Monday, April 25, 2022

பறந்தாலும் விட மாட்டேன் - 2

 பரந்து விரிந்த நீல வானம். அன்று மேகங்கள் எல்லாம் தொலைவில் இருந்தது எங்கள் அதிர்ஷ்டம். நியூயார்க் நகரம் அருகே செல்ல செல்ல பல குட்டி விமானங்களும், பெரிய விமானங்களும் என வானில் சிறிது போக்குவரத்து. கார்லோஸ் விழிப்போடு கண்காணித்துக் கொண்டே வந்தார். பறவை ஒன்று மிக அருகே பறந்து சென்றது. நல்ல வேளை! தப்பித்தோம். குட்டி விமானம் ஓட்டுவது சவால்கள் நிறைந்ததாக இருக்கிறது என்பது நன்கு புரிந்தது😓 கட்டுப்பாட்டு அறையிலிருந்து எந்த திசையில் எத்தனை வேகத்தில் மற்ற விமானங்கள் பறந்து வருகிறது போன்ற தகவல்கள் வந்து கொண்டேஇருக்க, மற்ற விமானிகள் கேட்கும் தகவல்களும் நமக்கு கேட்டுக் கொண்டே இருக்கிறது. நடுவே எங்களுடைய விமானத்தின் பெயரைக் கேட்டவுடன் என்ன சொல்ல வருகிறார்கள் என்று உன்னிப்பாக கேட்டுக் கொண்டே வந்தேன். என்ன ஒன்று? அத்தனை பெரிய ஹெட்ஃபோன் பெருஞ்சுமையாக காதில் உட்கார்ந்திருந்தது கொஞ்சம் கடியாகத் தான் இருந்தது எனக்கு. நகரை நெருங்கியவுடன் தாழ பறக்கத் தொடங்கியது எங்கள் விமானம்.

மாநிலத்தின் வடக்கில் அடிராண்டாக்ஸ் மலையில் துவங்கி தெற்கே அட்லாண்டிக் கடலைச் சேரும் வரை ஓடி வரும் நீண்ட ஆறு ஹட்சன். ஆற்றின் இரு கரைகளிலும் எழிலான கட்டடங்கள். அது கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது நியூயார்க் நகரம். அப்பர் மன்ஹாட்டன், மிட்-டவுன், லோயர் மன்ஹாட்டன் என்று மூன்று பகுதிகளிலும் ஓங்கி உயர்ந்த கட்டடங்கள். இங்கு தான் உலகளாவிய பல அலுவலகங்களும் செல்வந்தர்கள் வாழும் அடுக்குமாடி குடியிருப்புகளும் விரவிக் கிடக்கிறது.

டைம்ஸ் ஸ்கொயர், க்ரைஸ்லர், எம்பயர் ஸ்டேட் கட்டடங்கள் உயரத்திற்குப் பறந்து கொண்டிருந்தோம். கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது.

"அதுதான் மேடிசன் ஸ்கொயர் கார்டன்" என்று வட்டமாக இருந்த கட்டடத்தை கார்லோஸ் சுட்டிக்காட்ட, அதனைச் சுற்றி உள்ள அலுவலகங்கள், வீடுகள் நீண்ட தெருக்கள் என்று கட்டுக்கோப்பாக அமைந்திருந்த நிலப்பரப்பை மேலிருந்து காண கொள்ளை அழகு!

