
ஜனநாயக நாடாக இருந்தபோதிலும் பாகிஸ்தான் ராணுவம் தான் நீண்ட காலமாக இஸ்லாமாபாத் அரசாங்கத்தின் அதிகாரப் புலங்களை மறைமுகமாகக் கட்டுப்படுத்தி வருகிறது என்பதை உலகம் அறியும். தங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்காதவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருந்தாலும் சிறையில் அடைப்பது, மரண தண்டனை வழங்குவது ராணுவத்தினரின் செயல்களாக இருந்து வருகிறது. இந்தியாவிலிருந்து பிரிந்து சென்றிருந்தாலும் வளர்ச்சிப் பாதையில் செல்லாமல் இஸ்லாமியப் பயங்கரவாதத்தையும் இந்திய வெறுப்பையும் சுமந்து கொண்டு அலையும் நாட்டிற்குத் தங்களுடைய சுய லாபத்திற்காகப் பிற நாடுகள், குறிப்பாக அமெரிக்கா இதுவரையில் பணத்தை வாரி இறைத்தது.
ஆப்கானிஸ்தான் போரின் போது முக்கியமான வான்வழி, பொருட்கொடுப்பு வழிகளை வழங்கியதற்காக பாகிஸ்தானின் ஆயுதப்படைகள் அமெரிக்காவிடமிருந்து பில்லியன் டாலர் அளவிலான நிதியைப் பெற்றன. ஆனால் 2018ல் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தங்களிடம் நிதியைப் பெற்றுக் கொண்டு தாலிபானுக்கும் பாதுகாப்பு தஞ்சம் அளித்து வருகிறது என்று குற்றம்சாட்டி, பெரும்பாலான பாதுகாப்பு உதவிகளை நிறுத்தி விட்டார். 2021ல் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதும், இரண்டாவது முறையாக ட்ரம்ப் பதவியேற்ற பின்னும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாட்டின் பணவரவு முற்றிலுமாக குறைந்து விட்டாலும் மனிதாபிமான அடிப்படையில் செய்யும் உதவிகள் மட்டும் தொடர்ந்து வருகிறது. மேலும் “ஆபரேஷன் சிந்தூர்”-ல் வாங்கிய அடி பலமாக இருந்தாலும் “வலிக்கல” என்று கைப்புள்ளையாகி விட்டது பாகிஸ்தான். தற்பொழுது ஏற்பட்டிருக்கும் பொருளாதார சறுக்கலிலிருந்து மீண்டுவர, மீண்டும் மீண்டும் பன்னாட்டு நிதி அமைப்பு, கூட்டாளிகளிடம் கையேந்திக் கொண்டிருக்கிறது.
இந்நிலைமையைத் தவிர்ப்பதற்காக புதிய அவதாரம் எடுத்துள்ளது. 2021ம் ஆண்டு அப்போதைய ராணுவத் தளபதி காமர் ஜாவேத் பஜ்வா “புவிசார் பொருளாதார பார்வை” பற்றின முக்கிய உரையில், “நாட்டின் உள்ளும் வெளியும் அமைதியை நிலைநாட்டவும், பாகிஸ்தானை ஒரு பொருளாதார மையமாக நிறுவி உள்பிராந்திய வர்த்தக இணைப்பை அதிகரிக்கவும் ராணுவத்தின் பங்கு அவசியம்” என்பதனைக் கோடிட்டுக் காட்டினார். பாஜ்வாவிற்குப் பின் பதவியேற்ற அசிம் முனிரின் முதன்மை முயற்சியாக, கட்டுக்கோப்பான ராணுவத்தின் அதிகாரத்துவ செல்வாக்கைப் பயன்படுத்தி வலுவான பொருளாதாரத்தை அடைய 2023ல் தொடங்கப்பட்டது தான் SIFC. (Special Investment Facilitation Council) செப்டம்பர் 8, 2025ல் அமெரிக்காவுடனான $500 மில்லியன் கனிம ஒப்பந்தத்திற்கான கையெழுத்து விழாவில் ராணுவத் தளபதி அசிம் முனிரும் பிரதம மந்திரி ஷெஹ்பாஸ் ஷெரிஃப்புடன் கலந்து கொண்டது, அவர்களின் தலைவர்களை விட ராணுவமே தேசியக் கொள்கையை நிரந்தரமாக வடிவமைக்கும் என்ற கோட்பாட்டினை நிரூபித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து நாட்டின் பொருளாதார நிலைமையைச் சமாளிக்க தங்களின் ஒரே பலமான ராணுவத்தைக் கொண்டு பொருளீட்டத் திட்டமிட்டது தற்போதைய பாகிஸ்தான் அரசு. செப்டம்பர் 17, 2025 அன்று சவுதி அரேபியாவுடன் “பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்” மூலமாக இரு நாடுகளுக்கு இடையே நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பை உறுதி செய்துள்ளது பாகிஸ்தான்.
