ராமாயணம், மகாபாரதம் இதிகாச கதைகளை எத்தனை முறை வாசித்தாலும், பார்த்தாலும் சலிப்பதே இல்லை. முதன்முதலில் தொன்னூறுகளில் 'ராமாயணம்' தொடராக தூர்தர்ஷனில் வெளிவந்த பொழுது அதன் பிரம்மாண்ட காட்சிகளில் தொலைந்து போனது இன்றும் நினைவில் இருக்கிறது. ஒவ்வொரு ஞாயிறு அன்றும் தொடர் ஒளிபரப்பும் நேரத்தில் தெருவில் மக்கள் நடமாட்டமே இருக்காது அல்லது மிக குறைவாக இருக்கும். குடும்பங்களாக உட்கார்ந்து களித்த தொடர் அது. ஹிந்தியில் தான் ஒளிபரப்பினார்கள். ஆனாலும் ரசித்தோம். ஏனென்றால் பலவாறு கதைகளைக் கேட்டிருந்தோம். அதில் சீதையாக நடித்தவர் பாரளுமன்ற உறுப்பினர் ஆகும் அளவிற்கு மக்களின் அமோக ஆதரவு பெற்றிருந்தது.
பிறகு 'மகாபாரத்' வெளிவந்தது. பீமன், கர்ணன், துரியோதனன், அதுவும், கண்ணனாக நடித்தவர்கள் பிரபலமானார்கள். பிறகு விஜய் டிவியில் தமிழிலும் வெளிவந்து அதுவும் பிரபலமானது. ஒவ்வொரு தொடரிலும் நடிக்கும் கதைமாந்தர்கள் அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றார்கள்.அதனாலேயே இன்று வரையிலும் இத்தொடர்கள் பிரபலமாகவே இருக்கிறது. இருக்கும்.
சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸ்-ல் 'குருக்ஷேத்ரா' என்றொரு தொடர் வெளியாகியிருக்கிறது. 18 நாட்கள் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் நடக்கும் போரை மிக அழகாக தொகுத்து வழங்கியிருக்கிறார்கள். அனிமேஷன் என்பதால் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் கதையில் சற்றும் தொய்வு ஏற்படாமல் மிக அழகாக எடிட் செய்து கொண்டு சென்ற விதம் பாராட்டுக்குரியது. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தையும் போரில் கண்ணனின் பங்கையும் மிகமிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பின்னணி இசையும் கேட்க நன்றாக இருக்கிறது.
முதல் நாள் போரில் ஆரம்பித்து பாண்டவர்கள் ஹஸ்தினாபுரம் திரும்பி யுதிஷ்டிரர் அரியணை ஏறும் வரை செல்லும் இந்தத் தொடரை கண்டுகளியுங்கள். கதைகள் தெரிந்த குழந்தைகளும் ரசிப்பர். ஒரு தொடரில் அனைத்தையும் காண்பிப்பது சாத்தியமில்லை. அதுவும் தவிர, பல்வேறு திரிக்கப்பட்ட கதைகள் இருப்பதால் ஆர்வமுள்ளவர்கள் முறையான புத்தகங்களைத் தேடி வாசியுங்கள். தொடர்களில் காண கிடைக்காத காட்சிகள் ஏராளம் அதில் புதைந்து கிடக்கிறது.
"Education is the key to the development of a society."
பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் சத்திய வாக்கு! ஒரு சமுதாயம் உயர கல்வி அவசியம். அவர் மனதில் 25 வருடங்களுக்கு முன் தோன்றிய எண்ணம் நனவாகி 'AIM for Seva' என்ற அமைப்பாக உருவெடுத்தது. மலைவாழ் மக்களின் குழந்தைகள் தினமும் நான்கு மைல்கள் நடந்து சென்று கல்வி கற்க வேண்டிய சூழலை அறிந்து அவர்களுக்கு உதவ, பள்ளிகளுக்கு அருகிலேயே 'சத்ராலயா' எனும் இலவச தங்கும் இடங்கள் கட்டப்பட்டது. கூடவே, ஆரோக்கிய உணவும், உடைகளும், பாதுகாப்பான சூழலும், மருத்துவ வசதிகளும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டன.