"அதுதான் கொலம்பியா பல்கலைக்கழகம். அதற்கு அருகே தான் நாங்கள் குடியிருந்தோம். இந்த தெருக்களில் ஓடி இருக்கிறோம் என்று விமானத்தைச் சாய்த்து காண்பிக்கையில்,

" ராசா நீ வண்டிய நேரா ஒட்டுப்பா. இங்க நானே பயந்து போய் உசுர கையில பிடிச்சுக்கிட்டு இருக்கேன்" என்று சொல்லத் தோன்றியது😉

அங்கே தெரியுது "செண்ட்ரல் பார்க்". அவர் காட்டிய திசையில் பச்சைப்பசேலென துளிர் விட்ட மரங்கள் சூழ்ந்த இடம். எங்கு பார்த்தாலும் தெரியும் கட்டட குவியலுக்குள் முத்தாக இப்படி ஒரு பூங்கா! அதுவும் நகரின் மையத்தில் 843 ஏக்கரில் பரந்து விரிந்து செழிப்பாக! அதைப் பற்றி விரிவாக எழுதலாம். முழுவதையும் நானும் மகளும் நன்றாகச் சுற்றியிருக்கிறோம். அடிக்கடி குடும்பத்துடனும் அங்கு சென்று வந்திருக்கிறோம். ஆல்பனி இன்னும் பனிக்காலத்தை விடாமல் பிடித்துக் கொண்டு தொங்குகிற அதே வேளையில் நியூயார்க் நகரம் இளந்தளிர் பச்சை மரங்களுடன், மழைக்கால பூக்களுடன் அழகாக இருந்தது சிறப்பு.

லோயர் மன்ஹாட்டன்ல் தான் உலக வர்த்தக மையம் எனும் "இரட்டை கோபுரங்கள்" இருந்தன. 9/11 அன்று நடந்த கொடூர தாக்குதலுக்குப் பிறகு இன்று அதே இடத்தில் "ஒன் வேர்ல்ட் ட்ரேட் சென்டர்" கண்ணாடி ஜன்னல்களுடன் மின்னிக் கொண்டு அமெரிக்காவிலேயே உயர்ந்த கட்டடமாக வானளாவி வளர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதிகளில் 2001ல் நடையாய் நடந்து சுற்றிப் பார்த்திருக்கிறோம். அப்பொழுது தான் நியூயார்க் வந்திருந்த நேரம். வாழ்க்கையில் இப்படியொரு கட்டடங்களை அதுவும் இத்தனை நெருக்கமாக பார்த்ததில்லை. டொரோண்டா நகரம் தான் நான் பார்த்த மிகப்பெரிய மேற்கத்திய நகரம். அதையெல்லாம் ஒன்றும் இல்லை என்று உணர வைத்தது நியூயார்க் நகரம். இன்று மேலிருந்து பார்க்கும் பொழுது அதிக பிரமிப்பாக இருந்தது!

அப்படியே வலது பக்கம் பார்க்கையில் தனித்தீவில் 'சுதந்திர தேவி'! ஹாலிவுட் படங்களில் முழு கோணத்தில் ஹெலிகாப்டர்/விமான காட்சிகளில் பார்த்த ஞாபகம். அழகாக இருந்தது. இந்தக் குளிரிலும் சிலர் சுற்றிப்பார்க்க வந்திருந்தார்கள்! நியூயார்க் வருபவர்கள் தவறாமல் சென்று பார்க்கும் இடங்களுள் இதுவும் ஒன்று.

துறைமுகத்தில் கப்பலில் செல்லும் சரக்கு கண்டைனர்கள் வரிசையாக. இப்பொழுது முழுக்க முழுக்க கடல் மேல் பறந்து கொண்டிருந்தோம். நீல வண்ணத்தில் 'மினுக்மினுக்' என மின்னிக் கொண்டிருந்தது கடல் நீர். நாங்கள் இறங்க வேண்டிய இடம் மிக அருகில் வந்து விட்டது. கார்லோஸ் எங்கே எந்த ஓடுபாதையில் இறங்க வேண்டும் என்ற தகவல்கள் அவருக்கு வர, அவரும் குறித்து வைத்துக் கொண்டார்.