இந்த ஒப்பந்தம் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் போன்ற வெளிநாட்டுத் தாக்குதல்களுக்கு எதிரான பாகிஸ்தானின் பாதுகாப்பு உத்தரவாதமாக விளம்பரப்படுத்தப்படுகிறது. இதில் இரு நாடுகளுக்கும் எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்பும் இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும் என்றிருந்தாலும் உண்மையில், இது சவுதி அரேபிய நிர்வாகத்தின் உத்தரவுகளுக்காகக் காத்திருக்கும் கூலிப்படையாக பாகிஸ்தான் ராணுவத்தின் நிலையை உறுதிப்படுத்துகிறது. அது மட்டுமில்லாமல் பாகிஸ்தானை “உதவி பெறும் நாடு” என்ற நிலையிலிருந்து, அமெரிக்காவின் பிராந்திய ஆதிக்கத்தில் நம்பிக்கை இழந்து வரும் நாடுகளுக்கு “பாதுகாப்பு வழங்கும் நாடாக” மாற்றும் நோக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.
பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டாலும், தோஹாவில் ஹமாஸ் தலைமையைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய முன்னறிவிப்பில்லாத வான்வழித் தாக்குதல் நடந்த சில நாட்களுக்குப் பிறகு வெளிவந்த இந்த ஒப்பந்த அறிவிப்பு தான் தற்பொழுது உலகநாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சவுதி அரேபியாவைப் பொறுத்தவரை, சக வளைகுடா நாடும் அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடான கத்தார் மீதான தாக்குதல், அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே என்பதனை ஊர்ஜிதம் செய்துள்ளது. அதனால் பாகிஸ்தானின் அணுசக்தி குடையின் கீழ் இருப்பதும் அதன் ராணுவமும் ரியாத்திற்கு பாதுகாப்பாக இருப்பது சவுதிக்கு அவசியமானதாக இருக்கிறது.
இஸ்லாமாபாத்தைப் பொறுத்தவரை, இந்த ஒப்பந்தம் ஒரு முக்கியமான பொருளாதார உயிர்நாடியாகியுள்ளது. ஐந்து பில்லியன் டாலர் சவுதி முதலீட்டுத் தொகுப்பும் பில்லியன் கணக்கான வணிக ஒப்பந்தங்களும் இந்தியாவிற்குப் புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் பாகிஸ்தானுடனான மோதலில் சவுதியின் தலையீட்டையும் கவனத்தில் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இந்தியாவைத் தள்ளியுள்ளது.

அது மட்டுமில்லாமல், ட்ரம்ப்பின் நெருங்கிய வட்டத்தில் உள்ளவர்களைக் குறிவைத்தும், தன்னைத்தானே புகழ்ந்து கொண்டிருந்தாலும் வேறு யாராவது தன்னைப் புகழ்ந்து பேசமாட்டார்களா’ என்று ஏகத்திற்கும் காத்திருந்த ட்ரம்ப்பை ‘அமைதிக்கான மனிதர்’ என பொய்யாகப் புகழ்ந்தும் தந்திரமாகக் காய்களை நகர்த்தி தனக்குச் சாதகமாக்கிக் கொண்டுள்ளார் ஷெரிஃப். அது மட்டுமா? இந்தியாவுடனான பாகிஸ்தானின் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் மத்தியஸ்தம் செய்ததாக ட்ரம்ப்பின் பொய்யை இவரும் சேர்ந்து புளுகி அவரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்து அங்கிள்சாமை கவிழ்த்த நாடகங்களை உலகம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு தான் இருந்தது.
