாளராகப் பணிபுரிந்தவர். அமெரிக்க இராணுவ தேசிய காவலில் 24 ஆண்டுகள் பணியாற்றி சார்ஜென்ட் மேஜர் பதவிக்கு உயர்ந்து அதிலிருந்து ஓய்வு பெற்றவர். 2006 ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சிப் பதவியிலிருந்த ஒருவரைத் தோற்கடித்து அமெரிக்கப் பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் 2018ல் மினசோட்டா ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2022ல் மீண்டும் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மினியாபோலிஸ்-செயின்ட் பால்-ல் உள்ள ‘WCCO’ வானொலியின் அரசியல் ஆய்வாளரான ப்ளோயிஸ் ஓல்சன் , “அமெரிக்காவின் உட்புற கிராமங்களில் குடியரசுக்கட்சி வாக்காளர்கள் அதிகம். அதனால் அவர்களே தொடர்ந்து வென்று வருகிறார்கள். அங்கு இவரை அனுப்பினால் ‘சிகப்பு’ ‘நீல’மாக மாறும். அதற்கான அனுபவம் அவருக்கு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

துணை அதிபர்கள் யாராக இருந்தாலும் வாக்காளர்கள் பெரும்பாலும் தங்களுக்குப் பிடித்த கட்சி, அதிபர் வேட்பாளர், தேர்தல் கொள்கைகளைக் கவனத்தில் கொண்டு தான் வாக்களிக்கிறார்கள்.

வேட்பாளர்களின் இனம், பாலினம் என்ற வகையில் ஹாரிஸ் முன்னிலையில் இருக்கிறார். அதிக எண்ணிக்கையில் ஆண்களின் ஆதரவு ட்ரம்ப்பிற்கும் பெண்களின் ஆதரவு ஹாரிஸுக்கும் இருப்பதாக ‘சிபிஎஸ்’ கருத்துக்கணிப்பு இரண்டு வேட்பாளர்களுக்கு இடையே கணிசமான பாலினப் பிளவு உருவாகி வருவதைக் காட்டுகிறது. ட்ரம்ப்பின் முக்கிய ஆதரவாளர்கள் ஆண் வாக்காளர்களாகவும், 45-64 வயதுக்குட்பட்டவர்களாகவும், கல்லூரிக் கல்வி இல்லாத வெள்ளை வாக்காளர்களாகவும் உள்ளனர். இளம் வாக்காளர்கள், பெண்கள், கறுப்பினத்தவர்கள் ஹாரிஸிற்கு ஆதரவாக உள்ளனர்.

சமீபத்திய தேசிய கருத்துக் கணிப்புகளின் சராசரியில் ட்ரம்ப்பை விட ஹாரிஸ் 3.4 புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளார். இருப்பினும் அதிபர் தேர்தல் முடிவுகளில் முக்கிய பங்கு வகிக்கும் ‘ஸ்விங்’ மாநிலங்களில் போட்டி மிக நெருக்கமாக, தீர்மானிக்க முடியாதபடி தான் இருப்பதாகக் கருத்துக்கணிப்புகள் வெளியிட்டுள்ளது. அவரவர் கட்சி சார்பில் வேட்பாளர்கள் இருவரும் மக்களிடையே பெரும் ஆதரவு பெற்றிருந்தாலும் வெற்றி யாருக்கு என்பதை நிர்ணயிக்கப் போவது ‘போர்க்கள’ மாநிலங்களான(battleground states) அரிசோனா, ஜார்ஜியா, மிக்சிகன், நெவாடா, நார்த் கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் வாக்குகள் தான். மற்ற குடியரசுக்கட்சி மாநிலங்கள் பெரும்பாலும் அந்தக் கட்சி அதிபர் வேட்பாளருக்கும் ஜனநாயக கட்சி மாநிலங்கள் அக்கட்சியின் அதிபர் வேட்பாளருக்கும் வாக்களித்து விடும். ஆனால் விதிவிலக்காக சில மாநிலங்கள் மட்டும் ஒவ்வொரு தேர்தலுக்கும் அதிபர் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் வேறுபடும். அதைத்தான் ‘போர்க்கள மாநிலங்கள்’/’ஸ்விங் ஸ்டேட்ஸ்’ என்றழைக்கிறார்கள்.

A map of the united states

Description automatically generated

ஏழு மாநிலங்களில் ஆறில் ஹாரிஸ் முன்னணியில் இருப்பதாகவும் நெவேடாவில் ட்ரம்ப் வலுவாக இருப்பதாகவும் ‘குக் அரசியல் அறிக்கை’ காட்டுகிறது. 2020ல் பைடன் வெறும் 0.4 சதவீதம் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அரிசோனாவில் ஹாரிஸின் வலுவான முன்னிலை, தன்னுடைய முன்னோடியான பைடனின் பின்தங்கியிருந்த வாக்குவங்கியில் இருந்து முன்னேறியுள்ளதும் ட்ரம்ப்பிற்குச் சவாலாக இருப்பதையும் குறிப்பிடுகிறது. ஆயினும்கூட, ஆகஸ்ட் 2 வரை நடத்தப்பட்ட சிபிஎஸ் கருத்துக்கணிப்பு எந்த ஒரு போராட்ட களத்திலும் எந்த வேட்பாளரும் தொடர்ந்து குறிப்பிடத்தக்க முன்னிலை பெறவில்லை என்றே தெரிவிக்கிறது.

இப்போது ​​ஒரு வகையான போர்க்களமாக மாறியிருப்பது நகர்ப்புற மையங்களைச் சுற்றியுள்ள இரண்டாவது மற்றும் முதல்-வளைய புறநகர்ப் பகுதிகள் ஆகும். அவை குடியரசுக்கட்சிக்கு ஆதரவாகவே இருந்து வந்துள்ளன. இன்றைய வாக்காளர்கள் சமூகப் பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் ஜனநாயகக் கட்சியினருக்குச் சாதகமாக மாறி வருகிறது. இந்தத் தேர்தலில் அதிபர் போட்டி வெறும் ‘ஸ்விங் ஸ்டேட்ஸ்’ தீர்மானிக்கும் என்பதை விட ‘ஸ்விங் கவுன்டிஸ்’ஐ சார்ந்திருக்கும். இந்த மாநிலங்களில் உள்ள மாவட்டங்களில் 5% வாக்காளர்கள் இந்த ஆண்டு போட்டியின் முடிவைத் தீர்மானிக்க முடியும். அதிகபட்சம் 150,000 வாக்காளர்கள் அதிபரின் வெற்றியைத் தீர்மானிக்கப் போகிறார்கள் என்று தேர்தல் வல்லுநர்கள் மதிப்பிடுகிறார்கள். அதிபர் தேர்தலின் முடிவிற்கு ‘ஸ்விங்’ மாநிலங்கள் மிகவும் முக்கியமானவை என்பதால் இரு கட்சிகளும் அதிகப் பிரச்சாரங்களை மேற்கொண்டு பணத்தையும் நேரத்தையும் அங்கே செலவிடுகின்றன. மற்ற மாநிலங்களில் யார் வெற்றி பெறுவார் என்பது தெரிந்த விஷயம் என்பதால் நியூயார்க், கலிஃபோர்னியா போன்ற மாநிலங்களில் தேர்தல் களேபரங்களைக் காண்பது அரிது. ஆனால் டெக்சாஸ், ஃப்ளோரிடா போன்ற சிகப்பு மாநிலங்களை நீலமாக மாற்ற ஜனநாயக கட்சியினர் முயன்று வருகிறார்கள்.

இதற்கிடையே முன்னாள் ஜனநாயகவாதி தற்போதைய சுயேச்சை வேட்பாளர் ‘ராபர்ட் எஃப் கென்னடி(ஆர்எஃப்கே) ஜூனியர்’ ‘ஸ்விங் ஸ்டேட்ஸ்’ களில் இரு கட்சி வேட்பாளர்களுக்கும் பெரும் தலைவலியாக இருந்து வந்தார். பைடன்/ட்ரம்ப்பை பிடிக்காதவர்களின் ஆதரவு இவருக்கு கணிசமாக கிடைத்திருந்தது. ஹாரிஸ் ஆட்டத்திற்குள் நுழைந்தவுடன் இவருக்கு ஆதரவு அளித்தவர்கள் மாறியுள்ளதாகக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கிறது. ஜனநாயக கட்சி ஆர்வம் காட்டாத நிலையில் தேர்தல் நிதியும் செல்வாக்கும் குறைய, தனது ஆலோசகர்களிடம் அதிபர் ட்ரம்ப் ஆட்டிசம் போன்ற சிறுவயது நாள்பட்ட நோய்களில் கவனம் செலுத்துவதிலும் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதிலும் தீவிரமாக இருப்பதை உணர்ந்ததாகக் கூறினார். தனது பிரச்சாரத்தை ஆகஸ்ட் 23 அன்று நிறுத்தி, முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை ஆதரித்து ‘ஸ்விங் ஸ்டேட்ஸ்’களில் அதிபர் போட்டியிலிருந்து விலகிக்கொண்டார். என்ன தான் கென்னடியின் ஆதரவு ட்ரம்ப்பிற்கு உத்வேகத்தைக் கொடுத்தாலும் சுயேச்சை வாக்காளர்கள் உண்மையில் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தங்கள் ஆதரவை மாற்றிக் கொள்வதால் இவர்களின் வாக்குகளே அதிபரின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. அதனால் அவர்களின் ஆதரவைப் பெற இரு கட்சி வேட்பாளர்களும் போட்டிப்போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

மேலும், தேசிய மக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் அமெரிக்கா அதிபர்களைத் தேர்ந்தெடுப்பதில்லை. 270 எலக்டோரல் வாக்குகள் பெறுபவரே அதிபராக முடியும். உண்மையில் தேசிய அளவில் மக்கள் வாக்குகளை அதிகம் பெற்றிருந்தாலும் அல்கோர் புஷ்ஷிடமும்(2000) ஹிலரி ட்ரம்ப்பிடமும்(2016) தோற்றது வரலாறு. தற்போதைய ‘பைவ்தர்ட்டிஎயிட்’ கருத்துக்கணிப்புகளில் ஹாரிஸ் 281ம் ட்ரம்ப் 257 வாக்குகள் பெற்றுள்ளதாகவும் பிரபல வாக்குகள் அதிகம் பெறப்போவதில் 51.6% சதவீதம் பெற்று ஹாரிஸ் முன்னிலையிலும் ட்ரம்ப் 48.4% பெற்று இரண்டாமிடத்தில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. 2016, 2020ல் ஏற்பட்ட கருத்துக்கணிப்பு குழப்பங்கள் இந்த வருடமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாக நிறுவனங்கள் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.

