Wednesday, April 20, 2022

பறந்தாலும் விட மாட்டேன் - 1

நண்பர் கார்லோஸிடமிருந்து சிறு விமானத்தில் ஆல்பனி-நியூயார்க் வரை சென்று வர விருப்பமா என்ற எதிர்பாரா அழைப்பிதழ் பார்த்த கணத்தில் எதுவும் யோசிக்காமல் சட்டென்று 'ஓகே' சொல்லியாயிற்று. அதற்குப் பிறகு தான் அடடா! நான்கு பேர் செல்லும் குட்டி விமானத்தில் பயணம் செய்வது எப்படி இருக்குமோ, காற்று, மழை என்று இருந்தால் என்ன செய்வது என்ற குழப்பம். இப்படி நானும் ஈஷ்வரும் சேர்ந்து குட்டி விமானப்பயணம் செல்வது சரியா? பாதுகாப்பானது தானா ? வருகிறேன் என்று சொல்லிவிட்டேனே என்று ஏகப்பட்ட குழப்பமான கேள்விகள். அதே நேரம், இதை விட்டால் இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்கவா போகிறது? என்ற சமாதானம் வேறு. ஆனாலும் கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்தது.

அடுத்த நாள் காலை 'டான்' என்று விமான நிலையத்தில் நண்பர் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தோம். அப்பொழுதும் ஈஷ்வரிடம் சொன்னால்,

"இப்ப நீ சும்மா வர மாட்டியா? உனக்குப் பிடிக்கும்" என்று அதே பதில்.

"எனக்குப் பிடிக்கும் தான். ஆனா ..."

முறைப்பே பதிலாக வந்தது.

நண்பரும் விமான நிலையத்தில் காத்திருந்தார். கையில் வைத்திருந்த ஐபேட்- ல் ஆல்பனி-நியூயார்க் வழித்தட வரைபடம் ஓடிக்கொண்டிருந்தது.

"கிளம்புவதற்கு முன் ஒரு விமான ஓட்டியாக சில விஷயங்களைச் சொல்லணும். அசம்பாவிதமாக இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால் அருகிலுள்ள இடத்தில் தரையிறக்கி விடுவேன். நாம் பெரும்பாலும் ஹட்சன் ஆற்றின் மேல் தான் பறக்கப் போகிறோம். அப்படி ஏதாவது நடந்தால் கரைக்கு அருகில் இறங்குமாறு பார்த்துக் கொள்வேன். சரியா? கடல் மேல் பறக்கும் பொழுது கரையில் இறங்குமாறு பார்த்துக் கொள்வேன். அங்கே நிறைய படகுகள் இருக்கும். அதனால் சீக்கிரமே காப்பாற்றிவிடுவார்கள்."

அடப்பாவி மனுஷா? இதெல்லாம் நேத்தே சொல்லிருக்கலாம்ல என நான் பேந்த பேந்த விழிப்பதைப் பார்த்து, 'லதா, நீச்சல் தெரியுமில்ல?"

நீச்சல் தொட்டியில ஓகே. ஆத்துல, கடல்ல நான் விழும் போதே என் உசுரு என்கிட்ட இருக்காதேன்னு நான் நினைத்துக் கொண்டே,

"பயமா இருக்கே கார்லோஸ்" என்றேன்.

ஈஷ்வரிடம், "வண்டி சாவிய குடுங்க. நான் உசுரோட வீட்டுக்கு கிளம்புறேன். இதென்ன புது வம்பா இருக்கு" என்றவுடன் அவரும் சற்று கலவரமாகத் தான் இருந்தார்.

"நான் 1000 மணிநேரங்கள் வானில் பறந்திருக்கிறேன். குடும்பத்துடன் கலிஃபோர்னியா வரை சென்றிருக்கிறேன். இது வரையிலும் எந்த வித அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. யோசித்துக் கொள்." சொல்லிவிட்டு கார்லோஸ் என் பதிலை எதிர்பார்க்க ,

போற உசுரு பறந்து போய் ஹட்சன்ல தான் போகணும்னு இருந்தா யார் என்ன செய்ய முடியும். எனக்கு ஏதாவது நடந்தா எல்லா விபரங்களையும் இங்க எழுதி வச்சிருக்கேன்னு ஈஷ்வரிடம் சொல்லிவிட்டு நானும் வர்றேன் கார்லோஸ் என்றவுடன்,

"வெரி குட். அப்ப கிளம்புவோம்."

