Tuesday, July 24, 2018

நியூயார்க்-மதுரை பயணம் (2017)

நேரம் கிடைக்கும் பொழுது நானும் மகளும், கணவர் மட்டும் இல்லையென்றால் நான் மட்டும் குழந்தைகளுடன் ஊருக்குச் சென்று வருவது வாடிக்கை. நாங்கள் குடும்பமாக மதுரைக்குச் செல்வது எப்பொழுதாவது அதிசயமாக நிகழும். அப்படி ஒரு வாய்ப்பு பல வருடங்களுக்குப் பிறகு 2017ல் நிகழ, பல திட்டங்களுடன் ஆரம்பமானது எங்கள் பயணம். நாங்கள் அனைவரும் சேர்ந்து செல்லும் பொழுது எனக்கு பதட்டமும் கூடி பத்திரமாக போய் ஊர் வந்து சேர வேண்டும் என்ற கவலையும் சேர்ந்து கொள்ளும். புறப்படும் நாள் அன்று பாஸ்போர்ட், OCI கார்டுகள், விசா எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பல முறை சரிபார்த்துக் கொண்டு வீட்டிற்குள் அடுப்பு, ஹீட்டர் விளக்குகள் என்று ஒவ்வொன்றையும் சரி பார்த்து அணைத்து விட்டு பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சொல்ல வேண்டிய விஷயங்களை மறக்காமல் சொல்லி விட்டு அனைவரும் சுவாமியை வேண்டிக் கொண்டு நியூயார்க் நகரம் நோக்கி மாலை நான்கு மணிக்கு மகிழ்ச்சியுடன் பெட்டிகளை வண்டியில் ஏற்றி விட்டு, கேமரா, கைபேசி, சார்ஜர் சரிபார்த்து ஒரு வழியாக கிளம்பி விட்டோம். குழந்தைகளும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விடுமுறை.

கோடையில் மரங்கள் செழித்து வழியெங்கும் அணிவகுத்து அழகாக காட்சி தந்து கொண்டிருந்தது. நடுவில் சிறிது நேரம் இளைப்பாறி ஜேஎஃப்கே விமான நிலைய போக்குவரத்து நெரிசலை கடந்து வந்து சேரும் பொழுது இரவு எட்டு மணிக்கும் மேல். நானும் குழந்தைகளும் பெட்டிகளுடன் விமான நிலையத்திற்குள் சென்று எமிரேட்ஸ் கவுண்ட்டரில் பாம்பு போல் நீண்டிருந்த வரிசையில் ஐக்கியமாகி செக்கின் செய்ய காத்திருக்க, கணவர் வண்டியை நிறுத்தி விட்டு வந்து சேர்ந்து கொண்டார்.

விமான நிலையம் வழக்கம் போல் பரபரப்பாக! எங்கும் மக்கள் கூட்டம்! சுடிதார், சேலை, குர்தா ஜீன்ஸ் அணிந்த பெண்களும், குட்டை, நெட்டை, கருப்பு, வெள்ளை, பிரவுன் என்று பல நிறத்தில் மனிதர்கள் அனைவரையும் ஒரு சேர காண முடியுமென்றால் அது விமான நிலையங்களில் தான்! எத்தனை எத்தனை முகங்கள்! ஒவ்வொரு முகங்களிலும் ஒவ்வொரு உணர்வுகள்! நேரம் போவதே தெரியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். எத்தனை விதமான பெட்டிகள்! வெளிநாட்டுக்காரர்களின் பெட்டிகள் அடக்கமாக இருப்பது போலவும் நாம் தான் முடிந்தவரையில் பெட்டிகளில் திணித்துக் கொண்டு செல்வது போலவும் ஒரு தோற்றம். கண்டிப்பாக நம் மக்கள் பூட்டு போட்டுக் கொண்டு பெட்டிகளுடன் வருவார்கள் :) பலரும் தங்கள் பெட்டிகளை அடையாளம் காண வண்ண வண்ண அருக்காணி ரிப்பன் போட்டு அலங்கரித்திருப்பார்கள். இப்படி சுற்றி நடப்பதை வேடிக்கை பார்த்து கிண்டலடித்துக் கொண்டிருக்கையில் வரிசையும் நகர, எங்கள் முறை வந்தவுடன் நான்கு பேருக்கும் சேர்த்து இருக்கைகள் இருக்குமாறும் ஜன்னலோர இருக்கை வேண்டும் என்று கேட்டுக் கொள்ள அவரும் போட்டுக் கொடுத்து விட்டார். அப்பாடா! பெட்டிகள் இல்லாமல் இனி சுதந்திரமாக உலா வரலாம் என்று நினைக்கும் பொழுதே அம்மா பசிக்குது பாட்டு பாட ஆரம்பித்து விட்டான் சுப்பிரமணி!

