Sunday, August 17, 2025

தென்கொரியப் பயணம்-1: ஜெஜூ தீவு

சொல்வனம் இதழில் வெளிவந்துள்ள என்னுடைய தென்கொரிய பயணக்கட்டுரையின் முதல் பாகம்  தென்கொரியப் பயணம்-1: ஜெஜூ தீவு

அம்மா! உனக்கு எந்த நாட்டிற்குச் செல்ல விருப்பம்” எனக் கேட்டாள் என் செல்ல மகள். விளையாட்டாகக் கேட்கிறாள் என்று நினைத்து நானும் தென் கொரியா, அதுவும் ‘ஜெஜு’ தீவிற்குச் செல்ல வேண்டும் என்று கூறினேன். கொரியன் தொடர்களை நான் விரும்பிப் பார்ப்பேன் என்று அவளுக்குத் தெரியும். சில மாதங்களுக்குப் பிறகு திடீரென ஒருநாள் “அம்மா, தென் கொரியா செல்ல பயணச்சீட்டுகள் வாங்கிவிட்டேன். இனி ஜெஜூவில் பார்க்க வேண்டிய இடங்களை நீயே தீர்மானித்துக்கொள்” என்று கூறவும் “ஆகா! லதாவுக்கு வந்த யோகத்தைப் பார்!” என்று கனவில் மூழ்கி உடனே இன்டர்நேஷனல் லைசென்ஸ் வாங்கிவிட்டேன். பொதுவாக வெளிநாடுகளில் ஈஷ்வர் தான் வண்டி ஓட்டுவார். இந்த முறை நானும் மகளும் மட்டும் செல்வதாலும் தென் கொரியாவிலும் அமெரிக்காவில் கார் ஓட்டுவதைப் போலத்தான் என்பதால் பிரச்சினையில்லை. பாஸ்போர்ட் தேதிகளையும் ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்தாயிற்று. பயணத்திற்கு வேண்டிய அனைத்தையும் மறக்காமல் கைப்பெட்டி ஒன்றில் எடுத்து வைத்துக்கொண்டேன். அந்த இனிய நாளும் வந்தேவிட்டது.

‘ஜேஎஃப்கே’ விமானநிலையத்தில் இருந்து இரவுப் பயணம். நாங்கள் தங்கியிருக்கும் ஆல்பனியில் இருந்து நியூயார்க் நகரத்திற்குச் செல்ல ரயிலில் இரண்டரை மணிநேரப் பயணம். வீட்டிலிருந்து ரயில்நிலையத்திற்கு ஊபரில். பேசிக்கொண்டே வந்தாள் ஓட்டுநர் பெண்மணி. அவரவர்க்கு ஆயிரம் பிரச்சினைகள்! நமக்குத்தான் ‘தெனாலி’ கமல் மாதிரி யாரைக் கண்டாலும் பயம்😱நாம் செல்லும் நேரங்களில்தான் எப்பொழுதும் எங்கும் கூட்டமிருக்கும். அப்படித்தான் ரயில்நிலையமும் அன்று கூட்டத்துடன் இருந்தது. ஆகா! வலப்பக்கத்தில் ஜன்னலோர இருக்கை கிடைத்தால் நதியழகையும் பார்த்துக்கொண்டே செல்லலாம் என்று தேடிப்பிடித்து அமர்ந்துகொண்டேன். குழந்தையின் குதூகலத்துடன் ஆரம்பமானது என் பயணம். மழைக்காலத்தில் துளிர்க்க காத்திருக்கும் மரங்களுடன் மலைகளும் சூரியன் இளைப்பாறும் வானழகு பிரதிபலிக்க வழிநெடுக ஹட்ஸன் ஆறும் கூடவே பயணித்தது அழகு. அடுத்தடுத்த நிறுத்தங்களில் ஏறுவதும் இறங்குவதுமாய் பயணிகள். என் அருகே வந்தமர்ந்த இளைஞன் நேர்த்தியாக உடையணிந்து முகக்கவசம் அணிந்திருந்தான். இன்னுமா😷

நகரத்தை நெருங்கும் பொழுது ரயிலின் ஓட்டத்தில் கொஞ்சம் சுருதி குறைய ஆரம்பித்தது. நியூயார்க் நகரம் என்றுமே ஒருவித பரபரப்புடன் தான் இருக்கும். மாலை 7.10க்கு வந்து சேர்ந்தாயிற்று. வண்டியிலிருந்து இறங்கியவர்கள் ஓடிக் கொண்டிருக்க, இடுப்புகளில் விதவிதமான தற்காப்புப் பொருட்களுடன் கூட்டத்தை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள் பெருந்தொப்பை காவலர்கள். இத்தனையையும் சுமந்து கொண்டு எப்படித்தான் நாள் முழுக்க நின்று கொண்டிருக்கிறார்களோ? ஆனாலும் அவர்கள் இருக்கும் தைரியத்தில் தானே நிம்மதியாக இருக்கிறோம்?

அவர்களைக் கடந்து என்னை அழைத்துச் செல்வதாகக் கூறியிருந்த மகனைக் கூட்டத்தில் தேடிக் கொண்டிருந்தேன். “எங்கம்மா இருக்கிறாய்?” “நான் இங்கேதான் இருக்கிறேன். Find My ஆப்-பில் பார்த்தால் நான் இருக்கும் இடம் தெரியும்” என்று கூறி காத்திருந்தேன். நமக்கு பக்கத்தில் என்ன இருக்கிறது என்று அடையாளத்திற்குக் கேட்டால் கூட வெறும் சாப்பாட்டுக் கடைகளைத்தான் சொல்லத் தெரிகிறது😁 இந்தப் போன் மட்டும் இல்லையென்றால் மக்கள் கூட்டத்தில் தவித்துதான் போயிருப்போம்! நான் இருக்குமிடத்திற்கு வந்து சேர்ந்த மகனுடன் 40-60 படிகளில் ஏறி உள்ளூர் ரயிலைப் பிடித்துக்கொண்டு அவன் குடியிருப்புக்குச் சென்றோம். “நல்ல வேளை! நீ வந்தாய். என்னால் இத்தனை படிகளில் பெட்டி, உன்னுடைய சாப்பாட்டுக்கூடைகளுடன் ஏறியிருக்க முடியாது” என்று கூறினேன். நாங்கள் பேசிக்கொண்டிருக்க, சிறு வயதிலிருந்தே பழக்கமான அவனுடைய அறை நண்பர்களும் வந்து சேர்ந்தார்கள். நகர வாழ்க்கை, வேலை, பெற்றோர்கள், குடும்பம் என்று நிறைய பேசினார்கள். எப்படி வளர்ந்து விட்டிருக்கிறார்கள் என ஆச்சரியமாக இருந்தது! சிறிது நேரம் அளவளாவிவிட்டு மழை வருவதற்குள் அங்கிருந்து ‘லிஃப்ட்’ வாடகை வண்டியில் விமானநிலையத்திற்குப் பயணமானேன். நகரத்தில் ஊபர் வாடகை வண்டிகள் அதிகம் வசூலிக்கிறார்களோ?