இதற்கிடையில், பொருளாதாரம், பணவீக்கம், வேலைகள், குற்ற நடவடிக்கைகள் போன்ற முக்கிய கொள்கைச் சிக்கல்களைக் கையாளுவதற்கு வாக்காளர்கள் குடியரசுக் கட்சியைத் தான் இன்னும் அதிகமாக நம்புகிறார்கள் என்பதை ‘சவண்டா’ ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரத்தியேக கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. கள்ளக்குடியேற்றமும் நசிந்து வரும் பொருளாதாரமும் குடியரசுக்கட்சியின் முக்கிய கொள்கைகளாக மக்களிடையே பெருத்த வரவேற்பு பெற்றுள்ளது. ஜனநாயக கட்சியினர் பெண்களின் கருக்கலைப்பு உரிமைச்சட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர்.

வெற்றி யாருக்கு என்பதை அக்டோபருக்குள் கணித்து விடுவார்களா? அக்டோபர் மாதம் என்றுமே வேட்பாளர்களின் சிம்ம சொப்பனமாக இருக்கும். 2016 தேர்தலில் விக்கி லீக்ஸ் தொடர்ந்து வெளியிட்ட ஹிலரியின் ஈமெயில் குளறுபடிகள் “பாப்புலர்” ஓட்டில் ஜெயிக்க வைத்து எலக்டோரல் வாக்குகளில் ட்ரம்ப்பிற்குச் சாதகமாக மாறியது வரலாறு. இந்த அக்டோபர் மாதம் எப்படி இருக்கப்போகிறது என்பது புதிராகவே இருக்கிறது.

2016ல் நடந்த தேர்தலில் ஹிலரி 65,844,610 வாக்குகளையும் ட்ரம்ப் 62,979,636 வாக்குகளையும் பெற்று 2.9மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் ஹிலரி ஜெயித்து முன்னிலையில் இருந்தாலும் எலக்டோரல் வாக்குகள் ட்ரம்பிற்குத் தான் சாதகமாக இருந்தது. 270 எலக்டோரல் வாக்குகள் வெற்றியை நிர்ணயித்தாலும் 304 வாக்குகள் பெற்று அதிபரானார் ட்ரம்ப். ஹிலரி 227 வாக்குகள் பெற்றுத் தோற்றுப் போனார். ரஷ்யாவின் தலையீடு , அக்டோபர் மாதத்தில் வெளியான விக்கிலீக்ஸ் தகவல்கள், தேர்தலுக்கு முன்பான எஃப்.பி.ஐ விசாரணை, முக்கியமாக “பெண் வெறுப்பு”. ஒரு பெண் அதிபராவதை இன்னும் பல அமெரிக்க ஆண்களாலும் சில பெண்களாலும் ஜீரணிக்க முடியவில்லை என்று ஹிலரியின் தோல்விக்குக் காரணமாகக் கூறப்பட்டது இனியும் தொடருமா?

2016 தேர்தலில் புடினின் தலையீட்டில் ட்ரம்ப் ஜெயித்ததாக ஜனநாயக கட்சியினர் குற்றம் சாட்டினர் . ‘காம்ரேட் கமலா’ என்று ட்ரம்ப் இந்தத் தேர்தலில் சீனாவின் தலையீடு இருப்பதாகக் கூறிவருகின்றார்.

செப்டம்பர் 10அன்று ட்ரம்ப்பிற்கும் ஹாரிஸிற்கும் இடையே முதல் விவாதத்தை ‘ஏபிசி தொலைக்காட்சி’ நிறுவனம் நடத்தவிருக்கிறது. தங்களுடைய தேர்தல் கொள்கைகளை இருவரும் மக்களிடையே கொண்டு சென்று நடுநிலை வாக்காளர்களின் ஆதரவைப் பெறும் நிகழ்வாகவும் அமையலாம் என்பதால் மக்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்த இரு வேட்பாளர்களும் கடுமையாகப் பயிற்சி எடுப்பதாகச் செய்திகள் வெளிவருகின்றன.

அதிபர் வேட்பாளர்களின் நிறை,குறைகள் மட்டுமன்றி அவர்களுடைய தேர்தல் வாக்குறுதிகளும் கொள்கைகளும் தான் ‘ஸ்விங் வோட்டர்’ஸின் ஆதரவைப் பெற்று வெற்றியைத் தீர்மானிக்கப் போகிறது.

யார் வெற்றிப் பெறப் போகிறார்கள் என்று அறிய உங்களுடன் சேர்ந்து நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்..

Tuesday, September 24, 2024

இதோ இதோ என் பல்லவி

வருடந்தோறும் ‘Aim For Seva’ அமைப்பினர் நன்கொடையாளர்களைக் கௌரவிக்கும் விதமாக இயல், இசை, நாடகக் குழுக்களில் ஒன்றை இந்தியாவிலிருந்து அழைத்து வந்து கலைநிகழ்ச்சிகள் நடத்துவார்கள். இந்த முறை ‘ஹே கோவிந்த்’ என்று பல்வேறு இசை வடிவங்களில் கிருஷ்ணனை வாழ்த்திப் பாடும் குழுவினரின் இன்னிசை விருந்து. கிருஷ்ணன் என்றதும் புல்லாங்குழல் தான் நினைவிற்கு வரும். வாய்ப்பாட்டுக்கு இணையாக புல்லாங்குழலின் இசை! கண்களை மூடிக் கேட்க, எங்கோ ஆற்றங்கரையில் பறவைகளின் இன்னிசையோடு கலந்த பாடல் கோபியர் கொஞ்சும் கிருஷ்ணனை கண்முன் கொண்டு வந்தது. இனிமையான பாடல்களைப் பாடியவரோ வேறு உலகத்திற்கே அழைத்துச் சென்று விட்டார்.


இழுத்த இழுப்புக்கெல்லாம் குரல் தேனாய் பாடல்களாய் கேட்டதென்றால் மூச்சை இழுத்து அடக்கி மதுர இசையாக, வாய்ப்பாட்டு பாடுபவருக்குப் போட்டியாக புல்லாங்குழல் வாசித்தவரோ “சபாஷ்” போட வைத்துக் கொண்டே இருந்தார். வெவ்வேறு அளவுகளில் நான்கு புல்லாங்குழல்கள். அதில் இதுவரை நான் பார்த்திராத புதுவகை புல்லாங்குழல் ஒன்று. அவரே வடிவமைத்ததாம். அவர் மூச்சு விட்டாலே இசையாகத்தான் கேட்குமோ? மனிதர் அபார மூச்சு கட்டுப்பாட்டுடன் அங்கிருந்தவர்களைத் தன்னுடைய இசையால் கட்டிப்போட்டு விட்டார். அந்த இசைக்கு ஏற்றாற்போல் அழகிய கண்கவர் ஓவியங்கள் பின்னால் காட்சியாக!
 
ஹரே கிருஷ்ணா! யமுனா நதிக்கே அழைத்துச் சென்று விட்டார்கள்!



புல்லாங்குழலில் இசையை வரவழைக்க எத்தனை கஷ்டம் என்று தெரியும். வீட்டில் ஈஷ்வரும் சுப்பிரமணியும் புல்லாங்குழல் வாசிப்பதால் அதைப்பற்றின கொஞ்சூண்டு அறிவுண்டு.
 
தப்லா வாசித்த இளைஞனோ கைவிரல்களால் கூட இத்தனை அழகான தேனிசையைக் கொண்டு வரமுடியுமா என்று ஆச்சரியப்படுத்தினான். ஜதி்்வேறு பாடி அசத்தினானே பார்க்கணும். வாவ்!

நான் மட்டும் என்ன இளப்பமா என்று பக்கவாத்தியம் வாசித்தவர் “அடடா” என்று அசத்தி விட்டார். அவருக்கும் தப்லா இளைஞனுக்கும் நடந்த போட்டி அரங்கில் இருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டது.

ஆர்மோனியம் இல்லாமல் வாய்ப்பாட்டா? அவர் தானே முதலில் எடுத்துக் கொடுக்கிறார். கூடவே சுருதிப்பெட்டி.
 
தாள வாத்தியம் வாசித்த மனிதர் சகலகலா வல்லவர். குயில் கூவுவது்போல, பறவைகள் ‘சடசட’வென பறப்பது போல கரையும் காற்றாக இசையோடு கலந்த அவரின் வாத்தியங்கள் ஜஸ்ட் லவ்லி!

இசைக்கருவிகள் ஒரு பாடலுக்கு எத்தனை உயிரோட்டமாக இருக்கிறது என்பதை நேரில் பார்த்து அனுபவிப்பது இன்னும் ஏகாந்தம்.
கைகள் விரித்துப் பக்தியுடன் கிருஷ்ணா, ராமா, விட்டலா என்று பாடியதைக் கேட்பவர்களை அந்தப் பரப்பிரம்மனிடமே சரணடைய வைத்துக் கொண்டிருந்தது அம்மனிதரின் பாடல்கள்.
 
மனம் லயித்துப் பக்தியுடன் பாடுகையில் மனதை வருடி உயிரில் கலக்கும் இசைக்கு மொழியேது?
 
