Monday, April 24, 2023

9. குப்தகாசி – பத்ரிநாத்

எங்களது சமீபத்திய கங்கையை நோக்கிய பயணம் 'சொல்வனம்' இதழில் கட்டுரைத் தொடராக வெளிவருகிறது. ஒன்பதாவது தொடராக  குப்தகாசி-பத்ரிநாத் பயணம் பற்றிய கட்டுரையை சொல்வனத்தில் படிக்க இங்கே சொடுக்கவும் குப்தகாசி – பத்ரிநாத்.

நதிகளும் மலைகளும் சூழ்ந்த இயற்கை அழகுடன் பனிச்சறுக்கு விளையாட்டு, மலையேற்றம், நடைபயணம், ஆயிரம் வருடங்களுக்கும் மேலான புராதன கோவில்கள் என்று அனைத்து வயதினரும் சென்று வர உகந்த மாநிலமாக இருக்கிறது உத்தரகாண்ட். நாங்கள் அங்கு தங்கியிருந்த ஒவ்வொரு நாளும் உண்ணும் உணவிலிருந்து சென்று வந்த கோவில்கள் வரை வாழ்க்கையில் மறக்க முடியாத இன்ப அனுபவமாக இருந்தது. கேதர்நாத்தின் ‘சில்ல்ல்ல்ல்’ அனுபவத்திற்குப் பிறகு ‘சார்தாம்’ யாத்திரையின் நான்காவது கோவிலான பத்ரிநாத்திற்குச் செல்ல ஆயத்தமானோம்.

அதிகாலையில் பறவைகளின் சங்கீதத்தில் விழித்து பனிபடர்ந்த மலைகளின் மீது சூரிய பகவான் உலாவரும் அழகுக்காட்சியுடன் அன்றைய விடியல் இனிதே ஆரம்பித்தது. விரைவில் நாங்கள் தயாராக, எங்களுக்கான காலை உணவும் (பிரட், பட்டர், ஜாம்) பொட்டலத்தில் காத்திருந்தது. சூடான தேநீரை அருந்தியபடி மலைகளுக்கிடையில் துள்ளி ஓடிவரும் மந்தாகினி ஆற்றையும் மலைகளையும் அழகான சிகப்பு குடியிருப்புக் கட்டடங்களையும் சூரிய ஒளியில் மின்னும் பனிபடர்ந்த கேதர்நாத் மலையை மீண்டும் ஒருமுறை கண்கள் நிறைய கண்டு திருப்தியுடன் மேனேஜர் கிருஷ்ணா மற்றும் பணியாளர்களிடம் இருந்து விடைபெற்று ஆறரை மணிக்குப் பயணமானோம். ‘பை பை குப்தகாசி’😊அன்று வருண பகவான் சற்றே இளைப்பாறும் நாளாக இருந்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.

வழியெங்கிலும் மந்தாகினியுடன் பயணம். ‘குளுகுளு’ மலைக்காற்று சாமரம் வீச, மலைகளில் ஏறுவதும் இறங்குவதுமாய் வளைந்து நெளிந்து நீண்டு கொண்டே சென்றது சாலை. ஒரு மணிநேரத்தில் ‘உக்கிமத்’ என்ற அழகான இயற்கை எழில் கொஞ்சும் நகரத்தில் வண்டியை நிறுத்தி கோவிலுக்குச் சென்று வாருங்கள் என்று இறக்கி விட்டார் டிரைவர்ஜி. எங்களுக்கு முன்பே பல வண்டிகள் அங்கு பயணிகளை இறக்கி விட்டுக் காத்திருந்தது. பனிசூழ்ந்த மலையடிவாரத்தில் மந்தாகினி, அலக்நந்தா நதிகள் சங்கமிக்கும் ஆற்றங்கரையில் கடல் மட்டத்திலிருந்து 1311 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள உக்கிமத் நகரம் ஒரு புனித நகரமாகும். இங்குள்ள ‘ஓம்காரேஷ்வர்’ கோவிலுக்குச் செல்லும் வழியில் நான்கைந்து கடைகளில் அர்ச்சனைப் பொருட்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். ஒரு கடையில் தட்டில் மாலையுடன் அர்ச்சனைக்கு வேண்டிய பொருட்களை வைத்துக் கொடுக்க, வாங்கிக் கொண்டு ஏற்றத்தில் இருந்த கோவிலுக்குள் நுழைந்தோம்.