வார இறுதி. இரவு ஒன்பதரைக்குச் சாலையில் ஊர்ந்து செல்லும் வண்டிகள். போக்குவரத்து நெரிசல் இல்லாத நேரம் என்று ஒன்று இருக்கிறதா என்ன? “தூங்கா நகரம்” நான் பிறந்து வளர்ந்த மதுரை மட்டுமல்ல, நியூயார்க் நகரமும் கூட! வண்ண வண்ண விளக்குகளுடன் ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள், சிறு தூறலில் நனைந்தபடி செல்லும் வாகனங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

வண்டியோட்டி ரஷ்யன் என்று நினைத்திருந்தேன். ‘அஜர்பைஜான்’ என்றார். “வந்து ஐந்து வருடங்களாகிவிட்டது. இன்னும் கடனட்டை கடனை அடைக்க முடியவில்லை. குடும்பம் பிறந்த ஊரில் இருக்கிறது. வாழ்க்கை அத்தனை சுகமில்லை” என்று புலம்பிவிட்டு, நான் என்ன படித்திருக்கிறேன், எங்கு வேலை செய்கிறேன் என்று கேட்டு, “இந்தியர்கள் நீங்கள் நன்கு படித்து நல்ல பணியில் இருக்கிறீர்கள். நான் படிக்காததால் கஷ்டப்படுகிறேன். அமெரிக்கா பணக்கார நாடு. மரத்தில் பணம் காய்ப்பதைப் போல ஊரில் சொல்வார்கள். நாம் படும் கஷ்டம் நமக்குத்தான் தெரியும்” என்று பேசிக்கொண்டே வந்தார். நமக்கும் பொழுது போகணுமே? அவர் நாட்டினருக்கு எளிதில் கிரீன் கார்டு கிடைத்தாலும் இப்பொழுதெல்லாம் பலரும் வர விரும்புவதில்லை என்றார். “ஆங்கிலம் பேசவே இரண்டு வருடங்கள் ஆயிற்று எனக்கு. அதுவரை சிறுசிறு வேலைகளைச் செய்து பிழைத்து வந்தேன். இங்கு வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கிறது” என்று கூறினார். புலம்பெயர்ந்த ஊரின் பேச்சுமொழி தெரிந்தால்தான் எளிதில் பிழைக்க முடியும். அடிப்படைக் கல்வியறிவு இல்லையென்றால் அந்த நாடுகளில் வாழ்வது சிரமம் என்பதை போர்ச்சுகல் நாட்டில் வாழும் நம் மக்களைப் பார்க்கும் பொழுது தோன்றியதுதான் நினைவிற்கு வந்தது.

பேசிக்கொண்டே பத்து மணிக்கெல்லாம் விமான நிலையம் வந்து சேர்ந்தாகிவிட்டது. மனுஷன் இவ்வளவு புலம்பினாரே என்று டிப்ஸ் கொடுத்துவிட்டு உள்ளே நுழைந்தேன். அந்த விமான நிலையம் என்றுமே பரபரப்பாக இருக்கும். ஒரே நேரத்தில் கிளம்பும் விமானங்கள். பயணிகள். ஒவ்வொருவரும் கை கொள்ளாத அளவு பெட்டிகளுடன்! அது ஒரு மாய உலகம்! எப்பொழுதும் கூட்டம் அதுவும் இரவு நேரப் பயணம் என்றால் கேட்கவே வேண்டாம். அன்றும் அப்படியே! டெர்மினல் 4ல் இறங்கியிருந்தேன். டெர்மினல் 1க்குச் செல்ல வேண்டும் என்று கூறிவிட்டார்கள். ஏர் ட்ரெயினில் ஏறி அங்கே சென்றேன்.

‘கொரியன் ஏர்’ கவுண்டரைத் தேடி அங்கிருந்த சிற்றிடை அழகியிடம் முன்பே ‘செக்-இன்’ செய்த தகவல்களைக் கூறி, ஜன்னலோர இருக்கையைப் பெற்றுக்கொண்டேன். மரியாதையாக இரு கைகளால் பயணச்சீட்டை சிரித்த முகத்துடன் கொடுத்தது எனக்குப் பிடித்திருந்தது. கவுண்டரில் இருந்த கொரியர்கள் அனைவரும் பணிவாகப் பயணிகளிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். சிடுசிடு மூஞ்சியுடன் உரத்த குரல் எங்கும் கேட்கவில்லை! 14 மணிநேரப் பயணம். அதுவும் இரவு முழுவதும். நிம்மதியாகத் தூங்கலாம் என்று விமானச்சீட்டு வாங்கிக்கொண்டு பாதுகாப்புப் பரிசோதனை வரிசையில் நின்றால் ஒரே ஆசிய முகங்கள். இவர்களில் எப்படி சீனா, வியட்நாம், கொரியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடிக்க முடியும் என்று ஒவ்வொரு முகங்களாக ஆராய்ந்துகொண்டிருந்தேன். “ரொம்ப கஷ்டமப்பா!”

அதற்குள் என் முறை வரவும் “குளோபல்எண்ட்ரி டிஎஸ்ஏ” என்று கூற, கூட்டம் குறைவாக இருந்த தனிவரிசையில் உள்ளே அனுப்பினார்கள். இந்த முன் அனுமதியால் அதிகம் சோதனைகள் நடக்காது. எளிதில் சென்றுவிடலாம். அதுவும் முடிந்தபிறகு இன்னும் ஒன்றரை மணிநேரத்தைக் கடத்தியாக வேண்டும். இரவு நேரத்தில் பயணிக்கப் போகும் கூட்டத்துடன் விமான நிலையம் புத்துயிர் பெற்றது போல் ஜொலித்துக் கொண்டிருந்தது. என்ன தான் அயல்நாட்டில் வாழ்ந்தாலும் பிறந்த ஊருக்குச் செல்லும் உற்சாகம் இருக்கத்தானே செய்யும்? அதுவும் எத்தனை வருடங்களுக்குப் பிறகு போகிறார்களோ?

அங்கிருந்த கூட்டத்தில் ஆசியர்கள் அல்லாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். எங்கும் இடுங்கிய கண்களுடன் புரியாத மொழியில் பேசிக்கொண்டிருக்கும் கூட்டத்துடன் ஐக்கியமானேன். உப்பிய கன்னங்களுடன் ‘கொளுக்மொளுக்’ குழந்தைகள் அழகு. இத்தனை குழந்தைகளும் என்னுடன் பயணிக்கப் போகிறார்களோ? கடவுளே! நன்றாக தூங்கட்டும் என்று வேண்டிக்கொண்டேன். அங்கிருந்த உணவகங்களில் கூட வகைவகையான நூடுல்ஸ்களை பேப்பர் கப்புகளில் சூடாக்கிக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். பசிக்கவே, பீட்சா வாங்கிச் சாப்பிட்டேன். அந்தப் பகுதி முழுவதும் ஆசியாவிற்குச் செல்லும் விமானங்கள் போல! 98 சதவிகிதம் ஆசிய முகங்கள் தான். போனால் போகிறதென்று அங்கொன்றும் இங்கொன்றுமாய் வெள்ளை, கருப்பு, இந்திய முகங்கள். ரெஸ்ட்ரூம்களில் கூட வால்பேப்பராக ஆசியக் கோவில்களின், அரண்மனைகளின் விளம்பரப்படங்கள் தான்! ஆச்சரியமாக இருந்தது. எத்தனை முறை இந்தியா சென்றிருப்போம். அந்தப் பகுதிகளில் இப்படி பார்த்த ஞாபகம் இல்லை! ஒருவேளை இப்பொழுது மாறியிருக்கலாம். ஹ்ம்ம்.

