கதையின் காலகட்டம் விடுதலை பெறுவதற்கு முன்பு என்பதால் அதன் தொடர்பில் பல காட்சிகள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையே இருந்த சாதி அவலம். ஈவேராவைத் தெரிந்து வைத்திருந்த பிராமணனுக்கு சமூக நீதியை நிலைநாட்டப் போராடிய 'நாராயண குரு'வைத் தெரிந்திருக்கவில்லை என்ற போராளியின் எள்ளல். அனைத்துச் சாதியினரும் இணைந்து பள்ளிகள் துவங்க எடுக்கும் முயற்சிகள். நாட்டின் விடுதலைக்காகத் தலைமறைவு வாழ்க்கையில் நேதாஜி படையினர். காந்தியைப் போற்றுபவர்கள். செல்வந்தர்களின் பாலியல் அத்துமீறல்கள். பழிபாவங்கள் என்று பலதையும் தொட்டுச் செல்வதாலும் வட்டார மொழி வழக்கின் சம்பாஷணைகளாலும் வாசிக்க மிகச் சுவாரசியமாக இருக்கிறது.
கதாபாத்திரங்களின் பெயர்களை நினைவில் வைத்திருக்க வேண்டும். திடீரென்று இது எந்த ராவ் என்று குழம்பிவிடுகிறது :) கடைசி பாகத்தில் தான் மர்ம முடிச்சுகள் விலகி பலவும் புரிகிறது. "நல்லா கொடுக்கிறாங்கய்யா டீடெயில்ஸு" என பல இடங்களில் தோன்றினாலும் எப்படி இப்படி எழுதியிருக்கிறார் என்று ஆச்சரியப்பட வைக்கிறது. தற்பொழுது புழக்கத்தில் இல்லாத ப்ளெஷர் கார், பட்டணம் பொடி, ட்ரங்க் பெட்டி, சாணார்ப் பையன் போன்ற வார்த்தைகளை வாசிக்கையில் இந்த தலைமுறைக்குப் புரியுமா என்று யோசித்தேன்.
கன்னி தெய்வத்தை வணங்கி வந்த வீட்டில் தீய செயல்கள் தொடங்கும் வேளையில் அடுத்த சந்ததியினர் அதன் பாரத்தைச் சுமக்கத் தொடங்கிவிடுகிறார்கள் என்று கர்மாவைத் தீர்மானிக்கும் கர்மன் கூறுவதாக எழுதியுள்ளார் ஆசிரியர். கெடுதல்களைச் செய்பவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பது போல தோன்றினாலும் அவர்களும் ஒரு காலகட்டத்தில் அலைக்கழிக்கப்படுவார்கள். அவர்களின் தீய செயல்களால் அடுத்தடுத்த தலைமுறையில் எந்தத் தவறும், கெடுதலும் செய்யாதவர்கள் கூட துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது. வாசிப்போரை ஒருகணம் நிறுத்தி யோசிக்க வைக்கிறது.
ஒரே நாளில் 'கர்மன்' புதினத்தை வாசித்து முடித்தேன். என்னிடம் இருக்கும் கெட்ட பழக்கம் என்னவென்றால் ஒரு புத்தகத்தை வாசித்து பிடித்து விட்டால் அதை முடிக்கும் வரை வேறு வேலைகளில் கவனம் செலுத்த மாட்டேன். அப்படித்தான் இந்த நாவலை வாசிக்கும் பொழுதும் நடந்தது. ஆசிரியர் ஹரன் பிரசன்னா இதற்கு முன்பு எழுதிய 'மாயப் பெரு நதி' புதினமும் நல்லதொரு வாசிப்பனுபவத்தைக் கொடுத்தது. இதுவும் அப்படியே.
 
No comments:
Post a Comment