அவரைத் தொடர்ந்து நாங்கள் வெளியே நின்றிருந்த குட்டி விமானத்தை வலம் வந்தோம். என்னை விட சிறிது உயரம். விமானியுடன் மூன்று பேர் பறந்து செல்லும் வகையில் குட்டியோ குட்டி விமானம். வண்டிச் சக்கரமோ ஈஷ்வரின் பைக்கை விட சிறிதாக இருந்தது. முருகா! உசுரோட பத்திரமா கொண்டு வந்து சேர்த்திடப்பா என்று வேண்டிக்கொண்டு இரண்டு அங்குல படியில் கால் வைத்து உள்ளே போய் அமர்ந்து கொண்டேன். ஈஷ்வரும் கார்லோஸும் முன் இருக்கைகளில் அமர்ந்து கொண்டார்கள். இன்ஜின் சத்தம் கேட்காமல் இருக்க பெரிய ஹெட்ஃபோனை காதில் மாட்டியாயிற்று. இருக்கை பெல்ட் மட்டுமே இருந்ததது.

விமானியின் முன்னே அத்தனை பட்டன்கள். கார்லோஸ் சரிபார்ப்பு பட்டியல் பார்த்து ஒவ்வொரு பட்டன்களையும் தட்டி விட்டு வேகம், உயரம் என்று கணக்குப் போட்டுக் கொண்டு அதற்கான கண்ட்ரோல்களையும் சரிசெய்து கொண்டே ,"மேலெழும்பும் பொழுது மிக கவனமாக இருக்க வேண்டும். பறவைகளோ, தரை இறங்கும் விமானங்களோ எதுவும் கண்ணில் பட்டால் சொல்லுங்கள்" என்று சொல்லிவிட்டு, கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு மேலெழும்ப உத்தரவு கேட்டுக் கொண்டிருந்தார்.

"கடகட"வென பேரிரைச்சலுடன் விமானத்தின் விசிறி சுழல, "ரைட், ரைட் போகலாம்" என்ற உத்தரவு கிடைத்தவுடன் "ரன்வே" பாதையில் "தடக்தடக்" என்று விமானம் அன்னநடை போட்டுச் சென்றது. சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே மெதுவாக சக்கரம் தரையை விட்டு மேலே மேலே மேலே பறந்து பறந்து பறந்து... கார்லோஸ் மிக அழகாக கையாண்டார். எனக்குத்தான் விமானம் ஒருபுறமாக சாயும் பொழுது அடிவயிறு சிறிது கலங்கியது போல் இருந்தது. பக்கத்தில் தானே வீடு. தெரிகிறதா என்று எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தேன். எங்கே நான் வேகமாக அசைந்தால் விமானமும் சாய்ந்து விடுமோ என்று பயந்தேன்😁 நல்ல வேளை! அப்படியெல்லாம் நடக்கவில்லை.

3500 அடியில் பறந்து கொண்டிருந்தோம். அதனால் சாலைகள், மலைகள், மரங்கள், குளங்கள், ஏரிகள் எல்லாம் தெரிந்தது. தூரத்தில் போகின்ற மேகங்களே. தூறல்கள் போடுங்கள் பூமியிலே" மனம் குதூகலித்தது.

அப்படியே ஆல்பனி டவுன்டௌன், வரிசையாக மஞ்சள் பேருந்துகள் நின்ற பள்ளிக்கூடத்தைப் பார்த்துக் கொண்டே உறைந்திருந்த குளங்கள், துளிர் விட காத்திருக்கும் மரங்கள் அடர்ந்த கேட்ஸ்கில்ஸ் மலைகள் மேலே பறந்து கொண்டிருந்தோம். 'பச்சைப்பசேல்' என்றிருந்தால் கொள்ளை அழகா இருந்திருக்கும்😊 நினைத்துக் கொண்டேன். திடீரென ஒரு குலுக்கல். ஆஆஆ! மீண்டும் அடிவயிறு பிசைவதைப் போல் கொஞ்சம் பயம்.

