Tuesday, August 29, 2023

இகிகை

 சொல்வனம் இதழ் 301ல் வெளிவந்துள்ள என்னுடைய கட்டுரை 'இகிகை', அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வது எப்படி என்று ஆராயும் 'Ikigai: The Japanese Secret to a Long and Happy Life'  புத்தகத்தின் விமரிசனம்.


இன்றைய பரபரப்பான உலகில் எதையோ ஒன்றைத் தேடி அது உண்மையிலேயே நமக்குப் பிடித்தமானதா என்று யோசிக்கக் கூட நேரமில்லாமல் காலில் சலங்கையைக் கட்டிக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறோம். ஏதோ பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்கிறோம் என்று பலரும், வாழும் வாழ்க்கையின் பொருளை, நோக்கத்தை உணர்ந்து வாழ்பவர்கள் சிலருமாக இந்த உலகத்தில் பயணித்துக் கொண்டு இருக்கிறோம். அதனால் தான் "ஏன் தான் விடிகிறதோ? இன்றைய நாளை எப்படிக் கடந்து செல்வதோ?" என்று அங்கலாய்த்துக் கொண்டே வாழ்க்கையைக் கடக்க வேண்டிய நிர்பந்தத்தில் பலரும் இருக்கிறோம். ஆனால், சில உள்ளங்களே விடியலுக்காகக் காத்திருக்கும். வாழும் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியாக அனுபவிக்கும்.

புறக்காரணிகளால் மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் அல்லது வாழ்வதாக நினைப்பவர்கள் கூட எதையோ ஒன்றைத் தொலைத்து அது என்ன என்று தெரியாமலேயே வாழ்ந்து முடிக்கிறார்கள். ஆற அமர உட்கார்ந்து எதில் உண்மையான இன்பம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டாலே இந்த வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு மனமகிழ்ச்சியாக வாழ முடியும் என்கிறது 'இகிகை'.

இகிகை(Ikigai) என்ற ஜப்பானிய வார்த்தைக்கு "மகிழ்ச்சியாக இருத்தலின் காரணம்" அல்லது "தினமும் காலையில் மகிழ்ச்சியுடன் எழுந்திருக்க ஒரு காரணம்" என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். நாம் ஏன் வாழ்கிறோம் என்று புரியாமலே நம்முடைய வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்று தெரிந்து கொள்ளாமலே ஏனோ பிறந்தோம் வாழ்கிறோம் என்றில்லாமல் வாழ்க்கையின் நோக்கத்தையும் அர்த்தத்தையும் கண்டறியும் ஒரு வழியாக சமீபத்திய ஆண்டுகளில் பிரபலமடைந்து வரும் ஒரு கோட்பாடு 'இகிகை'. ஒவ்வொருவருக்கும் வாழ்வதற்கான ஒரு குறிக்கோள் உள்ளது. அது அவர்களின் உணர்வுகள், திறமைகள், மதிப்புகளின் தனித்துவமான கலவையாக இருக்கும். இதுவே அவர்களின் வாழ்க்கைக்கு நிறைவையும் திருப்தியையும் அளிக்கிறது என்கிறது இந்த ஜப்பானியக் கோட்பாடு.

உலகிலேயே அதிக ஆயுட்காலம் உள்ள நாடுகளில் ஒன்றான ஜப்பானின் 'ஒகினாவா' மாகாணத்தில் வாழும் மக்கள், சமூகம் மற்றும் வாழ்க்கை நோக்கத்தின் வலுவான உணர்வைக் கொண்டுள்ளவர்களாக இருக்கின்றனர். இதுவே அவர்களின் நீண்ட ஆயுளுக்கும் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் காரணமாகவும் இருக்கிறது என்று நம்பப்படுகிறது. வாழும் வாழ்க்கையில் நிறைவையும் மகிழ்ச்சியையும் தரும் "இகிகை' என்பது அனைவருக்குள்ளும் இருந்தாலும் அதைக் கண்டறிந்து வாழ்பவர்களால் மட்டுமே நீண்ட ஆயுளுடனும் மனநிறைவுடனும் வாழ முடிகிறது.