எப்படியாவது ட்ரம்ப்பிடம் நல்ல பெயர் வாங்கி மீண்டும் பணத்தைக் கறந்து விட வேண்டும் என்று பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை வேறு முடுக்கிவிட்டுள்ளது. அதை நிரூபிக்கும் விதமாக 2021ம் ஆண்டு காபூல் விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில் 13 அமெரிக்கப் படைவீரர்களைக் கொன்ற இஸ்லாமிய அரசு தீவிரவாதியை இந்த ஆண்டு தொடக்கத்தில் கைது செய்தது. இதற்கெல்லாம் ஈடாக, கடந்த மாதம் வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்த ஷெரிஃப், முனீர் இருவரையும் “சிறந்த மனிதர்கள்” என்று ட்ரம்ப் பாராட்டியுள்ளார். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த அரசியல் தலைவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் முகஸ்துதி செய்து கொள்வதைப் பார்த்து முகஞ்சுளித்துக் கொண்டது உலக நாடுகள்.
ஆனால் அதைப்பற்றிக் கவலை கொள்ளவில்லை இருவரும். பொருளாதார ரீதியாக, பாகிஸ்தானுக்குச் சாதகமான 19 சதவிகித வரி விகிதமும் அமெரிக்க முதலீடுகளுக்கான வாய்ப்புகளும் கிடைத்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவைப் பகைத்துக் கொள்ளாமல் சவுதியுடனான கூட்டணியை வலுப்படுத்தும் சுதந்திரத்தையும் பெற்றுள்ளது பாகிஸ்தான்.

சவுதி ஒப்பந்தம் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றிருந்தாலும் ஆப்பிரிக்காவிலும் புதிய கடல்சார் தளங்களிலும் அதன் விரிவாக்கம் கவனத்தைப் பெற்றிருக்கிறது. செங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் பாகிஸ்தானின் ஆதிக்கத்தை வலுப்படுத்த ஆகஸ்ட் மாதத்தில் சோமாலிய அமைச்சரவை பாகிஸ்தானுடன் ஐந்து ஆண்டு ராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தைப் போட்டுள்ளது.
வடக்கே, கிழக்கு லிபியா அரசாங்கத்துடன் பாதுகாப்பு உறவுகளை உறுதிப்படுத்தியுள்ளது. அங்கு ஜெனரல் கலீஃபா ஹப்தாரின் சுயமாக அறிவிக்கப்பட்ட லிபிய தேசிய ராணுவம், திரிபோலியில் ஐ.நா. ஆதரவு அரசாங்கத்திற்கு எதிராக ஒரு அரசை அமைத்துள்ளது. ஹப்தாரின் மகன் சதாம் ஹப்தார், ஜூலை மாதம் இஸ்லாமாபாத்திற்கு விஜயம் செய்து ஷெரீப்பையும் முனீரையும் சந்தித்து இரு தரப்பிலும் ஒத்துழைப்பை ஆழப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் மத்தியதரைக்கடலில் தனது கடற்படை இருப்பை விரிவுபடுத்தியது மட்டுமில்லாமல் அதன் போர்க்கப்பல்கள் துருக்கிய கடற்படையுடன் கூட்டு ரோந்துப் பணிகளை மேற்கொண்டுள்ளன. இந்த எல்லைமீறலை கிரீஸ் எதிர்த்துள்ளது.