"இப்ப நாம ஹட்சன் ஆற்றின் மேல் பறந்து கொண்டிருக்கிறோம்" கார்லோஸ் சொல்ல, எட்டிப் பார்க்கலாமா வேண்டாமா என்று மனதிற்குள் பஞ்சாயத்து ஓட, மெ..து..வாக ஜன்னல் வழியே பார்த்தால் மழைநீர் கலந்த ஹட்சன் ஆறு பழுப்பு நிறத்தில் ஓடிக்கொண்டிருந்தது. அது என்னவோ தெரியல, என்ன மாயமோ புரியல, தண்ணீரைக் கண்டால் ஜலகண்டம் இருப்பது போல் அத்தனை பயம் எனக்கு. ஒவ்வொரு முறை இந்தியா வர அட்லாண்டிக் மேல் பறக்கும் பொழுதும் ஒருவித இனம் புரியாத பயம் இருக்கும். சுற்றிலும் இருக்கும் மனிதர்கள் தான் நம்பிக்கையைத் தருவார்கள். இந்த குட்டி விமானத்தில் அவசரத்திற்கு ஆக்சிஜன் முகமூடியோ, உயிரைக்காக்கும் ஜாக்கெட்டோ எதுவும் இல்லை. நினைத்தாலே பயமாகத் தான் இருந்தது.

மனதை தேற்றிக் கொண்டு வந்தாச்சு. இனி எது வந்தால் என்ன? என்று வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தேன். நியூயார்க் மாநிலத்தில் சுரங்கங்கள் நிறைய இருக்கிறது. அதன் அருகே தொழிற்சாலைகளும் இருந்தது. பச்சைப்பசேல் என அழகாக பராமரிக்கப்பட்ட கோல்ஃப் மைதானங்கள், பெரிய பெரிய பண்ணை வீடுகள், கரையோரங்களில் பங்களாக்கள், தெருக்களில் வரிசையாக வீடுகள் என்று கண்களைக் கவரும் காட்சிகள்.

நீண்ட சரக்கு ரயில் ஒன்று 'ஜூக்கு ஜூக்கு ஜூக்கு" என்று செல்வதைக் காண அத்தனை அழகாக இருந்தது. "தூது போ ரயிலே ரயிலே துடிக்குதொரு குயிலே குயிலே என்னென்னவோ என் நெஞ்சிலே..." மனம் பாடிக் கொண்டிருக்கையில், சடாரென்று இறக்கைகள் வலப்புறம் சரிய, மீண்டும் 'திக் திக் திக்'😟

அது தான் "கிங்ஸ்டன்" என்று பாலத்தைக் கடக்கையில் சுட்டிக் காட்டினார் கார்லோஸ். அது ஒரு பழமையான வரலாற்று சிறப்பு மிக்க நகரம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சுப்பிரமணி செஸ் பந்தயத்தில் கலந்து கொள்ள ஓரிருமுறை சென்றிருக்கிறான். நியூயார்க் மாநிலத்தின் முதல் தலைநகரமாக இருந்தது பின் ஆல்பனி மாநில தலைநகரமாகி விட்டது. அதனைக் கடந்து பொக்கீப்சீ நகரத்தின் அழகிய பாலத்தையும் கடந்தோம். அதற்குப் பிறகு "பியர் மௌண்டைன்" கரடி போல் கருங்கல் மலை.

"நியூயார்க் நகரை நெருங்கி விட்டோம்" என்று கார்லோஸ் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அனுப்பினார். 75மைல் தொலைவில்
"நியூயார்க் நகரம் தெரியும் நேரம்
கட்டடங்கள் அடர்ந்தது
அழகும் தெரிந்தது..."

No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...