Wednesday, September 1, 2021

#Home

இந்த சேட்டன்களுக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் அழகான திரைக்கதைகள் கிடைக்கிறதோ? தமிழ்நாட்டில் கதைகளுக்குப் பஞ்சம் ஏற்பட்டிருக்கும் நிலை! அதனால் சாதி, மதம் என்று வெறுப்புகளைத்தூண்டி குளிர்காயும் படங்கள் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. ஹீரோயிசம் ஒழிந்தால் தான் தமிழில் நல்ல படங்கள் வரும் வாய்ப்புகள் உருவாகும் என்பதை சேட்டன்களிடமிருந்து இனியாவது கற்றுக் கொள்ள வேண்டும். கோடிக்கணக்கில் சம்பளம் பெற்று நடிக்கும் தமிழ் நடிகர்களுக்கு கதையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் பின்னால் இருக்கும் முட்டாள் கூட்டத்தை நம்பி எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் என்று நம்மை கழுத்தறுக்கிறார்கள். அதற்கு மலையாள கரையோரம் சற்று ஒதுங்கி ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம். கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும் கேரளாவின் பசுமை அழகு, செயற்கையாக இல்லாத வெளிநாடுகளில் டூயட், 'பஞ்ச்' வசனங்கள் இல்லாது கொஞ்சு மொழியில் பேசும் மலையாள திரைப்படங்கள் மக்களைக் கவருவதில் வியப்பில்லை தான்!

இன்றைய காலகட்டத்தில் வாழும் மூன்று தலைமுறைகளைப் பற்றின கதை. வயது மூப்பின் காரணமாக நினைவு இழந்த தாத்தா (அப்பச்சன்) , மில்லினியல் மகன்கள், அவர்களின் உலகத்தில் நுழைய பிரயத்தனப்படும் அப்பா, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அம்மா, கதாநாயகனின் கோபத்திற்கு ஆளாக ஒரு காதலி, செல்வச்செழிப்புடன் இன்றைய காலத்தில் பொருந்திச்செல்லும் எழுத்தாளராக அவளுடைய அப்பா, ஓவியராக அவருடைய அம்மா என குறுகிய கதாபாத்திர வட்டம். திரைப்பட உலகில் தனக்கென முத்திரை பதிக்க விரும்பும் மகன் சொந்த வீட்டில் தன்னுடைய அப்பாவையே புரிந்து கொள்ளாத மனிதனாக , ஆனால் அவரைப் பற்றிப் புரிந்து கொண்ட கணத்தில் தன்னுடைய தவறுகளை உணர்ந்து அப்பாவைப் பற்றி பெருமிதம் கொள்கிறார். இந்த தலைமுறையினர் பெற்றோர்களிடமிருந்து விலகிச்செல்வதும், அதிக நேரம் சமூக வலைதளங்களில் நேரத்தைச் செலவிடுவதும், அதன் குறுக்கீடுகளால் கவனங்கள் சிதறி வாய்ப்புகளை நழுவ விட்டு அது கோபம், ஏமாற்றம் என்று மற்றவர் மேல் எப்படி திரும்புகிறது என்பதை அழகாக படமாக்கியிருக்கிறார்கள்.

கதாநாயகனுக்கு அப்பாவாக நடித்திருப்பவர் போல் மகனைப் புரிந்து கொள்ள நினைக்கும் அப்பாக்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறார்கள். அதுவும் இன்றைய ஸ்மார்ட்ஃபோன் காலத்தில் அவர்கள் தனித்து விடப்பட்டவர்களாக அந்நியப்பட்டு நிற்கிறார்கள். அந்த உணர்வுகளை அழகாக தனது நடிப்பால் திரையில் கொண்டு வந்திருக்கிறார் ஆலிவர் ட்விஸ்ட்டாக நடித்திருக்கும் நடிகர் இந்திரன்ஸ். அவருடைய அப்பா அச்சப்பன் ஆங்கில கதைகளை மலையாளத்தில் மொழி பெயர்த்தவர். ஆலிவர் ட்விஸ்ட்ன் பால் ஈர்க்கப்பட்டு தன் மகனுக்கு அப்பெயரைச் சூட்டுகிறார். அம்மாவாக வரும் பெண்மணி அச்சு அசல் நம் அம்மாக்களை போல தான். குடும்பத்தைத் தவிர அவருக்கு வேறு எதிலும் நாட்டமில்லை.

அப்பா சொல்லும் கதையை அசுவாரஸ்யமாக கேட்டுக் கொண்டிருக்கும் மகன் அது உண்மை என தெரிய வரும் பொழுது தான் அப்பாவின் மேல் மரியாதையும் அவரிடம் மீண்டும் நெருங்கிச்செல்லும் மகனாகவும் ஆகிறார்.

நடுநடுவே காமெடி காட்சிகள், பாடல்கள் என்று படத்துடன் ஒன்றிச்செல்லும் காட்சிகளும் உண்டு.

ஃபீல் குட் மூவி💓 அமேசான் ப்ரைமில் கண்டுகளிக்கலாம்😎
 




No comments:

Post a Comment

Can This Love Be Translated?

 “Can This Love Be Translated?” பல நாட்களுக்குப் பிறகு பார்த்த கே-ட்ராமா. தலைப்பே வித்தியாசமாக இருந்ததில் வசப்பட்டேன். கதாநாயகி புதிதாக இருந...