Monday, July 22, 2024

நீயாநானா?

கஷ்டப்படும் நிலையிலிருந்து உயர, கல்வி ஒன்றே உதவும். சுக, துக்கங்களை மறந்து உழைக்கும் பெற்றோர்கள் தங்களுக்கு கிடைக்காத படிப்பை அடுத்த தலைமுறையாவது பெற வேண்டும் என்று பாடுபடுகிறார்கள். அதை உணர்ந்த மாணவ, மாணவியர் நன்கு படித்து மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இந்த வார நீயாநானாவில் அரசுப்பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் வைத்து நடந்த விவாதத்தில் 

கோட்டுசூட்டு கோபி கேட்க மறந்தது:

ஏன் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுப்பதை அரசு நிறுத்தியது?

நீட் தேர்வினால் எட்டாக்கனியாக இருந்த மருத்துவம் தங்களுக்கும் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளதைப் பற்றி மாணவர்களுடன் மேலும் பேசாமல் இருந்தது.

எப்படியெல்லாம் அரசியல் செய்கிறது நீயாநானா?

ஆனால் ஒன்று, பல மாணவர்களுக்கும் அவர்கள் படிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் உதவுவது பாராட்டப்பட வேண்டியது. கல்விக்கட்டணம் முதல் லேப்டாப் வரை கொடுத்து உதவும் அந்த மனசு இருக்கே அதுதான் சார் கடவுள்.
எச்சக்கையால சாப்பாட்டை எச்சை ஆக்கத் தெரிந்தவர்களுக்கு ஏழை மாணவர்களின் வலிகள் புரிவதில்லை. தகுதி பார்த்து உரிமைத்தொகை அரசியல் செய்தவர்கள் தேவைப்படும் இந்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கியிருக்கலாமே?
 
இதே எதிர்கட்சியாக இருந்திருந்தால் அவியல் செய்திருப்பார்கள் தானே? மிக்சர் தின்று கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் எதைப்பற்றியும் கவலை இல்லை.

ஆக…

Sunday, July 21, 2024

கவனச்சிதறல்கள்


ஸ்மார்ட்போன்கள் மூலம் தகவல்தொடர்பு, தகவல் அணுகல், டிஜிட்டல் கல்வியறிவு போன்ற மறுக்க முடியாத பலன்களை பெற முடிகின்ற அதே வேளையில், கவனச்சிதறல், சைபர்புல்லியிங் தொடர்பான சவால்களையும் அவை முன்வைக்கின்றன.செல்ஃபோன்களால் பள்ளி மாணவர்களின் கவனம் சிதறுகிறது. அதனால் மாணவர்கள் வகுப்பறைக்குள் செல்ஃபோன்கள் கொண்டு வருவதைத் தடை செய்வது பற்றி நியூயார்க் மாநில ஆளுநர் கேத்தி ஹோக்குல் பள்ளி தாளாளர்களுடன் விவாதித்துக் கொண்டிருக்கிறார். நிச்சயமாக ஆசிரியர்கள் தரப்பில் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கும். மாணவர்கள் முறைப்பார்கள். ஆனால் வழக்கம் போல "சில பெற்றோர்கள்" தனிமனித சுதந்திரம், நேந்திரம்பழம் என்று குழப்புவார்கள்.

கைப்பேசி இல்லாத காலங்களை இன்று நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு நம் வாழ்க்கையுடன் இரண்டற கலந்துவிட்டிருக்கிறது கைப்பேசிகள். வெளியில் செல்லும் பொழுது எடுத்துச் செல்ல வேண்டிய மறக்க முடியாத பொருட்களில் ஒன்றாகி சதா சர்வ காலமும் நம்முடனே ஒட்டிக்கொண்டித் திரிகிறது. பெரியவர்கள் என்றால் ஓகே. ஆனால் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு இது அவசியமா? அதுவும் வகுப்பறைகளில் என்ற விவாதம் நியூயார்க் மாநில கல்வித்துறையில் சில நாட்களாகத் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.

