Wednesday, April 26, 2023

நட்சத்திரவாசிகள்

"இதைப் படிச்சுப் பாருங்க லதா. ரொம்ப நல்லா எழுதியிருக்கார்" என்று கவிஞர் பெருந்தேவி அவர்கள் எனக்கு அன்பளிப்பாக வழங்கிய புத்தகம் 'நட்சத்திரவாசிகள்'. கிண்டிலில் வேறு வழியின்றி வாசித்தாலும் கையில் புத்தகத்தை வாசிப்பது போல வேறு சுகமில்லை. தூங்குவதற்கு முன் படிக்க கிடைத்த வாய்ப்பைத் தவற விடுவானேன் என்று உடனேயே படிக்க ஆரம்பித்து விட்டேன். 

நம்முடைய அப்பாக்கள் வியாபாரம், அரசு அல்லது உள்ளூர் தனியார் அலுவலகத்தில் வேலை என்றே பழக்கப்பட்டுப் பலரும் வளர்ந்தோம். அம்மாக்கள் பெரும்பாலும் வீட்டில் இருந்து குடும்பத்தை நிர்வகித்து வந்தார்கள். நம்முடைய தலைமுறையில் ஆண்களும் பெண்களும் அதிகளவில் படித்து அதுவும் தொழிநுட்ப புரட்சி ஏற்பட்ட காலத்தில் பணிகளுக்குச் செல்ல ஆரம்பித்தோம். கணினியில் வேலை பார்ப்பதே கெளரவம் என்ற அளவிற்கு அதன் முக்கியத்துவம் மாறி விட்டது. அப்பாக்கள் ஒரு வருடத்தில் வாங்கிய சம்பளத்தை ஒரு மாதத்தில் வாங்கும் அளவிற்கு சக்தி படைத்த உலகமாக மாறி பலரையும் ஏங்க வைத்து கும்பல் கும்பலாக கணினி வகுப்புகளுக்குச் செல்ல ஆரம்பிக்க, கல்லூரிகளும் கல்லா கட்டா ஆரம்பித்தது. 

இன்றைய இளைஞர் பட்டாளங்களும் 'பளபளா' கட்டடங்களில் சுத்தமாக உடையணிந்து வேலை செய்வதையும் சந்தர்ப்பம் கிடைத்தால் வெளிநாட்டிற்குச் சென்று வருவதையும் பெருமையாக நினைத்துக் கொண்டிருக்கும் காலத்தில் உண்மையாகவே இந்த கண்ணாடி அலுவலகங்களுக்குள் என்ன தான் நடக்கிறது என்பதை அனுபவப்பூர்வமாக அழகாக எழுதியிருக்கிறார் ஆசிரியர் கார்த்திக் பாலசுப்ரமணியன். 

ஒவ்வொரு வருடமும் சம்பள ஏற்றம் என்பது முந்தைய வருடத்தின் வேலையைப் பொறுத்தே அமைவதால் சதா 'வேலை வேலை' என்று அதற்கு அடிமையாகி வேலை செய்தாலும் பல நேரங்களில் நிர்வாகத்தால் வஞ்சிக்கப்படுகிறோம். பெண்களும் வேலைக்குச் செல்லும் இந்த காலத்தில் சிலரது வீட்டில் ஏற்படும் பிணக்குகளையும் அழகாகப் பதிவு செய்துள்ளார் ஆசிரியர். என்ன தான் பெண் என்பவள் நன்கு படித்து நல்ல வேலையில் திறமையுடன் பணியாற்றினாலும் வீட்டில் அவளுக்கிருக்கும் இடம் மனைவி, அம்மா என்று கூடுதல் சுமைகளில் பங்கு கொள்ளும் ஆண்கள் குறைவே. 

பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும் தொழிநுட்பத்துறையால் ஏற்பட்டிருக்கும் மன அழுத்தம் இன்றைய வாழ்க்கை முறையை மாற்றி வருகிறது என்பதைக் கண்கூடாகவே பார்த்து வருகிறோம். நண்பர்கள் பலரும் வீட்டிற்கு வந்த பின்னும் லேப்டாப்பும் கையுமாகவே இருப்பார்கள். மனைவியும் வேலை செய்பவர் என்றால் கேட்கவே வேண்டாம். இது இந்தியாவில் அதிகம். நேரடியாக எனக்கு அந்த அனுபவம் இல்லை. அதுவுமில்லாமல் ஷிஃப்ட் முறையில் வேலை பார்ப்பதால் ஏற்படும் உடல், மன அழுத்தங்கள் குடும்பத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்று இத்துறையில் ஏகப்பட்ட பிரச்னைகள் உண்டு என்பதை 'ஐடி ஜாப்ஆ? என்ன கவலை?' என்று சொல்பவர்களுக்குப் பதில் சொல்வது போல் கதையாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

இத்தொழிலில் இருக்கும் உழைப்புச் சுரண்டலை, மனிதர்களின் எதிர்பார்ப்பில் ஏற்படும் ஏமாற்றங்களை அழகாகச் சொல்லியிருக்கிறார். எளிதாக கதையோடு ஒன்றிச் செல்ல முடிவதால் வாசிக்க வாசிக்க சுவாரசியமாக இருந்தது. நல்ல படைப்பு.

ஆசிரியருக்கு வாழ்த்துகள்! 


No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...