மொத்தத்தில் அருமையான இன்னிசை விருந்து. அமெரிக்காவில் உங்கள் ஊருக்கருகில் வந்தால் தவறாமல் சென்று கேளுங்கள்.

இசை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் எனக்கே சிலிர்ப்பைத் தந்த அனுபவம் என்றால் இசை தெரிந்தவர்களுக்குக் கேட்கவே வேண்டாம்.
இசையால் வசமாகா இதயம் எது?

“Aim For Seva” அமைப்பு வசதிகளற்ற மலைவாழ் மற்றும் கிராமப்புற ஏழை மாணவ, மாணவியர்க்கு இலவச உண்டு உறைவிட பள்ளிகள் மூலம் கல்வியை வழங்கி அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி வரும் அருந்தொண்டினை செய்து வருகிறது. புஜ்யஶ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமி அவர்களால் முன்னெடுக்கப்பட்டு இன்று இந்தியாவில் பல இடங்களில் அவர்கள் பலரது வாழ்விலும் ஒளியேற்றி வருவது சிறப்பு. அப்பள்ளியில் படித்து இன்று மருத்துவம் பயிலும் மாணவன் தன் கிராமத்து மக்களுக்கு முன்மாதிரியாக இருந்து சேவை செய்வேன் என்று கூறியதைக் கேட்கையில் மகழ்ச்சியாக இருந்தது.

உலகமெங்கிலும் இருக்கும் நன்கொடையாளர்களின் உதவியால் தன்னார்வலர்கள் இணைந்து நடத்தி வரும் பள்ளிகள் மூலம் கல்வி கற்க வசதியில்லாத குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க வசதி செய்து கொடுத்திருக்கிறார் சுவாமி அவர்கள்.

கொடுக்கும் பணத்தில் 1 ரூபாய்க்கு 92 பைசாக்கள் மாணவர்களின் கல்விக்காகச் செலவு செய்யப்படுகிறது.


தாராளமாக உதவுங்கள்.
 
“Give the world the best you have and the best will come back to you."
-Sri Dayananda Saraswati Swamy

பிகு: செவிக்கு மட்டுமா இன்பம்? இந்தா சாப்பிடு என்று உணவுப்பொட்டலம் வேறு. ஆஆஆஆ! லதா ஹேப்பி அண்ணாச்சி. மனம் மகிழ்ந்திருக்கும் வேளையில் ஞாயிறு கரைந்து விட்டிருந்தது. திங்கள் உதயமாக…

இதோ இதோ என் பல்லவி


Tuesday, September 17, 2024

கலப்படம்


கல்வியும் விஞ்ஞானமும் வளர, வளர மனிதர்கள் அதை நல்வழியில் பயன்படுத்துகிறார்களா இல்லையோ குறைந்த காலத்தில் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்று எதற்கும் துணிந்து விட்டார்கள்.  அப்படிப்பட்ட பாவச்
செயல்களில் ஒன்று தான் செயற்கை முறையில் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் மாம்பழங்களைப் பழுக்க வைப்பது, மசாலா பொருட்களில் கண்டதையும்  'கலப்படம்' செய்து விற்பது. இதனால் அதை உட்கொள்ளும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை. தனக்கு லாபம் வேண்டும் என்ற பேராசையில் தான் இன்றைய உலகம் இயங்குகிறது. நாமும் அதில் மாட்டிக் கொண்டுள்ளோம்.

என்று மசாலாப் பொருட்களில் கலப்படம் என்று அறிந்தேனோ அன்றிலிருந்து இன்று வரை முடிந்த வரையில் வீட்டிலேயே மிளகாய், மிளகு, மசாலாப்பொருட்களைச் செய்ய ஆரம்பித்து விட்டேன். மொரோக்கோவிலிருந்து கொண்டு வந்திருந்த மஞ்சள் தூள் அத்தனை வாசமாக 'கொரகொர'வென்று பார்த்தாலே தரமாக இருந்தது. நம்மூர் மஞ்சள்தூள் பச்சரிசி மாவில் மஞ்சள் நிறமியைச் சேர்த்தது போல அத்தனை நைசாக இருக்கும். வீட்டிலேயே அரைத்த மிளகாய்த்தூள் என்றுமே கடை மிளகாய்த்தூள் நிறத்திற்கு வந்ததே கிடையாது. அத்தனை சிவப்பாக இருக்கிறது கடைகளில். மிளகுத்தூளும் அப்படியே. மசாலாப் பொருட்கள் தேவைப்படும் பொழுது உடனுக்குடன் வேண்டிய அளவிற்குச் செய்து கொள்வது நல்லது.

வாயில் நுழையாதப்  பெயர்களில் புதுப்புது நோய்கள் வரும் காலத்தில் நாம் தான் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது.

ஸ்வராஜ்யாவில் வெளிவந்துள்ள இந்தக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். புரியும். வியாபாரிகள் தெரிந்து கலப்படம் செய்கிறார்கள் என்றால் தாவரங்களில் சில பூஞ்சைகளால் ஆபத்து. அதை நம்மால் இனம் காண முடியாது. முறையாக கண்காணித்து வந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தவறுகள் நடக்கும் நிலையில் நுகர்வோர் அதிக விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். 

Sunday, September 15, 2024

கணவன் அமைவதெல்லாம்...


"படித்து முடித்து வேலைக்குச் செல்லும் பெண்கள் Vs வீட்டில் இருக்கும் பெண்கள்" - இன்றைய நீயாநானாவின் விவாதம். முதலில் இந்த விவாதம் சரிதானா? இது அவரவர் விருப்பம் சார்ந்தது. படிப்பதற்கு அறிவை வளர்த்துக் கொள்ளவே என்று ஒருசாராரும் இல்லை படித்ததைக் கொண்டு அத்துறையில் சிறப்புற பணியாற்றவே என்று விவாதம் வைத்துக் கொண்டிருந்தாலாவது கொஞ்சம் நியாயம் இருந்திருக்கும். அப்படியென்றால் பலரின் வாதம் விமரிசனத்திற்குள்ளாகியிருக்கும் என்பது வேறு விஷயம்.

குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள வீட்டில் இருக்கும் படித்த பெண்கள் அனைவரும் தங்களின் மனத்திருப்திக்காக, அதுவே தங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாகக் கூறினார்கள். அது சரி. குடும்ப நலனுக்காக, குழந்தைகள் வளர்ப்பிற்காக என்று கூறும் பொழுது தான்வேலைக்குச் செல்லும் பெண்கள் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை போன்றதொரு பிம்பம் ஏற்படுகிறது.

வேலைக்குச் செல்லும் பல பெண்களுக்குக் கூடுதல் பணிச்சுமைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதனால் ஏற்படும் மன அழுத்தங்கள் பலருக்கும் உண்டு. அதுவும் நேரம், காலம் தெரியாமல் வேலை பார்க்க வேண்டிய சூழலில் குடும்பத்தையும் பணியையும் நிர்வகிக்க வேண்டுமென்றால் அலாதியான திறமை வேண்டும். இல்லையென்றால் அமைதியான குடும்பத்தில் பூகம்பம் தான் வெடிக்கும்.

இந்த விவாதத்தில் பேசிய பெண்கள் பலரும் குழந்தைகள் வளர்ப்பிற்காக, உறவுகளின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வதற்காக, கணவனின் முன்னேற்றத்தில் உதவியாக என்று அடுக்கினார்கள். பலரும் வேலைக்குச்சென்று திருமணத்திற்குப் பிறகு அல்லது குழந்தை பிறந்த பின்னால் வேலையை விட்டிருக்கிறார்கள். நாம் அருகிலிருந்து குழந்தையைப் பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது தான். இவர்கள் எல்லோருக்கும் குடும்பத்தில் இருப்பவர்கள் தன்னை நம்பி இருக்கிறார்கள் என்ற எண்ணமும் மேலோங்கியிருக்கிறது. பேசிய பெண்கள் நல்ல பொருளாதார வசதிகளுடன் இருப்பதைப் போலத்தான் தெரிந்தது. அது அவர்களின் அதிர்ஷ்டம். அனைவருக்கும் வாய்ப்பதில்லை. அவர்கள் விருப்பம் வீட்டில் இருப்பது என்பதில் அவர்கள் கணவருக்கும் உடன்பாடு இருப்பதால் எந்தப் பிரச்சினையுமில்லை. இவர்கள் எல்லோரும் 'விடிந்தாலே கனவு நனவாகுமே' சன்ரைஸ் காபியுடன் கணவனை எழுப்புபவர்கள். அவர்களும் கால் மேல் கால் போட்டுக் கொண்டு கைப்பேசியில் வாட்ஸப் குழுமங்களில் அரட்டை அடித்துக் கொண்டே ஆனந்தமாக இருப்பார்கள் என்று நம்புவோம்.

ஆனால் உண்மையில் இப்பெண்களில் பலரும் கறிக்கடை, சந்தை, பலசரக்கு கடைகளுக்குச் செல்ல ஏகமாக அவர்களை விரட்டிக் கொண்டிருப்பார்கள். கேட்டால் "இங்க நான் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப கால்ல சக்கரத்தைக் கட்டிட்டு அலையறேன்" என்ற வசனங்கள் எல்லாம் கேட்கும். எல்லார் வீடுகளில் இல்லையென்றாலும் "நான் வீட்டில எவ்வளவு வேலைகளைச் செய்றேன் தெரியுமா" என்ற புலம்பலும் தொடரும். "வேலைக்குப் போற திமிரு", "கையில பணம் இருக்குன்னு விதவிதமா டிரஸ் போட்டுக்கறா" என்று எதிர் தரப்பினரைப் பார்த்துப் புழுங்கி அவனைத் துவைத்து வேலைக்குச் செல்லும் பெண்களை விடவும் செலவுகள் அதிகமாகச் செய்பவர்களும் இருக்கிறார்கள். மறுக்க முடியாது.

