Monday, September 1, 2025

Bye , bye ஜெஜு

பயணம் என்பது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது மட்டுமல்ல. நாம் அறிந்திருந்த உலகிலிருந்து எத்தனை வேறுபட்டு நிற்கிறது நம்மைச் சுற்றியுள்ள வேறொரு உலகம் என்பதை உணர்த்தி ஆச்சரியத்தில் ஆழ்த்தி வாழ்வை ஆராதிக்க வைக்கிறது. அறியாத பாதைகளில் நடந்துசெல்வதன் மூலம் இந்த பிரம்மாண்ட உலகில் சிறு துளி தான் நாம் என்பதையும் உணர்ந்து தாழ்மையையும் கற்றுக்கொள்ள வைக்கிறது. அன்றைய விடியலின் பொழுது கம்பீரமாக நின்று கொண்டிருந்த ஹாலாசன் மலையைப் பார்க்கும் பொழுதும் அப்படித்தான் தோன்றியது எனக்கு. தன் பொற்கதிர்களால் வான் உலா வந்து கொண்டிருந்தான் கதிரவன். இந்த நல்ல நாளில் ஒரு பொழுதையும் வீணாக்கக் கூடாது என்று தயாராகி விட்டோம். காலை உணவிற்குப் பிறகு வண்டியைத் திறக்க முயன்றால் அது சண்டித்தனம் செய்தது. என்னடா மதுரைக்கு வந்த சோதனை? விடுதி வரவேற்பறையில் "It's okay to not be okay" தொடரின் கதாநாயகனைப் போல் இருந்த இளைஞனின் உதவியை நாடினோம்.

         
ஆங்கிலத்தில் பேசும் பொழுது கொரியர்கள் கொஞ்சம் வெட்கப்படுவது போல இருக்கிறது. நாங்கள் கூறியதைப் பொறுமையாகக் கேட்டுப் பணிவாகச் சாவியை வாங்கிக்கொண்டு கதவைத் திறக்க முடியாது போகவே, பாட்டரி போயிருக்கும் என்று உள்ளே சென்று பாட்டரி இருக்கிறதா என்று தேடினான் அந்தத் தம்பி. அங்கு இல்லை என்று தெரிந்தவுடன் வாடகைக்கார் நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு கேட்க, அவர்களும் பாட்டரி வாங்கிப் போட்டுவிட்டு அவர்களிடம் இருந்து பணத்தை வாங்கிக்கொள்ளலாம் என்று கூறினார்கள். சாலையில் இருக்கும் கடைக்குச் சென்று வாங்குமாறு சொல்ல, நாங்களும் என்னடா, நல்ல நாளில் இப்படி ஒரு மணிநேரத்தை வீணடிக்கிறோமே என்று அதிகாலை எட்டு மணிக்கு கடைகள் திறந்திருக்குமா என்ற சந்தேகத்துடன் நடந்து சென்றோம்.


சாலையில் வண்டிகள், பேருந்துகளின் நடமாட்டமும் அலுவலகத்திற்குச் செல்லும் சிலரையும் காண முடிந்தது. மதுரையைப் போலவே மெல்லத்தான் விடிகிறது இந்த ஊரும்! வயதான தம்பதிகளின் கடைக்குச் சென்று பேட்டரியை வாங்கிக் கொண்டோம். கையிருப்பாக வைத்திருந்த பணத்தையெல்லாம் முன்தின பயணத்தில் செலவிட்டதால் அருகிலிருந்த ஏடிஎம்-ற்குச் சென்றால் அது உள்ளூர் வங்கி அட்டைகளை மட்டுமே எடுத்துக் கொள்ளும் என்று தெரிந்தது. "இப்ப என்னம்மா பண்றது? அவசர செலவுக்குப் பணம் இல்லியே? எல்லா இடத்திலும் கார்டு எடுத்துப்பாங்கன்னு கொஞ்சப் பணம் தான் எடுத்து வந்தேன்.இப்ப அதுவும் தீர்ந்து போயிடுச்சு" என வருத்தப்பட்டாள்.

"ம்ம்ம்ம். அதுக்குத்தான் நானும் கொஞ்சம் பணம் எடுத்துட்டு வர்றேன்னு சொன்னேன். நீ வேண்டாம்னுட்டே. ஆனாலும் நான் எடுத்துட்டு வந்திருக்கேன். இந்தா பணத்தை வச்சுக்கோ" கொடுத்தவுடன், "தாங்க்ஸ்மா. நல்ல வேளை! இல்லைன்னா பணம் மட்டுமே வாங்கிப்போம்னு சொல்ற இடங்கள்ல கஷ்டமாயிருக்கும். இனிமே வெளிநாடுகளுக்குப் போனா கார்டை மட்டும் நம்பக்கூடாதுன்னு தெரிஞ்சுகிட்டேன். எதிர்பாராவிதமாக உடோ தீவிற்குச் சென்றதால் செலவாகி விட்டது" என்றாள்.

இந்தியாவில் நேர் எதிர் அனுபவம். பணத்தை வைத்துக் கொண்டு குதூப்மினார் சென்றால் QR code ஐ ஸ்கேன் செய்து அனுமதிச்சீட்டு வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூலாக சொல்லிவிட்டார்கள்! வேறு வழியின்றி டிரைவரிடம் வாங்கச் சொல்லி பணத்தைக் கொடுத்தோம். என்னதான் முன்னேறிய நாடுகள் என்றாலும் எல்லா இடங்களிலும் கடன் அட்டையை வைத்துக் கொண்டு சமாளிக்க முடியாது. கையில் கொஞ்சம் உள்ளூர் பணமும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று

அருகிலிருந்த வங்கிக்குச் சென்றால் வேறொரு வங்கியில் தான் வெளிநாட்டு கரன்சிகளை வாங்கிக் கொள்வார்கள் என்று கூற, 10 நிமிடங்களுக்கு நடந்து சர்வதேச வங்கிக்குச் சென்றோம். அதிகாலை நேரமென்பதால் இருவர் மட்டுமே இருந்தனர். அத்தனை குப்பையான வங்கியை மதுரையில் கூட நான் பார்த்தது கிடையாது! மேஜை நிறைய பேப்பர் குப்பைகள் ஒருபக்கம். பெரிய திரைகளுடன் கூடிய கணினி இத்யாதிகள் மறுபக்கம். அலுவலகமெங்கும் தாறுமாறாக இறைந்து கிடந்த பேப்பர்களைப் பார்த்தவுடன் என்னடா இது சவுத் கொரியா தானா? ஒரு வேளை தீவிற்குள் இருப்பதால் இப்படி அலங்கோலமாக இருக்கிறதோ என்றெல்லாம் எண்ண வைத்து விட்டது. பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்த எங்களைப் பார்த்ததும் எந்த வித முகப்பூச்சும் இல்லாமல் இருந்த 'ஒல்லி பெல்லி' மங்கை ஆங்கிலத்தில் என்ன உதவி தேவை என்று வினவ, நாங்களும் டாலர்களுக்கு உள்ளூர் கரன்சி(Won) வேண்டும் என்று கேட்க, எந்தவித ஆவணங்களையும் கேட்காமல் கொடுத்து விட்டார்! ஆச்சரியமாக இருந்தது! பொதுவாக, இந்தியாவில் பாஸ்போர்ட் கேட்பார்கள். வந்த வேலை முடிந்தது என்று விடுதிக்குத் திரும்பினோம். இதே அமெரிக்க வங்கிகள் என்றால் முகம், நகப்பூச்சுகள், ஒரு பிளாஸ்டிக் சிரிப்புடன் வாழை இலையில் நெய்யைத் தடவியது போல பேசியிருப்பார்கள். வாடிக்கையாளர்களைக் கவரும் விதத்தில் நடக்க வேண்டுமென்பது எழுதாத சட்டம். ஆனால் இங்கோ, அழகாக கண்களை உறுத்தாத வகையில் உடையணிந்து இயற்கையாக இருந்தது எனக்குப் பிடித்திருந்தது. வழியில் ஒதுக்குப்புறமான இடத்தில் புகை பிடித்துக் கொண்டிருந்தவர்கள் இந்தியர்கள் இருவரை அப்பொழுது தான் பார்ப்பது போல பார்க்க, பழக்க தோஷத்தில் கைப்பையை இறுக்கப் பற்றிக் கொண்டு அவர்களைக் கடந்தோம். நமக்கு யாரைக் கண்டாலும் பயம்😜
                            
விடுதியை அடைந்ததும் சாவி ரிமோட்டில் பேட்டரியைப் போட்டு கொடுத்த கதாநாயகனுக்கு நன்றி கூறி அங்கிருந்து கிளம்பினோம். அன்று செல்ல வேண்டிய ஹாலாசன் மலைப்பயணம் ஏழு மணிநேரங்களாகும் என்று தெரிந்ததால் அதற்குப் பதிலாக தென்மேற்கில் வேறு சில இடங்களுக்குச் சென்று வரலாம் என்று திட்டத்தை மாற்றி விட்டோம். ஜெஜூ தீவை முழுவதுமாகக் கண்டுகளிக்க குறைந்தது ஒரு வாரமாவது வேண்டும். கிழக்கில் நாங்கள் பார்க்காதது 'Folk Village" மட்டுமே. பல தொடர்களில் பார்த்து விட்டதால் அங்கு செல்லவில்லை. பார்க்க வேண்டிய இடங்கள் அத்தனைக் கொட்டிக்கிடக்கிறது!
  
                                

இயற்கை, வரலாறு, கடல் காட்சிகளை ஒரே பயணத்தில் கண்டுகளிக்க தென்பகுதியில் உள்ள சன்பாங் மலை, சொங்காக்சான் மலை, யோங்மியோரி கடற்கரைக்குச் சென்று வரவேண்டும். ஒவ்வொன்றும் அத்தனை அழகு!

தீவின் தென்மேற்குக் கரையில் உருண்டையாக எழுந்து நிற்கும் சன்பாங் மலை (Sanbang Mountain) அங்குள்ள மிகவும் தனித்துவமான இயற்கைச் சிறப்புகளில் ஒன்று. தூரத்திலிருந்தே கவர்ந்து விட்டது. மற்ற எரிமலை மலைகளைப் போல் இல்லாமல் சுற்றிலும் சமவெளி இருக்க, இந்த மலை திடீரென நிலப்பரப்பிலிருந்து எழுந்து நிற்கிறது. எரிமலையின் வெடிப்பிலிருந்து உருகிய கல் திடமாகி உருவான "trachytic rock dome" என்பதே இதன் தனிச்சிறப்பு. இம்மலையைச் சுற்றிலும் கனோலா செடிகளின் மஞ்சள் நிற மலர்கள் பூத்துக் குலுங்குவதைப் பார்க்கவும் படங்களை எடுத்துக் கொள்ளவும் பலரும் கிளம்பி வந்திருந்தார்கள். ஒரு பாட்டி வசூல் செய்து படங்களை எடுக்க அனுமதித்தார். நாங்களும் உள்ளே சென்று சுற்றிப்பார்த்து படங்களை எடுத்துக் கொண்டோம். மழைக்காலத்தின் துவக்கத்தில் மலையைச் சுற்றியுள்ள வயல்கள் எல்லாம் பொற்கதிர்களாய் மலர்ந்த மஞ்சள் கனோலா மலர்களால் நிரம்பி வழிய, நடுவில் எழுந்திருக்கும் கரும்பாறை பார்ப்பவர்களின் மனதைக் கொள்ளை கொள்கிறது. வண்டியிலிருந்தே இந்த மலையைச் சுற்றி வரும் வகையில் பாதையை அமைத்திருந்தார்கள். அங்கிருந்து 15 நிமிடங்களில் 'Songaskan Mountain' வந்தடைந்து விட்டோம்.

சன்பாங் , ஹாலாசன் மலைகளுக்கிடையில் அமைந்துள்ள சொங்காஸ்கான் மலையில் சுற்றுப்புறத்தில் ஒன்று, உச்சியில் ஒன்று என இரண்டு கிரேட்டர்கள் இருக்கின்றன! வண்டி நிறுத்தத்திலிருந்து மலை மீது ஏறவே வெகுதூரம் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது! உச்சிக்குச் செல்ல ஐந்து மணிநேரங்களாவது ஆகும் என்று தெரிந்தவுடன் இரண்டு மணிநேரத்தில் பார்த்தவரை போதும் என்று இறங்கி விட்டோம். நல்ல கூட்டம் அன்று. கோடையில் இந்த இடங்கள் எல்லாம் பயணிகளால் நிரம்பி வழியும். இதற்காகவே கோடைப்பயணத்தை முழுவதுமாக தவிர்ப்போம்.

                             

ஓரிடத்தில் ஆழ்கடலில் அரியவகை மீன்களைப் பிடிக்கும் 'ஹென்யோ' பாட்டிகள் நடத்தும் உணவகம் இருந்தது. ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தார்கள். மலை மீது ஏற ஒவ்வொரு பகுதியும் கடலுடன் சேர்ந்து அதிஅற்புதமாகக் காட்சி தந்து கொண்டிருந்தது. இந்த மலை, அதன் புவியியல் அமைப்புகளுக்காகவும், கடற்கரைக் காட்சிகளுக்காகவும் பிரபலமானது என்று அறிந்து கொண்டோம். படங்களுடன் விளக்கமாக அங்கிருந்து தெரியும் மலைகள், தீவுகளைப் பற்றின விளக்கங்களை ஆங்காங்கே வைத்திருந்தது சிறப்பு. சில தொடர்களில் வந்த இடங்கள் என்பதை அங்கிருந்து பார்க்கும்பொழுது தெரிந்தது. இந்த மலைப்பாதையின் மற்றொரு முக்கிய அம்சம், 1943–1945 இடையே ஜப்பானிய ராணுவம் கட்டிய குகைகள் ஆகும். அதை நன்கு பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். வரலாறு முக்கியம்ல?
 
இறங்கும் வழியில் ஓரிடத்தில் நெருப்பில் சுட்ட சர்க்கரைவள்ளிக் கிழங்கை வாங்கிச் சாப்பிட்டோம். இரு வயதான தாத்தா, பாட்டிகள் நடத்தும் உணவகத்தில் 'பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ்'ன் பாடலைக் கேட்க ஆச்சரியமாக இருந்தது! நிறைய மேற்கத்திய பாடல்களைக் கேட்க முடிந்தது. இல்லையென்றால் இருக்கவே இருக்கு கே-பாப். ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்த கணவன், மனைவி கொரியன்களுடன் தீவின் அழகைப் பற்றிப் பேசிக்கொண்டே மலையை விட்டு இறங்கினோம். அவர்களும் முதன்முறையாகத் தீவிற்கு வந்திருக்கிறார்கள்! மலைமுழுவதும் பச்சைப்பசேலென இருக்கிறது. மஞ்சள் வண்ண கனோலா, பிங்க் நிற செர்ரி மலர்கள் என்று கண்ணுக்குக் குளுமையாகவும் குழந்தைகளைக் கவர குதிரை சவாரிகளும் உண்டு.