"Ikigai: The Japanese Secret to a Long and Happy Life" என்பது ஹெக்டர் கார்சியா மற்றும் பிரான்செஸ்க் மிரயெஸ்சால் எழுதப்பட்ட புத்தகம், இது 'இகிகை' பற்றிய கருத்தை ஆராய்ந்து அது எவ்வாறு நிறைவான வாழ்க்கையை வாழ உதவுகிறது என்பதை விளக்குகிறது. இந்தப் புத்தகம் ஜப்பானியத் தீவான ஒகினாவாவில் வசிப்பவர்களுடன் நடந்த நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டது. அங்கு பலரும் நீண்ட ஆயுள், மனமகிழ்வுடன் ஒரு சமூகமாக இணைந்து வாழும் கலாச்சாரம் உள்ளது. ஆசிரியர்கள் நடத்திய நேர்காணல்களையும், உளவியல், நரம்பியல், சமூகவியல் போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் ஆராய்ச்சி செய்து, ஒருவரின் சொந்த இடுகையைக் கண்டுபிடிப்பதற்கான விரிவான மற்றும் அணுகக்கூடிய வழிகாட்டியை முன்வைக்கிறார்கள். "இருத்தலின் காரணம்" அல்லது "காலையில் படுக்கையிலிருந்து உங்களை எழுப்பும் விஷயம்" என வரையறுக்கப்படும் 'இகிகை' என்ற கருத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் புத்தகம் தொடங்குகிறது.

'இகிகை' என்பது நான்கு கூற்றுகளின் கலவையாகும்: நீங்கள் எதை விரும்புகிறீர்கள், நீங்கள் எதில் சிறந்தவர், உலகிற்கு என்ன தேவை, உங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருட்தேவையை எவ்வாறு நிவர்த்தி செய்வது? என்பதே அந்த நான்கு அடிப்படை மூலக்கூறுகள். "உங்கள் இகிகையைக் கண்டுபிடிப்பது என்பது ஒரு வேலை அல்லது பொழுதுபோக்கைக் கண்டுபிடிப்பது மட்டுமல்ல, மாறாக உங்கள் தனித்துவமான நோக்கத்தையும் வாழ்க்கையின் பொருளையும் கண்டறிவதாகும்" என்பதை ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். இகிகையின் நான்கு கூறுகள் ஒவ்வொன்றையும் விரிவாக ஆராய்ந்து, வாசகர்களுக்கு அவர்களின் ஆர்வங்கள், திறமைகள், மதிப்புகள் மற்றும் நிதித்தேவைகளை அடையாளம் காண உதவும் நடைமுறைக் குறிப்புகள் மற்றும் பயிற்சிகளை இப்புத்தகத்தில் வழங்கியிருக்கிறார்கள். இந்தச் செயல்பாட்டில் சுய விழிப்புணர்வு, பிரதிபலிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அத்துடன் புதிய அனுபவங்கள் மற்றும் வாய்ப்புகளுக்கான அவசியத்தையும் வலியுறுத்துகின்றனர்.

புத்தகத்தின் முக்கிய கருப்பொருள்களில் ஒன்று இகிகைக்கும் நல்வாழ்வுக்கும் இடையிலான தொடர்பு. அந்த வலுவான உணர்வு தான் அதிக மகிழ்ச்சி, ஆரோக்கியம், நீண்ட ஆயுளை அனுபவிக்கக் காரணமாக உள்ளது. உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் விவாதிக்கின்றனர். புத்தகத்தின் மற்றொரு முக்கியமான கருப்பொருள் மூலக்கூறுகள் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் கருத்து. "உங்கள் இகிகையைக் கண்டுபிடிப்பது என்பது தனிப்பட்ட நிறைவு மட்டுமல்ல, அதிக நன்மைக்குப் பங்களிப்பதும் உலகில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதும் ஆகும்" என்பதை ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். "உங்கள் இகிகையுடன் இணைந்த வாழ்க்கையை வாழ்வதன் மூலம் உங்கள் உறவுகள், பணி மற்றும் சமூகத்தில் அதிக தொடர்பையும் அர்த்தத்தையும் காணலாம்" என்று அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

சில அடிப்படை கேள்விகள் மூலமாக நான்கு கூற்றுகளின் குறுக்குவெட்டைக் கண்டறிவதன் மூலம் இகிகையை அடையாளம் கண்டு, நிறைவான நோக்கமுள்ள வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள முடியும்.