எப்படா கூப்பிடுவார்கள் என்று காத்திருந்த தருணத்தில் நள்ளிரவு 12.25க்கு அழைப்பு விடுத்தார்கள். இந்தக் குழந்தைகள் எல்லாம் தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தார்கள்! முதலில் அதிக விலை கொடுத்து பயணச்சீட்டு வாங்கியவர்கள், பின் வயதானவர்கள், குழந்தைகளுடன் வந்திருந்தவர்களை வரிசையாக அனுமதித்து, பின் என்னைப் போன்றவர்கள் ஏறவும் அவரவர் இடங்களைத் தேடி அமர்ந்து கொண்டோம். விமானம் ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டது . அடுத்த விமானத்தை உடனே பிடிக்க வேண்டும் என்ற அவசரம் இல்லாததால் நானும் கவலைப்படவில்லை.

ஒவ்வொரு இருக்கையிலும் போர்வை, தண்ணீர் பாட்டில், பேப்பர் செருப்பு வைத்திருந்தார்கள்! அனைவரும் தாங்கள் அணிந்திருந்த ஷூக்களை கழற்றிவிட்டு பேப்பர் செருப்புகளைப் போட்டுக் கொண்டார்கள். இத்தனை வருட விமானப் பயணத்தில் முதல்முறையாக நான் கண்டது இந்த பேப்பர் செருப்பு. கொரியர்கள் வீட்டில் அணிவதற்கென்றே செருப்புகளைப் பயன்படுத்துவார்கள் என்று தெரியும். அதை விமானத்தில் கூட கடைப்பிடிக்கிறார்கள் என்பது புதிய விஷயம்! காலை நன்றாக நீட்டி அமரும்படி வசதியான இருக்கை வசதி. ஒருவேளை கடைசி வரிசை என்பதால் அப்படி இருந்ததா தெரியவில்லை. நிம்மதியாக இருந்தது.

நியூயார்க்கிலிருந்து விமானம் புறப்படும் வரை ஒன்றும் சொல்ல முடியாது. அத்தனை விமானங்கள் ‘ரன்வே’யில் வரிசை கட்டி நின்று கொண்டிருந்தன. கருமேகங்கள் கலைந்து நட்சத்திரங்களுடன் ஜொலித்துக் கொண்டிருந்தது வானம். மெதுவாக ஊர்ந்து சென்று ஒருவழியாக மேலேறி பறக்க ஆரம்பித்துவிட்ட விமானத்திலிருந்து மின்னொளியில் ஜொலித்துக் கொண்டிருந்த நகரம் மெல்ல மெல்ல மறைய, “முருகா! பத்திரமா என்னைய கொண்டு போய் கொரியா சேர்த்துடுப்பா” வேண்டிக்கொண்டு கண்ணயர்ந்தேன்.

புறப்பட்ட ஒரு மணிநேரத்திற்குள் சாப்பாடு வாசம் மூக்கைத் துளைக்க, சைவ உணவைக் கேட்டு வாங்கிக்கொண்டேன். ஜீரா சோறு, பட்டாணி, பீன்ஸ் மசாலா, காய்கறி சாலட், தயிரில் கலந்த வெள்ளரி, திராட்சை, பன், பட்டர், உரித்து வைத்த ஆரஞ்சு என்று அமர்க்களமாக இருந்தது. எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டு எப்படித் தூங்கிப்போனேன் என்று தெரியவில்லை. நல்ல தூக்கம். நடுவே எழுந்தால் “இப்பொழுதுதான் ஸ்னாக் கொடுத்துவிட்டுப் போனார்கள். நீங்கள் நன்றாகத் தூங்கிக்கொண்டு இருந்ததால் எழுப்பவில்லை” என்று பக்கத்து இருக்கை சீன இளைஞன் சொன்னதும் அங்கே வந்த பணிப்பெண்ணிடம் அவரே “இவர்களுடைய ஸ்னாக்கை இப்பொழுது கொடுக்கலாம்” என்றவுடன் அழகியும் உடனே உள்ளே சென்று சாண்ட்விச் ஒன்றைக் கொடுத்துவிட்டுப் போனாள். சாப்பிடலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருப்பதற்குள் வாய்க்குள் லபக்கியிருந்தேன். நன்றாகத்தான் இருந்தது😀

பாதி தூரத்தைக் கடந்துவிட்டிருக்கிறோம் போலிருக்கிறது. நடந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி ஒரு அரைமணிநேரத்திற்கு நடந்து கால், கைகளை ஆட்டி இன்னும் ஏழு மணிநேரமா என்ற அயர்ச்சியுடன் மீண்டும் தூங்கி விட்டேன். முன்வரிசையில் இருந்த குழந்தை அழுதுகொண்டே இருந்தது. என் அருகில் அமர்ந்திருந்த சீன இளைஞன் திருமணத்திற்குப் பிறகு இப்பொழுதுதான் சீனாவிற்குச் செல்வதாகக் கூறினான். அவனுடைய மனைவியும் இரு குழந்தைகளும் முன்வரிசையில் இருக்க, மாமியாருடன் பின் வரிசையில் இருக்கை கேட்டு அமர்ந்திருந்தான். 5 வயதான முதல் குழந்தை வழக்கம் போல அப்பாவியாய் இருந்தது. இரண்டு வயது மகன் தான் அழுதுகொண்டே எல்லோரையும் எரிச்சலாக்கிக் கொண்டிருந்தான். விமானப் பணிப்பெண்ணும் அவன் செய்த அக்கப்போரைக் காணச் சகிக்காமல் சிரித்துக்கொண்டே ஸ்னாக்ஸ்-களைக் கொடுத்து சமாதானப்படுத்த முயன்றாள். ம்ஹூம்! எதுக்கும் மசியவில்லையே அவன். நேர்த்தியாக உடை, சிகை அலங்காரம், நகப்பூச்சு என்று மாடர்ன் மனோரமா ஆச்சி போன்றிருந்த பாட்டியும் சாந்தப்படுத்த முயன்று “இவன் எப்பவும் இப்படித்தான்” என்று சலித்துக்கொண்டாள். தூக்கத்தில் இருந்த மனைவி கணவனைப் பார்த்து முறைத்துக்கொண்டே மகனை சமாதானப்படுத்தினாள். ஆனாலும் அவன் எழுந்து நின்று கூப்பாடு போட்டு…அடேய் 😡