பரந்து விரிந்த நியூயார்க் விமான நிலையத்தில் உணவகங்களுக்கும் கடைகளுக்கும் பஞ்சமில்லை. பிரகாசமாக இருக்கும் இடத்தில் இணைய தொடர்பு வேறு இலவசம். பலரும் தங்கள் கைபேசியில் மூழ்கி இருந்தார்கள். வயதானவர்கள் மட்டும் கைபேசி இல்லாததால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சாப்பாடு இடங்களிலும் கூட்டம் அலைமோதியது. அவரவர்க்கு வேண்டியதை வாங்கிக் கொண்டு சாப்பிட்டு முடித்தாலும் இன்னும் இரண்டு மணிநேரத்தை ஓட்டியாக வேண்டும். இளம்பெண்களும் ஆண்களுமாய் திடீரென நம் மக்களின் கூட்டம். ஆங்கிலத்தை இழுத்து இழுத்து ஹிந்திக்காரர்கள் பேசுவதை கேட்க வேடிக்கையாக இருக்கும். நாங்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் வந்தமர்ந்த பெண்களிடம் எங்கிருந்து வருகிறீர்கள் என கேட்டதற்கு வால் ஸ்ட்ரீட் நிர்வாகம் ஒன்றினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 250 எம்பிஏ பட்டதாரிகளாம். பெங்களூரிலிருந்து வந்திருந்தார்கள்! ஒரு வார ட்ரைனிங். நியூயார்க் பிடிக்கவில்லை. சாப்பாடு சரியில்லை என்று புலம்பித் தள்ளி விட்டார்கள்! இவர்களே இன்னும் ஓரிரு வருடத்தில் இங்கு வந்து செட்டிலானாலும் ஆச்சரிப்படுவதற்கில்லை. சீ சீ இந்தப் பழம் புளிக்கும் கதை தான்! நினைத்துக் கொண்டேன். நன்றாக பேசினார்கள். மகளுக்கும் பொழுது போனது. இன்னும் சிறிது நேரம் இருந்தது. வேறு வழி? நேரம் போவதே தெரியாமல் கடைகளைச் சுற்றி பார்க்க ஆரம்பித்து நேரமானவுடன்  விமானத்திற்குள் சென்று இருக்கைக்குள் அமர்ந்து கொண்டோம்.

முதன் முறையாக எமிரேட்ஸ் விமான பயணம். பல நல்ல ரெவியூக்களை கேட்டிருந்ததால் ஆவலுடன் காத்திருந்தோம். மாடியில் படுக்கை வசதிகளுடன் முதல் வகுப்பு ! ஏறிய பல குழந்தைகளும் மாடிக்குச் செல்ல அடம் பிடித்து வேண்டா வெறுப்பாக தங்கள் இருக்கைக்கு வந்து கொண்டிருந்தார்கள். நான் பயணம் செய்ததிலேயே மிகப்பெரிய விமானம் இதுவாகத் தான் இருக்கும். அம்மா பக்கத்தில் நான் தான் உட்காருவேன் என்று சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள் மகனும் மகளும். நடுவில் உட்கார்ந்தால் தோளில் சாய்ந்து தூங்குகிறேன் பேர்வழி என்று என்னை ஒரு வழியாக்கி விடுவார்கள். தப்பித்து மகளின் ஜன்னலோர இருக்கையில் தாவி அமர்ந்து கொண்டேன். பக்கத்தில் மகளும் அவளுக்கருகில் மகனும் அமர்ந்து கொள்ள, தன் இருக்கையை தாரை வார்த்து விட்டு கணவர் பக்கவாட்டு முன்வரிசையில் நடு இருக்கையில்(எனக்குப் பிடிக்காத வார்த்தை மிடில் சீட் ) அமர்ந்து கொண்டு பக்கத்து இருக்கைப் பெண்மணியிடம் பேசிக்கொண்டிருந்தார்! கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

