Monday, March 11, 2013

அவள் ஒரு தொடர்கதை - 2

ஒரு வழியாக திருமணமும் நடந்து விட்டால், புகுந்த வீட்டில் 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' என்று அவளை ஒரு மனுஷியாக பார்த்தால், 'அவள் மா தவம் செய்தவள்'! நிதர்சனத்தில் பலருக்கும் அந்த கொடுப்பினை இருப்பதில்லை. அந்த பெண் வந்த நேரம் எல்லாமே சரியாக போனால் பிரச்சினைகள் குறைவு. வயதானவர்கள் இறந்து போனாலோ, வீட்டில் வேறு ஏதாவது நடந்து விட்டாலோ, எல்லாம் அந்த பெண்ணால் வந்தது தான்.

கொண்டு வரும் சீரில் சிறிது குறைந்து விட்டாலும் அவள் கதி அதோகதிதான், இம் மாதிரி சமயங்களில் அம்மா முந்தானையை பிடித்து கொண்டு அம்மாவின் நிழலில் வாழும் முதுகெலும்பில்லாத நல்லவர்கள்(!) வாய் மூடி மௌனியாக நின்று கொண்டு இருதலைக்கொள்ளி எறும்பாக இருக்கும் பொழுது அடச் சே , இவனையா ஒரு ஆண் என்று நம்பி வந்தோம் என்று நோகாத பெண்களே இருக்க முடியாது. இதை விட பெண்ணை கட்டி கொடுத்த ஒரு காரணத்திற்காக அவளை பெற்றவர்களை/உடன் பிறந்தவர்களை கேவலமாக பேசுவதும், நடத்துவதும் அதை கண்டு ஒன்றும் செய்ய முடியாமல் தன்னுள்ளே நொறுங்கி போகும் பெண்கள் எத்தனை பேர்?

மனைவி தன்னை விட அதிகம் படித்திருந்தால் வேலைக்கு போக கூடாது என்பதிலிருந்து வேலைக்கு போனாலும் வீட்டுக் கடமைகளை எல்லாம் முடித்து விட்டுத்தான் போக வேண்டும் என்று சொல்வதிலிருந்து... இவர்களுக்கு இலவசமாக ஒரு வேலைக்காரியாக அந்த பெண் நடத்தப்படுகிறாள். ஏதாவது திருப்பி கேட்டு விட்டால் படித்த திமிர், வேலைக்கு போகும் திமிர், இந்த திமிர் அந்த திமிர் என்று அடுக்கடுக்காக அவள் மேல் போடப்படும் அத்தனை வசவுகளையும் வாங்கி அன்றிருந்தே தனிமையில் அழ ஆரம்பிக்கும் எத்தனை பெண்களுக்கு விடிவு காலம் கிடைக்கிறது? எல்லா இடங்களிலும் இப்படி இல்லை என்றாலும் பல இடங்களிலும் நம் கண் முன்னே இது நடக்கிறது.

பெரும்பாலும் படித்த, வேலை பார்க்கிற பெண்கள் பல கொடுமைகளை அனுபவிக்கிறார்கள். கணவனை விட சம்பளம் குறைவாக இருந்தால் ஒரு குரூர திருப்தியும், அதை சொல்லி குத்தி காட்டுவதும், ஒரு வேளை கணவனை விட அதிகம் வாங்கினால் தாழ்வு மனப்பான்மையில் எப்படியெல்லாம் கட்டுப்படுத்த முடியுமோ, எப்படியெல்லாம் வசை பாட முடியுமோ என்று மன நிலை பிறழ்ந்த நிலையில் பெண் தானே என்று போட்டு மிதிக்கும் ஜென்மங்களுடன் வாழ வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படும் பெண்கள் எத்தனை பேர்? படிக்காதாவர்களுக்கு வேறு வகையில் பிரச்சினைகள். குழந்தைகள், குடும்ப சூழ்நிலை கருதி பல பெண்களும் தங்கள் மனதுக்குள்ளேயே பிரச்சினைகளை போட்டு பூட்டி வைத்துக் கொண்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