பாகிஸ்தானின் மற்றொரு குறிப்பிடத்தக்க முன்னெடுப்பு, சூடானின் ஆயுதப் படைகளுடன் ஆகஸ்ட் மாதம் கையெழுத்திட்ட 1.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகும். சூடான் நாட்டுப் படைகள், துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளுடன் (RSF) பேரழிவுகரமான உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ளன. சவுதி அரேபியா, சூடான் படைகளுக்கு ஆதரவாக இருப்பதால் RSFஐ எதிர்த்துப் போரிட, இந்த ஒப்பந்தத்திற்கான நிதியை வழங்கியதாகக் கூறப்படுகிறது. (With foreign cash, strategic location and cover)

பரஸ்பர நன்மை பயக்கும் இந்த ஒப்பந்தத்தால் அண்டை நாட்டுப் பிரச்சினையைக் குறைக்க ரியாத்திற்கு மிகவும் உதவும். இஸ்லாமாபாத்தைப் பொறுத்தவரை, இது ராணுவ-தொழில்துறை வளாகத்திற்கான ஒரு லாபகரமான ஒப்பந்தமாகும். இதன்மூலம், சீனாவால் உருவாக்கப்பட்ட ராணுவ வன்பொருட்களை ஆப்பிரிக்கப் போருக்கு வழங்கும் ராணுவ சப்ளையராகவும் வளைகுடாவின் புதிய பாதுகாப்பு கட்டமைப்பிலும் அதன் பங்கை உறுதிப்படுத்துகிறது. (Saudi Arabia loaned Pakistan $3 billion)
பாகிஸ்தானின் இத்தகைய லட்சிய முயற்சிகளால் குறிப்பிடத்தக்க ஆபத்துகள் இல்லாமல் இல்லை. 2015ல் ஏமனில் சவுதி தலைமையிலான ஹவுதிகளுக்கு எதிரான போரில் சேர இஸ்லாமாபாத் மறுத்துவிட்டது. ஆனால் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள், பயிற்சியுடன் தொடர் ஆதரவை ஈரான் வழங்கி வருவதால் புதிய ஒப்பந்தத்தை இறையாண்மைக்கு அச்சுறுத்தலாகக் கருதுகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா பாகிஸ்தானைப் பயன்படுத்த விரும்புகிறது என்றும் நம்புகிறது. ஈரானும் சவுதி அரேபியாவும் தங்கள் உறவுகளை மேம்படுத்த முயற்சித்து வந்தாலும், காசா போர் மத்தியகிழக்கில் புதிய உறுதியற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. இந்த ஜூன் மாத தொடக்கத்தில், இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியது. இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் சவுதி வான்வெளியைப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டது. இதனால் பாகிஸ்தானின் ஆதரவு நிலையில் மாற்றம் ஏற்படக்கூடும். சவுதிஅரேபியாவுடனான அதன் ஒப்பந்தத்தில் உள்ள பரஸ்பர பாதுகாப்பு விதி, பிராந்திய மோதல்களுக்கு நாட்டை இழுக்கக்கூடும். பணத்திற்காகப் போடப்பட்டுள்ள இந்த பாதுகாப்பு ஒப்பந்தங்களால் வெளிநாட்டுப் போர்களில் சிக்கிக்கொள்ளும் நிலைமை ஏற்பட்டால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். முதன்மை எதிரியான இந்தியா, உள்நாட்டுத் தீவிரவாதக் குழுக்களான தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான், இஸ்லாமிய அரசு கோரசன் மாகாணம் முதல் பலூச் பிரிவினைவாதிகளின் தாக்குதல்களைச் சமாளிப்பதில் பிரச்சினைகள் வரலாம். (private military company notorious for providing mercenary services)
தற்போதைய நிலைப்பாட்டால் பாகிஸ்தான் ஒரு “கூலிப்படை நாடாக” மாறி ரஷ்யாவிற்கு ஆதரவாக உக்ரைன் போரில் ஈடுபட்டு வருகிறது என்று அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். 9/11 தாக்குதலுக்குப் பின் அமெரிக்கா தலைமையிலான பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இஸ்லாமாபாத் ஒரு “முன்னணி நட்பு நாடாக” இணைந்ததால் உள்நாட்டில் பின்னடைவை ஏற்படுத்தி 90,000 உயிர்களுக்கும் 150 பில்லியன் டாலர் பொருளாதார இழப்புகளுக்கும் காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கூறிய வரலாற்று இழப்புகளும் பிரச்சினைகளும் இருந்தபோதிலும், வாய்ப்புகளும் ஆபத்துகளுமாய் இரட்டை முனைகள் கொண்ட வாள் தான் பாகிஸ்தானின் இந்த புதிய முயற்சி. பாதுகாப்பு மற்றும் புவிசார்-பொருளாதார உத்தியை இணைப்பதற்கான அதன் முயற்சிகளின் இறுதி நிலைத்தன்மை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் ஒன்று மட்டும் நிச்சயம்: பாகிஸ்தானுக்கு விற்க கைவசம் ஒரு தயாரிப்பு உள்ளது. தற்போதைய நிலையற்ற உலகில், ராணுவ வணிகம் செழித்து வருகிறது. அதுவும் வளைகுடா பகுதிகளில் அதன் தேவை அதிகமாகவே இருக்கிறது. அதை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை ராணுவம் செய்து வருகிறது.