என்னைச் சமாதானப்படுத்தும் வகையில் இந்தியாவைப் பற்றி பேசிக்கொண்டே வந்தான் பக்கத்து சீட் ஆசாமி. இந்தியாவில் சுற்றுலா வந்த பெண்மணியை ஏதோ ஒரு ஊரில் பாலியல் வன்முறை செய்தார்களாமே உண்மையா? என்றான். ஆமாம் என்றவுடன், “இதே சீனா என்றால் கடுமையான தண்டனை கொடுத்திருப்பார்கள். ஏன் உங்கள் அரசு செய்யவில்லை?” “செய்தார்கள். செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.” சீனா மாதிரி கடுமையான சட்டங்கள் இருந்தாலும் பாலியல் வன்முறை செய்தவன் இளைஞன் அதுவும் சிறுபான்மையினன் என்றால் தையல் இயந்திரம் கொடுக்கச் சொல்லும் மெழுகுவர்த்தி மேரியம்மாக்கள் நிறைந்த நாடுன்னு எப்படி சொல்ல முடியும்?

அப்படியொரு துன்பியல் சம்பவம் நடந்திருக்கக் கூடாது. சுற்றுலா செல்பவர்களும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். நியூயார்க்கில் எல்லா பகுதிகளுக்கும் எல்லா நேரமும் செல்ல முடியாது. அதுபோலத்தான். இரவில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் கூடாரம் போட நியூயார்க்கிலும் முடியாது. அதற்கென இருக்கும் பகுதிகளில் அனுமதி பெற்றுத்தான் தங்க முடியும். இத்தகைய சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும்.

“இப்படி இருந்தால் எப்படி சுற்றுலா வருவார்கள்?”

“அதெல்லாம் வருகிறவர்கள் வந்து சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். சுற்றுலாவினரின் பாதுகாப்பு விஷயத்தில் அரசு இன்னும் முனைப்பாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை” என்றேன்.

பிறகு அவனுடைய நிறுவனத்தில் வேலை பார்க்கும் இந்தியர்கள், நியூயார்க் வாழ்க்கை என்று பேச்சு திசை மாறியது. எதற்கு சியோல் போக வேண்டும்? அங்கே எல்லாமே விலை அதிகம். சீனாவில் எல்லாமே குறைந்த விலையில் கிடைக்கும். கொரியர்களின் உணவுகள் எங்கு சென்றாலும் ஒரே மாதிரி இருக்கும். சீனாவில் ஒவ்வொரு இடத்திலும் உணவு வகைகள் மாறுபடும் என்று ஓவராக சீன துதி பாடினான்.

சரி, ஏதாவது படத்தைப் பார்க்கலாம் என்று ஒன்றை ஆரம்பிக்க, தூக்கமும் கண்களைச் சுழற்ற, மீண்டும் ‘கொர்ர்ர்ர்’. இருமணிநேரங்கள் கடந்த பிறகு வரைபடத்தைப் பார்த்தால் நியூயார்க்கிலிருந்து கனடா மீது பறந்து அலாஸ்கா வழியாக பசிபிக்கின் மேல் பறந்து கொண்டிருந்தது விமானம். ஜப்பானை கடந்ததும் கொரியா வந்துவிடும். பறக்க ஆரம்பித்த நேரத்திலிருந்து ஒரே கும்மிருட்டு தான். இன்னும் சில மணிநேரங்களில் ஆதவனின் உதயத்தைப் பார்க்கலாம் என்று ஆசையோடு காத்திருந்தேன். விமானம் தரையிறங்க இரண்டு மணிநேரம் இருக்கும்பொழுது காலை உணவாக தயிர், அழகாக உரித்து வைத்த ஆரஞ்சு சுளைகள், ப்ளூபெர்ரி மஃபின், டீ கொடுத்தார்கள்.

உறக்கம் களைந்த நீல வானில் இளஞ்சிவப்பு கதிர்களுடன் உலா வர யத்தனித்துக் கொண்டிருந்தான் கதிரவன். விமானம் தாழ்வாகப் பறக்க ஆரம்பித்தது. முப்புறமும் கடல் சூழ்ந்த கொரியன் தீபகற்பம் மேலிருந்து பார்க்கக் கொள்ளை அழகு! மேற்கில் Yellow Sea, கிழக்கில் Sea of Japan தெற்கில் East China Sea என 3358 தீவுகளைக் கொண்ட நாடாம்! சில தீவுகளில் மக்கள் வசிப்பதில்லை. பல தீவுகள் இயற்கை எழிலுடன் இருப்பதாக அங்கு சென்ற பிறகு தெரிந்து கொண்டேன்! மேலிருந்து பார்க்கையில் நகரத்தில் மிகப்பெரிய ‘ஹான்’ ஆறு வளைந்து நெளிந்து ஓடிக்கொண்டிருந்தது. அதிகாலையில் சாலைகளில் அதிக வண்டிகள் தென்பட்டன. இவர்களும் வேலைக்கு அதிகாலையில் ஓடும் வர்க்கத்தினர் போல! மலைகளும் சமவெளிகளுமாய் கடல் சூழ்ந்த தென்கொரியா மனதை மெல்ல மெல்ல ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.

ஒரு மணிநேரம் தாமதமாக ‘இஞ்சான்’ சர்வதேச விமான நிலையத்தில் காலையில் 6.30மணிக்குத் தரையிறங்கிய பொழுது ஆல்பனி போலவே ஊரும் குளிருடன் இருந்தது. நல்லவேளை! பனிக்கால ஜாக்கெட் போட்டுக்கொண்டு சென்றேன். நாட்டிற்குள் செல்ல விண்ணப்பிக்க வேண்டிய படிவங்களை நிரப்பிக்கொண்டு தானியங்கிகளில் விவரங்களை ஏற்றி நிமிடங்களில் குடியேற்றம் தொடர்பான வேலைகள் முடிந்தன. வாவ்! பாஸ்போர்ட்டில் தென்கொரியா உள்ளே செல்ல சீல் வைத்து அனுமதி கொடுத்து விட்டார்கள். விமான நிலையம் சுத்தமாக ‘பளபள’வென்று இருந்தது!

