Thursday, July 26, 2018

அமெரிக்காவும் என் ஆரம்ப நாட்களும்...

1990களில் வேலை நிமித்தமாக அமெரிக்காவிற்கு இந்தியர்கள் அதிகம் வர ஆரம்பித்திருந்த நேரம். பெரு நகரங்களில் வாழும் அமெரிக்கர்களுக்குப் பல நாடுகளில் இருந்து வரும் மக்களின் அறிமுகம் இருப்பதால் நிறத்திலும் உருவத்திலும் வேறுபாடு கொண்ட மனிதர்களை  'வெறிச்' பார்வை பார்ப்பதில்லை அல்லது குறைவு. அமெரிக்காவின் மூலை முடுக்குகளில் அலுவல் காரணமாக புலம் பெயர்ந்து வெள்ளை மற்றும் கறுப்பின அமெரிக்கர்களை ஒரு வித அச்சத்துடனே எதிர் கொண்ட அனுபவம் இந்தியர்கள் பலருக்கும் உண்டு.

1999ல் யூட்டா மாநிலத்தில் இருந்த பொழுது நண்பர்களுடன் விடுமுறையில் Yellowstone National Park சென்றிருந்தோம். இரவு வான வேடிக்கைகளைக் கண்டு களித்து விட்டு வயோமிங் மாநிலத்தில் உள்ள உணவகத்திற்கு ஏழு எட்டு நண்பர்கள் சகிதம் குழுவாக நுழைந்தவுடன் அங்கு உணவருந்திக் கொண்டிருந்தவர்கள், உணவு பரிமாறுவார்கள் அனைவரும் ஏதோ ஏலியன்களைக் கண்டது போல் எங்களைப் பார்த்தபொழுது தான் அவர்களையும் கவனித்தேன் . ஆஜானுபாவ 'வெள்ளை' அமெரிக்கர்கள்! அவர்களின் முகத்தில் தெரிந்தது ஆச்சரியமா! அதிர்ச்சியா? சிறிது நேரம் எங்களையே உற்று நோக்கி விட்டு அவர்கள் வேலையைத் தொடர்ந்தார்கள்.

யூட்டாவில் இருந்த (மார்மோன் கிறிஸ்தவர்கள்) அமெரிக்கர்கள் மிகவும் நட்புடன் பழகி மரியாதையாகவும் அன்புடனும் நடத்தியதால் நெருடல்கள் இல்லாமல் வாழ முடிந்தது.  முதன் முறையாக வயோமிங் மாநிலத்தில் வெள்ளை அமெரிக்கர்கள் கூட்டத்தில் இருந்த பொழுது தான் கொஞ்சம் அசௌகரியமாக இருந்தது. 'out of place' உணர்ந்த தருணத்தில் பயம் அப்பிக்கொண்டது.

பின்னொரு நாளில் யூட்டாவிலிருந்து நியூயார்க்கிற்கு காரில் வந்து கொண்டிருந்தோம். பனிக்காலம். சாலைகள் பனி, ஐஸ் என்று உறைந்து கிடந்திருந்தது. கார் வழுக்கி எதிர்த்திசையில் வரும் டிரக்குடன் மோதி விடாமல் அன்று உயிருடன் தப்பியதே கடவுளின் அனுக்கிரகம் என்று அடுத்த திருப்பத்தில் எந்த ஊர் என்று கூட தெரியாமல் உள்ளே நுழைந்து மெக்கானிக் கடையைத் தேடிச் சென்றோம். உள்ளே வந்த காரைப் பார்த்தவுடன் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள்  'பிரவுன்' மனிதர்களை முதன் முதலாக கண்ட ஆச்சரியத்தில் வர, எனக்கோ, என்னை விட கொஞ்சம் உயரமாக இருப்பவர்களைக் கண்டாலே உதறல் எடுக்கும். ஏற்கெனவே சாலையில் நடக்கவிருந்த பெரும் விபத்து தந்திருந்த அதிர்ச்சியுடன் இவர்களைப் பார்த்தவுடன் இன்னும் 'படபட'வென நெஞ்சு அடித்துக் கொண்டிருக்க, மகளுடன் பின்சீட்டில் பயந்தபடியே நான். முருகா! முருகா!

வந்தவர்கள் என்ன ஏது என விவரம் கேட்டு விட்டு, காரை செக் செய்கிறோம் என்று எங்களை இறங்கச் சொல்லி சரி செய்து கொடுத்து பணம் ஏதும் வாங்கிக் கொள்ளாமல் பத்திரமாகச் செல்லுங்கள் என்று சொல்லும் வரை நான் செத்து செத்து...ஓ மை காட்! புது இடம், தெரியாத மனிதர்கள் என்றால் அநியாயத்திற்குப்  பயம் தொற்றிக் கொள்கிறது, இனி ஆளை வைத்து எடை போடக்கூடாது என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.