பிளாஸ்டிக் புன்னகை விமான பணிப்பெண்கள் இறுக்கமாக உடையணிந்து கொண்டு மாடிக்கும் கீழுக்குமாக ஓடிக் கொண்டிருந்தார்கள். எப்படி இவ்வளவு இறுக்கமாக அணிய முடிகிறதோ என்று யோசித்துக் கொண்டிருந்தேன். லேயர் லேயராக முகப் பூச்சுகள்! ஹ்ம்ம்... இவர்களால் தான் மேக்கப் தொழிலே வெற்றிகரமாக நடக்கிறதோ? கேபின் குழுவில் பெரிய கண்கள், லேசான வழுக்கைத் தலையுடன் ஒரு ஃபகத் ஃபாசில் கூட இருந்தார் :) முதலாம் வகுப்பு மற்றும் பிசினஸ் வகுப்பு பிரயாணிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்புகள் நடந்து கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் விமானி நியூயார்க் நகர நேரம், சேரப்போகும் துபாய் நகர நேரங்களை கூறி விட்டு அனைவரையும் வரவேற்று சுகமான பயணத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு விமானத்தை இயக்க, அரபி, ஆங்கில வரவேற்புரைகள், விமான பாதுகாப்பு விளக்கங்கள் முடிந்தவுடன்

கடைசி நிமிட அப்டேட்களை எழுதி முடித்து கைபேசியை அணைத்து விட்டு விமானம் முன்னாடி செல்கிறதா பின்னோக்கிச் செல்கிறதா என்ற குழப்பத்தில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். விமான நிலையம் விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்தது. இரவு நேர நியூயார்க் நகரம் மின்னொளியில் ஜொலிப்பதைக் காண ஆவலுடன் காத்திருந்தேன். விமானம் மெதுவாகத் திரும்பி ரன்வேக்குள் செல்ல முயலுகையில், எரிந்து கொண்டிருந்த அனைத்து விளக்குகளும் 'பட்பட்'வென கண நேரத்தில் மின்துண்டிப்பு இழந்து விமானமே இருட்டில் மூழ்கியது. என்னடா! மதுரைக்கு வந்த சோதனை? யாருக்கும் எதுவும் புரியவில்லை. அநேகமாக பயணிகளின் முதல் அனுபவமாக இருக்க வேண்டும். கொஞ்சம் பதட்டம் கூடும் பொழுது திகைத்துப் போயிருந்த விமான பணிப்பெண்களும் அனைவரையும் சமாதானப்படுத்த முயன்றனர். செயலிழந்த விமானத்தை மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே கொண்டு வந்து கதவு திறக்கும் வரையில் ஒரே படபடப்பு தான். நடு வானில் அட்லாண்டிக் மேல் பறக்கையில் இம்மாதிரி அசம்பாவிதம் நடந்திருந்தால்...முருகா! முருகா! குடும்பத்துடன் போகும் பொழுது தான் இப்படியெல்லாம் நடக்க வேண்டுமா?

சிறிது நேரத்தில் தண்ணீர் கொடுத்து ஆற்றுப்படுத்தினார்கள். ரணகளத்திலும் கிளுகிளுப்புக்கு குறைச்சலில்லை என்பது போல் முதல் வகுப்பு பிரயாணிகளுக்கு அந்த நேரத்திலும் சாப்பாடு போய்க் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பொறியாளர்கள் விமானத்தின் பழுதை சரி செய்ய போராடிக் கொண்டிருந்தார்கள். கடவுளே! துபாயில் அதிக நேரமில்லையே? சென்னை செல்லும் விமானத்தை விட்டு விட்டால் மதுரை செல்வதும் தாமதம் ஆகி விடுமே என்ற கவலை தொற்றிக் கொள்ள... விமான பணிப்பெண்ணோ அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. துபாயில் பார்த்துக் கொள்வார்கள் என்று சொன்னாலும் பதட்டமாகவே இருந்தது.