சியோலில் இருந்து ஒரு மணிநேர தொலைவில் இருக்கிறது ‘இஞ்சான்’ நகரம். உயர் அடுக்குமாடிக் கட்டிடங்களுடன் தென்கொரியாவின் பெருநகரங்களில் ஒன்று. வெளியே வந்தவுடன் எனக்கு முன்பே வேறொரு விமானத்தில் ஒரு மணிநேரத்திற்கு முன்பாகவே வந்து சேர்ந்திருந்த மகளைக் கண்டதும் ஒரே சந்தோஷம். இப்பொழுது ‘ஜெஜூ’ தீவு செல்ல உள்நாட்டு ‘கிம்போ’ விமான நிலையம் செல்ல வேண்டும். அதற்கு சப்வே ரயிலைப் பிடிக்க வேண்டும். ஆங்கிலத்தில் வழித்தடங்கள் பற்றின விவரங்கள் தெளிவாக எழுதப்பட்டிருந்தன. பயணச்சீட்டு வாங்க தானியங்கி கவுண்டர்கள்தான். அங்கிருந்தவர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை. ஆகா! இப்படி இருந்தால் பயணம் எப்படி இருக்கப் போகிறதோ என்று கவலையாகிவிட்டது எனக்கு. “அதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லைம்மா.” உடனே கூகுளில் ஆங்கிலத்தில் தட்டி அது கொரியனில் மாற்றிவிட, அதைக் காண்பித்தவுடன் அவர்களும் புரிந்துகொண்டு பதிலளிக்கிறார்கள். எப்படியோ டிக்கெட் வாங்கிக்கொண்டு ரயிலைப் பிடித்துவிட்டோம். காலை நேரம் என்பதால் கூட்டம் அதிகமில்லை. தூக்கக் கலக்கத்தில் பயணிகள் மட்டுமே இருந்தார்கள். நகரத்திற்குள் செல்லச் செல்ல வேலைக்குச் செல்லும் பொதுமக்களும் ஏற ஆரம்பித்தார்கள்.

சுத்தமாக இருந்த ரயிலில் அத்தனை அமைதியுடன் பயணிக்கிறார்கள். சாலையோர மரங்கள் பனிக்காலத்தில் இருந்து விழித்துக் கொள்ள ஆரம்பித்திருக்கின்றன. ஆறு, ஏரிகள், வயல்வெளிகள் என்று கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சிகளைக் கடந்து விமானநிலையம் வந்து சேர்ந்தோம். உள்ளே பள்ளி மாணவ, மாணவியர் கூட்டம். அனைவரும் சீருடை அணிந்திருந்தார்கள்! நெற்றி முழுவதும் மறைத்தபடி அடர்ந்த தலைமுடியுடன் கட்டிளங்காளைகள் என்றால் பாதி நெற்றி தெரியும் படி முடியைக் கத்தரித்தும் குதிரை வால் அழகிகளுமாய் இளம்பெண்கள் என ஒரே கே-டிராமா முகங்கள்😜 அனைவர் தோள்களில் இருந்த புத்தகப்பைகளில் ‘plush toy’ பொம்மைகள் சிறிதும் பெரிதுமாக தொங்கிக்கொண்டிருந்தன! கைகளில் ஆப்பிள், அவர்கள் ஊர் அலைபேசிகள்! காதில் இயர்போன்கள். இளமை கொப்பளிக்க, சிரிப்பும் கேலியும் கிண்டலுமாகப் பார்க்கவே இனிமையாக இருந்தது. இளமையெனும் பூங்காற்று வீச ஒரே ஜில்ஜில் தான் 😍😍😍

நாங்கள் பயணிக்கவிருந்த ‘ஏர் சியோல்’ கவுண்டருக்குச் சென்று ஜன்னலோர இருக்கையைக் கேட்டு வாங்கி வந்தாள் என் செல்லம். சிறு விமானம் தான். பறக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் உயர் கட்டட நகரம் தொலைந்து தீவுகள் தெரிந்தன. பல தீவுகளில் தொழிற்சாலைகள் இருந்தன. பசுமையான விளைநிலங்களுடன் தீவுகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருந்தன. மீன்பிடி தொழிலும் சிறப்புற நடந்துகொண்டிருந்தது. செழிப்பான நாடு தான்! ஒரு மணிநேரத்தில் ஜெஜூ தீவில் விமானம் தரையிறங்க, கனவுத்தீவிற்கு வந்தே விட்டோம் என்ற ஆனந்த நினைவுடன் வெளியே வந்தோம். என்னைப் போன்ற கொரியன் நாடகப் பைத்தியங்களுக்கு ‘ஜெஜூ தீவு’ என்றால் ஒரு மயக்கம் இருக்கும். அவர்களுக்குப் புரியும் என்னுடைய மனவோட்டம்😍

தீவு கொஞ்சம் ‘ஜில்’லென்றுதான் இருந்தது. வாடகை வண்டியை ஏற்கெனவே பதிவு செய்து வைத்திருந்தாள் மகள். அந்த இடத்திற்குச் செல்ல ‘ஷட்டில் பஸ்’ வசதிகள் இருந்தன. அலுவலகத்தில் எங்களுடைய சர்வதேச, அமெரிக்க ஓட்டுநர் உரிமங்களை, பாஸ்போர்ட் தகவல்களை வாங்கிக்கொண்டார்கள். வண்டி வாடகையுடன் காப்பீட்டுக்கான தொகையையும் சேர்த்தே வசூலித்து விடுவதால் அதற்கென தனியாக இன்சூரன்ஸ் வாங்கும் வேலையில்லை. ஒருவிதத்தில் நிம்மதி. எங்காவது இடித்தால்கூட கவலைப்பட வேண்டியதில்லை. 4 பேர் அமர்ந்து செல்லும் ‘கியா 4 சீட்டர் பாக்ஸ் கார்’ ஒன்றைக் கொடுத்தார்கள். இருவருக்கு ஓகே. சிறிய கார். ஓட்டுவது எளிதாக இருக்கும். ஊரைப் பற்றின எந்த அறிமுகமும் இல்லை. எந்தத் தைரியத்தில் வண்டியை எடுத்தோம் என்றே தெரியவில்லை. கொஞ்சம் பதட்டமாகத்தான் இருந்தது. முதன்முதலாக நானும் மகளும் சென்ற பயணம். பொதுவாக வெளிநாட்டிற்குச் சென்றால் ஈஷ்வர்தான் வண்டியை ஓட்டுவார்.

நான் யோசித்துக் கொண்டிருக்கையில் “நான் முதலில் ஓட்டுகிறேன். நீ ரெஸ்ட் எடுத்துக்கொண்டு வாம்மா” என்று மகள் காரை ஒட்டி வர, நாங்கள் தங்கியிருந்த இடத்திற்குப் பயணத்தை ஆரம்பித்தோம். தீவின் வடக்கே விமான நிலையம் என்றால் நாங்கள் தங்கப் போகும் இடமோ அதன் நேர் எதிரே தெற்கில். தூரம் குறைவுதான். ஆனால் வளைந்து வளைந்து செல்லும் குறுகலான சாலையில் வந்துசேர நாற்பது நிமிடங்கள் ஆயிற்று! தீவிற்குள் இப்படித்தான் இருக்குமோ?