வண்ணச்சித்திரங்களுடன் மரவேலைப்பாடுகள் கோவில் முகப்பை அலங்கரிக்க, படியேறி உள்ளே சென்றால் பழமையான கோவில் கோபுரம் உயர்ந்து நிற்கிறது. ஒருவர் அழகாக மேளம் வாசித்துக் கொண்டிருந்தார். கேட்பதற்கு இனிமையாக இருந்தது. சிறியதும் பெரியதுமாக சந்நிதிகள் வண்ணமயமாக கண்களைக் கவர்ந்தது. பனிக்காலத்தில் கேதர்நாத், மத்யமஹேஷ்வர் ‘பஞ்ச கேதர்’ தலங்களிலிருந்து உற்சவ மூர்த்திகளை இந்தக் கோவிலில் வைத்து பூஜை செய்து வணங்குகிறார்கள்.பனிக்காலம் முடிந்தவுடன் மீண்டும் சிவலிங்கங்கள் அந்தந்த கோவில்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதாக அங்கிருந்த அர்ச்சகர் கூறினார். இங்குள்ள கோவில்களில் தரைமட்டத்தில் தான் சிவலிங்கங்கள் இருக்கிறது. சின்னஞ்சிறிய கர்ப்பகிரகம். எதிரே நந்திக்கு ஒரு மண்டபம். கீழே அமர்ந்த படி கணீரென்ற குரலில் ருத்ரம் சொல்லிக் கொண்டே சிவ பூஜை செய்து கொண்டிருந்தார் அர்ச்சகர். நல்ல கூட்டம். ஆறு பேர் நின்றாலே நடுவிலிருந்த சிறிய மண்டபம் நிறைந்து விடுகிறது. பலரும் வீட்டிலிருந்து தண்ணீரும், பாலும் கொண்டு வந்திருந்தனர். நாங்களும் பூஜைப் பொருட்களைக் கொடுத்து திவ்வியமாகக் காட்சி தந்து கொண்டிருந்த சிவனை வழிபட்டு வெளியே வந்தோம். எதிரே இருந்த சந்நிதியில் தான் கேதர்நாத், மத்யமஹேஷ்வர் கோவில் உற்சவமூர்த்திகளை வைத்து வழிபடுகிறார்கள். அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் உயர்ந்த கோவில் கோபுரம். பராமரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்தது. பாண்டவர்கள் பஞ்ச கேதாரங்களின் சிவலிங்கங்களின் தரிசனம் பெற்றதால் இங்கே பஞ்ச கேதார லிங்கங்களின் தரிசனத்தையும் பெற முடிகிறது. வராஹி, சண்டி தேவி, பைரவர்களுக்கு சந்நிதிகள் இருக்கிறது.

இக்கோவிலைப் பற்றின பல சுவையான தகவல்களை அறிவிப்புப் பலகையில் எழுதி வைத்திருக்கிறார்கள்.இக்ஷவாகு குலத்தைச் சேர்ந்த அயோத்தியா மன்னன் மாந்தாதா சிவனை நோக்கித் தவம் புரிய, ஓம்கார ரூபத்தில் சிவன் காட்சி அளித்ததால் ‘ஓம்காரேஷ்வர்’ என்று அழைக்கப்படுகிறார். மேலும் இத்தலத்தில் தான் பாணாசுரனின் மகள் உஷைக்கும் கிருஷ்ணரின் பேரன் அநிருத்தனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது என்பது ஐதீகம். அமைதியான சுத்தமான கோவில். குப்தகாசிக்குச் செல்பவர்கள் மறக்காமல் இக்கோவிலுக்குச் சென்று வரவும்.

திருப்தியுடன் வெளியில் வந்தால் லஸ்ஸி பானை ‘வா வா அன்பே அன்பே’ என்று அழைத்தது. ஆசையிருந்தாலும் எதற்கு வம்பை விலைக்கு வாங்குவானேன். இன்னும் ஒரு கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்பதால் காசியில் குடித்துக் கொள்ளலாம் என்று அப்போதைக்கு லஸ்ஸி ஆசையை ஒத்தி வைத்துவிட்டேன். காலை எட்டு மணிக்குச் சீருடை அணிந்து முதுகில் புத்தகப்பையுடன் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளைப் பார்க்க ஆனந்தமாக இருந்தது. மலைகள் மீதேறி வளைந்து வளைந்து சென்ற பாதை உச்சிக்குச் சென்றவுடன் இறங்கிச் செல்வதுமாய் மீண்டும் மலைகளூடே பயணம். இதமான வெயில். வழியில் மலையேற்ற பயிற்சிமுகாம்கள் பலவும் கூடாரங்களுடன் இருந்தன. அங்கிருந்து ‘சொப்தா’ நகருக்குச் சென்று துங்க்நாத்திற்கு மலையேறிச் செல்ல பெரும் கூட்டம் காத்திருந்தது. இதற்காக பல நிறுவனங்கள் இத்துறையில் பயிற்சி பெற்றவர்களை வைத்து அது பெரும் லாபகரமான தொழிலாக மாறிவருகிறது என்பதைக் கண்கூடாகவே பார்த்தோம். இரவில் வழியில் தங்கிச் செல்லும் வசதிகள் எல்லாம் கூட இருக்கிறது! இதைப்பற்றி முன்பே தெரிந்திருந்தால் ஒருநாள் கூடாரத்தில் தங்கி துங்க்நாத்திற்கு மலையேறிச் செல்ல முயற்சித்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டோம். ம்ம்ம்… எங்களுடன் தங்கியிருந்த மும்பை பெண் வித்யா தனியார் நிறுவன வழிகாட்டியின் துணையுடன் துங்க்நாத்திற்கு செல்ல சொப்தாவிற்குச் சென்றிருந்தார். இந்தியாவிலும் சில இடங்களுக்குப் பெண்கள் தனியாக பயணம் செல்ல முடிகிறது, செல்கிறார்கள் என்பதே என்னை பொறுத்தவரையில் நல்ல முன்னேற்றம் தான். ஆனால் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை என்பது தான் துயரம்😔