                            

கீழே வண்டி நிறுத்தத்திற்கு அருகில் ஒரு ஸ்டார்பக்ஸ்! நன்கு பிரபலமாகி இருக்கிறது போல! அது என்ன மாயமோ தெரியவில்லை சுற்றுலாவினர் பலரும் வந்து செல்லும் இடத்தில் ஓரிடத்தில் கூட குப்பைகளே கண்ணில் படவில்லை. மக்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியமாகுமோ? அங்கிருந்த கடையில் சில பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டு 'Yongmeori Coast' புறப்பட்டோம். செல்லும் வழியில் கனோலா மலர்களின் பின்னணியில் மலையும் அங்குள்ள அற்புதமான புத்தர் கோவிலும் தெரிந்தது. மிகப்பெரிய புத்தர் சிலை! தீவில் பார்த்த முதல் புத்தர் கோவில் இது தான். சுற்றுலாவினர் அதிகம் தென்பட்டார்கள். உலகெங்கிலும் மலைகளைத் தேடித்தேடி போய் உச்சியில் புத்த மடாலயங்களையும் பெரிய புத்தர் சிலையையும் கட்டி வைத்திருக்கிறார்கள்!

                                 

ஜெஜு தீவு எரிமலைகளால் உருவானாலும் யோங்மியோரி கடற்கரை ஜெஜுவின் மிகப் பழமையான எரிமலையால் உருவானது. அதன் தனித்துவமான புவியியல் அமைப்பு UNESCO மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு 2010ஆம் ஆண்டில் தீவு முழுவதும் UNESCO Global Geopark Network உறுப்பினராக இணைக்கப்பட்டிருக்கிறது.

'யோங்மியோரி' என்ற பெயர் 'நாகத்தின் தலை' என்பதைக் குறிக்கிறது. கடற்கரைப் பாறைகள் நீளமான எரிமலைப் பாறைகளால் உருவாகி, நாகத்தின் தலையாகக் காட்சி தருவதால் இந்தப் பெயர். கடலின் அலைகள் பாறைகளை வடிவமைத்து தனித்துவமான காட்சிகளை உருவாக்குகின்றன. குறைந்த அலைகள் இருக்கும் நேரத்தில் மட்டுமே பாறைகளில் நடக்க முடியும். கடல் குகைகளையும் பார்க்கலாம். யோங்மியோரி கடற்கரையில் (Yongmeori Coast) காணப்படும் hexagonal joints (ஆறு பக்கக் கூட்டுப் பாறைகள்) ஒரு முக்கிய புவியியல் சிறப்பு. லாவா குளிரும்போது அது சுருங்கி உடைந்து, இயற்கையாகவே ஆறு பக்க வடிவில் (hexagonal columns) சிதறுகிறது. இது “columnar jointing” என அழைக்கப்படுகிறது. இங்குள்ள பாறைகளில் பழமையான உயிரினங்களின் அடையாளங்கள், அவற்றின் எலும்புகள், படிமங்கள் போன்றவை காணப்படுவதால் மிகவும் அரிய பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பலவகையான கடல் உயிரினங்களும் இங்கே இருப்பதாகத் தகவல் பலகைகளில் குறிப்பிட்டிருந்தார்கள். இந்த அரிதான அமைப்புகள் ஐரோப்பா, வடஅமெரிக்காவில் நாங்கள் பயணித்த கடற்கரைகளில் காணாத காட்சிகள் என்பதால் எங்களை மிகவும் கவர்ந்தது. மாணவர்கள் கூட்டம் இங்கு அதிகம் தென்பட்டது. ஆளாளுக்கு விதவிதமான போஸ்களில் படங்களை எடுத்துக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து மதிய வெயிலில் ஜொலித்துக்கொண்டிருந்த கடலை பார்த்துக் கொண்டிருந்தோம்.
                         

அடுத்த இடத்திற்குச் செல்வதற்கு முன் கடையில் வறுத்த கிழங்கு, ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு Cheonjeyeon Falls சென்றோம். இந்த இடத்தில் நீரூற்று, அரண்மனை வளாகம், மூன்றடுக்கு அருவி, பாலம் என்று காட்சிகளுக்கு குறைவில்லை. படங்கள் எடுக்க அருமையான இடம். நடந்து நடந்து கால்கள் களைத்துப் போக, விடுதிக்குத் திரும்பும் பொழுது மணி ஆறாகி விட்டிருந்தது.

                                                                             

சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு ஆசை ஆசையாக 'Buldak Ramen'ஐ சுவைக்க சாலையில் இருந்த சிறுகடைக்குச் சென்றோம். இவ்வளவு காரமாகவா சாப்பிடுகிறார்கள் கொரியர்கள்! அடேங்கப்பா! காரத்தின் அளவுக்கேற்ப விதவிதமான சுவைகளில் வகைவகையான மாமிசங்களுடனும் இல்லாமலும் கிடைக்கிறது. கடையிலேயே மைக்ரோவேவ் அவன் இருக்கிறது. அங்கேயே சூடு பண்ணி சாப்பிடும் வசதிகள் இருப்பதால் பலரும் கடைகளிலேயே சாப்பிடுகிறார்கள். கையால் சாப்பிடும் வேலை இல்லை என்பதால் தண்ணீர் தேவையில்லை. கடைகளும் சுத்தமாக இருக்கின்றன. எத்தனை எளிதாக வாழ்க்கையை மாற்றிவிட்டிருக்கிறார்கள்!

                             

வயிறும் மனதும் நிறைந்த நாளாய் அன்று பார்த்த இடங்களை பற்றிப் பேசிக்கொண்டு இருந்தோம். ஜெஜூவிற்குச் செல்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள். நல்ல வேளை! நாங்கள் தவற விடவில்லை. நாளை மாலை வரைதான் ஜெஜூ வாசம்! அதனால் வடகிழக்கில் பார்க்கவேண்டிய முக்கியமான இடங்களைக் குறித்து வைத்துக் கொண்டோம். மெதுவாக எழுந்திருந்து பொறுமையாக பார்ப்போம் எனத் தீர்மானித்து உறங்கச் சென்றோம்.

காலையில் எழுந்து அறையை காலி செய்து பெட்டிகளை வண்டியில் ஏற்றிவிட்டு சாப்பிடச் சென்றோம். முட்டைப்பொரியல், கிம்ச்சி, seaweed சூப், கஞ்சி, பிரட், சாலட் எல்லாவற்றையும் ஒருகை பார்த்து விட்டு 'Samdal-ri' கிராமத்தைப் பார்க்க புறப்பட்டோம்.

                        

கொரியா செல்வதற்கு முன் நான் பார்த்துக் கொண்டிருந்த 'Welcome to Samdal-ri' தொடர் ஜெஜூவிற்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையை மேலும் தூண்டியது. தொடரில் வரும் மரமும், தெருக்களும், நீலமும் பச்சையும் கலந்த கடலும், கடற்கரையோரமும் பசுமையும் என வெகுவாக என்னை கவர்ந்திருந்தன. அதனால் அந்த மரத்தைத் தேடி கிராமத்திற்குச் சென்றோம். வழியில் அழகழகு ஊர்கள் தென்பட்டன. காற்றாலைகளும் வண்ண வண்ண வீடுகளுமாய் எத்தனை இடங்களில் தான் நிறுத்தி நிறுத்திச் செல்வது? என்னுடன் பயணிப்பவர்களுக்கு அதீத பொறுமை இருக்க வேண்டும். பாவம் மகளரசி!

கிராமத்திற்குள் நுழைந்து தெருக்களைப் பார்த்தவுடன் தெரிந்துவிட்டது . எத்தனை அழகாக இந்த தெருக்களை காட்சிப்படுத்தியிருந்தார்கள்! அதோ நான் தேடி வந்த நடுத்தெரு திண்ணை மரம்! என்ன? இலைகள் இன்றி மொட்டையாக இருந்தாலும் திண்ணையில் சிறிது நேரம் அமர்ந்து வேடிக்கை பார்த்தோம். ஒரு ஜனமும் கண்ணில்படவில்லையே! வீடுகளைச் சுற்றி எரிமலைக் கற்களால் சுவர்களைக் கட்டியிருந்தார்கள். எல்லா வீடுகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத் தான் இருந்தது. சதுர வடிவில் நான்கைந்து பேர் அமரும் வகையில் மரப்பலகை இருக்கை. அருகில் இருந்த பேக்கரிக்குச் சென்றால் அங்கே தொடரை எடுத்த காட்சிகளைப் படங்களாக மாட்டியிருந்தார். சிறிது நேரம் தொடரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். என்னைப் போன்ற கே-ட்ராமா பைத்தியங்கள் அதிகம் பேர் அந்த ஊருக்கு வந்து செல்வதாகவும் அருகில் இருக்கும் கிராமத்தில் கூட பல காட்சிகள் எடுத்திருப்பதாகவும் கூறினார். டாஞ்செரின் கேக் அத்தனை சுவையாக இருந்தது. சிறிது நேரம் தெருக்களைச் சுற்றி வந்து கடற்கரைக்குச் சென்றோம்.
                         

இந்த காட்சிகளுக்காகத்தான் இங்கு வந்ததே. அதைப் பார்த்த திருப்தி கிடைத்துவிட்டது. ஊரில் மனிதர்கள் வாழ்கிறார்களா என்ன? அனைத்து வீடுகளிலும் தோட்டங்கள் இருந்தன. கிம்ச்சி செய்யப் பயன்படுத்தும் சைனீஸ் காபேஜ், வெங்காயத் தாள், கீரை வகைகளை வளர்க்கிறார்கள். எரிமலைக் கற்கள் நிரம்பி இருப்பதால் கொஞ்சம் அழுக்காக இருப்பது போலத் தோன்றினாலும் தெருக்கள் சுத்தமாக இருந்தன. ஈக்கள், நாய்கள், பன்றிகள், மாடுகள் என்று மதுரை மண்ணின் மைந்தர்கள் எதுவும் கண்களில் படவேயில்லை!
 
அதிசயித்தபடியே நீல மேகத்தைப் பிரதிபலித்துக் கொண்டிருந்த கடலை ரசித்துவிட்டு 'மஞ்சங்குள்' லாவா குகைகளைப் பார்க்க கிளப்பினோம் . எங்கள் நேரம்! பழுதுபார்க்கும் வேலை காரணமாக அதை தற்காலிகமாக மூடிவிட்டிருந்தார்கள். அதைப் பற்றி நிறைய வாசித்திருந்ததனால் மிகுந்த ஆவலுடன் சென்றிருந்தேன். கொஞ்சம் ஏமாற்றம் தான். சரியென்று மிகவும் பிரபலமான ''ஹே டாக்' கடற்கரைக்குச் சென்றோம். பளிச்சென்று வெயில். வண்டியை நிறுத்தி விட்டு அருகிலிருந்த கடையில் ஜூஸ் வாங்கி குடித்து விட்டு கடலை நோக்கி நடக்கும் பொழுது தமிழில் பேசுவது கேட்டது. யாருடா நம்ம இனம்? ஜெஜுவிற்கு வந்திருக்கிறது என்று பார்த்தால் இரு பெண்களுடன் அப்பா, அம்மா கலிஃபோர்னியாவில் இருந்து வந்திருந்தார்கள்!

ஜெஜு தீவைச் சுற்றி இருக்கும் கடல் நீலமும் பச்சை வண்ணமும் கலந்து அழகோ அழகோவென்று காண்போரை வசீகரிக்கிறது. வெண்மணல் கரையைத் தொட்டுத்தொட்டு செல்லும் ஆர்ப்பாட்டமில்லாத அலைகள் எரிமலைப்பாறைகள் மீது மோதிச் செல்லும் அழகு என்று நடக்க நடக்க காட்சிகள் ஏராளம்! இன்ஸ்டாக்ராமிற்காக ஆடிப்பாடி வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒருமணிநேரமாவது சுற்றிப்பார்த்து மனதில் காட்சிகளைப் பதிவுசெய்து கொண்டோம். பயமில்லாமல் பாறைகளில் நின்று பார்க்க முடிகிறது. காற்று அதிகம் அடித்தால் டண்டணக்கா தான்.

                        

வண்டியைத் திருப்பிக் கொடுக்க இன்னும் நேரம் இருக்கிறது. பெட்ரோலை நிரப்பித் தரவேண்டும். இப்பொழுது நெரிசல் மிக்க பகுதிக்கு வந்து விட்டோம் என்று புரிந்தது. வாடகை வண்டியைத் திருப்பிக் கொடுக்க, ஒரு கேள்வியுமில்லை. பேட்டரிக்கான பணத்தைக் கொடுத்துவிட்டார்கள். அங்கிருந்து ஷட்டில் எடுத்துக்கொண்டு விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தோம். வெளிநாட்டுக்காரர்களுக்கென்று தனி வரிசை. உள்ளூர்க்காரர்கள் கை நிறைய டேன்ஜரின் பழப்பெட்டிகள், கூடைகள், இனிப்புகள் என்று எடுத்துச் சென்று கொண்டிருந்தார்கள். அங்கும் விற்றுக்கொண்டிருந்தார்கள். உள்ளூர் விமானங்களில் தண்ணீர், காஃபி எல்லாம் எடுத்துச் செல்ல அனுமதிக்கிறார்கள்!

அங்கிருக்கும் உணவகங்களில் அத்தனை கூட்டம். முதன்முறையாக உடான் நூடுல்ஸ் சாப்பிட்டேன். அமெரிக்காவை விட உணவுவிலை இங்கு மலிவு தான். எங்கும் பெண்கள் தான் அதிகம் வேலை பார்த்துக் கொண்டிருப்பதாக தோன்றியது! அதுவும் வயதான பெண்கள். பம்பரமாய்ச் சுற்றிக் கொண்டிருந்தார்கள்! கட்டிளங்காளைகள், கன்னிகளுடன் விமானநிலையம் பரபரப்புடன் இருக்க, 'ஜெஜூ ஏர்'ல் ஏறி சியோல் நகருக்குப் பயணமானோம். இங்கிருந்த ஒவ்வொரு நாளும் பார்த்த ஒவ்வொரு இடங்களும் மறக்க முடியாத இனிய அனுபவத்தைக் கொடுத்திருந்தது. 7.15 மணிக்கு 'பை பை ஜெஜூ' சொல்லி கிளம்பி 8.30மணிக்கு சியோல் வந்து சேர்ந்தோம்.

                                            
                                 

அங்கிருந்து விடுதிக்குச் செல்ல சப்வே ரயிலில் ஏறி அரைமணி நேரப் பயணம். இளைஞர்கள் அனைவரும் ஃபோனில் மூழ்கியிருந்தார்கள். அமெரிக்கன் பிராண்ட் ஷூக்கள், ஐபோன்கள், பெரிய வாட்ச்சுகள், பெண்கள் முகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் போலிருக்கு! மீசையில்லாத ஆண்கள் ஆனால் தலை முழுவதும் முடி! என்ன கொடுமை சரவணா இது😎இதே நியூயார்க் ட்ரெயினில் என்றால் எத்தனை மொட்டைத்தலைகள். எத்தனை விதமான மனிதர்கள், நிறங்கள், உடைகளைப் பார்த்திருப்பேன் என்று நினைத்துக் கொண்டேன். கொரியன்கள் உடை விஷயத்தில் மிகவும் கண்ணியமாக உடலை அதிகம் வெளிப்படுத்தாத அளவிற்கு கொஞ்சம் லூசாகவே அணிகிறார்கள்!