படித்து முடித்த ஒரு பெண் வேலைக்குச் செல்ல பல காரணிகள்: குடும்பப் பொருளாதாரம், தான் கற்ற கல்வியைப் பயன்படுத்த ஒரு வாய்ப்பு, தன் கல்வி அறிவை மேம்படுத்த, ஒரு பெண்ணால் குடும்பத்தையும் பணியையும் சிறப்புற நிர்வகிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை... என்று சொல்லிக் கொண்டே சொல்லலாம். இல்லையென்றால் பெண்கள் பலதுறைகளிலும் சாதிக்க முடியுமா? நிலவிற்கு விண்கலம் அனுப்பிச் சாதனை செய்த பெண்களுக்குப் பின்னால் நிச்சயமாக அவர்களுடைய கணவர்களும் குழந்தைகளும் பெற்றோர்களும் என்ற மிகப்பெரிய பலம் இருக்கிறது.

வேலைக்குச் சென்று வரும் பெண்கள் பலரும் முன் திட்டமிடுதலுடன் வீட்டில் இருக்கும் பெண்கள் செய்யும் அத்தனை வேலைகளையும் செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். என்ன? பணிக்குச் செல்வதால் 8-10 மணிநேரங்கள் குழந்தைகளைப் பிரிந்து இருக்கிறார்கள். அதனால் அவர்கள் பொறுப்பில்லாதவர்கள், குடும்பத்தின் மேல் அக்கறை இல்லாதவர்கள் என்றாகி விடுமா?

ஒரு பெண் வேலைக்குச் செல்வதால் அவளுடைய குழந்தைகளும் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு வளரும் சந்தர்ப்பங்கள் கிடைக்கிறது. அந்தக் குழந்தைகள் யாரையும் எதிர்பார்க்காமல் வளர கற்றுக் கொள்கிறது. வீட்டில் அம்மா இருந்து வளரும் குழந்தைகள் மனநிலையும் அதை ஒத்து தான் இருக்கும். "வீட்ல சும்மா தான இருக்கிற" என்று கணவரும் இருப்பார். அதுவே 24 மணிநேர வேலை என்று புரிந்து கொள்ளாமல்.

இன்றைய கால கட்டத்தில் கணவன்-மனைவி இருவர் வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தமும் பல துறைகளிலும் சாதிக்க பெண்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்புகளும் தான் தூண்டுகோலாக இருக்கிறது. குடும்பத்தைப் பெண் மட்டுமே நிர்வகிக்க வேண்டும் என்ற சூழல் மாறி வருகிறது. கணவன்-மனைவி இருவருமே குடும்பப்பொறுப்புகளில் பங்கெடுத்துக் கொண்டால் மன அழுத்தங்களுக்கு வாய்ப்பே இல்லை. இல்லையென்றாகும் பொழுது தான் வாய்ச்சண்டையில் தொடங்கி மனம் வெறுத்து விவாகரத்து வரை நீள்கிறது.

படித்த பெண்கள் வாழ்வில் மட்டுமா விவாகரத்துகள் நடக்கிறது?

குடும்பம் என்ற அமைப்பில் எல்லாமே சாத்தியம். வீட்டில் இருப்பதால் பொறுப்பானவர்கள் என்றோ வேலைக்குச் செல்வதால் சாதிப்பவர்கள் என்றோ சொல்லிக் கொள்ள முடியாது. தன் குழந்தைகள், குடும்பத்திற்கு, தனக்கு எது நல்லதோ அதைச் செய்ய வேண்டும்.

இன்று பிரக்ஞானந்தா மற்றும் அவரது சகோதரி வைஷாலி என்ற இரண்டு சதுரங்க விளையாட்டு வீரர்களை உருவாக்க முடிந்ததென்றால் பணத்தேவைக்குத் தந்தையும் குழந்தைகளின் தேவைகளைக் கவனித்துக் கொண்ட தாயும் தான் காரணம். அன்று பெரும்பாலான அம்மாக்கள் வீட்டிலிருந்து குழந்தைகளை வளர்த்தார்கள். உண்மை தான். இப்பொழுது கல்வி அனைவருக்கும் கிடைக்க, படித்து முடித்த பின் பெண்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொணர வாய்ப்புகள் கிடைக்கும் பொழுது யாரையும் சார்ந்திராமல் இருக்கவும் முடியுமென்றால் வீட்டிலும் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் பெண்கள் வேலைக்குச் செல்வதில் தவறில்லை.

ஆனால் இரண்டு பக்கத்திலும் ஒரு ஆணின் ஆதரவின்றி இது சாத்தியமில்லை. குடும்பம் என்பது இருவரின் பொறுப்புகள் சார்ந்த விஷயம். ஒருவரே ஒரு பொறுப்பைச் சுமக்கும் பொழுது வெறுமையோ வெறுப்போ வரும் சாத்தியக்கூறுகள் அதிகம். அப்பொழுது இன்னொருவர் தங்களுடைய பங்கை மாற்றிக்கொள்ளும் வசதிகள் இருக்க வேண்டும். இந்த விவாதத்தில் கூறியபடி, குழந்தைகள் வளர்ந்து கல்வி முடித்து வீட்டை விட்டுச் சென்ற பின் யாரும் தன்னைச் சார்ந்திருக்கவில்லை என்ற எண்ணம் மேலோங்கும் பொழுது அதுவரை குடும்பத்தை நிர்வகித்து வந்த பெண் தன் மதிப்பை இழந்தவள் போல் உணருவாள் என்றால் அப்பொழுது வேலைக்குச் சென்றிருக்கலாமோ என்ற எண்ணம் நிச்சயம் தோன்றும்.

வேலைக்குச் சென்று வரும் பெண்கள் குடும்பம், பணியிடத்துச் சுமைகளைக் கையாண்டாலும் வீட்டில் கணினியில் எதையாவது நோண்டிக்கொண்டே இருக்கும் கணவர்கள் வாய்த்தவர்கள் தான் பாவம். இன்னும் ஒரு தலைமுறை வரை இது தொடரும்.

இப்பொழுது பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ஆண்கள் பலரும் வேலைக்குச் செல்லும் பெண்களைத் தான் விரும்புகிறார்கள். பெண்கள் தான் யோசிக்கிறார்கள். சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள் ஆண்கள். 

ஆக, கணவன் அமைவதெல்லாம்...













Monday, September 9, 2024

நீயா நானா

நேற்றைய 'நீயா நானா'வில் அப்பா- மகன் உறவைப் பற்றின விவாதம் நடந்தது. இன்னும் நன்றாக இருந்திருக்கலாமோ என்று தோன்றிற்று. 

அதில் ஒரு மகனார் தன்னுடைய சிறுவயதில் தனக்கு விருப்பமான ஆடையை தந்தை வாங்கித் தரவில்லை என்ற கோபம் இருந்தது. ஆனால் இப்பொழுது தான் ஒரு தந்தையாக இருக்கும் பொழுது அவர் ஏன் அப்படிச் செய்தார் என்று புரிந்து கொள்ள முடிந்தது என்று கூறினார். 

இது அனைவருக்கும் பொருந்தும். குழந்தைப் பருவத்தில் புரியாத , புரிந்திராத பல விஷயங்களும் நாம் பெற்றோர்களாக உருவெடுக்கையில் புலப்படும். நம் பெற்றோர்களின் அருமையும் புரியும். 

இன்னொருவர் தன்னுடைய பெற்றோரின் காதலைப் பற்றி சிலாகித்துப் பேசினார்.  

"அம்மா காலையில் காபி போட்டு எடுத்துட்டு வந்து அப்பாவுடன் குறைந்தது 45 நிமிடங்களாவது பேசிக்கொண்டிருப்பார். இளைஞனான எனக்கு அன்று அவர்களின் காதல் மீது பொறாமை கூட இருந்தது" என்றார். 

இன்று காலையில் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பவும் வேலைக்குச் செல்லவும் ஓடும் நிலையில் காதலாவது கத்திரிக்காயாவது என்றாகி விட்டிருக்கிறது. கிடைக்கும் நேரத்தில் ஃபோனை நோண்டி சமூக வலைதளங்களில் மேய்ந்து கொண்டிருக்கிறோம். என்னத்த சொல்ல? 

"ஒருமுறை எனக்குச் சிறிது பணம் தேவைப்பட்டது. அப்பாவிடம் கேட்டேன். மறுத்து விட்டார். அப்பொழுது அவர் மீது கோபம் இருந்தது. இப்ப்பொழுது இல்லை."

"ஏன் சார்? பையன் ஒரு அவசரத்துக்குப் பணம் கேட்டா கொடுத்திருக்கலாமே" என்று கோபிநாத் கேட்க,

"என் காலத்திற்குப் பிறகு மனைவிக்காக சேர்த்து வைத்த பணம்.சமீபத்தில் அவள் இறந்து விட்டாள். அதற்குப் பிறகு மகனிடம் அந்தப்பணத்தை எடுத்துக் கொள் என்று கூறிவிட்டேன்" என்றார் அந்த அப்பா. 

இப்படித்தான் மனைவிக்காக பல கணவர்கள் சொத்துக்களை விட்டுவிட்டுச் செல்கிறார்கள். ஆனால், "பாவம் பெத்த மனம் பித்து பிள்ளைகள் மனம் கல்லு" என்பது போல அப்பா போனவுடன் அம்மாவிடம் நயவஞ்சகமாகப் பேசி பணத்தை லபக்கி அவளைப் புலம்ப வைக்கிறவர்களும் உண்டு. 

இன்னொருவர் தன் தந்தை கால் மீது போட்டு அமருவதில்லை என்றார். "வயதில் குறைந்தவர்கள் கூட அவர் முன் கால் மீது கால் போட்டு உட்காருகிறார்கள். நானும் அப்படித்தான் உட்காருவேன். இவர் மட்டும் அப்படி உட்காருவதில்லை." அவருடைய அப்பாவும் அது அடுத்தவரை அவமதிப்பதாகத் தோன்றியதால் அந்தப் பழக்கம் இல்லை என்று சொல்லிவிட்டார். 

