Thursday, December 28, 2017

அயல்தேசத்தில் ஒரு சந்திப்பு

கலிஃபோர்னியா மாநிலத்தில் இருக்கும் மில்பிடாஸ் நகரில் நேற்று என் தாய் பாஷை பேசும் மக்கள் ஒன்று கூடிய பெரும் விழா நடைபெற்றது. மகள் அங்கிருப்பதால் அவளைப் பார்த்து சில நாட்கள் அவளுடன் தங்கி இந்த விழாவுக்குச் சென்று வர கணவரும் ஆனந்தமாக விடுமுறையில் சென்று விட்டார்.

 அமெரிக்காவிலேயே இம்மாநிலத்தில் தான் அதிக அளவில் சௌராஷ்ட்ரா மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினாலே பெரும் விழா தான். டெக்சாஸ், வாஷிங்டன் மாநிலங்களில் இருந்தும் பெரும்பாலான மக்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அனைவரும் வர வேண்டும் என்பதற்காகவே குளிர்கால விடுமுறையை தேர்ந்தெடுத்ததும் நல்ல முடிவு. ஊரைச் சுற்றிப் பார்த்து விடுமுறையை கொண்டாடுவதோடு மட்டுமில்லாமல் இவ்விழாவில் பங்கேற்க வெளி மாநிலங்களிலிருந்து வந்திருந்தவர்களுக்கும் வசதியாக அமைந்து விட்டது.

இவ்விழாவினை தாங்கள் ஏற்று நடத்துகிறோம் என சிலிக்கான்வேலி மக்களின் ஆதரவு கிடைத்தவுடன் அன்றிலிருந்து திட்டங்கள் வகுக்க ஆரம்பித்தார்கள். முகநூல் குழுமம் வாயிலாக அனைவரையும் விழாவிற்கு வருமாறும் அவர்கள் தங்க வசதிகள் செய்யவும் பிற மாநிலங்களிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கையை கண்டறிந்து திட்டங்கள் பலவும் முடிவு செய்தார்கள். விரைவிலேயே நானூறுக்கும் மேற்பட்டவர்கள் வர விருப்பம் தெரிவிக்க, பலரும் காத்திருப்பு பட்டியலில்! விருந்தினர்களை கவனிக்க, அன்றைய தினத்தின் உணவுத்தேவைகளை பார்த்துக் கொள்ள, குழந்தைகளுக்கான நிகழ்ச்சி மற்றும் அவர்களை கவனித்துக் கொள்ள, விழாவின் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க, நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள என்று பல குழுக்கள், அதனை நிர்வகிக்க தன்னார்வலர்கள் பலரும் தங்கள் சொந்த வேலைகளுடன் இவ்விழாவிற்காக பல மணிநேரங்கள் , பல நாட்களென விழா நடக்கும் இடத்தை தேர்வு செய்வதிலிருந்து விருந்துணவு அதுவும் சௌராஷ்ட்ரா ஸ்பெஷல் உணவாக இருக்க வேண்டுமென மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டது என்று பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள்.
விழா நாள் நெருங்க அதன் தொடர்பான செய்திகளும் முகநூல் குழுமத்தில் பகிரப்பட்டு பங்கேற்பார்களின் ஆர்வங்களைத் தூண்டி விட... அந்த நாளும் வந்தே விட்டது.

