Sunday, April 3, 2022

Thirty Nine



ஒவ்வொரு கொரிய தொலைக்காட்சித் தொடரின் முடிவில் தோன்றுவதெல்லாம் எப்படித்தான் இப்படியொரு கதைக்களம் இவர்களுக்கு மட்டும் கிடைக்கிறதோ என்ற ஆச்சரியம் தான்! எளிமையான நாம் கடந்து வரும் பாதை தான். அதைச் சொல்லிய விதமும் கண்களை நனைக்கும் சில காட்சிகளும் என மற்றுமொரு அழகான தொடர், "Thirty Nine".

39 வயதான மூன்று தோழிகளைச் சுற்றி நடக்கும் வாழ்க்கைப் பயணம் தான் கதை. பள்ளி வயதில் எதேச்சையாகச் சந்தித்து நட்பாகி அது வருடங்கள் பல கடந்தும் தொடர்ந்து பயணிக்கிறது. மூவருக்கும் விருப்பமான உணவுகளைத் தேடி உண்பது முதல் அவரவர் பணிகளில் மும்முரமாக இருக்க, தோழிகளில் ஒருத்தி எதிர்கொள்ளும் பிரச்சினையை மற்ற இருவரும் ஆதரவாக இருந்து எப்படி கரை சேர்க்கிறார்கள் என்று இதமாகச் செல்கிறது தொடர்.

இந்தியர்களைப் போலவே கொரியர்களும் பெண்களுக்குத் திருமணம் என்பது தான் எல்லாமே என்று நினைக்கிறார்கள். எல்லா தொடர்களிலும் அதனை வலியுறுத்தும் வசனங்கள் இல்லாமல் கடக்க முடியாது. ஆனால் மேற்கத்திய உலகைப் போல் "டேட்டிங்" சமாச்சாரங்களும் இங்கு உள்ளது. படித்து முடித்து வேலைக்குச் சென்று விட்டால் பெண்கள் தனியே அவரவர் வாழ்க்கையைப் பார்க்கத் துவங்கி விடுவது வழக்கம் போல. பெற்றோர்களும் அவர்கள் வாழ்க்கையைப் பார்த்து கொண்டு வாழ்கிறார்கள். இத்தகைய உலகில் இளவயதில் நண்பர்கள் தான் எல்லாமுமாக இருக்கிறார்கள் .

"Letting each other do whatever they want is respecting each other."
இத்தொடரில் அப்படித்தான் இந்த மூன்று நெருக்கமான தோழிகளும் ஒருவருக்கொருவர் ஆதரவாக அதே நேரத்தில் தங்கள் வாழ்க்கையையும் கவனித்துக் கொண்டு வாழ்வதைப் போல் காட்டியிருக்கிறார்கள்.

அனாதை இல்லத்தில் வளரும் பெண் ஒருத்தி தன் சொந்த தாயைத் தேடி அலைய, கிடைத்த நட்பில், அன்பான புது உறவில் இருந்தாலும் தான் அனாதையாக்கப்பட்டதில் ஒரு சோகம் அவளுக்கு. தோழிகளின் மேல் காட்டும் பரிவும் பாசமும், தத்தெடுத்த பெற்றோர்கள், தமைக்கையிடம் காட்டும் நெருக்கமும் அன்பும், பெற்று குழந்தைகள் காப்பகத்தில் விட்டுச் சென்றவளை விட வளர்த்தவர்கள் மேல் என்று உணரும் தருணம் வரை அவளின் போராட்டம் ஒரு பக்கம் என 'ஜெயன் மீ டூ' மனதைக் கவருகிறார். காதலனைக் கைப்பிடிக்க முடியாமல் காதலையும் வெறுத்து ஒதுக்க முடியாமல் நோயுடன் போராடும் பெண் தன்னம்பிக்கையுடன் மரணத்தை எதிர்கொள்ளும் பக்குவம் தான் இத்தொடரின் சிறப்பு. அமைதியாக வெள்ளந்தியாக 'கிம் ஜி ஹியுன்' மற்றுமொரு பாத்திரப் படைப்பு. இவர்கள் மூவருக்கும் இடையே இருக்கும் நெருக்கம், அவரவர் ஆசைகளை, கனவுகளை நிறைவேற்ற ஒருவருக்கொருவர் துணை நிற்பது என அழகான கதை.'படபட'வென மனதில் எதையும் ஒளித்து வைத்துக் கொண்டு பேசாத நேர்மையான பெண் பாத்திரத்தில் நடித்திருக்கும் 'சோன் ஏ ஜின்' பொம்மை மாதிரி அழகு. அழுகையை கட்டுப்படுத்த அவர் சிரமப்படும் காட்சிகளில் நம்மை அழ வைத்துவிடுகிறார். 

நடுநடுவே காதல், குடும்பம், உணவு, சோஜு என்று போட்டுக்கொள்ள வேண்டும்.

"When we encounter an inconvenient truth, the truth itself isn’t what makes us flustered. We become flustered because we finally encounter something ominous that we’ve strived so hard to bottle up. That’s why we feel uneasy about the truth."

இறப்பு எல்லோருக்கும் வருவது தான். ஆனால் நோயினால் இறக்கப் போகிறோம் என்று முன்கூட்டியே தெரிந்த பெண் ஒருத்தி அதைச் சிறப்பாக கையாளுவதும் தன்னைச் சுற்றி உள்ளவர்கள் மகிழ்ச்சியாக தன்னை வழியனுப்ப அவள் மேற்கொள்ளும் முயற்சிகளும் என நேர்மறை எண்ணங்களுடன் வெளிப்படுத்திய விதத்தில் இந்தத் தொடர் என்னை மிகவும் கவர்ந்தது. தனக்குப் பின்னால் தன் பெற்றோருக்காக, தன் காதலனுக்காக, தோழிகளுக்காக என்று ஒவ்வொவொன்றையும் செய்திருப்பதாக காட்டும் காட்சிகள் அத்தனையும் அருமை.

கொரிய தொடர்களின் தரம் மென்மேலும் கூடி வருகிறது. என்ன அழகான பாந்தமான கண்களை உறுத்தாத உடைகளை உடுத்துகிறார்கள் இந்தப் பெண்கள். பொறாமையாக இருக்கிறது😛 மழை ,பனிமழை, வெயில், மலர்கள் என்று மாறும் காலங்களில் வரும் காட்சிகள் எல்லாம் கொள்ளை அழகு.

கொரியன் ஆண்கள் உண்மையிலேயே மென்மையானவர்களாக அல்லது நாடகத்தில் இப்படி பாத்திரங்களைப் படைக்கிறார்களா என்று தெரியவில்லை. மென் காதல், மென் சிரிப்பு, மென் முத்தம் என்று மென்மையாகச் செல்கிறது💕

வாழ்க்கையில் வரும் ஏற்றத்தாழ்வுகளை நாம் கையாளும் விதத்தில், அணுகும் முறையில் நமக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ள முடியும். அழகான நட்பும் அன்பான உறவுகளும் அமைந்து விட்டால் சாவைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. இத்தொடர் சொல்லும் கருத்து இதுதான்.

"Some of us had a new beginning and some faced an end when we’re… Thirty Nine."

வாரத்தில் இரு நாட்களுக்காக காத்திருந்து கண்ட அருமையான தொடர். நெட்ஃபிளிக்ஸ்ல் காண கிடைக்கிறது.




No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...