இப்படித்தான் ஒருமுறை வாஷிங்டன் செல்ல நண்பரின் காரில் மகளும், பெரியம்மாவும் வர, எங்களுடைய காரில் கணவர் வண்டியை ஒட்ட, கைக்குழந்தையுடன் பின் இருக்கையில் நான். GPS இல்லாத காலத்தில் யாஹூ மேப்ஸ் கையில் வைத்துக் கொண்டு ஏதோ ஒரு திருப்பத்தில் வழியைத் தவற விட்டதில் அது எங்கெங்கோ சுற்றி கடைசியில் கருப்பு அமெரிக்கர்கள் அதிகம் வாழும் இடத்தில் கொண்டு நிறுத்த, தலையில் கறுப்புத் துணியைச் சுற்றிய 'பீம் பாய்'கள் பலரும் பூம் பாக்ஸ்-ல் சத்தமாக பாட்டை அலற விட்டு நடனமாடிக் கொண்டும் உரக்க பேசி சிரித்துக் கொண்டிருந்த கூட்டத்தில் மாட்டிக் கொண்டோம். நான்கைந்து பேர் காரைச் சுற்றி நின்று கொண்டு நோட்டமிட, என்னடா எங்க ஏரியாவுக்குள்ள வர்ற அளவுக்கு தில் இருக்கா?வென்று கேட்கும்  தொனியில் ஒரு லுக்கு! துப்பாக்கியை காட்டி மிரட்டினால் ஒன்றும் செய்ய முடியாது. கடவுளே அப்படி ஏதும் நடந்து விடக்கூடாது என மனம் அடித்துக் கொண்டிருந்தது. மகளும் பெரியம்மாவும் இருந்த காரைச் சுற்றியும் கூட்டம். எனக்கு வியர்த்து விறுவிறுத்து கடவுளே இங்க இருந்து எப்படியாவது தப்பிச்சுப் போகணுமே என்ற பதட்டம். செத்து செத்துப் பிழைப்பது என்பது அது தானோ? கார் கண்ணாடியை இறக்கி கணவரும் அவர்களிடம் நாங்கள் செல்ல வேண்டிய வழியைத் தவற விட்டுவிட்டோம். இங்கிருந்து எப்படிச் செல்வது என்று கேட்க, நிதானத்துடன் இருந்த ஒருவர் வழியைச் சொல்லி அனுப்ப... ஒரு கண்டத்திலிருந்து தப்பித்தது போலத் தான் இருந்தது. பணம் கேட்டு மிரட்டாமல் விட்டார்களே! அப்படிப்பட்ட கூட்டத்தில் இருந்து தப்பித்ததை இன்றும் நினைத்தால்... திக் திக் திக்... அவர்களைப் பார்த்தால் பயம் வருவதென்னவோ உண்மை தான். வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் கருப்பப்பா இருக்கிறவன் கையில துப்பாக்கி இருக்கும் ...ஹாலிவுட் படங்களின் தாக்கம் அப்படி :(

கோவில், இந்திய மளிகைக் கடைகள், உணவகங்கள், சமீபத்திய தமிழ் மக்களின் வருகை என்று பெருகியதில் இப்பொழுதெல்லாம் மதுரையில் இருப்பது போல் தான் தோன்றுகிறது. சமீபத்தில் நானும் சுப்பிரமணியும் பேசிக்கொண்டே பூங்காவை கடந்த பிறகு தான் சேலை, மல்லிகைப் பூ, நகைகள் போட்டுக் கொண்டு ஊரில் இருப்பது போல் உடையணிந்து அங்கு குழுமியிருந்த அமெரிக்கர்களை கடந்து வந்திருக்கிறேன்! அவர்களும் வித்தியாசமாகப் பார்க்கவில்லை நாங்களும் உணரவில்லையென்று! 'melting pot' சமூகத்தில் எளிதாக ஒன்றி விட முடியும். முடிகிறது. பல நாட்டு மக்கள் குடியிருக்கும் ஆல்பனியும் அப்படிப்பட்ட ஊர் தான். நல்ல வேளை!

இன்றோ அமெரிக்காவில் பலருக்கும் இந்தியர்களைப் பற்றி தெரிந்திருக்கிறது.   கல்வி, கணினி, மருத்துவம், ஆராய்ச்சி, அரசியல் என்று பல்வேறு  துறையிலும் இந்தியர்களின் பங்கு இருப்பதால் வேற்று கிரக மனிதர்களைப் பார்க்கும் 'வெறிச்' பார்வை இல்லை. ஆனால் இவர்கள் வேலைகளை இந்தியர்கள் எடுத்துக் கொண்டது போல் ஒரு மாயத் தோற்றமும் அறியாமையும் பொறாமையும்  வேண்டுமானால் இருக்கிறது. நேற்று வந்தவர்கள் இன்று உயர் பதவிகளில், நல்ல வேலைகளில், பெரிய வீடுகளில் வாழ்கிறார்கள் என்பது சிலருக்கு உறுத்தலாகத் தான் இருக்கிறது! அமெரிக்க இந்திய குடிகளிடமிருந்து நிலத்தை ஆக்கிரமித்த பழங்கதைகளும் அமெரிக்காவே புலம் பெயர்ந்தவர்களால் உருவான நாடு என்பதை இதற்கு முன் வந்த வெள்ளையர்கள் பலரும் மறந்து விட்டிருப்பது அறியாமை தான்!













2 comments:

  1. அருமையான தொகுப்பு. ஒரு வரலாற்று கதை படித்தது போன்ற பெருமையை ஏற்படுத்தியது.
    லான்சிங் சுதர்ஸன்

    ReplyDelete

சுவதந்த்ரவீர் சாவர்க்கர்

மிக அழகாக திரு.வீர் சாவர்க்கரின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் படம். நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள். சாவர்க்கராக நடித்திருக்கும் 'ரந்தீப் ஹ...