9.30 மணிக்கு மலைப்பிரதேச பகுதியில் சாலையோரத்தில் வரிசையாக நின்றிருந்த வண்டிகளுடன் எங்கள் வண்டியும் நின்றது. மக்கள் கூட்டம் கூட்டமாக இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார்கள். கங்கோத்ரி, யமுனோத்ரி பகுதிகளில் இருந்த மலைப்பகுதி போலன்றி ‘பச்சைப்பசே’லென மலைத்தொடர்கள் கண்களுக்கு இதமாக காட்சியளித்தது. இந்தப் பிரதேசத்தை ‘மினி ஸ்விட்ஸர்லாந்து’ என்று அழைக்கிறார்கள். பனிக்காலத்தில் பனிச்சறுக்கு செய்ய பயணியர்கள் அதிகம் வரும் இடம் என்றும் தெரிந்து கொண்டோம். நாங்கள் நின்றிருந்த மலை மீதிருந்து எதிரே  ‘நந்தா தேவி’ மலைச்சிகரங்களை வெண்பஞ்சு மேகங்கள் உரசிச் செல்லும் காட்சி மனதைக் கொள்ளை கொண்டது. சில பல படங்களை எடுத்துக் கொண்டோம். அனைவர் கைகளிலும் அலைபேசிகள். நேரில் இயற்கையை ரசிப்பதை விட காமெரா வழியாக தங்களைப் படமெடுத்துக் கொள்வதில் தான் ஆர்வமாக இருந்தது கூட்டம்😎

கடையில் தேநீர் அருந்தி விட்டு மலைப்பாதையில் அமர்ந்து அசைபோட்டுக் கொண்டிருந்த மாடுகளைக் கடந்து உயரமான தேவதாரு, ஓக் மற்றும் வேறு பல மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் பயணம். அந்தப் பகுதி முழுவதும் ‘குளுகுளு’வென்றிருந்தது. ஆனால் ‘கொய்ங்ங்ங்ங்ங்’ என காதை அடைக்கும் பூச்சிகளின் வினோத சத்தம் தூரத்திலிருந்தே கேட்க ஆரம்பித்து விட்டது. ‘சிக்கடாஸ்’என்னும் பூச்சியினம் கோரஸ் பாடுவதைக் கேட்டுக் கொண்டே ஏராளமான மலைக்கிராமங்களைக் கடந்து வந்தோம். இம்மலைப்பிரதேசத்தின் காடுகளின் வளர்ச்சிக்கு இந்தப் பூச்சியினங்களின் பங்கு மிக அதிகம். மனித நடமாட்டமில்லாத பகுதிகளில் இயற்கை செழிப்பாக இருப்பதைக் கண்டதாலோ என்னவோ இயற்கையை அழிப்பதில் நாம் தான் இருப்பதிலேயே மோசமான மிருகங்களாக இருக்கிறோம் என்ற குற்ற உணர்வும் மேலோங்கியிருந்தது😔

சிறு சிறு மலைக்கிராமங்கள். தெருக்களில் அழகிய சிறு கோவில்கள். முதுகில் புல் மூட்டையைச் சுமந்து செல்லும் மனிதர்கள், இரு சக்கர வாகனங்கள், கார்கள், காதில் போனை வைத்துக் கொண்டு கழுத்தைச் சாய்த்துப் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுபவர்கள் என ‘சமோலி’ மாவட்டத்தில் காட்சிகளுக்குப் பஞ்சமில்லை. மலைகளில் ‘படி விவசாயம்’ செழிப்பாக நடக்கிறது. ஒரு வண்டி செல்லும் பாதை அளவில் குறுகிய சாலை. சில இடங்களில் சாலை விரிவாக்க வேலைகள் நடந்து கொண்டிருக்க, சிறு போக்குவரத்து நெரிசல்.