2001ல் முதன்முதலாக மாணவர்களுக்கான தங்குமிடம் ஒன்று தமிழ்நாட்டில் அணைக்கட்டி மலைக்கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பெண் குழந்தைகளுக்காக ஒன்று என்று விரைவில் வளர்ந்து தற்பொழுது 95 உறைவிடப் பள்ளிகள் 17 மாநிலங்களில் உருவாகியுள்ளது. 3000 கிராமங்களில் இருந்து 4,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நான்கு முதல் 12ஆம் வகுப்புகள் வரை பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. 2002ல் இருந்து AIM for Seva அறக்கட்டளை வாயிலாக ஒன்பது பள்ளிகளும் ஒரு கல்லூரியும் உருவாகியுள்ளது. கிண்டர்கார்ட்டன் முதல் இங்கு படிக்கும் 5000 மாணவர்களுக்கு அரசு பாடத்திட்டங்களுடன் வாழ்க்கையில் முன்னேறவும் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ உதவும் வழிவகைகளும் கற்றுத்தரப்படுவது சிறப்பு.
நகர்ப்புற மாணவர்களைப் போலவே கிராமங்களில், தொலைதூரங்களில் வசிக்கும் வசதியற்ற மாணவர்களுக்கும் கல்வியை அளித்து நாட்டை முன்னேற்றுவதே இந்த அமைப்பின் நோக்கமாகும்.
25 வருடங்களில் 2 கோடி கிராமப்புற மக்களை அடைந்துள்ள இந்த அமைப்பின் வாயிலாக ஒவ்வொரு வருடமும் 10,000 மாணவர்கள், 65,000 மருத்துவ பயனாளர்கள் உதவிகளைப் பெறுகிறார்கள். கிராமப்புற பஞ்சாயத்து, உள்ளூர் பள்ளிகள் மூலம் உதவி தேவைப்படும் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுடைய பாதுகாப்பு, உணவு, உறைவிடம், கல்விக்கு உத்தரவாதம் அளித்து குடும்பச்சூழ்நிலையில் வளர்த்து வருகிறார்கள்.
பள்ளிப் பாடங்களுடன், நடனம், நாட்டியம், இசை, விளையாட்டு, ஓவியம், கைத்தொழில் என்று மாணவர்களின் திறமைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ற வகையில் சிறப்புப் பாடங்களும் அளிக்கப்படுகின்றன. பெற்றோரைப் போல ஆசிரியர்கள் வழிநடத்தி, மரியாதை, பொறுப்பு, அன்பு போன்ற நற்பண்புகளையும் கற்றுக்கொடுக்கிறார்கள்.
உள்ளூர் திருவிழாக்கள், கோவில் நிகழ்ச்சிகள், சமுதாய கூடங்களில் பங்குகொள்ள வைத்து கலாச்சாரத்தையும் அறிமுகப்படுத்துகின்றனர் இந்த அமைப்பினர். இங்குக் கற்க வந்தவர்கள் பலரும் படித்து முடித்து பணிபுரிந்து அவர்களுடைய சமுதாயத்தில் முன்மாதிரியாக வலம் வருகிறார்கள்.
"ஊர் கூடித் தேர் இழுத்தால் தான் தேர் நகரும்" என்பது போல ஒரு இயக்கம் உருவாக பல நல்ல உள்ளங்களின் நேரமும் நன்கொடைகளும் அவசியம். சுவாமிஜியின் கனவு சாத்தியமாக அவர் வேண்டிக்கொண்டபடி மக்களும் தாராளமாக உதவி வருகிறார்கள்.
ஒரு குழந்தையின் படிப்பிற்கும் பராமரிப்பிற்கும் ஆண்டுக்கு $500 செலவாகிறது. மாதந்தோறும் $40 சேமித்தால் கூட, ஒரு மாணவனுக்குக் கல்வி வழங்க முடியும். ஆல்பனி சாப்டர் 200 குழந்தைகளுக்கான செலவுகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிவித்தனர். கிட்டத்தட்ட 150 மாணவர்களுக்கான பணத்தேவையை அன்றே மக்கள் நன்கொடையாக வழங்கிவிட்டனர்.
நன்கொடையாளர்களைப் பாராட்டும் வண்ணம், நடன, நாட்டிய, இசை நிகழ்ச்சிகள் அமெரிக்கா முழுவதும் வருடம் ஒரு முறை தேர்ந்த வல்லுநர்களால் நடத்தப்படுகின்றன. இந்த வருடம், 'ஓம் நமோ நாராயணாய'(அக்ரே பஷ்யாமி), "என் முன் இருக்கும் தெய்வம்" என்ற தலைப்பில் அருமையான நடன நிகழ்ச்சி திருமதி.அனிதா குஹா அவர்களின் குழுவினரால் அரங்கேறியது. ஸ்ரீ.துஷ்யந்த் ஸ்ரீதர் ஸ்பஷ்டமாக விவரிக்க, டாக்டர்.ராஜ்குமார் பாரதி இசையில் அருமையான லைட்டிங், சவுண்ட் உடன் கூட்டம் முழுவதும் தன்னை மறந்து ரசிக்க, மெய்சிலிர்க்கும் அனுபவம்!
