Wednesday, October 24, 2018

The Last Drop - India's water crisis

'The Last Drop - India's water crisis' என்றொரு நேஷனல் ஜியோக்ராபிக் ஆவணப்படமொன்றில் இந்தியாவில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை, நீர்நிலைகளின் இன்றைய நிலை, இனி வரப்போகும் அபாயங்களையும் விரிவாக பதிவு செய்திருக்கிறார்கள்

2030ல் 40 சதவிகித மக்கள் நீரின்றி அவதியுறுவார்கள் என்ற அதிர்ச்சிகரமான ஆராய்ச்சித் தகவலுடன் ஆரம்பமாகும் இந்த ஆவணப்படம் வறண்ட ராஜஸ்தானிலிருந்து தொடங்குகிறது. பல மைல்களுக்கு ஒட்டகம் மூலமாக எங்கோ இருக்கும் கிணற்றிலிருந்து குடம் குடமாக தண்ணீர் எடுத்துக் கொண்டு வருகிறார்கள். தண்ணீர் இல்லாததால் பலரும் நகரை நோக்கி இடம் பெயர அங்கும் இதே நிலைமை தான். பல மாடி அடுக்குக்குடியிருப்புகள் ஆற்றுப்படுகையின் மேல் கட்டப்பட்டு நீராதாரத்தை அழித்து வருகிறது. மழைநீர் சேகரிக்கும் வகையில் ராஜஸ்தான் அரண்மனைகளில் கட்டியுள்ள சிறு குளங்கள் இன்று கழிவுகளைச் சுமந்து நிற்கும் அவலங்களையும் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

குர்கிராம் நகரின் விஸ்தரிப்பும் பல மாடிக்கட்டிடங்களும் நீரில்லாத நகரமாக உருவாகி வருவதையும் , தலைநகர் டெல்லியில் வசதியுள்ளவர்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு அதிக அளவில் தண்ணீர் வழங்கப்படுவதும் அதனால் ஏழை மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைக்காமல் போவதும் குறைந்த நீர் அதிக மக்களுக்குப் போக வேண்டிய சூழ்நிலையில் வெகு தொலைவிலிருந்து எடுத்து வர ஆகும் நேரமும், செலவும் அனைத்து மக்களுக்கும் நீர் சேர முடியாததற்கு காரணங்களாகிறது. டெல்லியில் சங்கம் விஹார் காலனியில் பத்து வீடுகளுக்கு ஒரு குழாய் இருக்கிறது. மக்களும் தண்ணீர் லாரியை நம்பித்தான் இருக்கிறார்கள். குறுகிய தெருக்களும் போக்குவரத்து நெரிசலில் மாட்டியிருக்கும் லாரித்தண்ணீருக்காக காத்திருக்கும் மக்களிடையே எழும் பதட்டமும் சண்டையும் தினமும் நாம் கடந்து வரும் நிகழ்ச்சிகள் தான். இன்று தெருவுக்குள் நடப்பது நாளை நகரங்களுள் பின் மாநிலங்களுக்குள் நடக்கும். இன்றே காவிரி, முல்லைப்பெரியாறு விஷயத்தில் நாம் கண்டு கொண்டிருக்கிறோம்.

காடுகளை அழித்து வீடுகள் கட்டி மழையும் பொய்த்ததில் வறட்சி தான் நிலவுகிறது. மலைப்பிரதேசமான சோரா நகரில் மழை பெய்தாலும் சேருமிடம் என்னவோ பங்களாதேஷில். இந்தியாவில் பல்வேறு இடங்களில் நிலவும் உண்மை நிலவரத்தை கவலையுடன் படம் முழுவதும் சொல்லிக் கொண்டே வருகிறார்கள்.

மும்பையிலிருந்து இரு மணிநேர தொலைவில் இருக்கும் கிராமத்தில் இருக்கும் ஒரே ஒரு வறண்ட கிணறு பார்க்கவே பரிதாமாக இருக்கிறது. வீட்டுப்பெண்கள் தான் தினமும் பல முறை பல மைல்களுக்கு நடந்து சென்று தண்ணீர் எடுத்துக் கொண்டு வருகிறார்கள். தண்ணீர் பிடித்துக் கொண்டு வரவே பலதார மணங்களும் நடக்கிறது. எத்தனை கொடுமை? வழி முழுவதும் வறண்ட நிலம் தான்.