பாகிஸ்தான் ராணுவம் பெரும்பாலும் நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த நிறுவனம் என்று தவறாக அடையாளப்படுத்தப்படுகிறது. உண்மையில் இது ஒரு கூலிப்படை நிறுவனமாகும்.1970 ஆம் ஆண்டு ஜோர்டானில் ஜியா-உல்-ஹக்கின் கட்டளையின் கீழ் பாகிஸ்தான் துருப்புக்கள் 25,000 பாலஸ்தீனியர்களைக் கொன்ற கறுப்பு செப்டம்பர் முதல் தற்போதைய ரியாத்துடனான புத்தம் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் வரை, பாகிஸ்தானின் படைத்தளபதிகள் மிகப்பெரிய காசோலைகளில் கையெழுத்திடுபவர்களுக்காக நீண்ட காலமாகப் போராடி வருவது வரலாறு (1979 Grand Mosque seizure in Mecca). அணு ஆயுதக் கேடயம் என்ற வாக்குறுதியுடன் சவுதி அரேபியாவுடனான சமீபத்திய ஒப்பந்தம், ராவல்பிண்டியின் நீண்ட கூலிப்படை பேரேட்டில் புதிய அத்தியாயமாகும். (signed a mutual defence pact with Saudi Arabia)
பாகிஸ்தானுடனான அரபு நாடுகளின் உறவு என்பது சகோதரத்துவ அடிப்படையில் அமைந்தது அல்ல. பரிவர்த்தனை சார்ந்தது. வளைகுடா அவர்களுக்குப் பணத்தையும் எண்ணெயையும் வழங்க, பாகிஸ்தான், துருப்புக்களையும் போலி கண்ணியத்தையும் வழங்குகிறது. அதற்கு ஈடாக, இரு தரப்பினரும் உலக அரங்கில் தாங்கள் முக்கியமானவர்கள் என்று பாசாங்கு செய்து வாஷிங்டனுக்கு நிரூபிக்க முயற்சிக்கிறார்கள்.
பாகிஸ்தான் தளபதிகளின் விசுவாசம் தங்கள் நாட்டிற்கோ, இஸ்லாத்திற்கோ, காசாவிற்கோ அல்ல. தங்கள் காசோலைகளில் கையெழுத்திடுபவர்களுக்கு மட்டுமே. என்று பாகிஸ்தானியர்கள் ராணுவ நிறுவனம் தங்கள் பாதுகாவலர் அல்ல. சுயலாபத்திற்காக இயங்கும் கூலிப்படை என்பதை உணருகிறார்களோ அன்று நாடு
பிளவுபடும். வரலாறு அவர்களைப் போர்வீரர்களாக நினைவில் கொள்ளாது. பேரரசிற்கு விலைபோனவர்களாக மட்டுமே நினைவில் கொள்ளும் என்பதையும் ராணுவ அதிகாரிகள் அறிவார்கள். தற்பொழுது மக்களை ஏமாற்ற, தேசபக்தி, “உம்மாவின் பாதுகாப்பு” போன்ற வெற்று முழக்கங்களிட்டு உயரடுக்கினரின் வங்கிக் கணக்குகளைப் பாதுகாத்துக் கொள்கிறது.
திவாலான நாடு மீண்டும் கூலிப்படை நாடாக அவதரித்திருப்பது வளைகுடா பாதுகாப்பையும் பிராந்திய மறுசீரமைப்பையும் பிரதிபலிக்கிறது. இந்த களேபரங்களுக்கு மத்தியில், இந்தியாவுடனான சவுதி அரேபியாவின் உறவுகள் முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளன என்றும் எதிர்காலத்தில் தொடர்ந்து வளரும் என்றும் கூறப்படுகிறது. தற்பொழுது அமெரிக்கா வேறுபட்ட நலன்களைச் சமநிலைப்படுத்த வேண்டிய கட்டாயத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வரும் ஆண்டுகளில் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் செல்வாக்கை வடிவமைக்கவும் நம்பிக்கையைப் பெறவும் அதிபர் ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும் என்பதையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது உலகம்.