விழா மண்டபத்து வாயிலில் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய குழு அன்பர்களின் யோசனையில் மூதாதையர்களின் பாரம்பரிய நெசவுத்தொழில், புலம்பெயர்தல் வரலாறுகளை தன் கைவண்ணத்தில் அழகிய ஓவியமாக படைத்திருக்கிறார் ரேணுகா. சோம்நாத் கோவில் பூர்வீகத்தின் படையெடுப்பைத் தொடர்ந்து இஸ்லாமிய கொடுங்கோலர்களின் ஆட்சியில் உயிருக்கும் மானத்திற்கும் அஞ்சி தென்னக மாநிலங்களில் தஞ்சம் புகுந்த மூதாதையர்கள் சிலர் அங்கேயே தங்கிவிட, நாயக்கர் காலத்தில் மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற நகர்களில் புலம்பெயர்ந்தவர்கள் தங்களின் நெசவுத்தொழிலிலிருந்து படிப்படியாக முன்னேறி இன்று அவர்களின் உலகமும் விரிந்து வாரிசுகள் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து சென்றாலும் இன்றும் 'மாய் பாஷா' இச்சிறு சமூகத்து மக்களை இணைத்து அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்வதை பறைசாற்றுவதாகவே இருக்கிறது இத்தகைய சந்திப்புகள்!

மகளும், கணவரும் விழா அரங்கிற்குச் சென்றது முதல் யாரைப் பார்த்தார்கள், யாருடன் பேசினார்கள், அவர்களுடன் எடுத்துக் கொண்ட படங்கள் என்று சுடச்சுட செய்திகள் வர, அங்கு சென்றது போல் திருப்தி. என்னுடைய தோழிகள் , உறவினர்கள், சொந்த பந்தங்கள், தெரிந்தவர்கள், அறிமுகமானவர்கள், என்னிடம் பயின்ற மாணவர்கள், கல்லூரியில் படித்தவர்கள் என பலரும் விழாவுக்கு வந்திருந்தார்கள். மகள் பங்கு பெற்ற மேடை நிகழ்ச்சியும், கணவர் இசையமைத்து ரேணுகாவின் குரலில் இரு பாடல்கள்  தாய் பாஷையிலும் அரங்கேறியிருக்கிறது.  வாரணம் ஆயிரம் பாடலை மதுரையிலிருந்து தாத்தா ஜூட்டு தியாகராஜன் தாய் மொழியில் எழுதியதை  அமெரிக்காவில்  பேத்தி ஸ்ரியா  பாடியிருக்கிறார்.  பரத நாட்டியம், கர்நாடக சங்கீதம், சியாட்டில் குழுவினரின் சௌராஷ்டிரா நாடகம் என  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு விழாவுக்கு வந்திருந்தவர்கள் சிரித்து ரசிக்கத்தக்க வகையில் நிகழ்ச்சிகளை அமைத்திருக்கிறார்கள்.

விழாவிற்குச்  சென்றவுடன் கணவரின் அக்கா குடும்பத்தினரைச் சந்தித்ததிலிருந்து நண்பர்கள், உறவினர்கள், தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியவர்கள் என்று அன்றைய நாள் முழுவதும் கலகலப்பாக இருந்திருக்கிறது. மதிய உணவு மதுரை விருந்தின் சுவையுடன் இருந்ததாகவும் இரவு உணவும் பூரி, கிழங்கு மசால், மசாலா பால் என அருமையாக இருந்ததாக மகளும் கணவரும் அனுபவித்துச் சாப்பிட்டதாக கூறினார்கள்.

முதல் முறையாக மகள் கலந்து கொண்ட சௌராஷ்ட்ரா மக்களின் சந்திப்பு.  அனைவரிடமும் தாய்மொழியில் பேசும் பொழுது ஏற்படும் ஆனந்த உணர்வும், இத்தனை மக்கள் இங்கிருக்கிறார்களா என்ற வியப்பும், மேகலா ஆண்ட்டி தேடி வந்து பேசி விட்டுப் போனார்கள், துர்கா ஆண்ட்டியை தேடிப்பிடித்துப்  பேசி விட்டேன் என என் தோழிகளை அவள் சந்தித்துப் பேசியதில் இன்பமும், என்னிடம் பயின்ற மாணவ, மாணவியர்கள் வந்து பேசியதில் உற்சாகமும்,  புது நட்பு கிடைத்ததில் மகிழ்ச்சியும், பெரியவர்கள் வாஞ்சையுடன் பேசி அன்புடன் அவர்கள் வீட்டுக்கு அழைத்தார்கள், என்ன உதவி வேண்டுமென்றாலும் எந்த நேரத்திலும் தயங்காமல் கேட்கச் சொன்னார்கள் என்று ஆச்சரியமாகவும்  இவ்வளவு மனிதர்களை ஒரு சேர சந்திக்கையில் ஏற்படும் அனைத்து வித உணர்வுக்கலவையுடன் அந்த நாளை மகிழ்வுடன் கடந்திருக்கிறாள்.