ஒரே ஒரு தந்தை மட்டும் கல்வி, கல்யாணம் வரையில் செலவு செய்தும் தன் அன்னைக்கு அந்த மகனார் இது வரை ஒன்றுமே செய்யவில்லை என்று கூறியது மிகவும் வருத்தமாக இருந்தது. என்ன தான் குறைவாக சம்பளம் வாங்கினாலும் ஆசையாக மகன் எதை வாங்கிக் கொடுத்தாலும் பெருமை பட்டுக்கொள்வாள் அம்மா. அங்கே இங்கே சில பேராசை பிடித்த அம்மாக்கள் குறைசொல்வதும் நடக்கிறது. அந்த அப்பா பேசியதிலிருந்து அது சிறு மனக்குறைவாகவே இருப்பது போல தெரிந்தது. அத்தனைக்கும் ஒரு பைசா மகனிடம் வாங்காமல் அவனுக்கு கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்கள். தனிக்குடித்தனம் போல. ஆக, மகனார் கையில் எதுவும் இல்லை. 

"இப்பொழுது நல்ல வேலை கிடைத்து இருக்கிறது. இனி அம்மாவிற்குச் செய்வேன்" என்று அவரும் இயலாமையுடன் பேசியதைக் கேட்க அவருக்கு என்ன கஷ்டமோ ?

உண்மையாகவே முடியாத நிலைமையில் இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால், தனக்காக, தன் மனைவி, குழந்தைகளுக்காகச் செலவுகள் செய்யத் தயங்காதவர்கள், கணக்கு பார்க்காதவர்கள் பெற்றவர்களுக்காகச் செய்யும் பொழுது மட்டும் கணக்கு பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

"இப்ப இது உனக்கெதுக்கு? ரொம்ப அவசியமா? எதெது கேட்குறதுன்னு வரைமுறை இல்லையா?" என்று வாய்க்கு வந்தபடி பேசுவார்கள்.

தங்கள் குழந்தைகளுக்கு கல்வியைக் கொடுக்கவே அத்தனை செலவழிக்க வேண்டிய காலத்தில் வேலைக்குச் சென்று சம்பாதிப்பவர்கள் தானே தங்களுடைய திருமணச் செலவைச் செய்து கொள்ள வேண்டும்? அது என்ன? வெட்கமே இல்லாமல் பெற்றோர் பணத்தில் திருமணம் செய்து கொள்வது?

இந்த மதி கெட்ட பெற்றோர்களும் நாங்கள் செலவு செய்தோம் என்று சொல்வது எதற்காக? வெட்டி பெருமைக்காகவா? பெற்றோர்கள் அப்படி இருந்தால் இப்படித்தான் பிறந்தவர்களும் இருப்பார்கள். அவர்களிடம் எதையும் நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது. 

பெற்றோர்கள் தங்களுக்கென்று கடைசி வரை உயிர் வாழ சிறிது சேமிப்பை வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் இவர்களை நம்பி வாழ்வது எத்தனை கொடுமை?

அப்பா-மகன் உறவு என்பது புரிந்து கொள்ள முடியாத ஆனால் புரிய வைக்கும் உறவு. அப்பாவிடம் பேசத் தயங்கி அம்மாவைத் தூது விட்டு அவரை ஒரு தூரத்திலேயே வைத்து விடுகிறோம். அவரும் நெருங்கி வருவதில்லை. வயதில் அப்பாவை எதிர்த்தவனுக்கும் அவன் தவறுகளை உணரும் சந்தர்ப்பம் கிடைக்கும். உணர்ந்தவன் அப்பாவின் அருமையைப் போற்றுகிறான். உணராதவன் புலம்பியபடியே திரிகிறான்.

மகன்களை அப்பாக்கள் புரிந்து கொண்ட அளவிற்கு மகன்கள் அப்பாக்களைப் புரிந்து கொள்கிறார்களா?

அவ்வளவு தான்.

Thursday, September 5, 2024

ஆசிரியர்கள் தினம்


ஆசிரியர்கள் தினத்தன்று மட்டுமன்றி உணர்வோடு கலந்து விட்டவர்கள் தான் என் வாழ்க்கையில் வந்த எனக்குப் பிடித்த ஆசிரியர்கள். ஐந்தாம் வகுப்பிலிருந்து தான் வகுப்பெடுத்த ஆசிரியைகள் முகங்களும் பெயர்களும் நினைவில் உள்ளது. முதன்முதலில் ஆங்கிலப்பாடம் படித்ததும் அந்த வகுப்பில் தான். எழுத்துக்கூட்டி வாசிக்க கற்றுக் கொண்டதும் வாய்விட்டு வாசிக்க வேண்டும் என்ற பாத்திமா டீச்சரின் கண்டிப்பும் வகுப்பு முன்பாக வாசிக்க அவர் என்னை அடிக்கடி அழைத்ததும் அதில் கொஞ்சம் கர்வம் தான். ஆசிரியர்களுக்குப் பிடித்த மாணவியாகத் தான் எப்பொழுதும் இருந்திருக்கிறேன். ஆறாம் வகுப்பில் 'கடுகடு' கன்னியாஸ்திரி வகுப்பு ஆசிரியர். அவரைப்பார்த்தாலே அனைவருக்கும் நடுக்கம். நீ எப்படி இருந்தாலும் நான் இப்படித்தான் என்று அவரிடமும் எப்படியோ நல்ல பொண்ணு பெயரை வாங்கியாயிற்று. ஏழாம் வகுப்பில் நிர்மலா டீச்சர். நாகர்கோவில் பக்கம் என்பதால் கொஞ்சிக்கொஞ்சிப் பேசும் தமிழ். குதிகால் உயர செருப்பு போட்டுக் கொண்டு சின்ன கொண்டை, சைடில் ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ என்று பார்க்க நன்றாக இருப்பார். இவர்களைத் தவிர 'கலகல'வென்று சிரித்த முகத்துடன் ஓட்டப்பந்தய பயிற்சி கொடுத்த உடற்பயிற்சி ஆசிரியர் ஜேம்ஸ் சிஸ்டர். அவருக்குப் பிறகு வந்த 'ஒல்லி பெல்லி' சிலுக்கு சாயல் ஆசிரியை. அவரும் நாகர்கோவில் தான். தினமும் மாணவிகள் ஆசையாக ரோஜாப்பூக்களை வாங்கிச் செல்வோம். எப்படித்தான் அன்பைக் காமிக்கிறது? திக்குமுக்காடிப் போவார்! நடனம் சொல்லிக் கொடுத்த் லூர்து, சுகந்தி, சூசைரத்தினம் ஆசிரியைகள்! ஸ்டெல்லா சிஸ்டர் எப்பொழுதும் ஏதாவது ஒரு பரிசுப்பொருளைக் கொடுப்பார். வெள்ளந்தியாக அப்படி ஒரு கன்னியாஸ்திரி! அந்தந்த வயதிற்குத் தேவையான அறிவுரைகளை வழங்கி நடுநிலைப்பள்ளியை மறக்க முடியாத அனுபவங்களாக்கின என் பிரிய ஆசிரியைகள்!

மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியை 'மீனாட்சி' வகுப்பு ஆசிரியரும் கூட. வகுப்பில் நெல்லிக்காய், மாங்காய் சாப்பிட்டதற்கு அத்தனை அறிவுரை! இந்தக்காலத்தில் சொல்வதென்றால் காதுல ரத்தம் வர்ற அளவுக்கு. ஆனாலும் சேட்டைக்கு குறைச்சல் இல்லை. மேல்நிலைப்பள்ளி வயதில் 'அட! என்னடா பொல்லாத வாழ்க்கை!' என்ற அலட்சியமும் அந்த வயதுக்கே உரிய குறும்புகளும் இருந்தாலும் படிப்பில் சோடை போனதில்லை. அங்கும் ஆசிரியைகளின் பிரிய மாணவியாகவே இருந்தேன். எனக்கு எப்பொழுதுமே 'கலகல'வென்று பளிச்சிடும் ஆசிரியர்களைத் தான் பிடிக்கும். பார்த்தாலே தூக்கம் வருகிற மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு வகுப்பெடுக்கும் ஆசிரியர்களின் வகுப்பு என்றாலே அலர்ஜி. அவர்கள் பாடங்களில் மட்டும் மதிப்பெண்கள் குறையும். பத்தாம் வகுப்பில் டீச்சர் ட்ரைனிங்ல் இருந்தவர் எடுத்த அறிவியல் பாடம் என்றால் அத்தனை இஷ்டம். அத்தனை அழகாக இருந்தார். அதற்குப் பிறகு வேதியியல் பாடமெடுத்த கமலா டீச்சர். அவர் சூடி வரும் மஞ்சள் கனகாம்பரம், கண்களை உறுத்தாத வண்ணங்களில் உடுத்தி வந்த பருத்திப்புடவைகள் என்று மெல்ல மெல்ல மிகவும் பிடித்த ஆசிரியை ஆனார். அந்தப்பாடத்தில் எப்பொழுதும் முதல் மதிப்பெண். +2 தேர்விலும் பள்ளியில் முதலாவதாக வந்ததில் அவருக்கு அத்தனை மகிழ்ச்சி. 2018ல் அவரைச் சந்தித்த பொழுது பெயரைக்கூட மறக்காமல் இருந்தார். மிகவும் சந்தோஷமாக இருந்ததது. கணித வகுப்பெடுத்த மிஸ்.ஆக்னஸ். எனக்கு நீண்ட அறிவுரை கொடுத்தவர். ஒருவகையில் மருத்துவத்தின் மேல் இருந்த என்னுடைய ஆசையை மடை மாற்றியவர். "அதெல்லாம் வேண்டாம். நீ இன்ஜினியரிங் பண்ணு. அதுதான் உனக்கு செட்டாகும்" என்று அவருடைய கணித வகுப்பை விட்டுக் கொடுக்காதவர். மேல்நிலைப்பள்ளியில் கூட ஆசிரியைகள் உரிமையாக அறிவுரை வழங்கிய காலம் அது. நாங்களும் கேட்டுக் கொண்டோம்.