நாங்கள் இறங்க வேண்டிய இடத்தை அடைந்ததும் வெளியில் வந்தால் ட்ரெயின் டிக்கெட்டை ஓரிடத்தில் போடும் இயந்திரத்தில் போட்டால் கொஞ்சம் காசு திரும்ப கிடைக்கிறது! subway சுத்தமாக இருக்கே என்றவுடன், "இதெல்லாம் சுத்தமா? சுத்தம் என்றால் அது ஜப்பான் தான்" என்றால் மகள்! ம்ம்ம்ம். பெட்டிகளைச் சுமந்து கொண்டு வெளியில் வந்தால் ஒரே சத்தம். நடைபாதைகளில் மக்கள் கூட்டம். வழிநெடுக உணவகங்கள். கடைகள். எத்தனைக்கெத்தனை ஜெஜூ அமைதியாக இருந்ததோ அதற்கு எதிர்ப்பதமாக இருந்தது சியோல். எங்களுக்கோ ஒரே கொண்டாட்டம். முகவரியைத் தேடி விடுதி இருக்கும் தெருவில் நுழைந்தவுடன் டெல்லியில் நாங்கள் தங்கியிருந்த இடம் தான் நினைவிற்கு வந்தது. சிறிதும் பெரிதுமாக நெருக்கமான கட்டிடங்கள்.

எனக்கு மதுரை தங்கம் தியேட்டர் தெருவிற்குள் நுழைந்தது போல இருந்தது. ஓரளவு ஆங்கிலம் பேசுபவர்கள் விடுதி வரவேற்பறை அலுவலகத்தில் இருந்தனர். எங்களது பாஸ்போர்ட் விவரங்களை வாங்கிக் கொண்டு மாடியில் இருக்கும் அறைக்கான சாவியைக் கொடுத்து விட்டு காலை உணவிற்கான இடத்தையும் காட்டினார்கள். சிறிய அறை. ஜெஜு தீவில் நாங்கள் தங்கியிருந்த சொகுசு அறை எங்கே? இத்துனூண்டு இடத்தில் பெட்டிகளை வைத்து விட்டு கீழே விழாமல் நடப்பதே சிரமமாக இருந்தது இங்கே. வாடகையும் அதிகம்! நகரம் என்றால் சும்மாவா?

"வாம்மா. இங்க தெரு உணவுகள் ரொம்ப பாப்புலர். என்னென்ன இருக்குன்னு பார்த்துட்டு கொஞ்ச தூரம் நடந்துட்டு வரலாம்" என்று உடனே கிளம்பி விட்டோம்.
 
சாலையோரங்களில் இரவு உணவுக்காக தற்காலிக இருக்கைகள், மேஜைகள் போடப்பட்டு அப்படியொரு கூட்டம். மேஜைகளில் சோஜு பாட்டில்கள்! கிழக்காசியா, பெருநகரத்திற்கே உரிய அத்தனை அம்சங்களுடன் இருந்த நகரம் இரவை உயிர்ப்பித்துக் கொண்டிருந்தது. ஆவி பறக்க, கிண்ணங்களில் சூப், டம்ப்ளிங்ஸ், கைகளில் சாப்ஸ்டிக் வைத்துக் கொண்டு சத்தம் போட்டு சிரித்துக் கொண்டிருந்த புதியதொரு உலகத்தைப் பார்த்தோம். எங்கே மனிதர்கள் என்று தேடிக் கொண்டிருந்தேன். அவர்கள் அனைவரும் சியோலில் கொட்டமடித்துக் கொண்டிருந்தார்கள்!

நாங்களும் ஒரு மணிநேரம் வரை சுற்றிப்பார்த்து என்னென்ன உணவு வகைகளை கடைகளிலும் தள்ளுவண்டிகளிலும் விற்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டே வந்தோம். சுற்றுலாவினரும் உள்ளூர் மக்களும் என்று அந்த இடம் தீபாவளி நேரத்து மதுரை விளக்குத்தூண் பகுதியைப் போல 'ஜேஜே' என்றிருந்தது. வேலை முடிந்து வீட்டிற்குப் போகமாட்டார்களோ என்ற சந்தேகமும் வலுத்தது. பெரும்பாலும் இளைஞர்கள், இளம்பெண்கள் பட்டாளம். தள்ளாடி தள்ளாடி சிரித்துப் பேசிக்கொண்டே செல்லும் நடுத்தர வயது ஆண்களும் அதிகம் தென்பட்டார்கள். மகள் டோக்கியோ தெருக்களும் இப்படித்தான் களை கட்டியிருக்கும் என்று கூறி அங்கு அவள் பார்த்த, சாப்பிட்ட உணவுகளைச் சொல்லி ஒரு கடையின் முன் நிற்க, அங்கிருந்த இளைஞன் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடி இரண்டு மூன்று டம்ப்ளிங் வகைகளை அறிமுகப்படுத்தினான். நாங்களும் எங்களுக்குப் பிடித்த டம்ப்ளிங்குகளை வாங்கிக்கொண்டு அறைக்குத் திரும்பினோம்.
                                     
                                          
வாவ்! இத்தனை சுவையான டம்ப்ளிங்குகளை நான் இதற்கு முன் சாப்பிட்டிருக்கவில்லை. ரசித்து ருசித்து சாப்பிட்டோம். "எனக்கு வேறெதுவும் வேண்டாம். இனி எண்டே நாடு கொரியா. எண்டே சாப்பாடு ஷ்ரிம்ப் டம்ப்ளிங்" என்று பாட, இது ஆரம்பம் தான். நாளைக்கு 'food tour' போறோம். அங்க இன்னும் நிறைய தெரிஞ்சுப்போம். உனக்கு எல்லாமே பிடிக்கும் என்றாள் என் செல்லம்.

ஆஹா! கனவுகளுடன் உறங்கச் சென்றோம்.












Sunday, August 17, 2025

சூரியோதய உச்சி மலையும் உடோ தீவும்

சொல்வனம் இதழில் வெளிவந்துள்ள என்னுடைய தென்கொரிய பயணக்கட்டுரையின் இரண்டாவது பாகம் ‘யூ அஸ் ஹோட்டல்’ செக்விபோ நகர்

ஜெஜு தீவிற்கும் நியூயார்க்கிற்கும் இடையே 13 மணி நேர வேறுபாடு இருந்தும் பயணக்களைப்பில் நன்கு உறங்கி விட்டோம். காலையில் ஆறே முக்காலுக்கெல்லாம் தயாராகி ஜன்னல் திரைச்சீலையை விலக்கினால் கம்பீரமான ஹாலாசன் மலைச்சிகரம் 55 டிகிரி ஃபாரன்ஹீட் குளிரைப் போர்த்திக் கொண்டு காட்சி தந்து கொண்டிருந்தது😰 பொழுது புலர்ந்திருந்தாலும் தலையை வெளியே நீட்டலாமா வேண்டாமா என்று கதிரவன் ‘இங்கி பிங்கி பாங்கி’ போட்டுக் கொண்டிருந்தான். நாங்கள் தங்கியிருந்த ‘யூ அஸ் ஹோட்டல்’ செக்விபோ நகரின் ஜங்குன் மாவட்டத்தில் சுற்றுலாவினருக்கு ஏற்ற அனைத்து வசதிகளுடன் சர்வதேச மாநாட்டு மையம், புகழ்பெற்ற இடங்களுக்கு அருகில் இருந்ததால் சென்று வர  மிகவும் வசதியாக இருந்தது. கோடை காலத்தில் அங்கே தங்க அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்!

காலை உணவிற்கான நேரமும் வந்துவிட்டது என்று கீழிறங்கிச் சென்றால் எங்களுக்கு முன்பே கணவனும் மனைவியுமாக இரு கொரியர்கள் அங்கே உணவருந்திக் கொண்டிருந்தார்கள்! காற்றோட்டமான பெரிய உணவுக்கூடம்! தட்டுகள், முள்கரண்டிகள், கிண்ணங்கள், கோப்பைகளை நேர்த்தியாக அடுக்கி வைத்திருந்தார்கள். சுத்தமான மேஜைகள். வரிசையாக உணவுகள். 

நான்கு விதமான கிம்ச்சி வகைகள்😋தனித்தனி பாக்கெட்டுகளில் seaweed வைத்திருந்தார்கள். சோறு, சோய்பீன் பேஸ்ட் முட்டைகோஸ் சூப், அரிசிக்கஞ்சி (ஞாயிறு தோறும் காலை உணவாக இதை (என் தாய்மொழியில் கென்னிபேஸ்) அம்மா செய்தாலும் அதை நான் இதுவரையில் சாப்பிட்டது கூட இல்லை. இங்கே என்னடான்னா! கடவுள் இருக்காடா குமாரு என்னைய சோதனை பண்ண😂) பொரித்த முட்டை, உருளைக்கிழங்கு, சாசேஜ், stir fried beef with vegetables, சாலட், அதற்கு ட்ரெஸ்ஸிங்ஸ், ப்ளூபெர்ரி தயிர், டேன்ஜரின் பழச்சாறு, பிரட் பட்டர் ஜாம், சீரியல் வகைகள், காஃபி, தேநீர் என்று அதகளப்படுத்தியிருந்தார்கள். மேற்படி ஐட்டங்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் சுவைத்துப் பார்க்க தீர்மானித்து இரு தட்டுகளை நிரப்பிக் கொண்டேன். கிம்ச்சிக்கென்றே ஒரு தட்டு😍

அங்கிருந்த மேஜைகளில் ‘சாப்ஸ்டிக்ஸ்’ இருந்தாலும் நான் எதையாவது எடுக்கப் போக, அது பறந்து பக்கத்து மேசைக்குப் போய்விட்டால் எதற்கு வம்பு என்று முள்கரண்டியால் சாப்பிட ஆரம்பித்தேன். காரசாரமான கிம்ச்சி…ம்ம்ம்ம். சுவையோ சுவை! அமெரிக்க கடைகளில் விற்பதெல்லாம் குப்பை என்று உணர வைத்தது! சீவீட்-ல் வைத்து வெத்தலையை மடிப்பது போல மடித்து அப்படியே ‘லபக்’.

கொரியன் நாடகங்களில் அதிகம் கவர்ந்தது அவர்கள் மேஜை நிறைய சாப்பாடு வகைகளை கிண்ணங்களில் வைத்துக் கொண்டு சோறு ஒரு கரண்டி, சூப், காய்கறிகள், இறைச்சிகள் என்று வாய் நிறைய சாப்பிடுவது தான். என்ன தான் நாமும் குழம்பு, ரசம், கீரை, பொரியல், கூட்டு, அப்பளம், தயிர் என்று வைத்துச் சாப்பிட்டாலும் வெறும் கிம்ச்சியுடன் சோறு சாப்பிடுவதும் நன்றாகத் தான் இருந்தது!

அரிசிக்கஞ்சி நன்றாக இருக்கிறது என்று மகள் சொல்லவும், சுவைத்துப் பார்த்தேன். உப்பு தூக்கலாக. ம்ஹூம்! எனக்குப் பிடிக்காத உணவுப்பட்டியலில் மீண்டும் போய் உட்கார்ந்து கொண்டது. ஆம்லேட்டை எண்ணெயில் பொரித்து வைத்திருந்தார்கள். அன்றன்றே தயார் செய்த சாலட், பழச்சாறு அருமை. பிரட்-ஐ மட்டும் விடுவானேன். அது வேறு நன்றாக இருந்தது. ஆக மொத்தம் காலையிலேயே வயிறு முட்ட நன்றாக சாப்பிட்டாகிவிட்டது. எங்களுடைய மேசைக்கு அருகில் ஒரு கொரியன் மூன்று தட்டுக்கள் நிறைய “மொச்சுக்கு மொச்சுக்கு” என்று வாயைத் திறந்து திணித்து சத்தம் போட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சாப்பிடும்போது யாரையும் பார்க்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் ஒன்று, அங்கு வந்திருந்தவர்கள் அனைவரும் மிக நன்றாகவே தட்டுகள் நிறைய சாப்பிட்டார்கள். ஒருவேளை மதிய உணவைச் சாப்பிட மாட்டார்களோ என்னவோ!

 ‘Sunrise Peak’ (Seongsan Ilchulbong) என்னும் எரிமலைசிகரம்

ஜெஜூ தீவில் பார்ப்பதற்கு அத்தனை இடங்கள் இருக்கின்றன! முதலில் நாங்கள் ‘Sunrise Peak’ (Seongsan Ilchulbong) என்னும் எரிமலை உச்சிக்குச் செல்ல திட்டமிட்டுக் கிளம்பினோம். அதிகாலையில் சென்றிருக்க வேண்டியது. சூரியன் வருவது சந்தேகம் என்பதால் தாமதமாகச் சென்றோம். குளிர் வேறு! இரண்டரை மணிநேரம் கடலை ஒட்டிய சாலைப் பயணம். வழியில் சிறு கிராமம் போல் ஒன்று தெரிய, வண்டியை உள்ளே விட்டோம். வீடுகளற்ற நிலங்களில் முள்ளங்கி விளைச்சல் அமோகமாக இருந்தது. ஒவ்வொரு முள்ளங்கியும் நம்மூர் முள்ளங்கிகள் 10 சேர்ந்தால் எப்படி இருக்குமோ அந்த சைசில்! இந்தோனேசியாவிலிருந்து வந்த அகதிகளை? விரட்டி விரட்டி வேலை வாங்கிக்கொண்டிருந்த கொரியன் நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்று உடைந்த ஆங்கிலத்தில் கேட்டுக்கொண்டு நாங்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.


அங்கிருந்து ஊருக்குள் சென்றால் மொத்தமே நான்கைந்து தெருக்கள்தான் இருந்திருக்கும். பெரிய பெரிய வீடுகள். தொடர்களில் ஆழ்கடலில் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் மூச்சைப் பிடித்துக் கொண்டு மீன் பிடிக்கச் செல்லும் ‘ஹேன்யோ’ பெண்கள் ஆரஞ்சு வண்ண வட்டவடிவ கூடைகளைச் சுமந்து செல்வார்கள். பெரும்பாலான வீடுகளில் அந்தக் கூடைகள் தொங்கிக்கொண்டிருந்தன. மீனவப் பெண்களாக இருப்பார்கள் போல! தெருக்களில் குழந்தைகள் நடமாட்டம் கூட இல்லை! எப்படி இப்படி வெறிச்சென்று இருக்கிறதோ என்று ஆச்சரியமாக இருந்தது!

கடற்கரையோரம் வண்டியை நிறுத்தி அமைதியாக கரையைத் தொட்டுச் செல்லும் அலைகளைப் பார்த்தவாறே இறங்கி சிறிது தூரம் உள்ளே சென்றோம். கரையோரம் கடற்பாசிகள், நத்தக்கூடுகள், பல வண்ணங்களில், உருவங்களில் சங்குகள், சிப்பிகள் என்று வேடிக்கை பார்க்க நேரம் போனதே தெரியவில்லை!

கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்களே இல்லாத இடத்தில் இயற்கையின் நடனம் அதிஅற்புதமாக இருந்தது! ஈஷ்வர் இருந்திருந்தால் ஷேக்ஸ்பியர், ஓர்ட்ஸ்ஒர்த், யேட்ஸ் கூறியது என்று அந்த ரம்மியமான சூழலுக்கு ஏற்ற கவிதை, வசனங்களைச் சொல்லி தியானநிலையில் இருந்திருப்பார் என்று நினைத்துக் கொண்டோம். உச்சி வெயில் வருவதற்கு முன் கிளம்பிவிட வேண்டும் என்று அங்கிருந்து செல்ல மனமில்லாமல் ஆட்கள் இல்லாத சாலைகளில் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம்.

