Wednesday, May 11, 2022

National School Nurse Day



அமெரிக்காவில் தினம் ஒரு நாளை யாருக்காவது அர்ப்பணித்துக் கொண்டாடினாலும் சில நாட்கள் மிகுந்த அர்த்தமுள்ளதாகவே இருக்கிறது. இந்த வருடம் மே மாதம் 6ந் தேதி செவிலியர் தினம். மே 12 வரை செவிலியர் வாரமாக நாட்டில் கொண்டாடுகிறார்கள். மருத்துவர்களைப் போலவே செவிலியர்களின் பங்கும் மருத்துவத்துறையில் அளப்பரியது. அதுவும் இந்த தொற்றுப்பரவல் காலகட்டத்தில் பெற்றோர், உற்றார்களை விட நோயாளிகளின் அருகில் இருந்தவர்கள் இவர்கள் தான். இதற்கு முன் என்னுடைய தனிப்பட்ட மருத்துவ விடுதி அனுபவத்திலும் இதை நேரில் கண்டிருக்கிறேன். என்ன தான் அவர்களுடைய பணியாக இருந்தாலும் பெரும்பான்மையோர் அதை கடமைக்காக மட்டும் செய்யாமல் அன்பாக நோயாளிகளைப் பராமரிப்பதால் தான் அவர்களின் செயலும் புனிதமாக போற்றப்படுகிறது. தேசிய செவிலியர் வாரத்தின் புதன்கிழமையன்று "தேசிய பள்ளி செவிலியர் தினம்" கொண்டாடப்படுகிறது என்று இன்று தெரிந்து கொண்டேன். பள்ளிகளில் குழந்தைகளைப் பராமரிக்கும் அனைத்துப் பள்ளி செவிலியர்களையும் கௌரவிக்கிறது இந்நாள்.

மகளின் ஆரம்பப்பள்ளி வயதில் ஒருநாள் "உங்கள் மகளுக்கு காய்ச்சல் இருக்கிறது. வந்து அழைத்துச் செல்லுங்கள்" என்று தொலைபேசியில் அழைப்பு.

அவளிடம் நான் பேசமுடியுமா என்று கேட்டு

"என்னாச்சு? காலையில நல்லா தான இருந்த?"

"திடீர்னு தலை வலிச்சது. ஸ்கூல் நர்ஸ் தான் காய்ச்சல் இருக்குன்னு சொல்லி அவங்க ரூம்ல இருக்கச் சொல்லிட்டாங்க."

"சரி நான் வர்றேன்."

அன்று தான் தெரிந்தது அனைத்துப் பள்ளிகளிலும் ஒரு செவிலியர் இருப்பார் என்று. சுகமில்லாத குழந்தைகளைப் பரிசோதித்துப் பெற்றோர்களுக்குத் தகவல் தருவது மட்டுமில்லாமல், பள்ளிக் குழந்தைகளுக்கும் சத்தான உணவு, ஆரோக்கியம் பற்றி வகுப்புகள் எடுப்பார் என்றும் தெரிந்து கொண்டேன். தொடர்ந்து மருந்துகள் எடுத்துக் கொள்ளும் குழந்தைகளின் மருந்துகளைப் பள்ளி நேரத்தில் அவருடைய கண்காணிப்பில் தான் கொடுக்கிறார்கள். பள்ளியில் யாருக்காவது தொற்றுப்பரவல், நோய்களின் அறிகுறி இருந்தால் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் அறிவிக்க வேண்டியது அவருடைய கடமை.

மதுரையில் நான் படித்த பள்ளியில் முதலுதவிப் பெட்டியில் காயங்களுக்குப் போடும் மருந்துகள் இருக்கும். அவ்வளவு தான். தகுதி வாய்ந்த செவிலியரோ அவருக்கென தனிஅறையோ எதுவும் இருந்ததில்லை. கண்டிப்பாக பள்ளிகளில் ஒரு செவிலியர், மாணவர்களை நல்வழிப்படுத்தும் கவுன்சிலர் அவசியம் இருப்பதும் நல்லது என அனுபவத்தில் புரிந்து கொண்டேன்.

செவிலியர்கள் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்.

No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...