கல்லூரிக்கு வந்ததும் தான் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான இடைவெளி தெரிந்தது. அவர்கள் வகுப்பில் பாடம் எடுத்ததோடு கடமை முடிந்தது என்றிருந்தார்கள். ஆனாலும் ஒரு சில ஆசிரியர்கள் என்றுமே என் விருப்பப்பட்டியலில் இருக்கிறார்கள். அவர்களை வெள்ளிவிழா கொண்டாட்டத்தில் சந்தித்து அளவளாவியதும் மகிழ்ச்சியான தருணம்... ஒவ்வொரு ஆசிரியரிடமிருந்தும் ஒவ்வொன்றைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். அவர்களையுமறியாமல் நமக்கு வேண்டிய வாழ்க்கைப்பாடங்களையும் சேர்த்தே கற்பிக்கிறார்கள்.

வாழ்க்கையில் வெற்றி பெற, நல்வழிப்படுத்த ஒவ்வொருவருக்கும் ஒரு ஆசிரியரே போதும். அவ்வகையில் எனக்குப் பல ஆசிரியர்கள் அமைந்தது வரமே.

என் ஆசிரியர்கள் அனைவரையும் இந்நாளில் நினைவு கூர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
































படித்தது கிறிஸ்தவபள்ளி என்பதால் பெரும்பாலும்

Sunday, September 1, 2024

நீயாநானா


ஒரு முறை நியூயார்க் விமானநிலையத்தில் காத்திருந்த பொழுதில் தமிழர்களைப் போலத் தெரிந்த குடும்பம் ஒன்றைப் பார்த்தேன். ஒருவேளை அவர்களும் நம்மூருக்குத் தான் செல்கிறார்களோ என்று நினைத்தேன். அப்பா, அம்மா, மகள் போல ஒரு பெண், அவளுடைய கணவர், குழந்தைகள் என்று அங்குமிங்கும் பரபரப்பாகச் சென்று வந்து கொண்டிருந்தார்கள். என்னுடைய அருகிலிருந்த இருக்கையில் அம்மா போலத் தெரிந்த பெண்மணி அமர்ந்து கொண்டார். ஏதோ வேற்று மொழியில் பேசிக்கொண்ட மாதிரி இருந்தது! என்னடா லதாவுக்கு வந்த சோதனை? பார்க்க தமிழ் ஆட்களைப் போல இருந்து கொண்டு புரியாத மொழியில் பேசுகிறார்களே என்று மெதுவாகப் பேச்சுக் கொடுத்தேன்.

ஆண் தான் பேசினார். "பல தலைமுறைகளுக்கு முன்பே தமிழ்நாட்டிலிருந்து பிரேசிலில் கரும்புத்தோட்டங்களில் வேலை செய்யச் சென்ற குடும்பங்கள் பலவும் அங்கிருப்பதாகவும் இவருடைய குடும்பம் தற்போது கலிஃபோர்னியாவிற்கு இடம்பெயர்ந்துள்ளது" என்று கூறினார். தமிழ் தெரியாது என்றார். ஆச்சரியமாக இருந்தது. ஆனால் தோற்றம் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிவிட முடியும். அப்படி இருந்தார்கள். கனடாவில் நான் சந்தித்த இலங்கைத் தமிழர்கள் பலரும் ஆங்கிலம் கலக்காத கொஞ்சு தமிழில் கதைத்து என்னை வெட்கப்பட வைத்தார்கள். நம் மொழியையும் கலாச்சாரத்தையும் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வருகிறார்கள்.

எங்களுடைய 'சார்தாம்' பயணத்தின் பொழுது தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்திருந்த குஜராத் வம்சாவளிகள், மலேசியாவிலிருந்து வந்திருந்த தமிழ்நாடு, கேரளாவைச் சேர்ந்த வம்சாவளிகள் சிலரைச் சந்தித்து அளவளாவும் சந்தர்ப்பம் கிடைத்தது. பல சுவையான தகவல்களைத் தெரிந்து கொண்டோம். தமிழர்கள் பலரும் தங்கள் மூதாதையர் வாழ்ந்த, தங்களுடைய முகம் தெரியாத உறவினர்கள் வாழும் ஊருக்கு வந்து செல்வதில் கிடைக்கும் மகிழ்ச்சியைப் பற்றி உணர்ச்சிப்பூர்வமாகப் பகிர்ந்து கொண்ட பொழுது ஆச்சரியமாகத் தான் இருந்தது. ஆம். அவர்கள் தமிழில் தான் உரையாடினார்கள்.

இந்த வார 'நீயாநானா'வில் தமிழ்நாட்டிற்கு வந்திருந்த நான்காவது தலைமுறையினருடன் நேர்காணல்/விவாதம் நடந்தது. அதில் பலரும் இலங்கைத்தமிழர்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் பேசிய தமிழ் அப்படித்தானிருந்தது. கோவையிலிருந்து புலம் பெயர்ந்து சென்ற குடும்பத்தில் இருந்து வந்திருந்த பெண் மிக அழகாகத் தமிழ் பேசினார். எப்படி தமிழ்நாடே மறந்து கொண்டிருக்கும் கலாச்சாரத்தை, மூன்று தலைமுறைகள் எட்டிப்பார்க்காமல் இருந்த மாநில மொழியை பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்று கோபிநாத் கண்கள் வியக்க ஆச்சரியப்பட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார். பரத நாட்டியம், திருக்குறள், பாரதியார் பாட்டு, கும்மி ஆட்டம் என்று கலக்கினார்கள். பரத நாட்டியம் ஆடிய ஃபிஜி தீவிலிருந்து வந்திருந்த பெண் செருப்பு போட்டுக் கொண்டு ஆடியது தான் வித்தியாசமாகத் தெரிந்தது. பரதம் கற்றுக் கொடுத்தவர் முக்கியமான ஒன்றைக் கற்றுக் கொடுக்க மறந்துவிட்டிருக்கிறார்😖அந்தப்பெண் தான் ஒரு "கார்டியோ வாஸ்குலர் சர்ஜன்" என்றதும் கோபிநாத் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று விட்டார். இதைத்தான் "don't judge a book by its cover" என்பார்கள்.

பர்மா, மலேஷியா, ஃபிஜி தீவு, உகாண்டா, ஆஸ்திரேலியா, கனடா, மாலத்தீவு, தென்னாப்பிரிக்கா என்று உலகின் பல மூலைகளில் இருந்து வந்திருந்த இளைஞர் பட்டாளம் கூறியதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது.

வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் பலரும் இன்றும் வீடுகளில் தாய்மொழியில் பேசுவதும் பூஜை, புனஸ்காரங்கள், சடங்கு, சம்பிரதாயங்கள் என்று அனைத்தும் செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ் மொழி ஆய்வாளர் ஒருவர் அங்கிருக்கும் கோவில்கள் தான் இதற்கு காரணம். அதனால் தான் நான்கு தலைமுறைகள் கடந்தும் பரதநாட்டியம், பாட்டு, தமிழ் அழியாமல் இருக்கிறது என்று கூறினார். சில பெண்கள் அழகாக கோலம், ரங்கோலியும் போட,

கோபிநாத்திற்கு ஒரே அதிர்ச்சி. "எமோஷன குறை. எமோஷன குறை" என்று காதில் ஓதியிருப்பார்கள் போலிருக்கு. காலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போடும் அழகிய கலையை மறந்து கொண்டிருக்கும் திராவிடர்களுக்கு அதிர்ச்சி வரத்தானே செய்யும்😁 கோலம் போடுவதில் இருக்கும் அறிவியலை மேல்நாட்டுக்காரன் ஆராய்ச்சி செய்கிறான். நாம் தெரிந்த கலையை மறந்து கொண்டிருக்கிறோம். என்னவோ போடா மாதவா😞 

என்னுடைய அனுபவத்தில் கனடா, அமெரிக்காவில் தமிழ் மொழி வகுப்புகள் அந்தந்த ஊர் தமிழ்ச்சங்கங்களால் முன்னெடுத்து குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படுகிறது. கலிஃபோர்னியா மற்றும் வேறு சில மாநிலப் பள்ளிகளில் வேற்று மொழியாகத் தமிழ் மொழியை அங்கீகரித்து க்ரெடிட் பெறவும் முடிகிறது. நியூயார்க்கில் இன்னும் அந்தளவிற்கு யாரும் முயலவில்லை.

இன்றைய 'நீயா நானா' மூலம் புலம்பெயர்ந்தவர்களின் இன்றைய தலைமுறையினர் தங்களுடைய மூதாதையர்களின் உறவுகளோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முனைவதும் "தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா" என்று சொல்வதில் பெருமை கொண்டிருப்பதும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

வேற்று மொழிகளைக் கற்றுக் கொண்டாலும் வெளிநாடு சென்றாலும் தமிழ் அழியாது என்பதை நிரூபிக்கிறார்கள். நாமோ, மும்மொழிக்கொள்கையால் தமிழ் மொழி அழிந்து விடும் என்று துண்டுச்சீட்டுப்பார்த்து "வெயிட் அண்ட் சீ" சொல்லி அரசுப்பள்ளி மாணவர்களுக்குத் துரோகம் செய்து கொண்டிருக்கிறோம்.