‘சமோலி’யில் உள்ள ‘நந்தா தேவி தேசிய பூங்கா’, பல அரிய மற்றும் அழிந்து வரும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் தாயகமாக விளங்குவதால் அதனைக் காக்கும் பொருட்டு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றான நந்தா தேவி சிகரத்தின் பெயரால் அழைக்கப்படும் இந்த பூங்கா 630 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. அலக்நந்தா நதியின் ஆதாரமான நந்தா தேவி பனிப்பாறை உட்பட பல பனிப்பாறைகள் இந்த பூங்காவில் உள்ளன. அங்கெல்லாம் செல்ல வேண்டுமானால் தனியாகத் திட்டமிட்டு வந்திருக்க வேண்டும். பார்ப்பதற்கு அத்தனை அழகிய பொக்கிஷங்களைத் தன்னுள்ளே வைத்திருக்கிறது இந்த ‘சமோலி’ மாவட்டம்.

வழியில் பல சீக்கியர்கள் கூட்டம் கூட்டமாக பேருந்துகளிலும், கார்களிலும், பைக்குகளிலும் செல்வதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. இவர்கள் ஏன் இந்தப் பக்கம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது தான் சீக்கியர்களின் கோவிலானா ‘ஹேம்குந்த் சாஹிப்’ செல்லும் வழிகாட்டியைப் பார்த்தோம். பத்தாவது சீக்கிய குருவான குரு கோவிந்த் சிங்குக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயம் சீக்கியர்களுக்கு ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கருதப்படுகிறது என்பதையும் அறிந்து கொண்டோம்.

‘கோபேஷ்வர்’ ஊரை நெருங்க, சிற்றருவிகள், இயற்கைக்காட்சிகள் என குறைவில்லாத மலைப்பயணத்தில் அலுப்பே ஏற்படவில்லை. அடுக்கடுக்காக வீடுகள், அலுவலகங்கள், கல்லூரிகள் என நாங்கள் கடந்து வந்ததில் சற்றே பெரிய ஊர் இது தான். மதியம் 1.50க்கு ‘ஜோஷிமத்’ ஊரின் நடுவிலிருக்கும் நரசிங்கப் பெருமாள் கோவிலை வந்தடைந்தோம். வழக்கம் போல் தெருவில் எங்களை இறக்கி விட்டுப் போய் விட்டார் டிரைவர்ஜி. கோவில் வாசலில் அர்ச்சனைப் பொருட்கள், பிரசாதங்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். இங்குள்ள நரசிங்கப் பெருமாளைத் தரிசித்து விட்டு பத்ரிநாத்தில் இருக்கும் ஸ்ரீபத்ரிவிஷால் தெய்வத்தை வழிபடவேண்டும் என்பது ஐதீகம். பனிக்காலத்தில் பத்ரிநாத் கோவிலில் இருக்கும் உற்சவ மூர்த்திகள் இக்கோவிலில் வைத்து வழிபடப்படுவதால் மிகவும் பிரபலமான கோவிலாக இருக்கிறது. ஆதி சங்கராச்சாரியார் வேதாந்த கொள்கையினைப் பரப்ப உருவாக்கிய நான்கு மடங்களில் இதுவும் ஒன்று. அவர் ஐந்து வருடங்கள் இங்கு தங்கி உருவாக்கிய கோவில். ‘ஜ்யோதிர்மட்’ என்று அவர் பெயரிட்ட இடமே இன்று ‘ஜோஷிமத்’ என மருவி உள்ளது. இங்கிருந்து 41கிமீ தொலைவில் பத்ரிநாத் அமைந்துள்ளது.

ஜோஷிமத் கோவிலின் கட்டிடக்கலை குறிப்பிடத்தக்கது. இது நகரா என்னும் வட இந்திய கோபுர கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. ஒரு பெரிய மைய குவிமாடம், பல சிறிய குவிமாடங்கள் மற்றும் கோபுரங்கள் உள்ளன. பிரதான கோவில் சாம்பல் நிற கிரானைட்டால் கட்டப்பட்டுள்ளது. மண்டபம் மற்றும் கர்ப்பகிரகமும் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. விஷ்ணு, பிரம்மா, விநாயகர், ஹனுமான், துர்கா போன்ற பல்வேறு இந்துக் கடவுள்களுக்கு சந்நிதிகளும் கோவில் வளாகத்தில் உள்ளன. பண்டைய இந்திய கட்டிடக்கலையின் அழகையும் மகத்துவத்தையும் கண்டுகளிக்க இது ஒரு சிறந்த இடமாகும். இந்தியாவின் ஆன்மீக வரலாற்றின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் இந்தக் கோவிலை பத்ரிநாத்/கேதார்நாத்/குப்தகாசி செல்பவர்கள் தவறாமல் சென்று பாருங்கள்.