நீங்கள் எதை விரும்புகிறீர்கள்? - எதில் ஒருவர் நிரந்தரமாக மகிழ்ச்சியையும் மனநிறைவையும் பெறுகிறாரோ அந்தச் செயலைக் கண்டறிவதே 'இகிகை'யின் முதல் படி. ஒருவருக்கொருவருக்கு மாறுபடும் இந்தக் கூற்று, ஒருவரின் ஆர்வத்தை/ஆர்வங்களைக் குறிக்கிறது. கலை, இசை, சமையல், நடைப்பயணம், பிரயாணம், வாசிப்பு என்று நீளும் பட்டியலில் எதுவாகவும் இருக்கலாம்.

நீங்கள் எதில் சிறந்தவர்? - ஒருவரின் திறமையைக் கண்டறிவது இரண்டாவது படி. ஒருவரின் தனித்திறன்களைக் கண்டறிவதன் மூலம் நம்பிக்கையையும் சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தலாம்.

உலகிற்கு என்ன தேவை? என்று அறிந்து அதற்கான பங்களிப்பை அளிப்பது மூன்றாவது படி. அது அரசியல், பருவநிலை மாற்றம், சுகாதாரம், கல்வி, திரைப்படத்துறை, பொதுப்பணித்துறை, சமூகப்பணி... என்று அவரவர் ஆர்வத்தைப் பொறுத்தது. எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

வாழத் தேவையான அடிப்படை திறமைகளை வளர்த்துக் கொள்வது எப்படி?- இந்த உலகில் வாழத் தேவையான செல்வத்தைப் பெற திறமைகள் அவசியம். திறமைகளை வளர்த்துக் கொண்டு மேற்கூறிய மூன்று கூற்றுகளையும்
கையாளும் பொழுது வாழ்க்கையின் நோக்கம் தெளிவாகிறது. நோக்கம் தெளிவாகையில் பயணம் எளிதாகிறது. பயணம் எளிதாகையில் மனம் நிறைவு கொள்கிறது. ஆயுள் நீள்கிறது. என்பதைத் தான் 'இகிகை' கற்பிக்கிறது.

இந்த நான்கு கேள்விகளின் பதிலைக் கண்டறிபவர் தன்னுடைய 'இகிகை'யை கண்டறிகிறார். ஒருவரின் உணர்வுகள், திறமைகள், மதிப்புகள், நிதித்தேவைகள் அனைத்தும் சங்கமிக்கும் புள்ளியில் வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தையும் அர்த்தத்தையும் காண முடியும் என்கிறது 'இகிகை' கோட்பாடு. ஆனால் அதைக் கண்டறிவது தான் கடினம். அதற்குத் தொடர்ந்து சுய பிரதிபலிப்பும் சொகுசு வாழ்க்கையிலிருந்து சவாலான புதிய விஷயங்களை முயற்சி செய்வதில் ஆர்வமும் தொடர்க்கேள்விகளையும் அதற்கான தீர்வுகளைக் கண்டடைய முயற்சியும் இருக்க வேண்டும்.

ஒருவரின் இகிகையை கண்டுபிடிப்பதற்கான மற்றொரு வழி, அவர்களுக்கு உள்ளார்ந்த மகிழ்ச்சியையும் நிறைவையும் தரும் செயல்களில் ஈடுபடுவதாகும். ஒருவர் விரும்பும் செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் முன்பு அறிந்திராத புதிய திறமைகளையும் ஆர்வங்களையும் கண்டறியலாம். இகிகையை அடையாளம் கண்டுகொள்வது முதல் படி என்றால் அதை அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைப்பது இரண்டாம் படி. இது தொழில், உறவுகள் அல்லது வாழ்க்கைமுறையில் மாற்றங்களைச் செய்வதைக் குறிக்கிறது. இகிகையுடன் இணைந்த வாழ்க்கையை வாழ்வதன் நன்மைகளில் ஒன்று, அது ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் வழிவகுக்கும். வாழ்க்கையின் நோக்கம் மற்றும் அர்த்தத்தின் வலுவான உணர்வைக் கொண்டவர்கள் மனச்சோர்வு, பதட்டம், பிற மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவது குறைவு என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
இகிகையுடன் இணைந்த வாழ்க்கையை வாழ்வது வாழ்க்கையில் அதிக வெற்றியைத் தருவது மட்டுமில்லாமல் திருப்திக்கும் வழிவகுக்கும். மனதிற்குப் பிடித்த வேலையைச் செய்யும் பொழுது ஏற்படும் உந்துதல் காரணமாக ஈடுபாடும் உற்பத்தித்திறனும் அதிகரிக்கிறது. அதுவே வெற்றிக்கு காரணமாகவும் அமைந்து மனமகிழ்ச்சியைத் தருகிறது.

