Thursday, May 18, 2023

மிஸஸ் சாட்டர்ஜி வெர்சஸ் நார்வே


2011ஆம் ஆண்டில் நார்வே அதிகாரிகள் இந்திய தம்பதிகளின் குழந்தைகளை அவர்களிடமிருந்து பிரித்து எடுத்துச் சென்ற வாழ்க்கைக்கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் 'Mrs Chatterjee vs Norway'. நார்வேயில் தனது கணவர், இரண்டு சிறு குழந்தைகளுடன் வசிக்கும் திருமதி சாட்டர்ஜி (ராணி முகர்ஜி) என்ற இந்தியப் பெண்ணின் கதையை இப்படம் சொல்கிறது.

குழந்தைகளை அந்நாட்டு முறைப்படி வளர்க்கத் தெரியவில்லை. தாய்க்கு மனநிலை சரியில்லை. வீட்டில் கணவன் மனைவியை வன்முறை செய்கிறார் என்று நார்வே சமூக சேவகர்களால் குற்றம் சுமத்தப்பட்டு குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்படுகிறார்கள். தன் குழந்தைகளை மீட்கப் போராடுகிறார் கதாநாயகி. நீதிமன்றத்தில் இவர்களுடைய வழக்கில் பலமுறை தோற்கடிக்கப்படுகிறார்கள். முடிவு என்ன என்பது தான் கதை.

இப்படத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தன் குழந்தைகளைக் காப்பகத்திலிருந்து ஸ்வீடனுக்கு அழைத்துச் செல்வதைக் கடத்தல் என்று குற்றஞ்சுமத்துகிறது நார்வே அரசு. உண்மை தான். அது கடத்தல் தான். தான் பெற்ற குழந்தைகளை எடுத்துச் செல்வது எப்படி கடத்தலாகும் என்று கத்தி கூப்பாடு போட்டால் மனநிலை சரியில்லை என்று மீண்டும் வழக்கு.  திருமதி சாட்டர்ஜி நம்பிக்கையைக் கைவிடாமல் தன் குழந்தைகளுக்காகத் தொடர்ந்து போராடுகிறார். குழந்தைகள் நல அமைப்புகளில் கலாச்சார சார்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். இறுதியில் நம்பிக்கை மற்றும் நெகிழ்ச்சியான செய்தியுடன் படம் முடிகிறது.  

கையால் ஊட்டிவிட்டால் தவறு என்பதை எந்த இந்தியரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் வெளிநாட்டினருக்கு அதுவும் நார்வே அதிகாரிகளுக்கு அது தவறாகத் தெரிகிறது. சிறு குழந்தைகள் பெற்றோருடன் தூங்குவதில் என்ன தவறு? அவர்களுக்குத் தவறாகத் தெரிகிறது. குழந்தைகளைக் கண்டிக்கப் பெற்றோர்கள் அடிப்பார்கள். அடி வாங்கி வளர்ந்தவர்கள் தானே நாமெல்லாம். பள்ளிகளில் கூட பிரம்படி வாங்கிப் படித்தவர்கள் நாம். இன்று ஏனோ அதை இந்தியாவிலும் பெற்றோர்கள் எதிர்க்கிறார்கள். அதன் பலனை அனுபவித்துக் கொண்டிருப்பது கண்கூடாகத் தெரிகிறது. குழந்தைகளை அடிப்பது தவறு என்று அமெரிக்காவிலும் சொல்வார்கள். பேசத் தெரிந்த குழந்தைகள் 911ஐ அழைத்து என்னை அடிக்கிறார்கள் என்று சொல்லிவிட்டால் போதும் பெற்றோர்களைச் சிறையில் தள்ளுவார்கள் இல்லையென்றால் குழந்தைகளைப் பெற்றோர்களிடமிருந்து பிரித்து காப்பகத்தில் விட்டு விடுவார்கள். ஏனென்றால் அடிப்பதைக் குழந்தைகள் மீதான வன்முறை என்று இந்த மேலைநாடுகளில் கூறுகிறார்கள். அடிப்பதற்கும் கண்டிப்பதற்கும் வேறுபாடு தெரியாதவர்கள். இவர்களுடைய கலாச்சாரத்தில் குழந்தைக்கு வளர்ப்புத்தந்தை, தாய் என்று ஏகப்பட்ட குழப்பங்கள். மனநலம் குன்றியவர்களும் அதிகம். ஒரு சில இடங்களில் தவறுகள் நடக்கிறது தான். அதற்காக இப்படியா?