வழியில் காஃபி கடைகளைத் தேடினால் ‘ஸ்டார்பக்ஸ்’ தான் தெரிந்தது. ஆங்கிலம் பேசுபவர்கள் இருந்ததால் வேண்டியதைக் கேட்டு வாங்க ஒரு பிரச்சினையும் இல்லை. ‘கம்சாஹமிதா’ சொல்லி அரைமணி நேரத்தில் ‘sunrise peak’கிற்கு வந்தால்… அடேங்கப்பா! பேருந்துகளில், கார்களில் சுற்றுலாவினர் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது! நல்ல வேளை! வண்டியை நிறுத்த அருகிலேயே இடம் கிடைத்து விட்டது. மலையைப் பார்த்தால், “என்ன இப்படி செங்குத்தா இருக்கு? அய்யோடா! லதா இன்னிக்கு உனக்கு இருக்கு”😱

மலைக்குச் செல்ல டிக்கெட் வாங்க சிறிது தூரம் நடக்க வேண்டியிருந்தது. அதற்கே எனக்கு மூச்சிரைத்தது. விண்ட்டர் ஜாக்கெட் கணம் வேறு. மழை இல்லாததால் மொத்த சுற்றுலாக்கூட்டமும் அதுவும் வயதான சீனர்கள் கூட்டம் அங்கே குழுமியிருந்தது. அவர்களைப் பார்த்தால் எப்பொழுதும் பொறாமையாக இருக்கும். ‘விறுவிறு’வென்று பாட்டிகளும் தாத்தாக்களும் நடக்கிறார்கள். ‘கிடுகிடு’ வென மலையேறுகிறார்கள்! யாருக்கும் கால்கள் வளைந்திருக்கவில்லை. மதுரையில் நான் பார்த்த பல வயதான ஆண், பெண்களுக்கு மூட்டு தேய்ந்து கால்கள் வளைந்து😔 கவலைக்குரிய விஷயம். இந்தப் பாட்டிகள் குட்டையாக அதிக எடையில்லாமல் மலையேறுவதெல்லாம் பேரதிசயமாக இருந்தது எனக்கு! அப்புசாமி தாத்தாக்களை விட சீதா பாட்டிகள் அழகாக, நேர்த்தியாக உடையணிந்து நகப்பூச்சு, மேக்கப், உதட்டுச்சாயம், வெயிலுக்கு கண்ணாடி, தலைக்குத் தொப்பி என்று அட்டகாசமாக வந்திருந்தார்கள். யாரையும் கூப்பிடாமல் தனக்குத்தானே செல்ஃபி’ எடுத்துக் கொண்டு ரகளை செய்து கொண்டிருந்தார்கள். 

படிகளுடன் கூடிய பாதையில் நாங்கள் மெல்ல மலையேற ஆரம்பிக்க, சுற்றிலும் சூரிய ஒளியில் மின்னும் நீல கடல். மலைப்பாதையில் பலவித பைன் மரங்களுடன் நிழல் தரும் பெரு மரங்கள். நடுநடுவே தனித்து நிற்கும் செங்குத்தான பாறைகள். ஒவ்வொரு பாறைக்கும் கதைகள் இருக்கிறது. அத்தீவின் மக்களும் இயற்கையைத் தெய்வமாக வணங்கியிருப்பது புரிந்தது.மற்ற நாடுகளைப் போலவே இங்கும் மூளைச்சலவை செய்யப்பட்டு மரபிலிருந்து விலகி வரலாற்றை மறந்திருக்கிறார்கள். மறக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

செங்குத்தான பயணம் ஆரம்பிக்க, ஆங்காங்கே இளைப்பாறிச் செல்லும் கூட்டத்துடன் ஐக்கியமாகி, மேலே செல்ல முடியுமா என்ற சந்தேகம் கூட வந்து விட்டது. அத்தனை கடினமில்லை என்ற இந்த மலையேற்றத்திற்கே நாக்கு தள்ளுதே நாளை ஹாலாசன் மலை கடினமான ஏற்றம் வேறு! இப்பவே கண்ணை கட்டுதே😓

நான் யோசிக்கிறேன் என்று தெரிந்து “மெதுவா போகலாம்மா. உன்னால முடியும். உன் ஜாக்கெட்டை குடு. அதை வேற போட்டுக்கிட்டு அதனால தான் இப்படி வேர்த்துக் கொட்டுது.” உற்சாகப்படுத்திக் கொண்டே பொறுமையாக வந்தாள் என் செல்லம். ஒவ்வொரு இடத்திலிருந்தும் கீழே பார்க்க வெகுதொலைவிற்கு வந்திருப்பது தெரிந்தது. எல்லா இடங்களிலும் முடிந்த வரை ‘கிளிக்’ ‘கிளிக்’ தான். 30 நிமிடங்களில் ஏறி விடலாம் என்று இணையதளத்தில் போட்டிருந்தார்கள். மலை உச்சியை அடைய 45 நிமிடங்களாயிற்று! அழகாக படிகள் அமைத்து சுற்றுலாவினர் அமர்ந்து கண்டுகளிக்கும் வகையில் அமைத்திருந்த இடத்தில் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டோம்.

5000 வருடங்களுக்கு முன் கடலில் வெடித்த எரிமலை உருவாக்கிய ‘Tuff Cone’ என்ற அரிய பாறை வகை தான் இந்த Ilchulbong கிரேட்டர். 600 மீட்டர் அகலம் கொண்ட பாறை கடல் மட்டத்திலிருந்து 182 மீட்டர் உயரத்தில் பச்சைப்பசேல் என்றிருக்கிறது! கண்ணுக்கு குளிர்ச்சியாக சுற்றிலும் நீல வண்ண கடலும், சிலுசிலு கடற்காற்றும், பசுமைத்தோட்டமுமாய் ரம்மியமாக இருந்தது! இங்கு 240-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்கள்.

இது மாதிரியான பாறை அமைப்புகள் உலகில் மிகச்சிலவே. அதனாலேயே, 2007ல் யுனெஸ்கோ உலக இயற்கை பாரம்பரியத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 2010ல் ‘ஜெஜு வல்கானிக் தீவுகளும் லாவா குழாய்களும்’ உலக புவியியல் பூங்கா (Global Geopark) பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது போன்ற தகவல்களை அங்கே தெரிந்து கொண்டோம்!

இத்தனை கஷ்டப்பட்டு ஏறி வந்ததன் பலனை முழுமையாக அனுபவித்துவிட்டு படிகளில் இறங்க ஆரம்பித்தோம். ஏறிச்செல்லும் பாதையிலிருந்து இது வேறு பாதையில் செல்கிறது. பவளப்பாறைகள் நிரம்பிய பரந்து விரிந்த கடலின் வண்ணம் மனதை கொள்ளை கொள்ள, காட்சிகளை மனதில் பதிந்து வைத்துக் கொண்டேன்.

விரைந்து செல்லும் படகில் சுற்றுலாவினரை ஏற்றிக்கொண்டு தீவைச் சுற்றி வந்து கொண்டிருந்தன இரு படகுகள்! “அம்மா போகலாமா?” “பயங்கர வேகமா ஒரு புறம் படகைச் சரித்துக்கொண்டே போகிறான். நனைந்தால் மாற்றுத்துணி இல்லை. வேண்டாம்” என்று சொல்லிவிட்டேன். மீன் பிடிக்கச் செல்லும் பெண்களின் நடனம் இரண்டு மணிக்குத் தான். அதற்கு இன்னும் ஒன்றரை மணிநேரம் இருக்கிறது என்று சிறிது நேரம் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம். பெரும்பாலும் ஆசியர்கள்! வெகுசில வெள்ளையர்கள். நாங்கள் இருவர் மட்டுமே அங்கே இந்திய முகங்கள்!

ஓய்வுபெற்ற ஜெர்மானியர் ஒருவர் மனைவியுடன் ஆறு மாதமாக ஆசியப்பயணம் சுற்றிக்கொண்டிருப்பதாகக் கூறினார். அடுத்து ஜப்பானுக்குப் போவதாகச் சொல்ல, தன்னுடைய ஜப்பான் அனுபவங்களை மகள் பேசிக்கொண்டிருந்தாள். நான் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தேன்.

நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த ஓய்வுபெற்ற கொரியன் ஒருவர் எங்கிருந்து வருகிறோம், பார்த்தாலே தெரிகிறது அம்மாவும் மகளும் என்று ஆங்கிலத்தில் சரளமாக உரையாடினார். வேலை நிமித்தமாக பல நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார். இந்தியாவின் லடாக் பகுதிக்குச் சென்று வந்ததாகவும் மீண்டுமொருமுறை அங்குள்ள புத்த மடாலயங்களுக்குச் சென்று வர விரும்புவதாகவும் கூறினார். நானும் ஈஷ்வர் அங்கு சென்று வந்த அனுபவங்களைக் கூறினேன். அவருடன் வந்திருந்த நண்பரை அறிமுகப்படுத்தினார். அவருக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கவில்லை. ‘ஆண்யோஅசையோஓ’ என்று நாங்கள் கூற கடகடவென்று கொரியனில் பேச… சப் டைட்டில் இல்லாமல் அவதிப்பட்டோம்😃 “மிகவும் அழகான, பாதுகாப்பான நாடு இது. உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகள்” என்று கூறி அவர்கள் விடைபெற்றார்கள்.

அங்கிருந்த கடைகளில் ஊருக்கு எடுத்துச் செல்ல சில பரிசுப்பொருட்கள், மாண்டரின், டேன்ஜரின்ஸ் பழங்களால் செய்த இனிப்புகள், பழங்களை வாங்கிக் கொண்டோம். காலையில் சாப்பிட்டது இன்னும் நிறைவாக இருக்கவே, பழத்தை மட்டும் ருசித்தோம்.

தொடர்கள் மூலமாக நான் அறிந்திருந்த ஜெஜூ தீவு, மினுமினுக்கும் நீல வண்ண கடலுடன் மீன்பிடி கிராமங்களும் சிறு வீடுகளும் சுத்தமான தெருக்களும் மரத்தடியும் தான். அதுவும் ‘Welcome to Samdal-ri’ தொடர் முழுவதையும் அங்கே எடுத்து பார்ப்பவர்களை பைத்தியமாக்கி விட்டார்கள். ஒவ்வொரு இடமும், மரமும் என்று பிரபலமாகி என்னைப் போன்ற பைத்தியங்கள் அங்கே படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்😍 அத்தனை கூட்டம் அங்கே இருந்தது!

‘உடோ’ தீவு 
மலையின் கிழக்கே ‘Udo Island’. பசு படுத்திருப்பது போல காட்சி தருவதால் ‘Cow Island’ என்றும் அழைக்கப்படும் அழகிய தீவு. இங்கிருந்து படகில் 15 நிமிடங்களில் அங்கு பயணிக்கலாம் என்று தெரிந்தவுடன் வண்டியை எடுத்துக் கொண்டு படகுகள் புறப்படும் இடத்திற்குச் சென்று விட்டோம். இரண்டு மணிக்கு கிளம்பி 2.15க்கு ‘உடோ’ தீவில் கால் வைக்க, ஆஹா! இந்த அழகிய தீவைப் பார்க்க முடியுமோ என்று எண்ணியிருந்தேன். அழைத்து வந்து விட்டாள் செல்லம்😍 ஐந்தரை மணிக்குள் திரும்பி விட வேண்டும் என்று கூறி இறக்கி விட்டார்கள். இந்தக் குட்டி தீவில் ஒரு ரவுண்டு அடிக்க ஒரு மணி நேரம் போதும். நிறுத்தி நிறுத்திச் சென்றால் 2-3 மணிநேரங்கள் தாராளமாக எடுக்கும். ஏற்றமும் இறக்கமுமாய் சாலைகள்! நீல-பச்சை கதிர் கலக்கிய நீர் வண்ணம், திரைப்படங்கள், விளம்பரங்களில் பெரும் புகழ் பெற்ற இடமாக வலம் வர, சுற்றுலாவினரும் இங்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

நடை, சைக்கிள், மினி மிதிவண்டி, மினி கார்களில் 17 கிமீ தீவைச் சுற்றிப்பார்க்க முடிகிறது. வாடகை விலை தான் அதிகம். அதுவும் கூட்டத்தைக் கண்டால், மொழி புரியாதவர்கள் வந்தால் நன்றாக கொள்ளை அடிக்கிறார்கள். பேரம் பேச வேண்டியிருக்கிறது. நாங்களும் இருவர் அமர்ந்து செல்லும் ஒரு மூன்று சக்கர வண்டியை எடுத்துக் கொண்டோம். மகள் சில நிமிடங்களில் அதை ஓட்டப் பழகிக் கொண்டாள். நான் சொகுசாக பின்னால் அமர்ந்து கொண்டேன். ஈஷ்வர் வந்திருந்தால் பைக்கை எடுத்திருப்பார்😀 பயமில்லாமல் வழியெங்கும் நிறுத்தி வேடிக்கை பார்க்க முடிந்தது.

எரிமலைக்கற்கள் நிரம்பிய Geommeolle கருப்பு மணல் கடற்கரை பார்க்க வித்தியாசமாக இருந்தது! கடலில் கால் நனைத்துவிட்டு வந்தோம். 2000 பேர் வரை வசிக்கும் தீவில் குடியிருப்புகள், பசுமை விளைநிலங்கள், வெண்மணல் கடற்கரை, ஏகத்துக்கும் உணவகங்கள் என்று காட்சிகளுக்குப் பஞ்சமில்லை. புதிய வீடுகளைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். தோட்டங்களுடன் அழகான குட்டி குட்டி வீடுகள். எரிமலைக்கற்களைக் கொண்டே சுற்றுச்சுவர்களை எழுப்பியிருந்தார்கள். வளர்ந்து வரும் தீவு போலிருக்கிறது!

 
Joseon அரசு காலகட்டத்தில், வழிகாட்டவும், பாதுகாப்பிற்காகவும் smoke signals பயன்படுத்தப்பட்ட இடமாக Beacon Mound இருந்திருக்கிறது. அருகே வெள்ளைநிற உலோக லைட்ஹவுஸ். இத்தீவின் நிலக்கடலை ஐஸ்கிரீம் மிகவும் பிரபலம். அதையும் விடுவானேன்😉சுவையாக இருந்தது! பெண்கள் ஆழ்கடல் உயிரினங்களைப் பிடித்து சுடச்சுட சமைத்துக் கொடுக்கும் உணவகங்கள் கரையோரங்களில் இருக்கின்றன. நேரம் தான் இல்லை எங்களுக்கு. இல்லையென்றால் அதையும் ஒரு கை பார்த்திருக்கலாம்.

அங்கிருக்கும் மலைஉச்சியிலிருந்து தீவைச் சுற்றியிருக்கும் அழகைக் காண முடிகிறது. திகட்ட திகட்ட தீவைச் சுற்றி வந்தோம். நாலரை மணிக்கு வண்டியைக் கொடுத்தவுடன் அவர்களே படகுத்துறையில் இறக்கி விட்டுவிட்டார்கள். 5.30 மணிக்கு கடைசி படகு. அதற்குள் சுற்றுலாவினர் அனைவரும் திரும்பிவிட, ஊரே காலியானது போல இருந்தது. கடைகள், உணவகங்கள் எல்லாம் மூடிவிட்டிருந்தார்கள்! கோடைக்காலத்தில் நேர நீட்டிப்பு இருக்கும் என்று தெரிந்து கொண்டோம்.

வரிசையில் நின்று படகில் ஏறி உள்ளே போய் உட்காரலாம் என்று சென்றால் எல்லோரும் கீழே தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்திருக்கிறார்கள். இதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை! கொரியன் தொடர்களில் கதாபாத்திரங்கள் கீழே உட்காருவது சர்வசாதாரணமாக இருக்கும். படகில் கூடவா?! நல்ல பழக்கம் தான்! அங்கே மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் குறைவு போலிருக்கிறது! நல்ல ஊருடே!

