Saturday, February 6, 2016

ஒபாமா - நம்பிக்கை நட்சத்திரம்

கடந்த 2008ல், ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஒபாமா அறிவிக்கப்பட்ட போது நாடே ஒரு வித உற்சாக கொந்தளிப்பில் இருந்தது. வெள்ளை, கறுப்பின மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தேர்தலில் வெற்றி பெற்று முதல் கருப்பின அதிபர் என்கிற பெருமையுடன் ஆட்சியில் அமர்ந்த பதவியேற்பு விழாவுக்கு நாடெங்கிலும் இருந்து  திரளான மக்கள் வாஷிங்டன் டிசி க்கு வந்திருந்து அந்த நிகழ்வை கொண்டாடி மகிழ்ந்தனர். நூற்றாண்டு கால அடிமைச் சமூகத்தின் பிரதிநிதியாக, மார்டின் லூதர் கிங் கண்ட கனவின் நனவாக, தங்களை மீட்க வந்த மீட்பராக ஒபாமா பார்க்கப்பட்டார். இந்த உணர்வுகளை 2013ம் ஆண்டு வெளியான “the butler” திரைப்படத்தில் அழகாய் காட்சிப்படுத்தியிருந்தனர்.

ஒபாமாவின் வெற்றியை ஜீரணிக்க முடியாத குடியரசு கட்சியினர் தங்களுடையை வன்மத்தையும், வெறுப்புணர்வையும் பல்வேறு வகையில் கொட்டித் தீர்த்தனர். ஒபாமா அமெரிக்கனே இல்லை, இந்த மண்ணில்  பிறக்கவில்லை, அப்பா ஒரு ஆப்ரிக்கன் , அவர் ஒரு முஸ்லீம் என்று பலவாகிலும் அவதூறு செய்தனர். இதெல்லாம் முந்தைய புஷ் ஆட்சிக் காலத்தில் குடியரசு கட்சி செய்த தவறுகளினால் மக்கள் மனதில் எடுபடாமல் போய்விட்டது. சரியான காரணங்கள் எதுவும் இல்லாமல் பொய் சொல்லி ஈராக் மீது படையெடுத்தது, அதற்கால கோடிக்கணக்கில் பணத்தை செலவழித்தது, ஆப்கான், பாகிஸ்தான் எங்கிருக்கிறது என்று தெரியாமல் இருந்த அமெரிக்கர்களுக்கு அவர்களைப் பற்றின பிம்பத்தை வளர்த்து பயமூட்டியது, வேலையில்லா திண்டாட்டம் என புஷ் ஆட்சியில் மக்களுக்கு இருந்த அதிருப்தியில் மாற்றம் வேண்டும் என்ற ஒபாமாவின் குரல் மட்டுமே உரக்க கேட்டது

ஒபாமாவின் முதல் நான்காண்டு பதவிக்காலம் அவருக்கு எல்லா வகையிலும் சோதனையான காலகட்டம்தான். முந்தைய புஷ் ஆட்சி காலத்து குளறுபடிகளை சரி செய்ய அவர் எடுத்த எல்லா முயற்சிகளுக்கும் குடியரசு கட்சியின் ஒத்துழைப்பு கிடைக்கவே இல்லை. ஒபாமா எதைச் செய்தாலும் அதை தடுப்பதுதான் தங்களுடைய லட்சியம் என்பதைப் போல குடியரசுக் கட்சியினர் நடந்து கொண்டனர். வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்க, மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவ, பணம் கரைய, ஹௌசிங் மார்க்கெட் சரிய, உள்ளூர் கார் உற்பத்தியாளர்கள் நஷ்டத்தில் இயங்க, ஈராக் போர் தீவிரமடைய, பல போர் வீரர்களின் உடல்கள் போர்த்திய கொடிகளுடன் ஊர் திரும்ப, இயற்கைப் பேரிடர்கள் பிரச்சினைகள், பிரச்சினைகள் என பிரச்சினைகள்தான். இவற்றை எல்லாம் சமாளித்து கரையேறுவதற்குள் அவருடைய முதல் நான்காண்டுகள் ஓடியே போய்விட்டது.

இதைத் தாண்டியும் சொல்லிக் கொள்ளும் படியாக அவர் சில சாதனைகளை செய்திருந்தார் என்பதையும் சொல்லியாக வேண்டும். வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க சில வழிகளை கையாண்டது, வீடு வாங்குபவர்களுக்குச் சலுகைகள், கார் கம்பனிகளுக்கு அரசாங்கமே கடன் என்ற பெயரில் பண உதவி வழங்கி அவர்களை மீட்டது, ஒசாமா பின் லாடனை பிடித்தது அவருடைய அரசின் சாதனை தான். அவருடைய மனைவியும் போர் வீரர்களுக்கு உதவிகள், பள்ளியில் குழந்தைகளுக்குச் சத்தான உணவுத்திட்டம் என்று அவரளவில் மக்களிடையே பல நற்செய்திகளை கொண்டுச் சென்றார்.

