Monday, December 23, 2024

அங்கிள் சாமின் உண்மையான முகம்


சில வாரங்களுக்கு முன் அமேசான் பிரைமில் படங்களைப் பார்க்கத் தேடிக்கொண்டிருந்த பொழுது அகப்பட்டது தான் 'Rainmaker'. கதாநாயகன் யார் என்று பார்த்தால் நம்ம 'மேட் டேமன்'. இவர் நடித்த படங்கள் எல்லாமே பார்க்கிற வகையில் தான் இருக்கும். அவர் இளைஞனாக இருக்கின்ற பொழுது எடுத்த படமென்றால் தொண்ணூறுகளில் எடுத்த படம் என்று தெரிந்து விட்டது. இந்தப் படத்தை இதற்கு முன் பார்த்தது போலவே எங்கள் இருவருக்கும் தோன்றியது. அநேகமாகப் பார்க்க ஆரம்பித்து நடுவில் தூங்கி விட்டிருப்பேன். அதனால் சில காட்சிகள் பார்த்தது போலவே இருந்தது.

தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தோம். அமெரிக்காவில் தனியொருவனாக வாழும் ஏழை மாணவர்களின் நிலையை நன்கு பிரதிபலித்திருந்தார்கள். இந்தப்படத்தில் ஏழ்மை, பெருநிறுவன முதலைகள், நீதிமன்றம், குடும்ப வன்முறை என்று அமெரிக்காவின் மறுமுகத்தை நன்றாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். 

நமக்குத் தெரிந்த வாழ்க்கையெல்லாம் இந்திய மருத்துவர்கள், பொறியாளர்கள் என்று சராசரி அமெரிக்கர்களை விட கூடுதல் வருமானம் ஈட்டும் இந்தியர்கள். கலர்கலராக 'இன்ஸ்டா'வில் போடும் படங்களை வைத்து அமெரிக்க வாழ்க்கை இப்படித்தான் என்று இன்ஸ்டா காலத்திற்கு முன்பு நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். இங்கு வந்த பிறகு தான் தெரிந்தது வறுமையின் நிறம் வெள்ளையும் கருப்புமாக இங்கும் இருக்கிறது என்று.

கல்லூரியில் படிப்பதென்பது பலருக்கும் இங்கு கனவாகவே இருந்தது. ஓரளவு வசதி இருந்தால் தான் அதெல்லாம் சாத்தியம் என்றிருந்த நிலை இப்பொழுது மெல்ல மாறிவருகிறது. மேற்படி சட்டம், மருத்துவம் பயில ஆண்டுகளும் செலவுகளும் அதிகம் என்பதால் ஏழை மாணவர்களின் பாடு திண்டாட்டம் தான். அரசு உதவி அளித்தாலும் கடன் வாங்கித்தான் படிக்க வேண்டும். அப்படிப்பட்ட கதாபாத்திரம் தான் கதாநாயகனுக்கு. வாடகை கொடுக்க முடியாமல் கதாநாயகன் காரில் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

அங்கே, இங்கே ஏதோ கிடைக்கிற துக்கடா வேலைகளைப் பார்த்துக் கொண்டு சட்டம் படித்துக்கொண்டிருக்கின்றான். அதே நேரத்தில் பகுதி நேர வேலையின் மூலமாக மருத்துவ காப்பீடு தொடர்பான வழக்கு ஒன்றில் கட்சிக்காரர்களுக்கு உதவ தானாகவே சென்று ஆஜராகிறான். எப்படியாவது தன் கட்சிக்காரர் ஜெயித்து விட வேண்டும் என்று வெறிகொண்டு உழைக்கும் கதாபாத்திரம். நடுவே ஒரு குடும்ப வன்முறை வழக்கிற்கும் ஆஜராகிறான்.

மகனின் நோய்க்குச் சிகிச்சை அளிக்க இன்சூரன்ஸ் நிறுவனம் ஒத்துக்கொள்ள மறுத்து பெற்றோர் செலவழிக்க முடியாமல் மகன் இறந்து விடுகிறான். அவர்களுக்காக காப்பீட்டு நிறுவனத்தை எதிர்த்து வழக்கு தொடர்கிறான் கதாநாயகன். பெரிய நிறுவனங்கள் ஏழைகளுக்கு உதவ மாட்டார்களே தவிர, தங்களுக்காக வாதாட பெரிய தலைகள் கொண்ட வழக்கறிஞர்கள் குழுவைக் கொண்டு நேற்று பட்டம் வாங்கியவனைப் பந்தாடுவார்கள். கோடிக்கணக்கில் செலவிடுவார்கள்!

கதாநாயகன் எல்லா வழிகளிலும் முயன்று நிறுவன மேலதிகாரி வரை விசாரணை செய்து முடிவில் பணத்தைக் கொள்ளையடிக்க மருத்துவ காப்பீட்டு நிறுவனம் செய்த தகிடுதத்தங்களை வெளிக்கொணர்வான். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நீதிமன்றம் ஆணையிடும். எல்லாம் நல்லபடியாக முடிந்து விட்டது என்று நினைக்கும் நேரத்தில் அந்த நிறுவனம் 'திவால்' அறிக்கை அனுப்பி யாருக்கும் ஒரு பைசா கொடுக்காமல் தப்பி விடும். வாதாடிய வக்கீலுக்கோ மகனை இழந்த குடும்பத்திற்கோ எந்த நிவாரணமும் கிடைக்காது. இது தான் 'corporate greed' என்பது.

இப்படி மக்களின் பணத்தை 'காப்பீடு' என்ற பெயரில் வசூலித்தாலும் பெரும்பாலான அமெரிக்க மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் மோசடி வேலைகள் செய்து வருவது கண்கூடு. மருத்துவர் கோரும் பணம் அதிகமா அல்லது நிறுவனங்கள் அவர்களுக்குப் பாதியைக் கொடுப்பது சரியா? தெரியவில்லை. 'ஒபாமாகேர்' வந்த பிறகு ஏமாந்த சோணகிரிகளிடம் அதிகமாக வசூலிக்கிறார்கள்.

எதற்கு இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் சமீபத்தில் 'யுனைடெட் ஹெல்த்கேர்' நிறுவன மேலதிகாரியை ஒருவன் சைலன்சர் துப்பாக்கியால் நியூயார்க் நகரத்தில் சுட்டுக் கொன்று விட்டான். தப்பியோடிய அவனைப் பிடித்தது மட்டுமில்லாமல் தீவிரவாதம் என்ற பெயரில் ராணுவ விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.

பள்ளிகளில், பொது இடங்களில் சராமாரியாக துப்பாக்கியால் கொல்லும் பைத்தியங்களைக் கூட தீவிரவாதி என்று தண்டனை கொடுப்பதில்லை. கார்ப்பரேட்காரன் ஒருவனைக் கொன்றதற்கு எப்படியெல்லாம் துடிக்கிறது அமெரிக்கா! இது தான் அங்கிள் சாமின் உண்மையான முகம்😩

என்னவோ போடா மாதவா!


No comments:

Post a Comment

AIM for Seva வெள்ளிவிழா ஆண்டு

"Education is the key to the development of a society." பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் சத்திய வாக்கு! ஒரு சமுதாயம் உயர...