Monday, May 22, 2023

A Man Called Otto


வயதானவர்கள் அதுவும் துணையின்றி தனித்து வாழ்பவர்களில் பெரும்பாலோனரிடம் ஒருவித எரிச்சல் எப்பொழுதுமே இருக்கும். முகத்தையும் 'உர்ர்ர்ர்'ரென்று வைத்துக் கொண்டு கோபத்துடனே அலைவார்கள். இது இயற்கையானது தான் என்றாலும் ஒரு சிலர் இதற்கு நேர்மாறாக இருப்பார்கள். 'A Man Called Otto' திரைப்படத்தின் கதாநாயகன் மனைவியை இழந்து வயதான காலத்தில் பழைய ஞாபகங்கள் துரத்த, பல முறை தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்து அதுவும் தோல்வியில் முடிய விரக்தியுடன் வாழ்க்கையை ஓட்டுபவர்.

அவருடைய வீட்டிற்கு எதிரே குடிவரும் 'மேரிசோல்' என்ற ஸ்பானிஷ் பேசும் பெண்மணியின் குடும்பம் மெல்ல இவரை மாற்றுகிறது. வாழ்க்கையை இனிமையாகக் கழித்திட முடியும் என்று உணர வைத்து வாழ்வின் பொருளை உணர்த்துகிறது.

டாம் ஹாங்க்ஸ் படம் என்றாலே கதை, நடிப்பு எல்லாம் இருக்கும் என்பதால் தைரியமாகப் பார்க்கலாம். தனிமை எவ்வளவு கொடுமை? கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று சும்மாவா சொன்னார்கள்? அக்கம்பக்கத்து மனிதர்களுடன் முகம் தெரிந்த, தெரியாத நபர்களுடன் பேசி நட்பை வளர்த்திட முடியும். அது தனிமையில் வாடுபவர்களுக்கு உற்ற துணையாக இருக்கும் என்று படம் கூறுகிறது.

காதலித்துத் திருமணம் புரிந்த மனைவி, அவர்களுக்கு நடந்த பேராபத்து, மனைவியை இழக்கும் கொடுமை என்று பல நிகழ்ச்சிகளை மனம் அசைபோட்டு எதிர்மறை எண்ணங்களை உருவாக்கி அதிலிருந்து மீளவும் முடியும் என்று தன்னம்பிக்கையையும் கதாநாயகனுக்குத் தருகிறது. நம் வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கும் துக்கத்திற்கும் காரணம் நம்முடைய தேர்வுகளே. சரியான தேர்வுகள் நம்மை உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் வைத்திருக்கும். தவறான தேர்வுகள் நம் துக்கத்திற்கு காரணமாக இருக்கும். அதிலிருந்தும் மீள முடியும் என்பதே கதை.

தன் மனைவியின் மாணவன் ஒருவனுக்கு உதவ, அவனும் அவருக்கு உதவ அதில் நிறைகிறது மனதும் வயிறும். அதே போல, எதிர் வீட்டில் உள்ள குழந்தைகள், பக்கத்து வீட்டில் உள்ள நண்பர்கள் என்று எல்லோரிடமும் மீண்டும் பழையபடி பழக, கதாநாயகனின் தற்கொலை எண்ணம் மறைந்து  வாழவேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகிறது. அதுவும் தன்னைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்க்கையையும் வளமாக்க உதவுகிறது. பூனையும் ஒரு கதாபாத்திரமாக😍

இதைத்தான் 'இகிகை' எனும் ஜப்பானிய வாழ்வியல் முறை அறிவுறுத்துகிறது. நம்முடைய நீண்ட கால வாழ்விற்கும் மனமகிழ்ச்சிக்கும் சமூகமாகச் சேர்ந்து வாழ்தல் முக்கியமான ஒன்று என்று. ஒருவருக்கொருவர் ஆறுதலாக, உதவியாக வாழ்வதால் மனமகிழ்ச்சியும் திருப்தியும் ஏற்படும். இதைத்தான் இந்தப் படமும் உணர்த்துகிறது.

டாம் ஹாங்க்ஸ் நடிப்பைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. மேரிசோலாக நடித்திருக்கும் மரியானா ட்ரெவினோவின் நடிப்பு அருமை. நெட்ஃப்ளிக்ஸ்ல் காண கிடைக்கிறது.




No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...