மலைகள் சூழ, நெருக்கமான குடியிருப்புகளுக்கிடையே பரந்து விரிந்திருக்கும் கோவிலில் மன அமைதிக்கும் குறைவில்லை. நீண்ட நேரம் கோவில் வளாகத்தில் இருந்த பெரிய மரத்தின் கீழ் நின்று அமைதியை ரசித்துக் கொண்டிருந்தோம். தங்கள் வேண்டுதல் நிறைவேற மரத்தில் சிகப்புத் துணியில் முடிந்து வைத்திருந்தார்கள் பக்தர்கள். வெண்மேகம் மலையை முத்தமிட்டுச் செல்லும் அழகை ரசித்துக் கொண்டே கோவிலை விட்டு வெளியில் வந்தோம். கோவிலைச் சுற்றி வசிப்பிடங்கள் தாழ்வான, உயரமான பகுதிகளில் என்று எங்கும் வியாபித்திருக்கிறது. பார்க்க கொஞ்சம் அச்சமாகவும் எப்படி பனிக்காலத்தைச் சமாளிக்கிறார்களோ என்று வியப்பாகவும் இருந்தது! அங்கிருந்து தொலைதூர நெடுஞ்சாலையைத் தெள்ளத் தெளிவாகப் பார்க்க முடிகிறது!

அரைமணி நேரத்தொலைவில் ‘விஷ்ணுபிரயாக் ஹைட்ரோ’ தனியார் நீர் மின் திட்டம் என்று பச்சை வண்ணத்தில் பெரிய அறிவிப்புப் பலகை ஒன்றைப் பார்த்தோம். இது காங்கிரஸ் கூட்டணி காலத்திலேயே உருவாக்கப்பட்டு விட்டது. உத்தரகாண்டின் வருமானம் அதிகளவில் இந்த நீர் மின் திட்டத்தின் மூலம் கிடைப்பதாக கங்கோத்ரிக்குச் செல்ல காத்திருந்த வேளையில் உள்ளூர் ஓட்டுநர் கூறியிருந்தார். “அதனால் சுற்றுப்புறச்சூழல் பாதிப்பும் அதிகம். ஆனால் பணம் நிறைய கிடைக்கிறது என்று சுரண்ட ஆரம்பித்து விட்டார்கள்” என்று வருந்தியதும் நினைவிற்கு வந்தது. நாங்கள் பார்த்த வரையில் ஒரு பெருமழைக்கே மலைச்சரிவுகளும் சாலைகள் துண்டிக்கப்படும் நிலையில் தான் அந்த பிரதேசமே உள்ளது. மலைகளும் எளிதில் நொறுங்கி விடும் தன்மையுடன் தான் இருக்கிறது. இத்தகைய இடத்தில் தான் அதிகளவில் தனியார் நீர் மின்திட்ட ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பலனைத்தான் தற்போது ‘ஜோஷிமத்’ அனுபவித்துக் கொண்டிருக்கிறது. 2023 ஜனவரி மாதத்தில் பல குடியிருப்புகளில் வெடிப்புகள் ஏற்பட்டிருக்கும் நிலையில் குடும்பங்கள் இடம்பெயருகின்றன. பூகம்ப பாதையில் அமைந்துள்ள இந்த இடத்தில் அதிக எண்ணிக்கைகளில் இத்தகைய மின் ஆலைகள் அமைப்பதை அரசு யோசிக்க வேண்டும். இயற்கையை துஷ்பிரயோகம் செய்வதில் மனிதர்களை மிஞ்ச முடிவதில்லை😔

யோசனையுடன் 3.30 மணியளவில் ‘யோகபத்ரி’ கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். நுழைவாயிலிருந்து குடியிருப்புகளின் வழியே ஒரு கிமீ தூரத்துக்கு நடந்து செல்ல வேண்டியிருக்கிறது. அடுக்கடுக்காக திண்ணை வீடுகள். படிகளில் இறங்கி கோவிலுக்குச் செல்ல வேண்டும். ஜோஷிமத்திலிருந்து 18கிமீ தொலைவில் இருக்கும் இக்கோவிலில் பஞ்ச பாண்டவர்களின் தந்தை பாண்டு மகாராஜா, முனிவரைக் கொன்ற பாவம் தீர தவம் புரிந்ததாக கூறப்படுகிறது. தன்னுடைய இறுதிக்காலத்தில் குந்தி மற்றும் மாத்ரியுடன் யோகபத்ரியை நிர்மாணித்து வழிபட்டதால் பாண்டுகேஷ்வர் கோவில் என்றும்  வனவாசத்தின்போது பாண்டவர்கள் ஒவ்வொரு வருடமும் இங்கு வந்து தங்கள் தந்தைக்குத் திதி கொடுத்தார்கள் என்று கூறப்படுகிறது. அப்பகுதியில் இருக்கும் ‘சப்த பத்ரி’ கோவில்களில் இதுவும் ஒன்று என்று அறிந்த பிறகு மற்ற கோவில்களையும் பார்த்திருக்கலாம் என்று தோன்றியது. இப்படி ஏகப்பட்ட புராதன கோவில்கள் அருகருகே இருப்பதை இனி அங்கு செல்பவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டுச் சென்றால் ‘தேவ பூமி’யை  முழுவதும் அனுபவிக்கலாம்.