ஒரு கட்டத்தில் மக்களும் ஒபாமாவைச் சொல்லி குற்றமில்லை, அவரே நினைத்தாலும் எதிர்க்கட்சிகள் அந்தத் திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதில்லை என்பதை புரிந்து கொண்டனர். இந்த ஒத்துழையாமையினால் ஒபாமா செய்வதாய் சொன்ன தேர்தல் வாக்குறுதிகளைக் கூட அவரால் நிறைவேற்ற முடியாமல் போனது.

இதன் எதிரொலி 2012 தேர்தலில் ஒபாமாவுக்கே சாதகமாய் இருந்தது. தனது இரண்டாவது பதவி காலத்தில் ஒபாமா தனது அணுகுமுறைகள் பலவற்றை தேவைக்கேற்ப மாற்றிக் கொண்டார்.அமெரிக்காவில் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் இன்சூரன்ஸ் கொள்ளையர்களிடமிருந்து எளிய சாமானிய குடிமக்களைக் காக்க அவர் கொண்டு வந்த திட்டத்தை தீவிரமாக எதிர்த்த குடியரசு கட்சியினர், அந்த திட்டத்தை செயலாக்க விடாமல் தங்களால் ஆன அனைத்தையும் செய்தனர். ஆனாலும் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி பல மில்லியன் டாலர் செலவழித்து ஒபாமாகேர் வந்து விட்டது. இன்றும் அதனுடைய பயன்கள் எப்படி சாமானியர்களுக்கு உதவப் போகிறது என்பது பற்றி தெளிவாக எதுவும் தெரியவில்லை. இன்சூரன்ஸ் கம்பெனிகளும் மருத்துவர்களும் வெளிப்படையாகவே ஒபாமாகேரில் நாட்டமில்லாதவர்களாகவே இருக்கிறார்கள்.

மக்களின் எதிர்ப்பார்ப்புடன் வெள்ளைமாளிகைக்கு வந்த ஒபாமாவை ஒரே இரவில் நாட்டை ஜீ பூம்பா சொல்லி மாற்றி விடும் மாயஜால வித்தைக்கார் என்று நினைத்த கூட்டம் அவரின் கைகள் கட்டுண்ட நிலையில் வெள்ளை மாளிகையை ஆளுவது ஒபாமாவைத் தாண்டிய இன்ன பிற சக்திகள் வலுவாக இருப்பதையும் , ஜனாதிபதி என்கிற தனிமனிதனின் கையில் எதுவுமில்லை என்று புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறது.

இதோ இந்த வருடம் மீண்டும் ஜனாதிபதி தேர்தல் வருகிறது. அதற்கான எல்லாவித கூத்துகளும் நடக்க ஆரம்பித்து விட்டது. சமீபத்தில் நடந்த ஸ்டேட் ஆப் தி யூனியன் கூட்டத்தின் போது அவருடைய பேச்சு கேட்பவரை மெய்சிலிர்க்கத் தான் செய்தது. நடக்கவிருக்கும் தேர்தலுக்கான முஸ்தீபுகளில் ஜனநாயக கட்சி இறங்கி விட்டது என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தது அவர் பேச்சில். தீவிரவாதிகளை தான் கையாளும் விதமே சரி என்ற தொனியில் எதிர்க்கட்சிகளின் ஆவேச பேச்சு பிரச்னைகளுக்குத் தான் வழிவகுக்கும் என்று வலியுறுத்திக் கூறினார்.

உலக மக்களிடையே பிரபலமானவராக புன்னகையுடன் வலம் வந்த முதல் கறுப்பின ஜனாதிபதி, கறுப்பின மக்களுக்காக போராடிய மார்டின் லூதர் கிங்கின் கனவை நிஜமாக்கிய ஒரு நல்ல மனிதர் ஜனாதிபதி ஒபாமா என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆயினும் சமீப காலமாக ஒபாமா முஸ்லிம்கள் விஷயத்தில் அமைதி காக்கிறார் , நாட்டில் நடக்கும் தீவிரவாத நிகழ்ச்சிகளை இருட்டடிப்பு செய்கிறார் என்பது போன்ற அதிருப்தி பலருக்கும் இருப்பதை இங்கே சொல்லியாக வேண்டும்.

இவற்றை எல்லாம் தாண்டி அமெரிக்காவின் நாற்பத்தி நான்காவது ஜனாதிபதியாக, மார்ட்டின் லூதர் கிங் கண்ட கனவை நனவாக்கியவராக, பலமான அரசியல் பிண்ணனியோ, பணபலமோ இல்லாத ஒரு சாமானியன் தன்னுடைய விடா முயற்சியினாலும், கடும் உழைப்பினாலும் எதிர் வந்த தடைகளை எல்லாம் உடைத்து நொறுக்கி உலகின் சக்திவாய்ந்த பதவிக்கு வரமுடியும் என்று நிரூபித்த வகையில், சாமானியர்களின் நம்பிக்கை நட்சத்திரம் என்பதை யாரும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.

அவருடைய ஓய்வு காலம் இனிதாக அமைய என் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

Can This Love Be Translated?

 “Can This Love Be Translated?” பல நாட்களுக்குப் பிறகு பார்த்த கே-ட்ராமா. தலைப்பே வித்தியாசமாக இருந்ததில் வசப்பட்டேன். கதாநாயகி புதிதாக இருந...