இன்று வானொலியில் நேயர் ஒருவர் தன்னுடைய 10 வயது மகனுக்கு செல்ஃபோன் கொடுக்கலாமா என்று கேட்டார். அதற்குப் பலரும் ஆறாம் வகுப்பிலிருந்து கொடுக்கலாம். வீட்டில் மேல்நிலைப்பள்ளி செல்லும் வயதில் குழந்தைகள் இருந்தால் அவர்களுடைய இளைய உடன்பிறப்புகள் வெகு சீக்கிரத்தில் கைப்பேசியைக் கேட்டு அடம்பிடிப்பதும் வாடிக்கையாக இருக்கிறது. நிச்சயமாக இந்த 'தொல்லைபேசி'கள் மனதளவில் குழந்தைகளிடையே பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது உண்மை. இந்தக்கால பெற்றோர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய சங்கடமும் இது தான். தவழும் வயதிலிருந்தே குழந்தைகள் இதன்பால் ஈர்க்கப்பட்டு வருவதும் அவர்களைக் கையாளத் தெரியாமல் பெற்றோர்கள் அவதிப்படுவதும் கண்கூடாகத் தெரிகிறது.

செல்போன்கள் குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் இடையே ஒரு முக்கிய தொடர்பு வளையமாக இருக்கிறது. முன்பு எப்படி இருந்தோம் என்று யோசித்துப் பார்க்கும் நிலையில் இன்றைய தலைமுறை இல்லை. பள்ளியில் அவசரநிலை அல்லது எதிர்பாராத சூழ்நிலைகளில், குழந்தைகள் தங்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய, உதவிகள் கேட்க என்று தான் பெற்றோர்கள் முதலில் இதனை அனுமதித்தார்கள்.

கொரோனா காலத்தில் கல்வி சார்ந்த பயன்பாடுகள், மின் புத்தகங்கள், டிஜிட்டல் உலகத்திற்கான அணுகல் மூலம் வகுப்பறைக்கு வெளியே தங்கள் கல்வி அனுபவத்தைப் பெற குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தததை யாரும் மறுக்க இயலாது. குழந்தைகள் டிஜிட்டல் கல்வியறிவை வளர்க்க தொலைபேசிகள் உதவும். அதனால் டிஜிட்டல் தளங்களை பொறுப்புடன் வழிநடத்த கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.

செல்போன்கள் சமூக தொடர்புகளை வளர்க்க உதவுகிறது. நண்பர்கள், குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கவும் பள்ளித் திட்டங்களுக்கான குழு உரையாடல்களில் பங்கேற்கவும் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடவும் உதவுகிறது.

இருப்பினும், பெற்றோர்களின் வழிகாட்டுதலுடன் செல்போன்கள் பொறுப்புடன் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.'FamilyKeeper' போன்ற பெற்றோர் கட்டுப்பாட்டு பயன்பாடு இதற்குச் சரியானது. ஆன்லைன் பாதுகாப்பு குறித்த விதிமுறைகளை உருவாக்கி, வெளிப்படையான உரையாடல்களை ஊக்குவிப்பதன் மூலம் தவறுகள் நடப்பதைக் குறைக்கலாம்.

பள்ளிகளில் ஃபோன்களை அனுமதிப்பது கல்வி அனுபவம், மாணவர் பாதுகாப்பு ஆகிய இரண்டையும் மேம்படுத்தும். மாணவர்களுக்கு கல்வி ஆதாரங்களுக்கான உடனடி அணுகலை வழங்கும் சக்திவாய்ந்த கற்றல் கருவிகளாக ஃபோன்கள் செயல்படுகின்றன. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு இடையேயான தொடர்பை மேம்படுத்த உடனுக்குடன் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள உதவுகிறது. குறிப்பாக, துரதிருஷ்டவசமான அவசரநிலைகளில். அதுவும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பள்ளிகளில் நடக்கும் தீவிரவாதம் என்றுமே பெற்றோரை அச்சுறுத்தும் வேளையில் கைபேசிகள் முக்கியமான தகவல் தொடர்பு மையங்களாக செயல்படுகிறது.
கைப்பேசிகளை முறையாகப் பயன்படுத்தினால் நேர விரயம் குறையும்.