அங்கும் நாங்கள் இருவர் மட்டுமே அந்நியமாகத் தெரிந்தோம். பை, பை உடோ ஐலாண்ட். சில மணிநேரங்கள் தான் அங்கிருந்தோம் என்றாலும் பார்த்த காட்சிகள் என்றும் மனதில் நிலைத்திருக்கும். மகிழ்வுடன் திரும்பி வண்டியை எடுத்துக்கொண்டு விடுதி திரும்பும் வழியில் ஜெஜூ தீவில் பிரபலமான Seopjikoji Coastal Walk செய்து விடலாம் என்று அங்கு சென்றோம்.

வாடகை வண்டிகளில் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருந்தார்கள் மக்கள். குளிரும் கடற்காற்றுமாய் மீண்டும் மலையேற்றம். அங்கே சுற்றுலாவினரைக் கவரும் வண்ணம் gingerbread ஹவுஸ் ஒன்று பேக்கரி ஆக செயல்பட்டு வருகிறது. கடலும் செங்குத்துப்பாறைகளும் பார்க்க சலிக்கவே இல்லை. ஏறிக்கொண்டே சென்றால் மலையுச்சியில் ஒரு லைட்ஹவுஸ். இந்த இடங்கள் எல்லாமே கனடாவின் கிழக்குக்கடற்கரையோரம் நாங்கள் சென்ற பயணத்தை நினைவுறுத்திக்கொண்டே இருந்தது. என்ன? அங்கே கல் பாறைகள். இங்கே எரிமலைப் பாறைகள். சீற்றமில்லாத அமைதியான கடல் இங்கே. அங்கே ஆர்ப்பரிக்கும் அட்லாண்டிக் கடல்.

‘கிடுகிடு’வென கூட்டத்துடன் ஏறி சுற்றிப் பார்த்துவிட்டு ‘ஜில்ல்ல்ல்ல்’ காற்று முகத்திலடிக்க இறங்கி விட்டோம். சூரியனும் களைத்து மேகங்களில் புதைந்து கொண்டிருந்தான். நடந்து நடந்து காலையில் சாப்பிட்டது முழுவதும் கரைந்து விட்டது. விடுதி அருகே வரும்பொழுது மணி இரவு 7.45. ஊரே உறக்கத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தது. உணவகங்களைக் கூட சீக்கிரமே மூடிவிடுவார்கள் போலிருக்கு! என்ன ஊருடா இது?

இரவு உணவிற்கு பிரபலமான கொரியன் உணவகத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்று கூறி விலாசத்தைக் கண்டுபிடித்து உள்ளே சென்றால் இரண்டு குடும்பங்கள் மேஜை நிறைய உணவுக்கிண்ணங்களுடன் பகிர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். எங்கள் இருவரைக் கண்டதும் பரிமாறுபவர்/நிர்வாகி உள்ளே அழைத்து அமர வைத்தார். புதுமுகங்களைப் பார்த்தவுடன் கேட்கும் கேள்விகளைக் கேட்டு விட்டு என்ன வேண்டும் என்று கேட்க, மகள் உணவை ஆர்டர் செய்ய கொண்டு வருகிறேன் என்று உள்ளே சென்றார். ஒரு பெண்மணி தண்ணீர் குவளை, டம்ளர்களை வைத்து விட்டுச் செல்ல, ஒரு பெரிய தட்டு நிறைய குட்டி குட்டி கிண்ணங்களில் கிம்ச்சி, சூப், சமைத்த, சமைக்காத காய்கறிகள் என்று ஐயோ! எது என்னன்னு தெரியலையே என்று வடிவேலு மாதிரி தலையைச் சொரிந்து கொண்டே இதெல்லாம் எப்படி சாப்பிடறதுன்னு கொஞ்சம் சொல்லுங்க என்று கேட்க, அவரும் சிரித்துக் கொண்டே, முட்டைகோஸ் இலைகளில் சில காய்கறிகள், கிம்ச்சியை வைத்து சுருட்டி அப்படியே வாய்க்குள் தள்ள வேண்டும் என்றார்.

ஆகா! சோதனையால்ல இருக்கு! seaweed சூப் எடுத்துச் சுவைத்துப் பார்த்தால் ஒருவித கவிச்சி வாசனையுடன் உப்பு தூக்கலாக இருந்தது. ஆனாலும் குடித்தோம். தொடர்களில் கொரியர்கள் பிறந்தநாளின் பொழுது அம்மாக்கள் இதைத்தான் செய்து கொடுப்பது போல் காட்சிகள் இருக்கும். உடலுக்கு நல்லதாம்.

இரண்டு மூன்று கிண்ணங்களில் இருந்த காய்கறிகள் விரைவிலேயே காணாமல் போயிற்று😋மீன் வருது என்று கூறியவர் அங்கே உள்ளே சமைத்துக் கொண்டிருந்த இந்திய இளைஞனை அறிமுகப்படுத்தினார்! அமைதியாக உள்ளே இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்த மனுஷன் வெளியே வரவே இல்லை. சிறிது நேரத்தில் ஜெஜூவின் பிரபலமான grilled hairtail fish முழுமீனாக ஒரு நீண்ட தட்டில் வந்தது. இத்தனை பெரியதாக இருக்கிறதே! இரண்டு பேர் சாப்பிட முடியுமா? யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே கத்தியுடன் வந்தவர் எங்கள் கண்முன்னே லாவகமாக இரண்டாகப் பிளந்தார். அதற்குப் பிறகு மீன் எப்படி காலியானது என்றே தெரியவில்லை😂 எலும்பு மட்டும் தட்டில் இருந்தது. திருப்தியாக வயிறு முட்டச் சாப்பிட்டிருந்தோம் . எங்களுக்குப் பிறகு வந்த ஒரு குடும்பத்துடன் கடையை மூடி விட்டார்கள்! விடிய விடிய உணவகங்களைத் திறந்து வைத்து வியாபாரம் செய்யும் பழக்கமோ அவசியமோ இல்லை போலிருக்கு! சாப்பிட்டதற்குப் பணத்தைக் கொடுக்கும் பொழுது அவர் உணவகத்தைத் தேடி வந்த எங்களுக்குப் பரிசாக அங்கே விற்றுக் கொண்டிருந்த டேன்ஜரின் இனிப்பு பாக்கெட் ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார். நன்றி கூறி புது உணவுகளை உண்ட திருப்தியுடன் விடுதிக்குத் திரும்பினோம்.

வண்டியை நிறுத்தி சிறிது நேரம் நடந்துவிட்டு வரலாம் என்று நடமாட்டமில்லாத தெருக்கள் வழியாக சாலை வரை பயமில்லாமல் சென்று வர முடிகிறது. கால்கள் களைத்து  ஹாலாசன் மலைப்பயணம் வேண்டாம் என்று கெஞ்ச, அருகில் இருந்த மசாஜ் நிலையத்தில் காலுக்கு மசாஜ் செய்து கொண்டோம். நாளை எங்குச் செல்லலாம் என்று திட்டமிட்டு அடுத்த நாளும் மழை இல்லாத நாளாக இருக்கவே நிம்மதியாக உறங்கச் சென்றோம்.

தென்கொரியப் பயணம்-1: ஜெஜூ தீவு

சொல்வனம் இதழில் வெளிவந்துள்ள என்னுடைய தென்கொரிய பயணக்கட்டுரையின் முதல் பாகம்  தென்கொரியப் பயணம்-1: ஜெஜூ தீவு

அம்மா! உனக்கு எந்த நாட்டிற்குச் செல்ல விருப்பம்” எனக் கேட்டாள் என் செல்ல மகள். விளையாட்டாகக் கேட்கிறாள் என்று நினைத்து நானும் தென் கொரியா, அதுவும் ‘ஜெஜு’ தீவிற்குச் செல்ல வேண்டும் என்று கூறினேன். கொரியன் தொடர்களை நான் விரும்பிப் பார்ப்பேன் என்று அவளுக்குத் தெரியும். சில மாதங்களுக்குப் பிறகு திடீரென ஒருநாள் “அம்மா, தென் கொரியா செல்ல பயணச்சீட்டுகள் வாங்கிவிட்டேன். இனி ஜெஜூவில் பார்க்க வேண்டிய இடங்களை நீயே தீர்மானித்துக்கொள்” என்று கூறவும் “ஆகா! லதாவுக்கு வந்த யோகத்தைப் பார்!” என்று கனவில் மூழ்கி உடனே இன்டர்நேஷனல் லைசென்ஸ் வாங்கிவிட்டேன். பொதுவாக வெளிநாடுகளில் ஈஷ்வர் தான் வண்டி ஓட்டுவார். இந்த முறை நானும் மகளும் மட்டும் செல்வதாலும் தென் கொரியாவிலும் அமெரிக்காவில் கார் ஓட்டுவதைப் போலத்தான் என்பதால் பிரச்சினையில்லை. பாஸ்போர்ட் தேதிகளையும் ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்தாயிற்று. பயணத்திற்கு வேண்டிய அனைத்தையும் மறக்காமல் கைப்பெட்டி ஒன்றில் எடுத்து வைத்துக்கொண்டேன். அந்த இனிய நாளும் வந்தேவிட்டது.

‘ஜேஎஃப்கே’ விமானநிலையத்தில் இருந்து இரவுப் பயணம். நாங்கள் தங்கியிருக்கும் ஆல்பனியில் இருந்து நியூயார்க் நகரத்திற்குச் செல்ல ரயிலில் இரண்டரை மணிநேரப் பயணம். வீட்டிலிருந்து ரயில்நிலையத்திற்கு ஊபரில். பேசிக்கொண்டே வந்தாள் ஓட்டுநர் பெண்மணி. அவரவர்க்கு ஆயிரம் பிரச்சினைகள்! நமக்குத்தான் ‘தெனாலி’ கமல் மாதிரி யாரைக் கண்டாலும் பயம்😱நாம் செல்லும் நேரங்களில்தான் எப்பொழுதும் எங்கும் கூட்டமிருக்கும். அப்படித்தான் ரயில்நிலையமும் அன்று கூட்டத்துடன் இருந்தது. ஆகா! வலப்பக்கத்தில் ஜன்னலோர இருக்கை கிடைத்தால் நதியழகையும் பார்த்துக்கொண்டே செல்லலாம் என்று தேடிப்பிடித்து அமர்ந்துகொண்டேன். குழந்தையின் குதூகலத்துடன் ஆரம்பமானது என் பயணம். மழைக்காலத்தில் துளிர்க்க காத்திருக்கும் மரங்களுடன் மலைகளும் சூரியன் இளைப்பாறும் வானழகு பிரதிபலிக்க வழிநெடுக ஹட்ஸன் ஆறும் கூடவே பயணித்தது அழகு. அடுத்தடுத்த நிறுத்தங்களில் ஏறுவதும் இறங்குவதுமாய் பயணிகள். என் அருகே வந்தமர்ந்த இளைஞன் நேர்த்தியாக உடையணிந்து முகக்கவசம் அணிந்திருந்தான். இன்னுமா😷

நகரத்தை நெருங்கும் பொழுது ரயிலின் ஓட்டத்தில் கொஞ்சம் சுருதி குறைய ஆரம்பித்தது. நியூயார்க் நகரம் என்றுமே ஒருவித பரபரப்புடன் தான் இருக்கும். மாலை 7.10க்கு வந்து சேர்ந்தாயிற்று. வண்டியிலிருந்து இறங்கியவர்கள் ஓடிக் கொண்டிருக்க, இடுப்புகளில் விதவிதமான தற்காப்புப் பொருட்களுடன் கூட்டத்தை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள் பெருந்தொப்பை காவலர்கள். இத்தனையையும் சுமந்து கொண்டு எப்படித்தான் நாள் முழுக்க நின்று கொண்டிருக்கிறார்களோ? ஆனாலும் அவர்கள் இருக்கும் தைரியத்தில் தானே நிம்மதியாக இருக்கிறோம்?

அவர்களைக் கடந்து என்னை அழைத்துச் செல்வதாகக் கூறியிருந்த மகனைக் கூட்டத்தில் தேடிக் கொண்டிருந்தேன். “எங்கம்மா இருக்கிறாய்?” “நான் இங்கேதான் இருக்கிறேன். Find My ஆப்-பில் பார்த்தால் நான் இருக்கும் இடம் தெரியும்” என்று கூறி காத்திருந்தேன். நமக்கு பக்கத்தில் என்ன இருக்கிறது என்று அடையாளத்திற்குக் கேட்டால் கூட வெறும் சாப்பாட்டுக் கடைகளைத்தான் சொல்லத் தெரிகிறது😁 இந்தப் போன் மட்டும் இல்லையென்றால் மக்கள் கூட்டத்தில் தவித்துதான் போயிருப்போம்! நான் இருக்குமிடத்திற்கு வந்து சேர்ந்த மகனுடன் 40-60 படிகளில் ஏறி உள்ளூர் ரயிலைப் பிடித்துக்கொண்டு அவன் குடியிருப்புக்குச் சென்றோம். “நல்ல வேளை! நீ வந்தாய். என்னால் இத்தனை படிகளில் பெட்டி, உன்னுடைய சாப்பாட்டுக்கூடைகளுடன் ஏறியிருக்க முடியாது” என்று கூறினேன். நாங்கள் பேசிக்கொண்டிருக்க, சிறு வயதிலிருந்தே பழக்கமான அவனுடைய அறை நண்பர்களும் வந்து சேர்ந்தார்கள். நகர வாழ்க்கை, வேலை, பெற்றோர்கள், குடும்பம் என்று நிறைய பேசினார்கள். எப்படி வளர்ந்து விட்டிருக்கிறார்கள் என ஆச்சரியமாக இருந்தது! சிறிது நேரம் அளவளாவிவிட்டு மழை வருவதற்குள் அங்கிருந்து ‘லிஃப்ட்’ வாடகை வண்டியில் விமானநிலையத்திற்குப் பயணமானேன். நகரத்தில் ஊபர் வாடகை வண்டிகள் அதிகம் வசூலிக்கிறார்களோ?

வார இறுதி. இரவு ஒன்பதரைக்குச் சாலையில் ஊர்ந்து செல்லும் வண்டிகள். போக்குவரத்து நெரிசல் இல்லாத நேரம் என்று ஒன்று இருக்கிறதா என்ன? “தூங்கா நகரம்” நான் பிறந்து வளர்ந்த மதுரை மட்டுமல்ல, நியூயார்க் நகரமும் கூட! வண்ண வண்ண விளக்குகளுடன் ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள், சிறு தூறலில் நனைந்தபடி செல்லும் வாகனங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

வண்டியோட்டி ரஷ்யன் என்று நினைத்திருந்தேன். ‘அஜர்பைஜான்’ என்றார். “வந்து ஐந்து வருடங்களாகிவிட்டது. இன்னும் கடனட்டை கடனை அடைக்க முடியவில்லை. குடும்பம் பிறந்த ஊரில் இருக்கிறது. வாழ்க்கை அத்தனை சுகமில்லை” என்று புலம்பிவிட்டு, நான் என்ன படித்திருக்கிறேன், எங்கு வேலை செய்கிறேன் என்று கேட்டு, “இந்தியர்கள் நீங்கள் நன்கு படித்து நல்ல பணியில் இருக்கிறீர்கள். நான் படிக்காததால் கஷ்டப்படுகிறேன். அமெரிக்கா பணக்கார நாடு. மரத்தில் பணம் காய்ப்பதைப் போல ஊரில் சொல்வார்கள். நாம் படும் கஷ்டம் நமக்குத்தான் தெரியும்” என்று பேசிக்கொண்டே வந்தார். நமக்கும் பொழுது போகணுமே? அவர் நாட்டினருக்கு எளிதில் கிரீன் கார்டு கிடைத்தாலும் இப்பொழுதெல்லாம் பலரும் வர விரும்புவதில்லை என்றார். “ஆங்கிலம் பேசவே இரண்டு வருடங்கள் ஆயிற்று எனக்கு. அதுவரை சிறுசிறு வேலைகளைச் செய்து பிழைத்து வந்தேன். இங்கு வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கிறது” என்று கூறினார். புலம்பெயர்ந்த ஊரின் பேச்சுமொழி தெரிந்தால்தான் எளிதில் பிழைக்க முடியும். அடிப்படைக் கல்வியறிவு இல்லையென்றால் அந்த நாடுகளில் வாழ்வது சிரமம் என்பதை போர்ச்சுகல் நாட்டில் வாழும் நம் மக்களைப் பார்க்கும் பொழுது தோன்றியதுதான் நினைவிற்கு வந்தது.

