Saturday, October 27, 2018

Back to school night

சமீபத்தில் சுப்பிரமணியின் பள்ளியில் பெற்றோர்களுக்கான 'Back to school night' நாளன்று நானும் கணவரும் சென்றிருந்தோம். அப்பா நீங்களும் அம்மா கூட போயிட்டு வரணும் என்று சுப்பிரமணி மிரட்டியதில் வேண்டா வெறுப்பாக வந்தார். ஒவ்வொரு வருடமும் பள்ளி திறந்த ஒரு மாதத்திற்குள் இந்த நிகழ்ச்சியன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆசிரியர்களைச் சந்திக்கவும் ஆசிரியர்களும் மாணவர்களிடம் தாங்கள் எதிர்பார்ப்பது என்ன, எதன் அடிப்படையில் மதிப்பெண்கள் போடுவார்கள், மாணவர்களின் பங்களிப்பு மற்றும் அவர்கள் படிக்கப் போகும் பாடத்திட்டங்களை 10 நிமிடங்களில் விளக்கிக் கூற முயல்வார்கள். பல ஆசிரியர்களும் மகளுக்கும் வகுப்பெடுத்தவர்கள். சுப்பிரமணியைப் பற்றிக் கேட்டவுடன் நன்றாக படிக்கிறானே! என்று ஆச்சரியமூட்டினார்கள்😧 அதிலும் ஒரு ஆசிரியர் அவனுக்கு நல்ல சென்ஸ் ஆஃப் ஹ்யூமர் இருக்கு. வகுப்பில் ஒரே கலகலப்பு தான் என்றார். என்னத்த பண்றானோ ? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!

ஆங்கில வகுப்பில் கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் கட்டுரையை எப்படி எழுதுவது என்று மாணவர்களுக்கு நடைமுறைப் பயிற்சி அளிக்கிறார்கள். என் கல்லூரி படிவத்தை மாமா தான் நிரப்பியதாக ஞாபகம்! மகள் அவளுடைய கல்லூரி விண்ணப்ப படிவத்தை அவளே நிரப்பினாள். இப்பொழுது சுப்பிரமணியும் அவனே தான் செய்ய வேண்டும்.

கணிதத்தில் நான் கல்லூரியில் படித்ததைப் படித்துக் கொண்டிருக்கிறான்! எனக்கும் தெரியும்டா என்றேன். ஆச்சரியப்படுகிறான்! அம்மாவுக்கு தோசை தான் சுட தெரியும்னு நினைச்சிருப்பான் போல 😛 எனக்குப் பிடிக்காத இயற்பியல் பாடம் அவ்வளவு கடினமாக இருக்கிறது. எப்படித்தான் படிக்கிறானோ? சோஷியல் சயின்ஸ் வகுப்பில் அன்றாட அரசியல் நிகழ்வுகளை விவாதிக்கிறார்கள். நமக்குத் தான் தினம் ஒரு பிரச்னையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறாரே இந்த ட்ரம்ப்.

மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் நாட்டு நடப்பை, உலக அரசியலைப் பற்றி விவாதிப்பது எவ்வளவு பெரிய விஷயம்! அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நடைமுறை அரசியல். விவாதங்கள் விவரங்களைத் தெளிவுப்படுத்தலாம். மகளும் சரி, மகனும் சரி அரசியல் செய்திகளை வாசிக்கவும், தொலைக்காட்சியில் பார்க்கவும் தவறுவதில்லை. விவாதிக்கவும் செய்வார்கள்! என் பள்ளிக்காலங்களில் காலை நேரக் கூட்டத்தில் தலைப்புச் செய்திகள் வாசிப்பதோடு சரி. நமக்கு கல்வியறிவு என்று புத்தகத்தில் இருப்பதை மனனம் செய்வது என்றே இருந்த நிலை இன்று மாறியிருக்கிறதா?

விளையாட்டுத்துறை ஆசிரியர்கள் புதிதாக கட்டப்பட்டிருக்கும் உடற்பயிற்சி கூடம் மற்றும் புதிய உபகாரணங்களைக் காட்டி உங்கள் வரிப்பணம் நல்ல முறையில் உங்கள் குழந்தைகளுக்குப் பயன்படுகிறது என்று சொன்னார்கள்! படிப்பு என்பது உடல் நலம் பேணுதலையும் சேர்த்தே கற்றுத் தருகிறார்கள். எனக்கு இந்த ஊரில் பிடித்ததே இது உங்கள் வரிப்பணம். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி அளிக்க உதவும் திட்டங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று தான் உள்ளூர் தேர்தலில் வேண்டுகோள் வைப்பார்கள் பள்ளிகளில். நாமோ எது இலவசமாக கிடைத்தாலும் ஊரான் வீட்டுப்பணம் போலவும் எந்த திட்டமும் அரசியல்வாதிகள் அவர்கள் கைப்பையிலிருந்து உழைத்து சம்பாத்தித்த பணத்தில் நமக்கு சகாயம் செய்வது போலவும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஹ்ம்ம்...

சுப்பிரமணிக்கு மிகவும் பிடித்த மியூசிக் கிளாஸ். எந்த மொட்டைத்தலை ஆசிரியரைப் பார்த்து ஒன்பதாம் வகுப்பில் பயந்தானோ அவர் தான் இன்று வரை அவனுடைய மியூசிக் டீச்சர். ஒன்பதாம் வகுப்பிலேயே அவரிடம் உங்களைக் கண்டால் என் பையன் அநியாயத்திற்குப் பயப்படுகிறான் என்று சொல்லி, நான் அப்படியா இருக்கிறேன் பயப்பட வேண்டாம் என்று சொல்லுங்கள் என்றதை சுப்பிரமணியிடம் சொல்லி நீ ஒழுங்கா இருந்தா உனக்கு ஒரு பிரச்னையும் இல்லை என்று சொன்னதெல்லாம் ஞாபகம் வந்தது.