Sources:
- Najib Azad, Treason: The Engineered Collapse of the Republic of Afghanistan (Liberty Hill Publishing 2023).
- Hassan Abbas, Pakistan’s Drift into Extremism: Allah, the Army, and America’s War on Terror (M E Sharpe 2005).
- Vahid Brown and Don Rassler, Fountainhead of Jihad: The Haqqani Nexus, 1973–2012 (Columbia UP 2013).
- Steve Coll, Ghost Wars: The Secret History of the CIA, Afghanistan, and bin Laden, from the Soviet Invasion to September 10, 2001 (Penguin Press 2004).
- George Crile, Charlie Wilson’s War: The Extraordinary Story of the Largest Covert Operation in History (Grove Press 2003).
- Robert M Gates, From the Shadows: The Ultimate Insider’s Story of Five Presidents and How They Won the Cold War (Simon & Schuster 1996).
- Lester W Grau and Michael A Gress (eds), The Soviet–Afghan War: How a Superpower Fought and Lost (University Press of Kansas 2002).
- Antonio Giustozzi, Koran, Kalashnikov, and Laptop: The Neo-Taliban Insurgency in Afghanistan (Columbia UP 2008).
- Husain Haqqani, Pakistan: Between Mosque and Military (Carnegie Endowment 2005).
- International Crisis Group, Pakistan: Countering Militancy in FATA (Asia Report No 178, 2009) and subsequent Pakistan/Afghanistan reports (2009–2016).
- International Human Rights and Conflict Resolution Clinic (Stanford Law School) and Global Justice Clinic (NYU School of Law), Living Under Drones: Death, Injury, and Trauma to Civilians from US Drone Practices in Pakistan (2012).
- Ayesha Jalal, The State of Martial Rule: The Origins of Pakistan’s Political Economy of Defence (Cambridge UP 1990).
- Seth G Jones, In the Graveyard of Empires: America’s War in Afghanistan (W W Norton 2009).
- Seth G Jones and C Christine Fair, Counterinsurgency in Pakistan (RAND Occasional Paper 2010).
- Anatol Lieven, Pakistan: A Hard Country (Allen Lane 2011).
- Iftikhar H Malik, Pakistan: Democracy, Terror and the Building of a Nation (Atlantic Books 2010).
- Shuja Nawaz, Crossed Swords: Pakistan, Its Army, and the Wars Within (OUP 2008).
- OCCRP and others, Suisse Secrets (Credit Suisse leaked accounts) (February 2022).
- Ahmed Rashid, Taliban: Militant Islam, Oil and Fundamentalism in Central Asia (Yale UP 2000).
- Bruce Riedel, What We Won: America’s Secret War in Afghanistan, 1979–1989 (Brookings Institution Press 2014).
- Olivier Roy, Islam and Resistance in Afghanistan (2nd edn, Cambridge UP 1990).
- Thomas Ruttig, How Tribal Are the Taleban? (Afghanistan Analysts Network Discussion Paper 2010).
- Victoria Schofield, Kashmir in Conflict: India, Pakistan and the Unending War (I B Tauris 2003).
- Ashley J Tellis, C Christine Fair and Jamison Jo Medby, Limited Conflicts Under the Nuclear Umbrella: Indian and Pakistani Lessons from the Kargil Crisis (RAND 2001).
- Peter Tomsen, The Wars of Afghanistan: Messianic Terrorism, Tribal Conflicts, and the Failures of Great Powers (PublicAffairs 2011).
- US Department of State, Foreign Relations of the United States (FRUS): Afghanistan–Pakistan (1977–1989).
- United Nations Security Council, Reports and Sanctions Listings concerning the Taliban and al-Qaeda (2001–2010).
- Marvin G Weinbaum, Pakistan and Afghanistan: Resistance and Reconstruction (Westview Press 1994).
- Mohammad Yousaf and Mark Adkin, The Bear Trap: Afghanistan’s Untold Story (Pen & Sword 2001).