கவனச்சிதறல்கள், தவறான பயன்பாடு பற்றிய கவலைகளை, தெளிவான வழிகாட்டுதல்களின் மூலம் குறைக்கலாம். பள்ளிகளில் மாணவர்களுக்குப் பல விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்கிக்கொண்டிருந்தாலும் பெற்றோர்களுக்கு மிகவும் சிரமமான ஒன்றாகவே இருந்து வருகிறது. இளவயதில் செல்ஃபோன் வாங்கிக்கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் பிரச்சினை எனும்பொழுது அவரவர் குழந்தைகள் புரிந்து கொள்ளும் வகையில் அதன் சாதக, பாதகங்களை எடுத்துக் கூற வேண்டிய பொறுப்பில் பெற்றோர்கள் இருக்கிறார்கள். முதலில் பெற்றோர்களுக்குத் தான் விழிப்புணர்வு தேவை என்று நினைக்கிறேன்.

"தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் செல்போன் வைத்திருக்க வேண்டுமா?" என்ற விவாதம் பெரும்பாலும் பாதுகாப்பு, சமூகமயமாக்கல் ஆகியவற்றை மையமாகக் கொண்டது. அவசர காலங்களில் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்திற்கான கருவியாக ஸ்மார்ட்போன்கள் செயல்படும். கூடுதலாக, கல்விப் பயன்பாடுகள், டிஜிட்டல் ஆதாரங்கள் என வகுப்பறைக் கற்றலுக்கு துணைபுரியலாம். இளம் மாணவர்களுக்கு அத்தியாவசிய டிஜிட்டல் கல்வியறிவுத் திறன்களை வளர்க்க உதவுகின்றன என்று ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.

மறுபுறம், சிறு குழந்தைகளின் வளர்ச்சியில் திரை நேரத்தின் எதிர்மறை விளைவுகள் குறித்து எதிர்ப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அதிகப்படியான ஸ்மார்ட்ஃபோன் பயன்பாடு, கற்றல் அனுபவங்கள், வெளிப்புற விளையாட்டு, சமூக தொடர்புகளிலிருந்து அவர்களை விலக்கி அந்நியப்படுத்துகிறது. மேலும் சிறு குழந்தைகளுக்கான திரை நேர வரம்புகளின் முக்கியத்துவத்தை ஆய்வுகள் கடுமையாகப் பரிந்துரைத்துள்ளன. இளம் மாணவர்கள் இணைய அச்சுறுத்தல் போன்ற ஆன்லைன் அபாயங்களுக்கு ஆளாக நேரிடலாம் போன்ற காரணங்களால் ஆரம்ப பள்ளிக்கூடங்களில் அனுமதிக்கக் கூடாது என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள்.
வாட்ஸ் அப் தொடர்புகள் பெருகிவிட்ட காலத்தில் ஃபோன்களால் ஏற்படும் பாதிப்புகளைப் புரிய வைக்க வேண்டிய கடமை, பெற்றோர்கள், பள்ளிகள், அரசிற்கு உண்டு. முழுவதுமாக கைப்பேசியைக் கொடுக்க முடியாது என்று யாராலும் கூற முடியாது. ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்காவது கொடுக்காமல் இருக்கலாம்.

இந்தத் தலைமுறைக் குழந்தைகளை வளர்ப்பது என்பது மிகப்பெரும் சவாலான ஒன்று தான்.

என்னவோ போடா மாதவா!