பகவான் மகாவிஷ்ணுவின் அவதாரங்களை எத்தனை முறை கேட்டாலும், பார்த்தாலும் பரவசம் கொள்ளும் மனது இந்த நாட்டிய நிகழ்ச்சியில் ஒன்றிப்போனது மட்டுமன்றி தமிழ், மலையாளம் என்று இசையும், பாடல்களும் கலந்து கொடுத்தது அருமை. நாராயண பட்டாதிரியின் குருவாயூரப்பனைப் போற்றிப் புகழும் பாடல்கள் வாயிலாக விஷ்ணுவின் அவதாரங்களைக் காட்சிகளாக்கி இறுதியில் பரம்பொருளின் அவதாரத்தைப் பார்த்ததும் பரவசம் அடையாதவர்களே இல்லை. சிலப்பதிகாரம், திருப்பாவையிலிருந்தும் பாடல்களைக் கேட்க இனிமை.
ஆடாமல் அசையாமல் நின்ற குருவாயூரப்பன், ருத்ர தாண்டவம் ஆடிய பரமசிவன், வராகமூர்த்தி, ஆக்ரோஷ நரசிம்மர் ,வாசுகி தலையில் நர்த்தனம் ஆடிய கிருஷ்ணன், பாற்கடலைக் கடைந்த அசுரர்கள் தேவர்கள், அசுரர்களை மட்டுமா கவர்ந்தாள் அந்த மஹாலக்ஷ்மி? அடடா! சொல்லிக்கொண்டே போகலாம் நடனமாடியவர்களைப் பற்றி! பட்டாதிரியாக நடித்தவர் ஏற்கெனவே ராம சரிதம் நிகழ்ச்சியில் அனுமனாக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர். மிகவும் ஆத்மார்த்தமாக அனுபவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை அமைத்துக் கொடுத்தவர்களுக்குப் பாராட்டுகள்.
அங்கு வந்திருந்தவர்களுக்கு இரவு உணவை வழங்கி அசத்திய குழுவினருக்கும் உதவிய நல்லுள்ளங்களுக்கும் வாழ்த்துகள்!
எத்தனை நாட்கள் தான் நாமும் சமுதாயத்திடமிருந்து பெற்றுக்கொண்டிருப்பது? நாமும் பதிலுக்கு நம்மால் முடிந்த உதவியைச் செய்வதுதானே முறை? இந்த எண்ணம் அனைவரின் மனதில் தோன்றி விட்டால் கல்வி கற்ற சமுதாயத்தை உருவாக்கி நாட்டை முன்னேற்றலாம்.
இந்தக் காணொளியில் வக்கீல் சுமதி அவர்கள் பேசியிருக்கும் விஷயங்கள் கவனிக்கத்தக்கவை. Advocate Sumathi Interview
ஊடகங்களுக்கு என்று ஒரு தார்மீக பொறுப்பு இருக்கிறது. இருந்தது கொத்தடிமைகள் ஆவதற்கு முன். இப்பொழுதோ ஊழல்வாதிகளை, கயவர்களை எல்லாம் விட்டுவிட்டு பாதிக்கப்பட்டவர்களை மேலும் வக்கிர எழுத்துக்களாலும் பேச்சாலும் பாதிக்கிறார்கள். அவர்களின் குடும்பங்களுக்குத் தீராத வலியை உண்டாக்குகிறார்கள்.
போதைப்பொருட்கள் தீராவிட ஆட்சியில் பெருகி ஒடுவதை கேட்க துப்பில்லாதவர்கள் இந்த ஆர்எஸ்பி ஊடகவியாதிகள்.
பெண்களுக்குப் படிக்கும் இடத்தில், வீட்டில் கூட பாதுகாப்பு இல்லை என்கின்ற பொழுது மேலும் கவனமாக, பொறுப்பாக இருக்க வேண்டும் என்று சுமதி அவர்கள் சொல்வது முற்றிலும் சரி.
அதுபோலவே, தண்டனைகள் கடுமையாக இல்லாதவரை இப்படியான குற்றங்கள் தொடரும் என்றதும் 100% சரி.