பேசிக்கொண்டே பத்து மணிக்கெல்லாம் விமான நிலையம் வந்து சேர்ந்தாகிவிட்டது. மனுஷன் இவ்வளவு புலம்பினாரே என்று டிப்ஸ் கொடுத்துவிட்டு உள்ளே நுழைந்தேன். அந்த விமான நிலையம் என்றுமே பரபரப்பாக இருக்கும். ஒரே நேரத்தில் கிளம்பும் விமானங்கள். பயணிகள். ஒவ்வொருவரும் கை கொள்ளாத அளவு பெட்டிகளுடன்! அது ஒரு மாய உலகம்! எப்பொழுதும் கூட்டம் அதுவும் இரவு நேரப் பயணம் என்றால் கேட்கவே வேண்டாம். அன்றும் அப்படியே! டெர்மினல் 4ல் இறங்கியிருந்தேன். டெர்மினல் 1க்குச் செல்ல வேண்டும் என்று கூறிவிட்டார்கள். ஏர் ட்ரெயினில் ஏறி அங்கே சென்றேன்.

‘கொரியன் ஏர்’ கவுண்டரைத் தேடி அங்கிருந்த சிற்றிடை அழகியிடம் முன்பே ‘செக்-இன்’ செய்த தகவல்களைக் கூறி, ஜன்னலோர இருக்கையைப் பெற்றுக்கொண்டேன். மரியாதையாக இரு கைகளால் பயணச்சீட்டை சிரித்த முகத்துடன் கொடுத்தது எனக்குப் பிடித்திருந்தது. கவுண்டரில் இருந்த கொரியர்கள் அனைவரும் பணிவாகப் பயணிகளிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். சிடுசிடு மூஞ்சியுடன் உரத்த குரல் எங்கும் கேட்கவில்லை! 14 மணிநேரப் பயணம். அதுவும் இரவு முழுவதும். நிம்மதியாகத் தூங்கலாம் என்று விமானச்சீட்டு வாங்கிக்கொண்டு பாதுகாப்புப் பரிசோதனை வரிசையில் நின்றால் ஒரே ஆசிய முகங்கள். இவர்களில் எப்படி சீனா, வியட்நாம், கொரியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடிக்க முடியும் என்று ஒவ்வொரு முகங்களாக ஆராய்ந்துகொண்டிருந்தேன். “ரொம்ப கஷ்டமப்பா!”

அதற்குள் என் முறை வரவும் “குளோபல்எண்ட்ரி டிஎஸ்ஏ” என்று கூற, கூட்டம் குறைவாக இருந்த தனிவரிசையில் உள்ளே அனுப்பினார்கள். இந்த முன் அனுமதியால் அதிகம் சோதனைகள் நடக்காது. எளிதில் சென்றுவிடலாம். அதுவும் முடிந்தபிறகு இன்னும் ஒன்றரை மணிநேரத்தைக் கடத்தியாக வேண்டும். இரவு நேரத்தில் பயணிக்கப் போகும் கூட்டத்துடன் விமான நிலையம் புத்துயிர் பெற்றது போல் ஜொலித்துக் கொண்டிருந்தது. என்ன தான் அயல்நாட்டில் வாழ்ந்தாலும் பிறந்த ஊருக்குச் செல்லும் உற்சாகம் இருக்கத்தானே செய்யும்? அதுவும் எத்தனை வருடங்களுக்குப் பிறகு போகிறார்களோ?

அங்கிருந்த கூட்டத்தில் ஆசியர்கள் அல்லாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். எங்கும் இடுங்கிய கண்களுடன் புரியாத மொழியில் பேசிக்கொண்டிருக்கும் கூட்டத்துடன் ஐக்கியமானேன். உப்பிய கன்னங்களுடன் ‘கொளுக்மொளுக்’ குழந்தைகள் அழகு. இத்தனை குழந்தைகளும் என்னுடன் பயணிக்கப் போகிறார்களோ? கடவுளே! நன்றாக தூங்கட்டும் என்று வேண்டிக்கொண்டேன். அங்கிருந்த உணவகங்களில் கூட வகைவகையான நூடுல்ஸ்களை பேப்பர் கப்புகளில் சூடாக்கிக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். பசிக்கவே, பீட்சா வாங்கிச் சாப்பிட்டேன். அந்தப் பகுதி முழுவதும் ஆசியாவிற்குச் செல்லும் விமானங்கள் போல! 98 சதவிகிதம் ஆசிய முகங்கள் தான். போனால் போகிறதென்று அங்கொன்றும் இங்கொன்றுமாய் வெள்ளை, கருப்பு, இந்திய முகங்கள். ரெஸ்ட்ரூம்களில் கூட வால்பேப்பராக ஆசியக் கோவில்களின், அரண்மனைகளின் விளம்பரப்படங்கள் தான்! ஆச்சரியமாக இருந்தது. எத்தனை முறை இந்தியா சென்றிருப்போம். அந்தப் பகுதிகளில் இப்படி பார்த்த ஞாபகம் இல்லை! ஒருவேளை இப்பொழுது மாறியிருக்கலாம். ஹ்ம்ம்.

எப்படா கூப்பிடுவார்கள் என்று காத்திருந்த தருணத்தில் நள்ளிரவு 12.25க்கு அழைப்பு விடுத்தார்கள். இந்தக் குழந்தைகள் எல்லாம் தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தார்கள்! முதலில் அதிக விலை கொடுத்து பயணச்சீட்டு வாங்கியவர்கள், பின் வயதானவர்கள், குழந்தைகளுடன் வந்திருந்தவர்களை வரிசையாக அனுமதித்து, பின் என்னைப் போன்றவர்கள் ஏறவும் அவரவர் இடங்களைத் தேடி அமர்ந்து கொண்டோம். விமானம் ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டது . அடுத்த விமானத்தை உடனே பிடிக்க வேண்டும் என்ற அவசரம் இல்லாததால் நானும் கவலைப்படவில்லை.

ஒவ்வொரு இருக்கையிலும் போர்வை, தண்ணீர் பாட்டில், பேப்பர் செருப்பு வைத்திருந்தார்கள்! அனைவரும் தாங்கள் அணிந்திருந்த ஷூக்களை கழற்றிவிட்டு பேப்பர் செருப்புகளைப் போட்டுக் கொண்டார்கள். இத்தனை வருட விமானப் பயணத்தில் முதல்முறையாக நான் கண்டது இந்த பேப்பர் செருப்பு. கொரியர்கள் வீட்டில் அணிவதற்கென்றே செருப்புகளைப் பயன்படுத்துவார்கள் என்று தெரியும். அதை விமானத்தில் கூட கடைப்பிடிக்கிறார்கள் என்பது புதிய விஷயம்! காலை நன்றாக நீட்டி அமரும்படி வசதியான இருக்கை வசதி. ஒருவேளை கடைசி வரிசை என்பதால் அப்படி இருந்ததா தெரியவில்லை. நிம்மதியாக இருந்தது.

நியூயார்க்கிலிருந்து விமானம் புறப்படும் வரை ஒன்றும் சொல்ல முடியாது. அத்தனை விமானங்கள் ‘ரன்வே’யில் வரிசை கட்டி நின்று கொண்டிருந்தன. கருமேகங்கள் கலைந்து நட்சத்திரங்களுடன் ஜொலித்துக் கொண்டிருந்தது வானம். மெதுவாக ஊர்ந்து சென்று ஒருவழியாக மேலேறி பறக்க ஆரம்பித்துவிட்ட விமானத்திலிருந்து மின்னொளியில் ஜொலித்துக் கொண்டிருந்த நகரம் மெல்ல மெல்ல மறைய, “முருகா! பத்திரமா என்னைய கொண்டு போய் கொரியா சேர்த்துடுப்பா” வேண்டிக்கொண்டு கண்ணயர்ந்தேன்.

புறப்பட்ட ஒரு மணிநேரத்திற்குள் சாப்பாடு வாசம் மூக்கைத் துளைக்க, சைவ உணவைக் கேட்டு வாங்கிக்கொண்டேன். ஜீரா சோறு, பட்டாணி, பீன்ஸ் மசாலா, காய்கறி சாலட், தயிரில் கலந்த வெள்ளரி, திராட்சை, பன், பட்டர், உரித்து வைத்த ஆரஞ்சு என்று அமர்க்களமாக இருந்தது. எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டு எப்படித் தூங்கிப்போனேன் என்று தெரியவில்லை. நல்ல தூக்கம். நடுவே எழுந்தால் “இப்பொழுதுதான் ஸ்னாக் கொடுத்துவிட்டுப் போனார்கள். நீங்கள் நன்றாகத் தூங்கிக்கொண்டு இருந்ததால் எழுப்பவில்லை” என்று பக்கத்து இருக்கை சீன இளைஞன் சொன்னதும் அங்கே வந்த பணிப்பெண்ணிடம் அவரே “இவர்களுடைய ஸ்னாக்கை இப்பொழுது கொடுக்கலாம்” என்றவுடன் அழகியும் உடனே உள்ளே சென்று சாண்ட்விச் ஒன்றைக் கொடுத்துவிட்டுப் போனாள். சாப்பிடலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருப்பதற்குள் வாய்க்குள் லபக்கியிருந்தேன். நன்றாகத்தான் இருந்தது😀

பாதி தூரத்தைக் கடந்துவிட்டிருக்கிறோம் போலிருக்கிறது. நடந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி ஒரு அரைமணிநேரத்திற்கு நடந்து கால், கைகளை ஆட்டி இன்னும் ஏழு மணிநேரமா என்ற அயர்ச்சியுடன் மீண்டும் தூங்கி விட்டேன். முன்வரிசையில் இருந்த குழந்தை அழுதுகொண்டே இருந்தது. என் அருகில் அமர்ந்திருந்த சீன இளைஞன் திருமணத்திற்குப் பிறகு இப்பொழுதுதான் சீனாவிற்குச் செல்வதாகக் கூறினான். அவனுடைய மனைவியும் இரு குழந்தைகளும் முன்வரிசையில் இருக்க, மாமியாருடன் பின் வரிசையில் இருக்கை கேட்டு அமர்ந்திருந்தான். 5 வயதான முதல் குழந்தை வழக்கம் போல அப்பாவியாய் இருந்தது. இரண்டு வயது மகன் தான் அழுதுகொண்டே எல்லோரையும் எரிச்சலாக்கிக் கொண்டிருந்தான். விமானப் பணிப்பெண்ணும் அவன் செய்த அக்கப்போரைக் காணச் சகிக்காமல் சிரித்துக்கொண்டே ஸ்னாக்ஸ்-களைக் கொடுத்து சமாதானப்படுத்த முயன்றாள். ம்ஹூம்! எதுக்கும் மசியவில்லையே அவன். நேர்த்தியாக உடை, சிகை அலங்காரம், நகப்பூச்சு என்று மாடர்ன் மனோரமா ஆச்சி போன்றிருந்த பாட்டியும் சாந்தப்படுத்த முயன்று “இவன் எப்பவும் இப்படித்தான்” என்று சலித்துக்கொண்டாள். தூக்கத்தில் இருந்த மனைவி கணவனைப் பார்த்து முறைத்துக்கொண்டே மகனை சமாதானப்படுத்தினாள். ஆனாலும் அவன் எழுந்து நின்று கூப்பாடு போட்டு…அடேய் 😡

என்னைச் சமாதானப்படுத்தும் வகையில் இந்தியாவைப் பற்றி பேசிக்கொண்டே வந்தான் பக்கத்து சீட் ஆசாமி. இந்தியாவில் சுற்றுலா வந்த பெண்மணியை ஏதோ ஒரு ஊரில் பாலியல் வன்முறை செய்தார்களாமே உண்மையா? என்றான். ஆமாம் என்றவுடன், “இதே சீனா என்றால் கடுமையான தண்டனை கொடுத்திருப்பார்கள். ஏன் உங்கள் அரசு செய்யவில்லை?” “செய்தார்கள். செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.” சீனா மாதிரி கடுமையான சட்டங்கள் இருந்தாலும் பாலியல் வன்முறை செய்தவன் இளைஞன் அதுவும் சிறுபான்மையினன் என்றால் தையல் இயந்திரம் கொடுக்கச் சொல்லும் மெழுகுவர்த்தி மேரியம்மாக்கள் நிறைந்த நாடுன்னு எப்படி சொல்ல முடியும்?

அப்படியொரு துன்பியல் சம்பவம் நடந்திருக்கக் கூடாது. சுற்றுலா செல்பவர்களும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். நியூயார்க்கில் எல்லா பகுதிகளுக்கும் எல்லா நேரமும் செல்ல முடியாது. அதுபோலத்தான். இரவில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் கூடாரம் போட நியூயார்க்கிலும் முடியாது. அதற்கென இருக்கும் பகுதிகளில் அனுமதி பெற்றுத்தான் தங்க முடியும். இத்தகைய சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும்.

“இப்படி இருந்தால் எப்படி சுற்றுலா வருவார்கள்?”

“அதெல்லாம் வருகிறவர்கள் வந்து சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். சுற்றுலாவினரின் பாதுகாப்பு விஷயத்தில் அரசு இன்னும் முனைப்பாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை” என்றேன்.

பிறகு அவனுடைய நிறுவனத்தில் வேலை பார்க்கும் இந்தியர்கள், நியூயார்க் வாழ்க்கை என்று பேச்சு திசை மாறியது. எதற்கு சியோல் போக வேண்டும்? அங்கே எல்லாமே விலை அதிகம். சீனாவில் எல்லாமே குறைந்த விலையில் கிடைக்கும். கொரியர்களின் உணவுகள் எங்கு சென்றாலும் ஒரே மாதிரி இருக்கும். சீனாவில் ஒவ்வொரு இடத்திலும் உணவு வகைகள் மாறுபடும் என்று ஓவராக சீன துதி பாடினான்.

சரி, ஏதாவது படத்தைப் பார்க்கலாம் என்று ஒன்றை ஆரம்பிக்க, தூக்கமும் கண்களைச் சுழற்ற, மீண்டும் ‘கொர்ர்ர்ர்’. இருமணிநேரங்கள் கடந்த பிறகு வரைபடத்தைப் பார்த்தால் நியூயார்க்கிலிருந்து கனடா மீது பறந்து அலாஸ்கா வழியாக பசிபிக்கின் மேல் பறந்து கொண்டிருந்தது விமானம். ஜப்பானை கடந்ததும் கொரியா வந்துவிடும். பறக்க ஆரம்பித்த நேரத்திலிருந்து ஒரே கும்மிருட்டு தான். இன்னும் சில மணிநேரங்களில் ஆதவனின் உதயத்தைப் பார்க்கலாம் என்று ஆசையோடு காத்திருந்தேன். விமானம் தரையிறங்க இரண்டு மணிநேரம் இருக்கும்பொழுது காலை உணவாக தயிர், அழகாக உரித்து வைத்த ஆரஞ்சு சுளைகள், ப்ளூபெர்ரி மஃபின், டீ கொடுத்தார்கள்.