Tuesday, August 27, 2024

விதி வலியது

இன்று காலையில் கேட்ட செய்தியே கலவரமாக இருந்தது. ஒரு வாரத்திற்கு முன்பு ஒஹையோ மாநிலத்தில் கொலம்பஸ் நகரில் வாழும் தம்பதியர்(கணவன் 38, மனைவி 31) தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர். கணவன் மனைவியைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று பின் தன்னையும் சுட்டுக் கொண்டு இறந்திருப்பதாகக் கூறுகிறார்கள். அவர்களுக்கு 4,6,8 வயதில் குழந்தைகள் இருக்கிறார்கள். பள்ளி முடிந்து திரும்பிய குழந்தைகள் கதவைத் தட்டியும் திறக்காததால் வெளியில் காத்திருந்திருக்கிறார்கள். 4 வயதுக் குழந்தை 'டே கேரில்' இருந்திருக்கும் போல. இருவரின் வண்டிகளும் அங்கே இருந்திருக்கிறது. அடுக்குமாடிக் குடியிருப்பில் அக்கம்பக்கத்து ஆட்கள் கதவைத் தட்டியும் பலனில்லாததால் காவலர்களை அழைத்திருக்கின்றனர். 

குழந்தைகளைச் சிறுவர் காப்பகத்தில் சேர்ப்பதற்கு முன் அவர்களுடைய நண்பர்களில் ஒருவர் அழைத்துச் சென்றுள்ளார். இந்தச் செய்தியைக் கேட்டதிலிருந்து கலக்கமாகவே இருந்தது. கணவன் மனைவிக்குள் என்ன பிரச்சினையோ தெரியவில்லை. அந்தக் குழந்தைகளை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது.

மாலை என்னுடைய மருத்துவரின் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். வாசலில் அவசர மருத்துவ உதவி வண்டி நின்று கொண்டிருந்தது. ஸ்ட்ரெச்சரை எடுத்துக் கொண்டு உள்ளே சென்று கொண்டிருந்தார்கள்."போச்சுடா! இனி மருத்துவரைப் பார்த்த மாதிரி தான். யாருக்கு என்ன ஆச்சோ? இங்கிருந்து நோயாளியை அழைத்துச் செல்ல வந்திருக்கிறார்கள் போலிருக்கு" யோசித்துக் கொண்டே வண்டியை நிறுத்தி உள்ளே சென்றேன்.

ஒரே பரபரப்பாக இருந்தது. வேகமாக வந்த வாலிபனைப் பார்த்ததும் எனக்குப் பதட்டமாகி விட்டது. அவன் முகமும் சோர்ந்து இருந்தது. என்னைக் கண்டதும் வேகமாக வரவும், மருத்துவரும் "உனக்கு இவர்களைத் தெரியுமா லதா" என்று கேட்கவும், அந்தப் பையனின் பெயரைச் சொல்லி அவனை மட்டும் தெரியும் என்றேன்.

அவனுடன் இரண்டு பேர் கூட இருந்தார்கள். "என்னாச்சு" என்றவுடன் அவனுக்குப் பேச்சே வரவில்லை. கையெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது. "சரி நீ போய் உட்கார்" என்று சொல்லிவிட்டு அந்த இரண்டு பேரிடமும் கேட்டுக் கொண்டிருந்தேன்.

அவர்களுடைய ரூம்மேட் ஒருவன் "எப்பொழுதுமே லூசுத்தனமாக எதையாவது செய்து கொண்டிருப்பான். இன்று காலையிலிருந்தே இன்னிக்கு ஒன்னு நடக்கப் போகுது என்று சொல்லிக்கொண்டே இருந்தான். நாங்கள் வேலைக்குச் சென்று வீட்டுக்குத் திரும்பி வந்தால் அரை மயக்கத்திலிருந்தான். அப்பொழுதே காலையில் 20 மாத்திரைகள் சாப்பிட்டேன்" என்றானாம். இவர்கள் என்ன, எது என்று கேட்டுத் தெளிவதற்குள் "பாத்ரூம் போகிறேன் என்றவன் மேலும் 25 மாத்திரைகள் சாப்பிட்டு விட்டு வந்திருக்கிறான்." மயக்கத்திலிருந்தவனை இவர்கள் அலறியடித்து நான் சென்ற மருத்துவரிடம் அழைத்து வந்திருக்கிறார்கள். அவரும் முதலுதவி செய்து விட்டு மருத்துவமனையில் சேர்க்க ஆம்புலன்ஸை அழைத்து விட்டார்.

நான் பார்க்கும் பொழுது அவன் முழித்துக் கொண்டிருந்தான். நல்ல வேளை! அப்பாடா என்றிருந்தது!

அதற்குள் பெண் காவலர் வந்து தகவல்கள் கேட்க, "என்ன நடந்தது என்று இவர்களுக்குத் தான் தெரியும்" என்று கூறி நான் ஒதுங்கி நின்று கொண்டேன்.

"எதற்காக இப்படிச் செய்தான் என்று ஏதாவது தெரியுமா?"

அவர்களும் காரணத்தைக் கூறினார்கள். இதற்கு முன்பும் இப்படி ஏதோ ஒரு முட்டாள்தனமான காரியத்தைச் செய்து மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறான்.

படிக்க வந்தவன். அவனுடன் இருப்பவர்கள் வேலைக்குச் சென்று விட்டார்கள். இவன் இன்னும் படிக்கிறான். "அவனுடைய பெற்றோர்கள் அத்தனை நல்ல மனிதர்கள்.இவன் இப்படி அவர்களை நோகடிக்கிறானே. இப்ப எப்படி அவர்களைக் கூப்பிட்டுச் சொல்றதுன்னு தெரியலை" என்று வருத்தப்பட்டார்கள் அந்த இளைஞர்கள். 25-26 வயது தான் இருக்கும்.  இந்தியாவிலிருந்து மாணவர் விசாவில் வந்திருப்பவர்கள். நான் முன்பு பணிசெய்த இடத்தில் இங்கு வந்து படிக்கும் கல்லூரி மாணவர்கள் "இன்டெர்ன்" ஆக வந்திருந்தார்கள். அதனால் அவர்களில் சிலரை நன்கு தெரியும். அத்தனை பேரும் தெலுங்கர்கள். பலருக்கும் தமிழும் தெரிகிறது. நன்றாகப் பேசுவார்கள்.

ஏற்கெனவே, "50-60 லட்சம் வரை கடன் வாங்கி வந்து படிக்கிறோம். நல்ல வேலை கிடைக்க மாட்டேங்குது என்று எங்குப் பார்த்தாலும் புலம்பித் தள்ளுவார்கள்."

இங்கு வந்து ஒரு அற்ப விஷயத்துக்காக உயிரையும் விடத் துணிந்து விட்டான். அவன் பெற்றோர்களை நினைக்கத் தான் மனம் கனத்தது.

குழந்தைகளைப் பற்றிக் கவலைப்படாத பெற்றோரின் மரணமும் தன்னை நம்பி ஏகப்பட்ட செலவுகள் செய்து கனவுகளுடன் காத்திருக்கும் பெற்றோரைப் பற்றி சிறிதும் அக்கறையில்லாமல் சுயநலத்துடன் உயிரைப் போக்கிக் கொள்ள நினைத்த இளைஞனும் அனாதையான குழந்தைகளும் காத்திருக்கும் பெற்றோர்களும்...

வாழ்க்கையைச் சிக்கலாக்கிக் கொண்டு மீளத்தெரியாமல் இப்படி நடக்கிறதா?

அந்தக் குழந்தைகளுக்கும் தவிக்கும் பெற்றோருக்கும் தெய்வம் துணை இருக்கட்டும். அவர்களுக்காக வேண்டிக்கொள்வதைத்தவிர வேறு என்ன நம்மால் செய்து விட முடியும்?  செய்தியறிந்து பல ஊர்களிலிருந்து இந்தியர்கள் பலரும் அந்தக் குழந்தைகளுக்கு உதவ முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. 

ம்ம்ம்ம்.... விதி வலியது.




Monday, August 26, 2024

கிருஷ்ணாஷ்டமி

இன்று பகவான் கிருஷ்ணர் அவதரித்த நாள். அவரது வருகையை உவகையுடன் கொண்டாடும் பலரது உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும். கிருஷ்ணன் என்றாலே அழகும் ஆனந்தமும் தான். கர்ப்பிணிப்பெண்கள் பலரும் கூட கிருஷ்ணனைப் போல ஒரு குழந்தை வேண்டும் என்று தான் நினைத்து வழிபடுவார்கள். அன்புள்ள குழந்தையாய், குறும்புகள் செய்யும் மகனாய், இளம்பெண்களின் மனதைக் கவரும் காதலனாய், பாசமிகு சகோதரனாய், நண்பனாய் எத்தனை எத்தனை ரூபங்களில் அவன் நம்மோடு உறவாடுகிறான். கடவுள் என்பவர் நம்மில் தினமும் வாழ்ந்து வருவதைக் கொண்டாடி மகிழும் உள்ளங்களில் தான் எத்தனை எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா!

அவருக்குப் பிடிக்கும் என்று பால், சர்க்கரை, அவல், வெண்ணெய், நெய் என்று பட்சணங்கள் செய்து படைத்து உண்டு மகிழும் குடும்பங்கள் இன்று பல.

காலையில் சில காட்சிகளும் முகங்களும் நினைவிற்கு வந்தது.