டில்லி நிர்பயா விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கொடூரன் மைனர் என்று தையல் மெஷின் கொடுத்து விடுதலை செய்ய சொன்ன கனிமொழி அரசியல்வியாதிகள் சாபக்கேடு.
இந்த விஷயத்தில் உடனடியாகச் செயல்பட்டு கயவர்களைப் பிடித்த காவல்துறைக்குப் பாராட்டுகள்.
தேவையில்லாத இடத்தில் மூக்கை நுழைக்கும் நீதியரசர்கள் விரைவில் மரணதண்டனை தருவார்களா? கயவர்களை வெளியில் விடுவதால் தான் இந்த அவலங்கள் அதுவும் திராவிட மாடல் அரசாங்கத்தில் சர்வ சாதாரணமாக பெருகியிருக்கிறது.
இந்தப் பொறுக்கிகளுக்கு ஆதரவாக வழக்காட எந்த வக்கீலும் வரக்கூடாது. அரசு தரப்பும் இந்தக்கயவர்கள் வெளியில வராதபடி தக்க தண்டனை கொடுக்க வேண்டும். இந்த நாய்களுக்கெல்லாம் உடனடி மரணதண்டனை தான் சரியானது.
ஜனநாயக நாடாக இருந்தபோதிலும் பாகிஸ்தான் ராணுவம் தான் நீண்ட காலமாக இஸ்லாமாபாத் அரசாங்கத்தின் அதிகாரப் புலங்களை மறைமுகமாகக் கட்டுப்படுத்தி வருகிறது என்பதை உலகம் அறியும். தங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்காதவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருந்தாலும் சிறையில் அடைப்பது, மரண தண்டனை வழங்குவது ராணுவத்தினரின் செயல்களாக இருந்து வருகிறது. இந்தியாவிலிருந்து பிரிந்து சென்றிருந்தாலும் வளர்ச்சிப் பாதையில் செல்லாமல் இஸ்லாமியப் பயங்கரவாதத்தையும் இந்திய வெறுப்பையும் சுமந்து கொண்டு அலையும் நாட்டிற்குத் தங்களுடைய சுய லாபத்திற்காகப் பிற நாடுகள், குறிப்பாக அமெரிக்கா இதுவரையில் பணத்தை வாரி இறைத்தது.
ஆப்கானிஸ்தான் போரின் போது முக்கியமான வான்வழி, பொருட்கொடுப்பு வழிகளை வழங்கியதற்காக பாகிஸ்தானின் ஆயுதப்படைகள் அமெரிக்காவிடமிருந்து பில்லியன் டாலர் அளவிலான நிதியைப் பெற்றன. ஆனால் 2018ல் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தங்களிடம் நிதியைப் பெற்றுக் கொண்டு தாலிபானுக்கும் பாதுகாப்பு தஞ்சம் அளித்து வருகிறது என்று குற்றம்சாட்டி, பெரும்பாலான பாதுகாப்பு உதவிகளை நிறுத்தி விட்டார். 2021ல் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதும், இரண்டாவது முறையாக ட்ரம்ப் பதவியேற்ற பின்னும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாட்டின் பணவரவு முற்றிலுமாக குறைந்து விட்டாலும் மனிதாபிமான அடிப்படையில் செய்யும் உதவிகள் மட்டும் தொடர்ந்து வருகிறது. மேலும் “ஆபரேஷன் சிந்தூர்”-ல் வாங்கிய அடி பலமாக இருந்தாலும் “வலிக்கல” என்று கைப்புள்ளையாகி விட்டது பாகிஸ்தான். தற்பொழுது ஏற்பட்டிருக்கும் பொருளாதார சறுக்கலிலிருந்து மீண்டுவர, மீண்டும் மீண்டும் பன்னாட்டு நிதி அமைப்பு, கூட்டாளிகளிடம் கையேந்திக் கொண்டிருக்கிறது.