உறக்கம் களைந்த நீல வானில் இளஞ்சிவப்பு கதிர்களுடன் உலா வர யத்தனித்துக் கொண்டிருந்தான் கதிரவன். விமானம் தாழ்வாகப் பறக்க ஆரம்பித்தது. முப்புறமும் கடல் சூழ்ந்த கொரியன் தீபகற்பம் மேலிருந்து பார்க்கக் கொள்ளை அழகு! மேற்கில் Yellow Sea, கிழக்கில் Sea of Japan தெற்கில் East China Sea என 3358 தீவுகளைக் கொண்ட நாடாம்! சில தீவுகளில் மக்கள் வசிப்பதில்லை. பல தீவுகள் இயற்கை எழிலுடன் இருப்பதாக அங்கு சென்ற பிறகு தெரிந்து கொண்டேன்! மேலிருந்து பார்க்கையில் நகரத்தில் மிகப்பெரிய ‘ஹான்’ ஆறு வளைந்து நெளிந்து ஓடிக்கொண்டிருந்தது. அதிகாலையில் சாலைகளில் அதிக வண்டிகள் தென்பட்டன. இவர்களும் வேலைக்கு அதிகாலையில் ஓடும் வர்க்கத்தினர் போல! மலைகளும் சமவெளிகளுமாய் கடல் சூழ்ந்த தென்கொரியா மனதை மெல்ல மெல்ல ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.

ஒரு மணிநேரம் தாமதமாக ‘இஞ்சான்’ சர்வதேச விமான நிலையத்தில் காலையில் 6.30மணிக்குத் தரையிறங்கிய பொழுது ஆல்பனி போலவே ஊரும் குளிருடன் இருந்தது. நல்லவேளை! பனிக்கால ஜாக்கெட் போட்டுக்கொண்டு சென்றேன். நாட்டிற்குள் செல்ல விண்ணப்பிக்க வேண்டிய படிவங்களை நிரப்பிக்கொண்டு தானியங்கிகளில் விவரங்களை ஏற்றி நிமிடங்களில் குடியேற்றம் தொடர்பான வேலைகள் முடிந்தன. வாவ்! பாஸ்போர்ட்டில் தென்கொரியா உள்ளே செல்ல சீல் வைத்து அனுமதி கொடுத்து விட்டார்கள். விமான நிலையம் சுத்தமாக ‘பளபள’வென்று இருந்தது!

சியோலில் இருந்து ஒரு மணிநேர தொலைவில் இருக்கிறது ‘இஞ்சான்’ நகரம். உயர் அடுக்குமாடிக் கட்டிடங்களுடன் தென்கொரியாவின் பெருநகரங்களில் ஒன்று. வெளியே வந்தவுடன் எனக்கு முன்பே வேறொரு விமானத்தில் ஒரு மணிநேரத்திற்கு முன்பாகவே வந்து சேர்ந்திருந்த மகளைக் கண்டதும் ஒரே சந்தோஷம். இப்பொழுது ‘ஜெஜூ’ தீவு செல்ல உள்நாட்டு ‘கிம்போ’ விமான நிலையம் செல்ல வேண்டும். அதற்கு சப்வே ரயிலைப் பிடிக்க வேண்டும். ஆங்கிலத்தில் வழித்தடங்கள் பற்றின விவரங்கள் தெளிவாக எழுதப்பட்டிருந்தன. பயணச்சீட்டு வாங்க தானியங்கி கவுண்டர்கள்தான். அங்கிருந்தவர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை. ஆகா! இப்படி இருந்தால் பயணம் எப்படி இருக்கப் போகிறதோ என்று கவலையாகிவிட்டது எனக்கு. “அதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லைம்மா.” உடனே கூகுளில் ஆங்கிலத்தில் தட்டி அது கொரியனில் மாற்றிவிட, அதைக் காண்பித்தவுடன் அவர்களும் புரிந்துகொண்டு பதிலளிக்கிறார்கள். எப்படியோ டிக்கெட் வாங்கிக்கொண்டு ரயிலைப் பிடித்துவிட்டோம். காலை நேரம் என்பதால் கூட்டம் அதிகமில்லை. தூக்கக் கலக்கத்தில் பயணிகள் மட்டுமே இருந்தார்கள். நகரத்திற்குள் செல்லச் செல்ல வேலைக்குச் செல்லும் பொதுமக்களும் ஏற ஆரம்பித்தார்கள்.

சுத்தமாக இருந்த ரயிலில் அத்தனை அமைதியுடன் பயணிக்கிறார்கள். சாலையோர மரங்கள் பனிக்காலத்தில் இருந்து விழித்துக் கொள்ள ஆரம்பித்திருக்கின்றன. ஆறு, ஏரிகள், வயல்வெளிகள் என்று கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சிகளைக் கடந்து விமானநிலையம் வந்து சேர்ந்தோம். உள்ளே பள்ளி மாணவ, மாணவியர் கூட்டம். அனைவரும் சீருடை அணிந்திருந்தார்கள்! நெற்றி முழுவதும் மறைத்தபடி அடர்ந்த தலைமுடியுடன் கட்டிளங்காளைகள் என்றால் பாதி நெற்றி தெரியும் படி முடியைக் கத்தரித்தும் குதிரை வால் அழகிகளுமாய் இளம்பெண்கள் என ஒரே கே-டிராமா முகங்கள்😜 அனைவர் தோள்களில் இருந்த புத்தகப்பைகளில் ‘plush toy’ பொம்மைகள் சிறிதும் பெரிதுமாக தொங்கிக்கொண்டிருந்தன! கைகளில் ஆப்பிள், அவர்கள் ஊர் அலைபேசிகள்! காதில் இயர்போன்கள். இளமை கொப்பளிக்க, சிரிப்பும் கேலியும் கிண்டலுமாகப் பார்க்கவே இனிமையாக இருந்தது. இளமையெனும் பூங்காற்று வீச ஒரே ஜில்ஜில் தான் 😍😍😍

நாங்கள் பயணிக்கவிருந்த ‘ஏர் சியோல்’ கவுண்டருக்குச் சென்று ஜன்னலோர இருக்கையைக் கேட்டு வாங்கி வந்தாள் என் செல்லம். சிறு விமானம் தான். பறக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் உயர் கட்டட நகரம் தொலைந்து தீவுகள் தெரிந்தன. பல தீவுகளில் தொழிற்சாலைகள் இருந்தன. பசுமையான விளைநிலங்களுடன் தீவுகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருந்தன. மீன்பிடி தொழிலும் சிறப்புற நடந்துகொண்டிருந்தது. செழிப்பான நாடு தான்! ஒரு மணிநேரத்தில் ஜெஜூ தீவில் விமானம் தரையிறங்க, கனவுத்தீவிற்கு வந்தே விட்டோம் என்ற ஆனந்த நினைவுடன் வெளியே வந்தோம். என்னைப் போன்ற கொரியன் நாடகப் பைத்தியங்களுக்கு ‘ஜெஜூ தீவு’ என்றால் ஒரு மயக்கம் இருக்கும். அவர்களுக்குப் புரியும் என்னுடைய மனவோட்டம்😍

தீவு கொஞ்சம் ‘ஜில்’லென்றுதான் இருந்தது. வாடகை வண்டியை ஏற்கெனவே பதிவு செய்து வைத்திருந்தாள் மகள். அந்த இடத்திற்குச் செல்ல ‘ஷட்டில் பஸ்’ வசதிகள் இருந்தன. அலுவலகத்தில் எங்களுடைய சர்வதேச, அமெரிக்க ஓட்டுநர் உரிமங்களை, பாஸ்போர்ட் தகவல்களை வாங்கிக்கொண்டார்கள். வண்டி வாடகையுடன் காப்பீட்டுக்கான தொகையையும் சேர்த்தே வசூலித்து விடுவதால் அதற்கென தனியாக இன்சூரன்ஸ் வாங்கும் வேலையில்லை. ஒருவிதத்தில் நிம்மதி. எங்காவது இடித்தால்கூட கவலைப்பட வேண்டியதில்லை. 4 பேர் அமர்ந்து செல்லும் ‘கியா 4 சீட்டர் பாக்ஸ் கார்’ ஒன்றைக் கொடுத்தார்கள். இருவருக்கு ஓகே. சிறிய கார். ஓட்டுவது எளிதாக இருக்கும். ஊரைப் பற்றின எந்த அறிமுகமும் இல்லை. எந்தத் தைரியத்தில் வண்டியை எடுத்தோம் என்றே தெரியவில்லை. கொஞ்சம் பதட்டமாகத்தான் இருந்தது. முதன்முதலாக நானும் மகளும் சென்ற பயணம். பொதுவாக வெளிநாட்டிற்குச் சென்றால் ஈஷ்வர்தான் வண்டியை ஓட்டுவார்.

நான் யோசித்துக் கொண்டிருக்கையில் “நான் முதலில் ஓட்டுகிறேன். நீ ரெஸ்ட் எடுத்துக்கொண்டு வாம்மா” என்று மகள் காரை ஒட்டி வர, நாங்கள் தங்கியிருந்த இடத்திற்குப் பயணத்தை ஆரம்பித்தோம். தீவின் வடக்கே விமான நிலையம் என்றால் நாங்கள் தங்கப் போகும் இடமோ அதன் நேர் எதிரே தெற்கில். தூரம் குறைவுதான். ஆனால் வளைந்து வளைந்து செல்லும் குறுகலான சாலையில் வந்துசேர நாற்பது நிமிடங்கள் ஆயிற்று! தீவிற்குள் இப்படித்தான் இருக்குமோ?

“பார்த்துப் போ”. “அம்மா! நீ வேடிக்கைப் பார்த்துட்டே வா. உன்னைய பத்திரமா கூட்டிட்டுப் போறேன்” என்றாள். நல்லதா போச்சு என்று நானும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். வெயில் கொஞ்சம் இருந்திருக்கலாம். ஜெஜூவில் அடிக்கடி மழை கொட்டும். அதுவும் மழைக்காலம் வேறு! கேட்கவா வேண்டும்? நாங்கள் இருக்கும் வரை மழை பொழியாமல் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

வழியெங்கும் விதவிதமான இதுவரையில் பார்த்திராத மரங்களும் செடிகளும் கொட்டிக்கிடந்தன. ‘செர்ரி’ மலர்கள் பூக்க ஆரம்பித்திருந்தது சில இடங்களில். நன்றாகப் பூத்துப் புன்னகைத்துக் கொண்டிருந்தது பல இடங்களில். மரங்களில் இலைகள் இருந்திருந்தால் அந்த வனமே அத்தனை அழகாக இருந்திருக்கும்! ஏப்ரல் மாத பயணங்களின் சிறு இழப்பு இதுவாகத்தான் இருக்கும். என்ன செய்வது? கோடையில் பயணம் செய்ய அநியாயத்திற்கு பொறுமை வேண்டும். எங்கும் கூட்டம் இருக்கும். இனி ஆகஸ்ட், செப்டம்பரில் பயணிக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

ஆரம்பத்தில் சாலை விதிகளைப் புரிந்துகொள்வது கடினமாக இருந்தது. பின் பழகிவிட்டது. ‘ஜிபிஎஸ்’ எனும் வழிகாட்டி இல்லாமல் இருந்திருந்தால் எத்தனை முறை வழி தவறி இருப்போம்? வியந்தபடி ஊருக்குள் நுழைந்ததும் நேர்த்தியற்ற, பழையதும் புதிதுமாய் வீடுகள் இருந்த குறுகலான தெருவுக்குள் முன்பதிவு செய்திருந்த தங்குமிடத்திற்கு வந்து சேர்ந்தோம். வரவேற்பறையில் இருந்த கொரிய இளைஞன் பணிவாக விவரங்களை வாங்கிக்கொண்டு காலை உணவிற்கும் சேர்த்து அறையை பதிவு செய்திருந்ததால் அதற்கான சீட்டுகளையும் கொடுத்து காலை 7-9.30க்குள் அங்கு வந்து உண்ணலாம் என்று கூறினான். பணத்தைச் செலுத்திவிட்டு தங்கவிருந்த அறைக்குள் நுழைந்தோம். அமெரிக்காவைப் போலவே இங்கும் நம் பெட்டிகளை நாமே தான் எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். இந்தியாவில் தான் பெட்டிகளை எடுத்துச் செல்ல ஆட்கள் இருக்கிறார்கள்!

இரு படுக்கைகளுடன் பெரிய அறை! விசாலமான ஜன்னல். திரைச்சீலையை விலக்கினால் எதிரே பனிச்சிகரத்துடன் பிரபலமான ‘ஹல்லசான்’ மலை! தென்கொரியாவின் உயர்ந்த சிகரம்! ஆகா! அங்கே மலையுச்சிக்குச் செல்ல முன்பதிவு செய்து வந்திருக்கிறேன். பார்க்கலாம்.

ஒரு மணி நேரம் சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் அருவிகளைப் பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்பினோம். மகள் பசிக்கிறது என்றவுடன் கண்ணுக்கு முதலில் தெரிந்தது மெக்டொனால்ட்சும் ஸ்டார்பக்சும் தான். அடடா! இங்கு வந்தும் நமக்கு இதுதான் தெரிகிறது பார் என்று உள்ளே நுழைந்தோம். உலகெங்கிலும் மெக்டொனால்ட்ஸில் ஆர்டர்களை முன்கூட்டியே கியோஸ்கில் போடும் வசதிகள் வந்துவிட்டன போல! உணவு தயாரானவுடன் அழைக்கிறார்கள். ‘ஷாங்காய் பர்கர்’ அத்தனை சுவையாக இருந்தது. போர்ச்சுகலில் கூட பர்கரின் சுவை நன்றாக இருந்தது. ஆக, அமெரிக்காவில்தான் பர்கரின் சுவை குறைந்து இருக்கிறது. அன்று இன்னொன்றும் தெரிந்தது – கொரியர்கள் காரம் அதிகமாக சாப்பிடுகிறார்கள்😛

சாலையோரங்களில் கைக்கு எட்டும் உயரத்தில் பழங்களுடன் ‘டேன்ஜரின்’ மரங்கள். ஆனால் யாரும் பறிக்க மாட்டார்கள் போலிருக்கிறது. வெளியே விளக்குகள் போட்ட கடைகளில் பெரிய பெரிய மரப்பெட்டிகளில் பழங்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். ஜெஜூ டேன்ஜரின் பழங்கள் அத்தனை பிரபலமாம்!