நுழைவாயில் மண்டபத்துடன் யோகபத்ரி கோவில் கோபுரம் ‘ஷிகாரா’ எனப்படும் உருளை வடிவில் இருக்கிறது. இதற்கு அருகில் இருக்கும் வாசுதேவ கோவிலைப் பாண்டவர்கள் எழுப்பியுள்ளார்கள். அதன் கோபுரம் வட இந்திய கோவில் கோபுர வடிவில் இருந்தது. ஜோஷிமத்திற்கும் பத்ரிநாத்திற்கும் இடையில் அமைந்துள்ள இக்கோவிலில் யோகபத்ரியும், லக்ஷ்மிநாராயணரும் இருக்கிறார்கள். சந்நிதிக்கு வெளியே வலப்புறத்தில் மகாலக்ஷ்மி சந்நிதி இருக்கிறது. இடப்புறத்தில் வாசுதேவர் சந்நிதி இருக்கிறது. மாத்ரி விக்கிரகமும் உள்ளது. நாங்கள் சென்றிருந்த பொழுது அர்ச்சகர் தீபாராதனை காட்டி விளக்கினார். அங்கிருந்த பெண் அதிகாரி எங்கிருந்து வருகிறோம் என்ற தகவல்களைக் கேட்டு ஒரு நோட்டில் பதிவு செய்து கொண்டார். பயணியர்கள் அதிகம் வந்து செல்லும் அழகான அமைதியான கோவிலில் அன்று நாங்கள் மட்டுமே அந்த நேரத்தில் இருந்தோம். கோவிலின் பின்புறம் வெண்ணிற நுரை பொங்க அலகானந்தா ஆறு மலையில் இருந்து ஓடோடி வரும் அழகும் உயர்ந்த இமய மலையும் ‘ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே. இமய மலையின் அழகைக் காண…’ பாடல் மனதில் ஒலிக்க, அங்கிருந்து வீடுகளைக் கடந்து பத்ரிநாத் நோக்கிப் பயணமானோம்.

காலையிலிருந்து நாங்கள் சென்று வந்த மூன்று கோவில்களும் மனதிற்கு நிறைவைத் தருவதாக இருந்தது. 1000 வருடங்களுக்கும் பழமையான கோவில்கள் இன்றும் அதன் பெருமையைப் பறைசாற்றி நிற்கின்றன. ‘புண்ணிய பூமி’ என்று சும்மாவா சொல்கிறார்கள் என்று மனம் குதூகலித்துக் கொண்டிருக்கும் வேளையில் வண்டி ‘டம்டம்’ என்று மேலும் கீழும் குலுங்கி மழையில் தொலைந்த சாலையில் பயணித்து நினைவுலகத்திற்கு என்னை மீட்டு வந்தது. சாலையோர அருவிகளில் உண்மையாகவே ‘மினரல் வாட்டர்’ ஓடிக்கொண்டிருந்தது😋 நான்கரை மணியளவில் ‘ஹனுமன் சட்டி’ எனும் சாலையோர ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். தூரத்திலிருந்தே காவி வண்ண கோபுரமும் கொடிகளும் தெரிகிறது. வரிசையில் நின்று மக்கள் வணங்கிக் கொண்டிருந்தார்கள். அருகிலேயே பூஜைப் பொருட்களை விற்கும் சிறு கடைகள். எங்கும் எதிலும் காவி மையமாக இருந்தது. ஏராளமான பேருந்துகளும் வண்டிகளும் நின்று கொண்டிருந்தது. அநேகமாக அனைவரும் பத்ரிநாத் செல்பவர்களாக இருந்திருக்கலாம். இங்கே ஆரஞ்சு நிறத்தில் ஆஞ்சநேயர் ராமரை தியானித்துப் பஜனை பாடுவது போன்ற உருவத்தில் அழகாக காட்சியளிக்கிறார்.

 ‘ஜய ஹனுமான ஜ்ஞான குண ஸாகர
ஜய கபீஶ திஹு லோக உஜாகர
ராமதூத அதுலித பலதாமா
அம்ஜனி புத்ர பவனஸுத னாமா…’

என்று எம்எஸ் சுப்புலக்ஷ்மி அம்மா உருகிப் பாடுவது காதில் ஒலிக்க,
‘ராம ரஸாயன தும்ஹாரே பாஸா
ஸாத ரஹோ ரகுபதி கே தாஸா…’ என்று ராமபக்தனை வணங்கி விட்டு வந்தோம். மஹாபாரதத்தில் பீமனும் ஆஞ்சநேயரும் சந்திக்கும் காட்சி ஒன்று வரும். அது இங்கு நடந்தது என்பது ஐதீகம்.