பசுமையான பஞ்சாப் மாநிலம் தந்த விளைச்சலில் இந்தியாவில் உணவுப்பொருட்கள் மிகுந்த காலங்கள் தொலைந்து நீரற்ற வறண்ட நிலங்களால் விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கையும் கூடியுள்ளது. 60 சதவிகித விவாசாயிகள் நிலத்தடி நீரை நம்பியே உள்ளனர். ஆழ்துளை கிணறுகளின் மூலம் உலகளவில் அதிகமாக நீரை உறிஞ்சுவதும் இந்தியா தானாம்!

பஞ்சாபில் படிட்ண்டா நகரில் இருந்து 'கான்சர்' ட்ரைனில் ஏறி ராஜஸ்தானுக்கு செல்கிறார்கள்! பயிர்களுக்குத் தெளிக்கப்படும் மருந்துகள் நிலத்திற்குச் சென்று நிலத்தடி நீரை மாசுபடுத்துவது மட்டுமில்லாமல் கான்சரையும் இலவசமாக அளிக்கிறது. படிப்பறிவில்லாத ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றையெல்லாம் இனி எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?

தெலுங்கானா மாநிலத்தில் ஃப்ளோரைடு ஆர்சன் கலந்த தண்ணீரினால் உடற்குறைபாடுகள் ஏற்பட்ட குழந்தைகளை காண்பித்தார்கள். என்று எப்பொழுது இவ்விஷயத்தில் விழிப்புணர்வு வரப்போகிறதோ?

தொழிற்சாலை, மனித கழிவுகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆற்று நீரில் கலக்கப்படுகிறது. யமுனை ஆற்றின் கரையோரம் விளைவிக்கும் காய்கறிகளில்  நச்சு கலந்த நீரால் அப்பகுதிகளில் விளையும் காய்கறிகளும் அதனை உண்ணும் நமக்கும் பல நோய்களும் வருகிறது என்பதை ஆய்வு செய்து நிரூபித்துள்ளார்கள்.

தொழிற்சாலைகளின் கழிவுகளையும் இறந்த உடல்களையும் சுமந்து கொண்டு புனித நதியாம் வற்றாத கங்கை நதியை இன்று நச்சுக்கிடங்காக்கி வைத்திருக்கிறோம். சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை மற்றும் வீட்டு கழிவுநீர் கங்கை ஆற்றில் கலந்து மாசுபடுத்திய நீரில் போதிய அளவு ஆக்சிஜன் இல்லாமல் நுண்ணுயிர்களை இழந்து உயிரற்றுக் கிடக்கிறது பெரும்பாலான நீர் நிலைகள் என்று வருத்ததுடன் பகிர்கிறார்கள் இயற்கை மற்றும் மாசு கட்டுப்பட்டு ஆர்வலர்கள்.

பல நதிகளின் ஆதாரத்தை தொலைத்து  வீடுகளை கட்டி வீட்டுக்கழிவுகளை அதன் மேல் கொட்டி பிளாஸ்டிக் பைகளும், பொருட்களும் என்று குப்பைகூளங்களாக்கி வைத்திருக்கிறோம். மழை குறைந்து நீரின் தேவை அதிகரித்து நிலத்தடி நீரும் சுத்தமாக உறிஞ்சப்பட்டு தூய்மையான நீர் என்பதே கானலாகிப் போயிருக்கிறது. மனிதர்கள் விலங்குகள் மட்டுமல்ல நம் சுற்றுப்புறச்சூழலையும் இயற்கை வளங்களையும் அழித்துக் கொண்டிருக்கிறோம். சென்னை வெள்ளத்திலிருந்து பாடம் கற்றுக் கொண்டோமா? இல்லை.