காசியில் தங்கியிருந்த நாட்களில் காலையிலும் மாலையிலும் ‘முன்ஷி காட்’ படித்துறையில் அமைதியாக உட்கார்ந்து துள்ளியோடும் ‘மா கங்கா’வைப் பல மணிநேரங்கள் பார்த்துக் கொண்டு இருந்தோம். ‘சும்மாயிருத்தல்’ கணங்களை அனுபவித்த நேரம் அது! சிரித்த முகத்துடன் ஒரு தம்பதியர் கையில் சிறு குழந்தையை எடுத்துக் கொண்டு அருகில் படியில் அமர்ந்து கொண்டார்கள். கையிலிருந்த துணியை விலக்கினால் குழந்தை என்று நான் நினைத்தது அழகாக அலங்கரித்த குட்டி தவழும் கிருஷ்ணன் விக்கிரகம்😮 ஏதோ குழந்தையைப் போல அந்தப் பெண்மணி மடியில் கிடத்திக் கொண்டாள். ஆண் தண்ணீரில் இறங்கி கங்கா மாதாவை வணங்கி மூன்று முக்கு முங்கி எழுந்து வர, இந்தப் பெண்மணி சிறு குழந்தையைக் கொடுப்பது போல் சிரித்துக் கொண்டே லட்டு கோபாலை கணவரிடம் கொடுக்க, அவரும் இரு கைகளால் வாங்கிக் கொண்டு மீண்டும் மூன்று முறை முங்கினார். தன் சொந்தக் குழந்தையைக் குளிப்பாட்டியது போல் சிரித்துக் கொண்டே மனைவியிடம் கொடுக்க, அந்தப் பெண்மணியும் துண்டால் அழகாக துடைத்து வேறு துணியை மாட்டி அழகு பார்த்துக் கொண்டிருந்தார். மிக மிக எளிமையான மனிதர்களாகத் தெரிந்தார்கள். ஆனால் அவர்களின் உலகில் அத்தனை மகிழ்ச்சியாக இருந்தார்கள். பார்க்க பார்க்க எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. கடவுளையும் குழந்தையாக கொண்டாடுவதில் தான் எத்தனை இன்பம்! அவர்களிடம் எனக்குத் தெரிந்த இந்தியில் பேசிக்கொண்டிருந்தேன். கங்கையில் குளிப்பாட்ட வீட்டிலிருந்து தவழும் கிருஷ்ணன் விக்கிரகத்தை எடுத்து வந்திருக்கிறார்கள். குழந்தை இல்லை என்று நினைக்கிறேன். வாழும் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவிக்கத் தெரிந்து விட்டால் வாழ்க்கையே சொர்க்கம் தான். பணம் மட்டுமே மகிழ்ச்சியைத் தரும் என்று நினைத்து, வாழும் கணங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கிடையில் அந்த தம்பதியரை எனக்கு மிகவும் பிடித்தது. நாம் சந்திக்கும் மனிதர்கள் நமக்கு கற்பிக்கும் பாடங்கள் ஏராளம்!

அனைவருக்கும் இனிய கிருஷ்ணாஷ்டமி வாழ்த்துகள்!

ஹரே ராம! ஹரே கிருஷ்ண!

Sunday, August 25, 2024

உனக்கும் கீழே உள்ளவர் கோடி...

இந்த வார நீயா நானாவில் வேலைக்குச் சென்று கொண்டே படிக்கும் மாணவ, மாணவியர்கள் Vs அவர்களின் பெற்றோர்கள் என்ற விவாதம் நடந்தது. பங்கெடுத்த மாணவர்கள் பெரும்பாலும் புறநகரைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள். குழந்தைத் தொழிலாளர்கள் என்று கூட சொல்லலாம். பலரும் சிறுவயதில் இருந்தே வேலைக்குச் சென்று பின் பள்ளிக்குச் சென்று வந்திருக்கிறார்கள். வயதுக்கு மீறிய உடல் உழைப்பும் மனஉளைச்சலும் பார்க்கவும் கேட்கவும் வருத்தமாக இருந்தாலும் இது உண்மை. நடந்து கொண்டிருக்கிறது. குடும்பச் சூழ்நிலை காரணமாக குழந்தைகள் மேல் திணிக்கப்படும் வன்முறை இது. இங்குதான் அரசின் நலத்திட்டங்கள் சென்றடைய வேண்டும்.

இப்பொழுதெல்லாம் பெண்களுக்கு இளவயதிலேயே எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வந்துவிடுகிறது. போதிய ஊட்டச்சத்து இல்லாதது தான் முதற்காரணம் என்று சொல்ல வேண்டியதில்லை. கணவனுக்கு ஈடாக இல்லாவிட்டாலும் ஏதோ அவர்களால் முடிந்த அளவிற்கு அம்மா, மனைவி என வேலைகள் செய்து குடும்பங்களைச் சமாளித்து வருகிறார்கள். வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நோவு என்று வரும் பொழுது தான் இந்தக் குழந்தைகள் வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அவர்களும் சூழ்நிலையை உணர்ந்து பணியிடங்களுக்குச் செல்கிறார்கள். ஆனால் அவர்களின் வயதிற்கு மீறிய வேளைகளில் ஈடுபடுகிறார்கள். முடிவு? சிறுவயதிலேயே அவர்களுக்கும் உடற்பிரச்னைகள்!

அவர்கள் வளர்ந்ததும் என்னவாக ஆசைப்படுகிறார்கள் என்று சொன்னதிலிருந்து அவர்கள் எத்தனை பாதிக்கப்பட்டுள்ளார்கள். யாரால்? என்று நன்கு புரிந்தது. ஒவ்வொரு கிராமத்திற்கும், ஊருக்கும் என இருக்கும் அரசு அதிகாரிகளின் வேலையே இவர்களைப் போன்றவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் முறையாக சேர்கிறதா? இந்த மாணவர்களின் வாழ்க்கையைச் செழுமையாக்க அரசு இன்னும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சொல்வது தான். ஆனால் பெரும்பாலானோர் இவர்களிடமிருந்தும் எப்படி பணத்தைக் கொள்ளையடிக்கலாம் என்று தான் இருக்கிறார்கள் போலிருக்கு😔

அதில் ஒரு மாணவன் எதற்கும் ஆசைப்படுவதில்லை. விரும்பியதில்லை என்று அவனின் அத்தை கூற, "பிறந்ததிலிருந்து கிடைக்காத எதன் மீதும் தான் ஆசைப்பட்டதில்லை" என்று கூறியவன் மீது வருவது அனுதாபமா? வருத்தமா? தெரியவில்லை.

எங்கள் சாயப்பட்டறையில் கிட்டத்தட்ட என் வயது/அக்கா வயதுள்ள மகன்களை அழைத்துக் கொண்டு ஒரு தாய் கீழ்மதுரை ஸ்டேஷனிலிருந்து பள்ளி முடித்து அழைத்து வருவார். அரைமணிநேரம் நடந்து வரவேண்டும். மூவரும் வேலை செய்வார்கள். பாவம் முதல் பையன் தலையில் தான் அதிக வேலைகள் இருக்கும். அம்மா ஒத்தாசை செய்வார். இரண்டாவது பையன் அழுது கொண்டே இருப்பான். தூக்கம் வரும். கூடவே வீட்டுப்பாடங்கள் செய்வார்கள். இரவு வீடு திரும்ப 9.30 மணியாகி விடும். அப்பொழுதெல்லாம் அவர்களின் நிலைமையைக் கண்டு வருந்தியதுண்டு. அம்மாவும் அவர்களுக்காக இரவு உணவு, சமயங்களில் உடைகள், அவசரத்திற்குப் பணம் என்று கொடுத்து உதவுவார். இப்படிப்பட்ட மக்கள் ஏராளம் பேர் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். முடிந்தவர்கள் உதவுகிறார்கள். அவர்களைப் பார்க்கும் பொழுது இப்படியெல்லாம் கூட கஷ்டப்படுகிற மக்கள் இருக்கிறார்களா என்று ஆச்சரியப்பட்டதுண்டு. எனக்குப் பிடித்த உணவு இல்லையென்றால் அழுது ஆர்ப்பாட்டம் செய்து ஹோட்டலில் இருந்து உணவைக் கொண்டு வந்து சாப்பிடும் எனக்கு ஒருவேளை சாப்பாடு கூட இல்லாத நிலையில் இருப்பவர்கள் கற்றுக் கொடுத்தது ஏராளம். கல்வியின் அவசியத்தையும் உணர்த்திய காலம் என்று கூட சொல்லலாம்.

ஆனால் எல்லோருக்கும் எல்லாமே எளிதில் கிடைப்பதில்லை. அந்த மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேறி பெற்றோர்களை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். சமுதாயத்தில் தங்களுக்கென மரியாதையைப் பெற வேண்டும் என்று முனைகிறார்கள். நேர்மையாக உழைத்து வாழ வேண்டும் என்று நினைக்கும் அவர்கள் நினைத்தது நடக்கட்டும்.

இப்பொழுதெல்லாம் பலரும் படித்து முடித்து வேலைகளில் வெளிநாடுகளில் இருந்து தங்கள் சமூகத்தில் பின்தங்கிய மாணவ, மாணவியருக்கு முடிந்த வரையில் கல்வி பயில உதவி செய்கிறார்கள். இதன் மூலம் தனக்கு உதவிய சமூகத்திற்கு உதவி உயர்த்தவும் செய்கிறார்கள். பல குடும்பங்கள் இதன் மூலம் உயர்ந்துள்ளதை நேரடியாகவே பார்த்து வருகிறேன். அப்படித்தான் ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கிறேன் என்று குரல்வளையை நசுக்குபவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் திருமாவளவன், நடுவராக வந்த இயக்குனர் மாறி செல்வராஜ் போன்றவர்கள் முறையாக இந்த இளைஞர்களுக்கு வழிகாட்டி உயர்த்த வேண்டும். செய்வார்களா?

நாங்கள் வருந்திய காலங்களில் தாய் மாமா ஒருவர் எப்பொழுதும் கண்ணதாசனின் இந்தப்பாடல் வரிகளைத் தான் கூறுவார். "உனக்கும் கீழே உள்ளவர் கோடி. நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு..." சத்தியமான வார்த்தைகள்!


அடுத்த அமெரிக்க அதிபர் யார்?

சொல்வனம் இதழில் வெளிவந்துள்ள அமெரிக்க அதிபர் வேட்பாளர்களின் போட்டியைப் பற்றின கட்டுரை  அடுத்த அமெரிக்க அதிபர் யார்? இன்னும் இரு மாதங்களில் அ...