வழியில் சீக்கிய யாத்திரீகர்களை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்து ஒன்று எங்கள் டிரைவர் ஹார்ன் அடித்தும் முன்னோக்கி வர, வந்ததே கோபம் இவருக்கு. “நீ பஸ்ச பின்னாடி எடு. உன்னைய யாரு முன்னாடி வரச்சொன்னா” என்று அப்படியே நடுவழியில் வண்டியை நிறுத்தி விட்டார். இவர் பின்னாடி சென்றால் இப்ப என்ன குறைந்தா போய்விடுவார்? ஆனால் , நமக்குத் தான் வண்டிவண்டியாய் ஈகோ இருக்கிறதே!. சரி. வேடிக்கை பார்க்கலாம் என்று நாங்களும் பார்த்துக் கொண்டிருந்தோம். எங்கள் வண்டிக்குப் பின்னாலும் அந்தப் பேருந்திற்குப் பின்னாலும் வண்டிகள் சேர ஆரம்பித்து, பொறுமையிழந்தவர்கள் ஹாரன் அடிக்க…ம்ஹூம் ! டிரைவர் அசையவே இல்லையே! அதற்குள் இரண்டு சீக்கியர்கள் கீழிறங்கி வந்து இவரிடம் எங்கள் டிரைவர் செய்தது தவறு தான். எங்களுக்காக மன்னித்து வழியை விடுங்கள் ப்ளீஸ்! என்று கெஞ்சிக் கூத்தாடிய பிறகு முணுமுணுத்துக் கொண்டே வண்டியை ரிவர்ஸில் எடுத்தார். தன்மையான மனிதர்களும் இருப்பதால் தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. சரியான முரட்டு ஆசாமியா இருப்பார் போலிருக்கிறது எங்கள் டிரைவர்ஜி! “அது என் தப்பில்லையே” என்றார் திரும்பவும். “அதான் அவங்க மன்னிப்பு கேட்டுட்டாங்கல்ல” என்றேன். ஒருவழியாக அந்த இடத்திலிருந்து கிளம்பினோம்.

ஜோஷிமத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியெங்கும் இயற்கையென்னும் இளைய கன்னி கூடவே வளைய வருகிறாள். தொடர்ந்து சென்று கொண்டிருந்த எங்கள் பயணத்தை ஆட்டுமந்தை கூட்டம் ஒன்று நிறுத்தி விட்டது. ஏதோ அவர்கள் மனது வைத்துப் போனால் போகிறதென்று எங்களுக்கு வழிவிட, தப்பித்துச் சென்றோம்😊 பிரதமரின் வருகையையொட்டி சாலை விரிவாக்கப் பணிகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருந்தது. அதனால் வண்டிகள் குதித்து குதித்து செல்ல ஒரே களேபரம் தான்! வெகு அருகில் சீன ஆக்கிரமிப்பு திபெத் எல்லை இருப்பதால் தீவிர ராணுவப்படையினர் கண்காணிப்பும் இந்தப் பகுதிகளில் அதிகம் காணப்பட்டது.

வானில் கருமேகங்கள் ஊர்வலம் வர ஆரம்பிக்க, மாலை ஆறு மணியளவில் பத்ரிநாத் வந்து சேர்ந்து விட்டோம். எங்களுடைய ‘சார்தாம்’ யாத்திரையின் கடைசி தலம். நாங்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘அம்ரிதரா’ விடுதிக்குப் புதிய சாலை போடும் பணிகள் நடந்து கொண்டிருந்தது. உயர்தர நட்சத்திர விடுதி. மாடியிலிருந்து எதிரே கருமேகங்கள் சூழ்ந்த பனிபடர்ந்த மலையும், பத்ரிநாத் கோவில் கோபுரமும் ஊரும் தெரிய, “நாராயணா! உன்னிடம் வந்து சேர்ந்து விட்டோம்” என்று மகிழ்ச்சியாக இருந்தது.

சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு வருவதற்குள் வெளிச்சம் விலகி இருள் கவிழ, குளிரும் மெல்ல தழுவ, கருமேகங்கள் மிரட்டிக் கொண்டிருந்த வேளையில் கோவிலுக்குச் சென்று வந்துவிடலாம் என்று கிளம்பி விட்டோம். இலவச உணவு, தங்கும் வசதிகளுடன் வெவ்வேறு மடங்களைச் சேர்ந்த தர்ம சத்திரங்கள். பயணிகள் தங்க விடுதிகள், உணவகங்கள், கடைகள் என்று ‘ஜேஜே’ என்று இருக்கிறது ஊர். கோவிலில் இருந்து ஒரு கிமீ தொலைவில் எங்களை இறக்கி விட்டு அங்கேயே வண்டியில் காத்திருப்பதாக டிரைவர்ஜி சொல்லி விட, நாங்களும் பஜாரைப் பார்த்துக் கொண்டே செல்லலாம் என்று இறங்கி விட்டோம். சனிக்கிழமை வேறு. சரியான கூட்டம். ஆயுர்வேத மூலிகை கடைகளில் இருந்து மணிமாலைகள், பரிசுப்பொருட்கள், துணிக்கடைகள், உணவகங்கள் என்று அனைத்துவித கடைகளும் கோவிலுக்குச் செல்லும் பாதையில் மின்னொளியில் ஜொலித்துக் கொண்டிருந்தது. கேதர்நாத்தில் சந்தித்த செட்டியார் குடும்பங்களை மீண்டும் சந்தித்துப் பேசினோம். மகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் கோவிலுக்குச் செல்லும் வழியைக் கூறி மீண்டும் சந்திப்போம் என்று விடைபெற்றுச் சென்றார்கள்.