மஹாராஷ்ட்ராவில் உள்ள ஒரு கிராமத்தில் பருவமழைக்குப் பிறகு வறண்டு விடும் நிலைமையில் இருந்த கிராமத்தில் மக்கள் அனைவரும் 'பானி
ஃபவுண்டேஷன்'  NGO துணையுடன் சேர்ந்து பல நாட்களுக்கு நீரைத் தேக்கி வைக்க ஆழ்குழிகள் வெட்டியதில் வறண்ட நிலம் பசுமையாக மாறி இன்று விளைச்சல் பூமியாக மாறி இருக்கிறது. மக்கள் தங்கள் தேவைகளை உணர்ந்து சேர்ந்து உழைத்தால் எல்லா மாநிலங்களிலும் இது சாத்தியமே! அடுத்தவரைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லாத நிலையும் சாத்தியம் என்று உணர்த்தியது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

மலை நகரமான ஐஸ்வால் மிசோராமில் வீட்டுக் கூரைகளைச் சரிவாக கட்டியும் , வீணாகப் போகும் நீரை முறையாகச் சேகரித்தும் தத்தம் தேவைக்கு வீடுகளில் மழை நீரைச் சேகரிப்பதைப் போல் நாட்டின் பிற பகுதிகளிலும் பின்பற்றலாம் என்ற நல்வழியை காட்டியுள்ளார்கள்.


அரசாங்கமே செய்யும் என்று காத்திருக்காமல் தங்களின் நீர்த்தேவைகளை குறைத்துக் கொள்ளவும், மழை நீரைச் சேகரிக்கவும் , மறு சுழற்சி முறையில் நீரை மீண்டும் பயன்படுத்தவும் வழிகள் கண்டறிந்து முறைப்படுத்த வேண்டும். அரசாங்கமும் மக்கள் பெருக்கத்தை குறைக்க கடுமையான விதிகளைக் கொண்டு வர வேண்டும். தனி மனிதரும் தத்தம் சமூக பொறுப்புகளை உணர்ந்து நடந்தாலொழிய இதற்குத் தீர்வு இல்லை.

தண்ணீரை நாம் அசுத்தமாக்குகிறோம். அசுத்தமாக்குவதையும் அசுத்தமாக்குபவர்களையும் கண்டு கொள்ளாமல் செல்கிறோம். நஞ்சுத்தண்ணீர் மீண்டும் பழங்கள், காய்கறிகளின் உருவில் நமக்கே நஞ்சாக நம் வீடுகளில் நுழைகிறது.

இதனால் அதிகம் பாதிக்கப்படவிருப்பது அடித்தட்டு மக்களே. நீரின்றி விவசாயம் பெருமளவில் பாதிக்கும். விவசாயிகளும் சிக்கனமாக நீரைப் பயன்படுத்துவதை பாலைவன நாடுகளிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். கானல் நீராகிப் போகும் காலத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் நாம் இத்தகைய ஆவணப்படங்களைப் பள்ளி மாணவர்களுக்கும் எடுத்துச் சென்று அடுத்த தலைமுறையினருக்கு நீரின் அவசியத்தை , மேலாண்மையை, நிலத்தடி நீரை மேம்படுத்தும் வழிமுறைகளை எடுத்துச் சொல்லவும் செயல்படுத்த வேண்டிய அவசர நிலையிலும் இருக்கிறோம். வங்கிகளில் பணத்தைச் சேர்த்து வைப்பதாலோ சொத்துக்களைச் சேர்த்து வைப்பதாலோ எந்தப் பயனுமில்லை என்பதை மக்கள் உணருவார்களா ? உயிர் வாழ ஆதாரமான நீரின்றி இவ்வுலகு அமையாது என்பதனை என்று நாம் உணரப்போகிறோம்!


Watch it here












No comments:

Post a Comment

சுவதந்த்ரவீர் சாவர்க்கர்

மிக அழகாக திரு.வீர் சாவர்க்கரின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் படம். நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள். சாவர்க்கராக நடித்திருக்கும் 'ரந்தீப் ஹ...