Saturday, July 6, 2024

அமெரிக்க அதிபர் தேர்தல் 2024 - முதல் விவாதம்


உலகெங்கும் தேர்தல் திருவிழா உற்சாகமாக நடந்து வருகிறது. இந்தியாவில் பிரதமராக 'ஹாட்ரிக்' அடித்துள்ளார் திரு.நரேந்திர மோதி. சமீபத்தில் பிரான்சிலும் இங்கிலாந்திலும் தேர்தல் முடிந்துள்ளது. அந்த வரிசையில் அமெரிக்காவும் நவம்பரில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலுக்காக 2003ல் இருந்து தயாராகி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் ஒரு குழப்பமான தேர்தல் முறை. முதலில் யார் அதிபர் வேட்பாளராக ஒரு கட்சியின் சார்பில் போட்டியிடுவது என்பதே 'மினி' தேர்தலாக மாநிலங்களில் நடக்கும். அதற்காக வேட்பாளர்கள் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று விவாதங்கள் செய்து மக்கள் அவர்களுக்குப் பிடித்தவருக்கு வாக்களித்து அவரும் தேர்தல் நிதிகளை அள்ளினால் ஆட்டத்தில் தொடரலாம். இல்லையென்றால் ஒவ்வொருவராக கழன்று கொண்டே வருவார்கள்.

குடியரசுக்கட்சியின் சார்பில் பலரும் போட்டியிட்டார்கள். ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட நிக்கி ஹேலி, ட்ரம்ப்பிற்கு கிடைத்த பலத்த ஆதரவிற்கு முன் தோற்றுப் போய் விலகிக்கொண்டார். முன்னாள் நியூஜெர்சி ஆளுநர் Chris Christie வந்த வேகத்திலேயே அவுட்டானார். ஃபுளோரிடா ஆளுநர் Ron DeSantisம் நியூ ஹாம்ப்ஷயர் வேட்பாளர் தேர்தலுக்கு முன்பே நிலைமையைப் புரிந்து விலகிக் கொண்டார். முன்னாள் துணை அதிபர் பென்ஸ் இருந்த இடமே தெரியவில்லை. விவேக் ராமசாமியும் இந்த ஆட்டம் தனக்கானதல்ல என்று சென்று விட, ஒரே ஒருவர் மட்டும் வரலாறு காணாத அளவில் தேர்தல் நிதிகளை அள்ளிக்கொண்டு முன்னணியில் நின்றார். அவர் தான் முன்னாள் அதிபர் 'டொனால்ட் ட்ரம்ப்'. அவர் மீது அத்தனை நீதிமன்ற வழக்குகள் நடந்து கொண்டிருந்த பொழுதிலும் அவர் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் செய்த அநீதிகளைத் தெரிந்தும் ஆதரவு பெருகி முன்னணியில் இருப்பதைப் பார்த்து அதிசயித்துப் போனது ஜனநாயக கட்சி.

அதனால் ஜனநாயக கட்சியின் சார்பில் முதலில் இருந்தே அதிபர் பைடன் போட்டியிடுவதாக அறிவித்தவுடன் யாரும் மறுப்பேதும் சொல்லவில்லை. அவரை விட்டால் 'மிச்செல் ஒபாமா' தான் பொருத்தமான வேட்பாளராக இருந்திருப்பார். அவரோ இந்த வெறுப்பரசியலில் நாட்டமில்லை என்று ஒதுங்கிக்கொண்டார். வேறு இளவட்டங்களுக்கு கட்சியே வாய்ப்பளிக்கவில்லையோ? கமலா ஹாரிஸை முன்னிறுத்தவும் விரும்பவில்லை அல்லது ஆதரவில்லை?