இந்நிலைமையைத் தவிர்ப்பதற்காக புதிய அவதாரம் எடுத்துள்ளது. 2021ம் ஆண்டு அப்போதைய ராணுவத் தளபதி காமர் ஜாவேத் பஜ்வா “புவிசார் பொருளாதார பார்வை” பற்றின முக்கிய உரையில், “நாட்டின் உள்ளும் வெளியும் அமைதியை நிலைநாட்டவும், பாகிஸ்தானை ஒரு பொருளாதார மையமாக நிறுவி உள்பிராந்திய வர்த்தக இணைப்பை அதிகரிக்கவும் ராணுவத்தின் பங்கு அவசியம்” என்பதனைக் கோடிட்டுக் காட்டினார். பாஜ்வாவிற்குப் பின் பதவியேற்ற அசிம் முனிரின் முதன்மை முயற்சியாக, கட்டுக்கோப்பான ராணுவத்தின் அதிகாரத்துவ செல்வாக்கைப் பயன்படுத்தி வலுவான பொருளாதாரத்தை அடைய 2023ல் தொடங்கப்பட்டது தான் SIFC. (Special Investment Facilitation Council) செப்டம்பர் 8, 2025ல் அமெரிக்காவுடனான $500 மில்லியன் கனிம ஒப்பந்தத்திற்கான கையெழுத்து விழாவில் ராணுவத் தளபதி அசிம் முனிரும் பிரதம மந்திரி ஷெஹ்பாஸ் ஷெரிஃப்புடன் கலந்து கொண்டது, அவர்களின் தலைவர்களை விட ராணுவமே தேசியக் கொள்கையை நிரந்தரமாக வடிவமைக்கும் என்ற கோட்பாட்டினை நிரூபித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து நாட்டின் பொருளாதார நிலைமையைச் சமாளிக்க தங்களின் ஒரே பலமான ராணுவத்தைக் கொண்டு பொருளீட்டத் திட்டமிட்டது தற்போதைய பாகிஸ்தான் அரசு. செப்டம்பர் 17, 2025 அன்று சவுதி அரேபியாவுடன் “பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்” மூலமாக இரு நாடுகளுக்கு இடையே நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பை உறுதி செய்துள்ளது பாகிஸ்தான்.
இந்த ஒப்பந்தம் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் போன்ற வெளிநாட்டுத் தாக்குதல்களுக்கு எதிரான பாகிஸ்தானின் பாதுகாப்பு உத்தரவாதமாக விளம்பரப்படுத்தப்படுகிறது. இதில் இரு நாடுகளுக்கும் எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்பும் இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும் என்றிருந்தாலும் உண்மையில், இது சவுதி அரேபிய நிர்வாகத்தின் உத்தரவுகளுக்காகக் காத்திருக்கும் கூலிப்படையாக பாகிஸ்தான் ராணுவத்தின் நிலையை உறுதிப்படுத்துகிறது. அது மட்டுமில்லாமல் பாகிஸ்தானை “உதவி பெறும் நாடு” என்ற நிலையிலிருந்து, அமெரிக்காவின் பிராந்திய ஆதிக்கத்தில் நம்பிக்கை இழந்து வரும் நாடுகளுக்கு “பாதுகாப்பு வழங்கும் நாடாக” மாற்றும் நோக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.
பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டாலும், தோஹாவில் ஹமாஸ் தலைமையைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய முன்னறிவிப்பில்லாத வான்வழித் தாக்குதல் நடந்த சில நாட்களுக்குப் பிறகு வெளிவந்த இந்த ஒப்பந்த அறிவிப்பு தான் தற்பொழுது உலகநாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சவுதி அரேபியாவைப் பொறுத்தவரை, சக வளைகுடா நாடும் அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடான கத்தார் மீதான தாக்குதல், அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே என்பதனை ஊர்ஜிதம் செய்துள்ளது. அதனால் பாகிஸ்தானின் அணுசக்தி குடையின் கீழ் இருப்பதும் அதன் ராணுவமும் ரியாத்திற்கு பாதுகாப்பாக இருப்பது சவுதிக்கு அவசியமானதாக இருக்கிறது.
இஸ்லாமாபாத்தைப் பொறுத்தவரை, இந்த ஒப்பந்தம் ஒரு முக்கியமான பொருளாதார உயிர்நாடியாகியுள்ளது. ஐந்து பில்லியன் டாலர் சவுதி முதலீட்டுத் தொகுப்பும் பில்லியன் கணக்கான வணிக ஒப்பந்தங்களும் இந்தியாவிற்குப் புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் பாகிஸ்தானுடனான மோதலில் சவுதியின் தலையீட்டையும் கவனத்தில் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இந்தியாவைத் தள்ளியுள்ளது.