“பார்த்துப் போ”. “அம்மா! நீ வேடிக்கைப் பார்த்துட்டே வா. உன்னைய பத்திரமா கூட்டிட்டுப் போறேன்” என்றாள். நல்லதா போச்சு என்று நானும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். வெயில் கொஞ்சம் இருந்திருக்கலாம். ஜெஜூவில் அடிக்கடி மழை கொட்டும். அதுவும் மழைக்காலம் வேறு! கேட்கவா வேண்டும்? நாங்கள் இருக்கும் வரை மழை பொழியாமல் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

வழியெங்கும் விதவிதமான இதுவரையில் பார்த்திராத மரங்களும் செடிகளும் கொட்டிக்கிடந்தன. ‘செர்ரி’ மலர்கள் பூக்க ஆரம்பித்திருந்தது சில இடங்களில். நன்றாகப் பூத்துப் புன்னகைத்துக் கொண்டிருந்தது பல இடங்களில். மரங்களில் இலைகள் இருந்திருந்தால் அந்த வனமே அத்தனை அழகாக இருந்திருக்கும்! ஏப்ரல் மாத பயணங்களின் சிறு இழப்பு இதுவாகத்தான் இருக்கும். என்ன செய்வது? கோடையில் பயணம் செய்ய அநியாயத்திற்கு பொறுமை வேண்டும். எங்கும் கூட்டம் இருக்கும். இனி ஆகஸ்ட், செப்டம்பரில் பயணிக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

ஆரம்பத்தில் சாலை விதிகளைப் புரிந்துகொள்வது கடினமாக இருந்தது. பின் பழகிவிட்டது. ‘ஜிபிஎஸ்’ எனும் வழிகாட்டி இல்லாமல் இருந்திருந்தால் எத்தனை முறை வழி தவறி இருப்போம்? வியந்தபடி ஊருக்குள் நுழைந்ததும் நேர்த்தியற்ற, பழையதும் புதிதுமாய் வீடுகள் இருந்த குறுகலான தெருவுக்குள் முன்பதிவு செய்திருந்த தங்குமிடத்திற்கு வந்து சேர்ந்தோம். வரவேற்பறையில் இருந்த கொரிய இளைஞன் பணிவாக விவரங்களை வாங்கிக்கொண்டு காலை உணவிற்கும் சேர்த்து அறையை பதிவு செய்திருந்ததால் அதற்கான சீட்டுகளையும் கொடுத்து காலை 7-9.30க்குள் அங்கு வந்து உண்ணலாம் என்று கூறினான். பணத்தைச் செலுத்திவிட்டு தங்கவிருந்த அறைக்குள் நுழைந்தோம். அமெரிக்காவைப் போலவே இங்கும் நம் பெட்டிகளை நாமே தான் எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். இந்தியாவில் தான் பெட்டிகளை எடுத்துச் செல்ல ஆட்கள் இருக்கிறார்கள்!

இரு படுக்கைகளுடன் பெரிய அறை! விசாலமான ஜன்னல். திரைச்சீலையை விலக்கினால் எதிரே பனிச்சிகரத்துடன் பிரபலமான ‘ஹல்லசான்’ மலை! தென்கொரியாவின் உயர்ந்த சிகரம்! ஆகா! அங்கே மலையுச்சிக்குச் செல்ல முன்பதிவு செய்து வந்திருக்கிறேன். பார்க்கலாம்.

ஒரு மணி நேரம் சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் அருவிகளைப் பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்பினோம். மகள் பசிக்கிறது என்றவுடன் கண்ணுக்கு முதலில் தெரிந்தது மெக்டொனால்ட்சும் ஸ்டார்பக்சும் தான். அடடா! இங்கு வந்தும் நமக்கு இதுதான் தெரிகிறது பார் என்று உள்ளே நுழைந்தோம். உலகெங்கிலும் மெக்டொனால்ட்ஸில் ஆர்டர்களை முன்கூட்டியே கியோஸ்கில் போடும் வசதிகள் வந்துவிட்டன போல! உணவு தயாரானவுடன் அழைக்கிறார்கள். ‘ஷாங்காய் பர்கர்’ அத்தனை சுவையாக இருந்தது. போர்ச்சுகலில் கூட பர்கரின் சுவை நன்றாக இருந்தது. ஆக, அமெரிக்காவில்தான் பர்கரின் சுவை குறைந்து இருக்கிறது. அன்று இன்னொன்றும் தெரிந்தது – கொரியர்கள் காரம் அதிகமாக சாப்பிடுகிறார்கள்😛

சாலையோரங்களில் கைக்கு எட்டும் உயரத்தில் பழங்களுடன் ‘டேன்ஜரின்’ மரங்கள். ஆனால் யாரும் பறிக்க மாட்டார்கள் போலிருக்கிறது. வெளியே விளக்குகள் போட்ட கடைகளில் பெரிய பெரிய மரப்பெட்டிகளில் பழங்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். ஜெஜூ டேன்ஜரின் பழங்கள் அத்தனை பிரபலமாம்!

முதலில் நாங்கள் சென்றது ‘ஜாங்பேங்'(Jeongbang) அருவி. நாங்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து 10 நிமிடத்தில் வந்துவிட்டது. நடந்து கூட சென்றிருக்கலாம் போல! ஜெஜூவில் பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் அருவிநீர் கடலில் (East China Sea) நேராக கலப்பதுதான். 23மீட்டர் உயரத்தில் இருந்து கடலை நோக்கி விரைகிறது அருவி நீர். அன்று மாலை என்பதால் கூட்டம் ஓரளவுதான் இருந்தது. மழைக்காலங்களில் சீறிப்பாயும் அருவியைப் பார்க்க தடை செய்துவிடுவார்களாம். நல்ல வேளை! அப்படி ஏதும் நடக்கவில்லை. அருவியைப் பார்க்க கட்டணம் வசூலிக்கிறார்கள். வண்டிகளை நிறுத்த வசதிகள் இருக்கின்றன. அதற்குத் தனியாக கட்டணம் எல்லாம் வசூலிக்கவில்லை. அங்கிருந்து சிறிது தூரம் நடந்து சென்று 130 படிகள் கீழிறங்கிச் சென்றால் ‘ஜோ’வென கொட்டும் அருவியைக் காண முடிகிறது. வேகமாக இறங்கும் பொழுதே மேலேறி வர வேண்டுமே என்ற பயமும் தொற்றிக்கொண்டது. வழியெங்கும் நிழல் தரும் மரங்கள். அமர்ந்து நிதானமாகச் செல்ல ஆங்காங்கே இருக்கை வசதிகள். அதன் சூழல் மிக அழகாக இருந்தது. ஜில்லென்ற காற்று வீச, பைன் மரங்களுடன் பாறைகளும், நீலவானம் பிரதிபலித்த கடற்காட்சியும் அருமை. அருவி அருகே செல்ல முடியாது. ‘ரிஸ்க்ன்னா ரஸ்க் சாப்பிடற மாதிரி’ என்று சொல்பவர்கள் கரடுமுரடான பாறைகளைக் கடந்து கடலை நோக்கி ஓடும் நீரில் கால் நனைத்துவிட்டு வரலாம். வழுக்கும் பாறைகள் மேல் நின்று கொண்டு இன்ஸ்டாவில் படங்களைப் போட தலை, முகத்தைக் கோணலாக்கி, கைவிரல்களைக் காட்டிக்கொண்டு வழக்கம் போல ஒரு கூட்டம்😁 பாறைகள் நிரம்பிய பாதை என்பதால் கவனமாக இருக்க வேண்டியிருந்தது.