இதில் என்ன வினோதம் என்றால் அதிபர் வேட்பாளர்களைக் கட்சி நடத்தும் மாநாட்டில் தான் அறிவிப்பார்கள். இனி வரும் மாதங்களில் தான் மாநாடுகள் நடக்கும். கட்சியின் சார்பில் அனைவரும் ஒருங்கே இருந்து வேட்பாளரை ஜெயிக்க வைக்க வேண்டும் என்று கட்சி ஆணையிடும். ஆனால் எனக்குத் தெரிந்து முன்னணியில் இருப்பவர்கள் தான் இதுவரையில் அதிபர் வேட்பாளராக இருந்திருக்கிறார்கள். அவர்களைத் தான் கட்சியும் ஆதரித்து வருகிறது. ட்ரம்ப்பிற்குப் பெருகும் ஆதரவைக் கண்டு குடியரசுக்கட்சியினருக்கே அதிர்ச்சியாகத் தான் இருந்திருக்கும். துவக்கத்தில் அவருக்குக் கட்சி ஆதரவு தருவதா இல்லையா என்றெல்லாம் கூட விவாதங்கள் நடந்தது. அப்படி ஒன்று நடந்தால் தனித்துப் போட்டியிடுவேன் என்று ட்ரம்ப் தனது பாணியில் மிரட்டிய பின் கட்சியும் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. அந்த வகையில், இன்றைய தேதியில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பைடனும் குடியரசுக்கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ட்ரம்ப்பும் வேட்பாளராக களமிறங்குகிறார்கள்.

தேர்தலுக்கு முன் மக்கள் மன்றத்தில் இந்த வேட்பாளர்கள் தங்கள் கொள்கைகளை, திட்டங்களைப் பற்றி விவாதிப்பார்கள். அப்படியான முதல் விவாதத்தை ஜூன், 27 2024 அன்று 'சிஎன்என்' தொலைக்காட்சி நிறுவனம் நடத்தியது. இதில் பொது மக்கள் பங்கேற்கவில்லை. கடந்த அதிபர் தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக பைடனும் ட்ரம்ப்பும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்கிறார்கள் என்பதால் ஆவலுடன் அமெரிக்காவே எதிர்பார்த்த விவாத மேடை.

நிமிர்ந்த நடையுடன் வந்த ட்ரம்ப் முன், நடந்து வரவே சிரமப்பட்ட பைடன் அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க, இருவரும் முகமன் கூடச் சொல்லிக்கொள்ளவில்லை. வழக்கமான கேள்விகள். அதுவும் தற்போதைய பொருளாதார தேக்கம், அமெரிக்க பாரளுமன்ற தாக்குதல், வெளியுறவுக்கொள்கைகள், இஸ்ரேல் ஆதரவு, எல்லைப்பிரச்னை என்று பைடனுக்கு அடித்துப் பேச அத்தனை வாய்ப்பு இருந்தும் ஏனோ பேச்சு குளறி பதட்டத்துடன் எதிர்கொண்டதை அவரது கட்சி ஆதரவாளர்கள் யாரும் விரும்பவுமில்லை. தான் சொல்வது பொய் என்று தெரிந்தும் பைடனின் பிரச்னைகளைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டார் ட்ரம்ப். முடிவில் இந்த விவாதத்தில் பைடன் தோற்றுப்போனதாக ஒரு பிம்பத்தை எளிதாக உருவாக்கி விட்டார். கேட்ட கேள்விகளுக்கு நேரிடையான பதில்களைக் கூறாமல் தந்திரமாகத் தவிர்ப்பது ட்ரம்ப்புக்கு கைவந்த கலை. பல கேள்விகளையும் அப்படித்தான் எதிர்கொண்டார். கள்ளக்குடியேறிகள், பொருளாதாரம், இஸ்ரேல் ஆதரவு, ஆப்கானிஸ்தான் போர் என்று அவருடைய ஆதரவாளர்களுக்குப் பிடித்தவகையில் பேசினார். ஆனால் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் நடந்த அத்துமீறல், 2020 தேர்தல் முடிவுகள், வெளியுறவுக்கொள்கைகள், கருக்கலைப்பு சம்பந்தமான கேள்விகளுக்கு நேரிடையாக பதில் கூற முடியாமல் மழுப்பியதையும் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள்.