அது மட்டுமில்லாமல், ட்ரம்ப்பின் நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்களைக் குறிவைத்தும், தன்னைத்தானே புகழ்ந்து கொண்டிருந்தாலும் வேறு யாராவது தன்னைப் புகழ்ந்து பேசமாட்டார்களா’ என்று ஏகத்திற்கும் காத்திருந்த ட்ரம்ப்பை ‘அமைதிக்கான மனிதர்’ என பொய்யாகப் புகழ்ந்தும் தந்திரமாகக் காய்களை நகர்த்தி தனக்குச் சாதகமாக்கிக் கொண்டுள்ளார் ஷெரிஃப். அது மட்டுமா? இந்தியாவுடனான பாகிஸ்தானின் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் மத்தியஸ்தம் செய்ததாக ட்ரம்ப்பின் பொய்யை இவரும் சேர்ந்து புளுகி அவரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்து அங்கிள்சாமை கவிழ்த்த நாடகங்களை உலகம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு தான் இருந்தது.
எப்படியாவது ட்ரம்ப்பிடம் நல்ல பெயர் வாங்கி மீண்டும் பணத்தைக் கறந்து விட வேண்டும் என்று பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை வேறு முடுக்கிவிட்டுள்ளது. அதை நிரூபிக்கும் விதமாக 2021ம் ஆண்டு காபூல் விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில் 13 அமெரிக்கப் படைவீரர்களைக் கொன்ற இஸ்லாமிய அரசு தீவிரவாதியை இந்த ஆண்டு தொடக்கத்தில் கைது செய்தது. இதற்கெல்லாம் ஈடாக, கடந்த மாதம் வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்த ஷெரிஃப், முனீர் இருவரையும் “சிறந்த மனிதர்கள்” என்று ட்ரம்ப் பாராட்டியுள்ளார். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த அரசியல் தலைவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் முகஸ்துதி செய்து கொள்வதைப் பார்த்து முகஞ்சுளித்துக் கொண்டது உலக நாடுகள்.
ஆனால் அதைப்பற்றிக் கவலை கொள்ளவில்லை இருவரும். பொருளாதார ரீதியாக, பாகிஸ்தானுக்குச் சாதகமான 19 சதவிகித வரி விகிதமும் அமெரிக்க முதலீடுகளுக்கான வாய்ப்புகளும் கிடைத்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவைப் பகைத்துக் கொள்ளாமல் சவுதியுடனான கூட்டணியை வலுப்படுத்தும் சுதந்திரத்தையும் பெற்றுள்ளது பாகிஸ்தான்.
சவுதி ஒப்பந்தம் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றிருந்தாலும் ஆப்பிரிக்காவிலும் புதிய கடல்சார் தளங்களிலும் அதன் விரிவாக்கம் கவனத்தைப் பெற்றிருக்கிறது. செங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் பாகிஸ்தானின் ஆதிக்கத்தை வலுப்படுத்த ஆகஸ்ட் மாதத்தில் சோமாலிய அமைச்சரவை பாகிஸ்தானுடன் ஐந்து ஆண்டு ராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தைப் போட்டுள்ளது.
வடக்கே, கிழக்கு லிபியா அரசாங்கத்துடன் பாதுகாப்பு உறவுகளை உறுதிப்படுத்தியுள்ளது. அங்கு ஜெனரல் கலீஃபா ஹப்தாரின் சுயமாக அறிவிக்கப்பட்ட லிபிய தேசிய ராணுவம், திரிபோலியில் ஐ.நா. ஆதரவு அரசாங்கத்திற்கு எதிராக ஒரு அரசை அமைத்துள்ளது. ஹப்தாரின் மகன் சதாம் ஹப்தார், ஜூலை மாதம் இஸ்லாமாபாத்திற்கு விஜயம் செய்து ஷெரீப்பையும் முனீரையும் சந்தித்து இரு தரப்பிலும் ஒத்துழைப்பை ஆழப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் மத்தியதரைக்கடலில் தனது கடற்படை இருப்பை விரிவுபடுத்தியது மட்டுமில்லாமல் அதன் போர்க்கப்பல்கள் துருக்கிய கடற்படையுடன் கூட்டு ரோந்துப் பணிகளை மேற்கொண்டுள்ளன. இந்த எல்லைமீறலை கிரீஸ் எதிர்த்துள்ளது.