அலக்நந்தா ஆறு பெரும் பாய்ச்சலுடன் ஓடிக் கொண்டிருக்க, பாலத்தின் மேல் ஏறி ஆற்றைக் கடந்து மறுபுறம் சென்றால் ‘தப்தகுண்டம்’ புண்ணிய தீர்த்த தொட்டி வருகிறது. பலரும் குளித்துக் கொண்டிருந்தார்கள். பெண்களுக்கென தனி தீர்த்த குண்டம் இருந்தது. சூடான தண்ணீரில் ஆனந்தமாக குளித்து அருகிலேயே உடைமாற்றிக் கொள்ளும் வசதிகளும் இருக்கிறது. குளிர்ப்பிரதேசத்தில் இப்படியொரு சுடுநீர் சுனை! தொட்டிகளைத் தவிர,யாத்ரீகர்கள் வசதிக்காக வரிசையாக குழாய்களில் தீர்த்தம் வரும் படி செய்திருந்தார்கள். நாங்கள் தீர்த்தத்தைத் தலையில் தெளித்துக் கொண்டோம். செருப்புகளை ஓரிடத்தில் வைத்து விட்டு படிகளில் ஏறி பார்த்தால் மலையடிவாரத்தில் வண்ண மயமான முகப்பில் சங்கு, சக்கரம் நடுவில் ஓம் சின்னத்துடன் கோவில் கோபுரம் பார்ப்பதற்கு திபெத்தியர் கோவில் போல இருந்தது. படிகளில் நல்ல கூட்டம். மெல்ல நகரும் மக்கள் வெள்ளத்தில் நாங்களும் ஐக்கியமானோம். இந்தக் கோவிலுக்கும் நிறைய புராணக்கதைகள் உண்டு.

108 திவ்யதேசங்களில் 99வது திவ்ய தேசம் ஆதி சங்கராச்சாரியாரால் நிறுவப்பட்ட இந்த விஷ்ணு கோவில். லக்ஷ்மிக்கு மறுபெயர் பத்ரி. அவளின் நாதன் குடியிருக்கும் ஊர் என்பதால் பத்ரிநாத் என்ற பெயர்க்காரணம். உயரமான கதவுகளைத் தாண்டி உள்ளே சென்றவுடன் சந்நிதி தெரிகிறது. சாளக்கிராமத்தினால் ஆன மூலவர் பத்ரிவிஷால், லட்சுமி, விநாயகர், நர நாராயணன், கருடன், குபேரனுடன் திவ்ய அலங்காரங்களுடன் காட்சி தந்து கொண்டிருந்தார். அந்த மண்டபம் முழுவதும் மக்கள் அமர்ந்து பூஜை செய்து கொண்டிருந்தார்கள். நம் பாவங்களைப் போக்கும் அவன் தாள் வணங்கி நின்றோம். அத்தனை அழகு! தெய்வீகம்! வெளியில் மழை கொட்ட ஆரம்பித்து விட்டது. ஒவ்வொரு சந்நிதியும் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த சபா மண்டபத்தில் ஒருவர் பஜனைப்பாடல்கள் பாடிக் கொண்டிருந்தார். மழையைப் பொருட்படுத்தாது மக்கள் நின்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். நவதுர்கா, கருடன், லட்சுமி நரசிம்மர் சந்நிதிகளும் உண்டு. ஆதி சங்கராச்சாரியார், ராமானுஜர், வேதாந்த தேசிகர் சந்நிதிகளில் அனைவரையும் வணங்கி மகிழ்வுடன் கிளம்பினோம்.

வரும் வழியில் சில நினைவுப் பொருட்களை வாங்கிக் கொண்டு வண்டியில் ஏறி விடுதிக்குத் திரும்பினோம். சுவையான இரவு உணவை உண்ட திருப்தியுடன் ‘சார்தாம்’ யாத்திரையை பரிபூரணமாக அனுபவித்து ஆயிரம் வருடங்களுக்கும் மேலான பழமையான பல்வேறு கோவில்களுக்குச் சென்று வந்த மனதிருப்தியுடனும் அடுத்த நாள் பயணத்தைப் பற்றின எதிர்பார்ப்புடனும் உறங்கச் சென்றோம்.

ஜெய் ஸ்ரீபத்ரி விஷால்!

No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...