அந்த ரம்மியமான சூழலில் சிறிது நேரம் நின்று ரசித்துக் கொண்டிருந்தோம். நம்மூரில் வடை, பஜ்ஜி விற்பதைப் போல ஆழ்கடலில் பிடித்த ஜீவராசிகளை இரு வயதான பெண்கள் விற்றுக் கொண்டிருந்தார்கள்! பெண்களே கடலில் மூழ்கி பிடிக்கும் அபூர்வ மீன் வகைகள். அங்கேயே கல்லின் மீது அமர்ந்து சிலர் சாப்பிட்டுக் கொண்டும் இருந்தார்கள். மூச்சு வாங்க படிகள் ஏறி வண்டிகள் நிறுத்துமிடத்திற்கு வந்து சேர்ந்தோம்.

வழியில் இந்தியர்கள் இருவரைப் பார்த்தோம். அதிலும் ஒருவர் பார்க்க நம்மூரைப் போல தெரிந்தார் . அவர்களும் சினேகமாகப் புன்னகைக்க, நாங்களும் ஹாய் சொல்லி, அவர்களைப் பற்றி விசாரிக்க, ஒருவர் விழுப்புரத்தில் இருந்து வந்திருக்கிறார். இன்னொருவர் குஜராத். இருவரும் ஜெஜூ பல்கலையில் ஆராய்ச்சி மாணவர்களாம்! 50 இந்திய மாணவர்கள் படிக்கிறார்கள். பத்து வருடங்களாக இருக்கிறோம் என்று ஆச்சரியப்படுத்தினார்கள்! மொழியைக் கற்றுக்கொண்டீர்களா என்று கேட்டால் எதுவும் தெரியாது என்றார்கள். எப்படி குடும்பத்தை வைத்துச் சமாளிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, விழுப்புரத்துக்காரர் குழந்தை பள்ளியில் மிகவும் சிரமப்பட்டதால் மனைவி, குழந்தையை ஊருக்கு அனுப்பிவிட்டதாகக் கூறினார். பங்களாதேஷி கடைகளில் உணவுப் பொருட்களை வாங்கிக்கொள்கிறார்கள். அத்தனை பங்களாதேசிகள் குடியேறியிருக்கிறார்கள்! மெல்லத் திறந்தது கதவு அமலாக்களுடன் ஹாயாக ஆண்கள் இரு வண்டிகளில் இறங்கியதையும் கவனித்தோம். ம்ம்ம்ம்

அருகில் இருக்கும் இடங்களைப் பற்றின தகவல்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டு நம் மக்களிடம் இருந்து விடைபெற்றோம்.பார்றா! ஜெஜூ தீவில் கூட நம் மக்களைப் பார்க்க முடிகிறது. தமிழில் பேச முடிகிறது என்று பேசிக்கொண்டே அருகில் இருந்த ‘சோஜாங்பேங்’ (Sojeongbang) அருவிக்குச் சென்றோம். பார்த்தவுடனே சினேகமாகப் பேசியதைப் பற்றி வியந்து பாராட்டினாள் என் மகள். என்ன இருந்தாலும் நம் மக்கள் நம் மக்கள் தான். வெளிநாடுகளில் அவர்களைப் பார்த்ததும் இனம் புரியாத பாசம் தான்.

பேசிக்கொண்டே மரங்கள், செடிகள் அடர்ந்த பாதைகள் வழியாக சோஜாங்பேங் அருவிக்குச் சென்றோம். சிறிய அருவி தான். ஜெஜூ தீவு எங்கும் எரிமலைப் பாறைகள். அதனூடே அருவியைப் பார்க்கையில் வித்தியாசமாக இருந்தது. இந்த அருவிக்குச் செல்ல கட்டணம் ஏதும் கிடையாது. 15 நிமிடங்களில் அருவி அருகே சென்று விட முடிகிறது. சிறிது நேரம் அங்கே சுற்றி விட்டுத் திரும்பினோம். வழியில் அழகான மஞ்சள் நிற ‘கனோலா’ மலர்கள் பூத்து நிற்கும் தோட்டத்தில் படங்களை எடுத்துக் கொண்டோம். மார்ச்-ஏப்ரல் மாதத்தில் தீவில் பல இடங்களில் பூத்திருக்கும் பூக்களைப் பார்க்கவே ஏராளமான சுற்றுலாவினர் இங்கு படையெடுக்கிறார்கள்!

கடைக்குச் சென்று டேன்ஜெரின் பழச்சாறு வாங்கிக்கொண்டோம். கடைகளில் ஜீராவில் முக்கி எடுத்த ஸ்ட்ராபெர்ரிகளை குச்சியில் கோர்த்து அழகாக வைத்திருந்தார்கள். தாய்லாந்தில் கிடைப்பது போலவே இங்கும் குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்த ஜில் இளநீர் கிடைக்கிறது. அங்கேயே பிழிந்தெடுத்த டேன்ஜெரின் பழச்சாறு, பரிசுப் பொருட்களை விற்கும் கடைகள் என்று அங்கு வந்திருப்போரை வாங்க வைத்துவிடுகிறார்கள். ஐந்து மணி தான். இன்னும் வெளிச்சமாகவே இருந்தது. அருகிலிருக்கும் பிரபலமான ‘Cheonjiyeon’ அருவியையும் பார்த்துவிடலாம் என்று கிளம்பினோம்.

வழியெங்கும் வெள்ளையும் பிங்க் வண்ணத்திலும் செர்ரி மலர்கள் பூத்துக் குலுங்கிய மரங்கள். அழகோ அழகு! இன்னும் சில மரங்களில் மலர்கள் துளிர்க்கவில்லை. வண்டி நிறுத்தும் இடத்தில் கடைகள் நிறைய இருந்தன. உள்ளே சென்று அருவியைக் காண கட்டணம் வசூலிக்கிறார்கள். சீராக அமைக்கப்பட்ட பாதைகள், நிழல் தரும் பெரு மரங்கள். இதுவரையில் பார்க்காத மரவகைகள் அத்தனை இருக்கின்றன அங்கே! பேசாமல் ஒவ்வொரு மரத்தின் இலைகளையும் எடுத்துக்கொண்டு வந்திருக்கலாம் என்று இப்பொழுது தோன்றுகிறது! பள்ளி நாட்களில் இலைகளைச் சேர்த்து வைத்து தாவரவியல் ஆசிரியரிடம் காண்பித்து விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டிருந்தேன். ம்ம்ம்…

நுழைவாயிலில் ‘Dol Hareubang’ எனப்படும் தீவின் பாரம்பரியமான கல் சிலைகள் வரிசையாக இருந்தன. இவை ஜெஜூ தீவின் அடையாளமாகவும் தொன்மையான வரலாற்றுச் சின்னமாகவும் விளங்குகின்றன. தீவில் எங்கு பார்த்தாலும் எரிமலைக் குழம்புப் பாறைகளால் செய்யப்பட்ட இந்த முப்பாட்டன் சிலைகளைப் பார்க்கலாம். பெரிய கண்கள், வட்ட முகம், இரு கைகளையும் வயிற்றில் வைத்துக் கொண்டிருப்பது போல் காணப்படும் சிலைகள் தொப்பி போன்ற தலைப்பாகையுடன் தீவைக் காக்கும் காவலாளிகள் என்ற கதையும் இருக்கிறது. அதனால் நகரின் நுழைவாயில்களில் அதிகம் காண முடிந்தது.