ஒருவரின் இகிகையை கண்டுபிடிப்பதுடன் மற்றவர்களின் இகிகையை அங்கீகரித்து ஆதரிப்பதும் முக்கியம். இதன் பொருள் அவர்களின் உணர்வுகள், திறமைகள் மற்றும் மதிப்புகளை மதித்து, அவர்களின் நோக்கம் மற்றும் பொருளைப் பின்தொடர்வதில் அவர்களுக்கு ஆதரவளிப்பதாகும். இது ஆரோக்கியமான சமூகங்களையும் சூழல்களையும் உருவாக்குகிறது. மனிதன் ஒரு சமூக விலங்கு. தனக்கான சமூகத்தை உருவாக்கிக் கொள்வதன் மூலம் நீண்ட ஆயுளுடனும் மனமகிழ்ச்சியுடனும் வாழலாம் என்பதே 'இகிகை' கற்றுத் தரும் பாடம்.

இதை நம் வீட்டுப் பெரியவர்கள் புராணங்கள், வழிபாடுகள், வாழ்க்கைமுறைகளால் வெவ்வேறு விதமாக நமக்கு கற்றுக் கொடுக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு வரையில் கூட இந்த சமூக வாழ்வு சாத்தியமாகத் தான் இருந்தது. நாம் தான் புரிந்து கொள்ளாமல் மாயச்சூழலில் சிக்கி உழன்று கொண்டிருக்கிறோம். எங்களுடைய 'கங்கையை நோக்கிய பயணத்தில்' இமயமலைப் பகுதிகளில் சிறுகிராமங்களில் வாழும் மக்கள் ஒரு குழுவினராக, ஒருவருக்கொருவர் ஆதரவாக தங்களை சுறுசுறுப்புடன் வைத்துக் கொண்டு மகிழ்வுடன் இருந்ததை நேரில் கண்ட பொழுது அவர்களின் 'இகிகை'யை அறிந்து அவர்கள் வாழ்வதாகவே தோன்றியது.

"இகிகை: நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஜப்பானிய ரகசியம்" என்ற புத்தகம் நிறைவான வாழ்க்கையை வாழ விரும்பும் எவருக்கும் நடைமுறை ஆலோசனைகளையும் நுண்ணறிவுகளையும் வழங்குகிறது. தனிப்பட்ட கதைகள், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் நடைமுறைப் பயிற்சிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ஒருவரின் சொந்த இகிகையை கண்டுபிடிப்பதற்கான விரிவான மற்றும் அணுகக்கூடிய வழிகாட்டியை வழங்கியிருக்கிறார்கள் புத்தக ஆசிரியர்கள்.

இந்தப் புத்தகத்தைப் பரிந்துரைத்த நண்பருக்கு நன்றி.

நூலகத்தில் பல நாட்கள் காத்திருந்து வாங்கி வந்து வாசித்த புத்தகம். அடிக்கடி இந்தப் புத்தகத்தை வாங்கி படித்ததைப் பார்த்து நூலகத்தில் வேலை செய்யும் பெண்மணி, "மிக நல்ல புத்தகம். நானும் பலமுறை வாசித்திருக்கிறேன். பலரும் இந்தப் புத்தகத்திற்காக காத்திருக்கிறார்கள்." என்று கூறும் பொழுது நான் அடிக்கடி எடுத்துச் செல்லும் காரணம் என் கண் முன்னே வந்து சென்றது. அது எனக்கு மட்டுமே தெரிந்த பரமரகசியம்😎
புத்தர் ஜாதக கதைகள் 

No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...