என்ன தான் இங்கு வளரும் குழந்தைகள் தங்கள் தேவைகளை யாரையும் எதிர்பாராமல் நிறைவேற்றிக் கொண்டாலும் அவர்கள் செல்லும் இடங்களில் நம் மக்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை தான் என் மகளை ஜெர்மனிக்கும் , சைனாவுக்கும், அமெரிக்காவின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்கும் துணிவுடன் செல்ல அனுமதித்தது. முன்பின் அறிமுகமில்லாத முகம் தெரியாத முகநூல் வாயிலாக தெரிந்து கொண்ட மக்கள் அன்று உதவி இன்று வரையிலும் உதவுவது... என் போன்ற பெற்றோர்களுக்குத் தெரிந்திருந்த சமூகத்தின் மதிப்பை இன்றைய தலைமுறையும் உணர்ந்து கொள்ளவும் உதவுகிறது இச்சந்திப்புகள்.

இதற்கு முன் விர்ஜினியாவில் நடந்த விழாவில் கணவர் மற்றும் மகனுடன் நானும் சென்றிருந்தேன். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலர் அமெரிக்கா, கனடாவில் இருந்தாலும் பலரை நேரில் சந்தித்திருந்தாலும் முகநூல் வாயிலாக நண்பர்கள் மூலமாக அறிந்திருந்தவர்களை நேரில் சந்தித்துப் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. விழா முடிந்து வீடு திரும்புகையில் அமெரிக்காவில் நடந்த பல சந்திப்புகளில் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நண்பர்கள் இருப்பதால் ஆங்கிலத்திலேயே உரையாடிக் கேட்டு முதன் முறையாக அனைவரும் நம் பாஷையில் பேசியது எனக்குப் புரிந்தது என்று அன்று மகன் கூறியதும் , அடுத்த சந்திப்பு மிஷிகனில். கண்டிப்பாக போக வேண்டும் என்று இன்று மகள் கூறியதும்...

தாய் மொழியில் உரையாடுவதும் அம்மொழி பேசும் மக்களிடம் பழகுவதும் தனி இன்பம் தான். அதுவும் அயல்நாட்டில் இப்படியொரு  "அவ்ரெ தின்னாள்" கொண்டாட்டமும் வேண்டியிருக்கிறது. எங்கள் சமூகம் விழாக்களையும் விருந்துகளையும் கொண்டாடி வரும் சமூகம். உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் சந்திப்புகளும் கொண்டாட்டங்களும் குறைவில்லாமல் நடக்கிறது.

இச்சந்திப்பிற்காக உழைத்த தினேஷ் மற்றும் குழுமத்திற்குப் பாராட்டுகள்!

sourashtra song...

8 comments:

  1. அருமையான பதிவு பெய்! மிக்க நன்றி

    ReplyDelete
  2. nErum jaanaajiyet meLLi 'gnaana driShTi'-m siye sokan itko sompukan likkiraas. nandininu. K.V.Pathy.

    ReplyDelete
  3. Excellent Bei! Great!
    -Padmapriya Gnanakumar

    ReplyDelete

Can This Love Be Translated?

 “Can This Love Be Translated?” பல நாட்களுக்குப் பிறகு பார்த்த கே-ட்ராமா. தலைப்பே வித்தியாசமாக இருந்ததில் வசப்பட்டேன். கதாநாயகி புதிதாக இருந...