இந்தியாவில் பக்கத்து வீடு, நண்பர்களின் வீடுகளுக்குச் செல்லும் பொழுது அவர்கள் சமைப்பதை நமக்கும் கொடுப்பார்கள். நாமும் வாங்கி உண்போம். ஆனால் மேலை நாடுகளில் அப்படி எளிதில் செய்துவிட முடியாது. குழந்தைகளின் பெற்றோர்களிடம் முன்அனுமதி கேட்க வேண்டும். இது நல்லதுக்குத் தான். பல குழந்தைகளுக்கும் இங்கு உணவு ஒவ்வாமை இருக்கிறது. அதனால் பாதிப்பு ஏற்பட்டால் அவ்வளவு தான். நான் பழகிய வரையில் குழந்தைகளும் எதுவும் சாப்பிட மாட்டார்கள். அப்படியே சாப்பிட்டாலும் இந்த ஊர் ஜூஸ், ரொட்டி, இனிப்புகளைத் தான் விரும்புவார்கள். ஒரு சில குழந்தைகளே நாம் சாப்பிடும் உணவை விரும்பிச் சாப்பிடுவார்கள். அது அவர்களின் குடும்பத்துடன் இருக்கும் நம் பழக்கத்தைப் பொறுத்தது. அதனால் நன்கு பரிச்சயமில்லாத மேலைநாட்டுக் குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதை நாம் செய்யக் கூடாது.

அதே போல, குழந்தைகளைத் தொட்டும் பேசக்கூடாது. அதுவும் இங்கு தவறாகவே பார்க்கப்படும். குழந்தைகள் மீதான வன்முறை இங்கு அதிகம் இருப்பதால் இத்தகைய வழக்கங்கள் என்று தெரிந்து கொண்டேன். சில விஷயங்களை நாமும் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இந்தப் படத்தில் தன்னுடைய வீட்டில் தன் சொந்தக் குழந்தைகளை இந்திய முறைப்படி வளர்க்கும் பெண்ணிற்க்கு அராஜகம் நடக்கிறது. அது தான் கொடுமையாக இருக்கிறது.

நார்வேயில் குழந்தைகளைத் தத்து கொடுக்க புலம்பெயன்றவர்களின் குழந்தைகளைக் கையகப்படுத்தி பெரும் வியாபாரமாகச் செய்வதாக குற்றச்சாட்டு உள்ளது. மிஸஸ் சாட்டர்ஜி வெர்சஸ் நார்வே திரைப்படம், உணர்வுப்பூர்வமாகவும், சிந்தனையைத் தூண்டும் வகையிலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. நடிகர்களின் நடிப்பு சிறப்பாக உள்ளது. கலாச்சார சார்பு, குழந்தைகள் நலன் போன்ற சிக்கல்களை ஆராய்வதில் படம் வெற்றி பெற்றுள்ளது. கலாச்சார வேறுபாடுகள் எவ்வாறு தவறான புரிதலுக்கு வழிவகுக்கும், குடும்பங்களைச் சிதைக்கும், சிறுபான்மை குழுக்களுக்கு எதிராக குழந்தைகள் நல அமைப்புகள் எவ்வாறு சார்புடையதாக இருக்கும் என்பதையும் படம் காட்டுகிறது.

No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...