பதில்கள் தெரிந்தும் பல கேள்விகளுக்கும் தொடர்ச்சியாகப் பதிலளிக்க முடியாமல் தடுமாறிய பைடனைப் பார்க்கப் பரிதாபமாகத்தான் இருந்தது. அவர் கடுமையாக விவாதித்து ட்ரம்ப்பைத் தோலுரித்துக் காட்டுவார் என்று எதிர்பார்த்திருந்த கூட்டத்திற்கு முன் இத்தனை வயதானவரால் அடுத்த நான்கு ஆண்டுகள் முழுமையாகச் செயல்பட முடியுமா என்பதே மில்லியன் டாலர் கேள்வியாகி கட்சியை ஆட்டம் கொள்ள வைத்திருக்கிறது. 'அவருக்குப் பதிலாக இவர்' என்று வேறு ஒருவரை அறிமுகம் செய்வார்களா? அது கமலா ஹாரிஸாக இருந்தால் அவரால் ட்ரம்ப்பை எதிர்கொள்ள முடியுமா?

இனிவரும் விவாதங்கள் கடுமையாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. இரு அதிபர் வேட்பாளர்களையும் பிடிக்காதவர்கள் இந்த தேர்தலில் அதிகம். அதுவும் இஸ்ரேல்-பாலஸ்தீன நிலைப்பாட்டில் ஆளும்கட்சியின் செயற்பாடுகள் பல அதிருப்திகளை உருவாக்கியுள்ளதால் வெற்றியாளர்களை இவர்கள் தான் தீர்மானிக்கப்போகிறார்கள். நான்கு மாதங்களில் தெரிந்து விடும். 81 வயதிலும் தன்னால் திறமையாகச் செயல்படமுடியும் என்று மக்களிடையே நம்பிக்கையை வளர்க்க வந்த பைடன் தடுமாறி அன்று தோற்றுத்தான் போனார். அடுத்த விவாதம் நிச்சயமாக இருவரும் கடுமையாக மோதும் வகையில் இருக்கப்போகிறது.

விவாதத்தில் தோற்றாலும் பெரும்பான்மை மக்களின் ஆதரவு இன்னும் பைடனுக்குத் தான் அதிகமாக இருக்கிறது. ட்ரம்ப்பும் நெருங்கிக் கொண்டிருக்கிறார். இன்னும் நான்கு மாதங்கள் இருக்கிறது. யாருக்கு வாக்களிப்பது என்று தீர்மானிக்காத வாக்காளர்களை யார் கவரப்போகிறார்கள் என்பதில் தான் இவர்களின் வெற்றியும் அமெரிக்காவின் எதிர்காலமும் இருக்கிறது.


தமிழா தமிழா...


'ஜீ' தொலைக்காட்சி 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில் 'விதவிதமாக பொருட்களை வாங்கிக் குவிப்பவர்கள் Vs அதை விமரிசிப்பவர்கள்' என்ற தலைப்பில் ஒரு விவாதத்தை ஒலிபரப்பினார்கள். இந்த மாதிரி தலைப்பில் அதிகம் பெண்கள் தான் பங்கெடுப்பார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? தற்பொழுதைய பல பெண்களின் மனப்பான்மை எப்படி இருக்கிறதென்றால்,

"எனக்குப் பிடித்த பொருட்களை வாங்க என்னிடம் தேவையான வசதி இருக்கிறது. அதற்காக என் இஷ்டப்படி வாங்கி குவிப்பேன்" - அது அவர்கள் இஷ்டம். ஒன்றும் சொல்வதற்கில்லை.

