Thursday, April 13, 2023

Extraordinary Attorney Woo


சில நேரங்களில் புது வேலைகளை ஆரம்பிப்பதற்கு முன் நல்ல கே-டிராமா பார்க்க வேண்டும் போல் இருக்கும். அப்படி ஆரம்பித்தது தான் 'Extraordinary Attorney Woo'. கொரியன் தொடர்களில் முதல் இரண்டு பாகங்களைக் கொஞ்சம் பொறுமையோடு பார்க்க வேண்டும். அன்று ஏனோ பொறுமை இல்லை. வேறு ஏதோ மலையாளம் படம் பார்த்தேன். ராகேஷ், "நன்றாக இருக்கிறது. பாருங்கள்" என்று சொன்னவுடன் மீண்டும் பார்க்க ஆரம்பித்தேன். எப்படி இத்தனை நல்ல தொடரைப் பார்க்காமல் இருந்தேன் என்று என் மேலேயே எனக்கு கோபம் வந்தது.

நான் வழக்கமாக கொரியன் தொடர்களைப் பற்றிக் கூறுவது தான். எப்படித்தான் இப்படி ஒரு கதை இவர்களுக்கு மட்டும் கிடைக்கிறதோ? கதை, கதாபாத்திரங்கள், படமாக்கப்பட்ட விதம், இடங்கள், மெல்லிசை என்று வசீகரிக்கிறது.

கதாநாயகியாக 'Woo Young-woo' கதாபாத்திரத்தில் வரும் பெண் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவராக அருமையாக நடித்திருக்கிறார். அவருடைய கண்களும், விரல்களும், உடல்மொழியும் அற்புதம். பொதுவாகவே ஆட்டிசம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறு திறமைகள் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தப்பெண் அசாத்திய திறமை கொண்டவராக காண்பிக்கப்பட்டுள்ளார். உண்மையில் குறைந்த சதவிகிதத்தில் தான் இந்த திறமை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கிறது என்கிறார்கள். ஆனால் பொது இடங்களில் இந்த குறைபாடு உள்ளவர்கள் படும் வேதனைகளை அறிந்து கொள்ள ஒரு சிறிய வாய்ப்பாகவும் குறைபாட்டினைப் பற்றின விழிப்புணர்வாகவும் நிச்சயமாக இந்த தொடர் வெற்றிகரமாகச் செய்துள்ளது.

16 பாகங்களில் குடும்பம், பணியிடம், நண்பர்கள், காதல், விதவிதமான வழக்குகள் என்று அனைத்தையும் ஒரு சேர அழகான மாலையாக தொடுத்திருக்கிறார்கள். ஐந்து வயது வரை பேசாத குழந்தை பேசுவதில் ஆரம்பிக்கிறது தொடரின் சுவாரசியம். குறைபாடு உள்ளவர்களின் நெருங்கிய உறவுகள் படும்பாட்டையும் அழகாகச் சொல்கிறது இந்த தொடர். அந்தப் பெண்ணிற்கு கிடைத்தது போல நல்ல புரிதல் கொண்ட தந்தையும் காதலனும் நண்பர்களும் கிடைத்தால் குறைபாடுள்ளவர்களின் வாழ்க்கை இனிமையான ஒன்றாகவே இருக்கும். அவளின் திமிங்கில ஒப்புமைகளும் அருமை.

2024ல் தொடரின் இரண்டாவது சீசன் வரவிருக்கிறது. ஆவலுடன் காத்திருக்கிறேன்.





No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...