வேறு வழியின்றி மீண்டும் எங்கள் கைபேசியில் தஞ்சம் புகுந்து கொண்டோம். சில மணிநேரங்களுக்குப் பிறகு  விமானம் புறப்படலாம் என்று பொறியாளர்கள் அனுமதித்த பிறகு ரன்வேக்குள் காத்திருந்து மேலேறிச் சென்றவுடன் தான் நிம்மதியாக இருந்தது. துபாய் பயணம் எவ்வித தடங்கலும் இன்றி செல்ல வேண்டும் என்று கடவுளை கும்பிட்டுக் கொண்டேன். விரைவிலேயே இரவு உணவும் வந்து விட்டது. அப்புறமென்ன? என்னென்ன படங்கள் இருக்கிறது என்று தேடி படம் பார்க்க ஆரம்பித்தோம். தூங்கலையா என்று பக்கத்து வரிசையில் இருந்து கணவர் கேட்க...படம் பார்க்க போறேன் என்று நான் மட்டும் கடமையாக இரண்டு படங்கள் முடிக்க, பலரும் தூங்கி விட்டிருந்தார்கள். நள்ளிரவு ஸ்னாக் வேறு வந்தது. 

கண்கள் கூசும் அதிகாலைச் சூரியோதயம். ஜன்னலை மூடி விட்டு ...மதுரைக்குப் போறேனடி அங்க மல்லிப்பூ மண் மயக்கும் என்று கண்ணயர...மீண்டும் முழிப்பு வர, காலை உணவு இத்யாதிகள் முடிந்து அழகு மலை சூழ் ஐரோப்பிய நகரங்கள் மறைந்து வறண்ட பாலைவனம்...ஒ ஓ! ஓங்கி உயர்ந்த துபாய் கட்டடங்கள். மண் மலைப்பிரதேசங்கள்! வெயிலின் தாக்கம் விமானித்திற்குள் வரை வருகிறதே.. வந்தே விட்டது துபாய். ஒன்றரை மணி நேர தாமதம்! நாங்கள் சென்னை செல்ல வேண்டிய விமானம் காத்திருக்குமோ இல்லை புது பிரளயம் ஏதாவது காத்திருக்குமோ என்று கவலை! அந்த விமானத்தில் இருந்த அனைவருமே அடுத்த விமானம் பற்றிய அச்சத்துடன் பணிப்பெண்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அனைவருக்கும் ஒரே பதில்: உங்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். கவலை வேண்டாம் என்பதே. 

வெளியில் இறங்கினால் மூச்சு முட்ட அனல்! அடேங்ங்கப்பா! சென்னை சென்னை சென்னை என்று ஏலம் விட்டுக் கொண்டிருந்தவரைத் தொடர்ந்து நடக்க, இல்லை இல்லை ஓட, காத்திருந்த விமானத்தில் ஏறிய பிறகே நிம்மதியாக இருந்தது. மீண்டும் ஒரு படம். சாப்பாடு. அதிகாலை சென்னையில் தரையிறங்க...அதிக கெடுபிடிகள் இல்லாத இமிகிரேஷன் வரிசை. பெட்டிகள் வந்தவுடன் உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்து சூடாக ஒரு கமகம காஃபி. அநியாய விலை :(

மதுரை செல்லும் விமானமும் நேரத்திற்குப் புறப்பட...ஒரு மணி நேரத்திற்குள் நான் படித்த கல்லூரியைப் பார்த்தவுடன்...சொர்க்கமே என்றாலும்ம்ம்ம்...

2 comments:

  1. We all enjoyed your flight journey to Madurai from New York arriving safely. This feelings are in every passenger. Sairam

    ReplyDelete

சுவதந்த்ரவீர் சாவர்க்கர்

மிக அழகாக திரு.வீர் சாவர்க்கரின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் படம். நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள். சாவர்க்கராக நடித்திருக்கும் 'ரந்தீப் ஹ...