"எனக்குப் பிடித்திருக்கிறது. இதில் தனித்துவமாகத் தெரிகிறேன். சந்தோஷமாக இருக்கிறது." - பொருட்களை வாங்கிக் குவிப்பதில் தான் சந்தோஷம் என்பது ஒரு மாயை. அதிலிருந்து இந்த மாதிரி ஆட்களால் வெளியே வரமுடியாது. அடுத்தவரை விட தன்னிடம் எல்லாம் இருக்கிறது என்று காண்பிக்க வேண்டும். எங்கு சென்றாலும் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக தனியே தெரிய வேண்டும் என்ற மெனக்கெடல்."ஆகா! உங்களைப் போல வருமா?" என்று ஏத்திவிடும் ஒரு பொய்யான கூட்டம் எப்பொழுதும் இவர்களைச் சுற்றி ஜால்ரா போடும். அதற்கு இவர்கள் கொடுக்கும் மொய் தான் இந்த வீண் பகட்டு. தெரிந்தே தான் செய்கிறார்கள். அதற்கு கூறும் விளக்கம், "எனக்குப் பிடித்திருக்கிறது. என் காசில் தானே வாங்குகிறேன். உனக்கென்ன வந்தது?" 

தீவிரமாக ஆராய்ந்தால் ஏதோ ஒரு விதத்தில் உன்னை விட நான் ஒரு படி மேலே என்று நிரூபிக்கப் போராடிக்கொண்டிருப்பார்கள். அதனால் மேலும் மேலும் எதையாவது போட்டிப் போட்டு வாங்கிக் கொண்டே இருப்பார்கள். மாலையிட்ட மணாளன் தான் அங்கே 'குணா'வாகி குகையில் மாட்டிக்கொண்ட சிங்கமாக இருப்பான். எப்படியோ, அவர்கள் நினைத்த சந்தோஷம் கிடைத்தால் நல்லது.

தவணை முறையில் தேவையான பொருட்களை மட்டுமே வாங்கியிருப்பதாக ஒரே ஒரு குரல் மட்டும் அந்தக் கூட்டத்தில் தீனமாகக் கேட்டது.

30 ஷூக்கள், 40 கைப்பைகள், 2 லட்ச கைப்பையைத் தள்ளுபடியில் ஒன்னேகால் லட்சத்திற்கு வாங்கியது என்று பீதியைக் கிளப்பினார்கள் பல அம்மணிகளும் சில ஆண்களும். ஒரு பெண்மணி புது ஃபிரிட்ஜ் சந்தையில் வந்தால் நன்றாக இருக்கும் பழைய ஃபிரிட்ஜை மாற்றிவிடுவாராம்! என்னவோ போடா மாதவா! அந்தம்மாவின் கணவர் இப்படி தேவையற்ற பொருட்களை வாங்கி 10 லட்சம் வரை கடனில் இருப்பதாகக் கூறினார். பாவப்பட்ட ஜீவன்😟 "சாப்பாடு கிடைக்காது சார். அதனாலா தான். நிம்மதியா குடும்பம் நடத்தணும்னா இப்படித்தான் 'பூம்பூம்' மாடு மாதிரி தலைய தலைய ஆட்டிட்டு கடனை கிடனை வாங்கி வாழ்க்கைய ஓட்டணும்"னு அனுதாப ஒட்டு வாங்கிக்கிட்டார். ஆனாலும் மனுஷனுக்கு குசும்பு ஜாஸ்தி. சந்தடி சாக்கில் "ஃபிரிட்ஜை  மாத்துவது போல மனைவியை அப்படி மாற்ற முடியவில்லை" என்று மனதிலிருந்ததை  சொல்லிவிட்டுப் போனார்.