பாகிஸ்தானின் மற்றொரு குறிப்பிடத்தக்க முன்னெடுப்பு, சூடானின் ஆயுதப் படைகளுடன் ஆகஸ்ட் மாதம் கையெழுத்திட்ட 1.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகும். சூடான் நாட்டுப் படைகள், துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளுடன் (RSF) பேரழிவுகரமான உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ளன. சவுதி அரேபியா, சூடான் படைகளுக்கு ஆதரவாக இருப்பதால் RSFஐ எதிர்த்துப் போரிட, இந்த ஒப்பந்தத்திற்கான நிதியை வழங்கியதாகக் கூறப்படுகிறது. (With foreign cash, strategic location and cover)
பரஸ்பர நன்மை பயக்கும் இந்த ஒப்பந்தத்தால் அண்டை நாட்டுப் பிரச்சினையைக் குறைக்க ரியாத்திற்கு மிகவும் உதவும். இஸ்லாமாபாத்தைப் பொறுத்தவரை, இது ராணுவ-தொழில்துறை வளாகத்திற்கான ஒரு லாபகரமான ஒப்பந்தமாகும். இதன்மூலம், சீனாவால் உருவாக்கப்பட்ட ராணுவ வன்பொருட்களை ஆப்பிரிக்கப் போருக்கு வழங்கும் ராணுவ சப்ளையராகவும் வளைகுடாவின் புதிய பாதுகாப்பு கட்டமைப்பிலும் அதன் பங்கை உறுதிப்படுத்துகிறது. (Saudi Arabia loaned Pakistan $3 billion)
பாகிஸ்தானின் இத்தகைய லட்சிய முயற்சிகளால் குறிப்பிடத்தக்க ஆபத்துகள் இல்லாமல் இல்லை. 2015ல் ஏமனில் சவுதி தலைமையிலான ஹவுதிகளுக்கு எதிரான போரில் சேர இஸ்லாமாபாத் மறுத்துவிட்டது. ஆனால் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள், பயிற்சியுடன் தொடர் ஆதரவை ஈரான் வழங்கி வருவதால் புதிய ஒப்பந்தத்தை இறையாண்மைக்கு அச்சுறுத்தலாகக் கருதுகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா பாகிஸ்தானைப் பயன்படுத்த விரும்புகிறது என்றும் நம்புகிறது. ஈரானும் சவுதி அரேபியாவும் தங்கள் உறவுகளை மேம்படுத்த முயற்சித்து வந்தாலும், காசா போர் மத்தியகிழக்கில் புதிய உறுதியற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. இந்த ஜூன் மாத தொடக்கத்தில், இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியது. இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் சவுதி வான்வெளியைப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டது. இதனால் பாகிஸ்தானின் ஆதரவு நிலையில் மாற்றம் ஏற்படக்கூடும். சவுதிஅரேபியாவுடனான அதன் ஒப்பந்தத்தில் உள்ள பரஸ்பர பாதுகாப்பு விதி, பிராந்திய மோதல்களுக்கு நாட்டை இழுக்கக்கூடும். பணத்திற்காகப் போடப்பட்டுள்ள இந்த பாதுகாப்பு ஒப்பந்தங்களால் வெளிநாட்டுப் போர்களில் சிக்கிக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். முதன்மை எதிரியான இந்தியா, உள்நாட்டுத் தீவிரவாதக் குழுக்களான தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான், இஸ்லாமிய அரசு கோரசன் மாகாணம் முதல் பலூச் பிரிவினைவாதிகளின் தாக்குதல்களைச் சமாளிப்பதில் பிரச்சினைகள் வரலாம். (private military company notorious for providing mercenary services)
தற்போதைய நிலைப்பாட்டால் பாகிஸ்தான் ஒரு “கூலிப்படை நாடாக” மாறி ரஷ்யாவிற்கு ஆதரவாக உக்ரைன் போரில் ஈடுபட்டு வருகிறது என்று அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். 9/11 தாக்குதலுக்குப் பின் அமெரிக்கா தலைமையிலான பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இஸ்லாமாபாத் ஒரு “முன்னணி நட்பு நாடாக” இணைந்ததால் உள்நாட்டில் பின்னடைவை ஏற்படுத்தி 90,000 உயிர்களுக்கும் 150 பில்லியன் டாலர் பொருளாதார இழப்புகளுக்கும் காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கூறிய வரலாற்று இழப்புகளும் பிரச்சினைகளும் இருந்தபோதிலும், வாய்ப்புகளும் ஆபத்துகளுமாய் இரட்டை முனைகள் கொண்ட வாள் தான் பாகிஸ்தானின் இந்த புதிய முயற்சி. பாதுகாப்பு மற்றும் புவிசார்-பொருளாதார உத்தியை இணைப்பதற்கான அதன் முயற்சிகளின் இறுதி நிலைத்தன்மை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் ஒன்று மட்டும் நிச்சயம்: பாகிஸ்தானுக்கு விற்க கைவசம் ஒரு தயாரிப்பு உள்ளது. தற்போதைய நிலையற்ற உலகில், ராணுவ வணிகம் செழித்து வருகிறது. அதுவும் வளைகுடா பகுதிகளில் அதன் தேவை அதிகமாகவே இருக்கிறது. அதை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை ராணுவம் செய்து வருகிறது.