இந்த அருவியைப் பார்க்க நல்ல கூட்டம். வழி நடுநடுவே ஓடைகள். அங்கே வண்ண வண்ண ‘ கொய் ‘ மீன்கள். சிறு சிறு அழகிய பாலங்கள். படங்களை எடுத்துக் கொண்டே இருக்கலாம். கும்பலாக ‘மாண்டரின்’ வாத்துகள்! வாவ்! வண்ணமயமான பறவை! படங்களில் மட்டுமே பார்த்திருந்ததை நேரில் பார்க்கையில் அத்தனை சந்தோஷமாக இருந்தது. ஒன்றல்ல இரண்டல்ல. ஒரு சிறு கூட்டமே அங்கிருந்தது!

இரவில் ஒளிவிளக்குகள் மின்ன அருவி அழகாக இருக்கும் என்றார்கள். இந்த இடத்திற்கு ஒரு கதை இருக்கிறது. ஏழு தேவதைகள் விண்ணிலிருந்து இறங்கி அருவியின் குளத்தில் குளிக்க வந்ததால் இதை God’s Pond என்கிறார்கள்! “விண்ணும் மண்ணும் சந்திக்கும் இடம்” Cheon – வான், ji – மண், Yeon – சேரும் இடம் எனும் அர்த்தமும் கொண்டது என எழுதி வைத்திருந்தார்கள். அருவியைச் சுற்றி காடுகள், அரியவகை மரங்கள் இருக்கின்றன. ‘லவ்வர்ஸ் பாரடைஸ்’ என்பதால் இரு விரல்களில் காதலைச் சொல்லிப் படமெடுத்துக் கொண்டிருந்தது பெருங்கூட்டம் ஒன்று😍😍😍 ஆசை தீர சுற்றிச்சுற்றி வந்து வளைத்து வளைத்துப் படங்களையும் வீடியோக்களையும் எடுத்துக்கொண்டோம் .

மாலை மங்கும் வேளையில் “இரவு உணவுக்கு ‘ஃபுட் மார்க்கெட்’ போகலாம்மா . அருகிலேயே இருக்கிறது” என்று கூறினாள் மகள். சரி என்று கிளம்பி விட்டோம். சீக்கிரமே சாப்பிட்டுவிட்டுத் தூங்கிவிடலாம். நாளை காலையில் நீண்ட பயணம் இருக்கிறது என்று கிளம்பி அறைக்குச் சென்றுவிட்டோம்.

நாங்கள் தங்கியிருந்த ‘Seogwipo’ ஊர் கொஞ்சம் பழமையும் புதுமையுமாய் ஒழுங்கற்றதுமாய், அழுக்காய் இருப்பது போல் தெரிந்தாலும் குப்பையை மட்டும் எங்குமே காணவில்லை! இந்தியாவில் திரும்பிய பக்கமெல்லாம் குப்பைகள் என்றால் இங்கே தேடினாலும் கிடைக்காது போலயே ! எங்கே ஒளித்து வைத்திருப்பார்களோ? தெருக்களில் குப்பைகளைப் பிரித்து மூடிகளுடன் கூடிய பெரிய பிளாஸ்டிக் கூடைகளில் போடும் வசதிகள் இருக்கின்றன. எச்சில் துப்பாத மனிதர்கள், தெரு நாய்கள், பன்றிகள் இல்லாத தெருக்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. அவ்வளவு ஏன்? வீடுகள் இருக்கின்றன. மனிதர்களே கண்ணில் படவில்லை! சாலைகளில் கேமராக்களை வைத்திருந்ததால் ஒழுங்காகச் சென்று கொண்டிருந்தார்கள். எங்களுக்குத்தான் இத்தனை மெதுவாகப் போகிறார்களே என்றிருந்தது. சிறிய ஊரில் அருகருகே மூன்று தேவாலயங்கள்! சிகப்பு வண்ணத்தில் சிலுவை மின்னிக் கொண்டிருந்தது. ஐந்து மணிக்கு மேல் தெருக்கள் அமைதியாகி விடுகின்றன!

‘ஃபுட் மார்க்கெட்’டிற்கு வழியைத் தேடி ஓரிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு நடக்கும் பொழுது மக்கள் தென்பட்டார்கள். அங்கிருந்து ஐந்து நிமிடத்திற்குள் ஒரு தெருவிற்குள் நுழைந்தால் ஒரே கடைகள். சுடச்சுட உணவு வகைகள். கூவிக் கூவி அழைக்கிறார்கள். ஒவ்வொரு உணவு வகைகளையும் செய்வதை நின்று பார்க்க வேண்டும் என்று ஆசை. பெயர்கள் எல்லாம் வித்தியாசமாக இருந்தன. வகைவகையான மீன்களைத் தொட்டியில் வைத்திருந்தார்கள். கோழிகள், நண்டு வகையறாக்கள் எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நாங்களும் எங்களுக்குத் தெரிந்த உணவை வாங்கிக்கொண்டு ஓரிடத்தில் அமர்ந்து சாப்பிட்டோம். வார இறுதி என்பதால் அத்தனை கூட்டமா? இல்லை இது தினமும் நடக்குமா என்று தெரியவில்லை. ஆசியாவின் உணவு கலாசாரம் போல! தாய்லாந்தில் கூட இப்படி தெருக்களில் கடைகளைப் பரப்பி மாலை முதல் இரவு வரை உண்டு களிப்பதைப் பார்த்தோம்.

கடைகளை வேடிக்கைப் பார்த்து பழங்களையும் வாங்கிக்கொண்டு அறைக்குத் திரும்பும் பொழுது மணி ஏழரை ஆகிவிட்டிருந்தது. முதல் நாளின் நீண்ட பயணம் தந்த களைப்பும் கனவுத்தீவிற்கு வந்துவிட்ட மகிழ்ச்சியுமாய் அன்றைய நாள் இனிமையாக, மறக்க முடியாத நாளாகிப் போனது. அடுத்த நாளின் பயணத்திட்டத்தை முடிவு செய்து விரைவில் தூங்கிவிட்டோம்.

No comments:

Post a Comment

Bye , bye ஜெஜு

பயணம் என்பது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது மட்டுமல்ல. நாம் அறிந்திருந்த உலகிலிருந்து எத்தனை வேறுபட்டு நிற்கிறது நம்மைச் சுற்...