சிலருக்கு பிறந்த வீட்டு சீதனம் என்ற பெயரில் வதை, சிலருக்கு சம்பாதிக்கிற பணத்தால் பிரச்சினை, சிலர் அழகாக இருப்பதால் பிரச்சினை, சிலருக்கு அழகாக இல்லையென்பதால் பிரச்சினை, குழந்தை பிறக்கா விட்டால் பிரச்னை, பிறந்து அந்த குழந்தைக்கு சரியாக சீர் செய்யவில்லையென்றால் பிரச்னை என்று ஒவ்வொரு நிலைகளிலும் எத்தனை எத்தனை பிரச்சினைகள் இந்த 'மா தவப் பெண்களுக்கு'!

வேலைக்குப் போனால், தன் முயற்சியால் பதவி உயர்வு கிடைத்தாலும் அதற்கு ஒரு குத்தலான பேச்சு, வக்கிர பார்வைகளுடனும் பேச்சுக்களுடனும் உலா வருபவர்களுடன் நாள் முழுவது உடலும் மனமும் நொந்து போகிற 'மா தவப் பெண்கள்' தான் எத்தனை பேர்? மனித உருவில் நடமாடும் பணப்பிசாசுகளுடன், சந்தேகப் பேய்களுடன், பணந்தின்னி கழுகுகளுடன் நித்தம் நித்தம் எத்தனை எத்தனை பெண்கள் வாழ்க்கை சீரழிந்து கொண்டிருக்கிறது? பல பெண்களையும் வார்த்தைகளால் சாடி அவளை நடைப்பிணமாகவே வைத்திருக்கும் எத்தனை பேருக்கு புரியும் அவள் படுகின்ற துன்பங்கள்?

என் அம்மா சொன்னதால் உன்னை திருமணம் செய்து கொண்டேன், உன் பணத்திற்காக திருமணம் செய்து கொண்டேன் என்று சொல்வதும், விவாகரத்து செய்வதும்...வெட்கங்கெட்ட ஈனப் பிறவிகள்.ஒரு நாணயத்திற்கு இரு பக்கம் இருப்பது போல், சில/பல மோசமான பெண்களும் இருக்கிறார்கள், மறுப்பதற்கில்லை. ஆனால் நித்தமும் வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கின்ற பெண்கள் தான் அதிகம்.

பெண்ணை ஒரு பெண்ணாக, சக மனுஷியாக, தோழியாக, அவள் உணர்வுகளை மதிக்க தெரிந்தவர்களாக, அவளை நன்கு புரிந்து நடந்து கொண்டு அவளுடைய வாழ்க்கையை முன்னேற்றுபவர்களாக இருப்பவர்கள் கிடைத்தால் அவள் தான் 'மாதவம் செய்தவள்'.

இல்லையென்றால் அவள் ஒரு தொடர்கதை தான்.

2 comments:

  1. பெண்களின் நிஜங்களை,அவர்களின் உள் உணர்வுகளை ஒரு பெண் உணர்ந்து எழுதுவதும், அதையே ஒரு ஆண் புரிந்து எழுதுவதற்குமான வித்தியாசம் இந்த பதிவில் காண முடிகிறது....அதாவது நிஜத்துக்கும் நிழலுக்குமான வித்தியாசம்.

    வலி எல்லோருக்கும் பொதுவானது, அது யாருக்கும் பாரபட்சம் பார்ப்பதில்லை. இதை அனைவரும் புரிந்து கொண்டால் சக மனிதனை நேசிக்கவும், அவனுக்காக யோசிக்கவும் முடியும்.

    ReplyDelete

Can This Love Be Translated?

 “Can This Love Be Translated?” பல நாட்களுக்குப் பிறகு பார்த்த கே-ட்ராமா. தலைப்பே வித்தியாசமாக இருந்ததில் வசப்பட்டேன். கதாநாயகி புதிதாக இருந...