ஒரே ஓரு பெண், தன்னுடைய குழந்தை பக்கத்து வீட்டில் தொலைக்காட்சி பார்க்கச் சென்று கால் மிதியடி பக்கத்தில் உட்கார வைத்தார்கள் என்ற அவமானத்தில் கடனை வாங்கி டிவி வாங்கப் போய் பிறகு வேறு பொருட்களையம் வாங்க ஆரம்பித்திருக்கிறார். அவருடைய கணவர் கடனில்லாத வாழ்க்கை வாழ நினைத்தாலும் வரவுக்கு மீறிய செலவு செய்கிறார் தன் மனைவி. சில நேரங்களில் குழந்தைகளும் மனைவியும் செய்யும் செயல்கள் மிகுந்த மனவருத்தத்தைத் தருவதால் சில நாட்கள் வீட்டிற்குக் கூட வருவதில்லை என்று வருத்ததுடன் கூறியதைக் கேட்க வருத்தமாக இருந்தது. அந்தப் பெண்ணைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. நான்கு பேர் முன்னால் நன்றாக வாழ்வதாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்று எல்லோரும் நினைப்போம். ஆனால் அதன் எல்லை எது வரை என்று தெரியாததால் வரும் குழப்பங்கள் இவை. குடும்பத்தின் நிம்மதியைக் கெடுக்கும் பிரச்சினைகள்.

கடுமையாக உழைத்து மனைவி, குழந்தைகளை நல்ல நிலைக்குக் கொண்டு வர நினைக்கும் பல ஆண்களின் வாழ்க்கையும் இப்படித்தான். புரிந்து கொள்ள வேண்டியது பெண்கள் தான். சில குடும்பங்களில் இது ஆண்களாகவும் இருக்கிறது. வரவுக்கு மீறி செலவுகள் செய்வது நல்லதல்ல என்று பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தி குழந்தைகளுக்காகச் சேமித்து வைத்து அவர்கள் எதிர்காலத்தைப் பொற்காலமாக்கின பலரையும் பார்த்து வளர்ந்ததால் இந்த மாதிரிப் பெண்களை நினைத்து வருத்தப்படத்தான் முடிகிறது.

மற்றவர்கள் வாழும் பகட்டான வாழ்க்கையை எண்ணி இப்படித்தான் வாழ வேண்டும் என்று நினைப்பதை விட, கடனில்லாத வாழ்க்கை, குழந்தைகளின் கல்வி, எதிர்காலத்திற்கான சேமிப்பு, அடிப்படைப் பொருட்கள் மட்டும் தான் நிம்மதியைத் தரும் என்றுணர்ந்து வாழ்ந்தால் இல்லறம் நல்லறமாகுமே!


ஶ்ரீவாரி ஶ்ரீபாலாஜி திருக்கோவில்

நியூஜெர்சியில் புதிதாக திறக்கப்பட்டிருக்கும் ஶ்ரீவாரி ஶ்ரீபாலாஜி திருக்கோவிலைக் கட்டிக்கொண்டிருக்கும் பொழுதே பெருமாளை தரிசித்திருக்கிறோம். கட்டுமானப் பணியிலி்ருந்தவர் மதுரைப்பக்கம் என்றவுடன் கூடுதல் மகிழ்ச்சி. ஶ்ரீரங்கம் அகோபில மடத்தைச் சேர்ந்த கோவில். இரு வாரங்களுக்கு முன்பு தான் கும்பாபிஷேகம் நடந்து முடிந்திருந்தது. தாயாருக்குத் தனிக்கோவில். சிறப்பு அலங்காரங்களுடன் தாயார் வீற்றிருந்த கோலம் கொள்ளை அழகு!
பூஜைகள் சிறப்பாக நடக்கிறது. அலங்காரமில்லாத பெருமாள் தீபாராதனையில் மனதை கொள்ளை கொள்கிறார். சிறிய

கோவில் தான் என்றாலும் பூரண திருப்தி தருகிறார் பாலாஜி.



ஓம் நமோ நாராயணாய


கலப்படம்

கல்வியும் விஞ்ஞானமும் வளர, வளர மனிதர்கள் அதை நல்வழியில் பயன்படுத்துகிறார்களா இல்லையோ குறைந்த காலத்தில் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்று எதற...