இது தான் 'கோனி ஐலண்ட்'. அவர் சுட்டிக்காட்டிய இடத்திற்குச் சென்றிருக்கிறோம். அங்கிருக்கும் "தீம் பார்க்" இந்த வட்டாரத்தில் பிரபலமானது. சுழற்ராட்டினங்கள் நன்றாகத் தெரிந்தது. இன்னும் சீசன் தொடங்கவில்லை என்பதால் ஆளரவம் இல்லை. கோடையில் குச்சியில் நறுக்கிய முழு மாம்பலத்தையும் விற்றுக் கொண்டிருப்பார்கள். யம் யம் யம்😍

"இது தான் லாங் ஐலண்ட்".

அதற்கு முன்தினம் தான் நாங்கள் இந்தப் பகுதிக்கு காரில் வந்திருந்தோம். அருகிலிருந்த கடற்கரைக்கும் சென்று வந்தோம்.'லாங் பீச்' , பெயருக்கேற்றார் போல் நீண்ட கடற்கரை. அதையொட்டி 'ஜோன்ஸ் பீச்'. ஒன்றிரண்டு மனிதர்கள் ஆங்காங்கே நடந்து கொண்டிருந்தார்கள். கடலோர வீடுகளுடன் அந்த இடத்தை மேலிருந்து பார்க்க அலையாடும் கடற்கரை அத்தனை அழகாக இருந்தது! கடலைப் பார்த்தாலே வரும் இன்பம் இந்த முறை மேலிருந்து மிக அருகில் பார்க்கையில் மேலும் உற்சாகம்!

"அலையே சிற்றலையே
கரை வந்து வந்து போகும் அழகே
என்னைத் தொடுவாய் மெதுவாய் என்றால்
நுரையாய் கரையும் அலையே
தொலைவில் பார்த்தால் ஆமாம் என்கின்றாய்
அருகில் வந்தால் இல்லை என்றாய்" மனம் இசைத்துக் கொண்டிருக்க...

"இங்கே ஃபார்மிங்டேலில் தான் நாம் இறங்க வேண்டிய விமான நிலையம் உள்ளது. இன்னும் சில நிமிடங்கள் தான்" கார்லோஸ் கூறவும் அப்பாடா என்றிருந்தது! இப்பொழுது காற்றின் வேகம் அதிகரித்திருந்ததில் திகிலாகி விட்டது. தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் ரயில் காட்சி தான் நினைவிற்கு வந்தது. அதில் பாலையாவின் வசனம் பிரபலம் ஆயிற்றே!

எங்களுக்கு முன் வேறொரு விமானம் படு வேகத்தில் 'ஜிவ்வ்'வென தரையிறங்கிய பின் ஓடுபாதையில் அழகாக விமானத்தைத் தரை இறக்கினார் கார்லோஸ். "குடுகுடு"வென ஓடி நாங்கள் நிறுத்த வேண்டிய இடத்தில் ஏதோ காரை நிறுத்துவது போல் மற்ற குட்டி விமானங்களுடன் நிறுத்தி விட்டு "ரிப்பப்ளிக் ஏர்போர்ட்" அலுவலகத்திற்குள் நுழைந்தோம். அங்கே கொலம்பியா நாட்டிலிருந்து வந்திருந்த கார்லோஸின் நண்பர்களைச் சந்தித்து விட்டு அவர்களை அழைத்துக் கொண்டு கார்லோஸ் புறப்பட, நாங்கள் சற்று இளைப்பாறினோம். யோசித்துப் பார்க்கையில் மேலிருந்து பார்த்த பல தெருக்களில் நடையாய் நடந்து நகரத்தைச் சுற்றி வலம் வந்திருக்கிறோம் என்று தோன்றியது. அதனால் தான் நகரத்தின் மேல் காதலாகிப் போயிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

காற்றின் வேகத்தில் விமானத்தின் ஆட்டத்தால் வீடியோ பல இடங்களில் மேலும் கீழும் ஆடியபடி இருக்கும். அப்பொழுதெல்லாம் "உயிர் பயம் காட்டிட்டான் பரமா" மொமெண்ட் தான் 😔😆

No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...