நானெல்லாம் ஆணி அடித்த மாதிரி ஒரே வகுப்பில் ஒரே இடத்தில் தான் வருடம் முழுவதும் படித்திருக்கிறேன். ஆசிரியர்கள் தான் மாறுவார்கள். சுப்பிரமணியின் ஒவ்வொரு வகுப்பும் பள்ளியின் ஒவ்வொரு மூலையில் இருக்கிறது. ஐந்து நிமிடங்களுக்குள் ஒரு வகுப்பிலிருந்து இன்னொரு வகுப்பிற்கு ஓடி வர வேண்டியிருக்கிறது! பாவம்! ஆனால் வேண்டியது தான். சுறுசுறுப்பாக இருக்க உதவும். படிகளில் ஏறி இறங்கி கிடுகிடுவென மணியடிப்பதற்குள் வகுப்பறையைத் தேடி ஓட்டம் தான்! ஜாலியாக இருந்தது.

இந்தப் பள்ளிகளில் எனக்கு மிகவும் பிடித்த அம்சமே அந்தந்த வகுப்புகளில் பாட சம்பந்தப்பட்ட புத்தகங்களும், படங்களும் என்று அழகாக வைத்திருப்பார்கள். கணினி மற்றும் புத்தகங்களுடன் விசாலமான நூலகம். மகள் அங்கு தான் மாலை நேரங்களில் இருப்பாள். சுப்பிரமணி மறந்தும் கூட அந்தப் பக்கம் போவதில்லை 😞 இந்த வருடம் சுப்பிரமணிக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள் அனைவரும் பெண்கள். பார்த்தாலே மிடுக்காக பல வருட அனுபவங்களுடன். மிகவும் பிடித்திருந்தது. மாணவர்கள் மிகவும் பொறுப்பாக இருப்பதாக கூறினார்கள். நடுநிலைப்பள்ளி முதல் பத்தாம் வகுப்பு வரை கற்றுத்தரும் ஆசிரியர்கள் தான் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாவார்கள் என்று நினைத்துக் கொண்டேன். பள்ளி இறுதி ஆண்டை நெருங்கும் பொழுது மாணவர்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து பிரச்னைகள் செய்வதும் குறைகிறது.அனைத்து ஆசிரியர்களும் பெற்றோர்களிடம் வலியுறுத்திய ஒரு விஷயம் - உங்கள் மகனுக்கோ மகளுக்கோ பாடத்தில் கேள்விகள் இருந்தால் பள்ளி முடிந்தவுடன் நாங்கள் இருக்கும் நேரத்தில் வந்து கேட்டுத் தெளிவுப்படுத்திக் கொள்ளலாம் என்றார்கள். தனியார் டியூஷன் என்ற கான்செப்ட் அறவே இல்லை! இப்பொழுது மெதுவாக இந்தியர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள். நல்ல வேளை! என் குழந்தைகள் தப்பித்தார்கள்.

இப்படியாக இரண்டு மணிநேரம் அவனுடைய வகுப்புகளுக்குச் சென்று இறுதியில் அவனுடன் கிண்டர்கார்டனில் இருந்து படிக்கும் நெருங்கிய நண்பர்களின் அம்மாக்களுடன் சிறிது நேரம் அரட்டை. இது தான் நாம் பள்ளிக்கு வரும் கடைசி Back to school night என்றேன். இனி அவர்கள் கல்லூரிக்குச் சென்று விடுவார்கள். எப்படா போவான் என்றிருக்கிறது என்று ஒருவர் சொல்ல, நான் இன்னும் தயராகவில்லை என்று சொல்லும் பொழுதே கண்ணீர் துளிர்த்தது இன்னொரு அம்மாவிற்கு. பலருக்கும் இந்த வகுப்பில் படிப்பவர்கள் இரண்டாவது செல்லக் குழந்தைகள். 12 வருடம் ஓடியே போய்விட்டது. இரட்டை வால் ரெங்குடுகளாக பார்த்த நாள் முதல் பதின் பருவ சேட்டை நாயகர்கள் இன்று கல்லூரி செல்ல தங்களைத் தயார் செய்து கொள்ளும் கட்டிளங்காளைகளாக! அவர்களின் குழந்தைப்பருவங்களை அசை போட்டு அவர்கள் செய்த குறும்புகளைப் பேசி...ம்ம்ம்ம்ம்...

பட்டமளிப்பு விழாவில் மீண்டும் சந்திப்போம் என்று கூறி விடைப்பெற்றோம்.

எப்படிம்மா இருந்தது? எந்த டீச்சர உனக்கு ரொம்ப பிடிச்சது?

முழுக்கதையையும் சொல்லி நீ ஒழுங்கா படிடா! படிச்சிருவேல்ல?

ஆள் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்பப் ....

அதுக்கெல்லாம் எங்க பதில் வர்றது?

வண்டியில் போகும் பொழுதும் சாப்பிடும் நேரத்தையும் தவிர மற்ற நேரங்களில் அதிகம் பேசிக்கொள்வதுமில்லை 😞எப்பொழுது தூங்குகிறான் என்றே தெரியவில்லை 😞

உனக்கென்ன மனக்கவலை...உன் தாய்க்கன்றோ தினம் தினம் உன் கவலை...

No comments:

Post a Comment

சுவதந்த்ரவீர் சாவர்க்கர்

மிக அழகாக திரு.வீர் சாவர்க்கரின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் படம். நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள். சாவர்க்கராக நடித்திருக்கும் 'ரந்தீப் ஹ...