பாகிஸ்தான் ராணுவம் பெரும்பாலும் நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த நிறுவனம் என்று தவறாக அடையாளப்படுத்தப்படுகிறது. உண்மையில் இது ஒரு கூலிப்படை நிறுவனமாகும்.1970 ஆம் ஆண்டு ஜோர்டானில் ஜியா-உல்-ஹக்கின் கட்டளையின் கீழ் பாகிஸ்தான் துருப்புக்கள் 25,000 பாலஸ்தீனியர்களைக் கொன்ற கறுப்பு செப்டம்பர் முதல் தற்போதைய ரியாத்துடனான புத்தம் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் வரை, பாகிஸ்தானின் படைத்தளபதிகள் மிகப்பெரிய காசோலைகளில் கையெழுத்திடுபவர்களுக்காக நீண்ட காலமாகப் போராடி வருவது வரலாறு (1979 Grand Mosque seizure in Mecca). அணு ஆயுதக் கேடயம் என்ற வாக்குறுதியுடன் சவுதி அரேபியாவுடனான சமீபத்திய ஒப்பந்தம், ராவல்பிண்டியின் நீண்ட கூலிப்படை பேரேட்டில் புதிய அத்தியாயமாகும். (signed a mutual defence pact with Saudi Arabia)
பாகிஸ்தானுடனான அரபு நாடுகளின் உறவு என்பது சகோதரத்துவ அடிப்படையில் அமைந்தது அல்ல. பரிவர்த்தனை சார்ந்தது. வளைகுடா அவர்களுக்குப் பணத்தையும் எண்ணெயையும் வழங்க, பாகிஸ்தான், துருப்புக்களையும் போலி கண்ணியத்தையும் வழங்குகிறது. அதற்கு ஈடாக, இரு தரப்பினரும் உலக அரங்கில் தாங்கள் முக்கியமானவர்கள் என்று பாசாங்கு செய்து வாஷிங்டனுக்கு நிரூபிக்க முயற்சிக்கிறார்கள்.
பாகிஸ்தான் தளபதிகளின் விசுவாசம் தங்கள் நாட்டிற்கோ, இஸ்லாத்திற்கோ, காசாவிற்கோ அல்ல. தங்கள் காசோலைகளில் கையெழுத்திடுபவர்களுக்கு மட்டுமே. என்று பாகிஸ்தானியர்கள் ராணுவ நிறுவனம் தங்கள் பாதுகாவலர் அல்ல. சுயலாபத்திற்காக இயங்கும் கூலிப்படை என்பதை உணருகிறார்களோ அன்று நாடு பிளவுபடும். வரலாறு அவர்களைப் போர்வீரர்களாக நினைவில் கொள்ளாது. பேரரசிற்கு விலைபோனவர்களாக மட்டுமே நினைவில் கொள்ளும் என்பதையும் ராணுவ அதிகாரிகள் அறிவார்கள். தற்பொழுது மக்களை ஏமாற்ற, தேசபக்தி, “உம்மாவின் பாதுகாப்பு” போன்ற வெற்று முழக்கங்களிட்டு உயரடுக்கினரின் வங்கிக் கணக்குகளைப் பாதுகாத்துக் கொள்கிறது.
திவாலான நாடு மீண்டும் கூலிப்படை நாடாக அவதரித்திருப்பது வளைகுடா பாதுகாப்பையும் பிராந்திய மறுசீரமைப்பையும் பிரதிபலிக்கிறது. இந்த களேபரங்களுக்கு மத்தியில், இந்தியாவுடனான சவுதி அரேபியாவின் உறவுகள் முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளன என்றும் எதிர்காலத்தில் தொடர்ந்து வளரும் என்றும் கூறப்படுகிறது. தற்பொழுது அமெரிக்கா வேறுபட்ட நலன்களைச் சமநிலைப்படுத்த வேண்டிய கட்டாயத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வரும் ஆண்டுகளில் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் செல்வாக்கை வடிவமைக்கவும் நம்பிக்கையைப் பெறவும் அதிபர் ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும் என்பதையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது உலகம்.