முதலில் நாங்கள் சென்றது ‘ஜாங்பேங்'(Jeongbang) அருவி. நாங்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து 10 நிமிடத்தில் வந்துவிட்டது. நடந்து கூட சென்றிருக்கலாம் போல! ஜெஜூவில் பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் அருவிநீர் கடலில் (East China Sea) நேராக கலப்பதுதான். 23மீட்டர் உயரத்தில் இருந்து கடலை நோக்கி விரைகிறது அருவி நீர். அன்று மாலை என்பதால் கூட்டம் ஓரளவுதான் இருந்தது. மழைக்காலங்களில் சீறிப்பாயும் அருவியைப் பார்க்க தடை செய்துவிடுவார்களாம். நல்ல வேளை! அப்படி ஏதும் நடக்கவில்லை. அருவியைப் பார்க்க கட்டணம் வசூலிக்கிறார்கள். வண்டிகளை நிறுத்த வசதிகள் இருக்கின்றன. அதற்குத் தனியாக கட்டணம் எல்லாம் வசூலிக்கவில்லை. அங்கிருந்து சிறிது தூரம் நடந்து சென்று 130 படிகள் கீழிறங்கிச் சென்றால் ‘ஜோ’வென கொட்டும் அருவியைக் காண முடிகிறது. வேகமாக இறங்கும் பொழுதே மேலேறி வர வேண்டுமே என்ற பயமும் தொற்றிக்கொண்டது. வழியெங்கும் நிழல் தரும் மரங்கள். அமர்ந்து நிதானமாகச் செல்ல ஆங்காங்கே இருக்கை வசதிகள். அதன் சூழல் மிக அழகாக இருந்தது. ஜில்லென்ற காற்று வீச, பைன் மரங்களுடன் பாறைகளும், நீலவானம் பிரதிபலித்த கடற்காட்சியும் அருமை. அருவி அருகே செல்ல முடியாது. ‘ரிஸ்க்ன்னா ரஸ்க் சாப்பிடற மாதிரி’ என்று சொல்பவர்கள் கரடுமுரடான பாறைகளைக் கடந்து கடலை நோக்கி ஓடும் நீரில் கால் நனைத்துவிட்டு வரலாம். வழுக்கும் பாறைகள் மேல் நின்று கொண்டு இன்ஸ்டாவில் படங்களைப் போட தலை, முகத்தைக் கோணலாக்கி, கைவிரல்களைக் காட்டிக்கொண்டு வழக்கம் போல ஒரு கூட்டம்😁 பாறைகள் நிரம்பிய பாதை என்பதால் கவனமாக இருக்க வேண்டியிருந்தது.

அந்த ரம்மியமான சூழலில் சிறிது நேரம் நின்று ரசித்துக் கொண்டிருந்தோம். நம்மூரில் வடை, பஜ்ஜி விற்பதைப் போல ஆழ்கடலில் பிடித்த ஜீவராசிகளை இரு வயதான பெண்கள் விற்றுக் கொண்டிருந்தார்கள்! பெண்களே கடலில் மூழ்கி பிடிக்கும் அபூர்வ மீன் வகைகள். அங்கேயே கல்லின் மீது அமர்ந்து சிலர் சாப்பிட்டுக் கொண்டும் இருந்தார்கள். மூச்சு வாங்க படிகள் ஏறி வண்டிகள் நிறுத்துமிடத்திற்கு வந்து சேர்ந்தோம்.

வழியில் இந்தியர்கள் இருவரைப் பார்த்தோம். அதிலும் ஒருவர் பார்க்க நம்மூரைப் போல தெரிந்தார் . அவர்களும் சினேகமாகப் புன்னகைக்க, நாங்களும் ஹாய் சொல்லி, அவர்களைப் பற்றி விசாரிக்க, ஒருவர் விழுப்புரத்தில் இருந்து வந்திருக்கிறார். இன்னொருவர் குஜராத். இருவரும் ஜெஜூ பல்கலையில் ஆராய்ச்சி மாணவர்களாம்! 50 இந்திய மாணவர்கள் படிக்கிறார்கள். பத்து வருடங்களாக இருக்கிறோம் என்று ஆச்சரியப்படுத்தினார்கள்! மொழியைக் கற்றுக்கொண்டீர்களா என்று கேட்டால் எதுவும் தெரியாது என்றார்கள். எப்படி குடும்பத்தை வைத்துச் சமாளிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, விழுப்புரத்துக்காரர் குழந்தை பள்ளியில் மிகவும் சிரமப்பட்டதால் மனைவி, குழந்தையை ஊருக்கு அனுப்பிவிட்டதாகக் கூறினார். பங்களாதேஷி கடைகளில் உணவுப் பொருட்களை வாங்கிக்கொள்கிறார்கள். அத்தனை பங்களாதேசிகள் குடியேறியிருக்கிறார்கள்! மெல்லத் திறந்தது கதவு அமலாக்களுடன் ஹாயாக ஆண்கள் இரு வண்டிகளில் இறங்கியதையும் கவனித்தோம். ம்ம்ம்ம்

அருகில் இருக்கும் இடங்களைப் பற்றின தகவல்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டு நம் மக்களிடம் இருந்து விடைபெற்றோம்.பார்றா! ஜெஜூ தீவில் கூட நம் மக்களைப் பார்க்க முடிகிறது. தமிழில் பேச முடிகிறது என்று பேசிக்கொண்டே அருகில் இருந்த ‘சோஜாங்பேங்’ (Sojeongbang) அருவிக்குச் சென்றோம். பார்த்தவுடனே சினேகமாகப் பேசியதைப் பற்றி வியந்து பாராட்டினாள் என் மகள். என்ன இருந்தாலும் நம் மக்கள் நம் மக்கள் தான். வெளிநாடுகளில் அவர்களைப் பார்த்ததும் இனம் புரியாத பாசம் தான்.

பேசிக்கொண்டே மரங்கள், செடிகள் அடர்ந்த பாதைகள் வழியாக சோஜாங்பேங் அருவிக்குச் சென்றோம். சிறிய அருவி தான். ஜெஜூ தீவு எங்கும் எரிமலைப் பாறைகள். அதனூடே அருவியைப் பார்க்கையில் வித்தியாசமாக இருந்தது. இந்த அருவிக்குச் செல்ல கட்டணம் ஏதும் கிடையாது. 15 நிமிடங்களில் அருவி அருகே சென்று விட முடிகிறது. சிறிது நேரம் அங்கே சுற்றி விட்டுத் திரும்பினோம். வழியில் அழகான மஞ்சள் நிற ‘கனோலா’ மலர்கள் பூத்து நிற்கும் தோட்டத்தில் படங்களை எடுத்துக் கொண்டோம். மார்ச்-ஏப்ரல் மாதத்தில் தீவில் பல இடங்களில் பூத்திருக்கும் பூக்களைப் பார்க்கவே ஏராளமான சுற்றுலாவினர் இங்கு படையெடுக்கிறார்கள்!

கடைக்குச் சென்று டேன்ஜெரின் பழச்சாறு வாங்கிக்கொண்டோம். கடைகளில் ஜீராவில் முக்கி எடுத்த ஸ்ட்ராபெர்ரிகளை குச்சியில் கோர்த்து அழகாக வைத்திருந்தார்கள். தாய்லாந்தில் கிடைப்பது போலவே இங்கும் குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்த ஜில் இளநீர் கிடைக்கிறது. அங்கேயே பிழிந்தெடுத்த டேன்ஜெரின் பழச்சாறு, பரிசுப் பொருட்களை விற்கும் கடைகள் என்று அங்கு வந்திருப்போரை வாங்க வைத்துவிடுகிறார்கள். ஐந்து மணி தான். இன்னும் வெளிச்சமாகவே இருந்தது. அருகிலிருக்கும் பிரபலமான ‘Cheonjiyeon’ அருவியையும் பார்த்துவிடலாம் என்று கிளம்பினோம்.

வழியெங்கும் வெள்ளையும் பிங்க் வண்ணத்திலும் செர்ரி மலர்கள் பூத்துக் குலுங்கிய மரங்கள். அழகோ அழகு! இன்னும் சில மரங்களில் மலர்கள் துளிர்க்கவில்லை. வண்டி நிறுத்தும் இடத்தில் கடைகள் நிறைய இருந்தன. உள்ளே சென்று அருவியைக் காண கட்டணம் வசூலிக்கிறார்கள். சீராக அமைக்கப்பட்ட பாதைகள், நிழல் தரும் பெரு மரங்கள். இதுவரையில் பார்க்காத மரவகைகள் அத்தனை இருக்கின்றன அங்கே! பேசாமல் ஒவ்வொரு மரத்தின் இலைகளையும் எடுத்துக்கொண்டு வந்திருக்கலாம் என்று இப்பொழுது தோன்றுகிறது! பள்ளி நாட்களில் இலைகளைச் சேர்த்து வைத்து தாவரவியல் ஆசிரியரிடம் காண்பித்து விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டிருந்தேன். ம்ம்ம்…

நுழைவாயிலில் ‘Dol Hareubang’ எனப்படும் தீவின் பாரம்பரியமான கல் சிலைகள் வரிசையாக இருந்தன. இவை ஜெஜூ தீவின் அடையாளமாகவும் தொன்மையான வரலாற்றுச் சின்னமாகவும் விளங்குகின்றன. தீவில் எங்கு பார்த்தாலும் எரிமலைக் குழம்புப் பாறைகளால் செய்யப்பட்ட இந்த முப்பாட்டன் சிலைகளைப் பார்க்கலாம். பெரிய கண்கள், வட்ட முகம், இரு கைகளையும் வயிற்றில் வைத்துக் கொண்டிருப்பது போல் காணப்படும் சிலைகள் தொப்பி போன்ற தலைப்பாகையுடன் தீவைக் காக்கும் காவலாளிகள் என்ற கதையும் இருக்கிறது. அதனால் நகரின் நுழைவாயில்களில் அதிகம் காண முடிந்தது.

இந்த அருவியைப் பார்க்க நல்ல கூட்டம். வழி நடுநடுவே ஓடைகள். அங்கே வண்ண வண்ண ‘ கொய் ‘ மீன்கள். சிறு சிறு அழகிய பாலங்கள். படங்களை எடுத்துக் கொண்டே இருக்கலாம். கும்பலாக ‘மாண்டரின்’ வாத்துகள்! வாவ்! வண்ணமயமான பறவை! படங்களில் மட்டுமே பார்த்திருந்ததை நேரில் பார்க்கையில் அத்தனை சந்தோஷமாக இருந்தது. ஒன்றல்ல இரண்டல்ல. ஒரு சிறு கூட்டமே அங்கிருந்தது!

இரவில் ஒளிவிளக்குகள் மின்ன அருவி அழகாக இருக்கும் என்றார்கள். இந்த இடத்திற்கு ஒரு கதை இருக்கிறது. ஏழு தேவதைகள் விண்ணிலிருந்து இறங்கி அருவியின் குளத்தில் குளிக்க வந்ததால் இதை God’s Pond என்கிறார்கள்! “விண்ணும் மண்ணும் சந்திக்கும் இடம்” Cheon – வான், ji – மண், Yeon – சேரும் இடம் எனும் அர்த்தமும் கொண்டது என எழுதி வைத்திருந்தார்கள். அருவியைச் சுற்றி காடுகள், அரியவகை மரங்கள் இருக்கின்றன. ‘லவ்வர்ஸ் பாரடைஸ்’ என்பதால் இரு விரல்களில் காதலைச் சொல்லிப் படமெடுத்துக் கொண்டிருந்தது பெருங்கூட்டம் ஒன்று😍😍😍 ஆசை தீர சுற்றிச்சுற்றி வந்து வளைத்து வளைத்துப் படங்களையும் வீடியோக்களையும் எடுத்துக்கொண்டோம் .

மாலை மங்கும் வேளையில் “இரவு உணவுக்கு ‘ஃபுட் மார்க்கெட்’ போகலாம்மா . அருகிலேயே இருக்கிறது” என்று கூறினாள் மகள். சரி என்று கிளம்பி விட்டோம். சீக்கிரமே சாப்பிட்டுவிட்டுத் தூங்கிவிடலாம். நாளை காலையில் நீண்ட பயணம் இருக்கிறது என்று கிளம்பி அறைக்குச் சென்றுவிட்டோம்.

நாங்கள் தங்கியிருந்த ‘Seogwipo’ ஊர் கொஞ்சம் பழமையும் புதுமையுமாய் ஒழுங்கற்றதுமாய், அழுக்காய் இருப்பது போல் தெரிந்தாலும் குப்பையை மட்டும் எங்குமே காணவில்லை! இந்தியாவில் திரும்பிய பக்கமெல்லாம் குப்பைகள் என்றால் இங்கே தேடினாலும் கிடைக்காது போலயே ! எங்கே ஒளித்து வைத்திருப்பார்களோ? தெருக்களில் குப்பைகளைப் பிரித்து மூடிகளுடன் கூடிய பெரிய பிளாஸ்டிக் கூடைகளில் போடும் வசதிகள் இருக்கின்றன. எச்சில் துப்பாத மனிதர்கள், தெரு நாய்கள், பன்றிகள் இல்லாத தெருக்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. அவ்வளவு ஏன்? வீடுகள் இருக்கின்றன. மனிதர்களே கண்ணில் படவில்லை! சாலைகளில் கேமராக்களை வைத்திருந்ததால் ஒழுங்காகச் சென்று கொண்டிருந்தார்கள். எங்களுக்குத்தான் இத்தனை மெதுவாகப் போகிறார்களே என்றிருந்தது. சிறிய ஊரில் அருகருகே மூன்று தேவாலயங்கள்! சிகப்பு வண்ணத்தில் சிலுவை மின்னிக் கொண்டிருந்தது. ஐந்து மணிக்கு மேல் தெருக்கள் அமைதியாகி விடுகின்றன!

‘ஃபுட் மார்க்கெட்’டிற்கு வழியைத் தேடி ஓரிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு நடக்கும் பொழுது மக்கள் தென்பட்டார்கள். அங்கிருந்து ஐந்து நிமிடத்திற்குள் ஒரு தெருவிற்குள் நுழைந்தால் ஒரே கடைகள். சுடச்சுட உணவு வகைகள். கூவிக் கூவி அழைக்கிறார்கள். ஒவ்வொரு உணவு வகைகளையும் செய்வதை நின்று பார்க்க வேண்டும் என்று ஆசை. பெயர்கள் எல்லாம் வித்தியாசமாக இருந்தன. வகைவகையான மீன்களைத் தொட்டியில் வைத்திருந்தார்கள். கோழிகள், நண்டு வகையறாக்கள் எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நாங்களும் எங்களுக்குத் தெரிந்த உணவை வாங்கிக்கொண்டு ஓரிடத்தில் அமர்ந்து சாப்பிட்டோம். வார இறுதி என்பதால் அத்தனை கூட்டமா? இல்லை இது தினமும் நடக்குமா என்று தெரியவில்லை. ஆசியாவின் உணவு கலாசாரம் போல! தாய்லாந்தில் கூட இப்படி தெருக்களில் கடைகளைப் பரப்பி மாலை முதல் இரவு வரை உண்டு களிப்பதைப் பார்த்தோம்.

கடைகளை வேடிக்கைப் பார்த்து பழங்களையும் வாங்கிக்கொண்டு அறைக்குத் திரும்பும் பொழுது மணி ஏழரை ஆகிவிட்டிருந்தது. முதல் நாளின் நீண்ட பயணம் தந்த களைப்பும் கனவுத்தீவிற்கு வந்துவிட்ட மகிழ்ச்சியுமாய் அன்றைய நாள் இனிமையாக, மறக்க முடியாத நாளாகிப் போனது. அடுத்த நாளின் பயணத்திட்டத்தை முடிவு செய்து விரைவில் தூங்கிவிட்டோம்.

Bye , bye ஜெஜு

பயணம் என்பது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது மட்டுமல்ல. நாம் அறிந்திருந்த உலகிலிருந்து எத்தனை வேறுபட்டு நிற்கிறது நம்மைச் சுற்...